மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12
13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக