பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான்.  சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள்.  “தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள்.  தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான்.  கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.   எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான்.  ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான்.  மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது.  மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது.  உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான்.  மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார்.  அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.  அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.   மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார்.  கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார்.  வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்.  “உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”.  இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன். Dr. ர. நிஷாந்த்,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை. படங்கள்: இணையத்திலிருந்து

பூமிகா

பூமிகா

திரை விமர்சனம் அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி.  இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த கதையும்.  ஒரு நள்ளிரவில் கர்ப்பிணி மனைவியுடன் பேசிக்கொண்டே காரைச் செலுத்தும் கேப் டிரைவர் கிருஷ்ணா (ஈஸ்வர் கார்த்திக்) விபத்தில் இறக்கிறான். மறுநாள் மலைப்பாங்கான பகுதியில், மரம் செடி கொடிகள்  அடர்ந்த வெளியை வெட்ட வெளியாக்கி, அமைச்சரின் ஒரு திட்டத்தை நிறைவேற்ற கௌதம் (விது), சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்), குழந்தை சித்து (அய்யன் அபிஷேக்), காயத்ரி (சூர்யா கணபதி), அதிதி (மாதுரி) காரில் அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு கட்டடத்திற்கு வந்து, தங்குகின்றனர். உதவிக்குக் காவலாளி தர்மன் (பாவெல் நவகீதன்). அந்த நிமிடத்தில் இருந்து துவங்குகின்றன, திடுக்கிட வைக்கும் அசாதாரண நிகழ்வுகள், தேடல்கள். அமானுஷ்யம் கலந்த திரில்லர் உத்தியில் வெளியான, இயக்குனரின் ‘இன்மை’ படத்தைப் போன்றே, இதிலும் மர்ம முடிச்சுகளைப் படிப்படியாக அவிழ்த்துக் கொண்டே, நிகழ்விலும் பிளாஷ்பேக்கிலுமாகக் கதையை இறுதிவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. இயக்குனரின் இந்த உத்தி அவரின் பாணியாகவே தொடராமல் இருந்தால், முத்திரைக்கு  இலக்காவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வழக்கம்போல் இயக்குனர் ரதீந்திரன் இதிலும், ஜேம்ஸ் லவ்லாக் எனும் பிரிட்டன் விஞ்ஞானியின் ‘கையா ஹிப்போதீசிஸ்’ எனும் சயின்டிஃபிக் தியரியை, புதிய விஷயமாக அறிமுகம் செய்து, ரசிகர்களின் சிந்தனைக்குத் தீனி இடுகிறார்.   அவந்திகா வந்தனாபு ஆட்டிஸ சிறுமியாக, படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். உடல் மொழியே முழு மொழியாக, பூமிகா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத அளவிற்கு இயல்பாக மிளிர்கிறார். கதை நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன் தவிர மற்றவர்கள் அறிமுகக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளது, எந்த விதத்திலும் கதை நகர்வுக்கு இடறலாக இல்லை. அடுத்து, பூமிகாவின் கதையை ஒட்டி, பூமியை அழகாகவும் அழுத்தமாகவும் உருவகிக்கும் காவல்காரர் தர்மன் கவனத்தைக் கவருகிறார்.  ஒரு சைக்காலஜிஸ்ட் என்கிற மனநிலையோடு, உறுதியுடன் பிரச்சனைகளை அணுகும் பாத்திரத் தன்மையை அழகுற வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், பேசிய வார்த்தைகளில் அதிகமாக உச்சரித்தது, ‘என்னாச்சு? ஏன், என்னாச்சு? சூர்யா கணபதி, விது அந்தச் சூழலுக்கு இன்னும் கூடுதலான அளவு ரியாக்ட் செய்திருக்கலாம். அதிதியின் ரியாக்சன் சற்று அதீதம். பிரித்வி சந்திரசேகரனின் இசை, கதைக்குப் பக்கபலம் மட்டுமல்ல, பக்கா பலமும் கூட. இதற்குச் சற்றும் குறையாத உழைப்பை ஒளிப்பதிவாளர் ரோபோர்டோ ஜஜ்ஜாரா வழங்கியுள்ளார். பூமிகா வரையும் ஓவியங்களாகட்டும்,  அவள் உலவும் இயற்கை அழகு ததும்பும் இடங்களாகட்டும், ஒளியும் வண்ணமும்  தெறித்து விழுகின்றன. ஓவியங்கள் அத்தனையும் அருமை. கலை இயக்குநருக்கும் ஓவியர்களுக்கும்  பாராட்டுகள். ஆனந்த் ஜெரால்ட்டின் படத்தொகுப்பு சற்று சவாலானதுதான். படத்தின் முன் பகுதியில் சற்று வேகத்தைக் கூட்டி இருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம். “பூமிகா யாரு? அது பூமிங்க. இந்த பூமி கிதே பூமி, அது ஒவ்வொரு நிமிஷமும் நம்ம கிட்ட பேசுது. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா? ‘என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், முடிஞ்சா எங்கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்க’. அவ கொஞ்சம் சிலிர்த்தாலும் ஒருத்தரும் தாங்க மாட்டீங்க ” என்று சொல்லும், தெள்ளத்தெளிவாக அந்தப் பகுதியின் வரலாறு தெரிந்த தர்மனிடம், இவர்கள் எதையும் விசாரிக்காதது, சற்று வியப்பைத் தருகிறது . அமானுஷ்யம் என்று வந்து விட்டாலே, ‘லாஜிக்’ பார்க்க முடியாதுதான். என்றாலும் அதற்குள்ளாகவே, அதற்கென்று இருக்கக்கூடிய லாஜிக்கும் கூட ஆங்காங்கே சறுக்குகிறது.  மீண்டும் இடைஞ்சல் தருவதாகக்  கருதி, அவர்களை அங்கிருந்து விரட்ட முனையும் பூமிகா, அவர்கள் காரில் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தபின் நிறுத்துவானேன்? அப்படி காரை நிறுத்த முடிந்த பூமிகாவால், ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லும்போது, அவ்விதம் நிறுத்த முடியாமல் பின்தொடர்ந்து ஓடுவானேன் . அப்பள்ளத்தாக்கில் கட்டுமானப்  பணியில் இருந்தவர்களைத் தவிர்த்து, மாணவர்களையோ ஆசிரியர்களையோ பூமிகா பாதிக்காத நிலையில், மவுண்ட் ரோஸ்யார்ட்  பள்ளியை மூட வேண்டிய அவசியமோ, அப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமும்தான் ஏனோ? ‘பாராநார்மல்’ செயல்பாடுகளுக்கு,  மிதமானது முதல் மிக அதிகமானது வரையிலான நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தால், அவரவர்கள் பார்வையில் அவை அமானுஷ்ய நம்பிக்கையாகவும், அறிவியல் பூர்வ உண்மையாகவும், ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடும். ஒரு உத்தியாகக்  கொண்டுள்ள அமானுஷ்யத்தில், இந்த லாஜிக் தேடல்களை எல்லாம் சினிமா லிபர்டியாகக் கொண்டு விட்டுவிட்டு, புவி சமநிலையை வலியுறுத்தும் அக்கறையுடன், “என்னிக்குப்  பாலை மட்டுமே குடிக்க வேண்டிய குழந்தை, பெத்தவ மார்பைத் தின்ன ஆரம்பிக்குதோ, அன்னிக்குத் தாய்,  பேயா மாறிடுவா” என்கிற கலை வடிவான, அழுத்தமான, திரை வடிவச் செய்திக்காகவே ரதீந்திரனின் பூமிகாவை வரவேற்கலாம். விமர்சனம்: மது ராஜேந்திரன் மதிப்பெண் : 7/10

