4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா?

நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும்.

மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான்.

கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது.

பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான்.

கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர்.

பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார்.

அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி.

விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார்.

அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான்.

பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள்.

மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..?

மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..!

பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..?

பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..?

(வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

  • சி. ஞானபாரதி

Comment (1)


Anita Srikanth
Anita Srikanth
July 12, 2023

வணக்கம் ஐயா..
நீங்க எழுதுர மகாபாரதத்தில் சட்ட சிக்கல் தொடர்ந்து சுவடுல படிக்கிறேன்..
சாதி எந்த காலத்திலும் எல்லாரையும் அழிக்கும் னு தெரிஞ்சுக்கிட்டேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *