மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம்.   மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப்  பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net    விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist

மனிதன் தெய்வமாகும் தருணம்

மனிதன் தெய்வமாகும் தருணம்

தேசிய மருத்துவர்கள் தினம்: ஜூலை 1 – பி.சி.ராய் பிறந்த தினம் உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒருவர் உண்டு என்றால் அவர்கள் மருத்துவர்கள்தான். அவர்களைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) கொண்டாடப்படுகிறது. மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2- வது முதல்வர் என்ற பெருமைக்குரியவருமான மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் (பி.சி. ராய்) அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளான ஜூலை முதல் தேதி, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு இடங்களில் பல்லாயிரம் உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காலத்தில், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கடமையையும் பொறுப்பையும் மருத்துவர்கள் செவ்வனே செய்ததன் பலனாகவே இப்போது நாம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம். மரணத்தைத் தள்ளிப்போடும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்வது நமது கடமையாகும். தேசிய மருத்துவர்கள் தினத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, கவிஞர் பிருந்தா சாரதி எழுதியுள்ள கவிதை: முன்களப் போராளிகளுக்கு இதயம் துடிக்கிறதுஅதற்கு யாரும் தினசரிநன்றி சொல்வதில்லை ரத்த ஓட்டம் நிகழ்கிறதுஅதற்கு எவரும் ஒவ்வொரு நாளும்வணக்கம் சொல்வதில்லை சுவாசம் நடக்கிறதுஅதனை யாரும்நொடிதோறும் தொழுவதில்லை ஒவ்வொரு உறுப்பும்உயிரின் இயக்கத்திற்குஆதாரமாகத்தான் இருக்கிறதுஅவை எல்லாவற்றையும் நாம்ஒவ்வொரு நிமிடமும்நன்றியோடு சிந்திப்பதில்லை ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றுசிறு வேலை நிறுத்தம் செய்தாலும்கூடஉடனே நாம் நாடுவதுஒரு மருத்துவரைத்தான் ‘டாக்டர், எப்படியாவதுஇந்த உசுர காப்பாத்திருங்க’என்று ஒவ்வொரு நாளும்எங்காவது ஒரு குரல்கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது மருத்துவமனைகள்ஆலயமாகும் கணம் அது ‘டாக்டர் நீங்க கடவுள் மாதிரி’என்றுஏதாவது ஒரு இதயம்நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறது மனிதன்தெய்வமாகும் தருணம் அது முன்கள வீரர்கள் என்றுகொரோனா காலத்தில் போற்றப்பட்டவர்கள்,போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு நாள்நாம் நன்றி சொல்லும் நாள்அது இந்நாள் மருத்துவர்கள் நாளான இன்றுஉலகெங்கும் சேவை மனப்பான்மையுடன்செயலாற்றும் மருத்துவர்கள்அனைவரையும் வணங்குகிறேன்…🙏வாழ்த்துகிறேன் 💐 பிருந்தா சாரதி

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார், மகனால் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்மணி. உடல் முழுக்க வியர்த்துப் போயிருந்த அவரை ஆசுவாசப்படுத்தி அமரச்செய்து, பிரச்சினையை விசாரித்தேன். தனக்கு தூக்கம் பிடிக்கவில்லை, கைகள் நடுங்குகின்றன, தலை ஒரு பக்கமாக வலிக்கிறது, என்னாகுமோ ஏதாகுமோ என்று எப்பொழுதும் பயமாகவே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இளைய மகளின் செயல்பாடுகள்தான் என்றார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் தன் மகள், தன் வயதுக்குரிய பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், காரணமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வதாகவும், தான் நினைத்தது மட்டுமே சரி என்று பிடிவாதமாகத் தன்னிடம் சண்டையிடுவதாகவும் கூறினார். மகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் கூறிய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு மனப் பதட்ட நோய் இருப்பதாக அறிய முடிந்தது. அவர் அதில் இருந்து குணமடையத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தேன். மருமகளைக் குறை சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மகளைப் பற்றி ஒரு தாய், புதியவரிடம் குறை சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும் என்று அவர் மகளையும் ஒரு முறை ஆலோசனைக்கு அழைத்து வரச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்து தொடர் சிகிச்சைக்காக என்னைச் சந்திக்க வந்த அவர், தன் கணவருடன் வந்திருந்தார். தனக்கு இருந்த மனப் பதட்ட அறிகுறிகள் எல்லாம் சரியாகி, தற்போது நலமாக இருப்பதாகவும் தன் கணவர்தான் மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் கூறினார். அவர் கணவரிடம் ‘என்ன செய்கிறது?’ என்று நான் கேட்க, மிகவும் களைப்பாக சக்தியே இல்லாதது போல் உணர்வதாகவும், காலையில் எழுந்தவுடன் மனம் மிகுந்த இறுக்கமாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவரும், தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் மகள்தான் காரணம் என்று தன் மனைவியைப் போலவே கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தன் மகள் இருப்பதாகவும், சிறிய பிரச்சினைகளைக் கூட மிகப் பெரியதாகப் பார்ப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகளை நோக்கி ஆனந்தமாகப் பாட வேண்டிய தந்தையே, மிகவும் மனம் நொந்து தன் மகளின் செயல்பாடுகள் பற்றி சொல்லி வருத்தப்பட்டது, உண்மையில் அவர் மகளுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருப்பதைப் புரிய வைத்து, அதில் இருந்து மீண்டு வர சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு, கண்டிப்பாக அவர்களின் மகளையும் சிகிச்சைக்கு அழைத்துவரும்படி கூறினேன். அவரிடம் சொல்லி அழைத்து வருவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறினார்கள் இருவரும். அவர்கள் சென்று சரியாக ஒரு வாரம் கழித்து, அவர்களின் மூத்த மகன், தன் இளைய சகோதரி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் தன்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்தபடி ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அவரிடமும் அவர் சகோதரியை ஒரு முறை என்னிடம் அழைத்து வரும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர், தன் சகோதரி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு பின் மறுப்பதால் வீட்டில் உள்ள  அனைவரும் மிகக் குழப்பமான மனநிலையில் இருப்பதாக என்னிடம் வந்து கூறினார். வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினை, எப்படி மற்ற மூவரின் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதற்கெல்லாம் காரணமான அவரை,  ‘எனக்கே அவரைப் பார்க்கனும் போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தங்கையை ஒரு வழியாகப் பேசி அழைத்து வந்து விட்டதாகவும், வெளியில் காத்திருப்பதாகவும் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் மூவர் மூலம் எதிர்மறையான குணங்களால் மட்டுமே அறியப்பட்ட ஒருவரை முதலில் சந்திக்கும் போது, நான் கேள்விப்பட்ட மோசமான சுபாவங்களுடன் கூடிய ஒரு  நபரைப் பார்க்கப் போவதாக நினைப்பது சரியாக இருக்காது. அவரைப் பற்றி என் மனதில் ஏற்பட்ட முன்முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு, திறந்த மனதுடன் எந்த வித கண்டனம் செய்யும் மனப்பான்மையுமின்றி, குறை காணும் மனமற்று, புதியதொரு நபரைச் சந்திப்பது போல் சந்தித்தால் மட்டுமே அவர் பிரச்சினைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய முடியும். தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மாற்றிக் கொள்ள அறிவுரை சொல்வார்களோ என்ற பயத்துடன் வரும் அந்தப் பெண்ணை, சிறு புன்னகையுடன்  வரவேற்று அமரச் செய்து, அவரைப் பற்றிய எந்தவித முன் முடிவுகளும் எனக்கில்லை என்பதை முதலில்  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அவரும் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொண்டு தன் மனதினைத் திறப்பார். அந்த மனநிலையுடனே நான் அவரைச் சந்திக்க, அவரும் தன் பிரச்சினைகளை அழுதுகொண்டே சொல்லத் தொடங்கினார். தன் கல்லூரிக் காலத்தில் தனக்கு நேர்ந்த சில துயரமான சம்பவங்கள் தன் மனதை பாதித்தது முதல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக அவர் பிரச்சினைகளைக் கேட்டதில் அவருக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை அளித்தேன். ‘நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகமே. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏதாவது ஒரு விஷயம்  இருக்கும்’ என்று  மனநலப் பிரிவு பேராசியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. முன்முடிவுகளின்றி புத்தம் புதிதாக ஒவ்வொருவரையும் சந்திப்பது மட்டுமே, அந்த மனிதரையும்  சூழலையும் முழுமையாக உணர்வதற்கு உதவும்  என்பதே அவரிடம் நான் கற்ற பாடம். நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அவர்கள் பற்றிய நம் கருத்துக்களுடனும், முன் முடிவுகளுடனும், அபிப்ராயத்துடனும் பார்க்கிறோம். உண்மையில் ஒரு மனிதனுடைய குணங்கள் என்பது நிலையானவை அல்ல. மாறாக, மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது என்பது போல மனிதனின் குணாதிசயங்களும் பல மாற்றங்கள் கண்டு மாறிக் கொண்டேயிருக்கும் என்றுதான் அறிவியலும்  நமக்குச் சொல்கிறது. ஒரே நதியில் ஒருவர் இருமுறை கால் நனைத்திட முடியாது என்ற ஹெராக்லிடஸ் உடைய புகழ் பெற்ற சொற்றொடர் போல் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முறை நாம் சந்தித்த மனிதரை மீண்டும் மறுமுறை நாம் சந்திப்பதேயில்லை. நாமும் மாறியிருப்போம், மற்றவரும் மாறியிருப்பார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறர் பற்றிய நம் அபிப்ராயங்களை, முடிவுகளை, கருத்துக்களை முற்றிலும் மறந்துவிட்டு, நம் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் திறந்த மனதுடன் புத்தம் புதிதாய்ச் சந்திக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டால்,  நாம்  வாழும் சிறியதொரு வாழ்க்கை புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் மிக அழகானதாகவும் இருக்கும். இப்படித்தான் ஒரு முறை என் அருமை  நண்பர் ஒருவரிடம் புத்தம் புதிதாய்ச் சந்திப்பது பற்றிய என் புரிதலை, நுண்ணர்வைப்  பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நன்றாகப் புரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாக  என்னிடம் வாங்கிய பழைய கடன்களை எல்லாம் முற்றிலும்  மறந்துவிட்டு, தினமும் திறந்த மனதுடன், புத்தம் புதிதாய் என்னை வந்து சந்தித்து புதியதாகக் கடன் கேட்கத் தொடங்கி விட்டார். 😃😃 கட்டுரையாளர்: Dr. ர. நிஷாந்த், D.P.M,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை,தொடர்புக்கு: 9486496169ravi.nishanth79@gmail.com படங்கள்: இணையத்திலிருந்து

