பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்

பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்

நூல்: பெண்ணால் முடியும்ஆசிரியர்: நஸீமா ரசாக்விலை: 180 ரூபாய்பதிப்பகம்: ஸீரோ டிகிரி ‘பெண்ணால் முடியும்’ என்ற புத்தகத்தை Pen-ஆல் முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கும் நஸீமா ரசாக் அவர்களின் புதிய படைப்பு. என்னுரை இல்லாமல் வந்திருக்கும்போதே தெரிகிறது, நல்ல எழுத்திற்கு எந்த உரையும் தேவையில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார். எழுத்தாளர் என்றால், சுவாரசியமான நாவலைத் தருவது அல்லது சமூகத்திற்கு ஒவ்வாத கற்பனைப் படைப்பைத் தருவது என்று இல்லாமல் சமூகத்தில் சரியாக நிரம்பிடாத இடத்தை நிரப்பிட முயன்றிருக்கிறார். ஆசிரியர் அந்தச் சிறிய முயற்சியில் பெரிய விதையை விதைத்திருக்கிறார். இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியென்றால் இந்தப் புத்தகம் எதற்கு என்ற கேள்வியும் கூடவே சேர்ந்து எழத்தான் செய்கிறது. பெண் என்பவள் எப்போதும் பெருஞ்சக்திதான். கிளியோபாட்ரோ போன்ற அரசியல்வாதியை இன்று வரை பார்த்திட முடியாத அளவுக்கு, அப்படியொரு அரசியலை சுமார் 2300 வருடங்களுக்கு முன்பே நடத்தியிருக்கிறார். இராஜராஜனுக்கு ஒரு பஞ்சமாதேவி் என்று பட்டியல் நீண்டுகொண்டேதான் இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெண்கள் என்றால் பெருஞ்சக்தி என்று பாரதி முழங்க ஆரம்பித்தது முதல் அந்த முழக்கம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. அப்புறம் ஏன் இந்த முழக்கம் தொடர்கிறது என்று பார்த்தால், இன்று இருக்கிற வளர்ச்சி பெண்களுக்கானதாக இருக்காதோ என்ற எண்ணம் முளைக்கிறது. பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நாகரீகம், அறிவியல், தொழில்நுடபம் போன்ற பூக்களால் பெண்கள் நாராக மணந்திருப்பதைத்தான் வளரச்சி என்று சொல்லித் திரிவதாகத் தோன்கிறது. புரிகிற மொழியில் சொல்லவேண்டுமென்றால், பெண்களால் பலன் வருகிற தருணத்தில் பயன்படுத்திக்கொள்வதாகவும் தோன்றுகிறது. இந்த வளர்ச்சி, மாயைக்கும் உண்மைக்கும் இடையில் இருக்கிறது. அதாவது, தனியாக பெண்கள் தனித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஒரு குடும்பமாய் இருக்கிறார்களா என்றால் ஒரு தயக்கம் வரத்தான் செய்கிறது. இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால், இன்னும் அந்தக் கட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, வேண்டும்போது அதை இழுத்துக்கொள்வது போல, இன்றும் குடும்பத்தில் சிக்கிக்கொண்டு, இலக்கை அடையும் பெண்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில் மொத்தம் 20 சக்திகள் பற்றிய வாழ்வியல். இதில் பலரின் வாழ்வியல் கண்ணீரை வரவழைத்தது. எம். எஸ். சுப்புலட்சுமி, ராமாபாய், மிருணாளினி சாராபாய், வி. சாந்தா, சாவித்திரி பாய் பூலே, ஆர். சூடாமணி, சுதா மூர்த்தி, தமிழிசை சௌந்தராஜன் என்று அனைவரின் வாழ்வியலிலும் நினைத்துப் பார்த்திடாத சாதனைகள் நிறைந்துள்ளன. அவர்களின் வெற்றியை மட்டும் பார்த்த நமக்கு, அந்தக் கரையைத் தொட அவர்கள் எப்படித் தங்களையே மெழுகாக்கிக்கொண்டு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் வெற்றியாகப் பார்ப்பது எழுத்து நடையே. யாருடைய வாழ்வியலாக இருந்தாலும், எதைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருப்பதும் ஆங்காங்கே இன்றைய நிகழ்வோடு பொருத்தி எழுதியிருக்கும் எழுத்தும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. ஆளுமைகளின் தேர்வும் அப்படி. ஒன்றிரண்டு பேர் மட்டுமே நமக்குப் பரிச்சயம். நான் ரசித்த சில வரிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறேன். “பூவுக்கு மலரத்தான் தெரியும். எப்படி மலர்கிறாய் என்று கேட்டால், எப்படி பதில் சொல்லும்?” என்று எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, அவர் கணவர் சதாசிவம் அளித்த பதில் அத்தனை நெகிழ்வு. இரு ஆத்மாக்கள் பிணைந்த தாம்பத்யம் கண்களில் தெரிந்தது. சாவித்ரி பாய் பூலே அவர்கள் கல்வி கற்றுத்தரச் சென்ற இடத்தில் சாணத்தையும் சேற்றையும் வாரி இறைக்கும்போது, வழியில் அழுக்குச் சேலை அணிந்துகொண்டு பாட சாலைக்குச் சென்று, அங்கே சென்றதும் வேறு சேலை மாற்றிக்கொண்டது, காந்தியடிகளை மிஞ்சிய அகிம்சை கண்களில் நிழலாடியது. இது நடந்தது 150 வருடங்களுக்கு முன்பு என்றால் நம்பமுடியவில்லை. ராமாபாய் அம்பேத்கர் தனது கணவனின் லட்சியம் பாதித்திடாமல் இருக்க, அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிக்கொடுத்தும் அதையும் தாங்கிக்கொண்ட தாய்மையைக் கண்டபோது, இன்றைய யுவதிகளுக்கு இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அம்பேத்கர் மனைவிக்கு எழுதிய கடிதம், நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதத்தைவிடக் கொண்டாடியிருக்கவேண்டிய கடிதமாகத் தெரிந்தது. இந்தப் புத்தகத்தின் வாயிலாக, அன்பின் ஆழம் எப்படி இருக்க வேண்டும், தன்னோடு இருப்பவர்களின் இலட்சியத்தில் எப்படித் துணை நிற்க வேண்டும், எந்தச் சூழலிலும் இலட்சியம் மாறாத உறுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் வாழ்வியல், உணர்வுகள் நிறைந்த வேதியியல். இந்தப் புத்தகத்தை யார் படித்தாலும் மாற்றம் வரும். ஒரு புத்தகம் தனி மனிதனுக்கு மாற்றத்தைத் தருகிறது என்றால், அது சமூகத்தின் மாற்றமாகக் கண்டிப்பாக உருப்பெறும். வாழ்த்துகள் நஸீமா ரசாக் அவர்களே.

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை

நூல் அறிமுகம்: அக்களூர் இரவி மாயவரம் செல்லும்போதெல்லாம், பேருந்து நிலையத்திலிருந்து வெளிவருகையில்,  இயல்பாகவே கண், நான் முன்பு வேலை செய்த அலுவலகம் நோக்கித்தான் செல்லும். விட்டல்ராவ் சாரும் அதைத்தான் சொன்னார்.  ‘அன்னைக்கு செயிண்ட் தாமஸ் எக்ஸேஞ்ச் வழியாகச் செல்லும்போது, என் மகள் என்னைப் பார்த்து, அப்பா உங்க ஆஃபிஸ், என்றாள்.’ மாயவரம் அலுவலகம் முன்பு போல்  இல்லை. ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கிறது. வெளியில் செருப்புக்கடை வைத்திருந்த சேகர் இப்போதில்லை. அவர் பையன்தான் தெரிகிறார். தலைமுறை மாறிவிட்டது.  கூத்து முடிந்தபிறகு காலியாகக் கிடக்கும் இடம்  போல் வெறிச்சோடி இருள் கவிந்து கிடக்கும் அந்த அலுவலகத்தின் முன்முற்றம், ஒரு பத்தாண்டுகள் முன்பு வரையிலும், பழுது பார்க்கக் கிளம்பும் போன் மெக்கானிக்குகளால், ஜே.டி.ஓக்களால், டெக்னீஷியன்களால், சந்தாதாரர்களால் நிரம்பியிருக்கும். இப்போதோ, விதிக்கப்பட்ட பணியெல்லாம் முடித்துவிட்டேன். இருந்ததெல்லாம், அள்ளிக் கொடுத்துவிட்டேன் அல்லது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று ஒருவிதமான திருப்தியுடன் அல்லது சோகம் ததும்பும் முகத்துடன் வீற்றிருக்கும் பெற்றோர்போல் தோன்றுகிறது. ‘ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து போனது. அதன் வீழ்ச்சி எனக்குப் புரிகிறது. ஆனால், அந்த வீழ்ச்சி தரும் மனவலியும் துயரமும் பொறுக்க முடியாததுதான்.’ தொலைபேசி நாட்கள் நூலில் விட்டல்ராவ் எழுதியிருக்கும் இறுதிவரிகள், எனது எண்ண அலைகளுடன் இணைந்து போயின. நினைவேக்கம் தரும் நாட்கள் அவை. பௌத்த இந்தியாவின் இறுதி அத்தியாயத்தில் ரீஸ்டேவிட்ஸ் எழுதியிருப்பார்: ’பௌத்தம் கோலோச்சிய மண்ணிலிருந்து பௌத்தர் என்று ஒருவர்கூட இல்லாமல் விரட்டியடிக்கப்பட்ட பரிதாபமான கதை இது.’ அதே கதைதான் தொலைத்தொடர்புத் துறையினுடையதும், BSNL என்ற பொதுத்துறையின் கதையும். ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியுமான கதை. இந்தியாவின் வளர்ச்சிக்கு, அதன் கட்டமைப்பிற்கு இத்துறையின் மகத்தான, பிரும்மாண்டமான பங்களிப்பை எடுத்துரைக்கச் சொற்கள் போதா. எத்தனை லட்சம் குடும்பங்கள் பலனடைந்தன! ஆயிரமாயிரம் விழுதுகளுடன் பரந்து நின்ற இந்த ஆலமரம் வளர்ந்த கதையை,  இந்தச் சாம்ராஜ்ஜியம் ஒவ்வொரு கல்லாக, எப்படிக் கட்டி உருவாக்கப்பட்டது என்பதை சுவாரஸ்யமாகக் கூறுகிறார், விட்டல்ராவ். இது ஒரு  dry subject. ஆனால், பகடி பொதிந்த வரிகளில் விவரிப்பு விறுவிறுப்பாக நகர்கிறது. நூலாசிரியருக்கு, நகைச்சுவை மிகமிக எளிதாக வருகிறது. இந்தியாவில், மெட்ராசில் தொலைபேசியின் வளர்ச்சியை, கால வரிசையில் எதையும் விட்டுவிடாமல், பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்தத் துறையில் டெக்னீஷியனாக வேலை செய்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. அபார ஞாபகசக்தி! மேக்னட்டோ டெலிபோனில் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முன்னேற்றம் வரையிலும்,  ‘லோ..! ந..லிஸ்’ (ஹலோ நம்பர் ப்ளீஸ்) எக்ஸ்சேஞ்ச் தொடங்கி ஸ்ட்ரவுஜர், க்ராஸ்பார், எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்ச் வரையிலும் தகவல்தொடர்பின் வளர்ச்சியைச் சிறப்பாக விவரிக்கிறார். ராஜீவ்காந்திக்கு வலதுகரமாக இந்தத் துறையை நவீனப்படுத்திய சாம் பிட்ரோடாவையும் அழகாகச் சுட்டியிருக்கிறார். ஓர் இணைப்பகம் எப்படி  வேலை செய்கிறது என்பதை சாதாரண மனிதரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார். டெலிபோன் ரிங்டோன் எப்படி வருகிறது, இணைப்பகத்தில் ‘ரிங்கர்’ வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது… எளிமையாக எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். ஏறத்தாழ, துறையில் வேலை செய்யும் ‘கேடர்கள்’ அத்தனை பேரையும் விவரிப்பில் கொண்டுவந்துவிட்டார். நான் சொன்னதுபோல், சிறுசிறு சம்பவங்களையும், கையூட்டு வாங்குவது உட்பட, நகைச்சுவையுடன் விவரிக்கிறார், விட்டல்ராவ்.  அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்த கதை… உருமால் தலைப்பாகைத் தைக்க வாங்கிய துணியை மிச்சம் பிடித்து, தையல் வேலை தெரிந்தநபர், பெண்களுக்கு உள்ளாடை தைத்துக் கொடுத்து மாட்டிய கதை… சிரிப்பும் சுவாரஸ்யமும் நிறைந்தது. அதுபோல் வாட்ச்மேனையும் கூட்டிக்கொண்டு, நள்ளிரவில் சினிமாவில் நடிக்கப் போனது… இப்படிச் சில நிகழ்வுகள்… புகழ்பெற்ற நடிகை வீட்டில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பிளான் 102 வசதியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் நேர்மையான ஊழியரும் வருகிறார்,  சகஊழியரை ஏமாற்றிக் காசு பார்க்கும் ஊழியரும் கதையில் வருகிறார்.  டூட்டியில் இருப்பவரை ரிலீவ் பண்ண உரியநேரத்தில் வர முடியவில்லை என்று வருத்தத்துடன் இரவு பதினோரு மணிக்கு மேல் வரும்போதும் உணவுப் பொட்டலத்துடன் வரும் கரிசனமும் மனிதாபிமானம் மிக்க நண்பரும் வருகிறார். அமெரிக்காவிலிருந்து வரும் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் வரவேற்புக்குப் பாதுகாப்பிற்கு வெளியூரிலிருந்து வந்த போலிஸ்காரர், எம்.ஜி.ஆரின் தயாள குணத்தால் தனக்கு மீண்டும் வேலை கிடைத்ததை விவரிக்கும் கதையொன்றும் (’கண்டிப்பா சாப்பிட்டு விட்டு போங்க’) இடையில் வருகிறது. மெட்ராசின், பல்வேறு இடங்களையும் அழகாக, நினைவோடு விவரிக்கும் விட்டல், செயிண்ட் தாமஸ் மவுண்ட் இணைப்பகத்திற்கு எதிரில் இருக்கும் சர்ச்சில் (மொஹித்தே ஸ்டேடியத்திற்கு அருகில் இருப்பது) அவர் வரைந்த ஓவியத்தையும் குறிப்பிட்டு,  தான் பன்முகத்திறன் படைத்தவர் என்பதையும் வெளிப்படுத்துகிறார். துறையில் சிறந்து விளங்கிய நாடக ஆளுமைகளைத் தவறாமல் குறிப்பிடும் அவர், தொலைபேசியில் எழுத்துத்துறையில் பிரகாசிக்கும் பாவண்ணன் உட்பட சில படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார். மிகமுக்கியமாக, ஊழியர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட இருபெரும் தொழிற்சங்கங்களையும், சீனிவாசராவ், ஜெகன் போன்ற முக்கிய முன்னோடித் தலைவர்களையும் மறக்கவில்லை. குறிப்பாக ஜெகன் சிரிப்பு. நண்பனோடு fault பார்க்கச் சென்று போஸ்ட் மேலேறி உயிரைத் துறந்த,  சேவையின் மேல் அக்கறைகொண்ட அடிமட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை எழுதி நெஞ்சம் கனக்க வைக்கிறார். இதைப்போன்ற லட்சக்கணக்கான மஸ்தூர்களின் இரவு பகல் பாராத உழைப்பால் உருவானதுதானே இந்தத்துறை என்று யோசிக்கும்போது… டை கட்டிக் கொண்டு டைரக்டரி கொடுத்த கதையைப் படிக்கும்போது தொடர்பான சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன. தொலைபேசி கிடைக்காமல்அவதிப்பட்ட கதையை இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி Better India Batter worldஇல் எழுதியிருப்பார்.  OYT என்ற முன்னுரிமை இணைப்பு.. முதன்முதலில் மொபைல் சேவை வந்தபோது, மொபைல் ஒரு காலுக்கு எட்டு ரூபாய்க்கு மேல் தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்த சமயத்தில்,  Value added Serviceஐ BSNL கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டபோது, சுஜாதாவின் சகோதரர் ராஜகோபால் முற்சியில் BSNL அதை 2 ரூபாய்க்குக் கொடுத்தது. அதன்பின்னர் தெருவுக்குதெரு STD  PCO..  குமரியிலிருந்து காஷ்மீருக்கு ஒரு ரூபாயில் பேச முடிந்தது… BSNL SIM  card  வாங்க மக்கள் வரிசையில் நின்றது… மலைகளிலும் காடுகளிலும் BSNL  லைன்தான் கிடைக்கும் என்று மக்கள் நம்பிக்கையோடு பேசியது… இதெல்லாம்சரி… இந்தச் சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு யார் காரணம்… நிச்சயம் ஊழியர்கள் இல்லை… ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் ஆறுமுகசாமியின் உதவியோடு, கத்திப்பாரா ஜனார்த்தனன் அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக வராமல் இருந்த 35000 ரூபாய் தொகையை வசூல் செய்தது… 2015 வெள்ளத்தில் கிண்டி இணைப்பகமும் அலுவலகமும் மூழ்கியபோது நீந்திச்சென்று அதை மீட்டெடுத்த ஊழியர்களும் நண்பர்களும் நினைவுக்கு வருகிறார்கள்… அம்ருதா இதழில் தொடராக விட்டல்ராவ் எழுதிய இந்த முக்கியமான பதிவை, அந்த இதழே நூலாக வெளியிட்டுள்ளது. அழகான அறிமுகவுரை எழுதியிருக்கும் நண்பர் சந்தியா நடராஜன் கூறுவதுபோல், தொலைபேசியின் கதையுடன், மெட்ராசின் வரலாற்றையும் இந்த நூல் கூறுகிறது. தொலைபேசியின் கதை என்னைப்போன்ற லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.  நன்றி, விட்டல்ராவ் சார்…!

கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

கனவுசீன் கதவில் மாறும் திருவாழியின் காட்சிகள்

நூல் அறிமுகம்: சேலம் ராஜா எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும்  தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி.  இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து  எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன்.  காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும்  கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக  கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.  அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.   பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற  பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட,  அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார்.  எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு  கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல்  நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.   முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.   அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.   ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை,  மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.   சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து

புரட்சியின் தரிசனம்

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி – ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம், மனத்திரையில் அரங்கேறிய ஒவ்வொரு தருணமும் வியப்பும் பெருமிதமும் சிலிர்ப்பும் மேலோங்கி எழுந்ததை உணர்ந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதல் 44 ஆண்டுகள் புரட்சிக்காரராகவும், அடுத்த 44 ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்து 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். புரட்சிக்காரராய் அவர் வாழ்ந்த வாழ்வையும் அதிகம் அறியப்படாத அவருடைய தவ வாழ்க்கையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாய் நாடகம் அமைந்துள்ளது. மேடை நாடகமாக அரங்குகளில் நடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்புடன், பல புதிர்களுக்கு விடையளிக்கும் தகவல் செறிவுடன், உணர்ச்சி பொங்கும் காட்சி அமைப்புகளுடன் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதை நாயகரின் வரலாற்றினை இயற்றமிழில் இல்லாமல், நாடகத் தமிழில் ஆக்கி அளித்திடல் வேண்டும் என்ற நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது. சங்கர கிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் சென்னையிலிருந்து வந்து மைசூர் நந்தி மலை அடிவாரத்தில் ‘சத்குரு ஒம்கார் ஆசிரமம்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரி ஸ்வாமியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்து நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வீட்டில் நாடகத்தின் முதற்காட்சி தொடங்குகிறது. ஆஷ் கொலை வழக்கின் முதற் குற்றவாளியாகக் கூண்டிலேற்றப்பட்டு, வழக்கின் முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனை முடித்து வந்த நீலகண்டர் பழைய நட்பின் தொடர்ச்சியாக பாரதியார் வீட்டிற்கு வருகைபுரியும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. அடுத்து வரும் இருபத்து மூன்று காட்சிகளிலும் வீர சுதந்திரம் வேண்டி எழுச்சித் திட்டங்கள் தீட்டி, புரட்சி இயக்கங்களைக் கட்டமைத்து, பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ.உ.சி., நீலகண்டர், வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, திருவனந்தபுரம் பத்மநாப அய்யங்கார், ஓட்டப்பிடாரம் மாடசாமி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வ.ரா., சிங்கார வேலர் என, அத்தனை தேச பக்தச் செம்மல்களையும் நாம் சந்திக்கிறோம். மட்டுமின்றி, பின்னாளில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஓம்கார் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த காந்தி அடிகளையும், அவருடைய சீடர் ஜே.ஸி. குமரப்பாவினையும் சந்திக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சி, தேச பக்தர்களின் மனப் போராட்டங்கள், சிறைக் கொடுமைகள், போராட்டத்தின் விளைவாகத் தியாகிகள் சந்தித்த வறுமை நிறைந்த குடும்பச் சூழல், தலைமறைவு வாழ்க்கை எனப் பல நிலைகளையும் நாடகம் உணர்த்தி நிற்கிறது. நாடகம் முழுவதும் உரையாடல்கள் நறுக்குத் தெரித்தாற்போலும் கருத்துவளம் மிக்கவையாவும் இருந்தாலும் எடுத்துக்காட்டாகச் சில காட்சிகள்: காட்சி 2இல், ஓம்கார் சுவாமியாகிய நீலகண்டர் கூற்றான, ‘நாங்க ஆரம்பிச்சு வச்சோம்; காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா ஜனங்க எங்க பின்னால வந்துடுவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா ஜனங்களைத் தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலை எல்லாம் செஞ்சார்.’ காட்சி 6இல், வ.உ.சி. நீலகண்டர் உரையாடலில் வ.உ.சி.யின் கூற்றாக வரும், ‘தேச பக்தின்னா என்ன? மக்களோட பிரச்சினையைப் பேசறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமனே தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனக்கிறீரா நீலகண்டர்? இந்தப் பாடம் யாரு சொன்னது?’ காட்சி 3இல், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமியான நீலகண்டரிடம், ‘அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல இது (சந்நியாச வாழ்க்கை) தப்பித்தலோ என்று தோன்றுகிறது சுவாமி’ என்று உசுப்பியதும் ஓம்கார் சொல்லும் பதிலில், புரட்சிக்காரர் தொண்டுகள் ஆற்றும் தவ வாழ்க்கைக்கு மாறி வந்ததின் சூட்சுமம் வெளிப்படுகிறது. காட்சி 19இல், ஓம்கார் சுவாமிகள் பத்திரிகையாளர் சங்கரகிருஷ்ணன் உரையாடலில் ஓம்கார் சுவாமிகளின் கூற்றாக வரும், ‘தேசத் தொண்டு என்பது தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்கார வேலரும்தான்’ என்ற வரிகள் புரட்சிக்காரர் தொண்டுகள் புரியும் தவ வாழ்க்கைக்குத் திரும்பிய புதிரை அவிழ்ப்பதாய் அமைகின்றன. மேலும் அதே காட்சியில், 1922 ஜூலையில் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது சிங்கார வேலர்தான் என்பதை ஓம்கார் சுவாமிகள் தெரிவிப்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. காட்சி 18இல், 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கார வேலர் இல்லத்தில், அவருக்கும் நீலகண்டருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நீலகண்டரின் கூற்றான, ‘தேச விடுதலை என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்‘ என்ற வரிகள் சிங்கார வேலருடன் இணைந்து பணியாற்றியதில் பெற்ற தெளிவு என்று நீலகண்டர் வெளியிடுவதும் அதே காட்சியில் சிங்கார வேலர், காந்தி அடிகள் சுதந்திரப் போராட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தைக் கூறி, ‘இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் (காந்திஅடிகளிடம்) இருப்பதாகக் காங்கிரஸில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது’  என்ற வரிகள் நமது மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் தொன்மத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் நீலகண்டரின் வரலாற்றை நாடகமாகக் கருக்கொண்டு, வளமான உரையாடல்களுடன், மேடை நாடகமாக அரங்கேற்ற வசதியாக செட் சிக்கனத்தை மனதில் கொண்டு, ஒலி-ஒளி தொடர்பான காட்சி அமைப்புக் குறிப்புகளையும் வழங்கியிருப்பது அவருடைய கலைப்புலம் சார்ந்த திறமைக்குச் சான்று. இந்நூல் தமிழ் நாடக உலகிற்குக் கிடைத்துள்ள சற்று வித்தியாசமான படைப்பு. வாசிப்பதற்கு மிக உகந்தது ஆயினும் இதன் நாடக அரங்கேற்றம் நூல் ஆக்கப்பட்டதின் முழுப் பயனையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதாய் அமையும். பாராட்டுகளும் வாழ்த்துகளும். சுவடு இணைய இதழில் தோழர் கோமதி சங்கர் ஆக்கத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், சுவடு வெளியீடாக நூலாக்கம் பெற்று விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்களால் வெளியிடப்பட்ட ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நாடக நூலுக்கான முதல் மதிப்புரையை அதிவிரைவில் வழங்கியுள்ள தோழர் பாப்பையா அவர்களுக்கு சுவடு பதிப்பகம் சார்பிலும் சுவடு இணைய இதழ் சார்பிலும் நாடக ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆ-ர்

கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்

கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்

நூல் விமர்சனம் கதைகள் நம் வாழ்வின் காட்சியாக நம்முன் விரியும்பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்தக் கதைகள் நம் சமூக அமைப்பின் சிக்கல்களையும் முறையற்ற தன்மைகளையும் விளக்குவதாக அமையும்போது மனம் கனத்து, இப்படிப்பட்ட உலகில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோமே என்கிற குற்றவுணர்வையும் கூடுதலாகத் தருகிறது என்பது உண்மைதான். “என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளின் தவறுகள் என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கின்றன” என்பார் மண்டோ. நம் காலத்தில் நடந்துகொண்டிருக்கிற வன்முறைகள், சாதிப் பாகுபாடுகள், சமுதாயத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், படைப்பு மனத்தினை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்த பாதிப்பின் வெளிப்பாடாக விளையும் கதைகளாகவே சேதுவின் கதைகள் நம்முன் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நூலுக்கான முன்னுரை என்பது அதை எழுதுபவரின் கருத்தாக மட்டும் நின்றுவிட்டால் அது புதிதாக வாசிக்கிற மனங்களை இடைஞ்சல் செய்துவிடக்கூடும். எழுத்தாளரின் புதிய முயற்சிகளை, அவர் எடுத்துக்கொண்ட கரு சொல்லப்படுகிற கோணத்தை என்று, கதைகளைத் தொட்டும் தொடாமலும் அழகாக அறிமுகம் செய்துவைப்பதுடன். என்னதான் சொல்ல வருகிறது இந்தத் தொகுப்பு என்று தேடுகிற மனநிலையை உருவாக்குகிறது அமிர்தம் சூர்யாவின் முன்னுரை.  வாசகருக்குப் புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது. அதன் மூலம் தடையின்றிக் கதைகளுக்குள் நுழைய முடிகிறது. சமூகத்தை மாற்றிவிடவும் அல்லது சமூக அவலத்தைக் களைந்துவிடவும் துடிக்கிற படைப்பு மனம், அல்லல்படுகிற மனிதர்களையும் காட்சிகளையும் கூர்ந்து கவனித்துத் தன் எழுத்தில் வெளிப்படுத்தும். அந்த வகையில், தன்னுடைய கதைகளின் மூலமாக, இந்தச் சமூகம் காட்டுகின்ற மனிதர்களையும் அவர்களது வலிகளையும் அவர்களை இந்தச் சமூகம் எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதையும் நம்மிடம் சொல்ல முனைகிறார் சேது. எளிய மக்களின் வாழ்வை, கைவிடப்பட்டவர்களின் வலியை, ஏமாற்றப்பட்டவர்களின் ஆற்றாமையை மட்டுமே கதைகளாக மாற்றுவதற்கு, இந்தச் சமூகத்தின் மீது அக்கறையும் எளிய மனிதர்களின் மீது ஆதுரமும் இருக்க வேண்டும். அந்த இரண்டும் வழிந்தோடும் கதைகளாகவே சேதுவின் கதைகள் உள்ளன. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு சொல்வதோ அல்லது எழுத்தின் மூலமாக மட்டுமே புதிய உலகை உருவாக்குவதோ இயலாத விஷயம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால், அவருடைய கதைகளை, இது இது இப்படி இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்கிற விதமாக, ஒரு அன்றாடப் பதிவைப்போல எழுதி வைக்கிறார். அந்தப் பதிவுகள் நமக்குள் கடத்தும் உணர்வுகள் அதிர்ச்சியும் வலியும் நிறைந்ததாக இருக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் சிலர் முன்னேறுகிறார்கள், வாய்ப்புக் கிடைக்காதவர்களில் சிலரோ, கிடைத்தவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க எந்த எல்லைக்கும் போகத் துணிகிறார்கள். எப்போதுமே, இல்லாதவர்கள்தான் எல்லாப் பழிகளுக்கும் ஆளாகி வாழ்வைத் தொலைக்கிறார்கள். எந்தக் கூடுதல் சொற்களும் அறவுரைகளும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் இ.பி.கோ. கதையின் சண்முகம்போல, அன்றாட வாழ்வில் பலரையும் கடந்துதான் போகிறோம் என்பது உணர்த்தப்படும் இடத்தில் நம்முள் எழும் கேவல்தான் அந்தக் கதையின் வெற்றி. பள்ளிகொண்ட பெருமாள் எம்.பி.ஏ. என்ற கதை, தொகுப்பின் முதலாக இருப்பதோடு தொகுப்பை வாசித்த அனைத்து மனங்களிலும் நிலைத்து நிற்கும் புதிய கதையாகவும் உள்ளது. ஒரு தேர்ந்த நிர்வாகவியல் மாணவனாக மாறி, பக்தனையும் கடவுளையும் அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்கிற விற்பனைப் பிரதிநிதியையும் நடமாடவிட்டிருக்கும் இந்தக் கதை சிரிப்பையும் ‘அட!’ என்ற ஆச்சரியத்தையும் தவறாமல் தந்து செல்கிறது. புராணங்களும் இதிகாசங்களும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும்போது, புதிய புரிதல்களும் புதிய கருத்தாக்கங்களும் உருவாவதும் அதன் வழி நின்று இன்றைய நிலையில் தேவையான சமூகக் கருத்தியல்களுடன் அவற்றைப் பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது. அந்த வகையில், நிறம் கதையில், வாழ்வின் எதார்த்தத்தில் நின்று புராணப் பாத்திரத்தின் மனதைப் பேச வைத்திருப்பது மட்டுமல்லாமல் காலந்தோறும் விதந்தோதப்படுகிற ஒரு கதாபாத்திரத்தைக் கேள்விகளுக்குள்ளாக்கி நிறங்களால் கட்டமைக்கப்பட்டதை நிறங்களால் உடைக்கும் நல்ல முயற்சி. இதுபோன்ற புதிய முயற்சிகள் தொடர்ந்தால், இவர் எழுத்தால் எதிர்காலத்தில் இன்னும் மெருகேறுவார் என்றும் நம்பலாம். கற்பக்கிரகம் என்றொரு கதை. அடைப்புக்குறிக்குள் வல்லினம் மிகும் இடம் என்ற சுட்டுதல். எல்லா இடங்களிலும் வல்லினங்கள் மிகுவது இலக்கணப் பிழைதானே?! படித்து முடிக்கும்போது ஏற்படுகிற வலியும் ஆயாசமும் நன்றாகச் சொல்லப்படிருக்கிற கதை என்று தலையாட்ட வைக்கிறது. இந்த உலகம் குறித்துக் கவலைப்படுகிற மனத்துக்குள் இருக்கிற அந்தத் தவிப்பும் தவறுகளைச் சரி செய்துவிடத் துடிக்கிற துடிப்பும் கதையில் சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது. வாசித்து முடித்தபின் கண்மூடி அமர வைத்துவிடுகிறது, கதையைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம். கோணநிலா, கிரகப்பிரவேஷம் என்ற கதைகளின் வழியாக இந்தச் சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பகடிக்குள்ளாக்கும் சேதுவை, தாராளமாகப் பாராட்டலாம். இந்தத் தன்னலம் மிகுந்த அரசியலில்தான் வெள்ளைச்சாமியைப் போல் எத்தனை அத்திக்குளவிகள்?! இந்தக் கதையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் கரு வழக்கமானதுதான் என்றாலும் எழுதப்பட்டிருக்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. கதையினூடாக வருகிற அத்திக்குளவியின் வாழ்வின் கதை, சமூக எதார்த்தத்தைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. இதைப்போலவே குருதியின் விழையம் என்ற கதை எழுதப்பட்டிருக்கும் விதத்தில் சிறப்பாக உள்ளது. வித்தியாசமான முறைகளில் கதைகளைச் சொல்லி, எடுத்துக்கொள்ளும் கரு வழமையானதாக இருந்தாலும் கதை சொல்லலின் மூலம் அதைப் புதியதாக மாற்றும் திறன் இருக்கிறது சேதுவின் எழுத்துக்கு. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு புதிய முயற்சியாகச் செய்து பார்த்திருக்கிறார். வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு சில தலைப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதும் பல கதைகளை இன்னும்கூட விரிவாக எழுதியிருக்கலாம் என்பதும் சின்ன விமர்சனம். முதல் தொகுப்பு என்ற வகையில் இந்த விமர்சனங்கள் மட்டுமே போதும். அடுத்தடுத்த தொகுப்புகளில் இன்னும் சிறப்பான கதைகளுடன் அவர் மிளிர்வார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மனத்தில் தோன்றிய எண்ணங்களைச் சேகரித்து, சொற்களைக் கூட்டிக் கோணிப்பையில் சேகரித்துத் தைக்கும் முயற்சி என்கிறார் கோணூசியை. வாசித்து முடிக்கும்போதோ, கத்தியால் குத்த முடியாத கையாலாகாத நிலையிலோ கோபம் கொண்ட குழந்தையொன்று கையிலிருக்கும் கோணூசியால் எதிராளியைக் குத்துவதைப்போல், சின்ன சின்ன ஆறுதல்களைத் தேடிக்கொள்கிற கதைகள் நிறைந்த தொகுப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. அழகியலும் மொழியழகும் வாசிக்க மயக்கும் நடையழகும் கதைகளுக்குத் தேவையென்றாலும்கூட, இந்தச் சமூகத்தின் புரையோடிப்போன புண்களைக் கழுவி மருந்திடுகிற எண்ணவோட்டம் கொண்ட கதைகளும் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது. அந்த வகையில், இப்போதுதான் தொடங்கியிருக்கும் சேது இன்னுமின்னும் சிறப்பாக எழுதுவார். சமூகத்துக்குப் பயனுள்ள எழுத்துகளைத் தொடர்ந்து தருவார் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தத் தொகுப்பு. கோணூசி தன் பணியைச் செவ்வனே செய்யும். சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு சேதுவை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இப்படியான எழுதுவினைமை கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளரை நமக்கும் அறிமுகம் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலின் உயரிய அங்கீகாரத்தில் ஒன்றாகத் திகழும் ‘சௌமா’ இலக்கிய விருதை இந்த ஆண்டில் கோணூசி சிறுகதைத் தொகுப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு.  புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப்  படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்:  துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245