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு

பேரரசுகளின் கல்லறையில்..!

பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்இரத்தம் உறைந்த பூமியில்வாழ்வுக்கும் சாவுக்கும்இடையே போராடுகிறார்கள் அண்டங்களுக்கு அப்பால் சென்றுகுடியிருப்புகளை நிறுவஇருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்முயன்று கொண்டிருக்கையில்,உயிர் தப்ப எண்ணியோர்உயிரே பறக்கும் விமானத்தின்சக்கரங்களிலிருந்து வீழ்வது இருண்ட காலத்திற்குள் அவர்கள்விழுவது போலவே இருக்கிறது பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்பழங்காலத்திலிருந்து பழங்குடிகளேபல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்மாறும் போதெல்லாம்கற்காலத்தில் வாழவேகட்டாயப்படுத்தப்படுகிறார்கள்கொலைக்கருவி ஏந்திமதம் காப்பவர்களால் புதுமையோ புரட்சியோ இல்லாமல்பழமையிலேயே கிடக்கும்பழங்குடிகளின் தேசம்புவிசார் அரசியலில்வளங்களைக் கொள்ளையடிக்கும்வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது ஆதிக்கம் எதுவாயினும்அடிபணியோம் என்பதைதுப்பாக்கி முனையிலும்பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்பெண்கள் சொல்கிறார்கள் ஆதிக்கவாதிகள் எல்லாம்அழிந்து போன பேரரசுகளின் கல்லறையில்புரட்சியின் பூப்பூக்கும் காலம்போர்க்களத்திலும் அமைதி சூழும் ஆக்கம்: பவா சமத்துவன் படங்கள்: இணையத்திலிருந்து

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

நடக்கலாம் வாங்க – பகுதி 5 ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.  ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.  புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.  உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில்  நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார்.  * கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார். இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள்.  எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.  * நடப்பதற்குத் தோதான இடம் இல்லை சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது.  ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன்.  இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே. இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.  11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.   “என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.  சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள். கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

குருதி

குருதி

திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான  நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா).  இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும்  மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை,  மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும்,  கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்),  அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும்,  காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று,  குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான்  நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால்  வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச்  செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால்  எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்”  “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு,  ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ”   “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப்  படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம்.  அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி,  சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான  நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல்  போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை  மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில்  பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும்  எவர் மனதிலும் இப்படி மின்னுவதும்  இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

புரட்சியாளர் பெரியார் (2)

புரட்சியாளர் பெரியார் (2)

பெரியார் பக்கம் 20 இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம். https://naarkaram.com/pp3301/ தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர் ஆகிய ஊர்கள் ஆதிதிராவிடர்களுக்கு இழைத்த கொடுமைகள் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதிதிராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில்வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்லமுடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதிதிராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக்குடி மாணவர்கள், அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, ‘வணக்கம் அய்யா’ என்று கும்பிடும் நிலை பெரும்பாலான ஊர்களில் உருவாகிவிட்டது.  நீதியரசர் அ. வரதராஜன், உச்சநீதிமன்றத்தின் முதல் பட்டியல் இன நீதிபதி நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம் உட்பட ஆதிதிராவிட நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட ‘மை லார்ட்’ (My Lord) அல்லது ‘யுவர் ஆனர்’ (Your Honour) என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.  சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு தொடக்கத்தில் கிண்டலும் ஏளனச் சிரிப்பும் பரிசாகக் கிடைத்தன. ஆனால் கால ஓட்டத்தில் அம்முடிவு நடைமுறையாகி விட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவச்சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகாராசமாக, சோமசுந்தரமாகப் பெயரை மடக்கிக் கொள்வதே இக்கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக்கொழுந்துவுக்கு கானாக்காத்தான் ஆணையிட, அதை எதிர்த்துத் தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சம் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K.K.ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீராசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந்தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப்படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இதுதானே பெரியாரின் வெற்றி?!  நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு எதிர்க்கருத்து கொண்டோரும் புறந்தள்ள முடியாதது சுயமரியாதை இயக்கம். இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக்கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக் கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. திரு.மீ.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல் பற்றி, கல்வி அமைச்சரைக் காண, அவர் இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று நான் அவரைக் கேட்டேன். பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார் எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு அது பற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரைகட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாரட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப் பற்றிப் பரவசமானேன்.  அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றி பெற்றதற்கு அடையாளம். திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும்தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும்.  1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் காஞ்சி மாநில மாநாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லாப் பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசுப் பதவிகளில் உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமை பற்றிய பெரியாரின் கொள்கை வென்றது, பெரியார் வென்றார். இலவசக் கல்வி பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் அவர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று கனவிலும் நனவிலும் பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையையும் ‘எல்லார்க்கும் கல்வி’ என்னும் கொள்கைக்கேற்பப் பண்படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத்திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் களையெடுப்பைச் செய்தார். எல்லாச் சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர்க் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக்கும் தொழில் கல்விக்கும் பரவிற்று.  பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக்கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல்படிப்பிற்குத் தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர்களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் பற்றி போவார்கள். இப்போது பல சாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களைக் கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும்போது சொல்லி முடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின்தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்து வெற்றி கண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள் போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்தச் சமவாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும்பயனாகும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கித் தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களைப் பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். தற்போது காவல்துறையில் பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுகின்றனர்.  கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். இம்முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டுவிட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடுபட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண்ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ் மொழி பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்குப் புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார். அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டின் வேறெந்த மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால் – மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் ‘என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். ‘தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும்.’ ஆகவே, பிறர் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவும், எளிதாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துகளை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். ‘மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக்

நவரசா ~ இன்மை

நவரசா ~ இன்மை

திரை விமர்சனம் நவரசா இணையத் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்து, ‘பயம்’ எனும் ரசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான திரை வடிவமாகத் திகழும் படம்தான், ரவீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ள ‘இன்மை’. இஸ்லாமிய கதைப் பின்னணி. என்றாலும், எந்த மதப் பின்னணிக்கும் பொருந்துகின்ற கதைதான். ஒரு செல்வந்த மரைக்காயரின் (ஷிமூர் ரூஸ்வெல்ட்) சொத்துகளை அடையும் பொருட்டுத் திட்டமிட்டு,  இளம்பெண் வஹிதா (முற்பகுதியில் அம்மு அபிராமி பிறகு, பார்வதி திருவோத்து) மூளைக் கட்டியுடன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஒருவரை, காதலன் அன்வரின் (பாவெல் நவகீதன்) நிர்பந்தத்தால் மணந்து கொள்கிறாள். எதிர்பார்த்தபடி மரணம் அவரை நெருங்காத நிலையில், உசைன் ஹோஜா (ராஜேஷ் பாலச்சந்திரன்) என்கிற, ‘ஜின்’னை (குட்டிச்சாத்தான்) ஏவும் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர்.  அதன் பிறகு, தற்போது புதுச்சேரியில் புத்துணர்வு பெற்று மலரும் வஹிதாவின் வாழ்க்கையில், ஃபாரூக் (சித்தார்த்) வர, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்தான் ‘இன்மை’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது என்பது புதிதில்லை என்றாலும், நிகழ்கால சம்பவ ஓட்டத்திற்கு  இடையூறு இல்லாமல், சுவாரஸ்யம் கெடாமல் முடிச்சுகளை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து, கதைக்குள் இறுதிவரை ரசிகர்களை ஈர்த்து உட்கார வைத்துவிடும் இயக்குனரின் உத்தியும், சாமர்த்தியமும் அசாதாரணமானது, அசத்தலுமானது. காலிக்ராபி, டீ கப் பயன்பாடு, ப்ளேசிபா எபெக்ட் போன்றவற்றைப் பொருத்தமாகக் கதையில் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆதார ஸ்ருதியே திரைக்கதையும் நடிப்பில் பார்வதி திருவோத்து, சித்தார்த்தின் அற்புதமான பங்களிப்பும்தான். வசனங்கள்,  காட்சிகள் யாவும் கனகச்சிதம்.  ஃபாருக்கை வஹிதா புரிந்துகொண்ட விதத்தில், பயத்தில் உறைந்து, அவனிடம் பேசும், கெஞ்சும், ஏன் கதறும் ஒவ்வொரு பிரேமிலும் படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார் பார்வதி திருவோத்து. அலட்டலில்லாத அழுத்தமான முகபாவங்களை வெளிப்படுத்தி உள்ளார், சித்தார்த். மரைக்காயருக்கு அடுத்துப் பயம் வஹிதாவுக்குத்தானே தவிர, ரசிகர்களுக்கு இல்லாத நிலையில், ஃபாரூக் அவள் பேசப் பேச மந்திர உச்சாடனம் செய்வதுபோல முணுமுணுப்பது, ஏனோ? முற்பகுதியில் உள்ள முகமது ஃபாருக் ஜாபராகவும் பிற்பகுதியில் வஹிதா முன் நிற்கும் ஃபாருக்காகவும் சித்தார்த்தே இருக்கும் போதும்,  மிக நீண்ட கால இடைவெளி இல்லாத நிலையிலும் வஹிதாவிற்கு மட்டும் இரு வேறு நடிகைகள் ஏனோ? போகட்டும், உருவத்தில் ‘கண்டினியூட்டி’யே அவசியம் இல்லாத நிலையில், அம்மு அபிராமிக்கும் பார்வதிக்கும் இடது கண் புருவத்தில் சிறுவெட்டு ஏனோ? விராஜ் சிங் கோஹில்லின் கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவும் விஷால் பரத்வாஜின் மனதை ஈர்க்கும் இசையும் ஆனந்த் ஜெரால்டின் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்த படத்தொகுப்பும் ஏ. ஆர். மோகனின் அழகுற அமைந்த கலை இயக்கமும் இயக்குனர் ரவீந்திரன் ஆர். பிரசாத்தின் பக்கபலம். வெறும் 30 நிமிடங்களே ஓடும் இக்கதை, முழுநீளத் திரைப்படமாக விரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்றாலும், நிர்ணயித்த வரம்புக்குள் அர்ப்பணிப்பு உணர்வுடன், தொழில் பயத்துடன் அல்ல, அக்கறையுடன் நிறைவாகத் தந்துள்ள ‘இன்மை’ குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம். கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்தோண்டியெடுக்கப்பட்டன.நிழலுருவங்கள்இருளின் பூதங்களெனஅகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன. ஒரு நாட்டின் கொடித்துணியைநெய்வதற்குமுன்எத்தனை சவத்துணிகளைநெய்ய வேண்டியிருக்கிறது. களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்துஆயாசமானாள்ஆகஸ்டு ராணி. செய்கூலி சேதாரத்துடன்ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்அணியுமுன்கழுத்தினைக் களவாடியகள்வர்கள். ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன. எட்டப்பன்களின்பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா. இப்போதுவெள்ளையனே வெளியேறு என்றால்சிரித்தபடியே அவன் சொல்கிறான்:“இந்தியனே வெளியேறு.” கவிதை: நா.வே.அருள் படங்கள்: இணையத்திலிருந்து

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து

மிமி (Mimi)

மிமி (Mimi)

