மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )