மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும்” என்பதுதான் கர்ணன் கேட்ட இரண்டாவது வரம். மரணத் தருவாயில், தன்னை மகனே என்று அழைக்கும்படி கர்ணன் கேட்ட வரத்தில் முக்கியமான சாதிப் பாகுப்பாட்டின் பின்னணி ஒன்று ஒளிந்திருக்கிறது. அது என்ன? கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை உலகறியும். ஆனால் அவன் செய்ய முடியாமற்போன ஒரு தானம் இருக்கிறது. அது ‘அன்னதானம்’. சூதபுத்ரனின் கையினால் எல்லா தானமும் பெற்ற பார்ப்பனர்களும் மக்களும் அவன் கையிலிருந்து ‘அன்னதானம்’ மட்டும் பெற மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் கர்ணனால் ‘அன்னதானம்’ மட்டும் வழங்க முடியவில்லை என்கிறது மகாபாரதம்.இதிலும் சூத்திரன் சத்ரியன் என்ற பாகுபாடு, இந்த நியதியின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்ற நியதி, கர்ணனின் நெஞ்சைத் துளைக்கும் கொடூர வண்டாகவே இருந்தது. அதிலும், ‘அன்னதானம் செய்தவன் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக முடியும்’ என்றும் ‘இல்லையேல் நரகத்தில் வாடவேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கர்ணனுக்குப் போதித்திருந்தார்கள். தான் சூதபுத்திரன் என்று அறியப்படும்வரை, தன்னால் அன்னதானம் செய்ய முடியாது என்று நம்பினான் கர்ணன். அதனால்தான் குந்திதேவியிடம், மரணத் தருவாயில், தனது பிறப்பு ரகசியத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகப் பெற்றான். குந்திதேவி ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது மரணத்திற்குமிடையிலான தருணத்தில், யாரேனும் சிலருக்கு ‘அன்னதானம்’ தந்து சொர்க்கத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் கர்ணனின் நோக்கம். எனில், முன்பே அது அறிவிக்கப்பட்டால் நல்லதுதானே என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அந்த அறிவிப்பால் யுத்தத்தில் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க முடியாமல் போய்விடுமே! அதனால்தான் அந்த இரண்டாவது வரத்தைக் குந்தி தேவியிடம் கேட்டான். அப்படித்தானே ஆகிப் போனது. செஞ்சோற்றுக் கடனுக்காக எல்லாவற்றையும் பின்தள்ளிய அவனது செய்நன்றி பாராட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!மகாபாரதக் காலத்தில் வருணாசிரம அமைப்பு, சில வர்ணங்களைச் சில காரியங்களை செய்யவிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கர்ணனின் கதை காட்டுகிறது. இனி அசுவத்தாமனைப் பார்ப்போம். அசுவத்தாமன் துரோணரின் ஒரே மைந்தன். போர் செய்வதில் மகாரதன். அவன் சிரஞ்சீவி. அவனுக்கு எந்த நாளும் மரணமில்லை.தொடை பிளந்து நிலத்தில் கிடந்த துரியோதனன், மரண தேவியின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில் சாம்ராஜ்ய ஆசையோ யுத்தத்தைத் தொடரும் எண்ணமோ துரியோதனனுக்கு இல்லை. புயலுக்குப் பின்னே அமைதி என்பதைப்போல, வீர மரணத்தைத் தழுவக் காத்திருந்தான். துரியோதனனின் சாவுத் துயர் அஸ்தினாபுரத்தைக் கலங்கடிக்கும் முன்பு நடந்த கடைசி நாடகத்தின் பாத்திரமாக அசுவத்தாமனே இருந்தான். பார்ப்பனனும் சுத்த வீரனுமான அஸ்வந்தாமனுக்கு துரியோதனனை அவனது மரணத் தருவாயில் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. “துரியோதனா.. யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே. பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் சல்லியனையும் தலைமைச் சேனாதிபதிகளாக்கி, நீ, இதோ தொடை பிளந்து பூமா தேவியின் மேல் மரணத்திற்காக காத்துக்கொண்டு கிடக்கிறாய். உன்னைப் பார்க்க மனம் பேதலிக்கிறது. உன்பொருட்டு, நான் எதையேனும் செய்ய வேண்டும் என்று என் உள்மனம் சொல்கிறது” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் சிரஞ்சீவி என்று காட்ட, அவன் தலையில் ஒரு அபூர்வமணி கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஒளி சிந்தும். அந்த ஒளி துரியோதனின் கண்களில் பட்டுத் தெறித்தது. “அசுவாத்தமரே, யுத்தம் முடிந்துவிட்டது. இரு பக்க சேனைகளும் அழிந்துவிட்டன. யுத்தம் செய்யத் தேர்களோ யானைகளோ வாள்களோ இல்லை. இந்த யுத்தத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் நர மாமிசத்தை விரும்பி உண்ணும் நரி போன்ற விலங்குகளின் விருந்து மண்டபம்போலக் காட்சி அளிக்கிறது குருக்ஷேத்ரபூமி. எங்கும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. இந்த நிலையில் அசுவத்தாமரே, உமக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் துரியோதனன். “துரியோதனா, நீ ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ என்னை கௌரவ சேனையின் தலைமைச் சேனாதிபதியாக நியமித்துவிடு. நீ மரணம் அடையும் முன்பு உன் மனம் குளிர நான் உனக்கு நல்ல சேதி கொண்டுவருவேன்” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் அந்த அளவிற்கு இரங்கிக் கேட்டுக்கொண்டதால், துரியோதனனும், இல்லாத கௌரவப்படைக்கு அசுவத்தாமனைத் தலைமைச் சேனாதிபதியாக நியமித்தான். அசுவத்தாமன் எமனோடும் அஞ்சாமல் போர் புரியக்கூடிய போராளிதான். ஆனால், எதிரிப்படை என்று எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கென்று ஒரு படை இல்லாத நிலையிலும் அசுவத்தமனால் என்ன செய்யமுடியும்? தன் தந்தையை அநியாயமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கிடவும் துரியோதனச் சக்ரவர்த்திக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்திட வேண்டும் என்ற உந்துதலினாலும், ஆனால், வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிக்கொண்டும் இருந்த அசுவத்தாமன், பண்டவர்களின் பாசறை இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் படுத்தான். ஆனாலும் என்ன செய்ய முடியும் என்பது அசுவத்தாமனுக்குப் புரியவே இல்லை. அந்தச் சமயத்தில் அவன் படுத்திருந்த மரத்தின்மேல் அலறல் சத்தம் கேட்டது. அசுவத்தாமன் உற்றுக் கவனித்தான். மரத்திலிருந்த கோட்டான்கள் சில, தமக்கு வசதியான இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரத்தில் கண் தெரியாத காக்கைகளைத் தங்களுடைய இரையாக்கிக் கொள்வதைக் கவனித்தான். அதுதான் இந்த அலறலுக்கான காரணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி: இதற்குமுன் போர்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் மோதிக்கொண்ட நிலைநின்று நடத்திய (Positional) யுத்தம். ஆனால், மரத்தடியில் படுத்திருந்த அசுவத்தாமனுக்குக் கோட்டான்களின் மூலம் கிடைத்த பாடம், எதிரி உறங்கும்போது கொல்ல முயலும் யுத்தம். இரவில் நடத்தும் கொரில்லா யுத்தம். உலக இலக்கியங்களில் முதன்முறையாக, ‘கொரில்லா யுத்தத்தின்’ சாராம்சத்தை மகாபாரதத்தில்தான் பார்க்கிறோம். உடனே அசுவத்தாமன், தன் யுத்த முறையை வகுத்துக்கொண்டான். அதன்படி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாய் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து, அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாண்டவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் ‘பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன்’ என்று ரத்தம் வடியும் கையைக் காட்டி, அவனை மனங்குளிர வைப்பது அசுவத்தாமனின் திட்டம். அதன்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த பாசறைக்குள் அசுவத்தாமன் கிருபாச்சாரியாருடன் நள்ளிரவில் புகுந்தான். பாசறைக்குள் பலர் படுத்திருப்பதைக் கண்டான். இருட்டில் அவர்கள் முகங்களும் உருவங்களும் சரியாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி அசுவத்தாமன் அங்கே படுத்திருந்த அனைவருடைய கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் வந்து, “துரியோதனா.. வெற்றி உன்னுடையதே! இந்த நிசப்தமான இரவில் பாண்டவர்கள் அனைவரையும் ரத்தம் வடியும் இந்த கைகளினால் கண்விழிகள் பிதுங்கப் பிதுங்கக் கொன்றுவிட்டேன். அதனால், யுத்தத்தில் நீதான் வெற்றி பெற்றாய். கடைசியாக உன் தலைமைச் சேனாதிபதியாக உனக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். அதனால் மனநிம்மதியுடன் வெற்றி வீரனாக சொர்க்கம் போவாயாக!” என்று துரியோதனனிடம் அசுவத்தாமன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கிருஷ்ணனும் பாண்டவர்களும் வந்து சேர்ந்தார்கள்.“அசுவத்தாமா.. இது என்ன பேடித்தனம். அந்தப் பாசைறையில் படுத்திருந்தவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் பிறந்த பால்குடி மறவாப் பாலகர்கள். அவர்களைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கிருஷ்ணன் கடிந்துகொண்ட பின்னர்தான், அசுவத்தாமனுக்கு, தான் இரவில் பாண்டவர்களுக்குப் பதிலாக, பாண்டவர்களின் மைந்தர்களைக் கொன்றுவிட்டோம் என்பது புரிந்தது. அசுவத்தாமனால் பதில் பேசமுடியவில்லை. மௌனமாக இருந்தான்.“அசுவத்தாமா.. இந்தக் கொடூரச் செயலுக்கு உனக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். ஆனால் நீ சிரஞ்சீவி. அதனால் உன்னைக் கொல்ல முடியாது. இந்த பஞ்சமகா பாதகத்தைச் செய்த பிராமணனாகிய நீயே உன் தோல்வியை ஒப்புக்கொள். அதுதான் உனக்குத் தக்க தண்டனையாக இருக்கும்” என்றான் கிருஷ்ணன். அசுவத்தாமன் அதற்கு ஒப்புக்கொண்டான். தன் தலையில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு ஒளிரும் மணியைத் தன்னுடைய சரணாகதியின் அடையாளமாக, அசுவத்தாமன் கிருஷ்ணனிடம் எடுத்துக் கொடுத்தான். அதுமட்டும் அசுவத்தாமனுக்குப் போதுமான தண்டனை ஆகாது என்பதால், “நீ மனித உருவத்தை இழப்பாய். ஆனால் நீ சிரஞ்சீவி என்பதால் வனாந்திரங்களில் ஓலமிட்டுக்கொண்டு ஓடும் ஊழிக்காற்றாய்க் காலம் முழுக்கத் திரிந்தலைவாய்” என்று கிருஷ்ணன் அசுவத்தாமனுக்கு சாபம் கொடுத்தான். அதுமுதல் அசுவத்தாமன் வனாந்திர ஓலமாகத் திரிகிறான் என்கிறார் வியாசர். முதல் கொரில்லா யுத்தம் பல்வேறு காரணங்களினால் தோற்றுப்போயிற்று என்பது உண்மையெனினும், பல நாடுகளில் இந்த யுத்த முறையைக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்யம் போன்ற வல்லரசுகளையே மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் என்பதைச் சரித்திரத்தின் ஏடுகள் சொல்கின்றன. இதில் உள்ள சட்டப் பிரச்சனை என்னவெனில், குருக்ஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்னர், இரண்டு படைகளின் தலைமைச் சேனாதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து, யுத்தத்தை எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார்கள் என்கிறது மகாபாரதம். இரவு வரும் முன்னே யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இரவு நேர யுத்தம் என்றால் அது இரு தரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்றும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காயமுற்றவர்களை யுத்தகளத்திலிருந்து அகற்றி, வைத்திய சாலையில் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னோடு யுத்தம் செய்யாத வீரனை மற்றொரு வீரன் தாக்கக்கூடாது என்றும் பல யுத்த விதிகளை அந்த இருதரப்புக் கூட்டத்தில் வகுக்கிறார்கள். ஒரு விசித்திரம் என்னவென்றால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யுத்த நியதிகள்தான் தற்போது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள யுத்த நியதிகளின் முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை. பிரச்சனை என்னவெனில், துல்லியமாக வரையறுத்த இந்த நியதிகளை, சிரஞ்சீவியாக வாழ வரம்பெற்ற ஒரு பார்ப்பன வீரன் மீறி, ஒரு பாவமும் அறியாத பாலர்களை இரவில் கழுத்தை நெறித்துக் கொல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நியதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; தர்மசாத்திரம் பயின்றவர்கள் செய்யும் செயலுமல்ல. இன்று சில பார்ப்பனர்கள், தாங்கள் குற்றமே இழைப்பதில்லை என்றும் சட்டத்தின் ஆட்சியை மதித்து வாழ்பவர்கள் என்றும் மற்ற அடுக்குகளில் வாழ்பவர்களைவிட மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள் என்றும் அர்த்தமில்லாமல் பீற்றுகிறார்கள். அவர்கள், குரு துரோணரின் மகனான அசுவத்தாமன் செய்த கொடுஞ்செயலைப்பற்றி மகாபாரதத்தில் உள்ள கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். ‘மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள்’ என்பதை அசுவத்தாமன்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார்  என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய  வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம்  மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள்  கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

பொன்னியின் செல்வன் – 30

