மார்க்சின் தோழன்

மார்க்சின் தோழன்

ஏங்கெல்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் பிரெடரிக் ஏங்கல்ஸ் மார்க்சிய மூலவர்களில் ஒருவர். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் என்ற இரட்டையர்கள் இல்லாது மார்க்சியம் இல்லை. ஒரு திட்டவட்டமான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் இருவரும் பணியாற்றினர். அந்த இரு மேதைகளும் வாழ்நாள் தோழர்களாய் இணைந்து நவீன கம்யூனிச இயக்கத்தின் முதல் சிற்பிகளாய்/மூலவர்களாய் விளங்கினர். மார்க்சைவிட இளம் வயதிலேயே, தனது 24ஆம் வயதிலேயே இன்றும் போற்றப்படும் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற நூலை எழுதியதில் தொடங்கி, தனது இறுதிக்காலத்தில் மார்க்ஸின் மூலதனத்தை வெளியிடுவது வரை ஏங்கல்ஸ் மார்க்சிய ஞானரதத்திற்கு அளித்திட்ட செல்வங்கள் ஏராளம். ஏங்கல்ஸின் முழுப் படைப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்று. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் கூட்டு மேதமைகளுக்குள் நுழைந்து பயணப்படாத எவரும் ஒரு மார்க்சியவாதியாக இருக்கமுடியாது. இவர்களது நட்பைப்பற்றி லெனின் கூறும்போது, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரிடையே நிலவிய உறவு, முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது என்கிறார். ஏங்கெல்ஸ் என்றும் மார்க்ஸின் தோழன் என்றே அறியப்படுகிறார். பிரெடரிக் ஏங்கல்ஸ் 1820ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி பார்மன் என்ற இடத்தில் பிறந்தார். உப்பர்டால் என்றழைக்கப்பட்ட பார்மன், ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூர். பணக்கார தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், உழைப்பாளிகளின் ஏழ்மையைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் இப்பகுதியில் நிலவிய மத ஆதிக்கத்தை – அதன் போலித்தனத்தை வெறுத்தார். இளமையிலேயே அவர் மத எதிர்ப்பாளராக விளங்கினார். இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியத்தை ஆர்வத்தோடு கற்றவர். ஜெர்மனியை ஆண்ட நான்காம் பிரெடரிக் வில்லியம் என்ற சர்வாதிகாரி, கருத்துச் சுதந்திரத்தை அறவே இல்லாமல் இருக்கச் செய்தார். இதன் காரணமாக மதம் சார்ந்த கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் வலுவாகச் செயல்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மதத்தையும் அரசனையும் எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதத் தொடங்கினார். அவரது தொடக்கக் காலத்தில் அவற்றைக் கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதைகளில் விடுதலைபற்றிய கருத்துக்களிருந்தன. 1839ஆம் ஆண்டு ‘உப்பர்டால் கடிதங்கள்’ என்ற தலைப்பில் கடிதங்களை எழுதினார். இவை அவர் மதத்தின் பிடியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. டேவிட் ஸ்ட்ராஸ் எழுதிய ஏசுவின் வாழ்க்கை என்ற நூல், விவிலியம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது அல்ல என்றும் அது ஆரம்பக்காலக் கிறிஸ்துவக் குழுக்களில் தோன்றிய சில தொல்கதைகளின் தொகுப்பு என்றும் குறிப்பிட்டார். இந்நூல்தான் ஏங்கல்ஸின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானியான ஹெகலின் உலகம், பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் எண்ணம் அல்லது கருத்துதான் முக்கியம் என்பதிலிருந்து ஏங்கல்ஸ் வேறுபட்டார். அதேநேரத்தில் ஹெகல் பயன்படுத்திய இயங்கியலை ஏற்றுக்கொண்டு அதை சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தினார். எல்லாப் பொருள்களும் மாறுகின்றன; காலாவதியானவற்றையும் அறிவுக்குப் பொருத்தமற்றவற்றையும் அகற்ற வேண்டும் என்ற இயங்கியல் கருத்துகளைக் கொண்ட இடதுசாரி மனோபாவம் கொண்ட இளம் ஹெகலியர்களின் தொடர்பு ஏற்பட்டது. மதம் பற்றிய இளம் ஹெகலியர்களின் விமர்சனம், அரசியல் பற்றிய கருத்துகள் ஏங்கல்ஸை அவர்கள்பால் ஈர்த்தன. இவ்வாறாக நாத்திகவாதியாக, இயங்கியல்வாதியாக மாறிய ஏங்கல்ஸ் ‘புனிதக் குடும்பம்‘ (1845), ‘ஜெர்மானியக் கருத்தியல்‘ (1864) ஆகிய இரு நூல்களை மார்க்ஸுடன் இணைந்து எழுதினார். புனிதக் குடும்பம் என்பது புருனோபார் என்பவரையும் அவரது சகாக்களையும் விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூல். இந்நூலில் ஹெகலின் கருத்து முதல்வாதம் விமர்சிக்கப்படுகிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் விளக்கப்படுகிறது. நூலில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றியும் தத்துவத்தின் வரலாறு பற்றியும் பேசப்படுகிறது. நியாயவாதிகளின் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரையும் கொள்கை அறிக்கை தயாரிக்கும்படி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கம்யூனிசத்தின் அடிப்படைகள் என்ற துண்டுப் பிரசுரத்தினை கேள்வி – பதில் அடிப்படையில் ஏங்கல்ஸ் தயார் செய்தார். இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் தயார் செய்தார். அந்த அறிக்கையினை “பாடல்களின் பாடல்” என்றழைத்தார் ஸ்டாலின். மார்க்ஸால் எழுதப்பட்ட தத்துவத்தின் வறுமை என்ற நூலிற்கு ஏங்கல்ஸின் மகத்தான பெரும் பங்கு உண்டு. சொத்து என்பதே திருட்டு என்று கூறிய பிரெஞ்சு சோசலிஸ்ட் புருதானை விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூலிது. பல நாடுகளிலிருந்து மார்க்ஸின் கொள்கைகளை விளக்கிப் பல நூல்கள் வெளிவந்தபோதிலும் மார்க்சியத்தை விளக்கி முதன்முதலாக எழுதப்பட்ட ‘டூரிங்கிற்கு மறுப்பு‘ என்ற நூல், ஏங்கல்ஸின் நூலாகும். இந்நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில் டூரிங் என்ற தத்துவவாதி மார்க்ஸின் கருத்துகளைத் திரித்துக்கூறியபோது அவரை எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதிய நூலாகும். டூரிங், அடிப்படையில் கருத்து முதல்வாதி. சில எண்ணங்களின் அமைப்புகள்தாம் உலகிற்கே அடிப்படை என்றதை மறுத்து வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் விதிகள், சோசலிசம் பற்றிய பல விளக்கங்களை நூலில் தருகிறார் ஏங்கல்ஸ். மார்க்சியம் கற்க விரும்புவர்களுக்கு இது விலைமதிக்க முடியாத கையேடெனலாம். மார்க்ஸின் மூலதனம் பற்றி என்ற சிறு நூலில் அதன் சுருக்கத்தை வெளியிட்டார். இதைப் படிப்பதன்மூலம் மார்க்ஸின் மூலதனத்தின் மூன்று பாகங்களில் உள்ளதை அறிந்துகொள்ள முடியும். பாரீசில், கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றித் துயரப்பட்டுக்கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869 சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870, செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் ஏங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். ஏங்கல்ஸ் அரசாங்கம் பற்றிக் கூறும்போது “வர்க்கங்களாக சமூகம் பிரியும்போது அரசாங்கம் ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள வர்க்கத்தின் கருவியாகவே மாறுகிறது” என்கிறார். “அரசு பொருளாதாரத் திசையை மாற்றிவிடுகிறது. அரசு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. ஆனால், அதன் நோக்கம் பொருளாதார விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதுதானே ஒழிய, தீர்மானிப்பதல்ல. இது ஒரு வகையான இயங்கியல் உறவு ஆகும்” என்று விளக்கமளிக்கிறார். விவசாய வர்க்கத்துக்குள்ளாக சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் எனப் பல பிரிவுகள் உள்ளன. கூலி விவசாயிகள் தனியானவர்கள். இவர்களில் பாட்டாளி வர்க்கக் கட்சி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை அணுகவேண்டும். ஏனென்றால் கையளவு நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இயந்திரமயமாகும்பொழுது இந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இவர்கள் பாட்டாளிகளாக மாறும் தன்மை உள்ளவர்கள். ஆனால் பரம்பரையாக இவர்களிடம் ஊறியிருக்கும் சொத்துரிமை என்ற உணர்வு, இவர்களை நிலத்துடன் பிணைத்து வைத்துவிடுகிறது. இவர்களைக் கட்டாயப்படுத்தி நிலத்தை விட்டுவிடச் செய்யக்கூடாது. அவர்களாகவே முன்வந்து ஒன்றிணைந்து கூட்டுறவு முறையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தின் அழிக்கும் செயலில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் சோசலிசக் கட்சிப் பிரச்சனையை அணுக வேண்டும். பெரும் நிலச்சுவான்தார்கள், அவர்களது குத்தகைதாரர்கள் ஆகியவர்களை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டும் என்று விளக்கமளிக்கிறார். மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மார்க்ஸின் இணைபிரியாத் தோழர், விஞ்ஞானபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை நிறுவிய, தொழிலாளி வர்க்கத்தின் சக்திகளை உலக அளவில் ஒன்று திரட்ட முன்கையெடுத்தவர் பிரெடரிக் ஏங்கல்ஸ்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள். ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. மொழிக் கொள்கை: மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம். இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள். இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள். ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள். தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம். இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள். எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம். இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது

எங்கே போகிறது கல்வி?  பகுதி 2

எங்கே போகிறது கல்வி? பகுதி 2

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி (நேற்றைய முதல் பகுதியின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிற அபாயமான நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய இரண்டாவது விழிப்புணர்வுக் கூட்டம் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசிரியர் சிவகுமார் ஆற்றிய உரையை முந்தைய பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பைப் பார்க்கலாம். அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு சிறப்புரை: பேரா. சீ. ஹோசிமின் திலகர் நமது அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் சார்பாக NEP 2020இன் முன்மொழிவாக இருக்கக்கூடிய, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற ஆவணத்தைப் பற்றிய ஆய்வின் இரண்டாவது கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் (அத்தியாயம்-3), பாடத்திட்ட முறைமை (அத்தியாயம்- 4) ஆகியவை குறித்து எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி. முதல் இரண்டு அத்தியாயங்களின் சாராம்சம்: இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் அரசியல் சாசன மதிப்புகளையும் அதனுடைய அடிப்படைக் கடமைகளையும் பெறக்கூடிய வகையில், ஒரு சிறந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான நோக்கத்தை NEP 2020 கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக ECCE – அதாவது, குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறிப்பாகச் சொல்லவருவது இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி வேர் விட்டுள்ளது (It is rootedness in Indian traditions) என்பதாகும். அதாவது, முன்பருவ மழலையர் கல்வியானது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை, கல்வி பெறும் போக்கில் அடையும் வளர்ச்சியில் அந்தக் குழந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படிப்பட்ட ஆழமான இந்தியக் கருத்தாக்கத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒருபுறம் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் இந்த NCFFS ஆவணம், மறுபுறம் குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் கருத்தாக்கம், இந்தியாவின் பார்வை குழந்தைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. இங்கேதான் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. கல்வியின் நோக்கம் என்பது முதலில் எழுத்தை அறிவித்தல், எண்களை அறிவித்தலில் தொடங்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் பார்வை, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம், ஒரு குழந்தை தனக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க வேண்டும் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தியாயம் : 3 – மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவக் கல்வியில் இரண்டு கட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகிறது. முதலில் 3 வயது முதல் 6 வயது வரை ஒரு கட்டமாகவும் பிறகு 6 வயது முதல் எட்டு வயது வரை மற்றொரு கட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் மூன்று வயதில் கல்வி என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எந்தவொரு கல்வி அமைப்பும் கூறியதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முதன்முதலாக இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே மூன்று வயதுக் குழந்தை கல்வி அமைப்புக்குள் வர வேண்டும் என்று ஒரு கல்விக் கொள்கை கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ECCE-இல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், அங்கன்வாடிகள் அல்லது பால்வாடிகள் அல்லது முன் பருவ மழலையர் கல்வி (Pre-schools) என்று வரையறுக்கிறார்கள். அதாவது 3 வயது முதல் 6 வயது வரை நிச்சயமாக ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடிகளும் பால்வாடிகளும் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதைக் கல்வி அமைப்புக்குள் வரையறுப்பதுதான் இங்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இங்கே பல நெருடல்களை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலக் கல்வி இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த அறிக்கை, ஒரு குழந்தை ஆறு வயது முடிந்த பிறகுதான் முதலாவது வகுப்பு செல்ல வேண்டும் என்று NCFFS வரையறுக்கிறது. ஆறிலிருந்து ஏழு வயது வரை முதலாம் வகுப்பும் ஏழு வயது முதல் எட்டு வயது வரை இரண்டாம் வகுப்பு என்று அது வரையறுத்துள்ளது. இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு குழந்தை மூன்று வயது முதல் ஆறு வயது வரை படிக்காமல் விட்டுவிட்டால், அதாவது அங்கன்வாடிக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் என்ன நேரும் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த பதிலும் கிடையாது. நாம் யூகித்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது. ஒருவேளை அதுபோன்று ஒரு குழந்தை 3 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டால் நேரடியாக, ஆறு வயதுக்குப் பின்பாக முதலாம் வகுப்பில்தான் சேர முடியும் என்று தோன்றுகிறது. இதுவும் மிகவும் ஒரு புதிரான விஷயம்தான். ஏனெனில், ஒரு பெற்றோரோ ஒரு குழந்தையோ பள்ளிக்கு முன்பருவக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தை தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட, அதன் பெற்றோருக்குத்தான் தீர்மானிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்படியிருக்கும்போது, நிச்சயமாக மூன்று வயதிலே சேர்த்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் மிகவும் வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது. மேலும் அதைக் கட்டாயப்படுத்துவதென்பது, மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற போக்காக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்போது ECCE குறித்து நாம் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலையும் கல்வியின் நிலையும் மாணவர்கள் நிலையும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அரசுப் பள்ளிகள் மூடலும் வேகமெடுக்கும் தனியார்மயமும் தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897ஆக இருக்கிறது. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 9392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 5788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 7,024, அதே போல உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,135 ஆக இருக்கின்றன. 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன. அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பார்த்தால், தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆசிரியர்கள் விபரங்களைப் பார்தோமானால், 5.6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளிலும் 77 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். ஆனால் 12, 382 தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக, கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் – அதற்கு முன்பாகவும் தனியார் பள்ளிகள் வளர்ந்து வந்தாலும் – தமிழ்நாட்டில் பள்ளிகள் தனியார்மயம் என்பது படுவேகமாக நடந்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ஒரு கணக்கெடுப்பு செய்தால், அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் மற்ற பள்ளிகளில் 83,755 மாணவர்களும் படிக்கின்றனர். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள்தான் பயில்கின்றனர். ஆனால், வெறும் 12,382 எண்ணிக்கையே உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்கள் பயில்கின்றனர். (புள்ளி விவரங்கள் உதவி: 2022 மே மாதம் 28 அன்று தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை, முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் எழுதியது). இது மீண்டும் எதைக் காட்டுகிறது என்றால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. பள்ளிகளில் தனியார்மயம் என்பது மிக வேகமாக நடைபெறுகிறது. கல்வியை மறுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009 இப்போது சில அடிப்படையான கேள்விகள் நம் முன் எழுகின்றன. அவை என்னவென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, சமுதாயத்தில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி உரிமைச் சட்டம் 2009, 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியதை நாம் அறிவோம். அது உண்மையென்று சொன்னால், அரசுப் பள்ளிகளின் நிலை ஏன் இப்படிச் செல்கிறது? அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE-2009) என்ன சொல்கிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளின் மொத்த மாணவர்களில் 25% மாணவர்கள் இதுபோல் சேர்ந்து படிக்க அரசே முன்வந்து வாய்ப்பளிக்கும். அவர்கள் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் எனச் சொல்கிறது. இந்தக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் 25% தனியார் பள்ளிச் சேர்க்கைக்கு அரசாங்கமே நிதி வழங்குவது குறித்தும் SRM கல்வி நிறுவன மாணவர்

எங்கே போகிறது கல்வி?

எங்கே போகிறது கல்வி?

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நாடாளுமன்ற விவாதம் ஏதுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடிப்படைப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அகில இந்தியா கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் முதலாவது அமர்வில் பேராசியரியர் யோகராஜன் ஆற்றிய உரையின் தொகுப்பை முன்பு சுவடு இதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்ததாக, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து அலசுவதற்காக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில் பேராசியர் ஹோசிமின் திலகர் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் முழுத் தொகுப்பை தொடராக சுவடு வெளியிடுகிறது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) மெய்நிகர்க் கூட்டத்தைத் தொகுத்தளித்த தோழர் ரெங்கையா முருகன் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி குறித்த ஓர் அறிமுகத்துடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைக் குறித்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அமைப்பு உருவானது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்த அமைப்பின் தலைவராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷில் குமார் முகர்ஜி உள்ளிட்ட சிலரும் இணைந்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினர். இதன் தமிழ்நாடு பிரிவும் அப்போதிருந்தே செயல்பட்டு வந்தது. 1986இல், அக்கல்விக் கொள்கை குறித்து MIDS (Madras Institute of Development Studies) நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளருமான மால்கம் ஆதிசேஷய்யா, யோஜனாவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார். “அய்யோ… அதனை ஒரு முனைப்படுத்தாதீர்” என்ற கட்டுரைதான் அது. அதாவது, ‘நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் வேலூருக்குத் தேவையான கல்வித் திட்டத்தை வகுக்காதீர்கள்’ என்றார். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றார். ‘கல்வி என்பது வேறு, கல்வி முறை என்பது வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனவும் கல்வி முறை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பு என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கையை யார் வகுக்கின்றனர் என்றால், ஆளும் அரசுதான் வகுக்கிறது. இன்றுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறும் இந்த அபிவிருத்திக்குத் தகுந்தவாறும் உருவாக்கப்பட்டுள்ளதே தேசிய கல்விக் கொள்கை 2020. இதன் அபாயங்கள் குறித்தும் கல்வி வணிகப் பண்டமாக மாறப்போவதையும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும்போது எவ்வாறு ஓரிடத்தில் அமர்ந்து கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் அப்போதே ஆதிசேஷயா தனது கட்டுரையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக உரை: பேராசிரியர் சிவக்குமார் 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (AlSEC) அமைப்பு எனக்கு அறிமுகமாயிற்று. மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக நான் இருந்தேன். 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, கல்விக் கொள்கை குறித்து ஒரு அருமையான தொகுப்பை வெளியிட்டது. அந்த வரலாற்றை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 1986இலிருந்து இந்தக் கல்விக் கொள்கைகள் எவ்வாறு கல்வியை வணிகமயத்துக்கு, கார்ப்பரேட் மயத்துக்குக் கொண்டுசெல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கல்விக் கொள்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கல்விக் கொள்கை, பிர்லா – அம்பானி கல்விக் கொள்கை, தற்போது அமலாகிக்கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திறன் மேம்பாடு (Skill Development) என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட் கல்விக் கொள்கையாகத்தான் உருவாகியுள்ளன. முந்தைய மெய்நிகர்க் கூட்டத்தில் பழம்பெருமை, பாரம்பரியம் இரண்டையும் எவ்வாறு பாஜக அரசு கையிலெடுத்து மிக நாசூக்காக வேலை செய்துகொண்டுள்ளது என்று பேராசிரியர் யோகராஜன் மிக அருமையாக எடுத்துரைத்தார். NCF குறித்த விவரங்களை AISEC அமைப்பு தமிழில் வெளிக்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி என எல்லாவற்றிலும் மிக அழகாகத் திட்டமிட்டு, பாஜகவினர் செயல்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஹிட்லர் உயிரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எதற்காக என்றால், கண், இமை, முடி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பாசிச வெறியை, வெறுப்புணர்வை யூதர்கள் மேல் வைத்து, அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டும் வகையில் உயிரியல் பாடம் கற்பிக்கப்பட்டது. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களுக்குப் போதிக்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் ஆற்றிய உரையை நாம் மிகச் சாதராணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. NCFஇன் அடிப்படை என்பது மிகவும் ஆபத்தானது. அத்தியாயம் 3இல் மொழிக்கொள்கை பற்றியும் அத்தியாயம் 4இல் கல்வியியல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஹோசிமின் திலகர், இன்று நம்மிடையே அவற்றின் பின்னணியையும் பேசவுள்ளார். நான் இதை வாசிக்கும்போது மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு ஆபத்தான சொல்லாடலைக் கையாள்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். காந்தியடிகள், தாகூர் போன்றவர்களெல்லாம் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியது பற்றி நமக்குத் தெரியும். 1966 கோத்தாரி கல்விக் கொள்கை குறித்து யோகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார். அக்கோத்தாரிக் குழு அறிக்கையில் தாய்மொழி வழிக் கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டது. தாய்மொழி வழிக்கல்வி என்று சொன்னார்களே தவிர, வீட்டு மொழி (Home Language) என்று அங்கே சொல்லப்படவில்லை. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோத்தாரி கூறினார். கல்லூரி வரையிலும் – பட்ட வகுப்புகள் வரை அது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 1970களில் பட்ட வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது முடங்கிப் போயிருக்கிறது. நான் தமிழ் வழியிலேயே இயற்பியல் பாடம் கற்பித்தேன். தமிழ் வழியிலேயே முதுநிலை வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்தன. இன்று எல்லாமே வணிகமயமாகவும் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளும் நிலைக்கும் மாறியுள்ளன. NCFஐ உற்றுநோக்கினால், இதன் அடிப்படையாக மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும், எவ்வாறு உருவாக்க வேண்டும், பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகள் எதைச் சொல்ல வேண்டும், எதை உச்சரிக்க வேண்டும்? எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று அழுத்தம் கொடுக்கப்பட இருக்கிறது. இவை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கூடம், வகுப்புகள், பாடமுறை என்று பேசுவதைக் குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். முக்கியமாக, மொழியைப் பொறுத்தவரை L1, L2, L3 என்று பிரிக்கிறார்கள். Home Language, Mother tongue பின்பு Familiar language என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. Home Language என்பதை ஹிந்தி