தேரி

தேரி

நூல் விமர்சனம் தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன. திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களின் மணற்பரப்பின் பொதுப் பெயர் தேரி.கடற்கரை மணலும் தேரி. சற்று உள்ளே வநதால் தாமிரபரணிக் கரைச் சரிவின் செம்மாந்த மணலும் தேரி. மணப்பாடு தாண்டியவுடன் கடலோரச் சாலையில் விரிந்து சிவந்திருக்கும் மணற்பரப்பும் தேரி. நெய்தலாயினும் மருதமாயினும் இரண்டுக்கும் இடையிலான இந்தத் தேரியானாலும் வளர்ச்சி என்ற சூத்திரத்தின் முன்பு திணைகளின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள். தான் நேசித்து உழைத்த தேரி நிலம், விமான நிலையத்திற்கு போகப்போகிற அதிர்ச்சியில் உறைந்துபோகிற எளிய மனிதன் மீது, ஒரு நேர்மறையான நம்பிக்கையை ஏற்றுகிற நாவலின் முடிவு நேர்த்தி. ஏற்ற இறக்கம் நிறைந்த செல்லக்குட்டியின் வாழ்க்கைப் பயிர், இந்தத் தேரியின் இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு வளர்ந்துவிட முடியும் என்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல், குரங்கணி, தென்திருப்பேரை, குரும்பூர், கானம், நாசரேத் என்று விரிந்து பரந்த இந்தச் செம்மண் தேரியின் மனிதர்கள், சீர்திருத்தக் கிறித்தவத்தின் உதவியால் கல்வியில் மலர்ந்த வரலாறு உண்டு. அநேகமாக சாதிவெறியை, மிக விரைவில் தங்கள் கல்வியினாலும் வணிகத்தில் இறங்கியதாலும் கடந்து வந்த மனிதர்கள் இவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் எத்தனைக் கல்வி அவர்களிடம் சேர்ந்திருந்தாலும் சாதிப் பெருமையும் தீண்டாமைக் கீழ்மையும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதை இந்தத் ‘தேரி’ நாவல் சுட்டிக் காட்டுகிறது. இரண்டு தலைமுறைக் கதைகள், இருபது வருட இடைவெளியில் சொல்லப்படுகின்றன. தலைமுறை தாண்டியும் சாதிப் பெருமையும் தீண்டாமையும் அகன்றபாடில்லை. இந்த நாவலின் காலம் 90களில் முடிவதாகக் கூறலாம். அதற்குப் பிறகு 30 வருடங்கள் ஓடியபிறகும் தேரிக்காட்டில் சாதிவெறி இருக்கக்கூடும். முந்திரிக் காட்டு மறைவில் ஏதேனும் காதல் கதைகள் தோன்றி, தேரி மண்ணில் சாதி வெறியினால் புதைந்து போய்க்கொண்டிருக்கக் கூடும் என்பதே நாவலின் செய்தி. ஆனால் சாதிவெறி, குடும்ப மரபின் வழியாக வருகிறதெனச் சொல்ல முயல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. நிலஉடமையின் எச்சங்களான சாதியையும் மதத்தையும் 90களில் வேகமாக வளர்ந்து வந்த முதலாளியம் தனது பாதுகாவலாகப் பேணியதையும் இன்றைய தாராளமய உலகிலும் அதை வசதியாக, தனது நலன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாக வைத்துக்கொண்டிருக்கிறது அல்லவா? செல்லக்குட்டி சலவைத் தொழிலாளி. பட்டம் பெற்றிருந்தாலும் குலத்தொழிலைத் தொடருகிறான். மேல்தட்டுப் பெண் தங்கராணியுடன் அவனுக்குக் காதல். காதல் அவர்களுக்கு கனியவில்லை; காரணம் சாதி இழிவுதான். ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. தங்கராணியின் தாயார் செவ்வந்தியின் காதலின் விளைச்சலில் அந்தக் காரணம் இருந்தது. ஆனால் அந்தக் காதலும் சாதியால் தோற்றதுதானே? வெக்கை பாய்ந்த செம்மண் தேரியைக் களமாகக் கொண்டு, சுவையாக நகரும் இரண்டு காதல் கதைகளை வெகு இயல்பாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். இரண்டு கதைகளும் இணைகிற புள்ளியில் இன்னுமொரு எதிர்பாராத திருப்பத்தை வைத்து நாவலை சுவாரசியமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர். பாத்திரங்கள், அவற்றின் இயல்பு மாறாமல் படைக்கப் பட்டுள்ளன. மொழி நடை எளிய நெல்லை கிராமப் பகுதியின் வட்டார வழக்கில் மிளிர்கிறது. சாதிப் பெருமை பேசுகிற ஊரிலும் அதற்கெதிரான நல்லிணக்கம் பேசுவதற்கு ஒரு சிவப்புச் சட்டை அண்ணாச்சி வருகிற அழகு ரசிக்க வைக்கிறது. கதையாக்கம் மிக வழமையான முறைதான் என்றாலும் சொல்லியிருக்கும் முறை சுவையாக அமைந்திருக்கிறது. தேரிக் காட்டின் அத்தனை வாழ்வியலும் பொருந்துவதாக பாத்திரப் படைப்பையும் கதை நகர்வையும் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். பணம் படைத்த முதலாளிகளின் பேராசையில், செழுமையான தேரி மணல் லாரிகளில் அள்ளப்பட்டுக் கொள்ளை போவதும் தேரி நிலத்தின் சுவையான நீராதாரம் உறிஞ்சப்பட்டு நகரங்களுக்குக் கடத்தப்படுவதும் சட்டமும் காவலும் பண முதலைகளின் பக்கமே சாய்வதும் நாவலின் கதையோடு உறுத்தாமல் சொல்லப்படும் நேர்த்தியை வாசகன் ரசிக்க முடியும். மண்ணில் கொள்ளையிட்டதை வாழையில் போட்டும் தோட்டத்தின் விளைச்சலை உப்பளத்தில் போட்டும் முதலாளியம் உபரியில் கொழிப்பதைப் போகிற போக்கில் சொல்கிற ஆசிரியர், தேரிக்காட்டு மனிதர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளாக இவை பார்க்கப்படுவதை முத்தாய்ப்பாகச் சொல்லி விடுகிறார். எளியவர்கள் வர்க்கமாகத் திரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கிற சாதுர்யத்தை, வளர்ந்து வரும் நாடுகளில் ‘வளர்ச்சி, வேலைவாய்ப்பு’ என்ற இரண்டு வேப்பிலை அடிப்புகளால் முதலாளியம் பாதுகாத்துக்கொள்கிறது அல்லவா? கலையும் பொருளியல் நோக்குகளும் கலவையாக நாவலின் கதையாடலில் ஊடுபாய்ந்திருப்பதை அனுமானிக்க முடிகிறது. செவ்வந்தி பாத்திரம் வித்தியாசமான படைப்பு. காதலில் தோற்றவள், தன் தோழியின் கொலைக்காகப் பழி வாங்கும் வன்மமும் தன் சொந்த மகளின் காதலில் குறுக்கே வரும் உறவுச் சிக்கலுக்கு தன் மகளைப் பலியாக்கும் பரிதாபமும் வியக்கவைக்கிறது. தங்கராணியின் பாத்திரம் பரிதாபம் நிறைந்தது. ஒருவகையாக அவள் பாதுகாப்பான கரங்களில் சேர்வதில் வாசகன் நிம்மதி அடைகிறான். சித்திரப்பூ, சாதி ஆணவத்திலும் ஆண்மைத் திமிரிலும் கசங்கிய மலர். செவ்வந்தி போல அவள் அரிவாள் தூக்க முடியவில்லையே. அவளுக்கு எந்த நியாயமும் கிடைக்காமல் போவதின் சமூக யதார்த்தத்தை நாவலின் பிற பாத்திரங்களில் யாருமே கேள்விக்குள்ளாக்காமல் போவது நாவலில் சிறிய குறைபாடு. வெட்சி, சற்றே காவியத் தன்மை பூசப்பட்ட பாத்திரம். அவளின் சுயநலமற்ற அன்பு செல்லக் குட்டியை மட்டுமல்ல; நம்மையும் வசப்படுத்துகிறது. இந்தத் தேரிக் காட்டின் இன்னோரு அழகு அசரியா, பாதாளமுனி மற்றும் செல்லக்குட்டியின் நட்பு. வாலிபமும் முதிர்ச்சியும் சேர்ந்த கலவையாக, படிக்கும் வாசகனை சொந்த வாலிப நினைவுகளுக்கு இட்டுச் செல்கிற வாசிப்பு அனுபவத்தைக் கடத்துகிறது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கும் ராஜேஷ் வைர பாண்டியனுக்குப் பாராட்டுகள். இனி தூத்துக்குடி விமானநிலையச் சாலையைக் கடந்து செல்கையில் செல்லக்குட்டி நினைவுக்கு வருவான். நூல் பெயர் : தேரிஆசிரியர் : ராஜேஷ் வைர பாண்டியன்வகைமை : நாவல்வெளியீடு : உதிரிகள் பதிப்பகம்பக்கங்கள் : 291விலை : 440 ரூபாய்கள்

1946 இறுதிச் சுதந்திரப் போர்

1946 இறுதிச் சுதந்திரப் போர்

கடற்படை எழுச்சியின் கதை ஆங்கில மூலம் : பிரமோத் கபூர்தமிழில் : ச.சுப்பாராவ் நூலறிமுகம் ஒரு புரட்சியைத் தயார் செய்யும் கட்சியானது வெகுஜனப் பரப்பில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல குழுக்களாக இயங்கும். தகவல் தொடர்பு, தபால் தந்தி, தொலைபேசி மற்றும் போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கும் புரட்சிக்காரர்கள், புரட்சியின்போது துறைகளின் செயல்பாட்டைத் தமது கரங்களில் எடுத்துக்கொள்வார்கள். மக்கள் திரளிலிருந்து உருவாகும் புரட்சிகர இராணுவத்தோடு அரசின் படையும் ஒன்றிணையும் நேரத்தில் ஒரு புரட்சி வெற்றி பெறும். அந்த வேலையை இராணுவத்தில் இருக்கும் புரட்சிக்காரர்கள் செய்வார்கள். ஆனால் இராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படையிலிருந்து கிளர்ச்சி தொடங்கி, அது மக்கள் திரளோடு இணைய முற்பட்டது சரியா தவறா? வெகு மக்கள் திரளை வழிநடத்திய இயக்கங்களின் திருப்தியும் சம்மதமும் அதற்கு இல்லாமல் போனால் என்னவாகும்? அதுதான் ‘1946 கடற்படை எழுச்சி’. இந்த முன்னுரையோடு நூலறிமுகத்தில் நுழையலாம். மகத்தான மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிற தோழர் சுப்பாராவ் அவர்கள் சமீபத்தில் மொழிபெயர்த்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘1946’ நம்மில் பலருக்குத் தெரியாத வரலாற்றை மிகத் தெளிவாகப் பேசுகிறது. 1946 என்றவுடன் 70களில் பள்ளிப் பருவத்தை முடித்தவர்களுக்கு, வரலாற்றுப் பாடத்தில் ‘கடற்படை மாலுமிகள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள்’ என்ற ஒரு வரிச் செய்தியாகத் தெரிந்திருக்கூடிய இந்த நிகழ்வு, 400 பக்கங்களில் பிரமோத் கபூரின்கடின உழைப்பினால் நம் கவனம் ஈர்க்கிறது. இப்போதைய பாடங்களில் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த தருணத்தில் உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்று, காலனிய நாடுகள் அடிமை நுகத்தடியை உதறி விடுதலை பெற்றுவந்த தருணம். 1942இல் பிரிட்டிஷ் படை வசம் இருந்த சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தபோது, அந்தப் படையில் இருந்த பெரும்பாலான இந்திய வீரர்களை பிரிட்டிஷ் படை கைகழுவிப் போய்விட்டது. அந்த வீரர்கள் தம்மை இந்திய தேசிய இராணுவமாக மாற்றிக்கொண்டு ஜப்பானுடன் சேர்ந்துகொண்டார்கள். இந்த INA, 1943இல் நேதாஜியின் தலைமைக்குப் போனபோது இந்திய மக்கள் வாழ்த்தி வணங்கினார்கள். நேதாஜியும் இந்திய தேசிய இராணுவமும் இந்திய பர்மா எல்லையில் நாட்டின் கதவைத் தட்டியதை தேச மக்களுடன் பிரிட்டிஷ் படையும் வியந்து பார்த்தது. இந்திய தேசிய இராணுவம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் படையிடம் ஜப்பான் தோற்றபோது பின்வாங்க நேர்ந்தது. பிரிட்டிஷ் படையினால் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வழக்கறிஞர் கோட்டை மாட்டிக்கொண்டு நமது வீரர்களுக்காக வழக்காடினார். அந்த வீரர்கள் தூரக்கிழக்கு ஆசியாவில் செய்த சாகசங்களினாலும் அவர்கள் மீதான தேச பக்த ஆவேசத்தினாலும் மக்கள் உளக் கிளர்ச்சி கொண்டிருந்த காலம். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் நேச நாட்டுப் படை வென்றிருந்தது. அந்தப் படையில் போரிட்டு வெற்றிக்குக் காரணமாயிருந்த இந்திய வீரர்களும் கடற்படை மாலுமிகளும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளால் பாராட்டுப் பெற்றிருந்தார்கள். தேசம் விடுதலை பெற்றுவிடும் என்ற நம்பிக்கை தேசியவாதிகளிடம் ஏறக்குறைய வந்துவிட்ட நேரம். 1942 ஆகஸ்ட் போராட்டம் ஒரு எரிமலை போல நடந்து முடிந்து, தேசம் முழுவதும் அந்த வெம்மை குறையாமல் இருந்த நான்கு வருடங்கள், இத்தகைய சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைகள் இந்தியாவில் விடுதலை ஆர்வத்தை உந்திக் கொண்டிருந்தன. போர் முடிந்தவுடன் தேசத் தலைவர்கள், நாட்டிற்கு விடுதலை தரப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரிட்டன் இநதியாவுக்கு விடுதலை தருவதில் தாமதம் காட்டிக்கொண்டுதான் இருந்தது. பம்பாய் கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் அரபிக் கடலைப் பார்த்தவாறு இருந்த வீடு ஒன்றில் வசித்துவந்த பிரான் நாயர் மற்றும் குஸூம் நாயர் தம்பதியரை (இவர்கள் மலையாளிகள் இல்லை என்று அறிக) சந்திக்க, காங்கிரசில் இருந்த அருணா ஆசப் அலி உள்ளிட்ட சோசலிஸ்ட் தலைவர்கள் வந்து போனார்கள். IPTA (Indian People’s Theatre Associastion) என்ற இந்திய முற்போக்கு நாடகக் கலைஞர்களின் அமைப்பைச் சேர்ந்த K.A.அப்பாஸ், சலீல் சௌத்ரி, பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களும் முன்னாள் இராணுவத்தினரும் வந்து போனார்கள். கப்பற்படையில் இருந்த இளம் மாலுமிகள் சிலரும் வந்தார்கள். தேச விடுதலைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேச்சு ஆயுதமேந்திய புரட்சியாக வடிவம் கொண்டது. பலாய் சந்திர தத், (சுருக்கமாக பி.சி.தத்) சலீல் ஷியாம், மதன் சிங், ரிஷிதேவ் பூரி, முகமது சாஹிப் கான், (சுருக்கமாக எம்.எஸ்.கான்) ஆகிய இளம் மாலுமிகள்தான் புரட்சியின் நாயகர்கள். நூலாசிரியர் பிரோமத் கபூர் தேடித் தேடிக் கண்டடைந்து தந்திருக்கிற இந்த வரலாற்றைப் படிக்கப் படிக்க, மனம் அந்தக் காலத்திற்கே சென்றுவிடுகிறது. பிரிட்டிஷ் ஆவணங்கள், அரசுமுறைக் கடிதங்கள், சுய சரிதைகள், விசாரணை அறிக்கைகள், தேசத் தலைவர்களின் கருத்துரைகள், பத்திரிகைகளில் வந்த செய்திகள், கள ஆய்வுகள் என்ற சலிப்பில்லாத தேடல் அதிசயிக்க வைக்கிறது. 1946 பிப்ரவரி முதல் நாள், ஆர்.கே.சிங் என்ற மாலுமி கடற்படையிலிருந்து இராஜினாமா செய்கிறார். அவ்வாறு விலகிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்பது அன்றைய விதி. இது அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டபோது, தனது தொப்பியைக் கழற்றிக் காலால் உதைத்து, ‘நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். அரண்டு போகிறது கடற்படை அதிகார பீடம். ‘என்னவோ நடக்கப் போகிறது’ என்பதற்கான அபாய அறிவிப்பு. அவர் கைது செய்யப்பட்டார். ஏன் அவர் ராஜினாமா செய்தார்? இரண்டாம் உலகப்போரில் சண்டையிடுவதற்கு பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்தது. பல விதமாக விளம்பரங்களில் ஆசைகாட்டி ஆள் சேர்த்தார்கள். பதின் பருவம் முடிந்தும் முடியாத பொடியன்களைச் சேர்த்துக்கொண்டு உலகப் போரில்ஆட்டம் போட்டது காலனி அரசு. நல்ல சம்பளம், பணி நிரந்தரம் என்பதெல்லாம் இந்தப் பையன்களைப் போரிட வைத்தன. போர் முடிந்ததும் அவர்கள் மிக எளிதாகக் கழற்றிவிடப்பட்டார்கள். இந்த பச்சைப் பொய்களைச் சுமந்துகொண்டிருந்த வெளியேற்றம், பணியில் இருந்த மாலுமிகளுக்கு அச்சத்தைக் கொடுத்தது. ஐம்பது பேர் தங்கக்கூடிய இடத்தில் 200 பேரை அடைத்துத் தங்கவைப்பது, சுகாதாரமற்ற, சுவையற்ற, தேவைக்கும் குறைவான உணவு, அதிலும் வெள்ளைக்காரர்களுக்கு முதல் தர உணவு, இந்தியர்களுக்குக் கடைத்தரம். இன்னொரு கொடுமை, வெள்ளை அதிகாரிகளின் இனவெறி, மிஞ்சிய அழுத்தத்துடன் கூடிய திமிர்ப் பேச்சுகள். இவற்றுக்கு எதிரான ஒரு ஆரம்பம்தான் ஆர்.கே.சிங்கின் ராஜினாமா. வெளியிலிருந்த எரிமலையின் வெடிப்புக்கான புறச் சூழ்நிலை, கப்பற்படை மாலுமிகளின் அகச் சூழ்நிலைக்கு நெருங்கி வந்திருந்ததன் ஒத்திகை, தல்வார் சிக்னல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே 1945 டிசம்பர் 1இல் நடந்த கடற்படை தினத்தன்று நடந்திருந்தது. பி.சி.தத் தனது தோழர்களுடன் அதை நிகழ்த்தியிருந்தார். கடற்படை தினத்திற்கு வந்திருந்த நிறவெறி பிடித்த அதிகாரிகளை மேடையிலிருந்து வெளியேறச் சொல்லும் அரசியல் முழக்கங்கள் முகத்தில் அடித்ததை, அவர்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திருக்கமாட்டார்கள். யார் இதைச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத வெள்ளை நிர்வாகம், அதிகாரியை மாற்றி ஒரு மோசமான இனவெறியனைக் கொண்டுவந்து எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது. அதற்கும் ஒரு பதிலடி கொடுத்தார்கள் தோழர்கள், அடுத்த மாதத்தில். 1946 ஜனவரி 21இல், இதே போன்று ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோஷங்களுடன் பரேட் மைதானம் அதிர்ந்தது. ஆனால் இந்த முறை பி.சி.தத். மாட்டிக்கொண்டார். தொடர்ந்து அவரது லாக்கர் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது புரட்சியின் பொறிகள் வெள்ளை நிர்வாகத்தின் முகத்தில் அடித்தன. பிறகு என்ன? பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே மாலுமிகளை மோசமான வார்த்தைகளால் சீண்டி வந்த கிங், பிப்ரவரி 8ஆம் தேதி பாசறைக்கு வந்தபோது, மாலுமிகள் எழுந்து மரியாதை தரவில்லை. பிப்ரவரி 16க்குள் வேகமாக சம்பவங்கள் நடந்தன. கூட்டாக மாலுமிகள் கிங் மீது எழுத்தில் புகார் கொடுத்தனர். உலகம் முழுவதும் ஆணவத் திமிருடன் நடந்துகொண்டிருந்த ஏகாதிபத்திய வெள்ளை அதிகாரம் திடுக்கிட்டுப்போனது. கிங்கின் மிரட்டல் ஆணவம் தொடரவே, பிப்ரவரி 17இல் கடற்படை மாலுமிகள் தங்களுக்குத் தந்த உணவை மறுத்துப் போராட்டத்தைத் தொடங்கினர். உண்ணா நோன்பு உக்கிரமானது. தல்வார் சிக்னல் பள்ளி, புரட்சியாளர்கள் கையில் வந்தது. தல்வாரில் இருந்து எழுச்சி, கடற்படையின் தரைக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் முழுதும் பரவியது. போராட்டக்காரர்கள் தங்களுக்கு ஒரு தலைமைக் குழுவை உருவாக்கினர். பெரும்பான்மை இந்துக்களாக இருந்த மாலுமிகளின் போராட்டக் குழுவிற்கு ஒரு முகமதிய மாலுமி எம்.எஸ். கான் தலைவர். அடுத்த இடத்தில் மதன் சிங். சீக்கிய மாலுமி. தரை அலுவலகங்களிலிருந்து, புரட்சி கப்பல்களுக்குப் பரவியது. பிரித்தானிய சாம்ராஜ்யக் கொடியும் கப்பற்படைக் கொடியும் இறக்கப்பட்டு தேசியக் காங்கிரசின் மூவர்ணக் கொடியும் முஸ்லீம் லீக்கின் பச்சைக் கொடியும் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியும் ஏற்றப்பட்டன. இந்தக் கொடிகள் ஏற்றப்பட்டதன் செய்தி என்ன? நாங்கள் தேசிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம்; நாங்கள் மதங்கள் கடந்து ஒன்றுபட்டிருக்கிறோம்; நாங்கள் வர்க்கமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதே. இந்தச் செய்தி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செவிட்டில் அறைந்தது. புரட்சியை அடக்க இராணுவத்தின் பிற பிரிவுகளும் காவலர்களும் ஏவப்பட்டனர். ஆனால் அவர்கள் சொந்தச் சகோதரர்களைச் சுட மறுத்தனர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தை ஒடுக்கிய இந்திய இராணுவமும் போலீசும் 1946இல் உதவிக்கு வராது என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துகொண்டது. இந்தியாவுக்கு விடுதலை கொடுத்துவிடலாம் என்பதற்கான திட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் அறிவித்து, அதை ஏற்பாடு செய்ய சர்.ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. இந்தப் புள்ளியில்தான் 1946 எழுச்சி இறுதி சுதந்திரப் போர் ஆனது. பம்பாய் தாண்டி பல துறைமுகங்களுக்குப் புரட்சி பரவியது. கராச்சியில் தீவிரம் ஆனது. இசுலாமியர்களுக்கு தனி தேசம் இல்லாமல் இந்திய விடுதலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில்லை என்ற நிலை எடுத்த முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக், கராச்சியில் பரவிய மதம் தாண்டிய கிளர்ச்சியை ரசிக்குமா? கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புரட்சிக்கு ஆதரவு நிலை எடுத்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், வெகுஜன மக்களைக் கொண்டு வேலை நிறுத்தங்கள் செய்தது. பம்பாய் மக்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கினர். சாலைத் தடுப்பரண்களுக்குப் பின்னால் நின்று வெள்ளைக்கார போலீசையும் இராணுவத்தையும் எதிர்த்தனர். கலகம் வன்முறையானது. துப்பாக்கிச் சூட்டில் மக்களின் பிணங்கள் விழுந்தன. ரத்தம் சிந்தாமல் விடுதலை கனியப்போகிற தருணத்தில் ஏகாதிபத்தியத்துடன் அமர்ந்து பேசி வரவேண்டிய விடுதலை, இப்படிக் கனிவதிலோ அல்லது இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி விடுதலை தள்ளிப்போவதிலோ

தெய்வமே சாட்சி

தெய்வமே சாட்சி

நூல் அறிமுகம் அன்றாடம் வணங்கும் தெய்வங்களைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா? தெய்வச் சிலைகளைப் பார்த்தவுடன் கன்னத்தில் போட்டுக்கொள்வதோடு நம் பக்தி முடிந்துபோகிறது, அதிகம் போனால் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்குப் போடுவோம் இதற்குமேல் இந்த தெய்வங்களை பற்றி நாம் சிந்திப்பதில்லை, நம் கவலைகளை மட்டும் அவர்களிடம் பட்டியலிடுகிறோம். ‘குலதெய்வ வழிபாடு செய்யாவிட்டால் வீட்டில் நல்ல காரியங்கள் எதுவும் நடக்காது; குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கும்’ என்று நம் முன்னோர்கள் நம்மிடம் அழுத்தமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ குலதெய்வத்திற்குப் படையல் போடுவதும் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதும் குலதெய்வக் கோவிலில்தான் செய்வது என்பதை இன்றுவரை பல குடும்பங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தக் குலதெய்வங்கள் பெரும்பாலும் சிவனாகவோ விஷ்ணுவாகவோ இருப்பதில்லை. மாறாக, சுடலை மாடன், அய்யனார், முனீஸ்வரன் அல்லது துர்க்கை, பிடாரி போன்ற ஏதாவது ஒரு அம்மனாகத்தான் இருக்கிறார்கள். இந்த தெய்வங்களை எல்லாம் நாட்டார் தெய்வங்கள் என்றே பொதுவில் அழைக்கிறார்கள். நிறுவன சமயம் (Institutionalised religions) சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் போல ஒரு முழுமுதற் கடவுளையும் வேத ஆகம விதிகளையும் மடம், சபை, கோவில், மசூதி போன்ற நிறுவன ஏற்பாடுகளையும் கொண்டதுதான் நிறுவன சமயம். இந்த தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலேயர் காலக் கணக்கெடுப்பிலேயே இந்தியர்கள் அதிகம் வழிபடுவது நாட்டார் தெய்வங்களைத்தான் என்ற குறிப்புகள் உள்ளதாம், இந்த நாட்டார் தெய்வங்கள் அதிகம் வழிபடப்பட்டதற்குப் பல முக்கியக் காரணங்களை இந்த நூலில் எடுத்து வைக்கிறார் ஆசிரியர். நாட்டார் தெய்வங்களுக்குப் பெரிய கோவில்கள் எல்லாம் எழுப்பப்படவில்லை, சிறிய கல், பீடம் மற்றும் கற்சிலைகள். அவ்வளவே போதுமானதாக இருக்கிறது. இந்த தெய்வங்கள் பெரும்பாலும் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள், உடன்கட்டை ஏறியவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவர். பின்னாளில் அவர்களே மக்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொன்னதாகத்தான் வழிவழியாகச் செய்திகள் கிடைக்கின்றன. தான் அறிவொளி இயக்கத்தில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இயங்கிய காலத்தில், மக்களிடம் ஏராளமான தகவல்களைச் சேகரித்ததாகவும் அவற்றில் நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளைத் தனியாகத் தொகுத்ததாகவும் கூறுகிறார் நூலாசிரியர். அவற்றிலிருந்து நாற்பது கதைகளை இந்தப் புத்தகத்தில் விவாதித்திருக்கிறார். தீப்பாஞ்சம்மன் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் குழந்தை, தன் கணவனான அந்தப் பாலகன் உடல்நலக்குறைவால் இறந்துவிடும்போது இவளும் சேர்த்து எரிக்கப்படுகிறாள். அந்த அப்பாவிக் குழந்தைதான் பின்னாளில் பக்தர்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொல்லி தெய்வமாக மாறிய தீப்பாஞ்ச அம்மன். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தீப்பாஞ்ச அம்மன் இருக்கையில், இவை எல்லாமே சீதையின் அவதாரங்கள் என்று ஏமாற்றப் பார்க்கின்றன நிறுவன சமயங்கள். கம்பங்குழி அம்மன் குளித்து முடித்து தலையைச் சிக்கலெடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணின் முடியில் இருந்து ஒரு முடி பறந்துபோய் விழுந்ததில் அவளைக் கவர்ந்துசெல்ல வரும் ஜமீனிடமோ அல்லது மன்னனிடமோ இருந்து அவளையும் தன் வீட்டு மானத்தையும் காப்பாற்றுவதாக எண்ணி அவளை நிலவறைக்குள் போட்டு மூடி வைத்து கொடூரமாகக் கொன்றுவிடுகிறார்கள், அவள் குடும்பத்தார். பின்னாளில் அவர்கள் கனவில் அவள் வந்து தன்னை வழிபட்டால் அவர்கள் நலம் பெறுவார்கள் என்று கூறி கம்பங்குழி அம்மன் என்ற தெய்வமாகிறாள். மக்கள் தங்களின் குற்ற உணர்வினை மறைக்க பக்தியைக் கையில் எடுக்கின்றனர். குடும்ப மானத்தை ஏன்தான் பெண்ணின் உடலில் வைக்கிறார்களோ?! “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்று அந்தப் பெண் கதறிய கதறலை யோசித்துக்கூடப் பார்க்க இயலவில்லை. “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்ற பெயரிலே இந்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டதாம். இப்படி நாம் படிக்கும் ஒவ்வொரு கதையும் நம் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்கிறது. மரத்தியம்மன் பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் இறப்பினாலோ அல்லது அவர்கள் கைவிட்டதாலோ கிணற்றில் விழுந்து இறந்து பிறகு தெய்வமாகியிருக்கிறார்கள். மரத்தியம்மா என்கிற கதையில் தொட்டிய நாயக்கர் சமூகத்தினரைச் சாப்பிடவிடாமல் அந்த ஊர் இளைஞர்கள் துப்புவார்களாம். இப்படி தினம் அரங்கேறிய இந்த எச்சில் அவமானத்தால் மனம் வெறுத்து ஊரைவிட்டுப் போய்விட்ட அந்தச் சமூகத்தினர் ஒரு இளம் பெண்ணை மட்டும் தெரியாமல் விட்டுவிட்டுப் போய்விட்டனர். அவள் மனமுடைந்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்கிறாள். பின்னாளில் அவளே மரத்தியம்மன் ஆகிறாள். நீலியம்மன் நீலியம்மாவின் கதை சற்றே வித்தியாசமானது. நீலி என்கிற மாந்திரீகம் தெரிந்த பெண்ணுக்கு கணவனைத் தவிர வேறு ஒருவருடன் உறவு இருக்கிறது. இதை அறிந்துகொண்ட கணவன் திடீரென வீட்டுக்கு வருகிறான். இருட்டில் யாரென்று அடையாளம் தெரியாமல் தன் கணவனையே கொன்றுவிடுகிறாள் அவள். பின்பு தானும் தீயில் விழுந்து இறந்து நீலியம்மன் ஆகிவிட்டாள். நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவற்றுக்கு ஆடு, கோழி அடித்துப் படையல் செய்கிறார்கள். பல தெய்வங்களுக்கு பணியாரப் பானைகளை வைப்பதும் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது. கன்னி தெய்வம் என்கிற கட்டுரையில் அவ்வையார் விரதத்தைப் பற்றியும் அதையொட்டிய பெண்ணிய சுதந்திரத்தைப் பற்றியும் அலசுகிறார். இப்படி அகால மரணமடைந்த இந்த மனிதர்களையே தெய்வங்களாய் வழிபடுவதால் இவற்றை சிறு தெய்வங்கள் என்று நிறுவன சமயங்கள் கீழ்மைப்படுத்திக் காட்டுகின்றன, எனினும் எந்த வித ஆகம விதிகளும் இல்லாமல் இயல்பான பக்தியோடு படையலிட்டுப் பகிர்ந்துண்டு மக்களால் பரவலாக வழிபடப்படுபவை இந்த நாட்டார் தெய்வங்கள்தான் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. சேகரிக்கப்பட்ட கதைகள் அனைத்தும் யாரால் யாரிடமிருந்து பெறப்பட்டவை, எந்த ஊரில் இந்த தெய்வங்கள் இருக்கின்றன என்று புத்தகத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் குலதெய்வம் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் தேடலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் எளிய அப்பாவி மக்களை, கல்வி ஒன்றைத்தவிர வேறெதுவும் காப்பாற்ற இயலாது. அந்தக் கல்வியாவது இவர்களின் வாழ்வின் வர்க்க பேதங்களை மாற்றுமா என்றால் தெரியாது, ஆனால் அப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று உறுதியாக நம்புவோம். அதற்கு இந்த தெய்வங்களே சாட்சியாக இருக்கட்டும். நூல் : தெய்வமே சாட்சிஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்வகைமை : சிறுகதைகள் / வரலாறுவிலை : ரூ.160வெளியீடு : பாரதி புத்தகாலயம்