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் வருமாறும் பலவகையில் மதுராந்தகனை அழைத்தான். மதுராந்தகன் அவனுடன் செல்வதாக முடிவு செய்தான். வந்தியத்தேவனைத் தங்களுடன் அழைத்துப்போவது பற்றி விவாதித்துக்கொண்டே, இருவரும் குதிரைகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். மதுராந்தகன், சேந்தன் அமுதனை ஏதாவது செய்யலாமென யோசித்து, பின் முடிவை மாற்றிக்கொண்டு நடக்கலானான். கருத்திருமனுடன் வந்திருந்த வந்தியத்தேவன், அவனின் வருகைக்காகக் காத்திருந்தான். மதுராந்தகனோடு கருத்திருமன் பேசியதன் ஒரு பகுதி அவன் காதிலும் விழவே, அவன் சற்றே குழம்பி குடிசையை நோக்கினான். அப்போது குடிசையின் பின்னால் இருந்த பலகணியின் வழியாக ஒரு உருவம், ஈட்டியைச் செலுத்துவதற்காகக் குறிபார்த்ததைக் கண்டு அதிர்ந்தான். அது பினாகபாணியேதான். பாதாளச் சிறையில் வந்தியத்தேவனால கட்டிப்போடப்பட்ட பினாகபாணி, பொன்னியின் செல்வருடன் வந்தவர்களால் அவிழ்த்துவிடப்பட்டான். வந்தியத்தேவன் தப்பித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு எரிச்சலுற்றவன், சேநாதிபதி பெரிய வேளாளரிடம் வந்தியத்தேவன் காணாமல் போய்விட்டதைச் சொல்லி உடனே தேடுமாறு வேண்ட, அவருக்குக் கோபம் வந்து அவனைத் துரத்திவிட்டார். முதன் மந்திரி அநிருத்தரிடமே பினாகபாணி சென்று நடந்ததைச் சொல்ல, அவரும் வந்தியத் தேவன் தப்பித்தது குறித்து ஏதும் சொல்லாமல் பினாகபாணியைக் குற்றம் சொன்னார். அவர், பினாகபாணியைத் தொடரச் சொல்லி, தான் அனுப்பியிருந்த ஆழ்வார்க்கடியான் மிச்சத்தைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையால், பினாகபாணியை விரட்டிவிட்டார். இதற்கெல்லாம் வந்தியத்தேவன்தான் காரணம் என்பதால், அவனை எப்படியாவது தானே பிடித்துவிட வேண்டும் என எண்ணி, வந்தியத் தேவன் சேந்தன் அமுதன் குடிசையில்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து, சேந்தன் அமுதன் குடிசையை அடைந்தான் பினாகபாணி. அவனுக்கு அந்த வழி சரியாகத் தெரியாததானால், எப்படியோ தேடித்தேடி முயன்றதில், மதுராந்தகனும் கருத்திருமனும் ரகசியமாகப் பேசுவதைக் கண்டான். குதிரைகள் கட்டிப்போட்டிருப்பதைக் கண்டவன், எப்படியும் தப்பிக்க வந்தியத்தேவன் அங்குதான் வரவேண்டுமென நினைத்து அங்கு செல்லத் தொடங்கினான். அப்போது குடிசைக்குள்ளிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ளும் குரல்களைக் கேட்டு, பலகணி வழியாகக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தான். பூங்குழலியின் மேல் இருந்த மோகம் கண்ணை மறைக்க, கையிலிருந்த ஈட்டியை சேந்தன் அமுதன் மேல் எறிவதற்காகக் குறிபார்த்த போதுதான், வந்தியத்தேவன் அவனைக் கண்டான். அதே சமயத்தில், இரு குதிரைகளில் மதுராந்தகனும் கருத்திருமனும் கிளம்புவதைக் கண்ட வந்தியத்தேவன், பினாகபாணியின் செயலைத் தடுப்பதே முதல் வேலை என்று சடுதியில் முடிவெடுத்தான். வந்தியத் தேவன் ஓடிவரும் சத்தம் கேட்டுத் திரும்பிய பினாகபாணி, வந்தியத்தேவனை அதே ஈட்டியால் விலாவில் குத்தினான். அதே சமயம் குதிரைகள் ஓடும் சத்தமும் கேட்கவே, தான் குத்தியது மதுராந்தகரை என்று தவறாக நினைத்துக்கொண்டே தலைதெறிக்க ஓட்டம் எடுத்தான். வந்தியத்தேவனின் அலறலைக்கேட்டு சேந்தன் அமுதனும் பூங்குழலியும் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து, அவனை உள்ளே தூக்கிச் சென்றார்கள். வாணி அம்மை பச்சிலை வைத்தியம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாள். ஆழ்வார்க்கடியான் படகில் கட்டியிருந்தபடிக்கு, வந்தியத்தேவன் தப்பித்து இலங்கைக்குப் போவதே இப்போதைக்கு நல்லது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததை நினைத்துக்கொண்டு வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்பக் காத்திருந்தான். அதேபோல, இரு குதிரைகள் அவனைத் தாண்டவும் அவற்றில் போகும் நபர்களை பார்த்து வியப்படைந்தான். கருத்திருமன் பெயரைக் கூறி, உதவிக்கு அழைத்தான். அப்போது கருத்திருமன் மட்டும் திரும்பி வந்து அவனை அவிழ்த்துவிட, அவனைத் தாக்கி, ‘உடன் வந்திருப்பது யார்?’ எனக் கேட்டு மிரட்டினான். கருத்திருமனால் அவன் பிடியிலிருந்து தப்பிக்கவியததால், மதுராந்தகனை அழைத்துச் செல்வதாகக் கூறினான். மதுராந்தகனின் உண்மையான தந்தை யார் எனவும் சேந்தன் அமுதன் யார் மகன் எனவும் மீண்டும் மிரட்டவும், கருத்திருமன் உண்மையைக் கூற, ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்தான். ஆழ்வார்க்கடியானும் அவன் ஆட்களும் தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடக்க, பினாகபாணி தலைதெறிக்க ஓடிவந்து இவர்களிடம் முட்டிக்கொண்டான். ‘வந்தியத்தேவன் அங்கு யாரையோ குத்திவிட்டு ஓடிவிட்டதாக’ ஆழ்வார்க்கடியானிடம் புலம்பினான். அவனிடம் மட்டும் நாலு குதிரையும் ஆட்களும் இருந்தால் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிடுவேன் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியான் அவனைக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றான். கோட்டைவாயிலில், அநிருத்தரும் சேநாதிபதி வேளாளரும் நிற்க, எதிர்ப்புறத்தில் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், மற்றும் கந்தமாறனும் பரிவாரங்களும் இருந்தனர். பெரிய பழுவேட்டரையரும் ஒரு யானை மேல் வீற்றிருந்தார். ஆழ்வார்க்கடியானின் யோசனையின் பேரில், வந்தியத்தேவன் தப்பிப் போய்விட்டதைச் சொல்லி, அவனைப் பிடித்துவர பினாகபாணி உதவி கேட்க, சில வீரர்களுடன் கந்தமாறனைப் பினாகபாணியுடன் சின்ன பழுவேட்டரையர் அனுப்பி வைத்தார். குதிரையில் சென்ற மதுராந்தகனும் கருத்திருமனும் இருட்டில் நதி வெள்ளத்தைத் தாண்டமுடியாமல் மரத்தின்மீது அமர்ந்திருந்தனர். கருத்திருமன் பாண்டிய நாட்டின் ரத்தின ஹாரம், மணிமுடி பற்றியெல்லாம் சொல்லி, மதுராந்தகனின் மனச்சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான். பின்னால் வீரர்கள் வருவதைப் பார்த்தவுடன், வேகவேகமாக குதிரைகளுடன் அக்கரைக்கு இருவரும் சென்றனர். இருட்டில் வெள்ளத்திலிருந்து கரையேறும் முன்பு, மதுராந்தகனை வந்தியத்தேவன் என எண்ணிக் கந்தன்மாறன் ஈட்டி எறிய, மதுராந்தகன் வெள்ளத்தில் வீழ்ந்தான். மூங்கில் பாலத்தில் ஏறி, கருத்திருமனைப் பிடிக்கப் பினாகபாணி முயல, கருத்திருமன் பாலத்தின் கயிறுகளை அறுத்துவிட்டதில் பினாகபாணி வெள்ளத்தில் விழுந்து இறந்தான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கருத்திருமன் தப்பி ஓட, வந்தியத்தேவன்தான் இறந்துவிட்டான் என எண்ணிக்கொண்டு, அவன் சடலத்தைக் கந்தமாறன் ஆற்றில் தேட, சடலம் கிடைக்கவில்லை என்பதால் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்குமெனக் கருதி, கந்தன்மாறன் தஞ்சைக்கு திரும்பினான். இதற்குள், ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து சேந்தன் அமுதனின் குடிசையை அடைந்தான். அங்கு மதுராந்தகனுக்காக அவனைக் கூட்டி வந்த பல்லக்கு சிவிகையும் காவலர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்றபோது, மதுராந்தகன் கழற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஹாரம், கிரீடம், உத்தரீயங்கள், வாகுவலயம் அனைத்தையும் ஒரு காவலன் கொண்டுவந்து தந்தான். ஆழ்வார்க்கடியான் குடிலின் கதவைத் தட்டியவுடன், கதவைத் திறக்காமல், பூங்குழலி வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். பின் கதவைத் திறந்து பார்த்து, காவலர்களைக் கண்டு பயந்தவளைத் தள்ளிக்கொண்டு ஆழ்வார்க்கடியான் உள்ளே சென்றான். வந்தியத்தேவனைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்ததைப்பற்றி ஆழ்வார்க்கடியான் கேட்க, சேந்தன் அமுதன் உண்மையை ஒத்துக்கொண்டு, உதவி செய்யுமாறு வேண்டினான். ஆழ்வார்க்கடியான், பொன்னியின் செல்வரின் யானையைக் கொண்டுவருவதாகவும் சேந்தன் அமுதன் மதுராந்தகன் கழற்றி வைத்த ஆபரணங்களைப் பூண்டு, வேடமிட்டு அதில் ஏறி வருமாறும் கூறினான். வந்தியத்தேவனை மதுராந்தகன் வந்த பல்லக்கில் ஏற்றிவிட்டு, பூங்குழலியை உடன் நடந்து வருமாறும் யோசனை கூறினான். பழுவேட்டரையர்களின் படை எப்போது வேண்டுமானாலும் இங்கு வருமெனவும் வந்தால் சேந்தன் அமுதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்க முயன்ற வந்தியத்தேவனை நாம் காப்பாற்ற முடியாதெனவும் அவர்களை அவசரப்படுத்தினான். அவர்கள் சம்மதித்தனர். கோட்டை வாசலில் சின்ன பழுவேட்டரையருக்கும் சேநாதிபதி பெரிய வேளாளருக்கும் பூசல் ஏற்பட்டதைத் தடுக்க முடியாமல் முதன் மந்திரி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். சக்ரவர்த்தி உடல்நிலை சரியில்லாமல், தன் மூத்த மகனை இழந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்கள் சண்டையிட்டுக்கொள்வது அழகல்ல எனவும் மறுநாள் பகலுக்குள் அனைவரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தும்வரை அமைதியாக இருக்குமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஆழ்வார்க்கடியான் அவரைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் சின்ன பழுவேட்டரையரிடம் மதுராந்தகர் யானையில் அமர்ந்து வருவதாகவும் சேந்தன் அமுதனுக்கு அடிபட்டிருப்பதால் அவனைப் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார். ஏற்கனவே, தனது மருமகனான மதுராந்தகனின் பாதுகாப்பு பற்றி விவாதத்தில் இருந்த சின்ன பழுவேட்டரையர், அமைதியானார். ஆனால் தன் பாதுகாப்பில் இருந்த கோட்டைக் காவலைப் பெரிய வேளாளர் வைத்திருப்பதால், உள்ளே வர முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து, வெளியே தங்கிவிட்டார். மறுநாள் சக்ரவர்த்தியிடம் இதைத் தெரிவித்தபோது, காலாந்தக கண்டர் வராமல் ஆலோசனையைத் தொடரமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கோட்டைக் காவலை மறுபடி அவரிடமே ஒப்படைக்கும்படி பெரிய வேளாளரிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றியும் வந்தியத்தேவன் தப்பித்தது குறித்தும் கேள்விகளைத் தொடுத்தார்கள். அநிருத்தர், தன்னுடைய அஜாக்கிரதையால் வந்தியத்தேவன் தப்பித்தது உண்மையெனவும், திருப்பிக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பும் தன்னைச் சார்ந்தது எனவும் கூறினார். வந்தியத்தேவனைத் தொடர்ந்து பிடித்துவர கந்தன்மாறன் போயிருப்பதாகப் பார்த்திபேந்திரன் சொல்ல, குந்தவையின் முகம் வாடியது. அதைக் கவனித்த முதன்மந்திரி அது சாத்தியமில்லை என அவளுக்குக் குறிப்பால் உணர்த்தினார். மறுபடி கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைப்பது குறித்துப் பேச, அநிருத்தர் ராஜ்ய உரிமை பற்றி முடிவெடுத்தபின் அதை முடிவு செய்யலாமென யோசனை கூற, பெரிய பழுவேட்டரையரோ தன் தம்பி அவர் பொறுப்பிலிருந்து தவறியது உண்மைதான் எனவும் கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை எனவும் சொல்ல, அனைவரும் திகைத்தனர். சக்ரவர்த்தி பெரிதும் வருந்தி, ஒருநாளும் சின்ன பழுவேட்டரையர், தன் கடமையிலிருந்து தவறியதில்லை என ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். அப்போது தன் தொண்டையைக் கனைத்துக்கொண்ட பெரிய பழுவேட்டரையர், ‘சின்ன பழுவேட்டரையர், தன்னை நந்தினியிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதாகவும் தான் அதைக் கேட்கவில்லையெனவும் கூறினார். அந்தக் கொலை பாதகர்களை அன்றே கண்டுபிடித்திருக்க வேண்டுமெனவும், தான் தடுத்திருந்தால்கூட, அண்ணன் எனப் பாராமல் தன் கைகளை வெட்டியிருக்க வேண்டும் எனவும், அதனால் சின்ன பழுவேட்டரையர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்பது சரிதான் எனவும் கூறினார். கூடியிருந்தவர்களுக்கு அவருடைய பேச்சு மெய் சிலிர்த்தது. சக்ரவர்த்தி எல்லாவற்றையும் மறுத்து, சின்ன பழுவேட்டரையரின் மீதே நியாயமிருக்கிறது என்பதை மறுபடியும் எடுத்துரைத்தார். எனவே, கோட்டைக் காவலை அவரிடம் ஒப்படைக்குமாறும் பெரிய பிராட்டியிடம் ராஜ்ய உரிமை குறித்துக் கலந்து பேச வேண்டியிருப்பதால், இன்னும் மூன்று நாட்கள் கழித்து அதைப்பற்றிக் கலந்து பேசலாமெனவும் சக்ரவர்த்தி கூறினார். பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அநிருத்தர் ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்தினான். பெரிய பழுவேட்டரையர் ஏதோ சொல்லவந்து, பின் நிறுத்திக்கொண்டார். அன்று சாயந்திரமே சின்ன பழுவேட்டரையரிடம் கோட்டைக் காவல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் சில சலசலப்புகள் எழுந்தன. அங்கங்கே சிறுசிறு கலகங்களும் ஏற்பட்டன. மக்கள் ராஜ்ய உரிமை குறித்துப் பேசி சண்டை எழுந்தது. தஞ்சை முழுவதும் ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டிருந்தது. தொடரும்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான்  காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில்  அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி  யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன்,  அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து  கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது.  மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில்  தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும்  கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள்.  ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே,  நான் பிரமச்சாரியாக  வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, தட்டையாக அறிமுகம் செய்யமாட்டார். உபகதைகளைப் போலவே ஒரு அபூர்வமான நிகழ்ச்சியின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அறிமுகப்படுத்துவதும் மகாபாரதம் மாபெரும் இதிகாசமாக விளங்குவதற்குக் காரணமாக உள்ளது என்பது பலருடைய அபிப்பபிராயம். யாராலும் மறித்து நிறுத்த முடியாத கங்கையின் நீரோட்டத்தை மறிப்பவன், ஈடு இணை இல்லாத அஸ்திரப்பயிற்சி பெற்ற மாவீரனாகத்தான் இருக்க முடியும் என்று சந்தனு மகாராஜன் நினைத்தான். அப்போது கங்காதேவி மனிதவடிவில் சந்தனு மகாராஜன் முன் தோன்றினாள். “நீ வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன்தான் உன் மகன். அவன் பெயர் தேவவிரதன். அவனுக்குப் போர்க் கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளும் கற்றுத் தந்து மாபெரும் ஆளுமையாக்கி இருக்கிறேன். இனி அவன் என்னிடமும் உலகத்திடமும் கற்றுக்கொள்ள எந்த வித்தையும் பாக்கி இல்லை. எனவே நீ அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ” என்று சொல்லி, தேவவிரதனை சந்தனு மகாராஜனிடம் ஒப்படைத்தாள். சந்தனு மகாராஜன் தேவவிரதனைக் கட்டித் தழுவிக்கொண்டு, கங்காதேவி சொன்னபடியே தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். அதுமுதல், தேவவிரதனை கங்காபுத்ரன் என்று உலகம் அழைத்தது. வழக்கமாக, புதல்வரையும் புதல்வியரையும் தந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவர்களின் மகன்/மகள்’ என்று இப்போது அழைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தாயின் பெயரைச் சொல்லி அவருடைய மகன்/ மகள் என்றழைக்கும் பழக்கம் பரவலாக அப்போது வழக்கத்தில் இருந்தது இதன்மூலம் தெரியவருகிறது. மகாபாரதக் காலத்தில் தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாறும் போக்கு (transition) நிகழத் தொடங்கி இருந்தாலும் தாய்வழிச் சமுதாய வாழ்முறையே பெருமளவில் வழக்கில் இருந்ததை இது காட்டுகிறது. நமக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில்கூட, வியாசர் உட்பட எந்தவொரு கதாபாத்திரமும் தேவவிரதனை ‘சந்தனு புத்ரன்’ என்று அழைத்ததாகத் தெரியவில்லை. பாண்டவர்களை ‘குந்தி புத்திரர்கள்’ என்று அழைப்பார்கள். ‘பாண்டுவின் புத்திரர்கள்’ என்றழைப்பது அபூர்வம். கர்ணனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கிருபாச்சாரியரும் பாண்டவர்களும் ‘தேரோட்டியின் மகன்’ அல்லது ‘ராதேயன்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சி கண்டார்கள். இப்படி இருக்கையில், சந்தனு மகாராஜன் மீண்டும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் வசம் மையலில் விழுந்தான். மீனவப் பெண்ணின் தந்தை விதித்த பல நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததால், சந்தனு மகாராஜாவால் சத்யவதியை மணம் முடிக்க முடியவில்லை. அதனால் ஊனும் உயிரும் உருகி உருக்குலைந்து போனான். அதை அறிந்த தேவவிரதன், தன் தந்தை சந்தனு மகாராஜனுக்கு சத்யவதியைத் திருமணம் செய்து வைக்க, சத்யவதியின் தந்தையிடம் பேசினான். சத்யவதியின் தந்தையான மீனவர் தலைவன் அதிபுத்திசாலி. “என் மகளின் அழகுக்கு, அவளுக்குப் பிறக்கப்போகும் மகன் மன்னனாக வேண்டியவன். மகாராஜாவின் மூத்த மகனாகவும் பட்டத்து இளவரசனாகவும் நீங்கள் இருக்கும்போது, என் மகளின் மகன் எப்படி மன்னாக முடியும்?’ என்று சத்யவதியின் தந்தை தேவவிரதனிடம் கேட்டான்.“நான் இப்போதே பட்டத்து இளவரசன் என்ற பொறுப்பைத் துறக்கிறேன். அதுமட்டுமன்றி என் வாழ்நாள் முழுவதும் இளவரசனாகவோ மன்னனாகவோ முயற்சிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று தேவவிரதன் கூறி சத்தியம் செய்தான். இருந்தும் சத்தியவதியின் தந்தை திருப்தி அடையவில்லை. “நீங்கள் பட்டத்து இளவரசனாகவோ மன்னனாகவோ மாட்டேன் என்று சத்தியம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பின்னாளில் உங்களுக்குத் திருமணமாகி உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் உங்கள் பிள்ளைகள் அரசனாகும் உரிமையைக் கோரலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மகளின் மகனுக்கோ அவனது பிள்ளைகளுக்கோ அரசனாகும் வாய்ப்பு இல்லாமற் போய்விடுமே” என்றான் சத்தியவதியின் தந்தை. உடனே தேவவிரதன், “என் வாழ்நாளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இது சத்தியம்” என்று சத்தியம் செய்தான்.உடனே வானிலிருந்து “பீஷ்ம, பீஷ்ம” என்ற முழக்கம் கேட்டது. பீஷ்மன் என்றால் ‘செய்தவற்கரிய செய்பவன்’ என்று பொருள். சத்ரியர்கள் மட்டுமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லிவந்த பீஷ்மருக்கு, சத்யவதியின் வாரிசுகள் என்ற வகையில் குருவம்சமே மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள் என்பது நினைவில் இல்லாமல் போனது விந்தையான உண்மை. தற்போது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் மகாபாரதத்தில் சத்திரியர்களாக முன் நிறுத்தப்படும் அனைவரும் சத்யவதி என்ற மீனவ குலப் பெண்ணின் வழித்தோன்றல்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்த்தால், கர்ணணின் மகன் விருஷகேதுவை, சூத்திரன் என்ற காரணத்தினால் முடி சூட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்த பீஷ்மரின் சட்ட நிலைப்பாடு சரியானதாகத் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். சத்யவதியும் சந்தனு மகாராஜனும் திருமணம் செய்த கொண்டு இல்லறம் நடத்தியதன் பயனாக, சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சித்திராங்கதன் இறந்துபோனான். விசித்திர வீரியன் அரசனான். காசி தேசத்து இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவருக்கும் சுயவரம் நடக்க இருப்பதை பீஷ்மர் கேள்விப்படுகிறார். அவர்களை, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். பீஷ்மர் வில்வித்தையில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமனுக்கு மட்டுமே இணை வைத்துப் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான வில்லாளி. அவருடைய போர் செய்யும் ஆற்றல்பற்றி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். அதேபோல, அவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர் என்பதும் தெரியும். இந்தச் சூழலில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் சுயவரத்துக்கு பீஷ்மரே நேரில் வந்ததைப் பார்த்து சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களும் திகைத்துப் போயினர். அவர் விசித்திர வீரியனின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதுவே இதுவரை இல்லாத நடைமுறை. அதிலும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர் சுயம்வரத்தில் பங்கு கொள்வது என்பது கேள்விப்படாத விநோதம் மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனையும் தர்ம நியதிப் பிரச்சனையுமாகும். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுக்காக, சுயம்வரத்தில் அவனுடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டாலும் அது பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீஷ்மர் சுயம்வரத்தில் பங்கு கொண்டிருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரும் அரச பதவி வேண்டாம் என்றவருமான பீஷ்மருக்கு இளவரசிகள் மாலை சூட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆக, பீஷ்மரின் சபதம் மீனவப் பெண்ணின் மகனுக்கு அரச பதவியைக் கொடுத்தது என்றால், அவரது வீரம் அவரது பிரம்மச்சரிய விரதத்தைக் கேலிப் பொருளாக்கி இன்னொரு அற மீறலுக்கும் காரணமாகிவிட்டது. (புதன்கிழமை தொடர்வோம்)

பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் தங்கையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்விக்கலாம் என்ற யோசனை வைத்திருந்ததையும் கடைசியில் ஆதித்த கரிகாலனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்கும் யோசனையாக அது மாறிப்போயிருந்ததையும் நினைத்து, அவளின் சோகத்தில் குந்தவைக்கு சுவாரசியம்கூடப் பிறந்தது. என்னவென்று அவளிடமே விசாரிக்கலானாள். அவள் தன் கண்ணீருக்கு மத்தியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது தானே எனக் கூறினாள். திடுக்கிட்ட குந்தவை, “சம்புவரையரையும் கந்தமாறனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாயா?” என வினவியபோது, அதை மறுத்த மணிமேகலை, அவர்கள் மதுராந்தகனையும் பின்பு ஆதித்த கரிகாலனையும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர்களைத் தான் வெறுப்பதாகவே கூறினாள். மேலும் ஆதித்த கரிகாலன் தன்னை சகோதரியாக நினைத்து மடல் எழுதியிருப்பதையும் குறிப்பிட, குந்தவை மேலும் திகைத்தாள். அவள் வெகுவாகக் கலங்கிப் போயிருப்பதால், அவளுக்கு ஆறுதல் கூறி, அவளிடம் ‘என்ன நடந்தது’ என்று அக்கறையுடன் விசாரித்தாள். அவள், வாணர் குலத்து வீரர் வந்தியத்தேவர், பாதாளச்சிறையில் சிறைப்பட்டிருப்பதை மீட்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவரை எப்படியாவது விடுவிக்குமாறும் வேண்டிக்கொள்ள, குந்தவை திகைத்தாள். குந்தவை வந்தியத்தேவனைப் பார்க்கப் போவதற்கே தயங்கிக்கொண்டிருக்க, மணிமேகலை, அவன் மீதான கொலைப்பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் வந்திருப்பதையும் வந்தியத்தேவன் பேரில் அவள் கொண்டிருக்கும் தூய அன்பினையும் கண்டு நெகிழ்ந்தாள். வானதி அவளை மேலும் விசாரித்தாள். ஆதித்த கரிகாலனால் வந்தியத்தேவருக்கு ஆபத்து இருப்பதாக நந்தினி தன்னை நம்பவைத்திருந்ததையும் ஆனால் ஆதித்த கரிகாலருக்கு அந்த எண்ணமேயில்லை என்று அவர் குந்தவையிடம் ஒப்படைக்கச் சொல்லி எழுதியிருந்த ஓலையில்  இருந்து தான் தெரிந்துகொண்டதையும் மணிமேகலை கூறினாள். குந்தவை அந்த ஓலையை வாங்கிப் படித்தாள். தன் விதியைத் தாண்டி, தான் செல்லப் போவதாகவும் வந்தியத்தேவன் முடிந்தவரை தன்னைக் காபந்து பண்ணியதாகவும் இதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு, தானே பொறுப்பு என ஆதித்த கரிகாலன் அதில் எழுதியிருந்தான். குந்தவை ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு மணிமேகலையிடம், அவள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாகச் சொன்னால் அவரின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் இதை வந்தியத்தேவரும் விரும்பமாட்டார்; தவிர வந்தியத்தேவர் அந்தப் பழியைத் தானே ஏற்கவும் முனைந்து மணிமேகலையைக் காப்பாற்றவே விரும்புவார் எனவும் கூறினாள். மனமுடைந்து போன மணிமேகலை, எப்படியாவது வந்தியத்தேவனை இப்பழியிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அப்போது அங்கு பொன்னியின் செல்வர் வர, வானதியையும் மணிமேகலையையும் சற்றுத் தள்ளி இருக்குமாறு கூறிவிட்டு, தம்பியுடன் குந்தவை தனித்துப் பேசலானாள். அப்போது தனக்குப் பட்டம் சூட்டுவதைப்பற்றித் தன் அதிருப்தியைத் தெரிவித்தவர், மணிமேகலையைக் கண்ணுற்று என்னவென்று வினவ, பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக சம்புவரையர் மகள் வேண்டி நிற்பதை குந்தவை வருத்தத்துடன் கூறினாள். பெரிதும் அதிர்ந்துபோன பொன்னியின் செல்வர், வந்தியத்தேவனை இத்தனை நாள் தாம் நினைத்துப் பாராமல் இருந்ததைக் குறித்து வெட்கினார். தான் நன்றிகெட்ட செயல் செய்துவிட்டதாக வருந்தி, உடனே அவனை விடுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகச் சொல்லிக் கிளம்ப, அப்போது அங்கு வந்த மலையமானும் பூதி விக்கிரம கேசரியும் அவரைப் போகவிடாது வாயிலிலேயே பலவந்தமாகத் தடுத்தனர். திகைத்துப்போன அருள்மொழிவர்மரிடம் பூதி விக்கிரம கேசரி கோட்டைக்காவல் பாதுகாப்பு, சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து தன்னிடம் வந்திருப்பதைக் கூறினார். மலையமான், வந்தியத்தேவனை இளவரசர் விடுவித்தால் ஆதித்த கரிகாலனின் கொலைப்பழி அவர் மீதே திரும்ப வாய்ப்பிருப்பிருக்கிறது எனக் கூறினார். சக்ரவர்த்தி மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் சம்புவரையர் மற்றும் மற்ற குறுநில அரசர்களை அழைத்துவர பார்த்திபேந்திரன் போயிருப்பதாகவும் ஆனால் மதுராந்தகன் பட்டம் சூடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் பூதி விக்கிரம கேசரி தெரிவித்தார். கரிகாலன் மரணம் பற்றிய உண்மை வெளிப்படும்வரையில் இளவரசர் அமைதியாக இருப்பது நல்லது என்ற அவர்களின் முடிவை குந்தவை ஒப்புக்கொள்ள, வந்தியத்தேவனைப் பாதாளச் சிறையில் சென்று பார்த்துவிட்டாவது வரலாம் என்று அனைவரும் முடிவு செய்து மணிமேகலையுடன் கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபொழுது வைத்தியர் மகன் பினாகபாணி மட்டுமே இருந்தான். வைத்தியர் மகன் பழையாறையில் வந்தியத்தேவனால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு முதன்மந்திரி அநிருத்தரிடம் சென்றான். முன்னொரு சமயம் அவன் பாதாளச்சிறையில் இருந்தபொழுது பக்கத்துச் சிறையில் இருந்த பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவனுக்கு இலங்கையில் பாண்டிய நாட்டு ரத்தினஹாரம் மற்றும் மணிமகுடம் இருக்குமிடம் குறித்தும் சோழகுலத்துப் பட்டத்து வாரிசு ஒருவரின் பிறப்பு ரகசியம் குறித்தும் தெரியும் என்றும் தன்னை விடுதலை செய்தால் அதைச் சொல்வதாகவும் தன்னிடம் கூறியதாகச் சொன்னான். அநிருத்தர் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக  சேனாதிபதியிடமிருந்து விடுதலை உத்தரவை வாங்கி அளிக்க, அதை எடுத்துக்கொண்டு பினாகபாணி பாதாளச் சிறையை அடைந்தான். அங்கு பக்கத்தில் இருந்த வந்தியத்தேவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இழுக்காகப் பேசிவிட்டு, அந்த ரகசியம் அறிந்த பைத்தியக்காரனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். தானே அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் நல்லது எனக் கேட்டுக்கொண்டிருந்தவனை, பக்கத்து அறையிலிருந்து சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வந்த வந்தியத்தேவன், அடித்துக் கட்டிப் போட்டான். வந்தியத்தேவன் பைத்தியக்காரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி பினாகபாணி, பொன்னியின் செல்வர் முதலானவர்களிடம் அழுதான். கடம்பூரில் இருந்து வந்தியத்தேவனைக் கட்டி இழுத்துவந்தபோது, அவனுக்கு தீக்காயங்களாலும் தன் எஜமானனுடைய மரணத்தைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் பெரிதும் மயங்கிய நிலையிலேயே தஞ்சைக்கு வந்தான். அவன்மீது இளவரசரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திப் பாதாளச்சிறையில் அடைத்திருந்தார்கள்.  அப்போது பக்கத்துச் சிறை அறையிலிருந்த பைத்தியக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்டவன், பினாகபாணி தன்னை விடுவிக்கப் போவதாகக் கூறவும், இருவரும் திட்டம் தீட்டி அவனைக் கட்டிப்போட்டுவிட்டு பினாகபாணி போல வந்தியத்தேவன் உடுத்திக்கொண்டு வாசலில் காத்திருக்கும் அநிருத்தரின் ஆட்களுடன் வெளியே சென்றனர். வழியில் பொன்னியின் செல்வர், குந்தவை, மணிமேகலை, வானதி, சேனாதிபதி என அனைவரும் எதிரே வர, தன்னைப் பார்க்கத்தான் போகிறார்கள் என அறியாத வந்தியத்தேவன் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் நின்றுகொண்டான். இவ்வளவு அருகிலிருந்தும் யாரிடமும் அணுகி உதவி கேட்க முடியவில்லையே என மருகினான். பின்னர் அநிருத்தரின் ஆட்களிடமிருந்தும் தப்பி, பைத்தியக்காரனும் வந்தியத்தேவனும் முன் பழுவூர் ராணியைச் சந்தித்த பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில், அதே வழியில் சென்று மதிலேறிக் குதித்து மறைந்துகொண்டனர். இருண்டபின்னேதான் சுரங்கப் பாதையை அடைய முடியுமென்பதால், மறைந்து உட்கார்ந்திருந்தபோது வந்தியத்தேவன் அந்தப் பைத்தியக்காரனின் கதையைக் கேட்டான். அவன் பெயர் கருத்திருமன். கருத்திருமன் ஒரு படகோட்டி. ஒருநாள் கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே விழுந்த, புத்தி சுவாதீனமற்று இருந்த ஊமைப் பெண்ணொருத்தியைக் கருத்திருமன் காப்பாற்றினான். அவளை ஈழ நாட்டில் விட்டு வரும்படி சோழ நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதால், ஓடத்தில் ஏற்றிக் கூட்டிப் போனான். வழியில் இன்னொரு மனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது. அவர் பாண்டிய அரசர் என்று தெரிந்தது. பின்னர் பாண்டிய அரசர், இலங்கை அரசன் மகிந்தனுக்கு, கருத்திருமன் மூலம் ஓலை கொடுத்தனுப்பினார். மகிந்தன் பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்தான். பாண்டியனின் தந்தை முன்பு, இலங்கையில் தங்கள் குலத்தின் புராதன ரத்தினஹாரத்தையும் மணிமகுடத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தையும் கருத்திருமன் பார்த்துக்கொண்டான். பின்னர் பாண்டியருடன் ஊர் திரும்பியபின் அந்த  ஊமைப் பெண்ணை, கோடியக்கரையில் அவளது சகோதரியான வாணியுடன் பார்த்து அதிர்ச்சியுற்றான். அப்போது அந்தப் பெண் கருவுற்று இருந்தாள்.  அவர்களின் தமையனாரான கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் வீட்டில் இரு சகோதரிகளும் இருந்தனர். மந்தாகினியின் தங்கையான வாணியின் மீது ஆசைப்பட்டுத் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, கோடியக்கரை குழகர் கோயிலுக்கு வந்த செம்பியன் மாதேவி, அக்கா தங்கை இருவரையும் தன்னுடனே அழைத்துச் சென்றதால், வருந்தி பாண்டிய நாட்டுக்கே கருத்திருமன் சென்றுவிட்டான். பாண்டிய அரசர் நாட்டை மீட்கும் முயற்சியில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, அவர் அந்த ஊமைப்பெண்ணை முடிந்தால் கூட்டி வரும்படி கூறினார். பழையாறையில்  வாணியைச் சந்திக்கச் செல்லும்போது அவள் ஒரு குழந்தையைப் புதைக்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுக்குக் கேட்கும் திறன் இல்லாததால், குழந்தை அழுததைக்கூடக் கேட்க இயலாமல் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்திருந்தாள். பின்னர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாகவும் கூறித் தன் கதையை முடித்தான். வந்தியத்தேவனுக்கு இப்போது அந்தக் குழந்தையைப் பற்றிய எல்லா உண்மையும் புரிந்துபோனது. அதற்குள் இருட்டிவிட, இருவரும் சுரங்கப்பாதை வழியே சென்று, சில பொற்காசுகளையும் நிலவறையிலிருந்து எடுத்துக்கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது நதியில் ஒரு ஓடம் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அருகே செல்ல, மறைவிலிருந்து சிலர் வந்து வந்தியத்தேவனைத் தாக்கி ஓடத்துடன் கட்டிப் போட்டனர். தன்னை கட்டிப்போட்டது ஆழ்வார்க்கடியான்தான் எனத் தெரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனைத் திருப்பித் தாக்கிப் படகில் கட்டிப்போட்டான். முதன்மந்திரியிடம் கொண்டுபோவதற்காகவே தன்னைத் தாக்கினான் என்பதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், தாங்கள் இருவரும் ஈழத்துக்குத் தப்பிபோவதாகவும் அதற்கு இரண்டு குதிரைகள் எங்கு கிடைக்கும் எனவும் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான். பெரிய பழுவேட்டரையரை அழைத்துக்கொண்டு வரும்போது, சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு அவனது குடிசையில் படுத்துக் கிடப்பதாகவும் அவனைப் பூங்குழலியும் வாணி அம்மையாரும் பார்த்துக்கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறி, அங்கு சென்றால் அந்தக் குதிரைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அப்போது கருத்திருமன், சேந்தன் அமுதனுக்கு அடிபட்ட விஷயம் செம்பியன் மாதேவியாருக்குத் தெரியுமா என்றும் கேட்டுக்கொண்டான். பின் இருவரும் அங்கு செல்லத் தொடங்கினர். பூங்குழலி, அடிப்பட்டிருந்த சேந்தன் அமுதனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள். சேந்தன் அமுதன், தனக்குக் குணமாகிவிட்டால் பூங்குழலி தன்னை விட்டுப் போய்விடுவாள் என்பதால், தான் குணமாக விரும்பவில்லை என்று கூற, பூங்குழலி நெகிழ்ந்தாள். பூங்குழலிக்கு அருள்மொழிவர்மர் மேல் அன்பிருப்பதைப் பற்றி அவன் வினவ, வானதியே அவருக்கு உரியவள் என்றும் தன் அத்தைக்குக் கிடைக்காத சிங்காதனத்தின் மேல் எனக்கு  ஆசை ஏற்பட்டது என்றும் கூறினாள். சேந்தன் அமுதனை அத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களைச் செய்யுமாறு கேட்க, அவன் மறுத்து சிவத்தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம் எனக் கூறினான். தன் பதவி ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, சேந்தன் அமுதனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

6. மகாபாரதத் திருமணங்களில் ‘சமூக ஒப்பந்தம்’ இருந்ததா? இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு ஆண்மூலம் தனது சம்மதத்துடன் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. மகாபாரதக் காலத்தில் நடந்ததையே பாருங்களேன்..! கர்ணன் பாண்டுவின் மகனும் அல்ல; பாண்டுவின் வாரிசும் அல்ல; அதனால் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை உள்ளவனும் அல்ல. அதேபோல் அவன் மகனுக்கும் முடிசூட்டிக்கொள்ள உரிமையில்லை. மகாபாரதக் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டங்களில் ஜாதி அல்லது குலம் எவ்வளவு பெரிய பங்கு வகித்திருக்கிறது என்பதை, கர்ணனும் விருஷகேதுவும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது, தாய்வழியில் கர்ணன் க்ஷத்திரியன் என்றாலும் பாண்டுவின் புதல்வன் என்ற அங்கீகாரம் அவனுக்குத் தரப்படவில்லை. கர்ணனின் புதல்வன் என்றாலும் தாய் சூத்திரக் குலத்தில் வந்ததால் விருஷகேதுவுக்கும் பீஷ்மர் அங்கீகாரம் தரவில்லை. இது சரி என்றால், விசித்திர வீரியன் மீனவப் பெண்ணின் புதல்வன் ஆயிற்றே..! அவனுக்கு எப்படி அரச பதவி கிடைத்தது  என்ற பெரிய கேள்வி வருகிறது. அதை பீஷ்மரே அங்கீகரித்தும் இருக்கிறார். பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன். அவர் கங்காதேவிக்குப் பிறந்த எட்டாவது மகன். பீஷ்மரின் தந்தையின் பெயர் சந்தனு. சந்தனு அவள் கங்கை என்று அறியாமல் கங்காதேவி மேல் காதல் கொள்கிறான். கங்காதேவியும் திருமணத்திற்குச் சம்மதித்ததால் அவள் சந்தனுவின் முதல் மனைவியானாள். ஆனால் திருமணத்தின்போது கங்காதேவி,  சந்தனு மகாராஜனுக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறாள். தன்னை ‘யார்’ என்று சந்தனு மகாராஜன் ஒருபோதும் கேட்கக்கூடாது என்பது அதில் முதல் நிபந்தனை.  தான் என்ன செய்தாலும் ‘ஏன் செய்கிறாய்’ என்று கேட்கக் கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. மோகத் தீயில் கொதித்துக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், அந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கங்காதேவியை, அவள் கங்காதேவி என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டான். சந்தனு மகாராஜனுக்கும் கங்கா தேவிக்கும் எட்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை கங்காதேவி கங்கையில் கொண்டுபோய் வீசி மூழ்கடித்துக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் அதுபற்றி எதுவும் கங்காதேவியிடம் கேட்கமுடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டான். அதேபோல தொடர்ந்து பிறந்த இதர ஆறு குழந்தைகளையும் கங்காதேவி கங்கையில் வீசிக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் எதுவும் கேட்க முடியவில்லை. கடைசியாக எட்டாவது குழந்தை பிறந்த பின்பு  அதையும் கொல்வதற்கு கங்காதேவி குழந்தையை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்குக் கிளம்பியபோது, சந்தனு மகாராஜனால் முன்போல அமைதியாக இருக்க முடியவில்லை. ‘நீ யார்? ஏன் குழந்தைகளைக் கொல்கிறாய்?’ என்று சந்தனு  மகாராஜன்,  நிபந்தனையை மீறி கங்காதேவியைக் கேட்டுவிட்டான். கங்காதேவி சொன்னாள், ‘நான்தான் அமிர்தமாய் ஓடும்  கங்கை; நான் ஒரு சாபத்தால் மானுட வடிவத்தில் இருக்கிறேன்; இதுவரை நான் கொன்ற என் ஏழு மகன்களும் அஷ்ட வசுக்கள்; வசிட்ட முனிவரின் பசுவை அவர்கள் கவர்ந்துபோனதால் அஷ்ட வசுக்களை பூமியில் மனிதர்களாகப் பிறந்து வாடும்படி வசிட்ட முனிவர் சாபமிட்டார். (மனிதனாகப் பிறப்பதே இந்த ரிஷிகளுக்கு ஒரு தண்டனையாகத் தெரிவது வேடிக்கையான விஷயம்). பயந்துபோன அஷ்டவசுக்கள் தங்களால் மனிதர்களாகப் பிறந்து வாடமுடியாது என்றும் சாபத்தைத் திரும்பப் பெறும்படியும் வசிட்ட முனிவரைக் கெஞ்சினார்கள். மனமிரங்கிய வசிட்ட முனிவர், ‘எட்டு அஷ்டவசுக்களாகிய உங்களில் ஏழு பேர் மட்டும் பிறந்ததும் இறந்து சாப விமோசனம் பெற்றுவிடுவீர்கள்; ஆனால் பசுவைக் கவர்ந்துபோன எட்டாவது அஷ்டவசுவான பிரபாஸ் மட்டும் மனிதனாகப் பிறந்து நீண்ட காலம் வாழ்ந்த பின்புதான் மரணமடைய வேண்டும்’ என்று சாபத்தை மாற்றினார். அஷ்டவசுக்கள் என்னிடம் வந்து தன்னை அவர்களுடைய தாயாக இருக்கும்படியும் அதில் தங்களில் ஏழு பேரைப் பிறந்தவுடன் கங்கையில் வீசிக் கொன்று சாப விமோசனம் அளிக்கும்படியும் எட்டாவது அஷ்டவசுவை மட்டும் கொல்லாமல் வளர்த்து ஆளாக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, நான் எனக்குப் பிறந்த ஏழு அஷ்டவசுக்களைக் கொன்று அவர்களுக்கு சாபவிமோசனம் கொடுத்தேன். எட்டாவது மகனாகப் பிறந்த இந்த அஷ்டவசுவைக் கொல்லமாட்டேன். நானே வளர்த்து மாபெரும் ஆளுமையாக்கி, தக்க நேரத்தில் அவனை உன்னிடம் ஒப்படைப்பேன்’ என்று சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் இடையே நடந்த திருமணத்திலும்  ஒரு சட்டப் பிரச்சனை இருக்கிறது. பாரதக் கலாச்சாரத்தின்படி, திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் புனிதமான செயல் என்பார்களே.. பாரதக் கலாச்சாரத் திருமணத்தை மேலை நாட்டினரைப் போல ‘சமூக ஒப்பந்தம்’ (Social Contract) என்று ஒப்புக்கொள்வது இல்லை.  துல்லியமாகச் சொல்லப்போனால் பெண்களுக்கு ஆன்மா என்று ஒன்று இருப்பதையே மனு சாத்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் கணவன் இறந்தபின்பு மனைவியைக் கணவனின் சிதையில் அமர வைத்து அவனுடனே தீயில் கொளுத்திப் பஸ்பமாக்கி, சதிமாதா என்று கோயில் கட்டி வணங்கினார்கள்.  அதனால் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியல்  பாரதீயக் கலாச்சாரத்திற்கு எதிரானது.  ஆனால் கங்காதேவி விஷயத்தில் கங்காதேவி விதித்த நிபந்தனைகளை சந்தனு மகாராஜா ஏற்றுக்கொண்ட பின்புதான் கங்காதேவி திருமணத்திற்கே உடன்படுகிறாள். தான் யாரென்பதை வெளிக்காட்டாமலேயே சந்தனு மகாராஜனுடன் குடும்பம் நடத்துகிறாள். ஏழு குழந்தைகளைக் கங்கையில் வீசிக் கொல்கிறாள். அதுபற்றி சந்தனு மகாராஜன் கேள்வி கேட்டதும் தன்னை கங்காதேவி என்று வெளிப்படுத்திவிட்டுப் பிரிந்து போய்விடுகிறாள். இது மகாபாரதத்தில் வேறு எந்தப் பெண் பாத்திரத்திற்கும் கிடைக்காத சுதந்திரம்.  ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியலில் விவாகரத்து என்ற உரிமை ரகசியமாக உள்ளடங்கியுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. மகாபாரதத்தில் உள்ள விதிவிலக்கான நிகழ்ச்சி இது.  இதுதான் அப்போதைய சட்டவிதி என்று சொல்லமுடியாது. இது தாளமுடியாத மோகத்தின் காரணமாக அப்சரஸ் போன்ற ஒரு அழகியின் நிபந்தனைக்கெல்லாம் ஒரு மன்னன் கட்டுப்பட்டு நடந்ததைக் காட்டும் வித்தியாசமான நிகழ்ச்சி. இந்த தேவவிரதன் செய்த மகத்தான சபதத்தால் மகாபாரத வாரிசுரிமை மீனவப் பெண்ணின் மகனுக்கு போனது. (அதை வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி மேற்றிசைக்குச் செல்லப் போவதாகவும் கூறினான். மேலும் குந்தவையை வந்தியத்தேவன் பொருட்டு மனங்கலங்காது இருக்குமாறு கூறி விடைபெற்றான். திருப்புறம்பியத்தை அடைந்த ஆழ்வார்க்கடியான் அங்கு இடும்பன்காரி, சோமன்சாம்பவன், கிரம வித்தன் மற்றும் இராக்கம்மாள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அவர்கள் அனைவரும் பச்சைமலைக்குச் செல்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். அவனைப்போலவே அவர்களைப் பின் தொடர்ந்துவந்த பூங்குழலியைக் கண்டு, அவர்கள் செல்லும் இடத்திற்கு இருவரும் சென்றனர். வழியில் ஊமைராணி இறந்ததைக் கேட்டு வருந்தினான். ஒரு இடத்தில் ரவிதாஸன் மற்றும் ஆபத்துதவிகள் மறைந்து கூட்டமாகச் சமைத்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். ஆழ்வார்க்கடியான் மட்டும் அங்கிருந்த ஒரு குகைக்குள் மறைந்து சென்றான். அங்கு பழுவேட்டரையர், தன் காளாமுகத் தோற்றத்தோடு, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். அருகில் நந்தினி தலைவிரி கோலமாய் அமர்ந்து அவரைக் கஞ்சியை உட்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தாள். முதலில் நந்தினியைக் கண்டு மகிழ்ந்த பழுவேட்டரையர், பின் அவளைப் பலவாறாகத் திட்டத்தொடங்கினார். ஆனால் நந்தினி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இத்தனை நாள் தன்னைப் பட்டமகிஷியாக வைத்திருந்ததற்கு நன்றி கூறினாள். ஆதித்த கரிகாலனின் முடிவு தனக்குத் தெரிந்ததானாலே, அதிலிருந்து பழுவேட்டரையரை விலக்குவதற்காகவே, அவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினாள். ஆனால் விதிவசத்தால் அவர் வந்து சேர்ந்ததைப் பற்றியும் ஆதித்தகரிகாலனைச் சந்தித்தபொழுது, தன்னால் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதையும் குறிப்பிட்டாள். வந்தியத்தேவனின்பால் ஆதித்த கரிகாலனின் கோபத்தைத் தூண்டி, கரிகாலன் அவனைக் கொல்ல வருகையில், மணிமேகலை அவனைக் காப்பாற்ற இளவரசரைக் கொல்லுவாள் எனத் திட்டம் தீட்டி வைத்திருந்ததையும் கூறினாள். அப்போது தெய்வப் பயனாக காளாமுக வேஷத்தில் தாங்கள் உதவிக்கு வந்ததாகக் கூற, பழுவேட்டரையர், இடும்பன்காரியிடமிருந்து தான் வாங்கிவைத்திருந்த கத்தியை நந்தினி மீதே, தான் எறிந்தபோது அது இளவரசர் பேரில் பாய்ந்துவிட்டது எனப் பெரிதும் வருந்தி அவளைத் தூற்றினார். நந்தினி அவரைப் பெரும்பாடு பட்டு இங்கு தூக்கிவரச் செய்ததாகவும் மூன்று நாட்கள் அவருக்குப் பணிவிடை செய்து அகமகிழ்ந்து போனதாகவும் இனிமேல் விடைபெற்றுச் செல்லப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து விலகிவந்து பூங்குழலியிடம் அமர்ந்தான். குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் இருப்பதைக் கூறினான். அப்போது அவள் தன் அத்தையைக் கொன்ற சோமன் சாம்பவனைக் கொல்லக் காத்திருப்பதாகக் கூறினாள். பூங்குழலி, அரண்மனையில் தன் அத்தையைக் கொன்றவனைத் துரத்திக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வரும்பொழுது, தன்னுடன் சின்ன பழுவேட்டரையரும் வந்தார் எனவும் சுரங்கப் பாதையில் மதுராந்தகன் மறைந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தப் பழி அவர்மீது விழுந்து விடுமோ என அஞ்சி அவரைக் கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் கூறினாள். அப்போது இருவரையும் ரவிதாஸனின் பாண்டிய ஆபத்துதவிக் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவர்கள் மீது தாக்குதலுக்குத் தயாராக, நந்தினி உள்ளிருந்து வந்து, அவர்களைத் தடுத்து, ஆழ்வார்க்கடியானிடம் தன் தாய் இருக்குமிடத்துக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். ஆழ்வார்க்கடியான், சோமன் சாம்பவன்தான் அவள் அன்னையைக் கொன்றுவிட்டான் எனக் குற்றம் சாட்ட, நந்தினி உடைந்துபோய் உட்கார்ந்து அழுதாள். அப்போது சின்ன பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் வர, பாண்டிய ஆபத்துதவிகள் ஆழ்வார்க்கடியான் தலையிலும் பலமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.  சேந்தன் அமுதனும் ஒரு குதிரையில் கட்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். சின்ன பழுவேட்டரையரைக் கண்டதும் பூங்குழலி, கொலைகாரர்கள் அவர்கள்தான் என்றும் அவர்களைப் பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அப்போது குகையிலிருந்து பெரிய பழுவேட்டரையர் எழுந்து வெளியில் வந்தார். திருமலையும் கந்தமாறனும் குகையினுள் நுழைய முயல, பெரிய பழுவேட்டரையர், ரவிதாசனும் மற்றவர்களும் குகையை அடைத்துவிட்டுத் தப்பித்துவிட்டதாகக் கூறினார். தளர்ந்து அடிபட்டு பிரேதக்களை பொருந்திய முகத்துடன் தன் மூத்தவரைக் கண்டுகொண்ட சின்ன பழுவேட்டரையர், அவரை வணங்கி அழுது நின்றார். ‘உன் பேச்சைக் கேட்காமல் மோசம் போனேன்’ என்று பெரியவர் வருந்தினார். பின் அதுவரை நடந்ததை சின்ன பழுவேட்டரையர் சொல்லி முடிக்க, பெரியவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். பூதி விக்கிரம கேசரியிடம் கோட்டைப் பாதுகாப்பு இருப்பதையும். தங்கள் குடும்பத்தின் மேல் கைவைக்க கூடாது என எச்சரித்து வந்ததையும் கூறினார். வழியில் கந்தமாறனைக் கண்டு கூட்டி வந்ததாகவும் மற்ற அரையர்களுக்கு, படை திரட்டி வருமாறு ஓலை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அப்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த நந்தினியைப் பார்த்து, தன் உயிரை நந்தினிதான் காப்பாற்றினாள் என்று சின்ன பழுவேட்டரையரிடம் கூறிவிட்டு நந்தினியை நெருங்கினார். ஆழ்வார்க்கடியான் நந்தினியிடம் ‘இப்போதாவது வந்தால் வைணவக் கைங்கரியங்கள் செய்யலாம்’ என அழைக்க, நந்தினிஅவன் தன்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி உகுத்தாள். தூரத்தில் நின்று பூங்குழலி தன் அத்தை போலவே நந்தினி இருப்பதை சேந்தன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி தன்னை நெருங்கிய பெரிய பழுவேட்டரையரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பின் அங்கிருந்த புரவியின் மேல் ஏறிக்கொண்டு பாய்ந்தாள். அவளைத் தொடர முயன்றவர்களை, பெரிய பழுவேட்டரையர் தடுத்துவிட்டார். ஆம். நந்தினி மறைந்தாள்.. இந்தக் கதையில் இனி நந்தினி வரமாட்டாள்.. யார் கண்டது? என்றோ எங்கோ அவளை நாம் சந்திக்கக்கூடும். தஞ்சையில் ஆதித்த கரிகாலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, கூடவே ஜனசமுத்திரம் அலையலையாக திரண்டது. பழுவேட்டரையர்களின் பால் ஜனங்களின் அதிருப்தி பெரியளவில் இருந்ததால், அவர்களுக்கெதிரான கோஷங்கள்  எழுந்துகொண்டேயிருந்தன. ஈமச் சடங்குகள் நடந்து சக்ரவர்த்தியின் குடும்பம் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது மதுராந்தகனும் இல்லாதபடியால், அவருக்கு எதிரான கோஷங்களுடன் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அநிருத்தரின் மாளிகைக்கு முன்பு சென்று கோஷமிடத் தொடங்கினர். வேளக்காரப் படையினர் வந்து துரத்தியடித்தனர். உண்மையில் மதுராந்தகன் அங்குதான் மறைந்திருந்தார். அநிருத்தர், அவருடைய பிறப்பு ரகசியம் தனக்குத் தெரியுமெனவும் ஆனால் அதைச் சொல்ல முடியாதெனவும் கூறியதில் மதுராந்தகன் சஞ்சலம் அடைந்திருந்தான். அப்போது செம்பியன் மாதேவிப் பிராட்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் ராஜ்ய உரிமை பற்றிய பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பிராட்டியார் மதுராந்தகன் தன் மகனில்லை என்ற உண்மையைக் கூற நேர்ந்தது. மதுராந்தகன், அவர் மனம் புண்படும்படிப் பேசி உண்மையைச் சொல்லுமாறு பல்வேறு வார்த்தைகளால் ஏசினான். அநிருத்தரிடம் அந்தக் கதையை சொல்லுமாறு செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டார். ‘செம்பியன் மாதேவி தன் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்த சமயத்தில், கண்டராதித்தர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில், அக்காவும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்தீரிகள் அரண்மனைத் தோட்ட த்தில் குடியிருந்தார்கள். கர்ப்பஸ்தீரியான அந்த ஊமைப் பெண்ணை ,அவள் சகோதரியுடன் செம்பியன் மாதேவி க்ஷேத்ராடனம் சென்றபோது சந்தித்துக் கூட்டிவந்து போஷித்துக் கொண்டிருந்தார். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது அசைவில்லாமல் இருந்ததைக்கண்டு பதறி அழுதபடி பார்க்கவந்த அநிருத்தரிடம் தெரிவித்தாள். தன் கணவரிடம் எப்படி இதைச் சொல்வேன் எனக் கதறிய செம்பியன் மாதேவியிடம் அநிருத்தர் ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் கர்ப்பஸ்தீரிக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், ஆண் குழந்தையை எடுத்து வரச் செய்து, செம்பியன் மாதேவியிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த ஊமை ஸ்தீரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். குழந்தைகள் நன்றாக வளரும் என்று கூறிய அநிருத்தரிடம் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள். அசைவில்லாமல் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடும்படி, அந்தத் தங்கையான ஊமை ஸ்தீரியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு பெண் குழந்தையை, தன் சீடனான ஆழ்வார்க்கடியானிட்ம் கொடுத்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.  செம்பியன் மாதேவி, இதைச் சிறிதுகாலம் கழித்துத் தன் கணவரான கண்டராதித்தனிடம் உணமையைக் கூறி மன்னிப்பும் கேட்டார். யார் வயிற்றில் பிறந்த குழந்தையாயினும் என்ன, நம் குழந்தை போலவே வளர்ப்போம். ஆனால் ராஜ குடும்பத்துக்கு வாரிசாக வேண்டாம். சிவத்தொண்டாற்றும்படி வளர்ப்போம். அவனுக்கு சிவ சாம்ராஜ்யமே போதும். ராஜ்ய உரிமை வேண்டக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு சில நாட்களில் இறந்தும் போனார்.’ இவற்றையெல்லாம் அநிருத்தர் சொல்லி முடித்ததும் அதிர்ந்த மதுராந்தகன், இது யாருக்கும் தெரியாதெனில் இதற்குப் பிறகும் இதை மறைத்து வைக்குமாறும் அதற்கு ஈடாக அவருக்குப் பரிசளிப்பதாகவும் கூறினான். அநிருத்தர் மறுத்து, செம்பியன் மாதேவி என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே ஏற்பேனெனக் கூற, மதுராந்தகனுக்குச் சினம் மிகுந்தது. செம்பியன் மாதேவியிடம் இதை மறைத்துவிடுமாறு கூற, அவர் அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நல்வார்த்தைகள் கூறி அவனை ஆற்றுப்படுத்தினார். மேலும் அதை வெளியில் சொல்லுவதைத் தான் விரும்பவில்லை எனவும் மதுராந்தகனை, அரசர் கூட்டவிருக்கும் சபையில், ராஜ்யம் ஆளும் சிந்தனை தனக்கில்லை; சிவத்தொண்டில் முழுகப் போகிறேன், என அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுராந்தகன் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அநிருத்தர் சபை கூட இன்னும் மூன்று தினங்கள் இருப்பதாகக் கூறவும் மதுராந்தகனின் மனத்தில் பலவிதத் தீய எண்ணங்கள் எழத் தொடங்கின. சேந்தன் அமுதனின் தாய்க்கு இந்தச் செய்தி தெரியும் என்பதையும் அறிந்துகொண்டான். அப்போது அருள்மொழி உள்ளே வந்து, செம்பியன் மாதேவியின் தாள் பணிந்து, இந்தப் பேச்சுகளை மறைந்திருந்து கேட்டதற்கு மன்னிக்கும்படியும் மதுராந்தகர் அவருடைய மகனில்லை என வெளியில் தெரிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த ரகசியம் தனக்கும் தன் தமக்கை இளைய பிராட்டி குந்தவைக்கும் கூடத் தெரியுமென அவர் சொல்ல, அனைவரும் வியப்பிலாழ்ந்தனர். அநிருத்தர் மூன்று நாட்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடரும்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )

பொன்னியின் செல்வன் – 27

பொன்னியின் செல்வன் – 27

காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால் துளாவிப் பார்த்தபொழுது, ஒரு திருகுமடல் கத்தி கிடைக்க, அதன் நுனியில் இருந்த பிசுபிசுப்பை உணர்ந்து வந்தியத்தேவன் அதிர்ச்சியுற்றான். தொண்டையில் காளாமுகன் அழுத்திப் பிடித்திருந்த காயத்தால் அவனுக்கு குரலும் வரவில்லை. பெருமுயற்சி செய்து அவன் எழுந்து நடந்தபொழுது எதிலோ தட்டுப்பட்டு விழுந்தவன், குனிந்து தொட்டுப் பார்த்ததும் அதிர்ந்தான். அது ஆதித்த கரிகாலனின் உயிரற்ற உடல் என்பதை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியும் துயரமும் அவனை அழுத்தின. வந்தியத்தேவனின் நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் பெருகியது. எவ்வளவோ முயன்றும் தன்னால் தடுக்க முடியாமல் போய்விட்ட இயலாமையை நினைத்து மருகித் துடித்தான். இளவரசரை பாதுகாக்க தன்னை அனுப்பிய குந்தவையையும், பொன்னியின் செல்வனையும் இனிமேல் எப்படிக் காண்பேன் என ஆதித்த கரிகாலனின் உடலை மடியில் போட்டுக்கொண்டு அழுதான். மனிதர்கள் வரும் சந்தடிகளும், வெளிச்சமும் நெருங்கி வர, நிமிர்ந்து பார்த்தான். கந்தமாறனும், சம்புவரையரும், சில வீரர்களும் தீப்பந்தங்களுடன் வந்தனர்.சம்புவரையர் ‘அடப்பாவி, இளவரசரைக் கொன்றுவிட்டாயா’ என்றபடி பதற, கந்தமாறன் வந்தியத்தேவன்தான் கொன்றிருப்பான் என அநியாயமாக பழிச்சாட்டினான். வந்தியத்தேவன் நொந்துகொண்டே, தான் கொல்லவில்லை என்பதையும், நந்தினியும் அங்கே ஒளிந்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் பற்றியும் கூறினான். அவர்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் தொடர்பு உண்டு என கந்தமாறன் குற்றம் சாட்டி அவனைத் தாக்க வாளை உருவினான். வந்தியத்தேவன் அதை மறுத்துக்கொண்டே இருந்தான்.அப்போது திரைச்சீலை அசைய, சம்புவரையர் அங்கு பார்க்க, மணிமேகலை வெளியில் வந்து வந்தியத்தேவன் கொலை செய்யவில்லை என்று கூறினாள். கந்தமாறன் மேலும் கோபமடைந்து வந்தியத்தேவன் ஏதோ செய்து அவள் மனதை மாற்றியிருப்பதாகக் கூச்சலிட்டான். மணிமேகலை மறுக்க, சம்புவரையர், அப்போது ‘ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?’ என்று கேட்க, மணிமேகலை ‘நான்தான் கொன்றேன்’ எனக்கூற சம்புவரையர் மற்றும் கந்தமாறனுடன் வந்தியத்தேவனும் திகைத்து போனான்.