திரை விமர்சனம் மராத்தி மொழியில் வந்த ‘மாலா ஆயி வஹச்சே’ திரைப்படத்தின் மறுஆக்கம்தான், ரோஹன் சங்கருடன் இணைந்து எழுதி, லக்ஷ்மன் உடேக்கர் இயக்கி, க்ருத்தி சனன்,  பங்கஜ் திரிபாதியுடன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் ‘மிமி’. ராஜஸ்தான் மாநிலத்தின் சிறுநகரில், பானுபிரதாப் பாண்டே (பங்கஜ் திரிபாதி) ஓட்டும் வாடகைக் காரில் பயணிக்கும், ஜான் (ஹைடன் வைட்டக்) சம்மர் (ஏவலின் எட்வர்ட்) அமெரிக்கத் தம்பதிகளின் பேச்சினூடே அவர்களின் தேவையைத் தெரிந்து கொண்ட பின்பு, நாட்டியக்காரி மிமி ரத்தோரை (க்ருத்தி சனன்) சந்தித்து, பல முயற்சிகளில் பேசி அவளை, அதற்கு இணங்க வைக்கிறான். மும்பை சென்று நடிகையாகும் லட்சியக் கனவில் இருக்கும் மிமியும், அதற்கு ஒப்புக் கொள்கிறாள். குழந்தையில்லாத அமெரிக்கத் தம்பதிக்கு அவள் ‘வாடகைத் தாயாக’ இருந்து, குழந்தை பெற்றுத் தர வேண்டும். குழந்தைப் பேறுக்குப் பிறகு, அவளுக்கு அவர்கள் இருபது லட்ச ரூபாய் தருவதாக ஒப்பந்தம். பானுவுக்கும் கணிசமாகப் பணம் கிடைக்கும். மிமியின் சினேகிதி ஷாமா (சாய் தமான்கர்) ஆதரவுடன் மருத்துவப் பரிசோதனையும், தொடர்ந்து சிகிச்சையும் ஆரம்பிக்கிறது. டாக்டர் ஆஷா தேசாய் (ஜெயா பட்டாச்சாரியா) மிமி கருவுற்றதை உறுதி செய்ய, அனைவருக்கும் மகிழ்ச்சி. தவணைகளில் அவளுக்குப் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட தம்பதியர், முதல் தவணையை அவளுக்கும், உடனிருந்து பார்த்துக் கொள்ள பாண்டேவுக்குக் கொஞ்சம் பணமும் தருகின்றனர். இந்த விவகாரம், மிமியின் அப்பா மான்சிங் ரத்தோர் (மனோஜ் பாவா) அம்மா ஷோபா ரத்தோர் (சுப்ரியா பதக்) இருவருக்கும் தெரியாது. படத்தில் நடிக்க மும்பை செல்வதாகக் கூறிவிட்டு, ஷாமாவின் வீட்டிற்குச் சென்று தங்குகிறாள் மிமி. கரு வளர ஆரம்பிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த தம்பதியர் அவ்வப்போது வந்து,  அவளை சிகிச்சை எடுக்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று காட்டுகின்றனர். அப்படி ஒரு முறை சென்றபோது, அவளைப் பரிசோதித்த டாக்டர் ஆஷா சொன்னதைக் கேட்டு, அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். கலங்கி நின்ற மிமி, அடுத்து அமெரிக்கத் தம்பதியர் சொன்னதைக் கேட்டுத் துடிதுடித்துப் போகிறாள். பாண்டேவும், ஷாமாவும் திக்பிரமையாகி நிற்கின்றனர்.  இதன் பின்னர், மிமி குழந்தை பெற்றாளா, அவளது நடிகையாகும் கனவு நிறைவேறியதா, மிமியின் பெற்றோர்கள் அதை அறிந்தார்களா, பானுபிரதாப்  பாண்டேவின் நிலை, ஷாமாவின் ஆதரவு தொடர்ந்ததா என்கிற கேள்விகளுக்கெல்லாம், விறுவிறுப்பும் சுவாரசியமான விடைகள்தான் ‘மிமி’ படத்தின் பிற்பகுதி. ஆட்டமும் பாட்டமுமாக மும்பை திரைப்பட நடிகையாகும் இலட்சியக் கனவுடன் மிமி, கருவுற்று தாய்க்குரிய  அனுபவத்தைப் பெறும் மினி, டாக்டர் ஆஷாவும் தொடர்ந்து அமெரிக்கத் தம்பதியரும் சொன்னதைக் கேட்டுத் துடித்துத் துவளும் மிமி, பின்னர் எதிர்பாராத திருப்பத்தால், பேரலையில் இருந்து தப்பிப் பிழைத்துக் கரைசேரும் நிம்மதியும், நெகிழ்ச்சியுமான மிமி, நான்காண்டுகளுக்குப் பிறகு தன்னைச் சந்திக்கும் அமெரிக்கத் தம்பதியரிடம் வெடித்துச் சீறும் மிமி என்று, நடிப்பில் பன்முகத் தன்மையுடன் மிளிர்கிறார், க்ருத்தி சனன். ‘இருதலைக் கொள்ளி’ பானுபிரதாப் பாண்டேவாக, பங்கஜ் திரிபாதி அட்டகாசமாக நடித்து அசத்தியுள்ளார். தோழி சாய் தமன்கர், பெற்றோர் மனோஜ் பாவா, சுப்ரியா பதக், அமெரிக்கத் தம்பதியர் ஹைடன் வைட்டக், ஏவலின் எட்வர்ட், தத்தம் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். படத்தின் முதல் காட்சியாக விரியும் ஷ்ரேயா கோஷல் பாடிய ‘பரம் பரம்  பரமசுந்தரி’ தாளமிட்டு ஆட உந்தித் தள்ளுகிறது, ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசை, கண்கவர்  ஒளிப்பதிவு ஆகாஷ் அகர்வால். மணிஷ் பிரதான் படத்தொகுப்பு. படத்தின் பின்பகுதியில் சற்று அயர்ச்சியைத் தரும் தொய்வைச் சரி செய்திருக்கலாம். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனையில், இவ்விதமான தவறு ஏற்பட வாய்ப்பு இருக்குமா என்பதும், வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் எதிர்பாராதவை நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் விதம் குறித்துக் குறிப்பிடப்படாமல் போவதும், திரைப்படமாக இருந்தாலும்கூட ஏற்கும்படியாக இல்லை. என்றாலும், உணர்வுபூர்வமான இக்குடும்பச் சித்திரத்தில் க்ருத்தி சனன், பங்கஜ் திரிபாதியின் நேர்த்தியான பங்களிப்பிற்காக ‘மிமி’யை அவசியம் பார்க்கலாம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

