கோயில் காடுகள்

கோயில் காடுகள்

இயற்கையின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டுமாயின், மனிதர்களால் இயலக்கூடியது பசுமைப் பரப்பினை அதிகரிப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும்தான். அன்று முதல் இன்று வரை பசுமைப் பரப்பு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. கடந்த நூறாண்டு காலத்தில் தகவமைத்தல் என்பதைத் தாண்டி, அழித்தலில்தான் மனிதர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நமது முன்னோர்கள் நீர் மேலாண்மை, பாதுகாப்பு போன்றவற்றிற்காக, கோயில்கள்தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிக்கும் முறையினைப் பின்பற்றி வந்துள்ளனர். தமிழின் நீதி இலக்கியங்களில் ஒன்றான ‘சிறுபஞ்சமூலம்’ இயற்கையின் அறம் மற்றும் சூழலியல் நீதியையும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே போதித்துள்ளது.•குளம் வெட்டுபவர்•மரம் நடுபவர்•நீர் வழிந்தோட வாய்க்கால் வெட்டுபவர்•விளைநிலம் உருவாக்குபவர்•பொதுக் கிணறு அமைப்பவர்ஆகிய ஐந்து செயல்களைச் செய்பவர்கள் பூமியில் நல்லவண்ணம் வாழ்வார்கள் என்றும் சொர்க்க வாழ்வை அடைவார்கள் என்றும் சொல்கிறது. குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்துஉளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டுப்பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்ஏகும் சுவர்க்கம் இனிது இலக்கியம் சொன்னதற்கேற்ப, நமது முன்னோர்கள் நீர்நிலைகள், பசுமைவெளிகள் என இவ்விரண்டையும் மிகக் கவனமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். சமதளத்தில் வளர்ந்துள்ள மரங்கள் ஒருங்கே சேர்த்து காடாக மாறிய சூழலில், அதனைக் கோயில் காடுகள் என்று அழைக்கிறோம். அதில் பெரும்பான்மையாக இருக்கும் மரத்தை அந்த ஊர்க் கோயிலின் தல விருட்சமாகக் கருதுகின்றனர். இவ்வாழ்வியலில் சில கலப்புகளும் இடையூறுகளும் ஏற்பட்டபின்னர், இந்த தெய்வத்தின் கோயிலுக்கு இதுதான் தல விருட்சம் என்ற பொதுப்புத்தியும் வளரத் தொடங்கிவிட்டது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். இப்படி மரங்களையும் நீர்நிலைகளையும் உருவாக்கி, போற்றி வளர்த்த மக்கள் காடுகளைப் போற்றுவதையும் தங்கள் வாழ்வியல் முறையாகக் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள காலகட்டத்தில், கோயில்களை நவீனப்படுத்தி புதுமையாகவும் பெரிதாகவும் புதுப்பித்துக் கட்டுகையில் குளங்கள் தூர்க்கப்பட்டு, மண்ணாலும் கற்களாலும் நிரப்பி மூடப்பட்டுவிடுகின்றன. இடம் விசாலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தல விருட்சம் உட்பட்ட மரங்களும் பிடுங்கி எறியப்படுகின்றன. உதாரணமாக, சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 2000த்திலேயே கோயில் நிலப்பரப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தெப்பக்குளத்தை மூடி, கிணற்றை மட்டும் விட்டுவைத்தனர். அதையும் 2013இல் புணரமைப்பு செய்தபோது மூடிவிட்டனர். தல விருட்சமான வன்னி மரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக, தல விருட்சமற்ற கோயிலாகத்தான் அந்தக் கோவில் இருந்து வருகிறது. அதே சமயம், கரூர் மாவட்டம் வாங்கல் என்ற ஊரிற்கு அருகிலுள்ள நெரூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘சத்குரு சதாசிவ பிரமேந்திர ஜீவ சமாதியில்’ உள்ள வில்வமரம் பட்டுப்போக (வாட) ஆரம்பித்தபோது, அம்மரத்தினுடைய திசுக்களைக்கொண்டு மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் பழைய மரத்துடன் சேர்ந்து அந்த ஆலயத்தில் செழித்து வளர்ந்துள்ளன. இது நிகழ்ந்தது 2002ஆம் ஆண்டில். “என்னாட்டுடைய இயற்கையே போற்றி…!” என்றிருந்த சமுதாயம் தடம்மாற, வழிபாட்டு முறைகளின் பல்வேறு காரணிகளேகூட இடையூறாக இருக்கின்றன. தெய்வ வழிபாட்டு இடங்கள் வழிபாடிற்காக மட்டுமல்லாமல், ஆடம்பரத்தையும் சமூகப் பெருமையையும் பறைசாற்றும் இடங்களாக மாறிவிட்டிருக்கின்றன. கோயில் காடுகள் என்பன, ஊருக்கு வெளியே கிராம தேவதைகளுக்களாக, கிராமத்தைப் பாதுகாக்கும் தெய்வங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். அரிய வகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை பலவிதமான தாவரங்கள் வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்துவருகின்றன. அந்தந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப இயற்கையாகக் காணப்படும் எல்லாவகை மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் சிறு விலங்குகளும் புழு பூச்சிகளும் அக்காடுகளில் சுதந்திரமாகப் பல்கிப் பெருகின. உயிரியலுடன் பிணைக்கப்பட்ட குட்டிக் காடுகளாகத்தான் அவை காட்சியளித்தன. கற்களால் வடிக்கப்படாத சிலைகளே இங்கு பிரதானம், சுடு மண்ணால் செய்யப்பட்ட கிராம தெய்வங்களின் திருவுருவங்களுடன் காட்சி கொடுத்த ‘கோயில் காட்டுத் தலங்கள்’ தற்போது வேண்டுதல், பிரார்த்தனை, நேர்த்திக் கடன்கள் என்ற பெயர்களில், அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்களாகப் பெரிதாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளத்திலும் இதற்குச் சிறப்பான இடம் தரப்பட்டிருந்தது. கோயில் காடுகள் அங்கு ‘காவுகள்’ என்ற பழந்தமிழ்ப் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலே கண்ட சிறுபஞ்சமூலப் பாடலில் ‘காவு‘ என்ற சொல் மரம் என்ற பொருளில் வருவதைக் காணலாம். அதனால்தான் கேரளாவின் பல ஊர்களின் பெயரோடு காவு, காவிலை என்ற பெயர்கள் ஒட்டி வரும். வல்லியூர்காவு, கலியக்காவிளை, ஆரியங்காவு, புத்தன்காவு என்று காவுகளைப் பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் விளங்கிவருகின்றன. காவுகள் எனப்படும் இந்தக் ‘கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும்’ என்பது அவர்களின் பழமொழிகளுள் ஒன்றின் பொருளாகும். பல்வேறு நாகரீகங்களில் கோயில் காடுகள் இருப்பதற்கான சான்றுகள் மானுடவியல் ஆராய்சிகள் மூலம் தெரியவருகின்றன. இதனை ஆங்கிலத்தில் Sacred Groves என்று அழைப்பார்கள். அணில், ஓணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான உயிரினங்களும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்துவருகின்றன. இத்தகைய கோயில் காடுகள், குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் இணைந்திருக்கும். இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள், அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதனால் காடுகளைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ஊர்களிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. பலவகைப் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையவை. இந்தக் கோயில் காடுகளில் ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும் தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்தக் காடுகளை ஒட்டி ஒரு சிறிய குளமாவது இருக்கும். அதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவரும் வகையில் இவை அமைந்துள்ளன. சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வுக் கல்வி மையத்தின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன. கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக்கொண்ட இந்தக் கோயில் காடுகள், சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின்படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமாக ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாகும். இவற்றில் சில கோயில் காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் காப்புக் காடுகளாக (Reserved Forest) வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் குறைந்தபட்சப் பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது. நம் கலாச்சாரத்துடன் இணைந்த கோயில் காடுகளைப் போற்றிப் பேணி, அழியாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் கொடுப்பது நம் பொறுப்பு ஆகும்.

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்அதைச் சார்ந்து வாழும் ஊர்களும் இருக்க முடியும். இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும். காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள் இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும்,பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூடஅவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால், மணல் கொள்ளைக்காகஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால், மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்தச் சொத்தாகவே அவன் நினைக்கிறான். அது மட்டுமல்ல..சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான். விவசாயம் அழிக்கப்படும்போதுஉழவர்களின் குரலாக மட்டுமல்ல…. எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான். வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன. ஆகவேதான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதியும். ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான் கவிஞன் வாழ்கின்ற நாடுவளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது. ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே. ‘உலகக் கவிதை நாள்’ கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று ‘உலக வன நாளா’கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! worldpoetryday internatonaldayofforests

நிலம், நிலமறிய ஆவல் – 20

நிலம், நிலமறிய ஆவல் – 20

ஏர்மங்கலம், இந்தப் பாடல் மருதநிலத்துக்கு மட்டுமே உரியது. பொன்னேர் பூட்டல் என்று முதன் முதலாக மருதத்தில் ஏர் பூட்டும் நிகழ்வைக் குறிப்பிடுவார்கள். அப்போது ஏர்கலப்பையை வைத்திருக்கும் உழவர் பெருமக்களால் பாடப்படும் பாடல் ஏர்மங்கலம் ஆகும். பொன்னேர் பூட்டல் நிகழ்வு பற்றி தமிழ் இலக்கியங்களில் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாவாகும். இன்றும் கூட சில கிராமங்களில் பொன்னேர் பூட்டல் நிகழ்வு விமரிசையாக இல்லாவிடினும், பாரம்பர்ய நிகழ்வாக நடத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் நாடுகாண் காதையிலும் பொன்னேர் பூட்டல் பற்றியும் ஏர்மங்கலம் பற்றியும் குறிப்பு உள்ளது. ”பார்உடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்” (சிலப்பதிகாரம். நாடுகாண் காதை-134,135) இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, தெற்கு நோக்கிச் செல்லும் அனுமனிடம் இராமன் சொல்வதாகக் கம்பன் கவி எழுதுவார். ”தென் தமிழ்நாட்டு அகன் பொதியில்திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்என்றும் அவன் உறைவிடம் ஆம்ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிபொன்திணிந்த புனல் பெருகும்பொருநை எனும் திருநதி பின்பொழிய;” (கம்பராமாயணம்-நாடவிட்ட படலம் 31) தென்தமிழகத்தில் பொதிகை மலையில் அமர்ந்து அகத்தியர் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த மலையின் பக்கம் சென்றுவிடாதீர்கள். இனிதான தமிழைக் கேட்டு மெய்மறந்து அங்கேயே இருந்துவிடவும் நேரலாம். பொன் கலந்துவிட்டதுபோல் ஓடும் நீரினைக் கொண்ட பொருநை நதி அம்மலையில் இருந்துதான் உருவாகிறது என்பது இதன் பொருள். தமிழுக்கும் தாமிரபரணிக்கும் கம்பனால் பெருமை சேர்க்கப்பட்ட பாடல் இது. இந்தத் தாமிரபரணியை ”தண்பொருந்தப் புனல் நாடு” என்கிறார் சேக்கிழார். மாறவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு இரண்டு ’தண்பொருந்தம்’ என்றே தாமிரபரணியைக் குறிப்பிடுகிறது. அசோகர் காலக் கல்வெட்டும் பாலி மொழியில் தாமிரபரணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ”வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மொழுகிக்களிந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்அளைந்த தெண்டிரைப் பொருநையோ அந்நதி ஞாங்கர்விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ்வாசம்” திருவிளையாடற்புராணம்-84இது பக்தி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பாடல். வளைந்த மெல்லிடை உடைய பெண்கள் தாமிரபரணியில் குளிக்கும்போது, தங்களுடைய மார்பகத்தில் பூசி, பின் கழுவும் குங்குமக் கலவையும் கஸ்தூரி மஞ்சள் கலவையும் சந்தனச் சாறும் பொருநைநதியில் கலந்து ஓடுவதால் அந்த நதியின் நீரில் சந்தனம், மஞ்சள், குங்கும வாசனை கலந்திருக்கிறது. அந்த நதியின் நீரில் மட்டுமா அவ்வாசனை தெரிகிறது, நதியின் நீர் வயல்களுக்குப் பாய்வதால் அந்நீர் உறிஞ்சி விளைந்த செந்நெல்லிலும் கரும்பிலும் அந்த மணம் வீசுகின்றது. சுவையுடன் சுகந்தமும் கிடைக்கின்ற நெல் விளையும் பூமி தமிரபரணியின் மருத நிலங்கள் என்பது இப்பாடல் மூலம் தெரிகின்றது. ”அழகர் கருணை போல் பொருநை பொங்கிவரும்அழகைப் பாரும் பள்ளீரே” (முக்கூடற்பள்ளு) இப்படி பொருநை, தண்பொருநை, தண்பொருந்தம், தாமிரவருணி எனப் பலவாறு பலகாலங்களில் அழைக்கப்பட்டு வந்த நதிதான் தாமிரபரணி. தமிழ் பேசும் நல்லுலகில் பிறந்து, அங்கேயே தவழ்ந்து, ஓடி கடலைச் சேர்கின்ற நதி. தாமிரச் சத்து நிறைந்த தண்ணீரை முகந்து ஓடும் ஒரு நதி இது. அதனால்கூட தாமிரபரணி ஆகியிருக்கலாம்.கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர்களான ஹெரோடெட்டஸ், பிளினி, தாலமி ஆகியோர் தாமிரபரணியின் பெருமைபற்றி தங்களது நூல்களில் எழுதியுள்ளனர். தாமிரபரணி நதி மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பொதிகைமலைச் சாரலில் முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள பூங்குளம் என்ற இடத்தில் சிறிய ஓடையாய்ப் பிறந்து தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து புன்னக்காயலில் வங்கக் கடலில் கலக்கிறது. வழி நெடுக அநேக சிற்றாறுகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் இந்நதியின் மொத்தப் பயணதூரம் 125 கி.மீ. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றுகளால் மழை பெறும் மேற்கு மலைத் தொடர்ப் பகுதியில் உருவாவதால் ஆண்டு முழுவதும் நீரோடிக் கொண்டிருக்கும் வற்றாத பெருநதி இது. அடர் வனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து கிளை பரப்பியுள்ள மரங்களில் இருந்து வீழும் இலைகளாலும், தாழத் தவழ்ந்து வளரும் செடி கொடிகளின் இலைகளாலும் இந்த நதி மலைகளில் நடக்கும் மண் தடம் முழுதும் பஞ்சு போன்ற அமைப்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக மழையற்ற காலங்களிலும் கூட மலைகள் ஊற்றுப் பெருக்கித் தாமிரபரணிக்கு எப்போதும் சுவையான தண்ணீரைத் தந்து கொண்டே இருக்கின்றன. தாமிரபரணி, தமிழகத்தில் காவிரிக்கு அடுத்து மாபெரும் மருதநில வயல்களைத் தன் கரையெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது. கூடக் குறைய 86,107 ஏக்கர் பாசனப் பரப்பைத் தன் தண்ணீரால் ஆராட்டி மக்களுக்கு அன்னம் கொடுக்க உறுதுணையாய் இருக்கின்ற ஜீவநதி தாமிரபரணி. தான் பாயும் வழிநெடுகிலும் நெல், கரும்பு, வாழை என வளப்படுத்திவிட்டே புன்னக்காயலில் கடலைத் தொடுகிறது. மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, இராம நதி, கயத்தாறு மற்றும் சித்ராநதி என்று தமிழ் இலக்கியம் போற்றும் சிற்றாறு ஆகியன மேற்கு மலைகளில் தோன்றி தாமிரபரணியுடன் இணையும் துணை ஆறுகள். இவைகளாலும் பொதிகையின் சூழலாலும் பருவ மழைகளாலும் ஆண்டு முழுவதும் வற்றாது ஓடும் வரத்தைப் பெற்றிருக்கிறாள் தாமிரபரணி.சித்ரா நதி, கயத்தாறு இரண்டும் சீவலப்பேரியில் தமிரபரணியில் கலக்கின்றன. இதனை முக்கூடல் என்கிறார்கள். முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் இந்நிலத்தைக் காதலித்து எழுதிய பாடல்கள் பல உண்டு. ”மீது யர்ந்திடுந் தெங்கிள நீரைமிடைந்த பூகஞ் சுமந்துதன் காயைசூத மொன்றிச் சுமக்கக் கொடுக்குஞ்சூதந் தன்கனி தூங்கும் பலாவின்ஓதும் அந்தப் பலாக்கனி வாழைஉளுக்க வேசுமந் தொண்குலை சாய்க்கும்மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்வளமை ஆசூர் வடகரை நாடே” தென்னையின் இளநீரை அருகிலுள்ள பாக்கு மரங்கள் தாங்கும், பாக்கின் குலைகளை அடுத்துள்ள மாமரங்கள் சுமக்கும், மாங்கனிகளை பக்கத்திலிருக்கும் பலா மரங்கள் பிடித்து நிறுத்தும், பலாக்கனிகளை கீழிருக்கும் வாழை தாங்கும், வாழையை அருகிருக்கும் மாதுளை தூக்கிப் பிடிக்கும். அவ்வளவு வளம் கொண்டது தாமிரபரணியின் வடகரையில் இருக்கும் என் அரசூர் நாடு என்கிறார் ஒரு பெண். ”பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்சீவல மங்கை தென்கரை நாடே” நீர்நிலையில் பூத்துள்ள தாமரை வரப்பில் தலை வைத்து பச்சை இஞ்சியின் இலைகளைத் தொடும், இஞ்சியோ மஞ்சளின் கழுத்தைப் பாசத்துடன் தடவும், மஞ்சளோ வரப்புயர வளர்ந்திருக்கும் நெற்பயிருடன் கூடிக் குலாவி நிற்கும், நெல்லோ அப்பாலுல்ல செங்கரும்பிற்குக் கைகொடுத்து வளர்ந்து இருக்கும். அதே தாமிரபரணியின் தென்கரையில் இருக்கும் சீவல்மங்கை நாட்டின் வளமே ஆகச் சிறந்தது என்கிறார் இன்னொரு பெண். ஆக மொத்தத்தில் தாமிரபரணி பாயும் இடங்களெல்லாம் வளமான பூமியாக உள்ளது. விளைச்சலுக்கு விடிவு தரும் தண்ணீர், விளைவதற்குத் தேவையான மண்வளம், உழைக்கச் சலிக்காத மனித வளம் என நிறைந்துள்ளவை தாமிரபரணியின் இருகரைகளும். உண்ண உணவும், சிலாகிக்க உணர்வும், பேச இலக்கியங்களும் தந்த நதிகள் தமிழ் கூறும் தொல்லுலகில் பல இருக்கின்றன. காண்போம், காத்திருங்கள். கட்டுரையாளர்: சாதாரணன்