பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

ஐரோப்பாவில் உள்ள பல்கலையில் வருகை தரு ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த புதிதில், பேராசிரியரை வழக்கம்போல் Sir என்று கூப்பிடத் தொடங்கினேன். முதல்முறை ‘அவ்வாறு அழைக்க வேண்டாம்’ என்று கூறிய அவர், இரண்டாம் முறையும் தவறி அழைத்தபோது சார் என்று சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்படி கூறினார். ஆங்கிலத்தில் பெயர் சொல்லி அழைத்தலே மரியாதைக்கு உரியதுதான் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. நம்மவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அவர்களை Sir என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு அக்கலாச்சாரம் அனைத்து மட்டத்திலும் வேரூன்றி விட்டது. சார் என்று தங்களை அழைத்தலை எந்த ஐரோப்பிய, அமெரிக்க அல்லது வளர்ந்த நாடுகளின் பல்கலைப் பேராசிரியர்களும்/ஆராய்ச்சியாளர்களும் சற்றும் விரும்புவதில்லை. உளவியல் ரீதியாகவே தாங்கள் இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் அறைக்கு எந்த மாணவர் வந்தாலும் சரிசமமாக அமர வைத்தே பேசுகிறார்கள் /விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் எந்த இடத்திலும் அடிமைத்தனம் இருக்காது. சர்வதேசப் பல்கலையில் பி.எச்டி / முதுமுனைவர் ஆய்வுப் பணியிடங்களுக்குப் பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உயர்கல்வி மற்றும் அயலகப் பணிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தத் தகவல்கள் பயன்படும் என்று நம்புகிறேன். மின்னஞ்சலின் துவக்கத்தில் ‘Dear Sir/Madam, Respected Sir/Madam’ என்று துவக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.. எனவே, இ-மெயிலில் Sir என்று தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கான வாய்ப்பை நாமே கெடுத்துக்கொள்வது போன்றதாகும். Dear Prof. XXX அல்லது Dear Dr. XXX என்று பெயருடன் இ-மெயில் ஆரம்பித்தல் நலம். இதைப்போலவே இ-மெயிலின் இறுதியில் Thanking you sir என்பதையும் தவிர்க்க வேண்டும். மெயிலின் எந்த ஒரு இடத்திலும் Sir என்பது கட்டாயம் இருத்தல் கூடாது. சுருக்கமான சுய அறிமுகத்துடன் எத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம்/பெற விண்ணப்பித்துள்ளோம் என்பதைக் கூறி விண்ணப்பிக்கும் பதவிக்கு/படிப்பிற்கு அப்பேராசிரியரின் ஆய்வுக் குழுவைத் தேர்ந்தேடுத்த காரணத்தையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் அக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி நமக்கு ஓரளவேனும் இருக்கிறதா என்ற சுய பரிசோதனை செய்வது சாலச் சிறந்தது. அக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஈடுபடும் ஆய்வுத்துறை பிரிவுகள், பெற்றுள்ள நிதியுதவி, பேராசிரியரின் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும். அப்பேராசிரியரின் சிறப்புரைக் காணொளி ஏதேனும் Youtube போன்ற ஊடகங்களில் இருந்தால் அவற்றைக் கண்டும் அவரது ஆராய்ச்சி ஈடுபாட்டை, மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அறியலாம். அப்பேராசிரியரின் குழு வெளியிட்டுள்ள ஓரிரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சொல்லி அவற்றின் உள்ள ஆய்வு முடிவுகள் நம்முடைய ஆராய்ச்சி ஆர்வத்துடன் ஒத்துப்போவதைச் சுருக்கமாக குறிப்பிடலாம்.. நம்முடைய தனித்திறன்களையும் (skills) குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையிலான சுருக்கமான ஆராய்ச்சி சுய விவர அறிக்கையை (CV) கட்டாயம் இ-மெயிலில் இணைக்க வேண்டும். அதில் பக்கம் பக்கமாகக் கதை எழுதாமல், முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள், வாங்கிய விருதுகள், பங்கேற்ற கருத்தரங்குகள் (conference) மற்றும் செமினார் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கல்வித் தகுதி போன்ற பொதுவான பிற தகவல்களை இணைத்தால் போதுமானது. இதற்கான மாதிரி CV-க்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பி.எச்.டி-க்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தன்னுடைய உத்தேச ஆராய்ச்சித் திட்டம் (Proposed research work) குறித்த ஒரு பக்க அறிக்கையை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். தாங்கள் முதுகலை படிக்கும்போது ஏதேனும் ஆய்வுக் கட்டுரை (Research article) /காப்புரிமை (Patent) எழுதி வெளியிட்டிருந்தால் அதன் Soft copy-யை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். இது அவர்களின் தேர்வை இன்னமும் உறுதிப்படுத்தும். இ-மெயிலின் Subject மற்றும் எழுத்துப் பிழைகள், ஆங்கில இலக்கணக் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, பிழையின்றி அனுப்ப வேண்டும். இது மிக முக்கியமானது. ஒரே இ-மெயிலை காப்பி செய்து பல பேராசிரியர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். இது தனிப்பட்ட ஆய்வு/ வேலை வாய்ப்பு என்பதால் ஒவ்வொரு பேராசிரியர்/ ஆராய்ச்சியாளருக்கு அனுப்பும்போதும் அதீத கவனம் கொண்டு நேரம் செலவழித்து அனுப்புவதில் தயக்கம் காட்டுதல் கூடாது. பி.எச்.டி-க்கு விண்ணப்பிக்கையில் ஒரு பேராசிரியர் /ஆய்வாளர் தன் ஆய்வகத்தில் காலிப் பணியிடம் இல்லை பதில் என்று சொன்னாலும் அவரது இ-மெயில் முகவரியை தவறாது சேமித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் முது முனைவர் (Post-doctoral) ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கையில் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள அது வசதியாக இருக்கும். அனைத்துப் பேராசிரியர்களும் நாம் அனுப்பும் இ-மெயிலுக்கு பதில் கூறுவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சர்வதேசப் பேராசிரியர்கள் மாணவர்களை Skype போன்ற ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வார்கள் என்பதால், நேர்முகத் தேர்விற்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் முன்னர் யாரேனும் நண்பருடன் இணைந்து மாதிரி Skype உரையாடலை மேற்கொள்வது பதற்றமடைதலைக் குறைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும், தன்னம்பிக்கையோடு தட்டுங்கள் வாய்ப்புகள் தானாகவே வழி திறக்கும். ஆனந்தகுமார் சூசைமாணிக்கம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவியலாளர், மாட்ரிட், ஸ்பெயின்.

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி