ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை. இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது. தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு: பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன். 1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும். 2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம். 3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார். 4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார். 5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. 6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது. 7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.” 9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள். இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். 10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு? 12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும். கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில் ‘தூர்’எழுதிசுஜாதா காதல் கொண்டுமென்பூவாய் மேல் வந்தபறவையே நீ எங்கு இருக்கிறாய்? அம்மையை எழுதி எழுதிஅப்பனுக்குப் பிள்ளையாகி‘ஆனந்த யாழை’ மீட்டியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘அணில் ஆடும் முன்றிலில்’மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டுஅத்தைகளின் உலகம் போனபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘தெய்வங்கள் எல்லாம்தோற்றே போகும்’தான்உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? எழுத்து பழகி எங்களைப் பழகிசத்தம் இல்லாமல் அதிகாலை முத்தம்போல் கடந்தஉன் காதல் கவிதைக்குத் துணை தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கொரு தொட்டில் கட்டிநானே தாயாய் மாறிட வேண்டும்’ என்று சொன்னாயேஉன் தாலாட்டில் நாங்கள்ஆண் தாயாக உறங்குகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘வெயிலோடு உறவாடி’ பால்யத்தையோ சொன்னாய்வேறெங்கு உனக்கு உறவு?வா விளையாடுவோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘விழிகளில் ஒரு வானவில்இமைகளைத் தொட்டுப் பேசுதே’ என்றாய் நீ இல்லாமல் சிறு புல்லின்மீது விழுந்தபனித்துளியாய் இருக்கிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? “கனாக் காணும் காலங்கள்’ இல்லாமல்இனி காதலிக்க முடியுமா இந்தத் தலைமுறை?பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘உனக்கென இருப்பேன்’ என்று முடித்திருக்கலாம்‘உயிரையும் கொடுப்பேன்’ என்றாய்‘வார்த்தைகள் இல்லை என்றால்உன் மவுனங்கள் போதும்’ என்றபறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘சுற்றும் விழிச் சுடராய்‘மண்ணை உண்ணும் பூக்கள்’ வரைந்த உன்னைவிழுங்கிய உலகில் தேடுகிறோம்பறவையே நீ எங்கு இருக்கிறாய்? ‘ஒரு பாதி கதவு நீயடி’ என்றுதாண்டவம் ஆடியபறவையே நீ எங்கு இருக்கிறாய்? “உன் பேரைச் சொல்லும்போதேஉள் நெஞ்சில் கொண்டாட்டம்..உன்னோடு வாழத்தானே எந்நாளும் போராட்டம்’ என்றபறவையேஇன்னும் கொஞ்சம்போராடியிருக்கலாம் அல்லவா?

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

தடங்கள்

தடங்கள்

சுவடு வாசகர்களுக்கு வணக்கம். கடந்த ஜூன் மாதத்தில் சுவடு இணைய இதழ் புதுப் பாய்ச்சலைத் தொடங்கிய பிறகு, நீங்கள் காட்டும் பேராதரவிற்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை. இந்தச் சிறப்பு உங்களால் வந்தது. வாரந்தோறும் இந்தப் பகுதியில், முந்தைய வாரத்தில் வாசகர்கள் மனத்தில் சுவடு பதித்திருக்கும் தட ங்களை, வாசகர்களிடமே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் வாசகர்கள் எண்ணங்களை அலசவும் அவர்களின் புதிய யோசனைகளை அறிந்து செயல்படுத்துவதற்காகவும் ஒரு வாசலைத திறந்து வைக்கிறோம். ஜூன் மாதத்திலிருந்தே சுதர்சனம்.E.S. அவர்களும் ம.செ. மோகன் ராஜா அவர்களும் கவிதைகளுக்குத் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு தந்து வருகிறார்கள். அவர்களது கருத்துகள் நமது கவிஞர்களுக்கு உற்சாகம் தருபவை. கவிஞர்களைக் கொண்டாடும் அவர்களுக்கு எமது சிறப்பு வந்தனங்கள். சென்ற வாரம் (01.07.2023 முதல் 07.07.2023 வரை) வெளிவந்த படைப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். கவிதாயினி யாழினிஸ்ரீ எழுதிய பின்னப்பட்ட எண்ணங்கள் என்ற கவிதை சென்ற வாரத்தில் மிகப் பெரிய வாசகர் பரப்பைச் செனறடைந்திருக்கிறது. இரண்டு தொடர்கள் கவர்ந்த மனங்கள் சவிதா எழுதிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கமான வடிவம், முன்பிருந்தே வந்துகொண்டிருக்கும் தொடர். அதற்கே உரிய வாசக நண்பர்கள் இன்றும் அதைப் பின்தொடர்கிறார்கள். மற்றொன்று, சென்ற வாரம் தொடங்கப்பட்ட மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் தொடர். தோழர் சி.ஞனாபாரதியின் அலசலில் மகாபாரத இதிகாசத்தில் இடம்பெற்றுள்ள சில நிகழ்வுகள் மீதான கேள்விகளை முன்வைக்கும் இந்தத் தொடர், வாசகர் பரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடர் குறித்து தசாமி அவர்கள் கருத்திடும்போது, ‘இதிகாசம் என்பது தொன்மையானது; காலத்தால் அழிவின்றித் தொடர்ந்து பேசப்படுவது‌ என்ற வழக்கமான பார்வையிலிருந்து, சற்றல்ல; மிக ஆழமாகவே விலகி தனித்த கருத்தைப் பேசுகிறது. குறுக்குவழிக்காரர்களை நறுக்கு விசாரணை செய்கின்ற இப்பெருந்தொடரை வாசிப்பதை அதையொட்டிச் சிந்திப்பதை நினைக்க நினைக்க சிந்தை மகிழ்கிறது என்றும் சுவடு தளமான இங்கு இவ்விடம் நவ்வியொன்றின் துள்ளலோடு ஒரு நெடும் பரப்பைக் கடக்க இருப்பது, வெறும் வாசிப்பல்ல நறும் வாசிப்பு…’ என்று பாராட்டி இருப்பதை, சுவடு மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறது. விமர்சனங்கள் பெறும் முக்கியத்துவம் கவிதை குறித்த மார்க்சின் கனவும் சிம்போர்ஸ்காவின்  கவிதையும் என்ற எஸ்.சுதாகரின் விமர்சனக் கட்டுரையை நிறைய பேரை ஈர்த்துள்ளதோடு, பாராட்டையும் பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும் என்ற கிரிக்கெட் குறித்த கோவை பிரசன்னன் அவர்களுடைய விளையாட்டு விமர்சனம் சிறப்பான கவன ஈரப்பைப் பெற்றிருக்கிறது. ஆறுமுகம் என்ற அன்பர் அந்தத் தருணத்தை, ‘விதியும் விளையாடும்’ என்று நறுக்கென்று விமர்சித்திருந்தார். மாமன்னன் திரைப்படம் குறித்து மது ராஜேந்திரன் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு, அந்தப் படத்தின் மீதான வீச்சைக் காட்டுகிறது. முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களும் சகோதரி பானுரேகா அவர்களும் விமர்சனத்தைப் பாராட்டி வாழ்த்தியிருந்தார்கள். இந்த வாரத்தில் இரண்டு நூல் விமர்சனங்களும் வெளியாகியிருந்தன. தோழர் அக்ரி பரத்வாஜ் எழுதியிருந்த மார்க்சின் இலக்கிய மனம் என்ற நூலறிமுகம் புத்தகப் பிரியர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘நூல் அறிமுகம் மிகமிக அருமை. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே‘ என்று ம. செ. மோகன் ராஜா அவர்கள் பாராட்டியிருந்தார். ‘அழகான, சுருக்கமான, தெளிவான விமர்சனம்’ – இது அனிதா ஸ்ரீகாந்த் அவர்களின் பாராட்டு. தோழர் கோமதிசங்கர் அவர்கள் எழுதிய தேரி என்ற நாவலுக்கான விமர்சனமும் வாசிப்பாளர்களிடம் சிறப்பான கவனம் பெற்றுள்ளது. ‘வாசிக்கத் தூண்டும் விமர்சனம்’ என்று ரேணு சதீஷ் மற்றும் ம. செம. மோகன் ராஜா ஆகியோரும் ‘அருமையான மதிப்புரை’ என்று பானுரேகா மற்றும் சுமி ஹரி ஆகியோரும் பாராட்டியிருந்தார்கள். இந்த வாரத்தில் முத்து ஜெயா அவர்கள் எழுதிய வேர் சிறுகதை சுவடு இதழை அலங்கரித்தது. அந்தக் கதையை ஏராளமான வாசகர்கள் வாசித்திருப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வாரம் இடம்பெற்ற முகப்புக் கட்டுரை, தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி மாபெரும் கவனம் பெற்றுள்ளது குறித்து சுவடு பெருமகிழ்ச்சி கொள்கிறது. அது மட்டுமல்லாது, ஜூன் மாதத்தில், கலைஞர் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி சுவடு மன்சூர் எழுத்தில் வெளியான கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்? கட்டுரை இந்த மாதத்திலும் புதிய வாசகர்களால் வாசிக்கப்படுவதும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். மேலும்தோழர் கோமதி சங்கர் அவர்களின், 1946 – இறுதிச் சுதந்திரப் போர் நூல் குறித்த விமர்சனம், வன்மம் களைந்த மெய் கவிதை, தேவி லிங்கம் எழுதியுள்ள நிர்பந்தங்கள் சிறுகதை, ஈகோலை எழுத்தில் துள்ளிக் குதிக்கும் ஜீன்கள் அறிவியல் கட்டுரை, கோவை பிரசன்னாவின் வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள் முகப்புக் கட்டுரை, உமா மகேஸ்வரி அவர்களின் ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு, சேதுவின் பாதி ஆப்பிள் விளைவு மற்றும் கோவை பிரசன்னா எழுதிய சிறு பத்திரிகைகள் – அறிந்ததும் அறியாததும் ஆகிய கட்டுரைகள், பொற்கொடியின் யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா? மற்றும் எஸ்.சுதாகரின் மெழுகாய் உருகும் மனங்கள் ஆகிய நேர்காணல்கள் உட்பட, பல்வேறு வகைமையிலான படைப்புகளும் சுவடு வாசகர்களின் மாபெரும் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி அவர்கள் எழுத்தில் சென்ற மாதம் வெளியான, அரசுப்பள்ளிகளில் நிலவும் கல்விச் சிக்கல்களைக் குறித்துப் பேசும் கட்டுரை, ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ கட்டுரை 20000-க்கும் அதிகமானவர்களால் வாசிக்கப்பட்டிருப்பது சுவடு இதழின் பயணத்தில் ஒரு மைல் கல் என்று மகிழ்கிறோம். வாசகர்களும் படைப்பாளிகளும் காட்டி வரும் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி பாராட்டுகிறோம். தரமான படைப்புகளை வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபோடும் இந்தப் பயணத்தை இன்னும் உங்கள் அனைவரின் ஆதரவோடு சிறப்பான அனுபவமாக்குவோம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகிறோம். தொடர்ந்து சுவடுக்கு உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்.