இரண்டாம் வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை உருபு

நூல் அறிமுகம் சமூகம், இயற்கை, இலக்கியம் என மூன்றின் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டுவரும் பறம்பு தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் பங்கு பெற்ற சுமார் ஆயிரம் சிறுகதைகளில் ஆறு நடுவர்கள் மற்றும் சங்கத்தின் இலக்கியப் பிரிவான பாட்டாபிறையின் முன்கள நிர்வாகிகள் பன்னிருவர் உதவியுடனும் தேர்தெடுக்கபட்ட சிறந்த இருபத்தெட்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இரண்டாம் வேற்றுமை உருபு. முதல் கதையே வாசகனை ஈர்த்து உள்ளுழுத்துக்கொள்கிறது. ‘அம்சவேணியின் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற கதையில் வருவது போன்ற துயரங்களும் சமூக அவலங்களும் நித்தமும் நிறையவே நடக்கின்றன. இந்த சமூகத்தைக் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் அம்சவேணியின் மூலம் சாட்டையடியாய்க் கேட்கிறார் எழுத்தாளர் வா.மு கோமு. ‘நொண்டிக் கருப்பு’ எனும் தலைப்பில் உலகநாதன் கருப்பசாமி, மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுகளையும் கிராமத்துச் சூழலையும் சொல்லியிருக்கும் விதம் வெகு அழகு. ‘அம்மாவின் நடனம்’ என்ற தலைப்பில் ஒரு கைம்பெண்ணாகிப்போன அம்மாவின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய மகனோ மகளோ பாதுகாக்கத் தவறியதையும் சிறப்பாச் சொல்லியிருக்கிறார் கோமதி சங்கர். தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் வட தமிழகத்தின் அடையாளமாக மாறிப்போன திருவிழா எனில் அது திரௌபதி அம்மன் வசந்தப் பெருவிழாதான். அதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் காட்சிகளை எல்லாம் எழுத்தின் வழி கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். உதிரச்சோறு உண்மையில் வடதமிழகத்தினரின் உற்சாகச் சோறு. இதை எழுதிய அ.மோகனாவுக்குப் பாராட்டுகள். கல்யாணம் ஆகாத கீதாரி பற்றிய கதை ‘பாயும் புலி’. அவனின் மனநிலையையும் காம உணர்வுகளையும் கண்முன்னே கொண்டுவர முயன்றிருக்கிறார் ஆசிரியர் மௌனன் யாத்ரீகா. சம்சாரியின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். ஒரு திருடன் படும் பாட்டை வெகு அழகாய் ‘களவு’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார் முத்துச்செல்வன். இப்படி ஒரு கதையைப் படித்தால் திருட நினைப்பவர்கள்கூட திருந்தி வாழ ஆசைப்படுவார்கள். ஒரு சாதாரண கிராமத்து தினக்கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை, ‘அழிஞ்சைக் காட்டின் கிளிகள்’ கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் சிவக்குமார் முத்தப்பா. வயதான, அதே நேரத்தில் மனதளவில் இளைஞரான முருகேசு இல்ல முருகேஷ் பற்றிய கதை வெகு சுவாரஸ்யம். கதையை மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் திசு சிவசங்கர். திருப்பதி வாசகன் எழுதிய ‘கங்கா நதி’ கதை நெகிழவைக்கும் கதை. இப்படியும் நடக்குமா என்று மனம் குமைந்து நம்மை நொறுக்கிப் போடும் வலி நிறைந்த கதை இது. தெருவோரங்களில், சிக்னலில், சுங்கச் சாவடிகளில் கையேந்தும் சில குழந்தைகளின் அவலநிலையைக் கண்முன்னே காட்சிப்படுத்தி இருந்தார் விஜி முருகநாதன். சுதந்திர இந்தியாவில் இன்னும்கூடப் பலர் மூன்று வேளையில் ஒருவேளை உணவுகூட இல்லாமல் மாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘வடகறி’ சிறுகதை மூலம் சொல்லியிருக்கிறார். மனநிலை பாதித்த குழந்தையை வளர்க்க ஒரு பெண் படும் பாடு ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக ‘பிள்ளைக் கனியமுதே’ எனும் தலைப்பில் டி.கே.வித்யா கண்ணன் எழுதியுள்ளார். விவசாயப் பின்னணியில் இருக்கும் இளைஞன் படுகிற பாட்டை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மகேஷ் குமார். கதைக்கு செவலை என்ற தலைப்பு ஆகப்பொருத்தம். ஒரு தனியார் அலுவலகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும் அது தொடர்பான விசாரணைகளில் பெண்கள் படும் பாட்டினையும் சமூகம் அதை எவ்வளவு அலட்சியமாகக் கடந்துசெல்கிறது என்பதையும் மிக எதார்த்தமாகயும் துல்லியமாகவும் எழுதி இருக்கிறார் ‘பெண் விழை’ எனும் தலைப்பில் ஹேமா ஜெய். வசதி படைத்த உயர்சாதியினர் தங்களைக் கீழ் சாதியினராகக் காட்டிக்கொண்டு அரசாங்கச் சலுகைகளைப் பெறுவது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை ‘வாழ்வியல் அறம்’ தலைப்பில் கே.சுப்புராஜ்அசத்தலாக எழுதியிருக்கிறார். அதுவும் அந்தப் பின்குறிப்பும் கதையில் வரும் கவிதைகளும் அருமை. காதலியை இழந்த தவிப்பை, வலியை ‘எங்கே என் இதயம் அன்பே’ கதையில் வெகு அற்புதமாகச் சொல்லியிருந்தார் கவிஜி. ஒரு சமமான காதலை வேறு கோணத்தில் சொல்லி இருந்தார் ‘சமன்பாடுகள்’ எனும் தலைப்பில் எம்.சங்கர். ‘பச்சை’ கதையில் ஒரு கிராமத்துப் பையன் நகரத்திற்கு வந்து படும் வாழ்வியல் போராட்டங்களைக் கணகச்சிதமாக எழுதியுள்ளார் சந்துரு மாணிக்கவாசகம். ‘குறிப்புகள்’ கதையில் ஒரு மாற்றுத்திறனாளியும் அவரது குடும்பமும் படும் பாட்டை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் க.மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தினரின் காதலை மிகச்சரியாக சொல்லி இருந்தார் ‘பூவண்ணம்’ கதையில் கே.எஸ்.சுதாகர். ஒரு சாதாரண மனிதனுக்குப் பேரிடர் காலத்தில் கிடைத்த அனுபவத்தையே கதையாக மிகவும் நேர்த்தியாக எழுதி இருந்தார் கோவார்த்தனா. மலை கிராம மக்களின் வாழ்க்கையைப் ‘வெறியாட்டு’ எனும் தலைப்பில் படம் பிடித்துக் காட்டியிருந்தார் நெய்வேலி பாரதிகுமார். பாலியல் வன்கொடுமைகளையும் அதனால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ‘பழியும் பாவமும்’ கதையில் சிறப்பாகச் சொல்லி இருந்தார் ஞா.கலையரசி. மரத்தை மையப்படுத்தி படைக்கப்பட்ட நேர்த்தியான கதை ‘புளிய மரத்தின் சுவை’. மரம் நடச் சொல்லும் அந்த மனிதரே மரத்தை வெட்டினால்தான் வியாபாரம் நடக்கும் என்று கூறுகிறம் அபாரம். தீராத நோய்க்கு ஒரே வழி மரணம்தான் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக வலியால் சாவதைவிட ஒரேயடியாகப் போய்ச் சேருவது நலம்தானே என்று நமக்கே தோன்றிவிடும் அளவுக்கும் எழுதியிருந்தார் ‘யாறப்பே’ எனும் தலைப்பில் ஜவ்வாது முஸ்தபா.  தனது சொந்த அனுபவங்களையே ‘விளையும் களை’ என்ற கதையாக எழுதியிருக்கிறார் புதுவை அருண்.கோ. முள்ளிவாய்க்கால் துயரத்தையும் அதனூடாகக் காதலையும் ‘பொய்மையும் வாய்மையுடைத்து’ எனும் தலைப்பில் அற்புதமாக எழுதியுள்ளார் சண் தவராஜா. ஒரு பெண்ணின் அவலத்தை வெகு இயல்பாக எழுதி இருக்கிறார் ‘குலசாமி’ எனும் தலைப்பில் எஸ்.மோகன். நம் குல தெய்வங்களை நாம கும்பிட மறந்துவிட்டோம் என்பதை வெகு அழகாக தனது பாணியில் எழுதி இருந்தார் ‘கடவுள் கோட்பாடு’ தலைப்பில் ஏ.ஆர் முருகேசன்.  மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு கதம்ப சாதத்தைப் போல மிகவும் சுவையானவை. இரண்டாம் வேற்றுமை உருபு – இன்னொரு உலகின் திறவுகோல்.

பருந்து – நூல் விமர்சனம்

பருந்து – நூல் விமர்சனம்

மனங்களைக் கொத்திப் பறக்கும்  பருந்து வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால் இன்னும் யாரோ ஒருவரின் அரவணைப்புக்காக, தலை கோதலுக்காக ஏங்கும் சிறு குழந்தையாகவே இருக்கிறான். அந்த மனத்தின் முகம், அவனுக்கே நெருங்கிய அல்லது பிரியப்பட்டவர்களன்றி வேறு யாருக்கும் தெரிவதில்லை. அம் மனவெளியங்கும் ஏராளமான நிராசைகளும் ஏக்கங்களும் தவறிய ஒன்றின் குற்ற உணர்ச்சிகளுமே நிரம்பிக் கிடக்கின்றன. நிகழ்காலத்தில் அதில் முடிந்தவற்றை நிகழ்த்திக்கொள்கிறான்; முடியாதவற்றை வேறு ஏதேனும் செயல்களின் மூலமாக நிவர்த்தி செய்ததாக நினைத்து ஆசுவாசமடைந்துகொள்கிறான். பருந்து சிறுகதைத் தொகுப்பு முழுக்க ஆசைகளாலும் கனவுகளாலும் வாழ்வை எதிர்கொள்ளும் எளிய மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள். கதைகளை, மனிதர்களின் சுற்றங்களையும் தலையாய பிரச்சனைகளையும் வைத்துக் கட்டமைக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதனுக்கே முக்கியத்துவம் இருக்கும். அதில் அவனுடைய முக்கியமான பிரச்சனைகள் மையப்பட்டிருக்கும். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அப்படி பெரிய பிரச்சனைகளை மையப்படுத்துபவை அல்ல. ஒன்று நிகழ்வதற்கு முன், நிகழ்ந்த பின் அல்லது நடந்துகொண்டிருக்கும்போது அவனுக்குள் நேர்மறை, எதிர்மறையாகக் கிளை பரப்பும் எண்ண ஓட்டங்களை வெளிச்சமிடும் தொகுப்பாக இருக்கிறது. மனத்தின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதால் உளவியல் ரீதியாக இது நிஜம்தானே என்கிற கருத்தில் வாசகன் உடன்படுவான். மொத்தமாகப் பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பத்திற்கும் மேற்பட்ட கதைகள் பெண்களை மையப்படுத்தியவை. கையில் சிறு பொருளொன்றை எடுக்கும்போது அதன் தரத்தையும் வடிவமைப்பின் நுணுக்கத்தையும் பெரும்பாலானவர்கள் பார்க்கிறோமெனில் இந்த கதைகள் அந்தப் பொருளுக்கு பின் உழைத்த யாரோ ஒரு கடைநிலை ஊழியனின் பாடுகளை, உளச் சிக்கலைப் பேசுபவை. பல கதைகள் பால்யத்தின் நிராசைகளை வைத்தும் சில கதைகள் சம்சாரி வாழ்வையும் பேசுகின்றன. தள்ளாத வயதில் மகன்களால் கைவிடப்பட்ட கரிச்சான் என்கிற சவரியடிமைக்கு தன்னுடைய முதல் காதலியின் மரணம் அவ்வளவு சோகமாக முடிகிறது ‘கரிச்சான்’ கதையில். ‘உடைமரக்காடும் அவளது வெட்டுக்கத்தியும்’ கதையில் அத் தம்பதிக்கு சொந்த வீடு கனவாகவே கலைகிறது. ‘ஆம்பக்காய்’ கவிதா யாருக்கும் எதற்கும் பயப்பட்டுவிடாமல் நம்மோடு நெஞ்சை நிமிர்த்திச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ’நெகிழி கனவு’ இவ்வனைத்திலிருந்தும் மாறுபட்ட கதை. ஒருவன் தன் அன்றாடத்தைக் கூடக் கழிக்க முடியாத சூழலில் எவ்வாறு தடுமாறிப் போகிறான் என்பதை அவனுடைய காலைக்கடனின் வாசனையோடு வாசகன் முடிப்பதாக இருக்கிறது. நாம் பார்க்கும் யாரும் இப்படி ஒரு பேரவஸ்தையை அனுபவிக்கக் கூடாது என ஒவ்வொரு வாசகனும் நினைக்க கூடும். அமுதா ஆர்த்தி விரிக்கும் புனைவுலகு இதுதான் தொடக்கமென்றும் இதுதான் முடிவென்றும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாததாக இருக்கிறது. பல கதை மாந்தர்களுக்குப் பெயர்கூட இல்லை. கொண்டாடுவதற்கும் நிராகரிப்பதற்குமான இடைக்குவியல் இது. அவர்கள் அவர்களாகவே அகமனதிலிருந்து உரையாடத் தொடங்கிவிடுவதால் அடையாளக் குழப்பங்கள் இல்லாமல் போகிறது. ஆஹா ஓஹோவெனப் புகழ்வதற்கும் ஒன்றுமற்றதெனப் புறந்தள்ளுவதற்கும் இடையேயான அகத்தின் உணர்வுக் குவியல்கள் இக்கதைகள். அமுதா நாஞ்சில் நிலத்துக்காரர். ஆகவே கதைகளில் விரியும் நிலம் நாஞ்சிலின் வழக்குமொழியில் இனிக்கிறது. பெரிய சோகத்தை, வலியைத் தராதவை இந்தக் கதைகள். எதிர்பாராத முடிவுகள் இல்லை. ஆனாலும் நெஞ்சப்பரப்பில் உறுத்திக்கொண்டிருக்கும் கசடாகத் தொடர்ந்தபடியே வருபவை. இது இவரின் முதல் தொகுப்பு எனினும் அனைத்துக் கதைகளும் ஆனந்த விகடன், காலச்சுவடு, கணையாழி, அம்ருதா, பேசும் புதிய சகதி ஆகிய இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றவையே. முதல் தொகுப்பிலேயே எளிய மனங்களை உள்ளிருந்து படித்தாற்போல் ஆணித்தரமாகத் தடம் பதித்திருக்கிறார் ஆசிரியர். அடுத்த தொகுப்பில் இன்னும் அவரிடமிருக்கும் வேறு மனிதர்களை நம்மோடு கட்டவிழ்த்துவிட வாழ்த்துவோம். நூல் : பருந்துவகைமை : சிறுகதைகள்ஆசிரியர் : அமுதா ஆர்த்திவிலை : ரூ. 200எதிர் வெளியீடுதொடர்புக்கு: 99425 11302

