கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

கரையற்ற நீர் – நூல் அறிமுகம்

காதலையும் சமூக அக்கறையையும் கரைகளாகக் கொண்ட தீராநதி கவிஞர் சூரியதாஸின் ‘கரையற்ற நீர்’. இரண்டு பகுதிகளை கொண்ட இக்கவிதைத தொகுப்பின் முதல் பகுதி சமூகத்திற்கானதும் ஒவ்வொரு மனிதனுக்குமான உணர்வுக் குவியலும். இரண்டாம் பகுதி தனக்கே தனக்கெனக் கொள்ளும் காதலைச் சொல்லும் குட்டிக் குட்டி நட்சத்திரக் கவிதைகள். சமப்ர்பணத்தில் ‘கவிதைப் ப்ரியர்களுக்கும்’ எனக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. இக்கவிதைத் தொகுப்பை எல்லோருக்குமானதாகவே கொள்ளலாம். உதிரி மல்லிகையைச் சுமந்துகொண்டு அந்தத் தெருவின் வீடுகளையெல்லாம் வாசத்தால் கோர்க்கும் பூக்காரியின் வாசமிகு கவிதையில் ஆரம்பமாகும் கரையற்ற நீரின் பயணம், ‘மலம் தின்ன வைக்கும் சாமியை விட சோறுண்ண வைக்கும் பூச்சாண்டி மேல்’ எனச் செல்வது நெகிழ்வு. ‘கோடிட்ட இடத்தின் மீதுநீட்டிப் படுத்திருக்கிறான் நியூட்டன்ஒரே ஒரு மதிப்பெண்ணுக்காக’என்ற கவிதை இன்றைய கல்வி முறை கேள்வி பதில்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்கிறது. கவிஞரின் அரசியல் சாடல் அலாதியானது. அக்கவிதைகளில் உடனிருக்கும் பகடி சமூக அக்கறை கொண்டது. எடுத்துக்காட்டிற்கு சில கவிதைகள்: ‘யார் வந்தாலும் குரைத்து எச்சரித்து அனுப்புகிறதுதிருடன் உள்ளே படுத்திருக்கிறானென்றுஅமைச்சர் வீட்டு நாய்’ ‘தெய்வம் ஒளிந்து கொண்டதுசாமி கும்பிட வருகிறார்அமைச்சர்’ காதலியின் இதழ் புன்னகை இழைகளால் தூக்கணாங்குருவிக் கூடு கட்ட முற்படும் கவிஞர்,‘உன்னைப் பார்த்ததும் முதலில்ஆச்சர்யக்குறி இட்டுவிட்டேன்அப்புறம்தான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்’என்று குறிப்பிடும் மோகத்தில் வார்க்கப்பட்ட காதல் நம்மையும் மயக்கத்தான் செய்கிறது. ‘முதன்முதலாக நாம் சந்தித்தபொழுது பருகியமுதல் கோப்பை தேநீருக்குமது என்று பெயர்’போதை தரும் துளியிது. ‘தெய்வத்தை வாசலில் பார்த்தேன்தேவதையை வரவேற்கநீ கோவிலுக்கு வருகிறாய்’எனும் வரிகள் காதலிக்கான அதிகபட்ச ஆராதனை. யானையைப் பற்றியான ஒரு கவிதையை மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருப்பது ஒரு கவிஞருக்குச் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை. வாழ்த்துகள் மொழிபெயர்த்தவர்களுக்கும். இது கரையற்ற நீர் மட்டுமல்ல; கறையற்ற நீரும் கூட. இதில் யாவரும் மூழ்கித் திளைக்கலாம். முகிழ்ந்து முத்தெடுக்கலாம். சமூகம் ஒதுக்காது காதல் செதுக்கிக் கவிதை படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள். வாசுகி தேவராஜ்

பொன்னியின் செல்வன் – 9

பொன்னியின் செல்வன் – 9

பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  பீஷ்மரை ஒத்தவராக இருந்த மலையமான் மிலாடுடையாரின் பேச்சை, ஆதித்த கரிகாலன் மறுத்துப் பேசாதவனாயிருந்தான். பார்த்திபேந்திரன் வீரபாண்டியனை எதிர்த்த போரின் போது துணைசெய்தவனாய் இருந்ததால் ஆதித்த கரிகாலனுடன் இணைபிரியாதிருந்தான். அவனுக்கு, வந்தியத்தேவனும் கரிகாலனும் பாராட்டிய நட்பால் வந்தியத்தேவன் மேல் பொறாமை இருந்து வந்தது. பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்த ஆதித்த கரிகாலனிடம், ஏற்கனவே வந்தியத்தேவனின் மீதிருந்த பொறாமையால், அவன்தான் போன காரியத்தை உத்தேசித்துப் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென பார்த்திபேந்திரன்  குறை கூறினான்.  மிலாடுடையார்  பொறுமையாக சூழ்நிலையை இருவருக்கும் விளக்கத் தொடங்கினார். கடம்பூரில் நடந்த சதியாலோசனை பற்றிக் குறிப்பிட்டவர், பழுவேட்டரையர்கள் நாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளை திட்டமிடுவதாகவும், மதுராந்தகனுக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும், அந்தக் கூட்டத்தில் மதுராந்தகன் கலந்து கொண்டதையும் கூறி வருந்தினார்.  “மதுராந்தகன் கையில் வாளெடுத்து அறியாதவன்; பெண்ணாய்ப் பிறப்பதற்கு பதில் ஆணாய்ப் பிறந்தவன். மேலும், எனக்கு அரசுரிமைப் பட்டம் கட்டிவிட்டு, இப்போது எப்படி மாற்றலாம்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்க, மதுராந்தகனுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி மலையமான் அவனை சமாதானப்படுத்தினார். அதற்கு பார்த்திபேந்திரன் வெகுண்டு எழ, அவனை அடக்கியவர், “என் பேரனுக்கு சோழ அரசு இல்லையெனில்  படையெடுத்தாவது பெற்றுத் தருவேன்” என்று கூறி அவனையும் சமாதானப்படுத்தினார். கடம்பூர் மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பானோ என்று வந்தியத்தேவன் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், சின்னப் பழுவேட்டரையர் அவனை ஒற்றன் என்று குற்றம் சாட்டியதால் . பின்னர் தெளிந்ததாகவும் மிலாடுடையார் சொல்லவும், தான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறிய ஆதித்த கரிகாலன், குறுக்கே வந்தியத்தேவனை பழித்துக் கூறிய பார்த்திபேந்திரனையும் அடக்கினான். மிலாடுடையார் இப்போது சோழ ராஜ்யத்திற்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனை உடனே இங்கு வருவிக்குமாறும், பின் அனைவரும் சென்று சக்ரவர்த்தியைப் பழுவேட்டரையரின் பிடிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கூறினார்.  வந்தியத்தேவனை குந்தவையிடம் அனுப்பியிருப்பதாக ஆதித்த கரிகாலன் கூற, மிலாடுடையார் குந்தவையின் மீதான நம்பிக்கை தனக்குப் பெரிதாக உள்ளதாகவும், அவளைப் போன்ற அறிவுடையவர்கள் இதுவரை சோழர் குலத்தில் பிறந்ததில்லை எனவும், முதன்மந்திரியான அநிருத்தர் கூட குந்தவையின் கருத்தைப் பெரிதும் மதிப்பவர் எனவும் பெருமையாகக் கூறினார். அப்பொழுது பார்த்திபேந்திரன், ‘வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்கு முன் நந்தினியைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது?’ என்று கூற, ஆதித்த கரிகாலன் உறுத்து பார்த்திபேந்திரனைச் சுட்டு விடுவது போலப் பார்க்கவும், பார்த்திபேந்திரன் நடுங்கி விட்டான்.  மிலாடுடையார் பார்த்திபேந்திரனை மறுநாளே  இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனை அழைத்து வரக் கிளம்புமாறு கூறினார். பார்த்திபேந்திரன் அலைக்கழிப்புடன் நின்றிருக்கும் ஆதித்த கரிகாலனை நெருங்கினான். என்னவென்று கேட்க, ஆதித்த கரிகாலன் நெடிய பெருமூச்சை விட்டு நீங்காத வேதனையில் துடிப்பதை எவ்வாறு சொல்ல முடியும் என்று வருந்தியபடி இருக்க, அனைவரும்  அரண்மனைக்குத் திரும்பினர். பார்த்திபேந்திரன் எப்படியும் இதைக் கேட்டறிவது என்று உறுதி பூண்டான்.  அரண்மனை திரும்பியதும் அரவான் கதை கேட்க பெரியவர் கிளம்பியவுடன், பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனை அணுகினான். ஆதித்த கரிகாலன், மனம் நிலையற்று தவிப்புற்றிருந்தான். பார்த்திபேந்திரன் போரைப் பற்றிப் பேச்செடுக்கையில் ஆதித்த கரிகாலன் வேதனையுடன் போரையும் தன் சாதனைகளையும் வெறுத்து விரக்தியுடன் பேச, வேதனைகளைச் சொல்லுமாறு பார்த்திபேந்திரன் வற்புறுத்தினான். பெருமூச்செறிந்த ஆதித்த கரிகாலன், தூரத்தே வெறித்துப் பார்த்தபடி, ‘என் மனதைத் திறந்தால் இருப்பது என் தாயும் தந்தையும் அல்ல; குடும்பத்தினர் அல்ல; இந்த தேசம் அல்ல. அங்கு இருப்பது பழுவூர் இளையராணி நந்தினி மட்டும்தான்’ என்று கூற, பார்த்திபேந்திரன் திடுக்கிட்டான். தங்களுக்கு அவளை எப்படித் தெரியும் என்று கேட்க, ஆதித்த கரிகாலன் நந்தினியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ‘நந்தினியை என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிறு பெண்ணாக சந்தித்தேன்.  நானும் என் தம்பி, தங்கையும் விளையாடி முடித்துவிட்டு என் பாட்டி செம்பியன்மாதேவியைச் சந்தித்தபொழுது, அங்கு உதவி கேட்டு வந்தவர்களுடன் நின்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள் என்னைக் கவர்ந்து கொண்டாள். அவளை எங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளச் சொல்லி என் பாட்டி சொல்ல, குந்தவைக்கு அவளை ஏனோ பிடிக்காமல் போயிற்று. அழகின் மீதான பொறாமையில் சொல்கிறாள் என எண்ணி, அவளைச் சீண்டுவதற்காகவே நான் நந்தினியுடன் தொடர்ந்து பழகி குந்தவையுடன் சண்டை போட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிய நாட்டு யுத்தத்துக்குப் படையெடுத்துச் சென்ற என் தந்தைக்கு உதவியாக நானும் சென்றுவிட்டேன். அந்த யுத்தத்தில் தோற்று வீரபாண்டியன் எங்கோ மறைந்துகொள்ள, இலங்கைக்கும் நம் படைகள் செல்ல, நாங்கள் அதற்கெல்லாம் உதவி செய்துவிட்டுத் திரும்ப இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.   நான் திரும்பி வருகையில் குந்தவையும் நந்தினியும் வெகு அழகாகப் பரிமளித்ததுடன் தோழிகளாகவும் ஆகியிருந்தனர். எனக்கு நந்தினியுடன் பேசுவதானால் அத்தனை இன்பமாய் இருந்தது. ஆனால், என் பாட்டி செம்பியன் மாதேவிக்கோ குந்தவைக்கோ நான் அவளுடன் பேசுவது பிடிக்கவில்லை. பாட்டி என்னைக் கூப்பிட்டு, “அவள் சாதாரண அர்ச்சகருடைய பெண். அவளுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகக்கூடாது” என்று கூறினாலும் நான் கேட்பதாயில்லை. திடீரென ஒருநாள், அவளை அவளுடைய உறவினர்களுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால் நான், என் கோபத்தைக் குந்தவையிடம் காட்டிக் கொண்டிருந்தேன். பிறகு, இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காக சோழப் படைகளுடன் நான் தொண்டை நாட்டுக்கு வந்தபோதுதான் நீயும் நானும் நண்பர்களானோம்.  இலங்கையில்  நமது படை முறியடிக்கப்பட்டு கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்துவிட்டார் என்ற பின்னடைவு நமக்கு ஏற்பட்டதும் ஒளிந்திருந்த வீரபாண்டியன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து மதுரையைக் கைப்பற்றினான். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்தும்கூட, அவர் மதுரைக்குப் படையெடுக்கச் சித்தமானார். அவரைத் தடுத்து, மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையைக் கொண்டுவராமல் சோழ நாட்டுக்குத் திரும்பமாட்டேன் என சூளுரைத்துவிட்டு நாம் சென்றோம்.  வரிசையாய் வெற்றிகளைக் குவித்து, தப்பியோடிய வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு சென்றோம். அப்போது வைகை நதியின் நடுவில் ஒரு சோலையில், ஆண்டாளை ஒத்த தோற்றத்தில் நந்தினியைக் கண்டேன். அவள் கண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாகக் கூறி, தன் தாய் தந்தை மற்றும் தமயனுடன் வசிப்பதாகவும் தமயன் காசிக்குப் போயிருப்பதாகவும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டாள். அவளின் மீதான மோகம் கொழுந்துவிட்டு எரிந்தபோதும், வந்த காரியம் முடியட்டும் என்று பொறுமை காத்து , அவள் இருந்த பக்கம் படைகள் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். வீரபாண்டியனுடைய தலையுடன் தந்தையிடம் சென்று, அந்த வெற்றிக்குப் பரிசாக நந்தினியை மணக்கக் கேட்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.  