யாவரும் கேளிர்?!

யாவரும் கேளிர்?!

சிறுகதை “குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?” கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி. “ரொம்பத்தான் அக்கறை.. மில்லுக்குப் போனா குடும்பத்தை மறக்கற ஆளு.. என்னைய சொல்லாதீங்க. எல்லாம் என்னோட கிரகம். அப்புறம் பேசி என்ன பிரயோசனம்..” பதிலுக்குப் பொருமினார் மங்களம். “அடேங்கப்பா! கரடிவாவிகாரிக்கு வாயப்பாரு.. உன்கிட்ட போட்டி போட முடியுமா? ஊருக்குள்ள நடக்கிற அத்தன கூட்டத்துலையும் பேச்சால துவம்சம் செய்யும் எனக்கு, வீட்ல நேர் எதிர்தா போ..” என்று, ஆரம்பிக்க இருந்த சண்டையை விளையாட்டாக மடைமாற்றிவிட்டு, நிற்காமல் மெல்ல நழுவினார் கொல்லைப்பக்கம். ரவிக்கு திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணி. கம்பீரமான தோரணையும் தெள்ளத் தெளிவான பேச்சும் நேர்மையான நடத்தையும் ரவியைத் தொழிற்சங்கத் தலைவராக உயர்த்தின. ஊதிய உயர்வு, பணி நீட்டிப்பு, போதாக்குறைக்கு வடமாநிலத் தொழிலாளர்களால் பணியிழப்பு என, போராடக் காரணங்களா இல்லை?! போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முழக்கங்களும் முதலாளிகளுடனான மோதல்களும் தொழிற்சங்கத் தலைவர் ரவியை, சக தோழர்களுக்குப் போராளியாய் அடையாளம் காட்டின. குறிப்பாக, வடமாநிலத்தவரைப் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகினார் ரவி. எல்லாரிடமும் இனிமையாகப் பழகும் பண்புடையவர். ஆனால் வடமாநிலத்தவரைக் கண்டால் அத்தனை வெறுப்பு அவருக்கு. “இந்த வடக்கனுங்க குறைஞ்ச கூலிக்கு வேலை செய்றதால, நம்மாளுக எத்தன பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க?! நம்ம கோட்டியப்பன், தொழில்ல அனுபவமிக்க ஆளு. பழைய ஆளுக்கு சம்பளம் அதிகமா கொடுக்கணும்னு நிறுத்திட்டு, அவரு சம்பளத்துக்கு இரண்டு பேர வேலைக்கு வைச்சுட்டான் இந்த பாழாப்போன கம்பெனிக்காரன். வேலை போன கவலையில, ஆளே போயிட்டாரு. அவருகூட வயசான ஆளு.. நம்ம பீட்டர் பொண்டாட்டி.. வேலையில்லாதவன்கூட வாழ மாட்டேன்னு, குழந்தைய தூக்கிட்டுப் போயிடுச்சு. நம்ம மில்லு வேலைனுதான்னு இல்ல; தமிழ்நாட்டுக்குள்ள எந்த வேலைக்குப் போனாலும் இவனுகதா இருக்கானுங்க. தொழிற்சங்கத்துக்குப் போனா தொழிலாளிகளோட புலம்பல கேக்கவே அத்தன விசனமா இருக்கு. அவங்க ஊர்லயே இருக்க வேண்டியதுதான? இங்க வந்து உயிரெடுக்குறானுங்க பீடா வாயானுங்க.. ச்சே! அவுங்க ஊர்ல யோசிக்காம ஓட்டுப்போட வேண்டியது; அப்புறம் வேலையில்ல, தண்ணியில்ல,பஞ்சம்னு இங்க வந்து நம்ம வேலைக்கு ஆப்பு வைக்க வேண்டியது..” என நார்த் இண்டியன்களை நாறுநாறாய் கிழிப்பார். இத்தனைப் பிரதாபங்கள் கொண்ட நம்ம மாவீரர்தான், இப்போது பொஞ்சாதிக்குப் பயந்து கொல்லைப்பக்கம் ஓடியுள்ளார். சரி.. ‘ஊருக்கு பருப்பா இருந்தாலும் வீட்டுக்குத் தொடப்பக்கட்டதானே?!’ “ஐயோ.. என்னங்க.. ஓடியாங்க. குட்டியப் பாருங்க..” என மரகதம் போட்ட கூச்சலில், தெருவே கூடியது. வலிப்பால் துடித்துக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். “அதிகக் காய்ச்சலால் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது. ஈரத்துணியால் சுற்றப்பட்டு குழந்தை நலமாக உள்ளது. ஊசி போடப்பட்டுள்ளது. இன்று இரவு மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவிட்டு, காலையில் போய்க் கொள்ளலாம்” என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவசர அலாரம் மருத்துவரின் அறையில் ஒலித்தது. பேசிக்கொண்டிருந்த மருத்துவர் அறையைவிட்டு வெளியே ஓட, ரவியும் பின்தொடர்ந்தார். தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, பதின்ம வயது இளைஞன் ஒருவன் ஸ்டெச்சரில் கிடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது ரவிக்கு. உடன் வந்தவர், “சார், சீக்கிரம் பாருங்க சார்” என பதைபதைத்தார். அவசர சிகிச்சை அறைக்குள் அந்த இளைஞனோடு உள் சென்றார் மருத்துவர். அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பாதியில் விட்டுச் சென்ற மருத்துவருக்காகக் காத்திருந்தார் ரவி. வரவேற்பறைக்கு நேர் எதிராக அமைந்த அவசர சிகிச்சை அறையின் கதவைத் திறந்து மூடும்போது உள்ளே நடப்பவற்றையும் பேசுவதையும் ரவியால் தெளிவாகக் கேட்க முடிந்தது. இதற்கிடையில் அந்த இளைஞனை அழைத்து வந்தவர், மதுபோதையில் இருந்த சில இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்வதைக் கவனித்த ரவி, அவருக்கு உதவ அருகில் சென்றார். “என்னங்க பிரச்சனை? என்ன ஆச்சு?” என ரவி கேட்கத் தொடங்கியபோது, மருத்துவர் இவர்களை நோக்கி வேகமாக வந்தார். “அந்தப் பையன் கூட வந்தது யாரு? காயங்களைப் பார்த்தா ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியல. என்னாச்சுனு அவனைக் கேட்டா இந்தில என்னமோ சொல்றான்..” என்றார். “சார் இந்த நாலு பேரும் அந்தப் பையன அடிச்சுட்டாங்க. நான்தான் தடுத்து இங்க கொண்டு வந்தேன்.” “அப்போ போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாமா?”டாக்டர் கேட்டவுடன் அந்தக் குடிபோதை ஆசாமிகள் காலில் விழுந்து கதறத் தொடங்கினர். “சரி.. நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, டாக்டர் திரும்ப அறைக்குத் திரும்பினார். ரவியை நோக்கித் திரும்பிய அவர், “அடிபட்ட பையன் வேலை செய்யுற ஹோட்டல்ல நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்; இவங்க நாலு பேரும் வந்ததுலயிருந்து குடிபோதையில பிரச்சனை பண்ணிட்டுதான் இருந்தாங்க. தமிழ் தெரியாத இந்திக்காரப் பையனைக் கூப்பிட்டு, தமிழ்ல ஏதோ சொல்லச் சொன்னாங்க. அவனுக்கு புரியல; திருதிருன்னு முழிச்சான். அவனை கையில் கிடைத்ததை வச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க சார். நல்லவேளையா நான் போய்த் தடுத்தேன். இல்லைன்னா குடிபோதையில் இருந்த இவனுக, அடிச்சே கொன்னுருப்பானுக, பாவம். மொழி தெரியாதனால இவங்க சொன்னதுக்கு பதில் சொல்ல முடியாம இருந்த பையன, ‘பதில் சொல்ல மாட்டியா?’ன்னு கேட்டுக் கேட்டு அடிச்சத பார்க்கவே கொடுமையா இருந்தது சார். என்ன கஷ்டமோ.. சொந்த ஊரு, சொந்த பந்தங்களை விட்டு நம்ம ஊரை நம்பி வராங்க. அவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவால்ல. கஷ்டம் கொடுக்கக் கூடாதில்ல சார்.. இவனோட முதலாளிக்கு இவனோட பேருகூடத் தெரியல. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ற அடிமையாகத்தான் நினைக்கிறாங்க, பாவம். இதுல, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கிறோம்.” அவர் சொன்னது, ரவிக்கு நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உண்மை மெல்லப் புரிந்தது, தொழிற்சங்கத் தலைவர் ரவிக்கு.

வலிகள்

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம் படபடக்கஉடலெங்கும் அதிவேகமாய்ஓடிய புதுக்குருதிஇப்போதும் பாய்கிறது சொற்களற்றுத் தடுமாறிகண்களால் மட்டும்பேச முடிந்தது போலவேஇப்போதும் நடக்கிறது மழைநாளின் சிறு தூறல்நாம் ஒன்றென உறுதி சொல்லிஆசிர்வதித்தது போன்றேநாம் வேறுவேறெனச் சொல்லவும்சாரலை அனுப்பியுள்ளது இயற்கை எனக்குள் இறங்கிய உன்னையும்உனக்குள் புதைந்த என்னையும் மட்டுமேகாணவில்லை என்பதைத் தவிரபிரிவுக்கும் இணைவிற்கும்பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லைதானே? கற்கள் காலம் வாழ்வை அகழ்ந்தெடுத்துசந்தோஷங்களை சலித்துப்பிரித்தெடுக்க முயல்கிறதுஒரு கூட்டம் வறண்ட எண்ணங்களைக்குழைத்தெடுக்கவெனஎப்போதாவது வரமாய் வாய்க்கிறதுஒரு காதலும் சிறு கூடலும் அவ்வப்போது கிடைக்கும்தேநீரின் சுவையைநேர்த்தியான துண்டுகளாக்கிஅடுக்கிவிட இயலுகிறதுஅவர்களால் கிளர்ந்தெழும் ஆசைகளைவெயிலில் இட்டுஇறுகச் செய்துவிடமனம் வாய்த்திருக்கிறது மொத்தத்தில் சூளையில் இட்டுஇவர்கள் சுட்டெடுப்பதுசெங்கற்களோடு சேர்த்துசொந்த ஊர் நினைவுகளையும்தான் சொற்களின் வலி என்ன சொல்லாடல்கள்எதிர்பார்க்கிறாய்என் கவிதையில் பசித்துக் கிடக்கும் வயிறுகள்தவித்து நிற்கும் அகதிகள்கொதித்து எரியும் போர்முனைஉடல்கள் ஒதுங்கும் கடற்கரைஒருமுறை கண்டு வா வார்த்தைகளற்றுப்போய்தொண்டை அடைக்கநெஞ்சில் உருளும் பாறை நசுக்கிவெளிவரும் சொற்களில்ரத்தக் கவுச்சியன்றிபன்னீரின் மணமாமுகரக் கிடைக்கும்?

தவி:ப்பு

தவி:ப்பு

ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு  சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இறங்கியபடி பலர் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த இருண்ட பாதாள வளிமண்டல அறைக்குள் நுழையும்போது, நீண்ட அறையெங்கும் எதிரொலிக்கும்படி கணினி ஒலிப்பெருக்கியின் குரல். “விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், இன்னும் எட்டு நிமிடங்களில் முதலாம்  நடை மேடையில் வந்தடையும்“ என்று அறிவிப்பு ஒலிக்கிறது. தற்போது ரயில்வே நேரப்படி மணி 14:45. மேற்கூரையிலிருந்து தொங்கும் ஒளித்திரை அறிவிப்பு, ரயில் வரும் நேரம், செல்லுமிடம் போன்ற தகவல்களாக நகர்ந்துகொண்டிருந்தது. பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில் சீருடையணிந்த பணிப்பெண், கணினியின் தொடுதிரையைப் பார்த்தவாறு பணியாற்றுகிறார். அவரது வலதுபுறத்தில் காகிதத்தில் செய்த கப்பல் ஒன்று செய்துவைக்கப்பட்டிருந்தது. அது நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று அடியாழத்தில் பயணம் செய்வதையும் சில இடங்களில் நகரத்தையே கடலாக்கி அதன் மேல் மிதப்பதைப் போலவும் மேலே பறந்தபடி பயணம் செய்வதைக் குறித்துக்கொண்டிருந்தது. சில்வர் நிறத்தாலான தானியங்கிப் பயணக் கட்டணப் பரிசோதனை வாசலில், பயணிகள் தங்களது பயணச் சீட்டை ஸ்கேன் செய்து உள்ளே சென்றவாறும் வெளியே வந்தபடியும்  இருந்தனர். மனிதன் செவ்வக வடிவமுடையவன். மனிதனால் தன் தேவைக்கு வடிமைக்கப்பட்ட அனைத்து நுழைவாயில்களும் செவ்வக வடிவில்தான் இருக்கும். ஆனால் பயணச்சீட்டு வழங்கும் கண்ணாடி அறையில், கை மட்டும் உள்நுழைய அரைவட்ட வடிவ நுழைவாயில் இருந்தது. அதனுள் டிக்கெட் கொடுக்கும் ஒற்றைக் கையும் அதனைப் பெறும் பல கைகளும் நுழைந்தும் பெற்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. பயணச்சீட்டு வழங்கும் பெண், தட்டச்சு செய்தபடியே பயணச்சீட்டுகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். தற்போதுதான் பணிக்கு வந்ததைப் போலிருந்தார். காலையிலிருந்து இந்தப் பணியைச் செய்து வந்த  மற்றொரு பெண், ஷிப்ட் முடிந்து வெளியேறும் முனைப்புகளுடன் அந்த அறைக்குள்ளே நின்றவாறிருந்தார். வரிசையில் ஒரு எட்டுப் பேர் நின்றிருந்தனர். முதலில் நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், “கிண்டிக்கு ஒரு டிக்கெட்“ என்றார். “சார், 20 ரூபாய் கொடுங்க“ என்று கணினியைப் பார்த்தவாறு கூறினார். அவர் 100  ரூபாய் கொடுத்தார். அதை வாங்க மறுத்து, “சில்லறை இல்ல சார்“ என்றார். அந்தப் பெரியவருக்கு இரண்டு ஆட்களுக்குப் பின்னால், ஒரு பெண் தனது  ஆறு வயது மகனோடு நின்றுகொண்டிருந்தார். ஒட்டுமொத்தக் காத்திருப்பு வரிசையில் சிறுவனின் இருப்பு, பொருந்தாத அளவில் உயரம் குறைவாக க் காணப்பட்டது.  அவனது தாயின் முகத்தில் ஒரு அவசரப் பார்வை தென்பட்டது. இந்த 50  வயது மதிக்கத்தக்க ஆண், “என்கிட்டயும் சில்லறை இல்லமா“ என்றார். பயணச்சீட்டு வழங்கும் பெண், இப்போது அவர் தந்த நூறு ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டவாறே அவரைப் பார்க்கிறார். பின்னால் நின்றிருந்த அந்தப் பெண் வரிசையில் இருந்து வெளிவந்து, டிக்கெட் கவுண்ட்டருக்குள் பார்த்து  சிடுசிடுப்பான குரலில், “கொஞ்சம் சீக்கிரம்  டிக்கெட் கொடுங்க. என்  பையனுக்கு அவசரமா பாத்ரூம் போகணும்“ என்றார். அவசரத்தை அடக்கும் முயற்சியில் சிறுவனின் முகத்தில் ஒப்பனைக்காகப் பூசிய பவுடரில் வியர்வை வழிந்து, திட்டுத் திட்டாகப் படிந்திருந்தது. “சார், சில்லறை இல்லன்னா ஸ்கேன் பண்ணுங்க சார்” என்றார் பணிப்பெண். மேலும் பயணிகளின் முகத்தை வெறும் சில்லறையாகவே மட்டும் பார்த்துக்கொண்டு, எதையும் காதில் வாங்காமல் விடாப்பிடியாக, மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்யும்படி சொன்னதேயே அலட்சியமாகச் சொன்னார். “என்கிட்டே ஸ்கேன் பண்ற வசதி இல்லமா“ என்றார் அவர். வரிசையில் நிற்கும் ஒருவர் தன் கால் சட்டைப்பையில் சில்லறைகளைத் துழாவினார்.  கூடி நிற்கும் பயணிகளின் காத்திருப்பு வரிசையைக் கடந்து சென்று, புதியவர் ஒருவர் கண்ணாடி அறையிலிருக்கும் இன்னொரு பணிப்பெண்ணிடம் பேசுகிறார். “ஒரு வாரத்துக்கு மட்டும்  ட்ராவல் பண்ற மாதிரி டிக்கெட் வேணும்“ என்றார். “நீங்க மெட்ரோ கார்டு வாங்கி யூஸ் பண்ணிக்கோங்க சார்“ என்று அந்தப் பெண் சொல்லக் கேட்டு அவர் விலகிச் செல்கிறார். சிறுவன் அந்தக் காகிதக் கப்பலை வினோதமான கண்களுடன் வரிசையில் நின்றபடி பார்த்தான். நகராத இந்த நீண்ட வரிசை, மூச்சுத் திணறலைக் கொண்ட நோயாளி ஒருவன், நீரில்  மூழ்கி நீர்க்குமிழ்களை எதிர்த்துக் கடினமாக சுவாசித்து மூச்சுக்கு முட்டுவதைப் போல உணர்த்தியது. ஐந்தாவது ஆளாக நிற்கும் 50 வயதுடைய சர்க்கரை பாதிப்புள்ள நபர் ஒருவர் போனில், “சமைச்ச சாப்பாட்ட வீணாக்க வேண்டாம். நான் வீட்ல வந்து சாப்பிட்டுக்கறேன்” என்றார். கணினி, தனது பெண் குரலில் அறிவிப்பை வெளியில் நிரப்புகிறது. “முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக நிலையத்தின் அனைத்து நிலைகளிலும் மின்தூக்கிக்கள் உள்ளன” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில், அச்சிறுவன்  அநாதரவான மனநிலையில் புதையுண்டபோது, தன் கால்சட்டையை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பற்றிக்கொண்டான். அவனுடைய ஒட்டு மொத்தப் புலனடக்கமும் அந்த இறுக்கமான பற்றுதலிலும் முகத்தின் சுழிப்பிலும் இருந்தது. அவன் தன் கண்களை மூடி முகத்தைப் பொத்தினான். அந்த மின்னொளி பரந்த இருண்டஅறை மேலும் இருட்டியது. உறக்கத்தில் நடப்பவன்போல ஒரு அடி முன்னோக்கி வைத்தான். பெரிய மனிதனின் வலிமையான குரலில்லாததால், சிறுவன் தன் அம்மாவின் அனுமதிக்காகக் காத்திருந்தான். புது இடம் என்பதால், அம்மா சிறுவனைத் தன் பார்வையிலிருந்து அகலவிடாமல் பார்த்துக்கொண்டாள். அவசரத்தின் நிர்க்கதியில்  நிற்பதால், இந்த நீண்ட அறை அவனுக்கு வினோதமாகவும் அச்சமூட்டுவாதகவும் இருந்தது. அவன் குரல் அவனுக்குள் மூழ்கியது. ஒரு கட்டத்தில் அவன் வாயிலிருந்து முனகல் சத்தம்கூட வரவில்லை. அவன் உடலிலிருந்து உடனே வெளிவர வேண்டியது அவன் அடக்கி வைத்திருக்கும் சிறுநீர் மட்டுமே. அவனுக்கு இந்த நரக வேதனை அனுபவிக்கும் நீண்ட அறை தேவையில்லை. உடனடித் தேவை கழிவறை. அதுதான் சொர்க்கம். கணினியின் அடுத்த ஒலிபெருக்கி அறிவிப்பு: “விமான நிலையம் செல்லும் அடுத்த ரயில், முதலாம் நடைமேடையில் இன்னும் 5 நிமிடத்தில் வந்து சேரும்.“ அறிவிப்பில் வண்டி வரும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்துகொண்டிருந்தது. அவன் சிறுநீரை அடக்கிக் காத்திருக்கும் நேரம், ஒவ்வொரு நிமிடமாகக் கூடிக்கொண்டிருந்தது. அந்த பணிப்பெண்ணிடம் அனைவருக்கும் தரக்கூடிய அளவில் ஆடம்பரமாகவே சில்லறை இருந்தது. ஆனாலும் அவள் கையில் அவர் தந்த 100 ரூபாய்த் தாளைப் பிடித்தபடி, அவரையும்  மேஜை ட்ராயரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். காத்திருப்பின் அளவுகோல் நிமிட நேரத்திலும் மாறாமல் அப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. சிறுவனுடைய அவசரத்திற்குள் உலகம் மெதுவாக இயங்குவதாகத் தோன்றியது. அறிவிப்பு, ஒவ்வொரு நிமிடமாகக் குறைந்து, ரயில் வரும்  நேரத்தை அறிவிக்க, கடிகார நேரம் கூடிச் செல்லச் செல்ல, மிகவும் குளிரூட்டப்பட்ட அறையிலும் பவுடர் வாசம் கலந்த வியர்வையில் சிறுவனின் குறு மயிர்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தன. சிறுநீரை வெளியேற்ற விடாமல் சூழல் தடுக்க, உள்ளுக்குள் அடக்கமுடியாமல் அவனும் தடுமாறினான். பதற்றமான கோணத்தில் அவன் கண்கள் உருமாறி, அங்கிருந்து கழிவறை நோக்கி ஓட முயன்றபோது,  இறுக்கிய அம்மாவின் பிடியை உறுவிக்கொள்ள முனைந்தான். அவனது அம்மா தடுக்கிறார். உடம்பில் ஊசி குத்துவதைப் போன்ற ஒரு தவிப்பு. டாக்டரிடம் ஊசி போட்டுக்கொள்ளும்போது, அவன் திமிறினால் அம்மா எப்படிப் பிடிப்பாரோ, அப்படியிருந்தது சிறுவனுக்கு. மனிதன் பழக்கத்திலும் பழக்கத்திற்காகவும் வாழ்பவன். கட்டுப்பாடுகள் தனிநபரின் பழக்கவழக்கத்தை எப்படியெல்லாம் அடிமைப்படுத்துகிறது! பழக்கத்தை ஒதுக்கித் தள்ள முடியாமலும் பழக்கவழக்கம் நடைமுறைச் சட்டங்களால் பாதிக்கப்படும்போதும் மனிதன் குழப்பமடைந்து தோல்வியடைகிறான். ஆகவே சட்டம் தடுக்கும்போது பழக்கவழக்கமே ஆட்கொள்ளும். வாழ்க்கையில் தனிநபரைவிட, சமூக நிர்ப்பந்தம் உயர்ந்த அலகு இல்லை. “கொஞ்சம் பொறுடா.. ஏன்டா இந்த அவசரம் உனக்கு?“ என்று அவனது அம்மா இயற்கைக்கு மாறாகக் கேட்டார். அதிலும் மூன்றாம் மனிதர்கள் முன் எச்சரிக்கப்பட்டது அவனுக்கு எரிச்சலூட்டியது. பொறுமையிழப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச யதார்த்தத்தை உணர ஆரம்பித்தான். இதென்ன பெரிய விசயம், இதெல்லாம் சாதாரணம் என்பதுபோலப் பணிபெண்ணின் அலட்சியம் இருந்தது. சிறுவன் எந்த சுயவிருப்பமுமின்றி இருந்தான். அச்சிறுவனின் அப்பாவித்தனமும் வெளிப்படையான குணமும் சுற்றியிருப்பவர்களின் நெஞ்சைக்கூடக் குத்தவில்லை. தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் அவரவர் தங்கள் அவசரத்திலேயே, கவணின் உச்சியைத் தொட்ட கல்போல இருந்தனர். அவசரம், பயணிகளுக்குத்தானேயொழிய, பணிப்பெண்ணுக்கு அல்லவே. சிறுவனின் அம்மா, “சீக்கிரம் கொடுங்கன்னு சொல்லிட்டே இருக்கேன்ல.. அவசரமா போகணும்“ என்று பொரிந்தாள். தற்போது சாப்பிட்டு முடித்த மயக்கத்தோடு, சோம்பலின் பலமான கொட்டாவியை விட்டபடி, முன்னால் நின்ற பயணிக்கு சில்லறையும் டிக்கெட்டும் கொடுத்தார். மனிதனின் அவசரத்திற்குக் குறைந்தபட்ச உதவி செய்யாவிட்டாலும் சிறுவனிடமோ அம்மாவிடமோ, தன் தவறை உணர்ந்ததாக ஒரு புன்னகைகூட முகத்தில் காட்டவில்லை. சிறுவனின் சித்ரவதைக்குள்ளான காத்திருப்பும் ஏறக்குறைய நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பும் கடந்தன. அந்த அம்மா டிக்கெட் பெறும் கணத்தில்கூட, அவனது அவசரத்திலும் அங்குள்ள காகிதக் கப்பலை ரசித்துக்கொண்டிருந்தான். டிக்கெட் பெற்றவுடன், காத்திருப்பின் நேரத்தையும்  வலியையும் ஒருசேரத் தன் பாதத்தில் கடத்தி மிதித்தபடி, சற்று வேகமாக, ஆசுவாசம்  நிறைந்த கழிவறை நோக்கி அம்மாவும் சிறுவனும் விரைந்தனர்.

