பேனா வீரர் பிரேம்சந்த்
வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் கொண்டு தனது இறுதிக் காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். ஒருமுறை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, எழுதுவதை நிறுத்துமாறு வேண்டியபோது, “நான் எப்படி எழுதாமல் இருக்கமுடியும்? நான் ஒரு தொழிலாளி; எனக்குத் தொழில் எழுதுவது; உழைக்காமல் உண்ண எனக்கு உரிமை இல்லை” எனக் கூறியதோடு, தன்னைப் ‘பேனா பிடிக்கும் சிப்பாய்’ என்று சொல்லிப் பெருமிதம் கொண்டவர். ‘எங்கெல்லாம் அநீதியும் அநியாயமும் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கெதிராக மனிதநேய உணர்வை வலுப்படுத்திப் போரிடச் செய்வதுதான் இலக்கியத்தின் லட்சியமாகும் என்று உரக்கக்கூறிய எழுத்தாளர் பிரேம்சந்த். தன்பத்ராய் ஸ்ரீ வத்சவா என்பது பிரேம்சந்தின் இயற்பெயர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி என்ற காசிக்கு அருகில் உள்ள லாம்கி என்ற இடத்தில் 31.07.1880இல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1895இல் முதல் திருமணம் செய்துகொண்டார். 1905இல் சிவ்ராணி தேவி என்ற இளம் விதவையை மணந்துகொண்டார். பிரேம் சந்தின் தந்தை அஜா யப் லால், ஓர் அரசுப் பணியாளர். பிரேம் சந்தின் எட்டாவது வயதில் அவரது தாய் காலமானார். இவர்களது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகும். தந்தை மறுமணம் செய்துகொண்டார். இதனால் மாற்றாந்தாயின் அலட்சியத்திற்கு ஆட்படுத்தப்பட்டார். காசியில் பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தை அவருக்குச் செலவிற்குக் கொடுத்த ரூபாய் 5 போதுமானதாக இல்லாததால், ஒரு பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 17ஆவது வயதில் இவரது தந்தை மரணமுற்றார். குடும்பச் சுமை இவர் மீது விழுந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது சித்தி, சித்தியின் தம்பி, தனது தம்பி ஆகியோரைக் காப்பாற்றவேண்டிய கட்டாயச் சுமையை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறிய இவர், வறுமை காரணமாக கல்லூரியில் சேர பெரும்பாடாய்ப் போயிற்று. அப்போதும் ஒரு பையனுக்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். தனது 19ஆவது வயதில் ஆசிரியரானார். அதனால் பொருளாதார நிலை சற்று உயர்ந்தது. அவர் உருது மொழியில் படைத்த படைப்புகளுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்தியில் எழுதத் தொடங்கிய பிறகு வருமானம் அதிகரித்தது. வருமானத்தில் பெரும் பகுதி அச்சகம், பத்திரிக்கை நடத்தச் செலவிடப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. புத்தக வெளியீட்டாளர்கள் உரிய பணத்தை தராமல் மோசம் செய்ததால் அச்சகத்தை மூடினார். பாதி அச்சடிக்கப்பட்ட அவரது புத்தகங்களைப் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வறுமையைத் தனது நித்தியத் தோழி என்று பகடியாக வர்ணிப்பார். உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்த இவர், அம்மொழிகளில் உள்ள ஏராளமான புத்தகங்களைப் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே அக்காலத்தில் வந்த பிரபலமான நாவல்களைப் படித்து முடித்துவிட்டார். கணிதம் பயிலக் காசி சென்றபோது, அங்குள்ள நூல்நிலையங்களில் கணிதத்திற்குப் பதிலாகக் கதைப் புத்தகங்களைப் படித்தார். தன் மைத்துனர் மூலமாக அலகாபாத் நூல் நிலையத்திலிருந்து நூல்களைப் பெற்றுப் படித்தார். மூன்று மொழிகளிலும் நிறையப் பத்திரிகைகள் படித்தார். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் இவற்றிலும் நிறைய புத்தகங்களை படித்தார். அவருடைய வாசிப்புப் பழக்கம் இறுதிவரை இருந்தது. உலகத்தின் கொடுமைகளையும் துன்பங்களையும் பார்த்த அவரால், இவை எல்லாம் கருணைமிக்க ஒரு கடவுளின் படைப்பு என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தில் நாட்டம் கொண்டார். இலக்கியத்தின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்த, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஆரம்பத்தில் முயன்றார். அடிமை நாட்டில் அரசாங்கத்தின் கீழ் பணி செய்வது அவரது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டபிறகு, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர முடிவு செய்து, தனது அரசுப் பணியைத் துறந்தார். அவர் அரசுப் பதவியில் இருந்தபோதே, தூக்கிலிடப்பட்ட தியாகி குதிராம்போசின் உருவப் படத்தைத் தமது அறையில் மாட்டி வைத்திருந்தார். சமகால சமூகப் பிரச்சினைகளை எதார்த்த நோக்கோடு, இயற்கையான பாத்திரங்கள் மூலம் தம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கையாண்டு, தற்கால இந்தி, உருது கதை இலக்கியத்திற்கு வித்திட்டார். 12 நாவல்களை உருது அல்லது ஹிந்தியில் எழுதி, அவற்றில் பலவற்றைத் தாமே, தாம் அறிந்த பிற மொழிகளிலும் பெயர்த்தார். 300 சிறுகதைகள், மூன்று நாடகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட, கொடுமைக்குள்ளான, சுரண்டப்பட்ட மனிதன் அல்லது சமூகத்தின் குரலை உயர்த்திப் பிடிப்பது தமது கடமை என்று உறுதிபட நம்பி, அவற்றைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார். ‘நம் நாட்டில் விவசாயிகளைச் சுரண்டும் ஜமீந்தார்களும் சேட்டுகளும் இருக்கக் கூடாது’ என்பதுதான் என் கம்யூனிசம் என்று உரையாடும்போது கூறியதோடு, அவற்றைத் தமது படைப்புகளில் எழுதினார். மனித நேயத்தின் வெளிப்பாடாக ஒரு நாவலில் குருட்டுப் பிச்சைக்காரனைக் கதாநாயகனாகச் சித்தரித்துள்ளார். வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பிற அநீதிகளின் காரணமாகப் பெண்கள் விலை மாதர்களாக மாறும் நிர்ப்பந்தத்தை, பொருத்தமற்ற திருமணத்தின் விளைவுகளை, சேவா சதன், நிர்மலா என்ற கதைகளில் எழுதியுள்ளார். அந்நிய ஆட்சிக்கெதிராக மக்களின் சத்யாகிரகம், மதுவிலக்குப் பிரச்சாரம், அந்நியப்பொருள் மறியல், கதர் இயக்கம், தேசபக்தர்கள் போலீஸ் தடியடிக்குள்ளாகிச் சிறை சென்று உயிர்த் தியாகம் செய்வது போன்ற நிகழ்வுகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. உபன்யாஸ் சாம்ராட், அதாவது நாவல் சக்கரவர்த்தி என்ற அடைமொழியை பிரேம் சந்திற்கு முதலில் பயன்படுத்தியவர் வங்க இலக்கியவாதி சரத் சந்திரர்.பிரேம்சந்த் சரத் சந்திரரிடம் தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டியபோது, அதற்கு அவர் வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதக்கூடிய அளவிற்கு உங்களது கதை உள்ளது. இதற்கு முன்னுரை எழுதும் தகுதி தனக்கில்லை என்றார். இதன் மூலம் பிரேம்சந்த் கதைகள் எந்த அளவிற்கு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிய முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற இந்தி, உருது எழுத்தாளர் மட்டுமல்லாது இந்திய விடுதலைக்காகவும் விவசாயிகளுக்காகவும் தீவிரமாகவும் தீரமாகவும் போராடிய இலக்கியப் போராளி பிரேம்சந்த். 1936இல் உருவான இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரும் இவரே. இவரது பிறந்த தினம் இன்று.