கனவில் தொலைந்தவன்

கனவில் தொலைந்தவன்

நூல் விமர்சனம் வகைமை: வரலாற்று நாவல் ஆங்கில மூல நூலின் ஆசிரியர்: கிரண் நகர்க்கர் தமிழாக்கம்: அக்களூர் இரவி வெளியீடு: சாகித்ய அகாதமி பக்கங்கள்: 800 விலை: 1100 ரூபாய்கள் ‘cuckold’ – இதுதான் ஆங்கில மூல நாவலின் தலைப்பு. பெண்மையை அல்லது பெண்ணைக் கொச்சைப்படுத்தும் பொருள் கொண்ட சொல். இது தமிழுக்கு ‘சரி வராது’ என்று தலைப்பை மாற்றிவிட்டதாக எழுதுகிறார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. முதலில் அது அறம்தானா? என்று நண்பர் இரவியிடம் கேள்வி எழுப்பாமல் இந்த மதிப்புரையைத் தொடருவதற்கில்லை. ஏனெனில் கதாநாயகன் ‘கனவில் தொலைவதற்கு’ அந்த இழிசொல்லே காரணமாகி விடுகிறது. இராமாயணத்தில் இத்தகைய இழிசொல்லைத் தாங்காத இராமன் அக்கினியை வென்றுவந்த மனைவிக்கே தண்டனை அளித்தான். தமிழில் கம்பன் அக்கினிப் பரீட்சையோடு இராமாயணத்தை முடித்துக்கொண்டான் அல்லவா? நாவலில் நாயகன் அந்த ‘சொற்குத்தலை’த் தாங்கி மேலெழுகிறான். நாவலும் இராமாயணத்தில் வந்த அதே கதை முடிச்சை இலாகவமாகத் தொட்டுத் தொடங்கும் புனைவழகில் நானும் சற்றுத் தொலைந்து மீண்டேன். அந்த முதல் முப்பது நாற்பது பக்கங்களை இருமுறை படித்தபிறகே நாவலைத் தொடர்ந்தேன். பெண்களும் ‘cuckquean’ ஆக தமக்குள் குமைவார்களே என்று புராணங்கள் இதிகாசங்கள் ஆராயவில்லை அல்லவா? ஆம். இந்தக் கதையின் நாயகன் பெண்கள் விடயத்தில் அப்படித்தானே இருக்கிறான்.. அவன் மட்டுமல்ல; இந்தக் கதையின் அரச குல ஆண்கள் எல்லோருமே அப்படி இருக்கிறார்களே! ஆனாலும் அக்களூர் இரவியின் தலைப்பும் நாவலில் கனக்கச்சிதமாகப் பொருந்தித்தான் போகிறது என்பதைச் சொல்லிவிட்டுத் தொடருவோம். நண்பர் ரவி தொலைத்தொடர்பு இலாகாவில் கணக்கு அதிகாரியாகப் பணிசெய்து ஓய்வு பெற்றவர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவி வசிப்பது சென்னையில்தான். பத்து நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவல் அவரது மொழியாற்றலின் நுட்பத்திற்குத் தகுந்த சான்று. வரலாற்று நாவல்கள் வரலாற்றின் சிலதுளிகளைப் புனைவாற்றலில் மெருகு சேர்த்துச் சொல்வதுதான். ஆனால் புனைவுச் சுதந்திரம் என்ற பெயரில் வரலாற்றை மனம்போலத் திரித்து எழுதுவது வழக்கமாகிவிட்ட காலத்தில், வரலாற்றின் முனை தேயாது புனைவு முலாம் பூசப்பட்ட நாவல்களைக் காணமுடிந்தால் மிக்க மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சியை இந்த நாவல் வாசிப்பு பூரணமாகத் தந்தது. நாவலின் வரலாற்றுக் காலம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். ராஜபுதனத்து அரசர் ராணா சங்காவின் (1484 – 1527) காலத்தின் இறுதி ஆண்டுகளில் கதை நடக்கிறது. 1526இல் பாபர் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாயப் பேரரசைத் தொடங்கி வைக்கிறார். அடுத்து ராணா சங்காவோடு 1527இல் கனுவாவில் நடந்த மோதலில்வெற்றி பெறுகிறார். ராணா சங்காவின் மூத்த மகன் போஜராஜன் என்ற மஹராஜ் குமார். மஹராஜ் குமாரின் மனைவி கிருஷ்ண பக்தையாக அறியப்படுகிற மீரா. இவர்களோடு இன்னும் சில வரலாற்றுப் பாத்திரங்கள். ராணா சங்கா நடத்திய சில யுத்தங்கள் வழியே அவரை ராஜபுதனத்தின் மகத்தான அரசராக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது.ஆனால் பாபருடன் நடந்த கனுவாப் போர் அடுத்த 250 ஆண்டுகளுக்கு பாரதத்தில் மொகலாயப் பேரரசை இருத்தி வைத்தது. ஒருபுறத்தில் இந்த நாவல் பாபரின் அல்லது வெற்றிபெற்ற சாம்ராஜ்யக் கனவாளனின் கதையாகவும் மறுபுறத்தில் அதே கனவாய் வாழ்ந்து அதே ‘கனவில் தொலைந்துபோன’ மகராஜ் குமாரின் கதையாகவும் இரண்டு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று மடிப்புகளில் மீராவின் கதை நாவலில் புனைவின் மடிப்பாக அணைந்து கொள்கிறது. மீராவின் கதையைப் பலர் புனைந்திருக்கின்றனர். அவையெல்லாம் மீராவின் பார்வையில் புனைந்த பக்திப் புனைவுகள். இந்த நாவல் மீராவின் கணவனின் பார்வையில் விரியும் புனைவு. மறுக்கப்பட்ட காதலின், நிராகரிக்கப்பட்ட காமத்தின் கதை. பழைய புனைவுகளைக் கடந்துவிடாமல் புதிய புனைவை இருத்திவைக்கும் இலாவகத்தில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மீராவைப் பின்நவீனமாக வாசிக்கும் இரசனையில் வாசகனாக நான் தொலைந்து மீண்டெழுந்தேன். ஏறத்தாழ நான்கு மாத காலம் வாசிப்பில் என்னோடு நெல்லைக்கும் சென்னைக்குமாக இந்த 800 பக்கப் புத்தகமும் பயணம் செய்தது. எனது பல்வேறு சொந்த மற்றும் இலக்கியப் பணிகளினால் வந்த இடைவெளிகளில் வாசிப்பு தள்ளிப்போன யதார்த்த நிலை தவிர, நாவலில் வந்த மீராவின் கதையும் என் வாசிப்பில் இடைவெளியை வேண்டிக்கொண்டே வந்தது. நாவலின் பல பக்கங்கள் என்னால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்ட பிறகும் அவற்றின் வாசிப்பு பூரணம் ஆகிவிடவில்லை என்றுதான் சொல்வேன். அரசகுடும்பத்தின் வாரிசுச் சண்டைகள் பற்றி பல நவீனங்கள் ரசனையான கதைகளைத் தந்திருக்கின்றன. இந்த நாவலும் தன் கதை நகர்வை சகோதரச் சண்டையில் சாமர்த்தியமாக வைத்துக்கொண்டது. ஆனால் நாவல் அதைப் பற்றியதல்ல. எதிரியைச் சந்திப்பதென்பது, ‘இம்’மென்றவுடன் நேருக்கு நேர் நின்று கத்தி உருவிச் சண்டையிடுவதும் உயிரைத் திருணமாக எண்ணி வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முரட்டு முடிவுகள் தவிர்த்த மற்றெல்லாம் கோழைத்தனமென யோசிப்பதுமான இராஜபுதனத்து வீரர்களிடையே நவீன ஆயுதத் தொழில்நுட்பங்களை, கொரில்லா யுத்த முறைகளை, தேவையேற்படும்போதெல்லாம் பின்வாங்கித் தப்பிக்கும் உத்திகளை உபதேசிக்கும் மகாராஜ் குமார் என்ற நவீன போர் சிந்தனையாளன் என்னாவான்? 16ஆம் நூற்றாண்டில் யுத்த முறைகள் நவீனமாகிவிட்டன. போர் உத்திகளில் மாற்றங்கள் வந்திருந்தன. இந்த நவீன மாற்றங்கள் பழைய யுத்த பாணிகளில் நிலையான நம்பிக்கை பெற்றிருந்த பாரத நாட்டின், குறிப்பாக வட மேற்கில் அந்நிய எதிரிகள் அடிக்கடி ஊடுருவும் ராஜபுதனத்தின் வீரர்களை நிலைகுலையச் செய்திருக்கின்றன. போர்கள் என்பவை எதிரி நாட்டைக் கொள்ளையிட, பெண்களைச் சூறையாட என்பதெல்லாம் போய், பேரரசுக் கனவுகள் வந்திருந்தன. அதுவும் அந்நியர், நிலையான இருப்புக்காக வடமேற்கிலிருந்து பீரங்கிகள், மாட்ச் லாக் துப்பாக்கிகள் என்று நவீன ஆயுதங்களோடு வந்து மோதியபோது மிகப்பெரிய படைகள் நிலைகுலைந்தன. யுத்தம் எங்கு யாருக்கிடையே நடந்தாலும் அதற்கான நிதிக்கடனை அளித்து லேவாதேவி செய்யும் வணிகத் தந்திரங்கள் அறிமுகமாகி இருந்ததை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் சொல்கின்றன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் இவர்களே முதலாளியத்தின், ஆயுத வியாபாரத்தின் ஆரம்பமாக இருக்கப்போவதின் எளிய அறிமுகத்தை நாவல் சொல்கிறது. நாவல் பாதி நகர்ந்த பிறகுதான் நாவலில் பாபர் வருகிறார். அவர் எழுதிவைத்திருக்கும் (பின்னாளில் ‘பாபர் நாமாவின்’) குறிப்புகள் வழியாக இந்த ஆப்கானிய அந்நியன் நாவலில் அறிமுகமாகிற புனைவழகு, வாசகனைத் திடீரென்று புதுப்பிக்கிறது. கடல் வழியாகப் போர்ச்சுக்கீசியன் என்ற வணிகன் கடைவிரித்தது மட்டுமல்லாமல், மேலைக் கடல் வழி செல்லும் கப்பல்காரர்களிடம் வரி தண்டல் செய்து அச்சமூட்டுகிற ஆரம்பத்தையும் நாவல் கோடி காட்டுகிறது. எடுத்ததற்கெல்லாம் சண்டை பிடிக்கிற பேராசைக் கூட்டத்தை அவர்கள் புரியத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு செய்தி முக்கியமானது. மொகலாயர் வருகைக்கு முன்னர் முஸ்லீம் சுல்தான்களுக்கும் இந்து மன்னர்களுக்கும் பிணக்குகள் இருந்தாலும் சில இணக்கங்களும் இருந்துவந்தன. டில்லி சுல்தானியம் என்பது தங்கள் தலைமேல் கத்தி என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதும் இந்து மன்னர்கள் படைகளில் கணிசமான முஸ்லீம் வீரர்கள் இருந்தனர் என்பதும் நமக்கு வியப்பைத் தருகிறது. மதம் வேறு; பிரதேசம் வேறு என்ற புரிதல் இடைவெளி இருந்திருக்கிறது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் அரச அதிகாரத்தில் பெண்களின் நிர்க்கதியான நிலையை, அவர்களைப் படுக்கைக்கு இழுத்துப்போகும் கேட்பாரற்ற யதார்த்தத்தைச் சொல்கின்றன. இந்தப் பெண்களின் நடுவில் மேர்த்தாவின் இளவரசி மகராஜ் குமாரின் மனைவியாக வருகிறாள். தான் கிருஷ்ணனின் காதலி என்று முதல் நாள் இரவிலேயே மகராஜ் குமாரின் காதலை, காமத்தை நொறுக்கிப் போட்டுவிடுகிறாள். பொது இடத்தில் பாடுகிறாள்; நடனமாடுகிறாள்; இளந்துறவியாகிறாள். ஆனால் இவளுக்குள்ளும் மகராஜ் தன் கணவன் என்ற உடைமைத்துவம் பொங்கி வழிகிறது. அவனது சுதந்திரத்தில் தலையிடுகிறாள். மாறிவரும் அரசியலில், அரியணைப் போட்டியில் கணவனுக்கோ சொந்த நாட்டிற்கோ துணை நிற்காது கண்ணண் பக்தியோடு கரைந்துபோகிறாள். நாவலில் வரும் மற்ற பெண்களான கௌசல்யா, சுனேரியா, சுகந்தா, லீலாவதி எல்லாருமே மகராஜ் குமாரின் வாழ்க்கையில் வந்துபோவது காமம் தோய்ந்தே சொல்லப்படுகிறது. கௌசல்யா தனித்து நிற்கும் பாத்திரம். கௌசல்யா, மகராஜ் குமாரின் ‘சகலமும்’. ஆனால் மங்கள் சிம்மனின் தாய். இந்த மூன்று பாத்திரங்களின் உறவுகள் தாண்டி பாத்திரங்களின் வார்ப்பில் கௌசல்யாவும் மங்களும் மகராஜ் குமாரைப் பின்னால் தள்ளிவிட்டார்கள். சுனேரியாவும் சுகந்தாவும் பரிதாபம் கொள்ள வைப்பவர்கள். நாவலின் போக்கில் எந்த பாதிப்பையும் அவர்கள் தரவில்லை. நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நாவல் முடியும் முன்பு நம்மிடம் விடைபெற்றுவிடுகிறார்கள். மகராஜ் குமார் தனது குற்ற உணர்வுகளில் மூழ்கியிருக்கும்போதும் கழிவிரக்கத்தில் மிதக்கும்போதும் தானே கதை சொல்லி ஆகிவிடுகிறான். தன்னைக் குறித்தும் நாட்டைக் குறித்தும் தனது செயல்களைக் குறித்த பிறர் விமர்சனங்களின்போதும் தன் கனவுகளில் தொலைந்து போகிற தருணங்களிலும் பெரும்பாலும் அவனும் சிலபோது கதாசிரியருமாக இணைந்தே வாசகரிடம் கதை சொல்கின்றனர். அவனே சொல்லியிருக்கலாம்; எதற்கு ஆசிரியர் வரவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆணுறுப்பு சேதிக்கப்பட்டு அரண்மனைகளில் உலாவரும் ஹிஜிராக்களின் கதை பரிதாபமும் வன்மமுமாகச் சொல்லப்படுகிறது. மகராஜ் குமார் யாரின் பிம்பம்? திறமைகள் இருந்தும் அங்கீகாரம் கிடைக்காதவர்களின் பிம்பமா? ஏதோ ஒரு தருணத்தில் கிடைக்கும் வரவேற்பைத் தக்கவைக்கும் திறமை இல்லாதவர்களின் குறியீடா? அவன் தன் கனவில் தொலைந்து போனதுமில்லாமல் தன்னைச் சார்ந்த எல்லோரையும் தொலைத்துவிட்டானே! கனவில் தொலைந்தவன் கதையில் வாழ்கிறான்.அக்களூர் ரவிக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