நாற்பத்தேழு

நாற்பத்தேழு

1947 எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு யுத்த மகள் என்பார்கள் என்னை பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ளஆலை அதிபர்களுக்கும் பண்ணையார்களுக்கும்கொள்ளை ஆசை 1948 எனக்கும் வயதாகிவிட்டதுபிறக்கும்போது சவலைப் பிள்ளையாக இருந்தாலும்இப்போது கொழுத்துத் திரிகிறேன்இப்போதெனக்குத் தோழர்கள் அதிகம்என்னை அன்று சவலை ஆக்கமுயன்றவர்களை எல்லாம்இல்லாமல் ஆக்கியோஅல்லது கூட்டாளி ஆக்கியோநான் ஊதி இருக்கிறேன் 1950 நான் நாற்பத்தேழுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இளையவள்தான்என்னை ஜனநாயகத்தின் மகள் என்றார்கள்சமதர்மத்தின் தங்கை என்றும் சொல்லி மகிழந்தார்கள்நானும் – என்னைக் கொஞ்சியகோடானுகோடி பங்காளிகளும்பூரித்துப் போனோம்ஆனால் எங்களுடன் நாற்பத்தெட்டும் இருந்ததுநாங்கள் நானாவிதப் பிரிவினராக இருந்தோம் 1960நாங்கள் ஐம்பதுகளின் பிள்ளைகளால்அவர்களுக்காக உருவானோம்ரயிலடிகளாக, சாலைகளாக, ஆலைகளாக,நவநவ எந்திரங்களாகப் பரவிக் கிடந்தோம்நாற்பத்தெட்டு எங்களுக்குள் தலைகாட்ட வழியில்லைஎன்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம் 1975நாங்கள் 25 வயதான ஐம்பதுகள்தான்ஆனால் நாங்கள் சொன்னதே ஜனநாயகம்நாங்கள் சொல்வதே சமதர்மம்நாற்பத்தேழில் வந்தவர்களைச் சத்தமில்லாமல் செய்தோம்நாறபத்தெட்டையும் மிரட்டி வைத்திருந்தோம் 1977 நாற்பத்தேழின் நாயகர்களும்நாற்பத்தெட்டின் நாயகர்களும்சேர்ந்து கொண்டோம்ஐம்பதை அடக்கி வைக்கஅச்சாரம் போட்டோம்ஆஹா என்றெழுந்தது பார் யுகப் புரட்சிஐம்பது ஆடிப் போனது 1980 நாற்பத்தேழு வளர்வதைநாற்பத்தெட்டு பொறுக்கவில்லைகழன்று கொண்டதுமீண்டும் ஐம்பது செங்கோல் பிடித்தது 1990 உலக பூதம் வீட்டுக்குள் வந்ததுதொலைத் தொடர்புக் கூட்டாளியும் வந்ததுபூதத்தை ஆண்டவர்கள்ஆள்பவர்கள் ஆனார்கள்பூதங்களை நிறுவனங்கள் என்றார்கள்பூதங்களுக்கு நாற்பத்தெட்டும்ஐம்பதும் தலையாட்டின தங்களுக்கு யார் வேண்டும் என்பதைபூதங்கள்தான் தீர்மானித்தன 2014 பூதங்கள் நாற்பத்தெட்டைநல்ல நண்பன் ஆக்கிக்கொண்டனஇப்போது அப்படியும் இப்படியுமாகஐம்பதைப் பிரித்துப் போட்ட பிறகுநாற்பத்தெட்டு ஊதிவிட்டது 2024 நாற்பத்தெட்டுக்கு சவால் விடஐம்பது, அறுபது எல்லாம் தயார்ஆனால் பூதங்கள் சிரிக்கின்றனசோழி உருட்டுகின்றனநாற்பத்தெட்டா? ஐம்பதா? ஆமாம்.. நாற்பத்தேழுக்கு என்னவாயிற்று..?

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி மேற்றிசைக்குச் செல்லப் போவதாகவும் கூறினான். மேலும் குந்தவையை வந்தியத்தேவன் பொருட்டு மனங்கலங்காது இருக்குமாறு கூறி விடைபெற்றான். திருப்புறம்பியத்தை அடைந்த ஆழ்வார்க்கடியான் அங்கு இடும்பன்காரி, சோமன்சாம்பவன், கிரம வித்தன் மற்றும் இராக்கம்மாள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அவர்கள் அனைவரும் பச்சைமலைக்குச் செல்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். அவனைப்போலவே அவர்களைப் பின் தொடர்ந்துவந்த பூங்குழலியைக் கண்டு, அவர்கள் செல்லும் இடத்திற்கு இருவரும் சென்றனர். வழியில் ஊமைராணி இறந்ததைக் கேட்டு வருந்தினான். ஒரு இடத்தில் ரவிதாஸன் மற்றும் ஆபத்துதவிகள் மறைந்து கூட்டமாகச் சமைத்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். ஆழ்வார்க்கடியான் மட்டும் அங்கிருந்த ஒரு குகைக்குள் மறைந்து சென்றான். அங்கு பழுவேட்டரையர், தன் காளாமுகத் தோற்றத்தோடு, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். அருகில் நந்தினி தலைவிரி கோலமாய் அமர்ந்து அவரைக் கஞ்சியை உட்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தாள். முதலில் நந்தினியைக் கண்டு மகிழ்ந்த பழுவேட்டரையர், பின் அவளைப் பலவாறாகத் திட்டத்தொடங்கினார். ஆனால் நந்தினி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இத்தனை நாள் தன்னைப் பட்டமகிஷியாக வைத்திருந்ததற்கு நன்றி கூறினாள். ஆதித்த கரிகாலனின் முடிவு தனக்குத் தெரிந்ததானாலே, அதிலிருந்து பழுவேட்டரையரை விலக்குவதற்காகவே, அவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினாள். ஆனால் விதிவசத்தால் அவர் வந்து சேர்ந்ததைப் பற்றியும் ஆதித்தகரிகாலனைச் சந்தித்தபொழுது, தன்னால் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதையும் குறிப்பிட்டாள். வந்தியத்தேவனின்பால் ஆதித்த கரிகாலனின் கோபத்தைத் தூண்டி, கரிகாலன் அவனைக் கொல்ல வருகையில், மணிமேகலை அவனைக் காப்பாற்ற இளவரசரைக் கொல்லுவாள் எனத் திட்டம் தீட்டி வைத்திருந்ததையும் கூறினாள். அப்போது தெய்வப் பயனாக காளாமுக வேஷத்தில் தாங்கள் உதவிக்கு வந்ததாகக் கூற, பழுவேட்டரையர், இடும்பன்காரியிடமிருந்து தான் வாங்கிவைத்திருந்த கத்தியை நந்தினி மீதே, தான் எறிந்தபோது அது இளவரசர் பேரில் பாய்ந்துவிட்டது எனப் பெரிதும் வருந்தி அவளைத் தூற்றினார். நந்தினி அவரைப் பெரும்பாடு பட்டு இங்கு தூக்கிவரச் செய்ததாகவும் மூன்று நாட்கள் அவருக்குப் பணிவிடை செய்து அகமகிழ்ந்து போனதாகவும் இனிமேல் விடைபெற்றுச் செல்லப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து விலகிவந்து பூங்குழலியிடம் அமர்ந்தான். குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் இருப்பதைக் கூறினான். அப்போது அவள் தன் அத்தையைக் கொன்ற சோமன் சாம்பவனைக் கொல்லக் காத்திருப்பதாகக் கூறினாள். பூங்குழலி, அரண்மனையில் தன் அத்தையைக் கொன்றவனைத் துரத்திக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வரும்பொழுது, தன்னுடன் சின்ன பழுவேட்டரையரும் வந்தார் எனவும் சுரங்கப் பாதையில் மதுராந்தகன் மறைந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தப் பழி அவர்மீது விழுந்து விடுமோ என அஞ்சி அவரைக் கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் கூறினாள். அப்போது இருவரையும் ரவிதாஸனின் பாண்டிய ஆபத்துதவிக் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவர்கள் மீது தாக்குதலுக்குத் தயாராக, நந்தினி உள்ளிருந்து வந்து, அவர்களைத் தடுத்து, ஆழ்வார்க்கடியானிடம் தன் தாய் இருக்குமிடத்துக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். ஆழ்வார்க்கடியான், சோமன் சாம்பவன்தான் அவள் அன்னையைக் கொன்றுவிட்டான் எனக் குற்றம் சாட்ட, நந்தினி உடைந்துபோய் உட்கார்ந்து அழுதாள். அப்போது சின்ன பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் வர, பாண்டிய ஆபத்துதவிகள் ஆழ்வார்க்கடியான் தலையிலும் பலமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.  சேந்தன் அமுதனும் ஒரு குதிரையில் கட்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். சின்ன பழுவேட்டரையரைக் கண்டதும் பூங்குழலி, கொலைகாரர்கள் அவர்கள்தான் என்றும் அவர்களைப் பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அப்போது குகையிலிருந்து பெரிய பழுவேட்டரையர் எழுந்து வெளியில் வந்தார். திருமலையும் கந்தமாறனும் குகையினுள் நுழைய முயல, பெரிய பழுவேட்டரையர், ரவிதாசனும் மற்றவர்களும் குகையை அடைத்துவிட்டுத் தப்பித்துவிட்டதாகக் கூறினார். தளர்ந்து அடிபட்டு பிரேதக்களை பொருந்திய முகத்துடன் தன் மூத்தவரைக் கண்டுகொண்ட சின்ன பழுவேட்டரையர், அவரை வணங்கி அழுது நின்றார். ‘உன் பேச்சைக் கேட்காமல் மோசம் போனேன்’ என்று பெரியவர் வருந்தினார். பின் அதுவரை நடந்ததை சின்ன பழுவேட்டரையர் சொல்லி முடிக்க, பெரியவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். பூதி விக்கிரம கேசரியிடம் கோட்டைப் பாதுகாப்பு இருப்பதையும். தங்கள் குடும்பத்தின் மேல் கைவைக்க கூடாது என எச்சரித்து வந்ததையும் கூறினார். வழியில் கந்தமாறனைக் கண்டு கூட்டி வந்ததாகவும் மற்ற அரையர்களுக்கு, படை திரட்டி வருமாறு ஓலை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அப்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த நந்தினியைப் பார்த்து, தன் உயிரை நந்தினிதான் காப்பாற்றினாள் என்று சின்ன பழுவேட்டரையரிடம் கூறிவிட்டு நந்தினியை நெருங்கினார். ஆழ்வார்க்கடியான் நந்தினியிடம் ‘இப்போதாவது வந்தால் வைணவக் கைங்கரியங்கள் செய்யலாம்’ என அழைக்க, நந்தினிஅவன் தன்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி உகுத்தாள். தூரத்தில் நின்று பூங்குழலி தன் அத்தை போலவே நந்தினி இருப்பதை சேந்தன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி தன்னை நெருங்கிய பெரிய பழுவேட்டரையரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பின் அங்கிருந்த புரவியின் மேல் ஏறிக்கொண்டு பாய்ந்தாள். அவளைத் தொடர முயன்றவர்களை, பெரிய பழுவேட்டரையர் தடுத்துவிட்டார். ஆம். நந்தினி மறைந்தாள்.. இந்தக் கதையில் இனி நந்தினி வரமாட்டாள்.. யார் கண்டது? என்றோ எங்கோ அவளை நாம் சந்திக்கக்கூடும். தஞ்சையில் ஆதித்த கரிகாலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, கூடவே ஜனசமுத்திரம் அலையலையாக திரண்டது. பழுவேட்டரையர்களின் பால் ஜனங்களின் அதிருப்தி பெரியளவில் இருந்ததால், அவர்களுக்கெதிரான கோஷங்கள்  எழுந்துகொண்டேயிருந்தன. ஈமச் சடங்குகள் நடந்து சக்ரவர்த்தியின் குடும்பம் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது மதுராந்தகனும் இல்லாதபடியால், அவருக்கு எதிரான கோஷங்களுடன் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அநிருத்தரின் மாளிகைக்கு முன்பு சென்று கோஷமிடத் தொடங்கினர். வேளக்காரப் படையினர் வந்து துரத்தியடித்தனர். உண்மையில் மதுராந்தகன் அங்குதான் மறைந்திருந்தார். அநிருத்தர், அவருடைய பிறப்பு ரகசியம் தனக்குத் தெரியுமெனவும் ஆனால் அதைச் சொல்ல முடியாதெனவும் கூறியதில் மதுராந்தகன் சஞ்சலம் அடைந்திருந்தான். அப்போது செம்பியன் மாதேவிப் பிராட்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் ராஜ்ய உரிமை பற்றிய பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பிராட்டியார் மதுராந்தகன் தன் மகனில்லை என்ற உண்மையைக் கூற நேர்ந்தது. மதுராந்தகன், அவர் மனம் புண்படும்படிப் பேசி உண்மையைச் சொல்லுமாறு பல்வேறு வார்த்தைகளால் ஏசினான். அநிருத்தரிடம் அந்தக் கதையை சொல்லுமாறு செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டார். ‘செம்பியன் மாதேவி தன் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்த சமயத்தில், கண்டராதித்தர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில், அக்காவும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்தீரிகள் அரண்மனைத் தோட்ட த்தில் குடியிருந்தார்கள். கர்ப்பஸ்தீரியான அந்த ஊமைப் பெண்ணை ,அவள் சகோதரியுடன் செம்பியன் மாதேவி க்ஷேத்ராடனம் சென்றபோது சந்தித்துக் கூட்டிவந்து போஷித்துக் கொண்டிருந்தார். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது அசைவில்லாமல் இருந்ததைக்கண்டு பதறி அழுதபடி பார்க்கவந்த அநிருத்தரிடம் தெரிவித்தாள். தன் கணவரிடம் எப்படி இதைச் சொல்வேன் எனக் கதறிய செம்பியன் மாதேவியிடம் அநிருத்தர் ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் கர்ப்பஸ்தீரிக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், ஆண் குழந்தையை எடுத்து வரச் செய்து, செம்பியன் மாதேவியிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த ஊமை ஸ்தீரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். குழந்தைகள் நன்றாக வளரும் என்று கூறிய அநிருத்தரிடம் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள். அசைவில்லாமல் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடும்படி, அந்தத் தங்கையான ஊமை ஸ்தீரியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு பெண் குழந்தையை, தன் சீடனான ஆழ்வார்க்கடியானிட்ம் கொடுத்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.  செம்பியன் மாதேவி, இதைச் சிறிதுகாலம் கழித்துத் தன் கணவரான கண்டராதித்தனிடம் உணமையைக் கூறி மன்னிப்பும் கேட்டார். யார் வயிற்றில் பிறந்த குழந்தையாயினும் என்ன, நம் குழந்தை போலவே வளர்ப்போம். ஆனால் ராஜ குடும்பத்துக்கு வாரிசாக வேண்டாம். சிவத்தொண்டாற்றும்படி வளர்ப்போம். அவனுக்கு சிவ சாம்ராஜ்யமே போதும். ராஜ்ய உரிமை வேண்டக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு சில நாட்களில் இறந்தும் போனார்.’ இவற்றையெல்லாம் அநிருத்தர் சொல்லி முடித்ததும் அதிர்ந்த மதுராந்தகன், இது யாருக்கும் தெரியாதெனில் இதற்குப் பிறகும் இதை மறைத்து வைக்குமாறும் அதற்கு ஈடாக அவருக்குப் பரிசளிப்பதாகவும் கூறினான். அநிருத்தர் மறுத்து, செம்பியன் மாதேவி என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே ஏற்பேனெனக் கூற, மதுராந்தகனுக்குச் சினம் மிகுந்தது. செம்பியன் மாதேவியிடம் இதை மறைத்துவிடுமாறு கூற, அவர் அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நல்வார்த்தைகள் கூறி அவனை ஆற்றுப்படுத்தினார். மேலும் அதை வெளியில் சொல்லுவதைத் தான் விரும்பவில்லை எனவும் மதுராந்தகனை, அரசர் கூட்டவிருக்கும் சபையில், ராஜ்யம் ஆளும் சிந்தனை தனக்கில்லை; சிவத்தொண்டில் முழுகப் போகிறேன், என அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுராந்தகன் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அநிருத்தர் சபை கூட இன்னும் மூன்று தினங்கள் இருப்பதாகக் கூறவும் மதுராந்தகனின் மனத்தில் பலவிதத் தீய எண்ணங்கள் எழத் தொடங்கின. சேந்தன் அமுதனின் தாய்க்கு இந்தச் செய்தி தெரியும் என்பதையும் அறிந்துகொண்டான். அப்போது அருள்மொழி உள்ளே வந்து, செம்பியன் மாதேவியின் தாள் பணிந்து, இந்தப் பேச்சுகளை மறைந்திருந்து கேட்டதற்கு மன்னிக்கும்படியும் மதுராந்தகர் அவருடைய மகனில்லை என வெளியில் தெரிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த ரகசியம் தனக்கும் தன் தமக்கை இளைய பிராட்டி குந்தவைக்கும் கூடத் தெரியுமென அவர் சொல்ல, அனைவரும் வியப்பிலாழ்ந்தனர். அநிருத்தர் மூன்று நாட்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடரும்

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு.  புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப்  படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்:  துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://naarkaram.com/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு  14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல்  மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில்  பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல்  தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால்  பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன்,  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.

ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்

ஆஷஸ் தொடரும் ஆஸ்திரேலியாவும்

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் அனல் பறக்கும் எனில், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டிகளில் தீப்பற்றி எரியும். மக்களுடன் சேர்ந்து அந்தந்த நாட்டின் தலைவர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்கள். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கிரிக்கெட்டின் தலைமையிடமான லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றபோது, அப்படிப் பல அனல் துளிகள் பறந்தன. இங்கிலாந்தின் பேர்ஸ்டோ அவுட் ஆக்கப்பட்ட விதம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிக்கை விட்டனர். அவர் அவுட் ஆகித் திரும்பும்போது, மைதானம் முழுவதும் ‘ஆஸ்திரேலியாவா.. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்’ என்ற கோஷம் எழுந்தது. நடந்த நிகழ்வைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்போம். தனக்கு வீசப்பட்ட, தேநீர் இடைவேளைக்கு முந்தைய கடைசிப் பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, ஏதோ ஒரு நினைவில், கிரீஸை விட்டு வெளியில் வந்து, தன் அணி கேப்டன் ஸ்டோக்ஸுடன் உரையாட வந்துவிடுகிறார். பந்து விக்கெட் கீப்பர் கேரியால் ஸ்டம்ப் நோக்கி வீசப்பட்டு அவுட் கேட்கப்படுகிறது. மூன்றாவது நடுவரால் அவுட் என முடிவு அறிவிக்கப்படுகிறது. ‘இது சரியா? நல்ல ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் (spirit of cricket) ஆகுமா?’ என்று இங்கிலாந்துப் பத்திரிக்கையாளர்கள் வறுத்தெடுக்கிறார்கள். இங்கிலாந்துப் பிரதமர், ‘ஆஸ்திரேலியா செய்தது சரியில்லை’ என்று அறிக்கை விட, ஆஸ்திரேலியப் பிரதமர், ‘எங்கள் வீரர்கள் எப்பொழுதும் சிறந்த கிரிக்கெட்டையே விளையாடுகிறார்கள்’ என்று பதிலடி கொடுக்கிறார். இதில் கவனிக்கவேண்டியது என்னவெனில், இங்கிலாந்து அணிக்கு இந்த முறையில் அவுட் என்பது புதிய ஒன்று அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், இதே வீரர் பேர்ஸ்டோ, வேறொரு போட்டியில் தான் விக்கெட் கீப்பராய் இருந்தபோது, எதிரணி வீரரை அவுட் செய்திருக்கிறார். கிரிக்கெட் என்பது விதிகளின் விளையாட்டு. எந்த அளவிற்கு விதிகளைக் கடைபிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு விளையாட்டு அழகும் அர்த்தமும் பெறும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் என்பது, 5 நாட்கள் பொறுமையாக ஆடுவது. இரண்டு அணிகளுமே வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த முடிவைப் பற்றி இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘இது சரிதான். விளையாடும்போது பேட்டிங் செய்பவர்களின் நினைப்பு எப்போதும் கிரீஸ்க்குள்ளேயே இருக்க வேண்டும். மீறினால் இதுபோல நிகழ்வதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார் ரவி சாஸ்திரி. மேலும் ‘ஆஸ்திரேலிய அணியினர் இதை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார்கள். பேர்ஸ்டோ, சாதாரணமாகவே அடிக்கடி ஒவ்வொரு பந்து வீச்சின் இடைவெளியிலும் கிரிஸை விட்டு வெளியே வந்து நிற்கும் பழக்கம் உள்ளவர். இதைக் கண்காணித்த ஆஸ்திரேலியா, ஸ்டோக்ஸ் – பேர்ஸ்டோ கூட்டணியைப் பிரிப்பதற்கு இந்த உத்தியைக் கையில் எடுத்திருக்கலாம் என்கிறார். இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தான் ஒருமுறை இப்படி அவுட் ஆனதையும் தலையில் அடித்துக்கொண்டு, எப்படி ட்ரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களை எதிர்கொள்வது என்று யோசித்துக்கொண்டே வந்ததையும் நினைவு கூர்கிறார். ஆஸ்திரேலியா செய்தது சரிதான் என்றும் மூன்றாவது நடுவருக்கு அவுட் கொடுப்பதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார். இதுபோன்ற வாக்குவாதங்கள், சண்டைகள் எல்லாமே இந்த ஆஷஸ் தொடர்களில் புதியதல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தொடர் இதுவரை 72 முறை நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் தொடரை வென்றுள்ளன. 6 முறை, வெற்றி தோல்வியின்றி போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. இதிலிருந்தே எவ்வளவு பழமையான தொடர் இதுவென்று விளங்கும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் இரு நாடுகளுக்கும் நடக்கும் இந்தத் தொடரின் பெயர்க் காரணமே வியப்பளிக்கக்கூடியது. அடுத்த நாட்டு அணியைத் தோற்கடித்து, அந்த நாட்டின் சாம்பலைத் தன் நாட்டிற்கு எடுத்துச்செல்லல் என்பதைக் குறிப்பதால்தான், அது ‘ஆஷஸ்’. ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்ப்பதும் ஏதோ போரை வெல்வதுபோல விளையாடுவதும் வழக்கமான ஒன்றுதான். 1930களில் இந்தத் தொடர் bodyline series என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டது. டக்ளஸ் ஜார்டின் என்ற இங்கிலாந்து கேப்டன், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மெனைக்கட்டுப்படுத்துவதற்காக, இழந்த கோப்பையை மீட்டு வருவதற்காக உருவாக்கிய பந்து வீச்சு என்பார்கள். அதற்கு முந்தைய வருடம் டான் பிராட்மேனிடம் செமர்த்தியாக அடி வாங்கிவிட்டுக் காத்துக் கொண்டிருந்தது இங்கிலாந்து. எந்த ஆஸ்திரேலியா தோற்கடித்ததோ அதே ஆஸ்ட்ரேலியாவில் அவர்களைப் பழி வாங்கி, டானைக் கட்டுப்படுத்தி வெல்ல வேண்டும் என்ற வேட்கை இங்கிலாந்து அணிக்கு இருந்தது. தன் வேகப்பந்து வீச்சாளர்களை, எதிரணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களின் உடலைத் தாக்குமாறு, டக்ளஸ் பந்து வீசச் செய்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர் போட்டியில், பல வீரர்கள் அடிவாங்கி அவுட் ஆனார்கள். லார்வுட்டின் வீச்சு, எதிர்கொள்ள முடியாதபடி இருந்தது. முதல் இரண்டு மேட்சில் பிராட்மென் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டார். இருப்பினும் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து. பின்னர் வந்த காலங்களில் இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதைப்பற்றிய படத்தொகுப்பு வந்ததும் அதை சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியதும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து அதைப் பார்த்ததும் இன்றும் நினைவில் உள்ளது. இப்படிப்பட்ட தொடர் எதிர்ப்பலைகள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளிலும் இருந்தாலும் நம் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே எந்தவிதப் பகைமை உணர்ச்சியும் வருவதில்லை என்பதில் நாம் பெருமைப்படலாம். அடுத்த தொடரை இங்கிலாந்து ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. நாமும்.

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )

தேரி

தேரி

நூல் விமர்சனம் தேரி எனக்கு நெருங்கிய பூமி. பிறந்து வளர்ந்த பூமி. அந்த மண்ணின் மணத்துடன் ஒரு நாவல். அம்மன்புரம் சுனையும் முந்திரிக் காடுகளும் என் மனக்கண்ணில் இப்பவும் தோன்றுகின்றன. திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களின் மணற்பரப்பின் பொதுப் பெயர் தேரி.கடற்கரை மணலும் தேரி. சற்று உள்ளே வநதால் தாமிரபரணிக் கரைச் சரிவின் செம்மாந்த மணலும் தேரி. மணப்பாடு தாண்டியவுடன் கடலோரச் சாலையில் விரிந்து சிவந்திருக்கும் மணற்பரப்பும் தேரி. நெய்தலாயினும் மருதமாயினும் இரண்டுக்கும் இடையிலான இந்தத் தேரியானாலும் வளர்ச்சி என்ற சூத்திரத்தின் முன்பு திணைகளின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள். தான் நேசித்து உழைத்த தேரி நிலம், விமான நிலையத்திற்கு போகப்போகிற அதிர்ச்சியில் உறைந்துபோகிற எளிய மனிதன் மீது, ஒரு நேர்மறையான நம்பிக்கையை ஏற்றுகிற நாவலின் முடிவு நேர்த்தி. ஏற்ற இறக்கம் நிறைந்த செல்லக்குட்டியின் வாழ்க்கைப் பயிர், இந்தத் தேரியின் இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு வளர்ந்துவிட முடியும் என்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். கூட்டாம்புளி, சாயர்புரம், ஏரல், குரங்கணி, தென்திருப்பேரை, குரும்பூர், கானம், நாசரேத் என்று விரிந்து பரந்த இந்தச் செம்மண் தேரியின் மனிதர்கள், சீர்திருத்தக் கிறித்தவத்தின் உதவியால் கல்வியில் மலர்ந்த வரலாறு உண்டு. அநேகமாக சாதிவெறியை, மிக விரைவில் தங்கள் கல்வியினாலும் வணிகத்தில் இறங்கியதாலும் கடந்து வந்த மனிதர்கள் இவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் எத்தனைக் கல்வி அவர்களிடம் சேர்ந்திருந்தாலும் சாதிப் பெருமையும் தீண்டாமைக் கீழ்மையும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதை இந்தத் ‘தேரி’ நாவல் சுட்டிக் காட்டுகிறது. இரண்டு தலைமுறைக் கதைகள், இருபது வருட இடைவெளியில் சொல்லப்படுகின்றன. தலைமுறை தாண்டியும் சாதிப் பெருமையும் தீண்டாமையும் அகன்றபாடில்லை. இந்த நாவலின் காலம் 90களில் முடிவதாகக் கூறலாம். அதற்குப் பிறகு 30 வருடங்கள் ஓடியபிறகும் தேரிக்காட்டில் சாதிவெறி இருக்கக்கூடும். முந்திரிக் காட்டு மறைவில் ஏதேனும் காதல் கதைகள் தோன்றி, தேரி மண்ணில் சாதி வெறியினால் புதைந்து போய்க்கொண்டிருக்கக் கூடும் என்பதே நாவலின் செய்தி. ஆனால் சாதிவெறி, குடும்ப மரபின் வழியாக வருகிறதெனச் சொல்ல முயல்வதை ஏற்றுக்கொள்வதற்கில்லை. நிலஉடமையின் எச்சங்களான சாதியையும் மதத்தையும் 90களில் வேகமாக வளர்ந்து வந்த முதலாளியம் தனது பாதுகாவலாகப் பேணியதையும் இன்றைய தாராளமய உலகிலும் அதை வசதியாக, தனது நலன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஆயுதமாக வைத்துக்கொண்டிருக்கிறது அல்லவா? செல்லக்குட்டி சலவைத் தொழிலாளி. பட்டம் பெற்றிருந்தாலும் குலத்தொழிலைத் தொடருகிறான். மேல்தட்டுப் பெண் தங்கராணியுடன் அவனுக்குக் காதல். காதல் அவர்களுக்கு கனியவில்லை; காரணம் சாதி இழிவுதான். ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. தங்கராணியின் தாயார் செவ்வந்தியின் காதலின் விளைச்சலில் அந்தக் காரணம் இருந்தது. ஆனால் அந்தக் காதலும் சாதியால் தோற்றதுதானே? வெக்கை பாய்ந்த செம்மண் தேரியைக் களமாகக் கொண்டு, சுவையாக நகரும் இரண்டு காதல் கதைகளை வெகு இயல்பாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கிறார் ராஜேஷ் வைர பாண்டியன். இரண்டு கதைகளும் இணைகிற புள்ளியில் இன்னுமொரு எதிர்பாராத திருப்பத்தை வைத்து நாவலை சுவாரசியமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர். பாத்திரங்கள், அவற்றின் இயல்பு மாறாமல் படைக்கப் பட்டுள்ளன. மொழி நடை எளிய நெல்லை கிராமப் பகுதியின் வட்டார வழக்கில் மிளிர்கிறது. சாதிப் பெருமை பேசுகிற ஊரிலும் அதற்கெதிரான நல்லிணக்கம் பேசுவதற்கு ஒரு சிவப்புச் சட்டை அண்ணாச்சி வருகிற அழகு ரசிக்க வைக்கிறது. கதையாக்கம் மிக வழமையான முறைதான் என்றாலும் சொல்லியிருக்கும் முறை சுவையாக அமைந்திருக்கிறது. தேரிக் காட்டின் அத்தனை வாழ்வியலும் பொருந்துவதாக பாத்திரப் படைப்பையும் கதை நகர்வையும் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். பணம் படைத்த முதலாளிகளின் பேராசையில், செழுமையான தேரி மணல் லாரிகளில் அள்ளப்பட்டுக் கொள்ளை போவதும் தேரி நிலத்தின் சுவையான நீராதாரம் உறிஞ்சப்பட்டு நகரங்களுக்குக் கடத்தப்படுவதும் சட்டமும் காவலும் பண முதலைகளின் பக்கமே சாய்வதும் நாவலின் கதையோடு உறுத்தாமல் சொல்லப்படும் நேர்த்தியை வாசகன் ரசிக்க முடியும். மண்ணில் கொள்ளையிட்டதை வாழையில் போட்டும் தோட்டத்தின் விளைச்சலை உப்பளத்தில் போட்டும் முதலாளியம் உபரியில் கொழிப்பதைப் போகிற போக்கில் சொல்கிற ஆசிரியர், தேரிக்காட்டு மனிதர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளாக இவை பார்க்கப்படுவதை முத்தாய்ப்பாகச் சொல்லி விடுகிறார். எளியவர்கள் வர்க்கமாகத் திரண்டுவிடாமல் பார்த்துக்கொள்கிற சாதுர்யத்தை, வளர்ந்து வரும் நாடுகளில் ‘வளர்ச்சி, வேலைவாய்ப்பு’ என்ற இரண்டு வேப்பிலை அடிப்புகளால் முதலாளியம் பாதுகாத்துக்கொள்கிறது அல்லவா? கலையும் பொருளியல் நோக்குகளும் கலவையாக நாவலின் கதையாடலில் ஊடுபாய்ந்திருப்பதை அனுமானிக்க முடிகிறது. செவ்வந்தி பாத்திரம் வித்தியாசமான படைப்பு. காதலில் தோற்றவள், தன் தோழியின் கொலைக்காகப் பழி வாங்கும் வன்மமும் தன் சொந்த மகளின் காதலில் குறுக்கே வரும் உறவுச் சிக்கலுக்கு தன் மகளைப் பலியாக்கும் பரிதாபமும் வியக்கவைக்கிறது. தங்கராணியின் பாத்திரம் பரிதாபம் நிறைந்தது. ஒருவகையாக அவள் பாதுகாப்பான கரங்களில் சேர்வதில் வாசகன் நிம்மதி அடைகிறான். சித்திரப்பூ, சாதி ஆணவத்திலும் ஆண்மைத் திமிரிலும் கசங்கிய மலர். செவ்வந்தி போல அவள் அரிவாள் தூக்க முடியவில்லையே. அவளுக்கு எந்த நியாயமும் கிடைக்காமல் போவதின் சமூக யதார்த்தத்தை நாவலின் பிற பாத்திரங்களில் யாருமே கேள்விக்குள்ளாக்காமல் போவது நாவலில் சிறிய குறைபாடு. வெட்சி, சற்றே காவியத் தன்மை பூசப்பட்ட பாத்திரம். அவளின் சுயநலமற்ற அன்பு செல்லக் குட்டியை மட்டுமல்ல; நம்மையும் வசப்படுத்துகிறது. இந்தத் தேரிக் காட்டின் இன்னோரு அழகு அசரியா, பாதாளமுனி மற்றும் செல்லக்குட்டியின் நட்பு. வாலிபமும் முதிர்ச்சியும் சேர்ந்த கலவையாக, படிக்கும் வாசகனை சொந்த வாலிப நினைவுகளுக்கு இட்டுச் செல்கிற வாசிப்பு அனுபவத்தைக் கடத்துகிறது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கும் ராஜேஷ் வைர பாண்டியனுக்குப் பாராட்டுகள். இனி தூத்துக்குடி விமானநிலையச் சாலையைக் கடந்து செல்கையில் செல்லக்குட்டி நினைவுக்கு வருவான். நூல் பெயர் : தேரிஆசிரியர் : ராஜேஷ் வைர பாண்டியன்வகைமை : நாவல்வெளியீடு : உதிரிகள் பதிப்பகம்பக்கங்கள் : 291விலை : 440 ரூபாய்கள்

வேர்

வேர்

சிறுகதை ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று பள்ளிக்காலத்தில் கிடைத்தது. இப்போது இருக்கும் வாந்தி மாத்திரைகள் இல்லாத காலம். எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்து பசுமையை அதற்குண்டான இளம் சாரளைக் கொண்டு நகர்த்திய நாள் அது. சுமை என்ற ஒன்று இல்லாத காலம் இருந்ததில்லை அப்பாவிற்கு. ‘அவளுக்கு இல்லாம என்ன?’ என்ற வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பகிராத குணம் அது. அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் ஒரே பெண்தான் நான் அவர்களுக்கு. பெரியதாக சண்டை ஏதும் நடந்ததாக ஞாபகம் இல்லை. ‘இன்றைக்கு ஏன் இத்தனை ஆராய்ச்சி?’ என்று தோன்றிய நொடியில், காரின் சத்தம் கேட்டுக் கலைந்து கைப்பையோடு வெளியேறி தொற்றிக்கொண்டேன். பழைய வீட்டிலிருந்து இந்தப் பயணம் தொடங்கியிருந்தால் இந்நேரம் அப்பா கதவருகில் வந்து நிற்பார். எல்லா தைரியங்களை கற்றுத் தந்துவிட்டாலும் இன்னும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதற்கான சந்தேகமது. ‘என்ன பார்த்தாலும் எல்லாம் பார்க்க முடியாது’ என்பதை அம்மா ஒருமுறை வேறொரு மொழியில் சொல்லும்போது அவருக்கு இன்னும் இரக்கம் வந்தது. பெண் பார்த்துவிட்டுப் போனவர்களைப் பற்றித் தனியாகக் கட்டுரை ஒன்றைத் தயார் செய்துகொண்டு வந்து சமர்ப்பித்தார். தேர்வுத் தாளில் என் மதிப்பெண்ணைக் கூட்டி சரி பார்க்கும் மனநிலையில் வளர்த்தவருக்கு வேறென்ன தெரியும்! ஒன்று நூறு அல்ல; ஆயிரம் முறை எந்த அர்த்தத்தில் கேட்டாலும் எனக்கென்று எந்தத் தனிப்பட்ட விருப்பமுமில்லை என்று நானாகவே நேரடியாகச் சொன்ன பின்புதான் திருமணத்தின் அடுத்த பக்கத்தைப் பார்க்கப் போனார். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. “நீ சாப்பிடல.. என்ன பண்ணப் போற…?” அவளுக்கு வேறென்ன கேட்கத் தெரியும்? நிழலில் வளர்ந்த செடி அவள். புதிதாக எதையும் அனுமதிக்காத பூங்காச் செடி. அப்பாவையும் என்னையும் தவிர வேறொரு உலகம் அறியாதவள். ஒருவேளை நானும் அம்மாவை ஒத்திருந்தால், இந்தப் பயணத்திற்குத் தேவை இருந்திருக்காதுதான். பறக்கத் தொடங்கி, பேசும் நேரம் நீண்டு, ஒரே மாதத்தில் இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டோம் என்ற முதல் பொய் வானம் போல நீலமாய் இருந்த நாள் அது. என்னுடைய வருமானத்தையும் இன்ன பிற சாகச விருப்பங்களையும் சொல்லிகொண்டிருந்தேன் அப்போது. எதிரிலிருந்து வரும் வார்த்தைகளின் கனத்தைக் கூர்ந்து கவனிக்கும் சாகசத்தை அப்பா எனக்குக் கற்றுகொடுக்கவில்லை. துணை என்ற ஒன்றை இருபாலரும் இவ்வளவு உணர்வுகளைக் கொண்டு அணுகவேண்டிய அவசியமில்லை என்பதை நான் புரிந்துகொள்ள இருபது மாதங்களாயின. ‘நடுவில் அறுத்தாலும் வளரும் மரம் உள்ளபோது, மனிதனுக்கு வேர் இல்லாமலா போகும்?’ என்ற சொலவடை எதன் வழியாக வந்ததோ?! இதோ, இந்தப் பயணமும் அதன் வழியாகத்தான் நிகழ்ந்தது. எனக்காக இளையராஜாவை நிறுத்தி வைத்துவிட்டு, உணவகம் ஒன்றில் நுழைந்தார் ஓட்டுநர். பசிக்கிறது. எதையாவது விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். “நான் வீட்டுல சாப்பிட்டு வந்துட்டேன்… நீங்க சாப்பிடுங்க” என்று விலகிக்கொண்டார். மணி பத்தைத் தாண்டியிருந்தது. மாநகரத்தை நோக்கிய சாலையில் இருக்கும் உணவகம் அது. மென்சூட்டில் வந்த சப்பாத்தியை, அன்றொரு நாள் மாத்திரை விழுங்கியதைப் போல விழுங்கினேன். ‘நீ அப்படியேதான் இருக்கிறாய் ‘என்ற குற்றவுணர்வும் வந்து போனது. வெகுவிரைவாக வாகனம் ஏறி அமர்ந்து பயணமானோம். கடைசியாக, அடம்பிடித்த குழந்தையின் வாயில் திணித்த மிச்சச் சோற்றோடு ஒரு தகப்பன் அங்கிருந்தான். எனக்கு அப்பாவைத் தவிர வேறொருவரை அங்கு நிறுத்தி ஒப்பிட முடியவில்லை. ‘இனி உன்னோடு வாழ முடியாது’ என்ற வாக்கியம் நேரடியாக வரும்வரை காத்திருக்கப் பழகியவள் எவ்வளவு முட்டாளாக இருப்பாள்?! ஆம், நான் முட்டாள்தான். இல்லையென்றால் அப்படிக் கேட்டிருப்பேனா? ‘இந்தப் புகைப்படத்தில் இருப்பவள் யார்?’ பரவலாக திருமணத்திற்கு முன்பு பேசிய பொய்யைப் போல, ஏதாவது சொல்லியிருக்கலாம். ‘மவுனம் பொய்யைவிடக் கனமானது’ என்று யார் எனக்கு சொல்லித் தந்தார்கள்?! இரண்டாம் நாள் இரவில், இருவரில், எனக்கு எந்த நெருடலும் இல்லைதான். மிக வேகமாக வெளியேறிப்போன உன் குற்றவுணர்வு, என்னுடன் படுக்கையில்தான் இருந்தது. நீ மறந்து, விட்டுச் சென்றுவிட்டாய். ஒரு கேள்வியில் இத்தனை பதில் கிடைக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது. என் அப்பாவை நீ, ‘வா’ என்றாவது அழைத்திருக்கலாம். மகளைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலும் மரியாதையைக்கூட எதிர்பார்ப்பதில்லை. ‘எனக்கு வெளியில் வேலை இருக்கிறது. நீ உன் வீட்டில் இரு’ என்று சொன்ன நீ, ரயில் நிலைய வாசல் வரை ஏன் எதுவும் சொல்லவில்லை? எல்லா அழைப்புகளிலும் விருப்பமில்லாமல் பேசிய உன் வார்த்தைகள் என் வீட்டுச் சுவற்றில்கூட இல்லை. ஆண்கள் என்றால் தைரியசாலிகள் என்ற மனநிலையை, கண்டிப்பாக நான் என் அப்பாவிடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் வாழ்வில் தைரியம் என்பது வேறொன்று. இருபுறமும் காவேரி, எந்த இரைச்சலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சொல்லப்போனால், நதியின் வாழ்வுதானே பெண்ணின் வாழ்வு! வேறு வழியில்லாமல் இருவரும் தானாக உருவாக்கியதைப் பெருமையாகக் கருதாமல் கரைந்துபோகிறார்கள். நதிதானே இங்கே கடலை உருவாக்கியது?! வேறு காட்சி வேண்டாம் என்று கண்ணாடியை ஏற்றிக்கொண்டேன். “முதல்ல அவருக்கு சொல்லு. இல்ல.. நான் சொல்லட்டா?” அம்மாதான் தொடங்கினாள். சில சம்பவங்களை உடனடியாகக் கடத்திவிடுவதுதான் சரி எனப் புரிந்துகொண்ட சந்தர்ப்பமது. “அதுக்கு என்ன…?” என்ற உன் கேள்வி, திருமண வாழ்வில் முதன்முறையாக எனக்கு கண்ணீரைத் தந்தது. “நான் ரெண்டு நாள்ல வந்துருவேன்… அப்படியே இரு” என்பதன் அர்த்தம், ‘எந்தக் கற்பனையும் என் கற்பமும் வேண்டாம்’ என்ற அறிகுறியாக எனக்குத் தென்படவில்லை. அம்மாவை வெளியில் அமர்த்திவிட்டுதான் பேசத் தொடங்கினோம். எனக்கு உன்னோடு வாழ விருப்பமில்லை என்கிற வார்த்தைகளை மிக நாசூக்காக வெளியில் கொட்டிக் கிளறிக்கொண்டிருந்தாய். மீண்டும் ஒருமுறை நான் அழத் தயாராக இல்லை என்பதே உனக்கு அதிர்ச்சியாகவும் ஆசுவசமாகவும் இருந்திருக்கலாம். எனக்கு அங்கேயும் ஒரு ஆறுதல் இருந்தது. என் அப்பாவின் தேர்வு தவறானது என்பதை, அவர் அறியாமலே இறந்து போனது. குழந்தை எனக்கு வேண்டாம் என்பதை, எவ்வளவு அழகாக உன்னால் சொல்ல முடிந்தது?! ‘உன் வாழ்வு எதிர்காலம் இல்லாமல் போகும்’ என்று எனக்கு நீ தந்த அறிவுரை, தேவையான ஒன்றுதான். அதனால்தான் உன் கையெழுத்து கொண்டு கரு கலைத்தேன். நாளை அது கேட்கும் கேள்விகளுக்கும் உன்னிடம் மவுனம்தானே இருக்கும்? இதோ, மாநகர எல்லை வந்துவிட்டது. நாளைய இறுதித் தீர்ப்பில் எல்லாம் முடிந்துபோகும். என்னிடம் எல்லாப் பெண்கள் முன்வைக்கும் கேள்வி இருக்கிறது. ‘என்னைவிட எதில் அவள் உயர்ந்தவள்?’ என்ற கேள்வி. நிச்சயமாக நான் அதைக் கேட்கமாட்டேன். உன்னைவிட நானும் தாழ்ந்துவிடவில்லை என்ற நம்பிக்கை வந்த பின்பு, உன் மவுனத்தைவிட இந்த வாழ்வு பெரியதாகத் தெரிகிறது. அன்பைச் சுமந்து வளர்ந்தவளிடம் வேறென்ன வெளிவரும்? எப்படி எல்லாப் பெண்களும் உனக்கு ஒன்றுபோல் இல்லையோ, அப்படியே எனக்கும் எல்லா ஆண்களும் ஒன்றுபோல் இல்லை. ‘நீ வெட்டியது மேல் கிளைதான். எனக்கு இன்னும் வேர் இருக்கிறது’ என்ற எண்ணம் வந்தபோது அனிச்சையாக இளையராஜா பாடிக்கொண்டிருந்தார். நன்றாகத் தூக்கம் வந்தது.

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).

பின்னப்பட்ட எண்ணங்கள்

பின்னப்பட்ட எண்ணங்கள்

நிகழ்வுகளின் நெளிவுசுழிவுகள்மூளைக்குள் பின்னப்பட்டுசொற்களாய் உருமாறிஇதழ்வழி உதிருமெனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்நீருக்குள் புதைக்கப்பட்டமீள் ஒலியாய்குமிழ்களாகவே வெளிப்பட்டுகாற்றில் காணாமல் போகின்றன ரணங்களுக்கு மருந்திடாக் காலம்பின்னப்பட்ட எண்ணங்களைச்சுமந்திருக்கும் சுவர்களுக்குத்தலைகோதிவிட கைகளைத் தராததுஜென்ம சாபல்யம் என்றேஅதன்மீது ஊர்ந்து செல்லும் சிலந்திபரிதாபமுரைத்துச் செல்கிறது நிலவின் கறைகள் போலஆண்டாண்டாய் உள்ளூறக் குமைந்துநிஜத்தைப் பொலிவிழக்கச் செய்யும்நஞ்சூறிய சொற்களை உதிர்த்துஎம்மனதையும் மரணிக்கச் செய்திடாதுஅச்சுவர்களைத் தவிக்கவிட்டுப் பறந்ததுபெருமூச்சொன்று பேரண்டம் தேடி