மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13
(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும்” என்பதுதான் கர்ணன் கேட்ட இரண்டாவது வரம். மரணத் தருவாயில், தன்னை மகனே என்று அழைக்கும்படி கர்ணன் கேட்ட வரத்தில் முக்கியமான சாதிப் பாகுப்பாட்டின் பின்னணி ஒன்று ஒளிந்திருக்கிறது. அது என்ன? கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை உலகறியும். ஆனால் அவன் செய்ய முடியாமற்போன ஒரு தானம் இருக்கிறது. அது ‘அன்னதானம்’. சூதபுத்ரனின் கையினால் எல்லா தானமும் பெற்ற பார்ப்பனர்களும் மக்களும் அவன் கையிலிருந்து ‘அன்னதானம்’ மட்டும் பெற மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் கர்ணனால் ‘அன்னதானம்’ மட்டும் வழங்க முடியவில்லை என்கிறது மகாபாரதம்.இதிலும் சூத்திரன் சத்ரியன் என்ற பாகுபாடு, இந்த நியதியின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்ற நியதி, கர்ணனின் நெஞ்சைத் துளைக்கும் கொடூர வண்டாகவே இருந்தது. அதிலும், ‘அன்னதானம் செய்தவன் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக முடியும்’ என்றும் ‘இல்லையேல் நரகத்தில் வாடவேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கர்ணனுக்குப் போதித்திருந்தார்கள். தான் சூதபுத்திரன் என்று அறியப்படும்வரை, தன்னால் அன்னதானம் செய்ய முடியாது என்று நம்பினான் கர்ணன். அதனால்தான் குந்திதேவியிடம், மரணத் தருவாயில், தனது பிறப்பு ரகசியத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகப் பெற்றான். குந்திதேவி ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது மரணத்திற்குமிடையிலான தருணத்தில், யாரேனும் சிலருக்கு ‘அன்னதானம்’ தந்து சொர்க்கத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் கர்ணனின் நோக்கம். எனில், முன்பே அது அறிவிக்கப்பட்டால் நல்லதுதானே என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அந்த அறிவிப்பால் யுத்தத்தில் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க முடியாமல் போய்விடுமே! அதனால்தான் அந்த இரண்டாவது வரத்தைக் குந்தி தேவியிடம் கேட்டான். அப்படித்தானே ஆகிப் போனது. செஞ்சோற்றுக் கடனுக்காக எல்லாவற்றையும் பின்தள்ளிய அவனது செய்நன்றி பாராட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!மகாபாரதக் காலத்தில் வருணாசிரம அமைப்பு, சில வர்ணங்களைச் சில காரியங்களை செய்யவிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கர்ணனின் கதை காட்டுகிறது. இனி அசுவத்தாமனைப் பார்ப்போம். அசுவத்தாமன் துரோணரின் ஒரே மைந்தன். போர் செய்வதில் மகாரதன். அவன் சிரஞ்சீவி. அவனுக்கு எந்த நாளும் மரணமில்லை.தொடை பிளந்து நிலத்தில் கிடந்த துரியோதனன், மரண தேவியின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில் சாம்ராஜ்ய ஆசையோ யுத்தத்தைத் தொடரும் எண்ணமோ துரியோதனனுக்கு இல்லை. புயலுக்குப் பின்னே அமைதி என்பதைப்போல, வீர மரணத்தைத் தழுவக் காத்திருந்தான். துரியோதனனின் சாவுத் துயர் அஸ்தினாபுரத்தைக் கலங்கடிக்கும் முன்பு நடந்த கடைசி நாடகத்தின் பாத்திரமாக அசுவத்தாமனே இருந்தான். பார்ப்பனனும் சுத்த வீரனுமான அஸ்வந்தாமனுக்கு துரியோதனனை அவனது மரணத் தருவாயில் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. “துரியோதனா.. யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே. பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் சல்லியனையும் தலைமைச் சேனாதிபதிகளாக்கி, நீ, இதோ தொடை பிளந்து பூமா தேவியின் மேல் மரணத்திற்காக காத்துக்கொண்டு கிடக்கிறாய். உன்னைப் பார்க்க மனம் பேதலிக்கிறது. உன்பொருட்டு, நான் எதையேனும் செய்ய வேண்டும் என்று என் உள்மனம் சொல்கிறது” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் சிரஞ்சீவி என்று காட்ட, அவன் தலையில் ஒரு அபூர்வமணி கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஒளி சிந்தும். அந்த ஒளி துரியோதனின் கண்களில் பட்டுத் தெறித்தது. “அசுவாத்தமரே, யுத்தம் முடிந்துவிட்டது. இரு பக்க