சம்புவரையர் மனம் நொந்து போக, கந்தமாறன், மணிமேகலை வந்தியத்தேவனைக் காப்பாற்றவே இந்தப் பழியை ஏற்கிறாள் என்பதைப் புரிந்து அவனைக் கொல்லப் போக, சம்புவரையர் அவனைத் தடுத்தார். மேலும் மேலும் அவன் செய்த முட்டாள்த்தனங்களால்தான் பெரும்பழி நேர்ந்திருக்கிறது, வந்தியத்தேவனை உயிருடன் ஒப்படைப்பது முக்கியம் என பரிதவித்துப் பேச, கந்தமாறன் தந்தையின் சொல்லுக்கு பணிந்தான். மணிமேகலையை அந்தப்புரத்துக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி ஆணையிட்ட சம்புவரையரிடம், இப்போதைக்கு வந்தியத்தேவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை புரிந்துகொண்ட மணிமேகலை தானே செல்வதாக கூறிச் சென்றாள். அங்கிருந்த கட்டிலின் காலில் வந்தியத்தேவனைக் கட்டிப்போட ஆணையிட்ட சம்புவரையரிடம், ‘என் எஜமானனை நானே கொல்லவேண்டுமென என்ன அவசியம். நான் செய்யவில்லை என்பதை நம்புங்கள்’ என்று வந்தியத்தேவன் கேட்டான். அப்படியானால் தடுத்திருக்கலாமே என சம்புவரையர் கேட்க, பழுவூர் இளையராணியும் இளவரசரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நிலைமை விபரீதமாகும்போது தான் தடுக்குமுன் ஒரு காளாமுகன் வந்து கழுத்தை நெறித்ததால், மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினான். அப்போது வெளியே மக்களின் பெருங்கூச்சல் கேட்க, சம்புவரையரும் காவலர்களும் அவனைத் தனியே விட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தனர். மலையமான் படைகள் கோட்டை வாசலில் வந்ததால் ஏற்பட்ட கூச்சல் அது என்று புரிந்து கொண்டனர். சம்புவரையர், கந்தமாறனை தப்பித்து போய்விடும்படி கூற, அது தமது பரம்பரைக்கே அபகீர்த்தி ஆகுமென கந்தமாறன் மறுத்துவிட்டான். அதைக்கேட்டு பெருமிதப் பட்ட சம்புவரையர், சுரங்கப்பாதை வழியாக தஞ்சாவூருக்குச் சென்று கரிகாலனின் மரணத்தைப் பற்றி சின்னப் பழுவேட்டரையரிடமும், ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் அங்கு வந்திருந்தால் அவரிடமும் தெரிவிக்கச் சொன்னார். இளவரசர் அருள்மொழி, தான் சிங்காதனம் ஏறுவதற்காக வந்தியத்தேவனை ஏவிவிட்டிருக்கலாம் என்றெல்லாம் செய்தி பரப்பவேண்டும் என்றும் முடிவுசெய்து கொண்டனர். மணிமேகலையை வாயைத் திறக்காமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கந்தமாறன் கிளம்பினான். சிறிதுநேரம் சிந்தித்த சம்புவரையர் விளக்கை நன்றாகத் தூண்டிவிட்டு சுரங்கப் பாதையிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் அந்தப்புரத்தை அடைந்து அங்கிருந்த பெண்மணிகளிடம் எப்போது வேண்டுமானாலும் மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமென எச்சரித்து விட்டு ஏழெட்டு வீரர்களுடன் அரண்மனை வாயிலுக்குச் சென்று கம்பீரமாக எதிர்வரும் மலையமான் படைகளை எதிர்த்து நின்றார். மிகுந்த மனவருத்தத்துடன் நடந்த சம்பவங்களை நினைத்து வந்தியத்தேவன் வருந்திக்கொண்டிருந்த போது சுரங்கபாதையிலிருந்து உஷ்ணம் சூழ அங்கு யாரோ நெருப்பு வைத்துவிட்டிருந்தது புரிந்தது. ஒரு கணம் தன் எஜமானனுடன் தானும் செத்துப்போய்விடலாம் என எண்ணினான். அவரைக் கொன்ற பழியை நாம் சுமக்கத்தேவையில்லை என்று நினைத்தவன் அடுத்த கணமே அதை மாற்றிக்கொண்டான். ஆதித்த கரிகாலனுக்கு செய்ய வேண்டிய இறுதிமரியாதைகளுக்கு அவரின் உடலை பத்திரமாக காப்பாற்றிக்கொண்டு போக வேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு முயன்று தன் கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். தீ நாலாபக்கமும் சூழ இளவரசரின் உடலை சுமந்தபடி, காலில் தட்டுப்பட்ட திருகுமடல் கத்தியையும் எடுத்துக்கொண்டு, யாழ்க்களஞ்சியத்தின் வழியாக முன்பு சதியாலோசனை நடந்தபோது பார்வையிட்ட மேல்மாடிக்கு கஷ்டப் பட்டு சென்றான். அங்கிருந்த மதிலில் இறங்கும்வண்ணம் ஒரு ஏணி சாய்த்து வைக்கப் பட்டிருக்க அதன்மூலம் இறங்கினான். அங்கு யாரையோ எதிர்பார்த்தபடி இடும்பன் காரி நின்றிருந்தான். அவனைச் சமாளித்துவிட்டு, உடலை சுமந்து கொண்டு அரண்மனைவாயிலை நோக்கி சென்றான். பார்த்திபேந்திரனும், மலையமானும் எதிரிட்ட வீரர்களை சிதறடித்துவிட்டு வேகமாக வந்து சம்புவரையரின் முன் நின்றனர். ‘ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்’ என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டிய மலையமான், ‘என் பேரன் எங்கே?’ என சிங்கம் போல முழங்கினார். சம்புவரையர் தன் உடலில் எழுந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, இளவரசர் பழூவூர் இளையராணியை சந்திக்க சென்றிருப்பதாக கூற, பார்த்திபேந்திரன் மலையமானைக் கூட்டிக்கொண்டு போக கிளம்பினவன் அதிர்ந்தான். அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து தீ’ தீ எனக் கத்திக்கொண்டு நாலாபக்கமும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.பார்த்திபேந்திரன் அதிர்ந்து போய், மலையமானிடம், சம்புவரையரைக் காட்டி, ‘இவர்கள்தான் ஏதோ சூழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். அவர்களை சிறைப்பிடியுங்கள்’ என்று கூற, சம்புவரையர் வாயிலை தகர்த்துக்கொண்டு வந்த அவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமென திரும்ப கர்ஜித்தார். பார்த்திபேந்திரன் தீ எரியும் திசையை நோக்கி ஓட, அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களெல்லாம் அலறியபடியே வெளியே வந்தனர். அவர்களுடன் வெளியே வந்த மணிமேகலை தீ எரியும் இடத்தைக் கண்டு பதறியபடியே அங்கு ஓடத் தொடங்கினாள். அவளைத் தடுக்க முயன்ற சம்புவரையரிடம் ‘அவர் அங்கிருக்கிறார்’ என்று பதறியபடி ஓட முயலவும், அவளை ஓங்கி அறைந்தார். சம்புவரையரின் கண்ணுக்கு கண்ணான செல்லப் பெண்ணான மணிமேகலை ஸ்தம்பித்து நின்றாள். அவளின் முகத்தைக் கண்டு வருந்திய சம்புவரையர், ‘அங்கு ஓடவேண்டிய அவசியமில்லை’ என்று வாயிலைச் சுட்டிக்க்காட்டினார். அங்கு வந்தியத் தேவன் அவனுடைய தோளில் ஆதித்த கரிகாலனின் சடலத்தை சுமந்தபடி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மலையமானும் அந்த திசையைப் பார்க்க, அவரின் உடல் நடுங்கியது. நா எழவில்லை. தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்ட து. வந்தியத் தேவன் மலையமானைப் பார்த்து, ‘ஐயா! இதோ இளவரசர் கரிகாலர். வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதி வீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் கொண்டு சேர்த்தேன். விதியாலும், சதியாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் சடலத்தை மெதுவாய் கீழே இறக்கிவைத்துவிட்டு தடால் என தானும் கீழே விழுந்து நினைவிழந்தான். மலையமான், தன் பேரனிடம் அமர்ந்து அந்த வீரத் திருமுகத்தை உற்று நோக்கி ‘ஐயோ’என்றபடி தன் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டு புலம்பினார். தான் அவனுக்கு போர்த்தொழில் கற்றுக்கொடுத்ததையும், படைக்களத்தில் நின்று போர் புரிந்ததையும், வீர பராக்கிரமச்செயல்கள் செய்ததையும், சொல்லிச் சொல்லி புலம்பினார். அப்படியாவது வீரமரணம் அடைந்திருக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் புலம்பினார்.பின்னர் சோகத்திலிருந்து விடுபட்டு ரெளத்திரகாரம் அடைந்து சம்புவரையரிடம், ‘நேருக்கு நேர் நின்று மோதினாலும் கொல்ல முடியாத தன் பேரனை என்ன சதி செய்து கொன்றாய்?’ என்று கர்ஜித்தார். சம்புவரையர் அதை மறுக்க, பார்த்திபேந்திரனிடம் அங்கிருக்கும் அத்தனை பேரையும் சிறைப்பிடிக்குமாறும், அரண்மனையை இடித்து சிதிலமாக்கும்படியும் ஆணையிட்டார். பார்த்திபேந்திரன் தீயே அரண்மனையை அழித்து விட்ட தாகக் கூற, அங்கு பார்த்த போது, மாளிகை கொழுந்து விட்டு எரிந்ததை அனைவரும் கண்டு திகைத்துப் போய் நின்றிருந்தனர். தன்னை ஒருவாறு சமனப் படுத்திக்கொண்ட மலையமான், ‘மூன்றாண்டு காலமாக மகனைப் பாராமலிருந்த தன் மகளிடம் இறந்த சடலத்தையாவது கொண்டு போய் காண்பிப்போம், இளவரசனைக் கொன்ற பாவிகளுக்கு அங்கேயே தக்க தண்டனையை சக்ரவர்த்தி வழங்கட்டும்’ எனக் கூறினார்.

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு நந்தினி வேண்ட, ‘மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மன் படைத்த தளிர்க்கரங்களால் வாளைத் தொடலாகாது’ என அவளிடம் கூறினான். பெருமூச்செறிந்தவாறே நந்தினி, ‘இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையை சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அந்த பகற்கனவு கண்ட காலமெல்லாம் மறைந்து இந்த திக்கற்ற அனாதையின் கைகளில் வாளைத் துணைக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. எனவே அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என வேண்டினாள். ஆதித்த கரிகாலன், அவள் தன்னை அனாதையென்று சொன்னதை எள்ளல் செய்து அவள் காலால் இட்ட வேலையைத் தலையாய் செய்ய எத்தனையோ பேர் காத்திருப்பதாக கூறினான். அந்த தூர்த்தர்களிடமிருந்து தன் காலை வெட்டிக்கொள்ளவாவது அந்த வாளின் துணை வேண்டுமென நந்தினி பதிலளித்தாள். அதற்கு கரிகாலன், ‘பழுவேட்டரையர் இருக்கும்போது அந்த தைர்யம் யாருக்கு வரும்’ என்றான். ‘ அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்று தெரிந்த பிறகு அந்த வாலிபப் புலிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இந்த வாள் சுழற்றப் பயின்றேன்’, என்றாள் நந்தினி. ‘வாள் வீசக் கற்றுக் கொண்டதற்கு அதுதான் நோக்கமா? உன் வேண்டுகோளைப் புறக்கணித்து உன் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொல்லும் நோக்கமில்லையா?’ என்றான் கரிகாலன். ‘ஒரு சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வேளை வந்திருக்கும் போது என் கரங்களில் வலிவும் நெஞ்சில் உறுதியுமில்லாமல் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கெளரவத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகிப்பேன். தயவுசெய்து அதைக் கொடுத்து விடுங்கள்’, என்றாள். ‘அந்த பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் அந்த பாதகனை தண்டிக்கறேன்.’, என்று கர்ஜித்தபடி ஆதித்த கரிகாலன் திரைச்சீலையை நோக்கிச் செல்ல. நந்தினி அவன் காலைத் தொட்டு மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக் கொண்டு ‘ கோமகனே.. வேண்டாம்.. வேண்டாம்’ என்றாள். ‘ உன் கருணையை வேறு எங்காவது வைத்துக்கொள், ஏரித்தீவில் நீ வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதெல்லாம் பொய் என நினைத்தேன். கந்தமாறன் சொன்ன பிறகே அனைத்தும் உண்மையென புரிந்து கொண்டேன். நண்பனைப் போல நடித்து சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்டாதே’ எனக் கூறி மேலே நகர்ந்தான். நந்தினி திகைத்து வாயிற்படியருகே அசையாது நின்றுகொண்டிருக்கும் கந்தமாறனைப் பார்த்து அவனைத் தடுக்குமாறு கத்தினாள். ஆனால் அவன் ஒரு அசட்டுச்சிரிப்பை சிரித்துவிட்டு பேசாமல் நிற்க, ஆதித்த கரிகாலன் வேகமாய் கத்தியின் நுனியால் திரைச்சீலையை நகர்த்தினான். உள்ளே சிறிய கத்தியுடன் க்றீச்’ என்று கத்தியபடி மணிமேகலை இருக்கவும் ஆதித்த கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். பெரிதாகச் சிரித்தவாறே கந்தமாறனை அழைத்து ‘இந்தப் பெண்புலிக்கு எத்தனை வீரப் புலிக்குட்டிகள் பிறக்குமோ தெரியாது. கொண்டுபோய் உன் அம்மாவிடம் விட்டுவிட்டு வா’ என்று இருவரையும் அனுப்பிவிட்டு நந்தினியை ஏறிட்டான். ஒரு நாடகம் நடித்து அவர்களை அனுப்பி விட்ட தாகவும் இனிமேலாவது உண்மையை மனம் விட்டு பேசலாமென நந்தினியிடம் கூற, அவள் ‘அத்தனையும் நடிப்பா’ என வியந்தாள். ‘நடிப்பு உனக்கு புதிதா’ எனக் கேட்ட கரிகாலன் ‘மணிமேகலையை தான் கொல்லப்போகும்போது தடுக்காதது ஏன்? அவள் சாகட்டும் என விட்டுவிட்டாயா?’ என்று வினவ, அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக நந்தினி கூறினாள். ‘அவ்வளவு அன்பை நந்தினி யார் மீது வைத்தாலும் அவர்கள் தனக்கு விரோதியாகிவிடுவார்’ என ஆதித்த கரிகாலன் கூறினார். நந்தினி பதறி இல்லையெனக் கூறினாள் ‘உண்மையைச் சொல்.சோழ சாம்ராஜ்யத்தை பங்கு போடுவதற்கோ, மணிமேகலையை எனக்குத் திருமணம் செய்விப்பதற்காகவோ இங்கு நீ வரவில்லை. நான் நம்ப மாட்டேன். என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையும்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டும் போய் விடவே நான் விரும்புகிறேன்.அதற்கு முன்னால் ஒரு தடவை உன்னைப் பார்த்துப் போகலாம் எனவே வந்தேன். நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய். நான் என் மூர்க்கத்தினால் அதை உனக்குக் கொடுக்கவில்லை. அதற்கு வருத்தப் படுகிறேன். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய், என்னை எதற்கு வரவைத்திருக்கிறாய்? பழுவேட்டரையரை எதற்காகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும். வீரபாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழிமுடிக்கும் நோக்கத்துடனேயே நீ இங்கு வந்திருக்கிறாய். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டுமெனவே கந்தமாறனையும் மணிமேகலையையும் வெளியில் அனுப்பினேன். இதோ வாளைப் பெற்றுக்கொள்’ என வாளை நீட்டினான் கரிகாலன். வாளினைப் பெற்றுக்ககொண்ட நந்தினி நடுங்கி கண்ணீர் விட்டு தேம்பலுடன் அழலானாள்.‘உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்கு கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவி விட வேண்டாம். உன் சபதத்தை உன் கையாலேயே முடித்துக் கொள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்வித தீங்கும் செய்தவளாக மாட்டாய். பேருதவி செய்தவளாவாய்?’ என்று கரிகாலன் கூற, அழுகையை அடக்கிக் கொண்டு நந்தினி, ‘ நான் இங்கு வந்த நோக்கம் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் எனக்கு அந்த தைரியம் இல்லை. என் கைகள் நடுங்குகின்றன’ என்றாள். ‘ ஆம். ஏன் உன் நெஞ்சம் உறுதியாயிற்றே.. இளகிவிட்ட காரணம் என்ன?’ ‘உங்கள் நண்பர் வந்தியத்தேவன் சொன்ன செய்திதான் காரணம்’ ‘ நீயும் நானும் உடன்பிறந்தவர்கள் என்று அவன் சொன்னதை நீ ஏரிக்கரையில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது அதை நம்பவில்லை என்று கூறினாயே’ ‘அவர் என்னைப் பெற்ற அன்னையை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்புகிறேன். எனக்கொரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுங்கள். வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்குவதாக செய்த சபதத்தை என்னால் முடிக்க இயலவில்லை. என்னை நானே கொன்று கொண்டு முடியலாம் என நினைத்தால் அதற்கும் என்னிட்ம் தெம்பில்லை. நீங்கள் இந்த வாளால் என்னை வெட்டிக் கொன்று விடுங்கள். இனிவரும் ஜென்மங்களில் நான் நன்றியுடன் இருப்பேன்.’