தண்டச்சோறு தின்னும் ஆசிரியர்கள்

[குழந்தைகளின் கல்வி நலனில் கவலையும் அக்கறையும் கொண்டு, ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கான கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை சுவடு இதழ் மனதாரப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரை அவர்களைக் குறித்தது அல்ல.] ‘உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதனால் பல வருடங்கள் பின் தங்கிய சூழலுக்குப் போய் விட்டோம்’ என்று யூனிசெஃப் குழந்தைகள் அமைப்பு உட்பட பல தனியார் அமைப்புகள் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வழியே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்கும் பொருந்தும். கூடுதலாக இங்கு தனியார் மயமும் தலைவிரித்தாடுகிறது. பெண் குழந்தைகள் திருமணம் எல்லா மாவட்டங்களிலும் நடப்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியாவது தொடர்கிறது. அதைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆசிரியைகளைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. நமது சுவடு இதழ் A3 ஆசிரியர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்தரங்கில், இவற்றையெல்லாம் விரிவாக விவாதித்து அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.  அடித்தட்டு மக்களின்  பிரதிநிதியாகவும், கல்வி வரி, தொழில் வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பலப்பல வரிகளைக் கட்டி வரும் சாதாரண குடிமகன்கள் சார்பாகவும், கல்வி மீதும் எதிர்காலத் தலைமுறை மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்டவர்களாகவும் இங்கு சில நியாயங்களைக் கேள்விகளாக முன் வைக்கிறோம்.  அரசுப் பள்ளி ஆசிரியர்களே, வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க வெட்கமாக இல்லையா? தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முழுவதுமே ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இன்று வரை ஒவ்வொரு அரசுப்பள்ளி ஆசிரியரும் பல லட்சங்களை சம்பளமாகப் பெற்றுள்ளீர்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ‘உறவினர் வீடே என்றாலும் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, அது தன்மானத்துக்கு இழுக்கு’ என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களோ  கடந்த 15 மாதங்களாக  சும்மா இருந்து கொண்டே சம்பளம் வாங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  பல்லாயிரம் ஆசிரியர்கள் பணி புரியும் நமது கல்வி அமைப்பில் மிகச் சொற்ப விழுக்காடு ஆசிரியர்கள்தான்  குழந்தைகளுக்காக ஏதாவது ஒரு வகையில் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றனர். மீதமுள்ள பெரும்பான்மை ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் அரசு வழங்கும் சம்பளத்தைக் கொஞ்சமும் கூச்சமின்றி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் சொந்தமாக  ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கொண்டும் விவசாயம் பார்த்துக் கொண்டும்  வேறு ஏதாவது  சொந்தத் தொழில் செய்துகொண்டும் ஏதோ ஒரு வகையில் இன்னும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு அரசு தரும் மாத ஊதியத்தை ஒரு பைசா குறையாமல் வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.  ஆனால் மறுபக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பொது மக்கள், வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமே இல்லாமல் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலப்பல சிக்கல்களைச் சந்தித்து வரும் அந்த மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்கள் வாங்கும் சம்பளம். ஆனால், அந்த மக்களின் குழந்தைகளது கல்வி குறித்து அக்கறை எதுவுமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு, ‘அரசு பள்ளியைத் திறக்கவில்லை, அரசாங்கம் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்’ என்று சொல்லி அரசின் மீதே பழியைச் சுமத்தி தப்பித்துக் கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த உணர்வே இல்லாமல் கற்பித்தல் பணியையே அவமதிக்கும் இந்த ஆசிரியர்களுக்கு தங்கள் பணி குறித்த பொறுப்புணர்வும் சொரணையும் என்று வரும்? தண்டச்சோறு தின்னும் ஆசிரியர் சங்கங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும், பதவி உயர்வு, சம்பளப் பற்றாக்குறை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு போன்ற தங்களது சொந்த நலன் சார்ந்து அரசை எதிர்க்கும், போராட்டங்கள் நடத்தும் ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம் இந்தக் கல்வியாண்டாவது பள்ளிகளைத் திறக்க எங்காவது குரல் கொடுத்தீர்களா? முதல்வரிடம் நல்ல பேர் வாங்க கொரோனா நிதியை (குழந்தைகளின் கல்விக்காக வாய் திறக்காத ஆசிரியர்களிடம் இருந்து) வசூலித்து அரசிடம் கொடுக்கத் தெரிந்த சங்கங்களுக்கு, தங்கள் வாழ்வதாரத்திற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளது கல்வி நலன் பேணப்பட வேண்டும் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா?  குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையென்றால் உங்களுக்கு வேலை ஏது? சம்பளம் ஏது?  உங்கள் சங்கங்களின் உறுப்பினராக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வகுப்பறைகளில் பயின்ற லட்சக் கணக்கான குழந்தைகள் இப்போது எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? குழந்தைத் தொழிலார்களாகப் போய்விட்டனரா?  திருமணம் செய்துகொண்டு போய்விட்டனரா? போன்ற தகவல்கள் ஏதாவது தெரியுமா? அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வர ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா?  கொரோனா சூழல் இப்படியே நீடித்தால், அரசு உங்களுக்கு வாழ்நாள் முழுக்க தண்டச்சோறு போட்டுக்கொண்டிருக்கும் என்ற கனவில் மிதக்கிறீர்களா? இதனால் அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும்  அபாயம் உள்ளதை உணர முடியவில்லையா? இந்தச் சூழலில் மாற்று வழிகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கும் பொறுப்பு உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லையா? உழைக்காமல் ஓசிச்சோறு தின்ன உங்களுக்குக் கூசவில்லையா?  