என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிடலாம். தாய்மொழிக்கு இரண்டாமிடம் கொடுக்கிறார்கள். இந்த மூன்று மொழிகளையும் கற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அடுத்து, கல்வியியல் திட்டங்கள், அவற்றின் அமலாக்கங்கள், கலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. நாம் மிக ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1986 கல்விக் கொள்கை தொடங்கி, தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிய அமைப்பு கல்விப் பாதுகாப்புக் கமிட்டி. Delinking degree from job என்பதைப்பற்றி அன்று நாம் விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஹோசிமின் திலகர், யோகராஜன், சுதாகர் மற்றும் மூத்த தோழர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த Delinking degree from job இப்போது நடந்துவிட்டது. திறன் மேம்பாட்டுப் பாடம் (Skill Development Course) இல்லாத, பரவாத, வேரூன்றாத இடமே இல்லை. மக்கள் கல்விக் கூட்டியக்க மாநாடு குறித்துப் பேச நாங்கள் இரண்டு கல்லூரிகளுக்குச் சென்றோம். இரண்டுமே அரசுக் கல்லூரிகள். அதில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் குறைபட்டுக்கொண்டார். அது கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுப் பாடத்திட்டத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் எதிர்த்தது. அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தது. பொதுப் பாடத்திட்டத்தைக் கலை அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்தியுள்ளார்கள். அவர் கூறியது என்னவென்றால், ‘தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளெல்லாம் அவர்கள் விருப்பம்போல் பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் சொன்னபடி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இது வலிந்து புகுத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைப் பாடத்தில் 4 கோர் (Core) பாடங்கள், உதாரணமாக அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் 4 பாடங்கள் வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பாடங்கள் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவாக இருக்கிறது. ஆளுகின்ற அரசு வேலையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கல்வியையும் பாடங்களையும் பிரித்தல் (Delink degree from job, Delink Subject from Society) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தைவிட்டு இந்தப் பாடங்கள் விலகி இருக்க வேண்டும். சமூக உணர்வையோ சிந்தையையோ உருவாக்குகின்ற வகையில் பாடங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறது. இயற்பியலைக் கற்பிக்கும்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், அவர்களுக்கு அணுகுண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அணு சோதனைகள் பற்றியோ அது குறித்து ஐன்ஸ்ட்டீன் பின்னாளில் வருந்தி வெளியிட்ட அறிக்கை குறித்தோ சொல்லக் கூடாது. இவற்றைப் பேசுவதற்கு வகுப்பறைகளில் இடம் இருக்கக்கூடாது. திறன், திறன் (Skill, skill) என்றுதான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வந்தபோது நாம் கூட்டம் போட்டிருக்கின்றோம். அதற்கு முன்னால் கஸ்தூரி ரங்கன் அறிக்கை வந்தபோதும் கூட்டம் நடத்தியுள்ளோம். 2016இல் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை வந்தபோதும் கூட்டம் போட்டுள்ளோம். அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக அமுலாக்குவதற்கான மறைமுகமான சட்டங்கள்தான் இந்தக் கட்டமைப்பு (Frame Work) என்றுகூட நான் சொல்வேன். இந்த ஒன்றிய அரசின் பல திட்டங்களை எதிர்ப்பதாக மாநில அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுள்ள திராவிட அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சனாதனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நமது முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் பேசிய அந்தப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியுமா என்றால், நாம்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றித்தான் மூன்றாவது

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

கட்டுரையாளர்: உமா மகேஸ்வரி   ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஆடையை வைத்தும் ஒடுக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலையில்தான் இந்த 2023இலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியொன்று பல தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமான செய்தி. ஆம், கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், புடவைக்குப் பதிலாக சுடிதாரில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.  தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் அதற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல ஆசிரியைகள் இந்த உடைப் பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது.  வளர்ந்த மாணவர்கள் மத்தியில் சங்கடமாக உணரும் பெண் ஆசிரியர்கள் கோவையில் சுடிதார் அணிந்து வந்த அந்த ஆசிரியர் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். புடவை அணிந்துகொண்டு வந்து வகுப்பில் பாடம் நடத்தும்போது  கிண்டல் கேலிப் பேச்சுகளை அவரது உடையை வைத்து மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  அவர் தனது சேலையைச் சரிப்படுத்திய பிறகே மீண்டும் கற்பித்தலைத் தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும்  இது தொடர, வசதியான உடையாகக் கருதி, பள்ளிக்கு சுடிதாரில் வந்திருக்கிறார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியதால் தொடர்ந்து சுடிதாரில் செல்ல முடியவில்லை. மீண்டும் புடவையை அணிந்து வந்த ஆசிரியர் மாணவர் தரும் சங்கடங்களைச் சந்திக்க நேரிட, அது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில்  பள்ளி மாணவர்களிடையே பல விரும்பத்தகாத நடத்தைகள் வெளிப்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கலாம். அவரவர் வீடுகளில், வசிப்பிடங்களில், சமூகத்தில் சற்று உற்று நோக்கினாலே குழந்தைகளிடம் உருவாகியுள்ள நடத்தை மாற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களது பணி, கூடுதல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் பல இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏனெனில் இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை,  வயதுக்கு ஏற்புடையதாக இல்லாத பலவற்றை உற்றுநோக்கும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்த முனைகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் – வகுப்பறைகள்தான் அதற்கான தளங்களாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது வீடுகளில் சரியான வழிகாட்டுதல் இல்லை; பள்ளிகளிலும் உரையாடல் என்பதே இல்லை. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்களை ஹீரோக்களாகவும் ஆன்ட்டி ஹீரோக்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோநிலை மாணவர்களிடம் தோன்றுகிறது. அதன் ஒருபகுதியாகவே பள்ளிகளில்  பெண் ஆசிரியர்களது உடலை வைத்துக் கேலி செய்யும் சூழல் உருவாகிறது. அதேபோல் வீடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம், மரியாதையற்ற தன்மை இதையெல்லாம்  மாணவர்கள் பார்த்து வளர்கின்றனர். இவற்றின் வெளிப்பாடே பள்ளிகளில் நடக்கும் இப்படியான சில விரும்பத்தகாத விளைவுகள். வீடும் பள்ளியும் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தத் தவறியதன் விளைவுதான் இது. ஆகவே வளர்ந்த மாணவர்கள் மத்தியில் உடை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே பல ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர விரும்புகின்றனர். அரசாணை 67 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணை (GO No.67) அரசு ஊழியர்கள் அணியக்கூடிய உடை குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்குத்  தனித்தனியாக  என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.‌ அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான உடையையே அணிந்து வரவேண்டும் என்று அந்த அரசாணை கூறுகிறது. பெண்களுக்கான உடைகளாக, சல்வார் கமீஸ், சுடிதார், புடவை என அனைத்தும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அவர்களும் அரசு ஊழியர்களே. பள்ளிக்கல்வி இயக்குனர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. பள்ளியில் பெண் ஆசிரியர்களின் நிலை உடல்நிலையில் பிரச்சனைகள் வந்து புடவை அணிய முடியாமல் இன்னலுறும் ஆசிரியர்களும் கல்வித்துறையில்  சுடிதார் அணிய அனுமதி  கேட்டுள்ளனர். ஆனால் துறையில் அனுமதி கிடைக்காததால் வேதனையுடன் புடவையையும் சுமக்கின்றனர். அந்தவகையில்   நம்முடன் பேசிய கூகல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜான் பௌலா, “எனக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஜாக்கெட் அணிய முடியாது. புடவை அணிவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தலைமையாசிரியரிடம் அனுமதி  கேட்டால், சுடிதார் அணிந்து வரக்கூடாது என்கிறார். துறையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு என, அனைவரிடமும் எனது மருத்துவச் சான்று மற்றும் பரிசோதனைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருந்து மிகுந்த போராட்டத்திற்கிடையே அனுமதி பெற்றேன். ‌மீண்டும் இந்தக் கல்வி ஆண்டில் இதே அனுமதிப் பிரச்சனை. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்று நினைத்து வருந்தினேன். இந்த அரசாணையைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். “மார்பில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேரும் காலம் வந்தபின்னும் இறுக்கமான உள்ளாடை  மற்றும் ஜாக்கெட் அணிய முடியாத காரணத்தால், முழுமையாகக் குணமாகும்வரை சுடிதார் அணிந்து செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் பள்ளிக்குச் சென்றபோது உடன் பணிபுரியும் ஆசிரியைகளால் பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. உடன் பணிபுரியும் ஆண் ஆசிரியர், அலுவலகம் சென்று உயரதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினார். ஏறத்தாழ ஒரு மாதம் சுரிதாரில் சென்றேன். இன்று இந்த G.O. பார்த்த பிறகு அனைத்தும் ஞாபகம் வருகிறது. இப்படி ஒரு ஆணை இருக்கிறது என்பதையே இன்றுதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் தேன்மொழி. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் சசிகலா, இந்தக் கல்வி ஆண்டில் முதலில் இருந்தே பள்ளிக்கு சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தலைமையாசிரியர் கேள்விக்கு உட்படுத்தினாலும் இந்த அரசாணையைக் கூறி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணைப்படி தாங்கள் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதித்துள்ளார் என்கிறார். இப்படி, தற்போது இந்த அரசாணையைப் பார்த்தபிறகு பலரும் தாங்கள் சந்தித்த இந்தச் சுடிதார் பிரச்சனைகள் குறித்து மனம் திறக்கின்றனர். அரசாணைக்குப் பிறகும் தடைகள் ஆசிரியைகள் புடவை, சல்வார் கமீஸ் அல்லது சுடிதார்  துப்பட்டாவுடன் அணிந்து வரலாம் என்று அரசாணை கூறிய பிறகு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிலர் அணிந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சேலையைத் தவிர வேறு உடை அணியக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதும் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலக்கல்நத்தம் என்ற பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் இந்த அரசாணைக்குப் பிறகு சுடிதார் அணிந்து பள்ளி சென்றிருக்கிறார். ஆனால்  அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்குள்ள மூத்த பெண் ஆசிரியரின் வழியாக இவரிடம் இந்த உடையை அணியக் கூடாது என வற்புறுத்தக் கூறியுள்ள்ர். ஆனால் அதன் பிறகும் இவர் தொடர்ந்து சுடிதார் உடையையே அணிந்து செல்வதால், ‘வழக்குத் தொடர்ந்த ஆசிரியருக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும், மற்ற ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. எனவே உயர் அலுவலர் வழிகாட்டல்படி (Dress Code) உடை அணிந்து வரவேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுகிறது. அதன்பிறகும் ‘முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்து அனுமதி வாங்குங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி உடை அணியலாம்’ என்று தொடர்ந்து பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். பெண் ஆசிரியர்களே இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் பல இடங்களில் நடக்கிறது.  சமூகத்தின் பார்வை – உடை என்பது கலாச்சாரம்  காலம்காலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உடையை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் வாழும் வீடும் குடும்பத்தாரும்  சமூகமும்தான் முடிவு செய்கின்றன. ஒருகாலத்தில்  பெண்கள் பருவம் அடைந்த உடனேயே பாவாடை தாவணி  அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பதிமூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, தாங்கள் விரும்பவில்லை என்றாலும்  தாவணியைத் தவிர வேறு உடை அணிய வீட்டில் அனுமதி கிடையாது. வீட்டிலேயே இல்லாதபோது, ஒரு பெண் பள்ளிக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ தான் விரும்பும் உடையை அணிவது சாத்தியமற்ற செயல். ஆனால் சமீபகாலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சேலை அணிந்தவர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், பேண்ட் சட்டை  மற்றும் பல  நவீன ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல , வளர்ந்த பெண்களும்கூட எல்லாவிதமான உடைகளையும் அணிய ஆரம்பித்துள்ளனர்.  இன்று பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை எனலாம். அந்தவகையில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான உடையை அணிய ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் உடை அணிவது என்பது ஒரு பிரச்சினையாக இல்லை.‌  மத்திய மாநில அரசு அலுவலகளில் பணிபுரியும் பெண்கள், கீழ்நிலையில் இருந்து உயர்பதவிகள்  வரை இந்த அரசு ஆணை 67 வருவதற்கு முன்பிருந்தே புடவை, சுடிதார், சல்வார் என அணிந்து செல்வதைப் பார்க்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருக்கும் பெண்களும் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிகின்றனர். பள்ளிக்கல்வித் துறையிலேயேகூட, பல மட்டங்களில் பணிபுரியும் பெண்களும் சுடிதார் அணிந்து பணிக்குச் செல்கின்றனர். இவை மட்டுமல்லாது, கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்களும் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து செல்கின்றனர். ஆனால் அதே ஆசிரியர்கள், பள்ளிக்குள் பாடம் கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தால் சேலை மட்டுமே அணியக் கட்டாயப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களாகவே இருக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் சமூகத்தின் போக்கு கவலைப்பட வைக்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் சிந்தனையில், சிறுவயது முதலே ஆசிரியை என்றால் சேலைதான் அணிய வேண்டும் பதிய வைக்கக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களா? பாரம்பரிய உடையைத்தான் பள்ளிக்கு அணிந்து வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உடை மாற்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தாவணி உடையை மாற்றி சுடிதார் உடையைப் பரிந்துரை செய்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் பெயர் அன்விதா ரவாலி ஷெட்டி. வயது 38. வேலை ஸ்டார் ஹோட்டலில் சீப் செஃப். பிடித்தது அம்மா அம்மா மட்டுமே. பிடிக்காதது காதல், உறவு, கல்யாணம். விருப்பம் குழந்தை – குழந்தை மட்டுமே. பிரச்சினை, கல்யாணம் இல்லாது அதை அடைவது. அதை அவள் அடைவதற்கு என்னென்ன செய்தாள், இறுதியில் அடைந்தாளா என்பதுதான், காதல், நகைச்சுவை கலந்தும் உணர்வுப்பூர்வமானதாகவும் திரைக்கதையாக்கி, மகேஷ் பாபு இயக்கி, தமிழ் வசனங்களுடன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ தெலுங்குத் திரைப்படத்தின் மொத்தக் கதை. அன்விதாவாக வரும் அனுஷ்கா ஷெட்டியைச் சுற்றியே கதை சுழல்கிறது. காதல், திருமணம், உறவு குறித்து அம்மா(ஜெயசுதா)விடம் விவாதிக்கும்போதும் அம்மா இல்லாத தனிமையை உணரும்போதும் வியாவிடம் (சோனியா தீப்தி) உணவகத்தில் வெள்ளந்தியாகப் பேசும்போதும் மருத்துவரிடம் (ஹர்ஷவர்தன்) ஆலோசிக்கும்போதும் ‘ஸ்பேர்ம் டோனர்’ பற்றி ஆய்வு செய்யும்போதும் சித்துவை (நவீன் பொலிஷெட்டி) முழுதுமாக அறியும் பொருட்டு நெருக்கத்தைத் தொடரும்போதும் அவர்களுக்கான உறவு மேலும் கீழுமாகப் பயணிக்கும் போதும் இறுதியில் சித்து இல்லாததை உணர்ந்து வருந்தும்போதும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பல்வேறு பரிமாணங்களில் மின்னுகிறார். அவரது அழகும் உடல்வாகும் கூடுதல் சிறப்பு. சித்து பொலிஷிட்டியாக, ஸ்டாண்ட் அப் காமெடியனாக, அம்மாவுக்குச்  செல்லப் பிள்ளையாக, அன்வித்தாவுடன் காதல் வயப்படும் இளைஞனாக, அவளது நோக்கத்தை அறிந்த நிலையில் ஆடிப்போனவனாக, ஒருகட்டத்தில் அவனை உணர்ந்த அவளைப் புரிந்து உருகுபவனாக அனுஷ்காவுக்கு ஈடு கொடுத்து நடிப்பில் திறமையைக்  காட்டி இருக்கிறார், நவீன் பொலிஷெட்டி. பாசமுள்ள அம்மாக்களாக ஜெயசுதாவும் துளசியும், கண்டிப்பான அதே நேரத்தில் அக்கறை கொண்ட அப்பாவாக முரளி ஷர்மா, அன்விதா குறித்துப் பெருமிதம் கொள்ளும் லண்டன் ஹோட்டலில் தலைவராக நாசர், சித்துவின் நண்பன் ராகுலாக அபிநவ் கோமடம், காவியாவாக சோனியா தீப்தி, டாக்டராக ஹர்ஷர்வர்த்தன் போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் அவர்களது பங்களிப்பைச் சிறப்புற வழங்கியுள்ளனர். “என் கண்ட்ரோல்ல இருக்கற லைஃப இந்த மாதிரி காதல், கல்யாணம், ரிலேஷன்ஷிப்புன்னு என் கையவிட்டுப் போற நிலைமை எனக்கு வேண்டாம்” (அன்விதா) “அப்படின்னா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாரும் பிரிஞ்சு போயிடுறாங்களா?” (அம்மா) “நீ பிரிஞ்சிட்ட இல்ல?” (அன்விதா) “போகப்போற நம் உசிர, போகாமப் பிடிச்சுக்கறதுக்கு எல்லாருக்கும் ஒரு கை தேவைப்படும். நீ நம்பற துணை உனக்குக் கிடைக்கும்போது நீ கை விட்றாதே” (அம்மா) “இது விஷயம் இல்லடி, விசேஷம்!” (காவியா) “அம்மா ஆகணும்னா ‘பிரக்னன்ட்’டானா போதாதா, ஏன் மேரேஜ் ஆகணும்?” (அன்விதா) “டெஸ்ட் மூலமா டோனரோட ஸ்பேர்ம் குவாலிட்டிய கண்டுபிடிக்கலாம். ஆனா, டெஸ்ட் பண்ணி டோனரோட குவாலிட்டிய கண்டுபிடிக்க முடியாதுமா” (டாக்டர்) “அவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனா?” (அன்விதா) “இல்லங்க, அவருக்கு ஸ்டேபிள் இன்கம் வருது” (சித்து) “அவங்க எல்லாரும் சக்ஸஸ் பீப்பிள் அதான்” (பனிந்திரா) “இதே சின்சியாரிட்டிய வேலயில காட்டிருந்தா, இந்நேரம் கல்யாணம் ஆகிக் குழந்தை பொறந்திருக்கும்” (பனிந்திரன்) “அந்த வேலயாதான் போயிட்டு இருக்கேன்” (சித்து) “உனக்குச் சம்பந்தப்பட்ட சின்ன விஷயமா இருந்தாலும் சரி, என்னோடதா இருக்கணும்னு ஆசைப்படறேன்…. மேரேஜுக்கு முன்ன டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போட்றா மாதிரி இருக்கு, அன்விதா” (சித்து) “இங்கு நடக்கறது ஹோமம் இல்ல, காமம்….  பொறக்கப் போற குழந்தைக்கு உன் ஜாடையே இருக்காது, இவ ஜாடைதான் இருக்கும்” (சித்து) “வெளியே காரியத்தால வேல நடக்குதுன்னா, இங்க வீரியத்தால வேல நடக்கும்” (டாக்டர் ஹர்ஷவர்தன்) “நான் அம்மா ஆகறதுக்கும் அனாதையா மிஞ்சிப் போறதுக்கும் இடையில இருக்கேன்….” (அன்விதா) “நாளைக்கு உனக்கு ஒரு பொண்ணோ பையனோ பொறந்ததுக்கு அப்புறம், ‘எங்க அப்பா யாருன்னு கேட்டா, யாருன்னு தெரியாத ஒரு ‘ஸ்பெர்ம் டோனர்’னு சொல்லாம, அவங்க அம்மாவ லவ் பண்ண ஒருத்தன்னு சொன்னா போதும்” (சித்து) “எனக்கு நீ வேணும்னு சொன்னியே தவிர, உனக்கு நான் இருக்கேன்னு எப்போவாவது சொன்னியா? நேரா போய் அவ நம்பிக்கைய ஜெயிக்கிறதுக்கு ஃபன் பண்ணு” இவை இயக்குநரே எழுதியுள்ள வசனங்களில் நினைவை ஈர்க்கும் சில. அழகான லண்டனையும் ஹைதராபாத்தை அழகாகவும் காட்டி இருப்பதுடன், கலைநயமான ‘ப்ரேம்’களையும் வைத்து, கண்களுக்குக் குளுமை சேர்த்துள்ளார், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. பாடல்களுக்கு ராதனின் இசை இனிமை. கோபி சுந்தரின் பின்னணி இசை அருமை. படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ். குறைவில்லை என்றாலும் சற்று சோர்வு தரும் ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்து, நீளத்தை குறைத்திருந்தால்,  சிறப்பாக இருந்திருக்கும். பாலுறவு பற்றி எல்லாம் மேடையிலே கதைக்கும், ஐடி கம்பெனியில் பணிபுரியும் நவீன உலகின் இன்றைய  இளைஞனுக்கு, செயற்கை முறையில் கருத்தரிக்கும் மருத்துவமுறை பற்றித்  தகவலாகக்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான், நெருடலான ஒன்று ! கொடையாளி யார் என்பதைத் தெரிவிப்பது, இந்த இந்தப் பிரச்சனைகள் எழும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பானது எனில், கொடையாளியைத் தானம் பெறுபவரே அழைத்துவரும்போது, என்னதான் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், அடையாளம் தெரிவதால் எழும் பிரச்சனைகள் எழாது என்பதும் அது சட்டத்திற்குப் புறம்பானது இல்லை என்பதும் எவ்விதத்தில் நியாயமாகுமோ! இந்தக் ‘கரு’வைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை புதுமையானது. சொன்ன விதமும் சுவையானது. நிலவும் சமூகச் சூழலில், கொஞ்சம் சறுக்கினாலும் அருவருப்பாக நெளியவைத்துவிடும், கத்தி மேல் நடக்கக்கூடிய சவாலை, கலகலப்பாகவும்  நெகிழ்வை ஏற்படுத்தியும் எதிர்கொண்டு, இயக்குநர் மகேஷ் பாபு வெற்றியும் பெற்றுவிடுகிறார். மதிப்பெண்: 7/10

சங்கநாதம் ஓய்ந்தது

சங்கநாதம் ஓய்ந்தது