என்று சொல்லியபடி நீட்டிய வாளை ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டு அந்த அரண்மனையே அதிரும்படி பெரிதாகச் சிரித்தான். யாழ்களஞ்சியத்திலிருந்து இதைக்கேட்ட வந்தியத்தேவன் மருண்டான். இளைய பிராட்டி குந்தவை தன்னை இதுபோன்ற சந்தர்ப்பத்திலிருந்து ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தற்போது வெளிவந்து அவர்களைக் குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக காத்திருக்கலாம் என முடிவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘ஒருகாலத்தில் உங்களிடமிருந்து மலர்மாலை சூடுவதாக கனவு கண்டேன். உங்கள் கையால் வாளை சூடும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்’ ‘அப்படியானால், நான் இந்த வாளைக் கொண்டு உன்னிடம் சேர்வதற்கு தடையாய் இருப்பவர்களைக் கொல்கிறேன். நீ என்னுடன் வந்துவிடு நந்தினி’ ‘என்னால் யாரும் சாக வேண்டாம். நமக்கு என் தலைவிதிதான் தடையாக இருக்கிறது’ ‘ அந்த தடையை நான் மாற்றி எழுதுகிறேன். தடை செய்யாதே. வந்தியத்தேவன் சொன்னதைப்பற்றி நாம் சகோதர முறை என யோசிக்கிறாயா?’ ‘இல்லை. நான் உங்களுக்கு ரத்த சம்பந்தமே இல்லை. அதில் சந்தேகமும் இல்லை. நான் பழுவேட்டரையரின் மனைவி. உங்களுக்கு பாட்டி முறை.’ ‘அந்தக் கதையை சொல்லி என்னை ஏமாற்றாதே நந்தினி. உன்னை விட்டு நான் காஞ்சிக்கு சென்ற பின்னும் என்னை ஓயாமல் வதைத்துக் கொண்டே இருந்தாய். நீ மட்டும் அங்கு குதூகலமாய் பழுவேட்டரையரின் மனைவியாக இருந்து கொண்டு என்னை ஆட்டுவித்தாய்’ ‘நான் மட்டும் சுகபோகங்களில் முழுகிக் கிடந்தேன் என நம்புகிறீர்களா?’ ‘இல்லையல்லவா? அப்படியானால் கிளம்பு. எத்தனையோ தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் எனக்கு ராஜ்யம் பெரிதன்று’ ‘ராஜ்யத்தை துறந்தாலும் இந்தக் கீழ்க்குல மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் இல்லையா’ கேட்டுவிட்டு ஏளனமாக நந்தினி நகைக்க,‘என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உனக்கு பெரியதாய் போயிற்றா? அதற்காகத்தான் என்னை சிறுபிராயத்திலிருந்து விரும்பினாயா?’ என்று குரோதம் ததும்ப கரிகாலன் கேட்டான். ‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதற்காகவே பழுவேட்டரையரை மணந்தேன். வீரபாண்டியரை காப்பாற்ற முனைந்தேன்’. அந்த பெயரைக் கூறியதும் கரிகாலன் வெகுவாக கோபப்பட்டு, ‘இதைச் சொன்னால் நான் கோபப்படுவேன். உன்னை வெட்ட வந்தால் அந்த வந்தியத்தேவன் வந்து என்னை வெட்டிவிடுவான் என கணக்கு போட்டிருக்கிறாயா’ என வாளை சுழற்றிக்கொண்டு ஓடத் தொடங்க.நந்தினி அவர் காலில் விழுந்து ‘வாணர்குல வீரரைப்பற்றி தாங்கள் கூறுவது அபாண்டம். அவரைக் கொலை செய்தால், மணிமேகலை தன் உயிரையே விட்டுவிடுவாள். என் நெஞ்சில் உங்கள் திருவுருவத்தைத்தவிர வேறெதுவும் இல்லை. இது சத்தியம்’ என கதறி அழுதாள். கரிகாலன் தணிந்து அவளைத் தன்னுடன் வருமாறு கெஞ்சினான். நந்தினி மறுத்து தன்னுடைய உண்மையான கதையை கூறினாள். ‘ என் வாழ்க்கையின் விமோசனம் மரணம் ஒன்றுதான். ஈழநாட்டில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் மாதரசி என் அன்னை என்பதை என்னைப்போல பலரும் அறிந்திருந்தனர். என் அன்னையை அத்தகைய வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் என்னுடைய தந்தை… என்னுடைய தந்தை… அவர்தான்’ விக்கி அழுதுகொண்டே ஆதித்த கரிகாலனின் காதில் சொல்லி முடித்தாள். ஒரு கணம் அதைக் கேட்டு பதறித்துடித்த ஆதித்த கரிகாலன், தன் ஆவேசம் தணிந்து அதை ஒத்துக் கொண்டான். ‘ஆம் நந்தினி. இப்போது எனக்கு எல்லாம் தெரிகிறது. உன் ஆழ்மனதில் நீ எவ்வளவு துன்பபட்டிருக்க வேண்டுமெனவும் புரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடிய போது நான் அதை மறுத்தது எத்தனைக் கொடுமை என்று தெரிகிறது நந்தினி. நான் செய்ததற்கு வேறு பிராயச்சித்தமே இல்லை. நம் இருவருக்கும் நடுவில்

பொன்னியின் செல்வன் – Ps 25

பொன்னியின் செல்வன் – Ps 25

தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம். நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.அப்போது மணிமேகலை உள்ளே வர நொடியில் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு தேனொழுக அவளுடன் பேசலானாள். மணிமேகலை, பழுவேட்டரையர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதை தன் தமயனும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு நந்தினியிடம் உடனே சொல்ல வந்ததாக பதட்டத்துடன் கூறினாள். பெரிதாய் அந்த செய்திக்காக அலட்டிக் கொள்ளாத நந்தினியை அதிசயத்துடன் பார்த்த மணிமேகலையிடம், ‘ இது கந்தன் மாறனும், பார்த்திபேந்திரனும் தன்மேல் துர் எண்ணம் கொண்டுள்ளதால் என்னை அடைய அவர்கள் செய்யும் சதியாக இருக்கலாம்’, என்றாள். ‘தன் கணவருக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கை உள்ளதாகவும் தனக்கு மணிமேகலையை நினைத்து தான் பயம்’ எனவும் கூறினாள். மணிமேகலை தன் மனது வந்தியத் தேவனிடம் இருப்பதாகவும், ஆதித்த கரிகாலருக்கு மணம்முடிக்க கந்தன்மாறன் தொடர்ந்து தன்னை வற்புறுத்துவதால் அவனை வெறுப்பதாகக் கூறினாள். நந்தினி மணிமேகலையின் நிலையைக் கண்டு தான் வெகுவாக கலங்குவதாகவும் ஆதித்த கரிகாலர் மணிமேகலையை மணந்து கொள்ள ஆசைப்படுவதால் கந்தன்மாறன், அவள் தகப்பனார், அனைவரும் சேர்ந்து வந்தியத் தேவனின் உயிருக்கு ஊறு விளைவிக்க வாய்ப்பிருப்பதாகவும் விருப்பமில்லாத ஆண்மகனைக் கல்யாணம் செய்து கொண்டால் அந்த துயரத்தை மணிமேகலையால் தாங்க முடியாதெனவும் கூறி மணிமேகலையைக் குழப்பினாள். வீரனான வந்தியத் தேவனிடம் இதையெல்லாம் எடுத்துக் கூறினால், அதை மறுத்து நேருக்கு நேராய் நின்று ஆபத்தில் மாட்டிக்கொள்வான்; எனவே தன்னிடம் கூட்டி வந்தால் பழுவேட்டரையரின் நிலையை பார்த்து வருமாறு தான் கெஞ்சிக் கேட்டு சுரங்க வழியில் அவனை பாதுகாப்பாக அனுப்பிவிட்டால், நாம் இங்கே சமாளித்துக் கொள்ளலாம் என மணிமேகலையிடம் நைச்சியமாகக் கூறினாள். அதை அப்படியே நம்பிய பேதை மணிமேகலை, உடனே அவனை அழைத்து வருவதாகக் கூறி வெளியே சென்றாள். அப்போது வேட்டை மண்டபத்தின் ரகசிய அறையிலிருந்து மந்திரவாதி ரவிதாசன் கதவைத் தட்ட, நந்தினி வேட்டை மண்டபக் கதவைத் திறந்து சுரங்க அறைக்குள் நுழைந்தாள். ரவிதாஸனின் முகம் முன்னிலும் கோரமாய் இருந்தது. அவன் உடலில் காயங்கள் இருந்தன. நந்தினியின் சபதத்தை நிறைவேற்றுவது குறித்து திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு, ‘இன்றில்லையானால், மறுபடி ஆதித்த கரிகாலனை முடிப்பது இயலாததாகிவிடும்’ எச்சரித்தான். ‘யாரும் குறுக்கே வராமலிருந்தால் போதும், இன்று எடுத்த காரியம் முடிக்காமல் விடமாட்டேன்’ என்று கூறிய நந்தினி அவன் உயிரைப் பறித்தபின்பு தானும் தன்னுயிரை விட்டுவிடப் போவதாகக் கூறினாள். ரவிதாஸன், அவளை அங்கிருந்து பாதுகாப்பாக சுரங்க வழியில் அழைத்துக்கொண்டு கொல்லிமலைக்கு போகத் தயாராக இருப்பதாகவும் அதற்காகவே நான்கு பேர் சுரங்க அறையில் காத்திருப்பதாகவும் கூறினான். பரமேஸ்வரன் வெளியில் காத்திருப்பதாகவும், ஐயனார் கோவிலில் ஒரு காளாமுகனைத் துரத்திவிட்டு தேவராளன் காத்திருப்பதாகவும் கூறினான். காரியம் முடிந்ததும் தான் சிரிக்கப் போவதாகவும், அப்போது உதவிக்கு வருமாறும் நந்தினி சொல்லிவிட்டு சுரங்க அறையை விட்டு வெளியே வந்தாள். அன்று மதியத்திலிருந்து ஆதித்த கரிகாலர் ஒரு நிலையில் நில்லாமல் உன்மத்தம் பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்ததைக் கண்டு வந்தியத்தேவன் கலங்கினான். ஆதித்த கரிகாலரின் பாட்டனார் மிலாடுடையார் சைன்யத்துடன் வருகிற செய்தியை சம்புவரையர் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார். தன்னை சம்புவரையரும் பழுவேட்டரையரும் செய்கிற சதிச் செயல்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே தன் பாட்டனார் படை திரட்டி வருகிறார் எனக் கூறி அவரை நோகடித்தான். பார்த்திபேந்திரன் சமாதானம் செய்ய முன்வர, ‘கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் பழுவூர் இளைய ராணியிடம் மதிமயங்கி தன்னை இங்கே கூட்டி வந்த’தாகப் பழி கூறினார். அதை ஒப்புக்கொண்ட பார்த்திபேந்திரன், நல்ல நோக்கத்துக்காகவே நந்தினி அவனை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். அதை ஒப்புக்கொள்ளாத கரிகாலன் தன்னை பின்னாலிருந்து தாக்கி கொல்ல பார்த்திபேந்திரனும், கந்தன்மாறனும் முயன்றதாகவும் வந்தியத்தேவன் காப்பாற்றியதால் தான் பிழைத்தேன் எனவும் பேசிக்கொண்டே போனார். மேலும் ஈழத்திலிருந்து அருள்மொழிவர்மரைக் கூட்டிவரச் சென்றுவிட்டு நடுக்கடலில் மூழ்க விட்டு விட்டதாக சொல்லியபோது கந்தன் மாறன் உள்ளே வந்தான். இளவரசர் அருள்மொழி சாகவில்லை என்றும் லட்சக்கணக்கான மக்கள் புடைசூழ தஞ்சைக்கு செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவான் கரிகாலன் என்று எல்லோரும் நினைத்தபோது, மகிழ்ச்சியடைவதற்கு பதில் கோபப்பட்ட ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவனைப் பார்த்து, தான் சொல்லும்வரை நாகப்பட்டினத்திலேயே அருள்மொழிவர்மன் இருப்பார் எனக் கூறியது எப்படி மாறியது எனக் கேட்டார். இளைய பிராட்டி அப்படி சொல்லித்தான் தன்னை அனுப்பியதாகவும், நடுவில் என்ன நிகழ்ந்தது எனத் தனக்குப் புரியவில்லை என வந்தியத்தேவன் சொல்ல, ஆதித்த கரிகாலன் வெகுவாக கோபப்பட்டார். தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் எனவும், தொலைவிலேயே இருக்குமாறும், மறுநாள் அவனுக்குரிய தண்டனையை வழங்குவதாகவும் கூறி அவனை வெளியேற்றி விட்டார். பிற்பகலில் சம்புவரையரும் பார்த்திபேந்திரனும் மிலாடுடையாரை எதிர்கொண்டு அழைக்க ஆதித்த கரிகாலரின் ஆணையின் பேரில் வெளியே செல்வதை தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கரிகாலரின் கோபத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நந்தவனத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது சந்திரமதியும் மணிமேகலையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. மணிமேகலை சந்திரமதியிடம் ‘எங்கேயாவது தேடி வந்தியத்தேவனைக் கண்டுபிடித்து வரும்படி’க் கூறி அவளை அனுப்பி வைத்தாள். மணிமேகலையின் மீது கரிசனம் கொண்ட வந்தியத்தேவன் அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டிருந்தாலும், கந்தமாறன் தன்மீது வைத்துள்ள அவநம்பிக்கையையும் உத்தேசித்து அங்கு வந்ததிலிருந்து மணிமேகலையை விட்டு தள்ளியே இருந்தான். இப்போது மணிமேகலை தன்னைத் தேடுவதை அறிந்து கொண்டவன், அவளுக்கு தன்னுடைய உதவி தேவைப்படலாம் எனத் தோன்ற தனியே அமர்ந்து கொண்டிருந்த மணிமேகலையை நெருங்கி குரல் கொடுத்தான். தனிமையில் அமர்ந்திருந்த மணிமேகலை வந்தியத்தேவனின் குரலைக் கேட்ட தும் விதிர்த்து குளத்தில் விழப் போக, அவன் தாங்கிப் பிடித்தான். அதற்கு வெட்கப்பட்டவளாய், தன்னை பொருட்டாக மதிக்காததில் கோபமுற்று நன்றிகெட்டவர் என்று மணிமேகலை குற்றம் சாட்டினாள். தன் நிலையை விளக்கிய வந்தியத்தேவன் கந்தன்மாறனின் கோபத்துக்காகவே ஒதுங்கியதாக தெரிவிக்க, ‘அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கோட்டையை விட்டு வெளியேறுமாறும்’ மணிமேகலை வேண்டினாள். வந்தியத்தேவன் மறுக்க, ‘நந்தினி கூறியது சரிதான்’ என மணிமேகலை கூறவும், அவன் பதட்டமுற்று நடந்ததைக் கேட்க, அனைத்தையும் சொல்லி முடித்தாள்.நந்தினி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் அவளின் செயல்கள் சந்தேகத்துக்கு இடமாய் இருப்பதாகவும், தான் அறையிலிருந்து வெளியேறிய பின் வேட்டை மண்டபத்திலிருந்து குரல்கள் கேட்டதாகவும் மணிமேகலை கூறினாள். நந்தினி அறையிலிருந்து வேட்டை மண்டபத்துக்கு போகும் வழி ஒன்றும், வெளியிலிருந்து வரும் வழி ஒன்றும் அல்லாமல் அரண்மனைக்குள் இருந்து போகிற மூன்றாவது வழி இருக்கிறதா என வந்தியத் தேவன் கேட்க மணிமேகலை இருப்பதாகக் கூறினாள். அதை தனக்கு காட்டித் தருமாறு வந்தியத்தேவன் மணிமேகலையிடம் வேண்டினான். தன்னைக் கூடவே அழைத்துச் செல்லும் நிபந்தனையை விதித்து ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு அந்த வழியில் மணிமேகலை அவனைக் கூட்டிச் சென்றாள். போகும் வழியில் வந்தியத்தேவனின் அருகாமையில் கிளர்ச்சியுற்று மகிழ்ந்து, அவனுடன் குறும்பாக பேசியபடியே மணிமேகலை வர அவன் உள்ளமோ என்னமோ நடக்கப் போகிறது என்ற அபாய உள்ளுணர்ச்சியால் பயந்திருந்தது. அப்போது குறுகிய பாதையில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு விளக்கைத் தவறவிட்டனர். அப்போது இடும்பன்காரி விளக்குடன் எதிரே வந்து இவர்களைக் கண்டு திடுக்கிட்டது போல நடித்தான். மணிமேகலை சுரங்கப் பாதையை சரிபார்க்க வந்ததாகவும், வேட்டை மண்டபத்தில் வேல் ஒன்றை எடுக்கப் போவதாகவும் கூறி விளக்கை வாங்கிக் கொண்டு இடும்பன்காரியை அனுப்பி வைத்தாள். இருவரும் வேட்டை மண்டபத்தை அடைந்தபொழுது முதலில் புலப்படவில்லையாயினும் இருட்டு கண்களுக்கு பழகிய பின் அங்கிருந்த விலங்குகளின் பின் மனிதர்கள் மறைந்து நின்று கொண்டிருந்தது தெரிந்தது. அப்போது திடீரென ரவிதாஸனின் ஆட்கள் வந்தியத்தேவனை பின்னிருந்து இழுத்து அங்கிருந்த வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், மணிமேகலையையும் கலைமானின் கொம்புகளோடு கட்டிவைத்தார்கள். வந்தியத்தேவன் அவளை அவிழ்த்து விடுமாறும், நந்தினியின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்ததாகவும் கூறினான். ரவிதாஸன் இந்த அறையிலும் வெளியேயும் எது நடந்தாலும் அமைதியாக இருப்பான் எனில் அவனுடைய உயிருக்கு ஏதும் தீங்கு செய்ய மாட்டோம் என்றும் நந்தினிதான் பாண்டிமாதேவி, தான் பாண்டிய முதன் மந்திரி என்றும் சொல்லிக்கொண்டு போனான். இந்த சந்தர்ப்பத்தில் மணிமேகலையை யாரும் கவனிக்கவில்லை ஆதலால் அவள் கையிலிருந்த கத்தியால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு விடுவித்துக் கொண்டவள், ரவிதாஸன் துவாரத்தை திருகி அதில் வெளியே பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வந்தியத்தேவனின் கட்டுகளையும் விடுவித்தாள். சப்தம் கேட்டு அனைவரும் அவன்மேல் பாய, வந்தியத்தேவன் தன் வலிமையைக் காட்ட, கதவைத் திறந்து கொண்டு நந்தினி வேட்டை மண்டபத்திற்குள் வந்தாள். அனைவரையும் திட்டியவள், மணிமேகலையை அவள்தான் வந்தியத்தேவனை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அறையினுள் கூட்டிச் சென்றாள். உடனடியாக வந்தியத்தேவனை தப்பிச் செல்லும்படி நந்தினி கேட்க, அவளின் வாளைக் கொடுத்து விட்டால் தான் உடனே அங்கிருந்து போய்விடுவதாக அவன் மறுமொழி உரைத்தான். நந்தினி தடுமாற, ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் எனவும், சகோதரஹத்தி ஏற்படாதவாறு தடுக்கவே தான் வாளைக் கேட்பதாகவும் வந்தியத்தேவன் இறைஞ்சினான். இதை ஆதித்த கரிகாலனிடமே சொல்லித் தடுக்கலாமே என நந்தினி ஏளனமாய் வினவ, தான் தடை செய்தால் இன்னமும் அதிகமாக கோபப் படுவார் என்பதால் தான் நந்தினியிடம் இறைஞ்சுவதாக வந்தியத்தேவன் கூறினான். மேலும் ஈழநாட்டில் அவளின் தாயாரை தான் சந்தித்ததையும் அவர் சோழ நாட்டின் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பதையும், பொன்னியின் செல்வனை எல்லா ஆபத்திலிருந்தும் காத்து வருவதையும் குறிப்பிட்டான். இப்போது ஆதித்த கரிகாலனுக்கு நந்தினியால் தீங்கு நேருமானால் அந்த மாதரசி நந்தினியை எந்நாளும் மன்னிக்க மாட்டார் எனவும் எச்சரிக்கை செய்தான். நந்தினி தொய்வுற்று அமர, அரண்மனையில் தன் அன்னை போல் வேடமிட்டு நந்தினி சுந்தர சோழரை பயமுறுத்தியதையும், அனைத்தும் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை, வாளைக் கொடுத்துவிட்டால் இனியும் யாரிடமும் கூற மாட்டேன் எனவும், வந்தியத்தேவன் சொல்லச் சொல்ல நந்தினி இளகினாள். வாளை எடுத்து அவன் கையில் கொடுக்க

பொன்னியின்செல்வன் – 24

பொன்னியின்செல்வன் – 24

இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். பூங்குழலி களைப்பினால் வாடி நின்றிருந்ததைக் கண்டு ‘சமுத்திரகுமாரி’ என அவளை விளித்து, அதுவரை நடந்ததையெல்லாம் இருவரின் வாயிலாகவும் அறிந்து கொண்டார். யானையினாலும், அங்குசத்தினாலும் பாதிப்பு ஏற்படுமென பழுவேட்டரையர் அறிந்திருந்ததைக் கேட்டு ஆச்சர்யப் பட்டவர், மந்தாகினி தனியே ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்றறிந்ததும் பதைத்துப் போனார். பூங்குழலி, ‘தன் அத்தை அவருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கடைசியாக ஒருமுறை பொன்னியின் செல்வனைக் காண விரும்புவதாக’ தகவல் அனுப்பியிருப்பதைக் கேட்டவுடன் ஒரு கணமும் தாமதிக்காமல் தஞ்சை சென்றாக வேண்டும் என்று கூறினார். அங்கு தஞ்சையில் காலையில் வழக்கமாக நிகழ்வது போல கோட்டை திறந்ததும் வேளக்காரப் படையினர் உள்ளே சென்றனர். ஆனால் உடனே எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டதைக் கண்டு மக்கள் அனைவரும் திகைத்துப் போயினர். பொதுவாக வேறு ஏதாவது படையெடுப்பின்போதோ அவசர நிலையின் போதோதான் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் அச்சமும் பதற்றமும் அடைந்தனர். அப்போது கோட்டையின் வடபுறம் தவிர மூன்று புறங்களிலும் இருந்து சேனைகள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பயந்தனர். அருகில் நெருங்கிப் பார்த்தவர்கள் அதன் முகப்பில் சோழச் சின்னமான புலிக்கொடியைப் பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார்கள். சோழர்களின் தென்திசை சேனாதிபதி பூதி விக்கிரம கேசரிதான் படைகளுக்கு தலைமையேற்று வந்து கொண்டிருந்ததும் மக்களுக்கு தெரிந்து போயிற்று. விக்கிரம கேசரி அங்கு வந்திருப்பது தங்கள் பிரியத்துக்குரிய இளவரசர் அருள்மொழியை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே எனப் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியுடனேயே வரவேற்றனர்.கூடாரம் அடிக்கப் பட்ட பிறகு விக்கிரம கேசரி தலைமையில் சிற்றரசர்களின் கூட்டம் கூடிற்று. பழுவேட்டரையர்கள் சக்ரவர்த்தியை வெகுநாட்களாக சிறைவைத்து இருப்பதாகவும், அவர்களின் சூழ்ச்சியால் சக்ரவர்த்தி மனம் மாறி தன் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு போரே அறியாத மதுராந்தகனுக்கு பட்டம் அளிக்க விரும்புகிறார் எனவும் சிலர் கூறினர். சக்ரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை என வருத்தப்பட்ட பூதி விக்கிரம கேசரி, இலங்கையில் இளவரசரைக் கொல்ல நடந்த சதிகள் பற்றியும் இங்கு வந்த பிறகு திருவாரூரில் யானைக்கு மதம் பிடித்ததையும் இளவரசர் காணாமல் போனதையும் சொல்லச் குழுவினர் அனைவரும் கடுங்கோபம் அடைந்தனர். பழுவேட்டரையர்களை எதிர்த்து கோட்டைக்கதவை திறந்து சக்ரவர்த்தியை விடுவிக்க வேண்டுமென அனைவரும் ஒரே குரலில் முழங்கினர். அப்போது ஒரு காவலாளி வந்து ரகசியமாக அவரின் காதில் ஏதோ சொல்ல, அவர் உடனே எழுந்து தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலுக்கு குதிரையேறிச் சென்றார். அங்கு அம்பாரியுடன் கூடிய யானை நின்றிருந்தது. அம்பாரிக்குள் இரண்டு பெண்கள் இருப்பதாகப் பட்டது. யானைப்பாகன் தனது கொம்பை எடுத்து ஊதிவிட்டு, ‘ கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடம் இருந்து சக்ரவர்த்திக்கு செய்தி கொண்டு வந்திருப்பதாகவும், வானதிதேவிக்கும் அவர் தோழி பூங்குழலி அம்மைக்கும் கோட்டைக் கதவை திறந்து விடும்படியும்’ முழங்கவும், பூதி விக்கிரம கேசரி ஆச்சரியத்துடன் வானதியைப் பார்த்தார். யானையிலிருந்த வானதி, பெரியப்பா.. எனப் பேசத்தொடங்க. பூதி விக்கிரம கேசரி, ‘இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் குந்தவை உன்னிடமா செய்தி அனுப்பியிருக்கிறார், அப்படி என்ன சேதி’ என வினவ, ‘அருள்மொழிவர்மரைப் பற்றி செய்தி கொண்டு வந்திருப்பதாக’ வானதி கூறினாள்.‘இளவரசர் எங்கே இருக்கிறார்’ என்று அவர் கேட்க, ‘அதை மட்டும் சொல்ல முடியாது’ என உறுதியான குரலில் மறுத்து விட்டு யானைப்பாகனை முழங்குமாறு மேலும் கட்டளையிட்டாள். இதே சமயத்தில் கோட்டையின் உள்ளே இருந்த சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டர் வெகுவாக கலங்கியிருந்தார். பூதி விக்கிரம கேசரி படையெடுத்து வந்திருந்தது எரிச்சலைக் கிளப்பியிருந்ததுடன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் இங்கு வந்து சேராமலிருந்தது இன்னும் கவலையைக் கிளப்பியிருந்தது. அநிருத்தருடன் சென்று கொடும்பாளூர் வேளார் படையெடுத்து வந்த செய்தியை சக்ரவர்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்துச் சென்றால், அநிருத்தர் சக்ரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இந்த சமயத்தில் அதைச் சொல்ல வேண்டாமெனவும் அறிவுரை கூறினார். ‘இது போன்ற மனம் வருத்தும் செய்திகளால் அரசரின் உடல்நிலை மேலும் சீர்கெட்டால் அதன் பழியும் சின்னப் பழுவேட்டரையரையே சேரும்’ என்று அநிருத்தர் கூற, அநிருத்தரிடமே அரசரிடம் செய்தி சொல்லும் பொறுப்பை விட்டுவிட்டு கோட்டைப் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைகளைக் கவனித்தார். அப்போது கொடும்பாளூர் இளவரசி கோட்டைக் கதவுக்கு அப்பால் இருப்பதாக சேதி வரவே அவளை அனுமதிக்கவே கூடாது என்று நினைத்தபடி கோட்டைக் கதவை நெருங்கியவர், ஒரு சிறு பெண்ணை அனுமதிக்காமல் தான் பயப்படுவதா என்று யோசித்துக் கொண்டே, கோட்டை மதிலின் மீதிருந்து அவர்களை பார்வையிட்டார்.அப்போது வானதியும் அவளின் பெரிய தந்தையும் வாக்குவாதம் செய்வதைக் கண்டார். யானைப்பாகன், ‘பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்ரவர்த்திக்கும் செய்தி கொண்டு வந்திருப்பதாகவும்’ கொம்பு ஊத, தன் அண்ணன் இந்தப் பெண்ணிடமா செய்தி அனுப்புவார் என்ற சந்தேகத்துடன் கதவைத் திறந்து விட ஆணையிட்டார். உள்ளே இரு பெண்களும், யானைப்பாகனுமாக உள்நுழைந்ததும் வானதி தன் வணக்கத்தை தெரிவித்து பெரிய பழுவேட்டரையர், பாண்டிய ஆபத்துதவிகளிடமிருந்து சக்ரவர்த்திக்கு ஆபத்து ஏற்படப் போகிறது, அசட்டையாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தி அனுப்பியிருப்பதாக கூறினாள். ஆனால், ‘அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், அதை உங்களிடம் தமையன் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை’ எனச் சின்னப் பழுவேட்டரையர் அலட்சியமாய் கூறினார். ‘அரண்மனைக்கு வந்து போகும் மந்திரவாதியைக் குறித்து நீங்கள் கூறியதை தாம் அலட்சியம் செய்ததை மன்னித்து கவனமாக இருக்கும்படி’ பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வானதி சொல்லியதும் அவர் திகைத்தார். மேலும் இங்கு வரப்போகும் ஆபத்தைச் சொல்லவே தன்னை இளைய பிராட்டி அனுப்பியதாகவும், பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற கடம்பூர் விரைந்துள்ளதாகவும் கூற சின்னப் பழுவேட்டரையர் வானதியை முழுதாய் நம்பி உள்ளே அனுமதித்தார். கோட்டைக் காவலை பலப்படுத்த சில உத்தரவுகளை இட்டு விட்டு திரும்புகையில் இரண்டு பெண்களுடன் யானைப்பாகனும் அரண்மனைக்கு உள்ளே சென்றதைக் கண்டு பதைத்த சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை அவன் பாண்டிய ஆபத்துதவியாக இருக்க கூடுமோ எனப் பாய்ந்து சென்று அவன் கரத்தை இறுக்கமாகப் பிடித்து ‘ யாரையடா ஏமாற்றப் பார்த்தாய்?’ என கர்ஜித்தார். முன்னே சென்ற இரண்டு பெண்களும் சொல்வதறியாது திகைக்க, மாட்டிக் கொண்ட இளவரசர் வெண்ணெய் திருடிய கள்வனைப் போல் புன்னகைத்தார். .இளவரசரை அடையாளம் கண்டு கொண்ட காலாந்தக கண்டர் நடுக்கமடைந்து நாக்குழற மன்னிப்பு கேட்க, அருள்மொழிவர்மர் சிரித்துக்கொண்டே தங்கள் கட்டளைக்கு ஒப்புக் கொடுக்கவே வந்ததாக பணிவுடன் கூறினார். காலாந்தக கண்டருக்கு இளவரசர் அருள்மொழி மீது எந்த தீய எண்ணமும் என்றைக்கும் இருந்ததில்லை. அவரைப்போய் அடா என்று பேசியதுடன், தகுந்தமுறையில் வரவேற்பு கொடுக்க முடியவில்லை என்பதும் அவரை நிலைகுலையச் செய்ய, வருந்தி மன்னிப்புக் கேட்டார், அத்தகைய வரவேற்பை தந்தை இந்நிலையில் இருக்கும்போது தவிர்ப்பதற்காகவே இம்முறையில் உள்நுழைந்ததாக இளவரசர் சின்னப் பழுவேட்டரையரை அமைதிப் படுத்தினார். அந்த கால இடைவெளியிலேயே இளவரசரைக் கண்ணுற்ற படையினர் மனம் மகிழ்ந்து சிறு கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கோஷம் வெளியில் கேட்காதவாறு அமைதிப் படுத்திய சின்னப் பழுவேட்டரையர் இளவரசரை உடனே உள்ளேயும் அனுப்பி வைத்தார். பூங்குழலி கவலையுடன் அவர்களுடன் செல்லாமல் தனித்திருக்கவும் அவளை விசாரித்தவர், பாதாளச்சிறை பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து பற்றியும் அவள் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்தார். தான் நேரிலேயே காட்டுவதாக அவள் சொல்ல இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு விரைந்தனர். காலையில் தன் அத்தை அந்த சுரங்கத்தில் ஒளிந்திருந்தவனை அடையாளம் காட்டியதையும், தன் அந்திமக் காலத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததும் அவளுக்கு நினைவில் வந்து அச்சுறுத்தியது. அப்போது ‘வீல்’ என்ற அத்தையின் சத்தம் கேட்டு சின்னப் பழுவேட்டரையரைப் பற்றிப் பொருட்படுத்தாமல், பூங்குழலி சக்ரவர்த்தியின் அறையை நோக்கி பாய்ந்தோடினாள். அங்கு சக்ரவர்த்தி படுத்திருந்த அறையில் அனைவரும் நின்றிருக்க அவருக்குமுன் மந்தாகினி தேவி சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள். ஆபத்தை உணர்ந்து கொண்ட பூங்குழலி பாய்ந்து போகுமுன்னர் ஒரு வேல் மேலிருந்து மந்தாகினி தேவியின் மீது பாய்ந்தது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஏதோ ஒரு பொருள் மேலிருந்து வீழ அங்கிருந்த தீபம் அணைந்து விட்டது. இருளில் யாரையும் பார்க்கமுடியவில்லை. அதற்குள் யாரோ மோதிக் கொள்ளும் சத்தமும், மகாராணியின் ‘ஓ’ என்ற ஓலமும் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் விளக்கைக் கொண்டு வரும்படி கட்டளையிட விளக்கு வந்து சேர்ந்திருந்த பொழுது மந்தாகினி தேவி, உடலில் வேல் தாங்கி தரையில் வீழ்ந்து கிடந்தார்., இவ்வளவு காலமும் கால்கள் சக்தியற்று படுக்கையில் கிடந்த சக்ரவர்த்தி தானே தவழ்ந்து வந்து அவரின் அருகில் அமர்ந்திருந்தார். மந்தாகினி தேவி சக்ர்வர்த்தியைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் தலையை சக்ரவர்த்தியின் மடிமீது இளவரசர் அருள்மொழி தூக்கி வைத்தார். பூங்குழலி ‘அத்தை அத்தை’ என கதறத் தொடங்க, இளவரசர், ‘ பல காலம் பிரிந்திருந்தவர் சேர்ந்திருக்கின்றனர் அவர்கள் இருவரும் தனியே இருக்கட்டுமென ’ அவளை சமாதானப் படுத்தினார். அத்தையைத் தவிர தனக்கு யாருமேயில்லை என பூங்குழலி கதறினாள்.அப்போது இளவரசர் தனக்கு தாயை விட மேலானவளான போதும், தந்தையுடன் தாய் சேர்ந்து இருப்பதைக் கண்டு தான் ஒதுங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், பூங்குழலியும் அவள் அத்தையும் சோழகுலத்துக்கு எப்பேற்பட்ட நன்மை செய்திருக்கிறார்கள் என விளக்கினார். மேலிருந்தவன் எறிந்த வேலை தன் மார்பில் வாங்கிக்கொண்ட மந்தாகினி தேவி, கீழே விழ, அவரைக் காப்பாற்ற மூன்று வருடமாக படுக்கையிலேயே இருந்த சக்ரவர்த்தி அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டமையால் வேலெறிந்த கொலையாளி, விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்திருந்த சக்ரவர்த்தியை மீண்டும் இருளில் குத்த முயன்றதில் கத்தி தலையணையில் சொருகி விட்டிருந்தது. அதைத் தடுக்க முயன்ற மகாராணி கத்தியதை அனைவரும் கேட்டிருந்தனர். இரண்டு முறையும் சக்ரவர்த்தியைக் காப்பாற்றியது மந்தாகினி தேவிதான். மேலும் பூங்குழலியின் உதவியினால் கோட்டைக்கு உள்ளே வந்ததாலும் இந்த நேரத்தில் தந்தையின் அருகே தான் இருந்தததால் தான் சின்னப் பழுவேட்டரையரின் மேல் எந்தப் பழியும் வீழாமல் தப்பிக்க முடிந்தது என இளவரசர் எடுத்துக் கூறினார். சின்னப் பழுவேட்டரையர் தன் கோட்டைக் காவல் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார். விழித்துக் கொண்ட சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலியைப் பாராட்டுவதாக நினைத்து தக்க