கல்வி அதிகாரிகளே, நீங்கள் பூம்பூம் மாடுகளா? ஆசிரியர்களாவது கற்பித்தல் பணியைச் செய்கின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை முன்னேற்றத் திட்டமிடும் இடத்தில் இருக்கும் நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியை மட்டும் சுற்றறிக்கைகளாக அனுப்பிக்கொண்டு இருப்பீர்கள்? ஆசிரியர்களை விட ஒன்றிரண்டு மடங்கு அதிக ஊதியம் பெறும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்களும் கடந்த 15 மாதமாக வேலை செய்யாமல்தானே சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லைகளில் எத்தனைக் குழந்தைகள் வேலைக்குப் போய், அவர்களின் கல்வி நாசமாகப் போய்விட்டது என்று தெரியுமா? மாநிலமெங்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை நிர்வகிக்கும் அலுவலுக்காகத்தானே அத்தனை சம்பளமும் பெறுகிறீர்கள்? கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? இன்னும் எத்தனைக் காலம் கொரோனாவைக் காரணம் காட்டி பள்ளிக்கூடங்களை மூடி வைத்து, குழந்தைகளைக் கற்றலில் இருந்து விலக்கி வைத்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? படிக்காத குழந்தைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகம் அச்சடிப்பது எதற்காக? கமிஷன் அடிக்கவா? பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்ற எந்த விவரமும் இல்லை. இந்தச் சூழலில் மாற்று வழி குறித்து கொஞ்சமாவது நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆட்சியாளர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சொல்வதற்குத் தலையாட்டும் பூம்பூம் மாடுகளா நீங்கள்?  லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த ஆண்டு தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்லவா? கல்வித் தொலைக்காட்சியில், பாடங்களைத் தமிழ் வழியில் மட்டும்தானே ஒளிபரப்புகிறீர்கள்? எனில், ஆங்கில வழியில் சேர்ந்த மாணவர்களின் நிலை என்ன? இதுகூடத் தெரியாமல்தானே அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு இருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் கல்வித் தொலைக்காட்சி பாடத்திட்டத்தை எழுதச் சொல்லி சுற்றறிக்கை அனுப்புகிறீர்கள்? சம்பளம் பெறுவதற்கு உங்களுக்குப் பதிவேடுகள் வேண்டும். குழந்தைகள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? பள்ளிகள் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் உங்களுக்கு என்ன? 8ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது இந்த வருடம்தான் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. அது கல்வி உரிமைச் சட்டம் 2010-லிருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் 9 , 10 , 11 வகுப்பு முடித்து,  கல்விக் கட்டணம் கட்ட முடியாததால் தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமலும் அரசுப் பள்ளியில் சேர முடியாமலும் தத்தளிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பற்றிய தரவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினீர்களா? இந்தப் பிரச்சினை குறித்து அரசுக்கு ஏதேனும் வழிகாட்டினீர்களா?  கொரோனா காலத்தில் எத்தனைக் குழந்தைகள் கல்வியை விட்டு விலகிச்சென்றுவிட்டார்கள் என்றும் அவர்களை எப்படி மீட்டு பள்ளிக்குள்  கொண்டுவருவது என்றும் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இந்தப் பணிகள் எல்லாம் நடக்கிறதா இல்லையா என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? எந்தப் பணியும் செய்யாமல் கல்வித் துறையின் வட்டார, ஒன்றிய, மாவட்ட, மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் எதற்காக இருக்கிறீர்கள்? அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் உறங்குகிறதா?  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்துக்கும் அடிப்படை கல்வி வாய்ப்புகள்தான். ஆனால் அது தற்போது எதிர்த்திசையில் பயணிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அவர்களே, தமிழக முதல்வர் அவர்களே, கடந்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே கொரோனா தாக்கம், பள்ளிகள் மூடல் என்ற நிலை இருந்ததே? அது அடுத்த வருடமும் தொடர்ந்தால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் ஏன் உங்களிடம் இல்லாமல் போனது? அது கூடப் பரவாயில்லை. உழைக்கும் மக்களிடமிருந்து வாங்கும் வரிப்பணத்தில் ஆசிரியர்களை வேலையின்றி உட்கார வைத்து ஓசிச் சம்பளம் கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கொரானா நீடிக்கும் எனத் தெரியாத சூழலில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கல்வியிலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க வேண்டாமா? இதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டாமா? சிறந்த கல்வியாளர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டாமா?  குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல், தங்கள் மன உணர்வுகளை, அழுத்தத்தை வெளிப்படுத்த வழியில்லாமல் தவறான  நடத்தை மாற்றங்களுக்கும் உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கோணத்தில் பள்ளிக் கல்வித்துறை இப்பிரச்சினைகளை அணுகியதா? சமூகத்தைப் பல வருடங்கள் பின்னுக்கு தள்ளும் ஆபத்தை உருவாக்கும் சூழலையே தற்போது வளர்த்து வருகிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை இழந்து தங்கள் உயிரையே இழந்து வரும் செய்திகள் கூட வருகின்றன. இணையவழிக் கல்வி பெருகி வருகிறது. இது நம் எதிர்கால சந்ததிக்கு நல்லதல்ல. பள்ளிகள் மூடல் தொடர்ந்தால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் அருகிவிடும். பள்ளிகள் வெறும் பாடம் கற்பிக்கும் இடமல்ல, குழந்தைகளின் நடத்தை மாற்றங்களைச் செதுக்கும் சிற்பக் கூடங்கள். தயவு செய்து பள்ளிகள் திறப்பில் மாற்று முறைகளைக் கையாளுங்கள்.  எங்கே போயின எதிர்க்கட்சிகள்?  பள்ளிகள் நிரந்தரமாக மூடிக் கிடக்கின்றன. குழந்தைகளின் வாழ்க்கை வீணாகிறது. ஆசிரியர்கள்  வேலையே செய்யாமல் ஒன்றரை ஆண்டு காலமாக

