மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான்  காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில்  அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி  யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன்,  அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து  கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது.  மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில்  தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும்  கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள்.  ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே,  நான் பிரமச்சாரியாக  வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, தட்டையாக அறிமுகம் செய்யமாட்டார். உபகதைகளைப் போலவே ஒரு அபூர்வமான நிகழ்ச்சியின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அறிமுகப்படுத்துவதும் மகாபாரதம் மாபெரும் இதிகாசமாக விளங்குவதற்குக் காரணமாக உள்ளது என்பது பலருடைய அபிப்பபிராயம். யாராலும் மறித்து நிறுத்த முடியாத கங்கையின் நீரோட்டத்தை மறிப்பவன், ஈடு இணை இல்லாத அஸ்திரப்பயிற்சி பெற்ற மாவீரனாகத்தான் இருக்க முடியும் என்று சந்தனு மகாராஜன் நினைத்தான். அப்போது கங்காதேவி மனிதவடிவில் சந்தனு மகாராஜன் முன் தோன்றினாள். “நீ வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன்தான் உன் மகன். அவன் பெயர் தேவவிரதன். அவனுக்குப் போர்க் கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளும் கற்றுத் தந்து மாபெரும் ஆளுமையாக்கி இருக்கிறேன். இனி அவன் என்னிடமும் உலகத்திடமும் கற்றுக்கொள்ள எந்த வித்தையும் பாக்கி இல்லை. எனவே நீ அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ” என்று சொல்லி, தேவவிரதனை சந்தனு மகாராஜனிடம் ஒப்படைத்தாள். சந்தனு மகாராஜன் தேவவிரதனைக் கட்டித் தழுவிக்கொண்டு, கங்காதேவி சொன்னபடியே தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். அதுமுதல், தேவவிரதனை கங்காபுத்ரன் என்று உலகம் அழைத்தது. வழக்கமாக, புதல்வரையும் புதல்வியரையும் தந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவர்களின் மகன்/மகள்’ என்று இப்போது அழைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தாயின் பெயரைச் சொல்லி அவருடைய மகன்/ மகள் என்றழைக்கும் பழக்கம் பரவலாக அப்போது வழக்கத்தில் இருந்தது இதன்மூலம் தெரியவருகிறது. மகாபாரதக் காலத்தில் தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாறும் போக்கு (transition) நிகழத் தொடங்கி இருந்தாலும் தாய்வழிச் சமுதாய வாழ்முறையே பெருமளவில் வழக்கில் இருந்ததை இது காட்டுகிறது. நமக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில்கூட, வியாசர் உட்பட எந்தவொரு கதாபாத்திரமும் தேவவிரதனை ‘சந்தனு புத்ரன்’ என்று அழைத்ததாகத் தெரியவில்லை. பாண்டவர்களை ‘குந்தி புத்திரர்கள்’ என்று அழைப்பார்கள். ‘பாண்டுவின் புத்திரர்கள்’ என்றழைப்பது அபூர்வம். கர்ணனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கிருபாச்சாரியரும் பாண்டவர்களும் ‘தேரோட்டியின் மகன்’ அல்லது ‘ராதேயன்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சி கண்டார்கள். இப்படி இருக்கையில், சந்தனு மகாராஜன் மீண்டும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் வசம் மையலில் விழுந்தான். மீனவப் பெண்ணின் தந்தை விதித்த பல நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததால், சந்தனு மகாராஜாவால் சத்யவதியை மணம் முடிக்க முடியவில்லை. அதனால் ஊனும் உயிரும் உருகி உருக்குலைந்து போனான். அதை அறிந்த தேவவிரதன், தன் தந்தை சந்தனு மகாராஜனுக்கு சத்யவதியைத் திருமணம் செய்து வைக்க, சத்யவதியின் தந்தையிடம் பேசினான். சத்யவதியின் தந்தையான மீனவர் தலைவன் அதிபுத்திசாலி. “என் மகளின் அழகுக்கு, அவளுக்குப் பிறக்கப்போகும் மகன் மன்னனாக வேண்டியவன். மகாராஜாவின் மூத்த மகனாகவும் பட்டத்து இளவரசனாகவும் நீங்கள் இருக்கும்போது, என் மகளின் மகன் எப்படி மன்னாக முடியும்?’ என்று சத்யவதியின் தந்தை தேவவிரதனிடம் கேட்டான்.“நான் இப்போதே பட்டத்து இளவரசன் என்ற பொறுப்பைத் துறக்கிறேன். அதுமட்டுமன்றி என் வாழ்நாள் முழுவதும் இளவரசனாகவோ மன்னனாகவோ முயற்சிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று தேவவிரதன் கூறி சத்தியம் செய்தான். இருந்தும் சத்தியவதியின் தந்தை திருப்தி அடையவில்லை. “நீங்கள் பட்டத்து இளவரசனாகவோ மன்னனாகவோ மாட்டேன் என்று சத்தியம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பின்னாளில் உங்களுக்குத் திருமணமாகி உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் உங்கள் பிள்ளைகள் அரசனாகும் உரிமையைக் கோரலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மகளின் மகனுக்கோ அவனது பிள்ளைகளுக்கோ அரசனாகும் வாய்ப்பு இல்லாமற் போய்விடுமே” என்றான் சத்தியவதியின் தந்தை. உடனே தேவவிரதன், “என் வாழ்நாளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இது சத்தியம்” என்று சத்தியம் செய்தான்.உடனே வானிலிருந்து “பீஷ்ம, பீஷ்ம” என்ற முழக்கம் கேட்டது. பீஷ்மன் என்றால் ‘செய்தவற்கரிய செய்பவன்’ என்று பொருள். சத்ரியர்கள் மட்டுமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லிவந்த பீஷ்மருக்கு, சத்யவதியின் வாரிசுகள் என்ற வகையில் குருவம்சமே மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள் என்பது நினைவில் இல்லாமல் போனது விந்தையான உண்மை. தற்போது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் மகாபாரதத்தில் சத்திரியர்களாக முன் நிறுத்தப்படும் அனைவரும் சத்யவதி என்ற மீனவ குலப் பெண்ணின் வழித்தோன்றல்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்த்தால், கர்ணணின் மகன் விருஷகேதுவை, சூத்திரன் என்ற காரணத்தினால் முடி சூட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்த பீஷ்மரின் சட்ட நிலைப்பாடு சரியானதாகத் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். சத்யவதியும் சந்தனு மகாராஜனும் திருமணம் செய்த கொண்டு இல்லறம் நடத்தியதன் பயனாக, சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சித்திராங்கதன் இறந்துபோனான். விசித்திர வீரியன் அரசனான். காசி தேசத்து இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவருக்கும் சுயவரம் நடக்க இருப்பதை பீஷ்மர் கேள்விப்படுகிறார். அவர்களை, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். பீஷ்மர் வில்வித்தையில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமனுக்கு மட்டுமே இணை வைத்துப் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான வில்லாளி. அவருடைய போர் செய்யும் ஆற்றல்பற்றி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். அதேபோல, அவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர் என்பதும் தெரியும். இந்தச் சூழலில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் சுயவரத்துக்கு பீஷ்மரே நேரில் வந்ததைப் பார்த்து சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களும் திகைத்துப் போயினர். அவர் விசித்திர வீரியனின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதுவே இதுவரை இல்லாத நடைமுறை. அதிலும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர் சுயம்வரத்தில் பங்கு கொள்வது என்பது கேள்விப்படாத விநோதம் மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனையும் தர்ம நியதிப் பிரச்சனையுமாகும். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுக்காக, சுயம்வரத்தில் அவனுடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டாலும் அது பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீஷ்மர் சுயம்வரத்தில் பங்கு கொண்டிருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரும் அரச பதவி வேண்டாம் என்றவருமான பீஷ்மருக்கு இளவரசிகள் மாலை சூட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆக, பீஷ்மரின் சபதம் மீனவப் பெண்ணின் மகனுக்கு அரச பதவியைக் கொடுத்தது என்றால், அவரது வீரம் அவரது பிரம்மச்சரிய விரதத்தைக் கேலிப் பொருளாக்கி இன்னொரு அற மீறலுக்கும் காரணமாகிவிட்டது. (புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

4. பீஷ்மர் சொன்ன சட்ட விதி சரியா? நேர்க்கோட்டில் வியாசரால் சொல்லப்ட்ட மகாபாரதத்தை ரசிப்பதுடன், வியாசராலும் மக்களாலும் சேர்க்கப்பட்ட உபகதைகளையும் ரசிப்பதும் மகாபாரம் முன்வைக்கும் சில சட்டப் பிரச்சனைகளை, அதாவது, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உற்று நோக்குவதும் ‘பாரதக் கலாச்சாரம்’ என்பது மாற்றமில்லாமல் ஒரே கலாச்சாரமாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரமா என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும் என்பதுதான்  இந்தப் பெரிய கட்டுரையை எழுதுவதற்கான உந்துதல் ஆகும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கௌரவப் படையின் முதல் தலைமைச் சேனாதிபதியான பீஷ்மர், 10ஆம் நாள் போரில் வீழ்ந்தார். அதன் பின்னர் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான துரோணர் 15ஆம் நாள் கொல்லப்பட்டார். அதன்பின் கௌரவப் படையின் தலைமைச் சேனாதிபதியான கர்ணன் 17ஆம் நாள் போரில் கொல்லப்பட்டான். கர்ணன் இறந்தபோது, அவன்தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தெரிந்தது. அதனால் கர்ணன் இறந்ததும் யுத்தம் தற்காலிகமாக நின்றுவிட்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் மாளாத துக்கத்தில் மூழ்கினர். கர்ணனுக்கு விருஷகேது என்ற மகன் இருந்தான் அவன் கர்ணனின் 10 மகன்களில் உயிரோடு இருந்த கடைசி மகன். அவன் கௌரவப்படையில் சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக யுத்தம் செய்து வந்தான். கர்ணனின் மகனை மன்னனாக்குவதில் தர்மனுக்கும் துரியோதனனுக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தை அத்தோடு நிறுத்திவிட்டு, கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டிவிடலாம் என்று கௌரவர்களும் பாண்டவர்களும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும் இதுபற்றி பீஷ்மரிடம் ஆலோசனை பெற விரும்பினர். பீஷ்மர் அப்போது அம்புகளினால் ஆன படுக்கையில் படுத்திருந்தார். அவர், சூரியன் தெற்குத் திசையில் பயணிக்கும் தட்சிணாயணப் புண்ணிய காலத்திலோ அல்லது வடக்குத் திசையில் பயணிக்கும் உத்ராயணப் புண்ணிய காலத்திலோ, விரும்பும்போது மரணமடைந்துகொள்ள