தோழர் சங்கரய்யா அவர்களின் 99ஆவது பிறந்தநாளையொட்டி, தோழர் 99 என்ற தலைப்பில் சுவடு மின்னிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை, இன்று அவரின் மறைவையொட்டி மீள்பதிவு செய்கிறோம். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம். தோழர் 99 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள். இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் இஞ்சினியராக வேலை பார்த்த போது 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தார் தோழர் சங்கரய்யா. பிரதாப சந்திரன் என்று மகனுக்குப் பெயர் சூட்டினார் நரசிம்மலு. ஆனால் நரசிம்மலுவின் அப்பா எல்.சங்கரய்யா தனது பெயரைப் பேரனுக்கு வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பிரதாப சந்திரன் என்ற பெயர் சங்கரய்யாவாக மாறியது. தோழர் சங்கரய்யாவோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் 9 பேர். அண்ணன் இராஜமாணிக்கம். தம்பிகள் இராமசாமி, இராமகிருஷ்ணன், இராசேந்திரன். தங்கைகள்  லட்சுமி காந்தம்மாள், ஞானாம்பாள், மீனாட்சி, அங்கம்மாள். தூத்துக்குடி மேலூர் சி.வ. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார் சங்கரய்யா. அவரது தந்தை நரசிம்மலு பம்பாய் சென்று பாய்லர் பொறியியல் படித்து, மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றதால் அவரது குடும்பமும் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியில் 9 ம் வகுப்பும், மதுரை யூனியன் கிறிஸ்தவப் பள்ளியில் 10,11 வகுப்புகளும் படித்து 1937ல் தேர்ச்சி பெற்றார்.  மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாறு பாடத்தை விருப்பமாகத் தேர்வு செய்து 1939 ல் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அதே கல்லூரியில் பி.ஏ. கடைசி ஆண்டு வரை படித்தார். சுயமரியாதை இயக்கத்தின் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டினார். 1939இல் மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டு, 1940 ல் தோழர். ஏ.கே.கோபாலனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். மதுரை மாணவர் சங்க செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா 1941 மார்ச் மாதம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானார். அதனால் அவரது படிப்பே நின்றுபோனது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. சிறையில்தான் காமராசர், கே.பாலதண்டாயுதம், பட்டாபி சீதாராமையா, அப்துல் ரஹ்மான் சாகிப் ஆகியோரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. சிறைக் கொடுமைகளுக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால், 1941 ஜூலையில் இராஜமகேந்திரபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். காமராஜர் பிரதம செயலாளருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியதன் பேரில் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1942 ஜூன் வரை சிறையிலிருந்து பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் சேலத்தில் நடைபெற்ற சென்னை மாகாண மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு, மாகாணத்தின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு, திருநெல்வேலியில் நடைபெற்ற மாணவர்கள் ஊர்வலத்திற்கும் தலைமை ஏற்று போலீஸ் தடியடியில் காயமடைந்தார். மாணவர் இயக்க வேலைகளைத் திட்டமிட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தில் மாகாண மாணவர் பயிற்சி முகாம் நடத்தியபோது, 1942 அக்டோபரில் போலீஸ் முகாமைச் சுற்றி வளைத்தது. மாணவர்களை போராடத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடந்ததால், கேரளத்தின் கண்ணனூர் சிறைக்கு வெள்ளை அரசு அவரைக் கொண்டு சென்று அடைத்தது. கண்ணனூர் சிறையில் அவர் இருந்த போதுதான் கையூர் தோழர்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து சிறையில் தோழர்களுடன் உண்ணாவிரதம் இருந்ததால், அங்கிருந்து தஞ்சாவூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தஞ்சாவூர் சிறையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆர்.வெங்கட்ராமன், மதுரை வைத்தியநாதய்யர் ஆகியோரும் உடன் இருந்தனர். 1944 மே மாதம் விடுதலை செய்யப்பட்ட சில காலத்தில் அவரது தந்தை நரசிம்மலு உயிரிழந்தார். அதனால் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்கும் நிலைக்கு ஆளானார் சங்கரய்யா. அப்போது அவருக்கு வயது 22. சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளி வந்தவுடன் மாணவர் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். நேதாஜியின் ஐ.என்.ஏ இராணுவத்தினரைக் கைது செய்யும் வெள்ளை அரசைக் கண்டித்தும், ஜவஹர்லால் நேரு காஷ்மீருக்குள் நுழையத் தடை விதித்ததைக் கண்டித்தும் அப்போது பெரும் போராட்டங்கள் நடந்தன. 1946 பம்பாய் கப்பல் மாலுமிகள் நடத்திய புரட்சிக்கு ஆதரவாக மதுரையில் பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் தோழர் சங்கரய்யா. அதே ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி.ஜி.ஜோசி பங்கேற்ற பெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார். சதி செய்து அரசை வீழ்த்த முயற்சி செய்ததாக 1946 ல் மதுரை சதி வழக்கைப் போட்டது வெள்ளை அரசு. பி.இராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு நீதிபதி ஹசீன் என்பவரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என அறிவிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் பிரமாண்ட வரவேற்பு நடந்தது. மறுநாள் இந்தியா விடுதலை பெற்றது. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியை 1947 செப்டம்பர் 18-ள் திருமணம் செய்தார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் சங்கரய்யா திருமணத்தில் உறுதியாக நின்றார். 1948 மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதால், அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கரய்யா தலைமறைவாகத் தமிழகம் திரும்பினார். 1948 முதல் 1951 வரை தலைமறைவாகவே சங்கரய்யா செயல்பட்டார். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலையையும் சந்தித்திருக்கிறார்.  கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை விலக்கப்பட்ட பிறகு 1952 தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாக குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967ல் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.  ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார். 1962இல் இந்திய-சீன யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு விடுதலையானார். 1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அந்த 35 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். அவர்களில் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் தோழர். சங்கரய்யா ஆகிய இருவர் மட்டுமே தற்போது நம்மோடு வாழ்கிறார்கள். சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998இல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரையும், தேச நலன் நாடுவோரையும் பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார். கல்லூரி மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, 15 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர், இந்திய இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர், மகத்தான வழிகாட்டி என தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்த மக்கள் தலைவர், தோழர் என்.சங்கரய்யா இன்னும் பல நூறாண்டுகள் நீடூழி வாழ வாழ்த்துவோம். சங்கரய்யா என்பது வெறும் பெயரல்ல. அது சமதர்மத்தின் சங்கநாதம். நன்றி: CPIM, நெல்லை