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான்.  சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள்.  “தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள்.  தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான்.  கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.   எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான்.  ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான்.  மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது.  மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது.  உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான்.  மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார்.  அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.  அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.   மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார்.  கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார்.  வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்.  “உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”.  இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன். Dr. ர. நிஷாந்த்,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை. படங்கள்: இணையத்திலிருந்து

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோயை பற்றிய முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…. மஞ்சள் காமாலை நோயானது சித்த மருத்து வத்தில் சிறப்பாக குணப்படுத்த படுகிறது. ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. அதில் குறிபிட்ட ஒரு வகையை மட்டும் தான் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். இப்போது எத்தனை வகையான மஞ்சள் காமாலை இருக்கிறது என காண்போம்.  1.ஹீமோலைட்டிக் மஞ்சள் காமாலை இவ்வகை மஞ்சள் காமாலையானது , முன்பு கூறியது போல் இரத்த சிவப்பணுக்களின் வாழ்க்கை காலமான 120 நாட்களுக்கு முன்பே உடைய ஆரம்பிப்பதால் வருகிறது. அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் உடைவதால் அதிகளவு இணையமற்ற பிலிரூபின்கள் உருவாகின்றன. இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும். இதன் அறிகுறிகள்: வயிற்று வலி அடர்த்தியான ப்ரெளன் கலர் மூலம் அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் பொதுவான உடல் சோர்வு  2.Hepatocellular jaundice   அதாவது, கல்லீரலினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலை ஆனது கல்லீரலில் உள்ள நோய் மற்றும் குறைபாடு களினால் ஏற்படும். ஹெபாடிட்டிஸ் எனப்படும் கல்லீரல் தொற்று, சிர்ஹோசிஸ் எனப்படும் கல்லீரல் நோய் போன்ற வற்றால் கல்லீரலின் செயல்பாடு குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இணையமற்ற பிலீருபின் இணையான பிலீருபின் ஆவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலையை கொடுக்கிறது. இதன் அறிகுறிகள்: 1. அடர் நிறம் கொண்ட சிறுநீர். 2. #வெளுமை நிற மலம் 3. உடல் சோர்வு 4.வயிற்று வலி  3.Obstructive மஞ்சள் காமாலை இந்த வகை மஞ்சள் காமாலை நோயானது, பித்தப்பையில் ஏற்படும், பித்த கல்லினால் உண்டாகும் அமைப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.  இதன் அறிகுறிகள் : 1. மஞ்சள் நிற உடல் 2. அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் 3. வெளுமை நிற மலம் 4. உடல்அரிப்பு 5. காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி தொடரும்…