வாழ்வின் பொருள் என்ன?…

வாழ்வின் பொருள் என்ன?…

வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் “ஒரு குடும்பம் சிதைகிறது” நாவலை வாசித்துமுடித்த பின்னும், அதன் முன் மௌனித்து அமைதியாக அமர்ந்திருந்தேன். இம்முறை மனது சற்று அதிகமாகவே அலைபாய்ந்தது. அந்த வாழ்க்கை…, அந்த மனிதர்கள்…, நஞ்சம்மா… மனம் ஏகத்துக்கும் விக்கித்துதான் போயிருந்தது. நாவல் அதீத சிந்தனைப் பின்னல்களையும், மன ஆழ விசாரங்களையும், தத்துவத் தேடல்களையும் கொண்டிராவிட்டாலும், அவை அத்தனையையும் வாசிக்கும்மனதிற்குள் உண்டாக்குவதுதான் அவ்வெழுத்தின் மாயம். பைரப்பாவின் எழுத்து பிரமிப்பையும், ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியது. நிகழ்வுகள், நிகழ்வுகள்…மேலும் மேலும் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் பைரப்பா. இயல்பான அதுவே வாசிக்கும்மனத்தை ஈர்த்து கிஞ்சித்தும் விலகவிடாமல் செய்கிறது. தி, ஜா-வின், அமி-யின், காரந்தின் எழுத்தில் வியக்க/கற்றுக்கொள்ள நுண்மைகள் இருப்பது போல், பைரப்பாவின் எழுத்திலும் அவ்வதிசயம் எங்கு, எப்படி நிகழ்கிறதென்று வியந்துகொண்டேயிருந்தேன். எச்.வி. சுப்ரமணியம் தமிழில் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் வெளியாகி அரை நூற்றாண்டானாலும், “ஒரு குடும்பம் சிதைகிறது” எக்காலத்திற்குமான செவ்வியல் நாவல். முக்குணங்களில் “தமஸ்”-ஐப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன்;பெரியவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமஸே முழு மனித வடிவம் கொண்ட பாத்திரமாக “சென்னிகராய”ரை இந்நாவலில்தான் சந்தித்தேன். உணவிலும், உறக்கத்திலும் மட்டுமே பெரு விருப்பு கொண்ட ஒரு சுயநல ஜென்மம்.அம்மா, தம்பி, மனைவி, மகன்/மகள் யாருமே அவருக்கு அடுத்த பட்சம்தான். “நாவலில் சென்னிகராயரின் உணவுகள்” என்ற தலைப்பிலேயே ஒரு நீள்கட்டுரை எழுதலாம். நாவல் தலைப்பின் தன்மை/பிரதிபலிப்புகள், முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்திலேயே துவங்கி விடுகிறது. வசைகளும், சாபங்களும் பல கதாபாத்திரங்களின் வாயிலாக நாவல் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எதிர்மறைகளின்பெரும்பான்மையில், நேர்மறை மூச்சுத் திணறுகிறது. வாழ்க்கைச் சக்கரத்தில், கதாபாத்திரங்களின் மரணங்கள் கூட வெகு இயல்பாக, சாதாரணமாக நாவலில் வந்து செல்கின்றன. பூ உதிர்கிறது; பிஞ்சு உதிர்கிறது; காய் உதிர்கிறது; கனி உதிர்கிறது. நல்லனவும்,நேர்மையும் இப்பூமியில் கஷ்ட ஜீவிதத்தில் குறை ஆயுளோடு அல்லலுற, தகிடுதத்தங்களும், ஏமாற்றும் தன்மையும், எதிரும் நீண்ட ஆயுளுடன் சிரிப்போடு பிழைக்கின்றன. காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது. * 1920/30-களின் காலகட்டம். மைசூர் சமஸ்தானம், தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரே பிர்க்காவில் ராமஸந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வருகிறாள் பதின் வயது கங்கம்மா.ஊரில் ஒரு சிவன் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும், இரு அம்மன் தேவதைகளும் (கிராம தேவதை காளம்மன், ப்ளேக் தேவதை சுங்கலம்மா) உண்டு. இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ப்ளேக் நோய் பரவலால் அவதிப்படும்;பிளேக் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் ஊர் மொத்த ஜனமும் ஊரைக் காலிசெய்து ஊருக்கு வெளியே கொட்டகை போட்டு தங்கிவிட்டு, பிளேக் முடிந்ததும் ஊருக்குள் வருவார்கள். ராமண்ணாவிற்கும் கங்கம்மாவிற்கும் முப்பது/முப்பத்தைந்து வயது வித்தியாசம். அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் சென்னிகராயன்; இளையவன் அப்பண்ணய்யா. கங்கம்மாவின் இருபத்து ஐந்தாவது வயதில் ராமண்ணா இறக்கும்போது சென்னிகராயனுக்கு 9 வயது; அப்பண்ணய்யாவிற்கு 7 வயது. சட்டப்படி கிராமத்தின் கணக்குப்பிள்ளை வேலை, தந்தை இறப்புக்குப் பின் மூத்த மகனுக்கு வரவேண்டும். சென்னிகராயனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லையென்பதால் தற்காலிகமாக மணியக்காரர் மைத்துனன் சிவே கவுடன் அந்த வேலையைப் பார்த்து வருகிறான். பையன்கள் இருவருக்கும் படிப்பில் நாட்டமில்லை. கங்கம்மா மூர்க்க குணம் படைத்தவள். எப்போதும் வசைகளும், சாபங்களும், கெட்ட வார்த்தைகளுமே அவள் நாவில் நடமாடும். அவளின் வளர்ப்பு இரண்டு மகன்களிடமும் பிரதிபலிக்கிறது. படிக்க பள்ளிக்கூடம் செல்லச் சொல்லும் அம்மாவின் மீது கோபம் கொண்டு சொந்த வீட்டின் ஓட்டுக் கூரையையே இரவில் உலக்கையால் சேதப்படுத்துகிறார்கள். சென்னிகராயன் சோம்பேறி; சுயநலமி; போஜனப் பிரியன். அப்பண்ணய்யா அவனளவிற்கு இல்லையென்றாலும் அவனும் மூடன்தான்.அக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன்னே திருமணம் செய்கிறார்கள் (மகள்கள் பெரியவளாகும் வரை திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள்); பின்னர் மணப்பெண் பெரியவளானதும் சீர்வரிசையோடு புக்ககம் வருவது வழக்கம்.நாகலாபுரம் கிராமத்தின் புரோகிதர் கண்டி ஜோசியரின் மகள் பனிரெண்டு வயது நஞ்சம்மாவிற்கும், பதினெட்டு வயது சென்னிகராயருக்கும் திருமணம் நடக்கிறது. கிராமத்தின் கணக்குப் பிள்ளை வேலையை திருப்பித் தர மறுக்கும் சிவலிங்கனிடமிருந்து,அவனை மிரட்டி அந்த வேலையை சென்னிகராயனுக்கு வாங்கித் தருகிறார் கண்டி ஜோசியர். வருடங்கள் உருண்டோடுகின்றன. சென்னிகராயனுக்கு கணக்குப் பிள்ளை வேலையை சரியாகச் செய்யத் தெரியவில்லை. நஞ்சம்மாதான் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரின் குணத்தினாலும், கணவனின் விட்டேற்றித் தனத்தினாலும் நஞ்சம்மா புகுந்த வீட்டில்சிரமங்களை அனுபவிக்கிறாள். அவ்வீட்டை கட்டிக் காக்கும் பொறுப்பு அவள் தலை மேல் விழுகிறது. தாய் மகன்களின் நடவடிக்கைகளால் அவ்வீட்டின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டுப் போவதை நஞ்சம்மா எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை.நஞ்சம்மாவின் வீடெதிரில் இருக்கும் கோயிலில் வசிக்கும் பிரம்மச்சாரி பெரியவர் மாதேவய்யாவும், குருபரஹள்ளி குண்டே கவுடரும் அவர் மனைவி லக்கம்மாவும் நஞ்சம்மாவிற்கு ஆதரவாய் உதவிகள் செய்கிறார்கள். கடூர் வட்டம் நுக்கிகெரே கிராமத்தின் சியாம பட்டரின் மகள் சாதம்மாவை மணக்கிறான் இளையவன் அப்பண்ணய்யா. நஞ்சம்மாவின் பிறந்த வீட்டில் அவள் பாட்டி அக்கம்மாவும் (கண்டி ஜோசியரின் அம்மா), அண்ணன் கான்ஸ்டபிள் கல்லேசனும் வசிக்கிறார்கள்.கல்லேசனுக்கு, கண்டி ஜோசியர் ஹாசனைச் சேர்ந்த கமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார். கமலாவிற்கு கல்லேசனையும், நாகலாபுரம் கிராமத்தையும் பிடிப்பதில்லை. கால ஓட்டத்தில் நஞ்சம்மாவிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் பார்வதி, அடுத்தது ராமண்ணா (படிப்பிலும், சாமர்த்தியத்திலும் கெட்டி), மூன்றாவது விஸ்வநாதன் (விசுவன்). சாதம்மாவிற்கு இரண்டு குழந்தைகள்; மூத்தவள் ஜெயலட்சுமி, அடுத்து ராமகிருஷ்ணன்.கிராமத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள்; வீட்டுத் திண்ணையில் கடை வைத்து நடத்தும் சென்ன செட்டி, அவர் மகன் கிரியன், கிரியனின் மனைவி நரசம்மா (மூவருக்குமான ஒரு அட்டகாசமான பஞ்சாயத்துக் காட்சி நாவலில் வருகிறது!). ஊருக்குள் பகட்டாகத்திரியும், கடன் வாங்கிச் சூதாடும் ரேவண்ண செட்டி, அவன் மனைவி சர்வக்கா. குடும்பத்தை நிலைநிறுத்த, குழந்தைகளை வைத்துக்கொண்டு நஞ்சம்மா எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பட்டினி கிடக்கிறாள்; கணவனின் கணக்குப்பிள்ளை வேலைகளைச் செய்கிறாள்; அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, எப்படி காலம்தள்ளுவது என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். புரச இலை தைத்து விற்கிறாள்; பஞ்சகாலத்தில் ஏரிப் படுகையில் தாமரைக் கிழங்கு தோண்டி உணவுக்குப் பயன்படுத்துகிறாள். அவள் சிரமப்பட்டு எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் விதிஅவளைக் கீழே தள்ளுகிறது. * நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி, நஞ்சம்மா மகன் விஸ்வனுடன் மேற்கொள்ளும் சிருங்கேரிப் பயணம். மனம் நெகிழ்ந்து கண் நிறைந்த காட்சி, தினமும் பத்து மைல்கள் நடந்து பள்ளிக்குச் சென்று வரும் ராமண்ணா, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்இருட்டக் காத்திருந்து வீட்டில் பசியோடிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து பலாக்காய் திருடிக் கொண்டு வரும் காட்சி. மனதைக் கலங்கடித்த பகுதி அம்மா பிளேக்கினால் இறந்து பல மாதங்களான பின்னும், இன்னும் அதை நம்ப முடியாமல், மாதேவய்யாவுடன் ஊர்விட்டுக் கிளம்பும் கடைசிக் காட்சியில், தன் வீட்டிற்குள் போய் எல்லா இடங்களிலும் “அம்மா…அம்மா” என்று விஸ்வன் அழைக்கும் காட்சி. திருமணம் முடிந்து முதலிரவு கூட நடக்காத குழந்தை பார்வதியை பிளேக்கிற்குப் பறிகொடுத்து, அவளை மயானத்தில் எரித்து விட்டு வருவதற்குள் மகன் ராமண்ணாவும் பிளேக் காய்ச்சலினால் இறக்க மனம் நிலைகுலையும் நஞ்சம்மா அன்றிரவில் தற்கொலைசெய்துகொள்ள ஊர்க் கிணற்றின் விளிம்புச் சுவற்றின் மேல் ஏறி நிற்கிறாள்…அவள் மனம் அக்கிராமத்திற்கு அவள் மணம் முடித்து வந்த நாளிலிருந்து இப்போது வரையிலான அவளின் துயரங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது… கூட்டுக் குடும்பங்கள் சிதைதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.. இல்லாமையும் வறுமையும் பிரதானமாக இருக்கும் என்ற புரிதலை நாவல் நம்மில் இறக்குகிறதோ.. வெங்கி “ஒரு குடும்பம் சிதைகிறது” – எஸ். எல். பைரப்பாகன்னட மூலம் – “Griha Bhanga”தமிழில்: எச். வி. சுப்ரமணியம்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும்

நூல் அறிமுகம் மகாபாரதம், ராமாயணம், பாகவதம் எனும் வார்த்தைகள் பார்வையிலும் காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் ‘வண்டித் தாத்தா’ என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயணமூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி, ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்! கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில், முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு, வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும் முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும் அத்தையும் பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா) இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும் திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும் பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம். பி.கே.வின் இனி ஞான் உறங்கட்டே – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்த அபாரமான நாவல். ஆ.மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும் அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்! ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன், “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைப்பிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம். செவ்வியல் (கிளாஸிக்) நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும். அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும்; எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றைத் தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள, பதிந்துவைக்க மனம் விழையும். *** ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலில் மகாபாரதத்தின் முக்கியப் பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும், முக்கியமாய் இது கர்ணனின் கதை; திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா? மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி, அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு ‘இனி ஞான் உறங்கட்டே’. யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தான் தாய்க்குத் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று, போரில் உயிர்ப் பிச்சை பெற்றுப் பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கர்ணன் சந்திக்கும் காட்சி,  பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம் அனைத்தும் மிக அபாரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட். நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும். போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவரும்படி யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன். உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதைக் கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்ன சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டுச் சிரித்தான். சகிக்கவொன்னாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினைப் பறித்தெடுத்து, கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காகப் போர்க்களம் வரவேண்டும்? வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்ல. இது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய்ப் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…” மாஸ்டர் பி.கே.விற்கும் தமிழில் தந்த ஆ.மாதவனுக்கும் நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் அன்பும். இனி நான் உறங்கட்டும் – நாவல்மலையாள மூலம்: பி.கே.பாலகிருஷ்ணன்தமிழில்: ஆ.மாதவன்வெளியீடு : சாகித்ய அகாடமி

ஒரு தேசியக் குடும்பம்

ஒரு தேசியக் குடும்பம்

விடியுமா? நூல் அறிமுகம் 1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்கக் காரணமானவன், நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு”. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான். அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது. ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார். அதன்பின்பு… பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் ஜாகரி (விடியுமா?) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்னென்ன என்பதைப் பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் ஸரோஜ் பந்தோபாத்யாய. முன்னுரையிலிருந்து…ஸதீநாத் பாதுரியின் ஜாகரி வங்காள அரசியல் நாவல், இலக்கியத்துக்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி, வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்துவிட்டன. காங்கிரஸ் இசைத்து வந்த கோஷ்டிகான அமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஜாகரி-யில் வர்ணிக்கப்படும் மாஸ்டர் ஸாகிப்பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது. முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள்தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது. அருமையான நாவல்! அற்புதமான மொழிபெயர்ப்பு! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழ்வுக்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்! முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (வெள்ளையனே வெளியேறு) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைக்கழித்தது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் விடியுமா? நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புறக் கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான். முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் விடியுமா?-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – மனிதன். விடியுமா? – ஸதீநாத் பாதுரிவங்க நாவல்; மூலம்: Jagari 1945தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

காதலையும் சமூக அக்கறையையும் கரைகளாகக் கொண்ட தீராநதி கவிஞர் சூரியதாஸின் ‘கரையற்ற நீர்’. இரண்டு பகுதிகளை கொண்ட இக்கவிதைத தொகுப்பின் முதல் பகுதி சமூகத்திற்கானதும் ஒவ்வொரு மனிதனுக்குமான உணர்வுக் குவியலும். இரண்டாம் பகுதி தனக்கே தனக்கெனக் கொள்ளும் காதலைச் சொல்லும் குட்டிக் குட்டி நட்சத்திரக் கவிதைகள். சமப்ர்பணத்தில் ‘கவிதைப் ப்ரியர்களுக்கும்’ எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. இக்கவிதைத் தொகுப்பை எல்லோருக்குமானதாகவே கொள்ளலாம். உதிரி மல்லிகையைச் சுமந்துகொண்டு அந்தத் தெருவின் வீடுகளையெல்லாம் வாசத்தால் கோர்க்கும் பூக்காரியின் வாசமிகு கவிதையில் ஆரம்பமாகும் கரையற்ற நீரின் பயணம், ‘மலம் தின்ன வைக்கும் சாமியை விட சோறுண்ண வைக்கும் பூச்சாண்டி மேல்’ எனச் செல்வது நெகிழ்வு. ‘கோடிட்ட இடத்தின் மீதுநீட்டிப் படுத்திருக்கிறான் நியூட்டன்ஒரே ஒரு மதிப்பெண்ணுக்காக’என்ற கவிதை இன்றைய கல்வி முறை கேள்வி பதில்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது. கவிஞரின் அரசியல் சாடல் அலாதியானது. அக்கவிதைகளில் உடனிருக்கும் பகடி சமூக அக்கறை கொண்டது. எடுத்துக்காட்டிற்கு சில கவிதைகள்: ‘யார் வந்தாலும் குரைத்து எச்சரித்து அனுப்புகிறதுதிருடன் உள்ளே படுத்திருக்கிறானென்றுஅமைச்சர் வீட்டு நாய்’ ‘தெய்வம் ஒளிந்து கொண்டதுசாமி கும்பிட வருகிறார்அமைச்சர்’ காதலியின் இதழ் புன்னகை இழைகளால் தூக்கணாங்குருவிக் கூடு கட்ட முற்படும் கவிஞர்,‘உன்னைப் பார்த்ததும் முதலில்ஆச்சர்யக்குறி இட்டுவிட்டேன்அப்புறம்தான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்’என்று குறிப்பிடும் மோகத்தில் வார்க்கப்பட்ட காதல் நம்மையும் மயக்கத்தான் செய்கிறது. ‘முதன்முதலாக நாம் சந்தித்தபொழுது பருகியமுதல் கோப்பை தேநீருக்குமது என்று பெயர்’போதை தரும் துளியிது. ‘தெய்வத்தை வாசலில் பார்த்தேன்தேவதையை வரவேற்கநீ கோவிலுக்கு வருகிறாய்’எனும் வரிகள் காதலிக்கான அதிகபட்ச ஆராதனை. யானையைப் பற்றியான ஒரு கவிதையை மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது ஒரு கவிஞருக்குச் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை. வாழ்த்துகள் மொழிபெயர்த்தவர்களுக்கும். இது கரையற்ற நீர் மட்டுமல்ல; கறையற்ற நீரும் கூட. இதில் யாவரும் மூழ்கித் திளைக்கலாம். முகிழ்ந்து முத்தெடுக்கலாம். சமூகம் ஒதுக்காது காதல் செதுக்கிக் கவிதை படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள். வாசுகி தேவராஜ்