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் பேரரசின் உறவுக்காரப் பெண்ணை, போப்பின் உதவியால் மணந்துகொண்டான். பைசாண்டையின் பட்டம் எதேச்சையதிகாரி என்பதாகும். ரோமர்களின் பட்டம் சீசர் என்பதாகும். இரண்டையும் இணைத்து அழைக்குமாறு வேண்டினாள் அப்பெண். அதுதான் ரஷ்ய மொழியில் ஜார் என்றானது. பேரரசர் சூட்டிக்கொண்ட பெயர் இவ்வாறாகத்தான் வந்தது. ஜார் பேரரசைச் சார்ந்த மகா பீட்டர் ரஷ்யாவை ஆசிய நாடுகளின் கலாசாரத்திலிருந்து ஐரோப்பியப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவந்தார். நிக்கோலஸ் ரோமோனோவ், இரண்டாம் அலெக்சாண்டர், மூன்றாம் அலெக்சாண்டர், இரண்டாம் நிக்கோலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் அரசாண்டபோது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மக்களது அடிமைத்தனங்களையெல்லாம் அறுத்தெறியும் வகையில் வந்ததுதான் இப்புரட்சி. 1917இல் நடந்த ருசியப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி, ஜார் மன்னரையும் உயர் குடியினரையும் விரட்டி அடித்தது. புதிதாக உருவாகி வந்த முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளை மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள், வங்கிகள் ஆகியவற்றை அவற்றின் உடைமையாளர்களிடமிருந்து பறித்து, அவற்றைத் தொழிலாளர் மன்றங்களான சோவியத் கரங்களில் ஒப்படைத்தது. வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆகவே பாரதி இதனை ‘யுகப்புரட்சி’ என்று வர்ணித்தான். ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று வரையறுத்தான். ‘தேசிய இனங்களின் சிறைக்கூடம்’ என்று அறியப்பட்ட ரஷ்யா, புரட்சிக்குப் பிறகு பல தேசங்கள் மற்றும் அயல் நாட்டு விவகாரங்களின் விஷயத்தில் ‘தொழிலாளர் வர்க்க சர்வதேசியம்’ என்ற ஒரு திசைவழியைக் காட்டியது. இவ்வாறாக, சகல ரஷ்ய மக்களுக்கும் தானே பிரதிநிதி, தானே தலைவன் என்று கூறிக்கொண்டிருந்த, ‘இரணியன் போலரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி, ஜார் மூடன், புரட்சியின் மூலம் இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்’. பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் புயற்காற்று சூறைதன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே, ஜாரைச் சுற்றி இருந்த மூடர்கள் மரமாக விழவில்லை. விழுந்து விறகானர்கள். மரம் போன்று விழுந்தால் வீட்டு கட்டிடத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். விறகாக வீழ்ந்தால் சாம்பலாகத்தான் போகும். மக்கள் எழுச்சி பெற்றால் மன்னனும் அவனைச் சார்ந்தோரும் சாம்பலாகத்தான் போவார்கள் என்பதை புதுமை விரும்பி பாரதி தனது கவிதை மூலம் தெளிவாகக் கூறுகிறார். உணவும் பண்டங்களும் எரிபொருளும் பதுக்கப்பட்டன. கள்ளத்தனமாக நாடு கடத்தப்பட்டன. இடைக்கால அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி ராத்தல் இரண்டு ரூபிளுக்குத் தகுதியான காபிக் கொட்டை வாங்குவதற்கு நுகர்வாளர் 13 ரூபிள் தரவேண்டிய சூழல் இருந்தது. மக்கள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடினர். போர் முனையில் படையாட்கள் பசியிலும் வதைந்தனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்திணை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப, போல்ஷிவிக்குகளின் குரல், ‘அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்களுக்கே! ரொட்டி வேண்டும்; நிலம் வேண்டும்; யுத்தத்திற்கு முடிவு கட்டு; ஒழித்து கட்டு கள்ளச்சந்தை வாணிபத்தை’ என்பதாக ஓங்கி எழுந்தது. பாரதியைப் போன்றே, பாரதிதாசன் வழி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நவம்பர் புரட்சியை, ‘புதிய ஒளி வீசுது பார்!’ என்று கூறுவதைப் பார்க்கிறோம்.‘சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்கதியுயரக் காணும் வழிஏது மின்றிமிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்வெம்பி யழுதார் பசியால் வெந்தார் நைந்தார்இதைக்கண்டார் லெனின் ஸ்டாலின். செக்கிலிட்டதேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார்உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார்உதித்ததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்’ என்று வரவேற்றார். புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகள் ஆட்சி கூட்டுப்பண்ணை விவசாயம் மேற்கொண்டதை, ‘நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்’! என வரவேற்றார். லெனின் புரட்சியைப்பற்றிக் கூறும்போது, ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சி என்பது ஒரு ஜனநாயகக் கட்டத்தின் வழியாகவே பிறக்கும் என்றார். அதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று பெயரையும் இட்டார். நேரடியாக சோசலிசத்துக்குள் குதித்துவிட முடியாது என்றும் கூறினார். ஜார் மன்னனின் நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆளும் முறைமையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், அந்த அமைப்பை வீழ்த்தவேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தியாக வேண்டும் என கட்சியை ஏற்கச் செய்ய லெனின் பெரிதும் முயன்றார். அதில் வெற்றியும் கண்டார். ரஷ்யப் புரட்சி 1917 மார்ச், நவம்பர் என இரு கட்டங்களாக நடைபெற்றது (ரஷ்யக் காலண்டர்படி பிப்ரவரி, அக்டோபர்). செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்படும் பழைய பெட்ரோகிராடைச் சேர்ந்த சோவியத்கள், ஜார் மன்னனைத் தூக்கி எறிந்துவிட்டு கெரன்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கினர். லெனின் தலைமறைவாக இருந்தார். ஏப்ரல் மாதம் ரஷ்யத் தலைநகர் வந்தார். மக்களைப் படிப்படியாக ஈர்த்து முழு அதிகாரத்தையும் அமைதியான வழியிலே கைப்பற்ற சோவியத்துகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 6 என்பது நேரத்துக்கு முந்தியது. நவம்பர் 8 என்பது கால தாமதமானது. நவம்பர் 7 மிகச் சரியானது என்று எடுத்துரைத்தார். சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்டவுடன் சோவியத் அரசு சார்பாக அமைதி, ரொட்டி, நிலம் என 3 பிரகடனங்களை அறிவித்தார். மின்மயமாக்குதலையும் சோவியத் அதிகாரத்தையும் கூட்டினால் கம்யூனிசம் என்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான சூத்திரம் என லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பதைத் தாண்டி, ஒரு தொழிலாளர் வர்க்க ஆட்சியை உருவாக்கிய பெருவெடிப்பை இப்புரட்சி நிகழ்த்தியது. அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற உருவான எழுச்சியானது, முதலாளித்துவ அமைப்பு முழுவதையும் தூக்கி எறிவதற்கும் வழிவகை செய்கிறது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. கற்றறிந்த ஞானியின் தலைமையிலான சோஷலிச அரசு, அடிமை முறையிலும் வறுமையிலும் இருந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சமுதாயத்தின் எஜமானவர்களாக மேன்மை அடையச் செய்தது. இலவச வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதி, கண்ணியமான வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது. புரட்சிக்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக்குள் வேலையின்மையைத் துடைத்துப் போட்டது. பூர்ஷ்வா வர்க்கத்தைப் பாட்டாளிகளால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்; சோசலிசம் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க முடியும்; ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இப்புரட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் உன்னதமான அனுபவம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலனி நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த – இருக்கும் நவம்பர் புரட்சி – சோவியத் புரட்சியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்ளும்போதில் 70 ஆண்டுகளைத் தாண்டி அதன் விழுமியங்கள் நிலைகொள்ளாமல் போனதின் துயரமும் நெஞ்சில் அப்பிக்கொள்வதை பலமாக உதறிக்கொண்டு, ‘சோவியத் புரட்சியின் விளைவுகள் நீடுழி வாழ்க’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. ‘இடிபட்ட சுவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ என்ற தமிழ்க் கவியின் வாக்கு எழுந்து பொலிகிறது.