கற்றனைத்தூறும் அறிவு என்றார் திருவள்ளுவர். கற்றலின் கேட்டலே நன்று என்றார் முன்றுரை அரையனார். வாசிப்பு என்பது நம் சிந்தை மகிழச் செய்வது மட்டுமன்று. அது நம் கற்பனைச் சிறகுகளை விரிக்கச் செய்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவல்லது. பரபரப் பான இந்த நுகர்வுலக வாழ்வில், வாசிக்கும் பழக்கம் அருகிவிட்டது. தொலைக்காட்சி, உள்ளங்கை இணையம், கேளிக்கை உள்ளிட்டவை புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு முட்டுக் கட்டைகளாகி விட்டன. அருகிவிட்ட வாசிப்பை மீட்டெடுக்கவும், வாசிப்பு அனுபவத்தைப் பலருடன் பங்கிட்டுப் பரிமாறிக்கொள்ளவும், தென்சென்னைப் பகுதியில் நிலவும் இலக்கிய தாகத்துக்கு சில துளிகள் நீர்வார்க்கவும் துவங்கப்பட்டதுதான் நுழைபுலம் வாசிப்புக் குழு. பங்கிட்டால் பல்கிப் பெருகுவது கல்வியும் அறிவும்தானே! ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நுழைபுலம் குழுவினர் ஒன்றுகூடி, தாங்கள் வாசித்த நூல்கள் குறித்து உரையாற்றியும், கலந்துரையாடியும், கருத்துகளைப் பகிர்ந்துகொண்டும் தங்கள் வாசிப்பு அனுபவத்தைக் கடத்துவது மட்டுமின்றி, நிகழ்கால சமூகப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நுழைபுலம் கலந்துரையாடலை நேரடி நிகழ்வாக நடத்த இயலாத சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ஷூம் செயலி வாயிலாக கடந்த 24.05.2020 அன்று வெற்றிகரமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டது. இம்முதல் முயற்சியில் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் பத்து பேர் தங்கள் வாசிப்பையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்திய ஒன்றியத்திலிருந்தும், உலகின் பார்வையிலிருந்தும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் “காஷ்மீர் பனிமலைப் பயணம்” குறித்த தனது பயண அனுபவங்களை, பயண ஆர்வலர், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர் அமுதா கிருஷ்ணா பகிர்ந்துகொண்டார். நாடறிந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய புகழ்பெற்ற நாவலான “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை, சிறந்த கதை சொல்லியும், எழுத்து மற்றும் வாசிப்பில் சிறந்தவருமான பூங்கொடி பாலமுருகன் எடுத்துரைத்தார். 18ஆம் நூற்றாண்டில் டேனியல் டேஃபோ எழுத்தில் வெளிவந்த, கடல் பயண சாகசம் குறித்த புகழ்பெற்ற ஆங்கில நாவலான “ராபின்சன் குரூசோ” குறித்து திராவிட சிந்தனையாளர், மொழிப் புலமையாளர் மு.க.இளவழுதி உரையாற்றினார். புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த க.சீ. சிவக்குமார் எழுதிய வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பான “ஆதி மங்கலத்து விசேஷங்கள்” நூல் குறித்த தனது உரையால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் கவிஞர், எழுத்தாளர், இயற்கை வாழ்வியலருமான சாதாரணன் கௌதமன். மகாபாரதத்தின் ஒரு பகுதியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், பீமனின் நோக்கில் விவரிக்கும், எம்.டி.வாசுதேவன் நாயர் படைப்பில் உருவாகி, குறிஞ்சி வேலனின் தமிழாக்கத்தில் வெளியான கற்பனை நாவலான “இரண்டாம் இடம்” குறித்த தனது வாசிப்பின் நேசத்தை திரை இயக்குநர், எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், கூத்துக் கலைஞருமான ரெ.விஜயலெட்சுமி தன் சொற்களால் சிலாகித்தார். அல்லோபதி மருத்துவத் துறையில் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு, அவற்றுக்கிடையேயான வேறுபாடு, அவ்வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம், மருத்துவத் துறையில் அன்றாடம் நிகழும் வளர்ச்சி, உடல்நலம் பேணுதலின் அவசியம் குறித்தெல்லாம் மருத்துவர் காமையம் கருண் நயம்பட எடுத்துரைத்தார். திரைப்படம், கூத்துக்கலை, எழுத்து, வாசிப்பு என பல பரிமாணங்கள் கொண்ட ரெ.விஜயலெட்சுமி எழுத்தில் நிலவெளி இதழில் வெளியான “காத்தாயி பாட்டி” சிறுகதை வாசிப்பில் தான் பெற்ற இன்பத்தை, வளர்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர், ஓவியர் தமிழன் காசி பகிர்ந்துகொண்டார். எழுத்து, இசை, நடனம் என பல துறையிலும் முற்றிலும் புதிய கோணத்தில் தன முத்திரையைப் பாதிக்கும் பாரி, கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள வேலை இழப்பு, விகடன் குழும ஊழியர்களின் பணிநீக்கம், பொது முடக்கத்தின் தாக்கம் உள்ளிட்ட “நிகழ்கால சமூக சிக்கல்கள்” குறித்து உரையாற்றி நிறைவு செய்தார். நல்லு இரா. லிங்கம் நிகழ்வை ஒருங்கிணைத்து, தொகுத்தளித்தார். பேராசிரியர் விஜயராகவன், முத்துக்கருப்பன், காரை செல்வராஜ், அம்மாபேட்டை கருணாகரன், அருண் குமார், பாலாஜி, பாபு ராஜா, ஜெயசீலன் தேவாம்சம், கொழப்பலூர் ராஜா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் நுழைபுலம் குழுவில் இணைந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு பயன் தரலாம், பயன் பெறலாம்.