கடவுளும் முரண்களும்
கவிதைகள்
பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு
நாளை நேர்முகத் தேர்வு இருக்கிறது
உனது காணிக்கையான என் முடியை
இன்று இறக்க முடியாது என்ற
என் கோரிக்கைக்கு
ஆயிரம் ரூபாய் நன்கொடை
அளித்தால் போதும் என்ற
உன் பூசாரிக்கு
நான் என்ன பெயர் வைப்பேன்?
நீயும்தான் என்ன பெயர் வைப்பாய்?
குதர்க்கமாகப் பேசுகிறேன் என்று
நினைக்க வேண்டாம்
ஒன்று பிச்சை இடுகிறீர்கள் – அல்லது
பிச்சை எடுக்கிறீர்கள்
கடவுளை
உங்களோடு தொழுவதில்கூட
எனக்கு முரண்பாடு இருக்கிறது
வேண்டா வெறுப்பாக
ஒவ்வொரு முறையும்
ஏதாவது ஒரு தேய்வத்தின் முன்
நிறுத்துகிறார்கள் என்னை
அவர்கள் வேண்டுகிறார்கள்
எனக்கோ கேள்விகள்தான் பிறக்கின்றன
ஒருபோதும்
எழுதுகிறவனுக்குக் கடவுள் இல்லை என்று
யார் சொல்வது?
அப்படி ஒருவேளை இருந்தால்
அவன் எழுத்தாளன் இல்லை என்பதையும்
யார் சொல்வது?
- முத்து ஜெயா

Comments (0)