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. அத்தருணத்தில் இரண்டு நிகழ்வுகள் பிரதானமாக இடம் பெற்றன. நிகழ்வில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் (AUT, TNGCTA)பலரும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் (AIFETO) கலந்து கொண்டு சிறப்பித்தனர். அது மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்தபோதும் (2019), அடுத்து கொள்கை விளக்கக் குறிப்பு வந்த போதும் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியை தன்னார்வக் குழுவினருடன் முன்னெடுத்த சிறார் எழுத்தாளர் விழியன் கலந்து கொண்டார். இந்திய விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அதற்காக தமிழகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்த தோழர் பாலகிருஷ்ணன் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு ) தோழர் மேரி , அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மேனாள் தமிழ்நாடு தலைவர் தோழர் ரங்கசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சுவடு இதழின் நிர்வாக ஆசிரியர் அஹமது மன்சூர், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் நாஞ்சில் நாட்டான், சமூக செயற்பாட்டாளர் சௌந்திரராஜன், ஊடகவியலாளர் நெய்வேலி பாலு, அறிவியல் விஞ்ஞானி வெங்கடேசன் , அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்கள் திரு சுதாகர், திரு லேனா குமார், திரு மருதநாயகம், திரு கோமல் தமிழமுதன், திரு சதாசிவம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னையில் எழும்பூர் மியூசியம் எதிரில்‌ அமைந்துள்ள இக்சா (ICSA) அரங்கத்தில் செப்டம்பர் 25, ஞாயிறன்று, மாலை 4 -7 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது . ஈஸ்வர சந்திர வித்யாசாகரர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு முதல் நிகழ்வாக, மேற்கு வங்காளத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நிகழ்ந்தது. சுவடு பதிப்பகத்தை நடத்தி வருபவரும் சமூக மாற்றத்தை முன்வைத்து வாசிப்பு இயக்கத்தை பரவலாக்குவதன் பொருட்டு, நுழைபுலம் என்ற அமைப்பை நடத்தி வருபவருமான தோழர் நல்லு ஆர் லிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.மிகச் சிறப்பாக பணியாற்றி இக்காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இப்புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரா மருதநாயகம் அவர்கள் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார்.அதோடு கோமல் தமிழமுதன் அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையையும் நிகழ்த்தினார். உரையானது ஏன் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என வந்திருந்தவர்களுக்கு எழுச்சியூட்டும்படி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் பொருண்மையானது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்தது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது. சு.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), உறுப்பினர், AISEC தமிழ்நாடு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற சு.உமாமகேஸ்வரி அவர்கள் தனது தலைமை உரையில் , தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன, ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை அவலத்தில் சிக்கி சீரழிகிறது எனப் பகிர்ந்தார். திரு V.அண்ணாமலைAIFETO பொதுச்செயலாளர் தனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) உள்ளிட்ட கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய வைத்து உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்க வைத்து வருகிறது. கல்வித்துறையினாது பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது ஒரு முக்கியமான பிரச்சனை. அவர்கள் அன்றாடம் ஒரு அறிக்கையும் ஆணையும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ‌‌சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. தீவுத்திடலில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் சென்றனர். மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை ஆனால் மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர். வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது உள்பட தேசிய கல்வி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய்பேசி வருகின்றனர்.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று உரைத்தார். பேராசிரியர் ஜெ.காந்திரராஜ்தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) தொடர்ந்து பேச வந்த பேராசிரியர் ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு இடத்தைக் கூட தரவில்லை என்பதையும் அக்குழு பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் அனைவர் முன்பும் இந்த அரங்கத்தில் பதிவு செய்கிறேன் என்றார். உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாக க் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே விளைகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45000 எண்ணிக்கையுள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கொங்கு கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். அதோடு, தான் சார்ந்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறோம் என்றும் பதிவு செய்தார். பேராசிரியர் P.சிவக்குமார்மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எதிர்த்து கொண்டு வந்த புத்தகத்தை அவையோருக்குக் காண்பித்தார். மேலும்பல புத்தகத் தரவுகளுடன் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்காட்டினார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும் என்று பகிர்ந்தார். பேராசிரியர் T.வீரமணிமாநிலத்தலைவர் TNGCTA தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதையாவது நிறுத்த முடிகிறதா? இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது. ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். காரணம் நுழைவுத்தேர்வில் தேறி வருவதற்கான வாய்ப்புகள்

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு                      

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். கூ (கோண்டு) மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல். ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன. ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல். அடுத்து ஒரிய மொழி குறித்துக் கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஒரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். மேலும், ஒரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர். நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையைப் பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல். எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல். பிராமணர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்களில் இருந்தே இன்றைய தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில், பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ‘சமஸ்கிருதத்திற்கு முந்திய தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல். மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். ‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், ‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல். அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்தப் பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்றாகவும் இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல். அவ்வடிவெழுத்துகள், கொச்சியைச் சேர்ந்த யூதர்களும் கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும் அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல். தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாகத் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, அவர்களுக்கு தமிழின் தொன்மை குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யூதர்களிடத்தும் சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும், மெய்யெழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு, அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல். ‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண்படுகிறார் கால்டுவெல். ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற் காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டு காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை, அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல். ‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல். ‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது, அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் – அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார். எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமை பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல். ‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

வாழ்க்கையை உருட்டும் பகடைகள்

ஒருவன் தானாகவே இருத்தல் என்பது பெரிய விசயம். தான் தானாய் இருத்தல் என்பது ஒருவகை லயித்தல். சூழல் மாறலாம், வாய்ப்புகள் வந்து போகலாம். ஆனால் எப்பொழுதும் தன்னியல்பில் இருந்துகொள்தல் என்பது ஒரு பாதுகாப்பு. அல்லது தன் நிலையைத் தக்கவைத்தல், நியாய அநியாய தர்க்கங்களுக்கு வெளியே நின்று தன் நிலையில் தானாகக் கரைந்துவிடுதல் அது. அந்நிலை அனைவருக்கும் வாய்க்காது. படைப்பாளிகளுக்கு – சித்திரம் வரையும் – செதுக்கும் படைப்பாளிகளுக்கு வாய்க்கலாம். தன் இரசனையை மாற்றிக்கொள்ளாமல் அதிலேயே லயித்துச் சாகுதல் என்பது ஒரு கவி நிலை. அப்படியாய் கவிஞர்கள் – கவித்துவ மனநிலை கொண்டவர்கள் லயித்துப்போவார்கள். கவித்துவ மன நிலை கொண்ட எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை. ஆனால், கவிதைகளை ரசித்துவிடுவார்கள். அவர்களுக்கு ‘லயித்தல் மனநிலை’யில் தன்னைத் தக்க வைக்கும் கால அளவு மாறுபடலாம். ஆனால், கவிஞர்களுக்கு அது கைக் கொள்ளும். கவிஞர்கள் கவிதை எழுதலாம், ஓவியம் வரையலாம், புகைப்படம் எடுக்கலாம், சிறுகதை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். ஆனால் எல்லா இடத்திலயும் தன்னை மீறி ஏதேனும் ஒரு வரியில், ஒரு நிலையில் தன்னை மறந்து ஏதாவது ஒரு நினைவில் லயித்து, தான் கவிஞன் என்ற அடையாளத்தைக் காட்டிவிடுவான். கவிஞர்கள் சிறுகதை எழுதினால் இதைத்தான் தேடிப்பிடிப்பேன் – என்ற ஒற்றை வரிக்கு மேற்சொன்ன இத்தனை வரிகள் எழுத வேண்டியுள்ளது. அமிர்தம் சூர்யா ஒரு நல்ல மேடைப்பேச்சாளர். கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா” வை அவரைப் பேசவிட்டு கேட்கவேண்டும். நல்ல விமர்சகர். இணையதளக் காணொளி வெளியிடுகிறார். இந்த “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” சிறுகதை எழுதியுள்ளார். எல்லாவற்றிலும் மேலாக இவர் ஒரு கவிஞர். சிறுகதைகளைப் படித்துவிட்டு அதன் நுணுக்கங்களை, கதை தவறும் கணங்களை அல்லது கதையின் உச்சங்களைக் குறுக்குவெட்டு செய்து பார்ப்பதை விட, ஒரு சிறுகதைத் தொகுப்பு வாசகனின் மனத்திற்குள் ஏதேனும் பழைய அனுபவத்தை மீட்டெடுக்கச் செய்வதை அல்லது புது அனுபவத்திற்கு அவனைப் பாத்தியப்படுத்துவதைப் பற்றிப் பேசவேண்டும் என்பதே என் கருத்து. ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்கவேண்டும்?! “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அதைத்தான் செய்கிறது. ஒரே மாதிரியான கதை மாந்தர்கள் அல்லது ஒரே பெயரில் வரும் கதை மாந்தர்கள் ஒரு வித அயற்சியைத் தரும் என்ற நிலைப்பாட்டை அமிர்தம் சூர்யா சுக்குநூறாக உடைக்கிறார். எல்லாக் கதைகளிலும் கிருஷ்ணன் வருகிறான், வியாசர் வருகிறார், சார்வாகன், த்ரௌபதி இப்படி வருகிறார்கள் . படித்து முடித்து விட்டு “RECALLING CUE” குறைவாய் இருக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு சவால் இருக்கிறது. சாதிக்குப் பயந்து பெயரை மாற்றிக்கொண்ட ‘ராமண்ணா’ என்ற கிருஷ்ணன்தான் தாமரைக் காட்டைத் தேடி அலைந்து பைத்தியம் ஆகிறான் என்று கதை கட்டிவிடும் சவால் அது. ஒரு கதையில் இருக்கும் கதாபாத்திரம் இன்னொரு கதையில் உள்ள கதாபாத்திரத்தின் வேலையைச் சீர் செய்வது போல். அது சரி, ஒரு கதை இன்னொரு கதையை உண்டாக்கினால்தான் என்ன?! அமிர்தம் சூர்யா உருட்டிவிட்ட ‘சகுனிப் பகடையாய்’ அந்தக் கதை சொல்லும் தொனி எங்கும் அயற்சியை ஏற்படுத்தவில்லை. நிறைய மாதிரிகளை “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” மூலமாக நமக்குத் தருகிறார் அமிர்தம் சூர்யா. ‘மாதிரி’கள் என்பவை இங்கு ஒன்றைப் போல இன்னொன்று என்றும் எடுக்கலாம். உவமை என்று இலக்கிய ஆர்வலர்களாயும் எடுக்கலாம். சில மாதிரிகள்: “தமிழ் சினிமால வர்ற குழந்த நட்சத்திரம் ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்கா இருந்தாலும் கிருஷ்ணன் ……” “மூளை செவிடான மாதிரி…” “காதலும் கவிதை மாதிரிதான்…” “இரட்டைச் சகோதரர்கள் மாதிரி இருந்தது அந்த வீடு”. கதையின் போக்கைத் துரிதப்படுத்துவது என்பது வார்த்தைகளில் வெளிப்படுவது. உரையாடலில், கதைசொல்லியின் குரலில், இரண்டையும் விட வாசகனின் கற்பனைக்குள் அமர்ந்துகொண்டு, அவனைத் தன் வயப்படுத்தி, கதையைக் காட்சி வடிவில் அரங்கேற்றம் செய்து காண்பிப்பது. புனைவையோ அபுனைவையோ வாசகனோடு ஒன்றச் செய்யும் இந்த வகையான ரசவாதம் என்பது கிட்டத்தட்ட பூக்களை ஒரே நாரில் வைத்துக் கோர்த்துக்கொண்டே வருவதுதான். சில கதைகளில் பூக்கள் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு விழுகின்றன, சில கதைகளில் கற்பனை செய்த மாதிரியே ஒரு பூ மாலையாக உருப்பெறுகின்றன. ஆனால் அடிப்படை, வாசகனின் மனதிற்குள் காட்சிப்படுத்த எடுக்கப்படும் ப்ரயத்தனம்தான். அமிர்தம் சூர்யாவின் காட்சிப்படுத்துதலில் எந்த விதிகளும் அல்லாது, கட்டுப்பாடுகளற்ற, வாசகனுக்கு எந்த வழிகாட்டுதலுமில்லாத, எந்த வரையறைக்குள்ளும் சிக்கிவிடாத அல்லது சிக்கத்தோன்றாத, இப்படித்தான் என்ற உருவாக்க நுணுக்கங்களுமில்லாத மேலும் தனி பாணி என்ற முத்திரையும் இல்லாது ஒரு நிகழ்வை அப்படியப்படியே வர்ணிக்கிறார். காட்சிப்படுத்துதலை ஓர் எழுத்தாளன் செய்துவிடுவதுதான் செய்ய வந்த வேலையில் பாதி. அது சிறப்பாய் முடிந்துவிட்டால் மீதியை வாசகன் முடித்துக்கொள்வான். “இருளின் முகம் மெல்ல வெளிறும்படி இலையுதிர்க் காலத்தால் வந்த இடைவெளிகளில் ஆதவனின் ஒளிக்கற்றை இறங்கி, புதர் மண்டிய அந்தக் கற்குகை வாசலில் நிரம்பித் ததும்ப ஆரம்பித்தது”. கவிஞர் அமிர்தம் சூர்யா ஒரு சிறுகதையில் இப்படி எழுதியிருக்கிறார். கதையின் போக்கில் களத்தைச் சொல்வதில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”-இல் எந்தச் சிக்கலும் இல்லை. கிருஷ்ணன், சார்வாகன், வியாசர், த்ரௌபதி போன்ற கதாபாத்திரங்கள் போக, காற்றையும் பெரும்பாலான கதைகளில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில், காற்று ஒரு மேகத்தை அழைத்துச்செல்கிறது, போரில் தோல்வி பெற்றவர்களின் தபோவனத்தின் வாசலில் காற்று வறட்சியாய் இருக்கிறது, பூவரசம் பூக்களுடன் கைகலப்பில் காற்று ஈடுபடுகிறது, ஓங்காரச் சிரிப்பைக் காற்று ஒரு குளமாக மாறி, கல் மூலம் அதிர்வு பெறுகிறது, காற்றை மட்டும் சாப்பிட்டு சித்தர் ஆகும் முறையைச் சொல்கிறது, மாம்பழத்தின் வாசனையை இரயில் நிலையத்தில் மூக்கு முன்னால் போட்டு விட்டுச் செல்கிறது ஒரு காற்று, மயானத்தில் அப்பாவின் சமாதி தேடும் ஒருவன் முன் காற்று கனம் கூடி வீசுகிறது. சிறுகதையாளர்களால் காற்றைக் கதைக்குள் கொண்டுவர முடியும். கவிஞர்களால் மட்டும்தான் காற்றை ஒரு வரிக்குள் கொண்டுவரவும் முடியும், ஒரு வரியைக் காற்றுக்குள்ளும் கொண்டுவர முடியும். ஒரு படைப்பு ஏற்படுத்தும் அனுபவம்தான் வாசகனுக்கு முக்கியம். படைப்பை ஆராய வேண்டிய தேவை வாசகனுக்கு இல்லை. அது எழுத்தாளர்களின் வேலை. வாசகன், ஒரு படைப்பிற்குள் தன்னைப் பார்ப்பதும், தன் அனுபவத்தை உணர்வதிலுமே அந்தப் படைப்பு, வாசகனுக்கானது என்று ஆகிறது. அழகியல், எதார்த்த அனுபவங்கள் சொல்லப்படும் விகிதங்களில் “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” வாசகனுக்கானத் தொகுப்பு. அழகியல் நோக்கில் இந்தப் படைப்பை அணுகுவது தவிர்த்து, விமர்சனப் பார்வையில் எழுதிவிடுவதுதான் இலக்கிய ஆர்வலர்களுக்கான விசயம். படைப்புகளில் “நிறைவுறாத்தன்மை” என்பதும்கூட ஒரு வகையான அழகுதான். ஆனால், வெகுஜனக் கதைகளில் புகுத்தப்படும் “நிறைவுறாத்தன்மை” என்பது, அமிர்தம் சூர்யாவின் மொழியில் சொல்லப்பட வேண்டுமென்றால், சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவின் வீரம் போன்றது. தன் சாதி காரணமாகப் பெயரை மாற்றிக்கொள்ளும் கிருஷணன் ஆகட்டும், சாதி மாறித் திருமணம் முடித்து ஊர் திரும்பும் ஒருவனாகக் கனவு காணுவதாக இருக்கட்டும், அமிர்தம் சூர்யா என்ற ஆகச்சிறந்த ஊடகம் மிகப்பெரிய விசயத்தைச் சொல்லவருகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் கதை வெகு ஜாக்கிரதையாக அந்தச் சிக்கலில் இருந்து வெளியேறி “சுபம்” போடுகையில் அபிமன்யூ குறி வைக்கப்படுகிறான். அப்பாவைச் சாந்தப்படுத்த சமாதி தேடுபவனுக்கு மனைவி பிரிந்து போயிருக்கிறாள். உயிரோடு இருப்பவளைத் தேடாமல், செத்த ஒருவனைத் தேடி அலையும் ஒருவனது கதையில் “நிறைவுறும் தன்மை” நிராயுதபாணியாய் நிற்கும் அர்ஜூனனைத் தவிக்க விட்டு ஓடும் பரமாத்மாவாய் நிற்கிறது. தன்னிலை அறிக்கையில் இவை எல்லாம் அனுபவங்கள் சார்ந்து புனையப்பட்டவை அல்லது செய்யப்பட்டவை என்ற எழுத்தாளரின் கூற்றோடு கதையைப் படிக்கும்பொழுது எதார்த்தம் வெளிப்படுகிறது. வாழ்வின் வெளி இப்படித்தானே இருக்கிறது?! நிறைவுறாத்தன்மையும் நிறைவுறும் தன்மையும் கிட்டத்தட்ட ஒரு மனநிலைதானே?! எதார்த்தங்கள் சுவாரஸ்யங்களைத் தந்துகொண்டே இருப்பதற்கு அடிப்படை, நாம் நினைப்பது நடக்காமல் இருப்பதும், நாம் நினைக்காதது நடப்பதிலும்தான். வாழ்க்கை நமக்கு உருட்டிவிடும் பகடைகள் எப்பொழுதும் நமக்குச் சாதகமாய் இருப்பதில்லை. அந்தந்த நேரத்து உருட்டல்களை அந்தந்த நேரத்துச் சூழ்நிலைகளில் அந்தந்த நேரத்து மனநிலையில் மனிதர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். “கடவுளைக் கண்டுபிடிப்பவன்” அந்தப் பகடைகளை உருட்ட, வந்து விழுந்த சில கதாபாத்திரங்கள்தான். கடவுளைக் கண்டுபிடிப்பதை விட உணர்வது சுவாரஸ்யமானது. “கடவுளைக் கண்டுபிடிப்பவன்”ஐ நீங்கள் உணரலாம். பழனிக்குமார், மதுரை.