ஆனால், தப்பி ஓடிய வீரபாண்டியன் அவள் வீட்டிலேயே கட்டிலில் படுத்திருந்ததையும் இவள் அவனுக்குப் பணிவிடை செய்ததையும் கண்டவுடன் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. நந்தினி என் காலில் விழுந்து, “நீங்கள் என்மீது ஒருகாலத்தில் கொண்டிருந்த அன்பின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். அவரை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றாள்.  “பாண்டியனுக்கும் உனக்கும் என்ன உறவு?” என்று அவளிடம் கேட்டேன். நந்தினி, “அவர் எனது காதலர். என் தெய்வம். என்னை மணம் புரிந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று சொல்லவும், என் கோபம் கட்டுக்கடங்காமல் சென்று அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரே வீச்சில் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினேன்.  உலகத்தின் மொத்த வெறுப்பு, குரோதம் எல்லாவற்றையும் அடக்கிய பார்வையில் நந்தினி என்னைப் பார்த்தாள். அச்சமயத்தில் நீங்களெல்லாம் வந்துவிடவும் குடிலில் இருக்கும் பெண்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என உத்தரவு இட்டுவிட்டு பாசறைக்குத் திரும்பிய என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என்றும் என் பிரியத்துக்குரிய நந்தினி வேறொரு ஆடவனின் உயிருக்காய் மன்றாடினாள் என்பதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  மறுபடி அவளைத் தேடிக்கொண்டு சென்றபோது அவளின் பெற்றோர் என நான் பழையாறையில் முதன்முதல் கண்டவர்கள் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தனர். விசாரித்தபொழுது நந்தினியைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் மூத்த மகளின் வீட்டுக்குப் போயிருந்ததும் திரும்பி வரும்பொழுது ஒரு பெண்ணின் கை, காலைக் கட்டிச் சிதையில் போட சிலபேர் முயன்றதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அவளைக் காணவில்லை என்றும் அழுதனர். நான், அந்தச் சிதையில் எரிந்த பெண் நந்தினியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து வருந்தி எரிச்சலடைந்து திரும்பிவிட்டேன்.  பின்னர் நாம் பழுவேட்டரையரின் திருமணம் பற்றி அறிந்துகொண்டு ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்னை அழைத்து இளவரசப் பட்டாபிஷேகம், மேலும் பரகேசரி என்னும் பட்டம் அளித்து இனி சோழராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுவதும் உனக்கே என என் தந்தை ஆசிர்வதித்து, அதற்குப் பாட்டியும் பெரியோர்களும் ஆசி கூறும் வைபவம் நடைபெற்றது. அந்த மணிமகுடத்துடன் அன்னை, பாட்டி என அனைத்து மாதரசிகளிடமும் ஆசி பெற அந்தப்புரத்துக்குத் தந்தை என்னை  அழைத்து சென்றார். அங்கே நடுநாயகமாக நந்தினி நின்றாள். ராணிக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முன்னைக் காட்டிலும் அழகாக, சர்வாலங்கார ரூபிணியாக நின்ற அவளைக் கண்டதும் அவளை மீண்டும் பட்டமகிஷியாக அடையப் போகிறேனா என்றெல்லாம் ஒரு கணம் என் மனம் மனக்கோட்டை கட்டியது.  ஆனால், அப்பொழுது என் தந்தை ‘ஆ’ வெனக் கூச்சலிட்டபடி மூர்ச்சையடைந்து விட்டார். அவரைத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர் நந்தினியைப் பார்த்துதான் மூர்ச்சை அடைந்திருப்பாரோ என்ற ஐயம் எனக்கிருந்தது. நான் குந்தவையைத் தனியே அழைத்து நந்தினியைப் பற்றிக் கேட்க, “இப்போது நந்தினிதான் பழுவூர் இளைய ராணி. பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு வந்திருக்கிறாள்” என அவள் கூறினாள். அதைக் கேட்டபோது நான் அடைந்த வலியைப் போல் இதுவரை எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை. அன்று மயங்கிய என் தந்தையும் இன்றுவரை பூரண குணம் அடையவேயில்லை.  நந்தினி ஒருநாள் என்னை அவள் அரண்மனைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்ப, நான் அங்கு சென்று அவளை லதா

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

பொன்னியின் செல்வன் – 8

பொன்னியின் செல்வன் – 8

ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது.  ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் பொறுமையாகவே தகுந்த பதிலைக் கூறினான். சற்று முன் பறையறிந்து சென்றதைப் பற்றி குந்தவை கேட்கவும், அது ஒரு ஒற்றனைப் பற்றி என்று ஆழ்வார்க்கடியான் கூறவும் குந்தவை ஆர்வமாய்க் கேட்கலானாள். அவன் ஒரு முரட்டு வாலிபனென்றும் சக்ரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும் அடுத்து பட்டத்துக்கு வரப்போகிறவர்களைப் பற்றியும் தன்னிடமும் குடந்தை ஜோசியரிடமும் விசாரித்ததைக் கூற, தான் அங்கு அவனை சந்தித்ததாகக் குந்தவை கூறினாள். மேலும், எங்கு அவனைக் கண்டாலும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு குந்தவை கூற, ஆழ்வார்க்கடியான் விஷமப் புன்னகை செய்தபடி ‘அவனே உங்களைத் தேடி வருவான்’ என்று கூறினான். செம்பியன் மாதேவியைச் சந்தித்ததையும் குந்தவையைப் பார்க்க வருமாறு அவர் சொல்லச் சொன்னதையும் கூறி ஆழ்வார்க்கடியான் விடை பெற்றான். ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து தனது தமையனாரான ஈசான பட்டரைப் பார்க்க சிவன் கோவிலுக்குச் சென்றான். ஈசான பட்டர் சிவனைப் பழித்துப் பேசியதற்காக ஆழ்வார்க்கடியானை வெகுவாகக் கோபித்துக் கொண்டதைப்போல பாவனை செய்தார். அவரின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கவே ஆழ்வார்க்கடியான் அவரை விடாமல் பின் தொடர்ந்தான்.  கம்சன் வேடம் பூண்டவனுக்கு ஈசான பட்டர் உதவி செய்வதைப் புரிந்து கொண்டான். காலையில் அந்த மர்ம மனிதனும் ஈசானபட்டரும் மறைந்து செல்வதைக் கவனித்து அவர்களின் பின்னாலேயே சென்றான். இருவரும் ஓடையில் படகில் ஏறியபோது திரும்பிப் பார்த்தவனின் முகத்தைக் கண்டபோது, தன் சந்தேகத்தின்படி அது வந்தியத்தேவன்தான் என்று தெளிந்தான். முதன் மந்திரி அநிருத்த பிரும்மராயரின் அரண்மனைக்குச் சென்று அதன் நந்தவனத்தில் புகுந்து வந்தியத்தேவன் இறங்கப் போகும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.  நீரோடைக் கரையில் இருந்து ஈசானபட்டரும் வந்தியத்தேவனும் இறங்கி படிக்கட்டுகளின் வழியாக மேற்புறத்துக்கு வந்ததும் வந்தியத்தேவன் சிலையெனச் சமைந்து நின்றான்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்திருந்த குந்தவை எழுந்து நின்று வந்தியத்தேவனை கண்ணோடு கண் நோக்கினாள். உலகமெலாம் ஒருமுறை நின்றுவிட்டதைப் போலவும், அந்த நொடியில் பல யுகங்கள் பயணம் செய்து திரும்பியது போலவும் தாங்கள் யாரென மறந்து ஆதி ஆணும் ஆதிப் பெண்ணுமாய் முதன்முதலாய் கண்டு இச்சை கொண்டது போலவும் இருவரின் மனங்களும் சஞ்சாரம் செய்தன. வெளியில் இதைக் காட்டிக்கொள்ள முடியாமல் இருவரும் தவிக்க, ஈசான பட்டர் தொண்டையைக் கனைக்க, நிஜவுலகை அடைந்த குந்தவை வலிந்து வருவித்துக் கொண்ட கடினக் குரலில், ‘என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?’ எனக் கேட்க, சீண்டப்பட்டது போல, நீங்கள் யாரெனத் தெரிந்தால்தான் அதைச் சொல்ல முடியும்’ எனத் துடுக்காக வந்தியத்தேவன் கூறினான்.  ‘யாரைப் பார்க்க நினைத்தீர்கள்?’ என்று குந்தவை வினவ, சோழர் தொல் குலத்தின் மங்கா மணிவிளக்கை, சுந்தரச் சோழரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள்மொழிவர்மரின் தமக்கையுமான இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென நீட்டி முழக்கி நிமிர்வுடன் வந்தியத்தேவன் கூறினான். ‘தானே குந்தவை’ என்று  அவள் கூறவும் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்ததும் அவரைத்தான் எனக் கேட்டுத் தெளிந்து கொண்டான். அதற்குமேல் அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், தங்கள் மனதையும் இருவரும் சொற்களில் மறைத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர். வந்தியத்தேவன் கொடுத்த ஓலையைப் படித்த குந்தவை மேலும் மலர்ந்து அடுத்து என்னவென்று கேட்க, ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று அவன் கூற, அதற்கு முன் முக்கியமானதொரு வேலையை ஒப்படைக்கப் போவதாகக் குந்தவை சொல்ல, வந்தியத்தேவன் மறுத்தான்.  இளவரசர் தன்னை குந்தவையின் அந்தரங்கக் காவலனாக எதை ஏவினாலும் செய்வதற்காகவே அனுப்பினார் எனவும், ஆனால் தான் பழுவேட்டரையர்களைப் பகைத்துக் கொண்டு அவர்களால் தேடப்படுபவனாகவும், நெருங்கிய நண்பனான கந்தமாறானாலேயே துரோகி என்று குற்றம் சாட்டப்படுபவனாகவும் இருக்கிறேன். வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்பவன் தன்னை ஒற்று பார்ப்பதாகவும் கூறினான். நந்தினி தன்மேல் ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள் எனவும் இத்தனை இக்கட்டில் தன்னை முக்கியமான காரியத்துக்கு உபயோகப்படுத்துவது குந்தவைக்கு சிக்கலில்தான் முடியும் என்று கூறி வருந்தினான். ஓடையில் படகில் ஏறி அவன் வந்ததிலிருந்து நடந்த கதையை ஒன்றுவிடாமல்  குந்தவை கேட்டுக் கொண்டாள். வந்தியத்தேவனும் வந்து சேர்ந்த கதையைச் சொல்லி, அந்த சந்திப்பு சீக்கிரம் முடிந்து விடாதபடி நீட்டிக் கொண்டே போனான். பழுவேட்டரையர்களின் படைவீரர்களால் துரத்தப்பட்ட வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தபொழுது பின்னால் படைவீரர்கள் நெருங்க, சேந்தன் அமுதனிடம் குதிரையை ஓட்டிக்கொண்டு முன்னால் செல்லும்படியும் என்னைக் கேட்டால் ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று கூறுமாறும் சொல்லித் தப்பிக்க யத்தனித்தான். சேந்தன் அமுதன் பொய் கூறமாட்டேன் எனச் சொல்லவும், வந்தியத் தேவன் நிஜமாகவே நீரில் மூழ்க, தொடர்ந்து வந்த படைவீரர்கள் சேந்தன் அமுதனைத் துரத்திச் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து தப்பித்து இரவில் அடர்ந்திருந்த தோப்புகளில் மறைந்து பழையாறைக்குச் சென்று கொண்டிருந்தான். இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறங்கியபோது நந்தினியின் அரண்மனையில் கேட்ட அதே ஆந்தைக்குரல் கேட்க, தூணில் ஒளிந்து கொண்டு பார்த்தபொழுது அந்த மந்திரவாதி ரவிதாஸன் வந்துகொண்டிருந்தான். பார்க்கவே அச்சமூட்டும்படி இருந்த ரவிதாஸன், இருளில் தன்னைக் கவனித்திருக்க மாட்டான் என்று நினைத்திருந்த பொழுது, அவன் வந்தியத்தேவன் கழுத்தை நெறித்து  நந்தினியின் முத்திரை மோதிரத்தைத் தருமாறு கேட்க சமாளித்து தூணைப் பிடித்து காலால் தாக்கிவிட்டுத் தப்பித்தான். பழையாறை நகரில் நுழைய தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த பொழுது, நாடகக் கோஷ்டியுடன் இணைந்து கம்ஸ வேஷம் தரித்து ஊருக்குள் புகுந்து சிறிது நேரம் தெருக்களில் ஆடிக் களித்தபின் ஆதித்த கரிகாலன் சொன்னபடி ஈசான பட்டரைச் சந்தித்தான். சமணர் முழையில் அவனை ஒளித்து வைத்த ஈசான பட்டர், தக்க நேரம் பார்த்து இளவரசியைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.  விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட குந்தவை, இதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறும்படியான அபாயமானதொரு வேலையைத் தரப்போவதாகக் கூற, வானிலேறி விண்ணையே சாடும் வேலையாக இருப்பினும் செய்யக் கூடியவனாக வந்தியத்தேவன் சித்தமானான். திரும்பவும் மண்டபத்திற்கு வந்து  பனை ஓலைத்துணுக்கில் தங்கப் பிடி இட்ட எழுத்தாணியில் குந்தவை எழுதினாள். ‘பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்’ என்று எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சித்திரம் ஒன்றை வரைந்து, “உடனே இந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்று அருள்மொழிவர்மரிடம் கொடுத்து, அவரைக் கையோடு கூட்டிவர வேண்டும்” எனக் கட்டளையிட்டாள்.  ஆதித்த கரிகாலரிடம் பணிபுரிந்த வந்தியத்தேவன், சுந்தர சோழரையும் சோழர் குலவிளக்கான குந்தவையையும் சந்தித்த பிறகு, இளவரசர் அருள்மொழிவர்மரையும் சந்திக்கப் போகும் பேறை நினைத்துப் பெருமிதம் கொண்டான். “இப்போதே கிளம்புகிறேன்” என்று ஓலையை வாங்கும்பொழுது குந்தவையின் காந்தள் விரல்களைத் தீண்டியபொழுது மறுபடியும் அவன் உலகம் சுழல மறுத்து நின்றது. ஈசான பட்டரின் குரலைக்கேட்டு நடைமுறைக்குத் திரும்பினான்.  மறுநாள், படைவீட்டு சாலையின் வழியே யானையில் அமர்ந்தபடி குந்தவையும் வானதியும் பராந்தகர் ஆதுரசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீதியில் ஈழநாட்டுக்குச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகள் குடியிருந்தார்கள். அங்கிருந்தவர்களின் நலத்தை விசாரித்து அவர்களுக்குத் தேவையானதை வழங்க உத்தரவு இடுவது குந்தவையின் வழக்கம். இன்றும் அதுபோல வானதியைப் பரிகசித்தபடி உத்தரவை வழங்கிக் கொண்டிருந்தவளை, தலைமை வைத்தியர் அணுகி வணங்கினார். தான் சொன்ன இளைஞனை இலங்கைக்கு அனுப்பி மூலிகைகள் தருவித்துக் கொள்வதாகச் சொன்ன ஏற்பாட்டை உறுதி செய்துகொண்ட குந்தவை, அவனைப் பற்றிக் கேட்க, வைத்தியர் அந்த இளைஞனுடன் கோடியக்கரை வரை என் மகனும் துணைக்குச் செல்வதாகக் கூறி அவர்களை அறிமுகப் படுத்தினார்.  வானதி வைத்தியர் போல் வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனை அடையாளம் கண்டுகொண்டு குந்தவையிடம் கூற, அவள் ஏதும் தெரியாதது போல இருக்கலாம் என்று சமாதானப் படுத்தினாள். குந்தவை வைத்தியரிடம், சக்கரவர்த்திக்கு  வைத்தியம் செய்ய மூலிகை எடுக்கப் போகவேண்டியிருப்பதால் வழியிலுள்ள அரசு அதிகாரிகள் இவர்கள் கோரும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற திருமந்திர ஓலையையும், கலங்கரை விளக்குக் காவலருக்கு ஒரு ஓலையும் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொண்டாள். கிளம்பும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தபின்னும் ஏதோவொரு சாக்கை வைத்துக்கொண்டு குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக குந்தவை குறிப்புணர்த்த, வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் குதிரையில் கிளம்பினர். குந்தவை தன் மனம் வந்தியத்தேவனின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை எண்ணி அதிசயப்பட்டபடி இருக்க, வானதி அதைக் கண்டுபிடித்தாற்போல் ஏதோ கேட்க, யோசனையுடன் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தொடரும் சவிதா