உலகை உலுக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் போர்கள்

உலகை உலுக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் போர்கள்

சத்தமின்றி ஒரு செயலி  வரலாறு மற்றும் நவீன தத்துவவியல் சிந்தனையாளர் யுவல் நோவா ஹராரியின் புத்தகங்களில் ‘ஹோமோ டியஸ்’ முக்கியமானது. எதிர்கால மனித குலத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து அதில் பேசுகிறார். வருங்காலத்தில் நடக்கும் போர்கள் போர்க்களங்களில் நடக்கப் போவதில்லை; கம்ப்யூட்டர் சர்வர்களில்தான் நடக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார். தொழில் நுட்பத்தில் தேர்ந்த நாடு போர்த்திறனிலும் தேர்ந்து விளங்கப் போகிறது என்று வாதிடுகிறார். போலவே கெவின் பெனடிக்ட் எனும் போர்முறை உத்தியாளர், வழமையாக போர் நிகழும் களங்களில் நாளைய போர்களுக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்க்கிறார்: நிலம், கடல், வானம், விண்வெளி, தகவல் தொழில் நுட்பம்  நாளைய போர்கள் மேற்சொன்ன ஐந்து பரிமாணங்களில் நிகழப் போகிறது. போலவே, போர்களில் வெற்றி என்பதன் அர்த்தமும் மாறி விட்டிருக்கிறது. பண்டைய காலங்களில் வேறொரு நாட்டுடன் போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னர்கள் அந்த நாட்டின் தங்கம், வெள்ளி, தானியங்கள் போன்றவற்றைக் கொள்ளை அடித்து எடுத்துக் கொண்டு போவார்கள். இன்றைக்கு தங்கம் அல்லது தானியங்கள் வேண்டி எந்த நாடும் போரைத் துவங்கப் போவதில்லை. ஆனால் தகவலுக்காக போர்கள் துவங்கப்படும் அபாயம்தான் இன்று இருக்கிறது. தகவல் அதிகமாகக் கைவசம் இருக்கும் நாடுதான் உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த நாடாக இருக்கப் போகிறது. தங்கத்தை, தானியங்களை பொத்திப் பாதுகாத்து, அவற்றைச் சுற்றி அரண் அமைத்து காத்துக் கொண்டிருந்தது போல தகவல் பொதிந்து கிடக்கும் சர்வர்களை அரசாங்கங்கள் பொத்திப் பொத்தி பாதுகாக்கப் போகிறார்கள். இதுதான் எதிர்காலம்.  அந்த எதிர்காலத்தின் சிறியதொரு டிரெய்லர் சமீபத்தில் நமக்குக் காட்டப்பட்டது. இஸ்ரேல் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன், அந்நாட்டின் தொழில் நுட்ப நிறுவனம் NSO உருவாக்கிய மென்பொருள் செயலி ‘பெகசஸ்’ நமக்கு அந்த எதிர்காலத்தைச் சற்றே திறந்து காட்டி இருக்கிறது. அந்த எதிர்காலம் ரசிக்கத்தக்கதாக இல்லை. இந்த பெகசஸ் செயலியை ஒரு நபரின் மொபைல் ஃபோனில் அவர் அனுமதி இன்றியே நிறுவி விடலாம். சம்பந்தப்பட்ட நபர் எந்த லின்க்கையும் கிளிக் செய்யத் தேவையில்லை. ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் எதுவாக இருப்பினும் ஒரே ஒரு வாட்சப் மிஸ்டு கால் போதும். பெகசஸ் அவர் ஃபோனுக்குள் புகுந்து கொண்டு விடும். புகுந்த உடனேயே அந்த மிஸ்டு காலின் தடயத்தைக் கூட அதுவே அழித்தும் விடும். இதற்கு Zero-Click Attack என்று பெயர். ஃபோனை உருவாக்கிய கம்பெனிகளுக்கே தெரியாத ஓட்டைகள் பெகசஸ்சுக்கு தெரியும். அதன் வழியே வசதியாக உள்ளே புகுந்து கொண்டு விடும். ஃபோன் உள்ளே நுழைந்ததும் அந்த ஃபோன் வழங்கும் அதி உயர்ந்த உரிமைகளைத் தனதாக்கிக் கொண்டு விடும். இதற்கு Root Privileges என்று பெயர். உள்ளே வசதியாக உட்கார்ந்த நொடியில் இருந்து அந்த ஃபோனில் உள்ள கால்கள், எஸ்.எம்.எஸ்கள், ஈமெயில், ஜிபிஎஸ், இணையப் பயன்பாடு என்று எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கும். அந்த ஃபோன் வைத்திருப்பவருக்கு அப்படி நடப்பதே தெரியாமல் இதனைச் செய்ய இயலும். ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவலில் இப்படிப்பட்ட ஒரு செயலியின் பயன்பாடு பற்றிய குறிப்புகள் நிறைய வரும்.  பெகசஸ் இதோடு கூட நிறுத்தாது. தேவைப்படும் பொழுது தானாகவே காமிராவை இயக்கி உங்களைப் படமெடுத்துக் கொள்ளும். மைக்ரோஃபோனை இயக்கி நீங்கள் வீட்டிலோ ஆபீசிலோ பேசுவதை ரெக்கார்ட் செய்து அனுப்பி விடும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களா, நடக்கிறீர்களா, எந்தத் திசையில் செல்கிறீர்கள் என்றுகூட சொல்லி விடும். தகவல் பாதுகாப்புக்குப் பெயர் பெற்றதாகப் பீற்றிக்கொள்ளும் ஆப்பிள் ஐஃபோன் கூட பெகசஸ்சின் வலையில் இருந்து தப்பிக்க முடியாது.  பெகசஸ்சின் இப்படிப்பட்ட அதி தீவிர செயற்பாடு காரணமாக, அந்தச் செயலியை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே தாங்கள் விற்பதாகவும் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் இந்தச் செயலியை விற்றதில்லை எனவும் இஸ்ரேலிய அரசு தெரிவித்திருக்கிறது. அது கூட தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்க அல்லது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மட்டுமே பயன்பாட்டு லைசென்ஸ் தருவதாகவும், வேறு அரசியல்-சார் காரணங்களுக்கு உளவு பார்க்க இந்தச் செயலியைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது, இஸ்ரேலின் கூற்று உண்மை எனில், தீவிரவாதச் செயல்களைக் கண்காணிக்க வேண்டி வாங்கிய செயலியை, தங்களது அரசியல் லாபங்களுக்கு பாஜக பயன்படுத்தி இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேசவிரோதமும் கூட. ஆனால் எந்த அலட்டலும் இன்றி இந்திய அரசு இதனைச் செய்து விட்டு, எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.  நிற்க, இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்திய அரசைச் சாடுவதல்ல. அதனை நிறைய பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தத் தொழில் நுட்பத்தின் வசீகரம் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதுதான்.  பெகசஸ் ஒரு பனிப்பாறையின் முனைதான். இப்படிப்பட்ட முயற்சிகளை பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், மற்றும் ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் தொழில் நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டே வருகிறார்கள். 