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பதை நோய் என்றும் கூறலாம், அறிகுறி என்றும் கூறலாம். மஞ்சள் காமாலைக்கு ஆங்கிலத்தில் jaundice.  இது jaunice எனும் ப்ரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் மஞ்சள் நிறமாதல். இதை மருத்துவ ரீதியில் icterus என்றும் அழைப்பர். மஞ்சள் காமாலை நோயானது பிலிருபின்(Bilirubin) என்ற ஒரு மூலக்கூறினால் ஏற்படுகிறது. பிலிருபி னின் வாழ்க்கையை அறிந்து கொள்வோம். அப்போது தான் மஞ்சள் காமாலை எளிதாகும். நம் உடல் இயங்க இரத்தம் தேவை, இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். அந்த இரத்தச் சிவப்பணுக் களால் தான் நம் இரத்தம் சிவப்பாக உள்ளது. இந்த இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப் படுகிறது. இந்தச் சிவப்பணுக்கள் ஹீமோகுளோபினோடு இணைந்து ஆக்சிஜனை உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம், நம் உடல் இயங்குகிறது. இந்த சிவப்பணுக்களுக்கு வாழும் காலம் என ஒன்று இருக்கும். அது 120 நாட்கள். 120 நாட்களுக்கு பின் வயது முதிர்ந்த இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்படும் இந்த இரத்த சிவப்பணுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் இணக்கமற்ற பிலிருபின்னாக மாற்றப்படும். இந்த இணக்கமற்ற பிலிருபின் ஆனது ஒரு லிக்கியூடால் கரைக்கக்கூடிய ஒன்று. அதாவது நீரால் கரைக்க முடியாது. எனவே இதனை அல்புமின் நம் கல்லீரலுக்கு எடுத்து செல்லும். அங்கு இது யூரோபிலினிடோ குளுக்காரோனா ட்ரான்ஸ்பரேஸ் மூலம் இணக்கமான பிலிருபின் ஆக மாற்றும். இணக்கமான பிலிருபின் நீரில் கரையக்கூடிய ஒன்று. இது அங்கிருந்து பித்தப்பையின் பித்தக் குழாய் மூலம் கணையத்தை அடைந்து அங்கிருந்து குடலுக்குச் செல்லும். குடலில் உள்ள பொருட்களால் இந்த பிலிருபின் யூரோபிலினோஜன் ஆக மாற்றப்படும். யூரோபிலினோஜன்  நிறமற்றது. இந்த யூரோபிலினோஜனின் 80% வரையிலான அளவு அப்படியே குடலில் உள்ள பொருட்களால் ஸ்டெர்கோபிலி னோஜன் அதன் பின் ஸ்டெர்கோபிலினாக மாற்றப்படும். இந்த ஸ்டெர்கோபிலின் தான் மலத்திற்கு ஒருவகை மஞ்சள் பழுப்பு நிறத்தை கொடுக்கிறது. மீதமுள்ள 20% யூரோபிலினோஜன் மீண்டும் கல்லீரலுக்கு வந்து அங்கிருந்து குறிபிட்ட அளவு சிறுநீரக உறுப்பிற்கு வந்து யூரோபிலின் ஆக மாற்றப்படுகிறது. இந்த யூரோபிலின் தான், நம் சிறுநீருக்கு இளம் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. மேலே கூறப்பட்ட பிலிருபின்னின் வரலாறு, எப்போதும் நிகழக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட வரலாற்றில் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு வகை மஞ்சள் காமாலை ஏற்படும். அந்த வகைகளை அடுத்த இதழில் காண்போம். தொடரும்