சேனைகளும் அழிந்துவிட்டன. யுத்தம் செய்யத் தேர்களோ யானைகளோ வாள்களோ இல்லை. இந்த யுத்தத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் நர மாமிசத்தை விரும்பி உண்ணும் நரி போன்ற விலங்குகளின் விருந்து மண்டபம்போலக் காட்சி அளிக்கிறது குருக்ஷேத்ரபூமி. எங்கும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. இந்த நிலையில் அசுவத்தாமரே, உமக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் துரியோதனன். “துரியோதனா, நீ ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ என்னை கௌரவ சேனையின் தலைமைச் சேனாதிபதியாக நியமித்துவிடு. நீ மரணம் அடையும் முன்பு உன் மனம் குளிர நான் உனக்கு நல்ல சேதி கொண்டுவருவேன்” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் அந்த அளவிற்கு இரங்கிக் கேட்டுக்கொண்டதால், துரியோதனனும், இல்லாத கௌரவப்படைக்கு அசுவத்தாமனைத் தலைமைச் சேனாதிபதியாக நியமித்தான். அசுவத்தாமன் எமனோடும் அஞ்சாமல் போர் புரியக்கூடிய போராளிதான். ஆனால், எதிரிப்படை என்று எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கென்று ஒரு படை இல்லாத நிலையிலும் அசுவத்தமனால் என்ன செய்யமுடியும்? தன் தந்தையை அநியாயமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கிடவும் துரியோதனச் சக்ரவர்த்திக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்திட வேண்டும் என்ற உந்துதலினாலும், ஆனால், வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிக்கொண்டும் இருந்த அசுவத்தாமன், பண்டவர்களின் பாசறை இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் படுத்தான். ஆனாலும் என்ன செய்ய முடியும் என்பது அசுவத்தாமனுக்குப் புரியவே இல்லை. அந்தச் சமயத்தில் அவன் படுத்திருந்த மரத்தின்மேல் அலறல் சத்தம் கேட்டது. அசுவத்தாமன் உற்றுக் கவனித்தான். மரத்திலிருந்த கோட்டான்கள் சில, தமக்கு வசதியான இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரத்தில் கண் தெரியாத காக்கைகளைத் தங்களுடைய இரையாக்கிக் கொள்வதைக் கவனித்தான். அதுதான் இந்த அலறலுக்கான காரணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி: இதற்குமுன் போர்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் மோதிக்கொண்ட நிலைநின்று நடத்திய (Positional) யுத்தம். ஆனால், மரத்தடியில் படுத்திருந்த அசுவத்தாமனுக்குக் கோட்டான்களின் மூலம் கிடைத்த பாடம், எதிரி உறங்கும்போது கொல்ல முயலும் யுத்தம். இரவில் நடத்தும் கொரில்லா யுத்தம். உலக இலக்கியங்களில் முதன்முறையாக, ‘கொரில்லா யுத்தத்தின்’ சாராம்சத்தை மகாபாரதத்தில்தான் பார்க்கிறோம். உடனே அசுவத்தாமன், தன் யுத்த முறையை வகுத்துக்கொண்டான். அதன்படி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாய் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து, அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாண்டவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் ‘பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன்’ என்று ரத்தம் வடியும் கையைக் காட்டி, அவனை மனங்குளிர வைப்பது அசுவத்தாமனின் திட்டம். அதன்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த பாசறைக்குள் அசுவத்தாமன் கிருபாச்சாரியாருடன் நள்ளிரவில் புகுந்தான். பாசறைக்குள் பலர் படுத்திருப்பதைக் கண்டான். இருட்டில் அவர்கள் முகங்களும் உருவங்களும் சரியாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி அசுவத்தாமன் அங்கே படுத்திருந்த அனைவருடைய கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் வந்து, “துரியோதனா.. வெற்றி உன்னுடையதே! இந்த நிசப்தமான இரவில் பாண்டவர்கள் அனைவரையும் ரத்தம் வடியும் இந்த கைகளினால் கண்விழிகள் பிதுங்கப் பிதுங்கக் கொன்றுவிட்டேன். அதனால், யுத்தத்தில் நீதான் வெற்றி பெற்றாய். கடைசியாக உன் தலைமைச் சேனாதிபதியாக உனக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். அதனால் மனநிம்மதியுடன் வெற்றி வீரனாக சொர்க்கம் போவாயாக!” என்று துரியோதனனிடம் அசுவத்தாமன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கிருஷ்ணனும் பாண்டவர்களும் வந்து சேர்ந்தார்கள்.“அசுவத்தாமா.. இது என்ன பேடித்தனம். அந்தப் பாசைறையில் படுத்திருந்தவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் பிறந்த பால்குடி மறவாப் பாலகர்கள். அவர்களைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கிருஷ்ணன் கடிந்துகொண்ட பின்னர்தான், அசுவத்தாமனுக்கு, தான் இரவில் பாண்டவர்களுக்குப் பதிலாக, பாண்டவர்களின் மைந்தர்களைக் கொன்றுவிட்டோம் என்பது புரிந்தது. அசுவத்தாமனால் பதில் பேசமுடியவில்லை. மௌனமாக இருந்தான்.“அசுவத்தாமா.. இந்தக் கொடூரச் செயலுக்கு உனக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். ஆனால் நீ சிரஞ்சீவி. அதனால் உன்னைக் கொல்ல முடியாது. இந்த பஞ்சமகா பாதகத்தைச் செய்த பிராமணனாகிய நீயே உன் தோல்வியை ஒப்புக்கொள். அதுதான் உனக்குத் தக்க தண்டனையாக இருக்கும்” என்றான் கிருஷ்ணன். அசுவத்தாமன் அதற்கு ஒப்புக்கொண்டான். தன் தலையில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு ஒளிரும் மணியைத் தன்னுடைய சரணாகதியின் அடையாளமாக, அசுவத்தாமன் கிருஷ்ணனிடம் எடுத்துக் கொடுத்தான். அதுமட்டும் அசுவத்தாமனுக்குப் போதுமான தண்டனை ஆகாது என்பதால், “நீ மனித உருவத்தை இழப்பாய். ஆனால் நீ சிரஞ்சீவி என்பதால் வனாந்திரங்களில் ஓலமிட்டுக்கொண்டு ஓடும் ஊழிக்காற்றாய்க் காலம் முழுக்கத் திரிந்தலைவாய்” என்று கிருஷ்ணன் அசுவத்தாமனுக்கு சாபம் கொடுத்தான். அதுமுதல் அசுவத்தாமன் வனாந்திர ஓலமாகத் திரிகிறான் என்கிறார் வியாசர். முதல் கொரில்லா யுத்தம் பல்வேறு காரணங்களினால் தோற்றுப்போயிற்று என்பது உண்மையெனினும், பல நாடுகளில் இந்த யுத்த முறையைக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்யம் போன்ற வல்லரசுகளையே மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் என்பதைச் சரித்திரத்தின் ஏடுகள் சொல்கின்றன. இதில் உள்ள சட்டப் பிரச்சனை என்னவெனில், குருக்ஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்னர், இரண்டு படைகளின் தலைமைச் சேனாதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து, யுத்தத்தை எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார்கள் என்கிறது மகாபாரதம். இரவு வரும் முன்னே யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இரவு நேர யுத்தம் என்றால் அது இரு தரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்றும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காயமுற்றவர்களை யுத்தகளத்திலிருந்து அகற்றி, வைத்திய சாலையில் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னோடு யுத்தம் செய்யாத வீரனை மற்றொரு வீரன் தாக்கக்கூடாது என்றும் பல யுத்த விதிகளை அந்த இருதரப்புக் கூட்டத்தில் வகுக்கிறார்கள். ஒரு விசித்திரம் என்னவென்றால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யுத்த நியதிகள்தான் தற்போது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள யுத்த நியதிகளின் முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை. பிரச்சனை என்னவெனில், துல்லியமாக வரையறுத்த இந்த நியதிகளை, சிரஞ்சீவியாக வாழ வரம்பெற்ற ஒரு பார்ப்பன வீரன் மீறி, ஒரு பாவமும் அறியாத பாலர்களை இரவில் கழுத்தை நெறித்துக் கொல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நியதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; தர்மசாத்திரம் பயின்றவர்கள் செய்யும் செயலுமல்ல. இன்று சில பார்ப்பனர்கள், தாங்கள் குற்றமே இழைப்பதில்லை என்றும் சட்டத்தின் ஆட்சியை மதித்து வாழ்பவர்கள் என்றும் மற்ற அடுக்குகளில் வாழ்பவர்களைவிட மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள் என்றும் அர்த்தமில்லாமல் பீற்றுகிறார்கள். அவர்கள், குரு துரோணரின் மகனான அசுவத்தாமன் செய்த கொடுஞ்செயலைப்பற்றி மகாபாரதத்தில் உள்ள கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். ‘மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள்’ என்பதை அசுவத்தாமன்