2007ல் எஸ்தோனிய நாட்டு அரசு ஒரு போர் நினைவுச் சின்னத்தை இடம் மாற்றும் முயற்சிகளில் இறங்கியது. இது சோவியத் காலத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால் ரஷ்யாவுக்குக் கோபம் வந்தது. அந்நாட்டு மக்கள் இணைந்து எஸ்தோனியா மீது மாபெரும் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இது படைகளின் தாக்குதல் அல்ல. ரஷ்ய ஹேக்கர்கள் திட்டமிட்டு நடத்திய இணையத் தாக்குதல். இதில் எஸ்தோனியாவின் ஒட்டு மொத்த இணையமும் ஸ்தம்பித்து நின்றது. நாடாளுமன்றம் முதல் அமைச்சரவை வரை யாரும் எதுவும் செய்ய இயலாமல் போனது. ‘நாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை,’ என்று ரஷ்யா கற்பூரம் அணைத்தது; ஆனால் இதில் ரஷ்யாவுக்குத் தொடர்பில்லை என்பதைக் கேட்டு புடின் கூட கொஞ்சம் சத்தமாகச் சிரித்திருப்பார்.  2010ல் ஈரானின் அணுசக்தி நிலையங்களின் கணினிகளில் வைரஸ் போன்ற ஒரு செயலி ஊடுருவியது. அது அணுசக்திக் கருவிகளைத் தாறுமாறாகச் செயல்பட வைத்து பிரச்சினைகளை உருவாக்கியது. பின்னர் அணு மின் நிலையக் கணினிகளில் இருந்து தகவல்களைத்  திருடி ‘தேவைப்படுபவர்களுக்கு’ அனுப்பியது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பது உறுதியானாலும் அந்த வைரஸ் செயலியை உருவாக்கியது அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. ஆப்பிள் டிவியில் வெளியாகி இருக்கும் ‘தெஹ்ரான்’ எனும் இணையத் தொடர் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட திரில்லர் கதைதான்.  அப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்கா மீதே ரஷ்யாவின் தாக்குதல் நடந்தது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில் சர்வரை ஹேக் செய்து தகவல்களைக் கசிய விட்டு அவருக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தார்கள். அது தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தாக்குதல் சதித் திட்டத்தில் டிரம்பின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறைய புகார்கள் எழுந்து, அது தொடர்பான விசாரணைகள் நடந்தாலும் அறுதியாக எந்த விஷயமும் வெளிவரவில்லை.  போலவே, உக்ரைன் மின் நிலையங்கள், இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பு சர்வர்கள் என்று அதற்குப் பின் பல்வேறு இணையத் தாக்குதல்கள் இதுவரை நிகழ்ந்து விட்டிருக்கின்றன. இவற்றுக்கு பயந்தும், வேறு காரணங்களுக்காகவும் சீனா போன்ற நாடுகள் அனைத்து இணைய சர்வர்களையும் தங்கள் தேச எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றன. அப்படி செய்திருப்பதன் மூலம் இணைய நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்து தங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைத் தடுக்க முடிகிறது. ஒவ்வாத என்றால் தீவிரவாத அல்லது குற்ற நடவடிக்கைகள் அல்ல. எண்பதுகளில் தியனென்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டி போராட்டங்களைத் துவக்கிய கல்லூரி மாணவர்கள் மீது சீன அரசு ராணுவ டாங்கிகளை ஏற்றி அவர்களையும் அந்தப் போராட்டத்தையும் நசுக்கியது. அந்த சம்பவம் யாருக்கும் தெரியக் கூடாது, அது பற்றி பற்றி யாரும் பேசக்கூடாது என்று கவனமாகப் பாதுகாக்கிறது. போலவே தலாய் லாமாவுக்கு சீனா மற்றும் திபெத்தில் எந்த ஆதரவும் இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறது. சீன எல்லைக்குள் இருந்து கொண்டு நீங்கள் ‘தியனென்மென் சதுக்கப் போராட்டம்’ அல்லது ‘தலாய் லாமா’ என்று இணையத்தில் தேடினால் தேடிய ஓரிரு மணிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உங்களைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச் எனும் வரலாற்று ஆய்வாளர் உண்மையாகவே சீனா சென்று ஒரு கிராமத்தில் அறை எடுத்து இதனை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் தனது கம்ப்யூட்டரில் தேடிய இரண்டு மணி நேரத்தில் நிஜமாகவே நான்கு பேர் கதவைத் தட்டி விசாரித்தார்கள். இந்த சம்பவத்தை ‘திபெத்… திபெத்…’ எனும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார்.  இப்படிப்பட்ட உளவு அல்லது கண்காணிப்பு வசதிகள் சீனா போன்ற சர்வாதிகார நாட்டுக்கும் இன்றைய இந்தியா போன்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரசுகளுக்கும் தேவன் தந்த வரம்தான்.  தகவல் தொழில் நுட்பத்தின் வசீகரங்களும் ஆபத்துகளும் தனித்தனியானவை அல்ல. சொல்லப் போனால் பார்க்கும் பார்வையில்தான் தொழில் நுட்பத்தின் சாத்தியக் கூறு இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ்சில் ‘கறுங்கண்ணாடி’, Black Mirror, என்ற சிறுந்தொடர் ஒன்று கிடைக்கிறது. இதில் இன்றைய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் காணக்கிடைக்கின்றன. அறிவியல் புனைவு என்ற வகையில் இந்தக் கதைகள் வந்தாலும் உண்மைக்கு வெகு அருகில் இவை இருப்பது சற்றே நம்மை தொந்தரவு செய்கிறது. விபத்தில் கணவனை இழந்த இளம் மனைவியிடம் அவனைத் திரும்பவும் ‘உருவாக்க’ ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தை அணுகுகிறாள். அந்த இளைஞனின் சமூக ஊடகப் பதிவுகள், அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள், அவன் ஃபோன் உரையாடல்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை வைத்து அவனது ‘குணாதிசயங்களை’ அந்த நிறுவனம் மீளுருவாக்குகிறது. அவனது பல்வேறு புகைப்படங்களை வைத்து அவனைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குக்குகிறது. அவனது குணாதிசயங்கள் கொண்ட ‘செயலியை’ அந்த ரோபோவுக்குள் செலுத்தி விட்ட உடன் அவள் கணவன் ‘தயார்’!  அப்படி உருவாகும் கணவன் ஒரிஜினல் கணவனைப் போலவே பேசுகிறான், பழகுகிறான். சிரிக்கிறான். ஆனால் ஏதோ ஒரு குறை. இயற்கைக் கணவனிடம் இருந்த சில துர்குணங்கள் அந்த செயற்கைக் கணவனிடம் செலுத்தப்படாததால் எப்போதுமே நல்லவனாகவே நடந்து கொள்கிறான். அது அவளை ஆயாசப்படுத்துகிறது.  இப்படித்தான் நமது இணைய நடத்தைகள் நமது குணாதிசயத்தை கம்ப்யூட்டர் சர்வர்களுக்குக் கடத்துகின்றன. பெகசஸ்