வரம் பெற்றிருந்ததால், பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகாலம் முழுவதும் உயிரோடு இருந்தார். அவர் குலத்தின் பிதாமகன் என்பதால், கர்ணனின் மகனான விருஷகேதுவிற்குப் பட்டம் சூட்டுவது பற்றி, அவரிடம் இரு தரப்பினரும் ஆலோசனை கேட்டனர். பீஷ்மர், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார். இறந்துபோன கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் விருஷாலி. அவள் துரியோதனனின் தேரோட்டியின் மகள். அந்த முதல் மனைவிக்கும் கர்ணனுக்கும் பிறந்த மகன்தான் விருஷகேது. கர்ணனின் இரண்டாவது மனைவி சுப்ரியா. துரியோதனின் மனைவியின் அந்தப்புரத்தில் பணியாற்றிய தோழி. விருஷகேது கர்ணனின் சூத்திர மனைவியின் மகன் என்பதால், அவன் குலத்தினால் சூத்திரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் மன்னனாக அவனுக்குத் தகுதியில்லை என்றும் ஒரு சத்திரியன் மட்டுமே மன்னனாகத் தகுதி உள்ளவன் என்றும் பீஷ்மர் சொன்னார். அதனால் கர்ணணின் மகனுக்கு முடி சூட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிடுகிறார். அதனால் அந்த  ஆலோசனை கைவிடப்பட்டது. யுத்தத்தைத் தொடர்வது என்றும் முடிவாயிற்று. அதுவரை கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்துவந்த கர்ணனின் மகன் விருஷகேது மட்டும் பாண்டவர் அணியில் சேர்ந்துகொண்டு கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டான். பீஷ்மர் விருஷகேதுவுக்குப் பட்டம் சூட்டுவதை நிராகரித்ததன் காரணமாகப் போர் மேலும்  நீடித்தது. இல்லையேல் 17ஆவது நாளிலேயே குருக்ஷேத்ர யுத்தம் முடிவிற்கு வந்திருக்கும். கர்ணனின் மகனேயானாலும் விருஷகேது சூத்திரன் என்பதாலும் சத்ரியன் இல்லை என்பதாலும் அவன் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியற்றவன் என்று பீஷ்மர் சொன்ன சட்டவிதியின் காரணமாக, மேலும் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். மகாபாரதக் காலத்துச் சட்டம் சூத்திரன் – சத்திரியன் என்ற பாகுபாடு பார்க்காமல் இருந்திருந்தால், இந்த அநியாயமான மரணங்களைத் தவிர்த்திருக்க முடியும். இந்தச் சட்டவிதி இந்தக் காலம் வரை தொடர்ந்திருந்தால், அதாவது, அதே கலாச்சார விதிகள் இப்போதும் தொடருமானால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் வைசிய வகுப்பைச் சேர்ந்த தாமோதரதாஸ் நரேந்திர மோடி பிரதமராகவும் ஆகியிருக்க முடியுமா? முடியாதல்லவா..? மராட்டிய வீரர் சிவாஜியும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. வீர சிவாஜி மீனவ வகுப்பைச் சேர்ந்தவர். சத்திரியர்கள்தான் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள முடியும் என்று பார்ப்பனர்கள் சொன்னதால், வீர சிவாஜி பெரும் பொருட்செலவில் காசிக்கு ஆள் அனுப்பி ‘காகா பட்டர்’ என்ற பார்ப்பனரை மகுடம் அணிவிக்க அழைத்து வரச் செய்தார். காகா பட்டர் பண ஆசை பிடித்த பைசாசம். ‘பரிகாரம் செய்து, மீனவ குலத்தைச் சேர்ந்த வீர சிவாஜிக்குப் பட்டாபிஷேக விழா நடத்தித் தருகிறேன்’ என்று கூறி, சிவாஜி சேர்த்து வைத்திருந்த திரண்ட செல்வம் முழுவதையும் அபகரித்துக்கொண்டான். அதன் பிறகும் அவனுடைய சாதித் திமிர் போகவில்லை.  இதை ‘வீர’ சிவாஜியால் தாண்டிப் போக முடியவில்லையே..! பாரத கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது என்பது சரியா..? பீஷ்மர் சட்டப் பிரச்சினைகளைச் சொன்னது இப்போதுதானா..? (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

3. பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் ஒரே இலக்கு மகாபாரதத்தில் வரும் உப கதைகள் வியாசருடையதா அல்லது பிறருடையதா என்ற கேள்வியை முந்தைய பதிவில் கேட்டு வைத்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உப கதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியமாக மாற்றம் கொண்டிருக்கின்றன என்ற எமது கருத்தையும் சொல்லி வைத்தோம். தொடர்ந்து இன்னும் சில கதைகளைப் பார்ப்போம். காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் முடித்தபின்பு, பீஷ்மருக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. அதாவது, ஜாதகப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்றும் அதனால் காந்தாரி விதவையாகிவிடுவாள் என்பதும் அவளுடைய ஜாதக அமைப்பு என்று சோதிடர்கள் சொன்னார்கள். அதற்குப் பரிகாரமாக, காந்தாரியை ஒரு ஆட்டிற்குத் திருமணம் செய்துகொடுத்து, அந்த ஆட்டினை காந்தாரியின் முதல் கணவனாகக் கருதிக் கொன்றபின், அவளை திருதராஷ்டிரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அந்த வகையில் திருதராஷ்டிரனுடனான அவள் திருமணம் அவளுக்கு இரண்டாவது திருமணம் மட்டுமல்ல, விதவா திருமணமும் ஆகும். இந்த உண்மை, திருதராஷ்டிரனின் திருமணத்தின்போது பீஷ்மரிடம் சொல்லாமல் மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மை தெரிந்ததும் பீஷ்மரால் கோபத்தை அடக்க முடியவில்லை. காந்தாரியின் தந்தையையும் சகுனி உட்பட காந்தாரியின் நூறு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். அனைவருக்கும் சேர்த்து அவர்கள் உயிர்வாழ நூறு சோற்றுப் பருக்கையும் ஒரு நத்தை ஓட்டில் தண்ணீரும் கொடுத்தனர். குருவம்சத்தினர், தங்கள் கைதிகளுக்கு சோறும் தண்ணீரும் கொடுக்காமல், பட்டினி போட்டுக் கொன்றனர் என்ற பழி வராமல் இருக்க இந்த விசித்ரமான ஏற்பாடு. ஆனால் காந்தார (இன்றைய ஆப்கானிஸ்தான்) இளவரசர்கள் ஆலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பருக்கையைத் தின்று உயிர் வாழ்வது முடியாதகாரியம் என்பதால், நூறு பருக்கைகளையும் இளையவனான சகுனிக்குக் கொடுத்து அவனை உண்ண வைத்து, அவன் மட்டுமாவது உயிர்வாழ்ந்து குருவம்சத்தைவேரறுக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். அந்த யோசனையின்படியே சகுனியை மட்டும் உயிர்வாழ வைத்துவிட்டு, மற்றவர்கள் இறந்துவிட்டனர். சகுனியின் தந்தை இறப்பதற்கு முன்பு தன்னுடைய நடுவிரல்களை உடைத்து, இரண்டு தாயக்கட்டைகளைச் செய்து சகுனியிடம் கொடுத்து, அந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கும் எண்களையே போடும் என்று வரம் தந்துவிட்டு இறந்து போகிறான். இந்த தியாகத்தை, குரு வம்சத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர்கள் செய்கிறார்கள். அந்த முறையில் பார்த்தால், பூமியின் பாரத்தைக் குறைப்பது, அதாவது மனிதக் கூட்டத்தைக் கொன்றழிப்பது என்ற, யோசித்தால் நாகரிகத்தில் மிகவும் கீழ்மையான அவதார நோக்கம் கொண்டு வந்திருக்கும் யாதவ குல வாசுதேவ கிருஷ்ணன் என்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கும் சகுனிக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நோக்கம் என்பது வியாசர் இதிகாசத்தில் வியப்பைத் தருவதாகும். ஏனெனில், இதிகாச நாயகன் கிருஷ்ணன் என்றால் இதிகாச வில்லன் சகுனி. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே நோக்கத்தையே இலக்காக வைத்தஒரே ஒரு இதிகாசம் மகாபாரதம்தான். இதில் யார் நல்லவர் என்பதும் யார் கெட்டவர் என்பதும் விடை காண முடியாத கேள்வி. மகாபாரதத்தில் எத்தனை உபகதைகள் இருக்கின்றன என்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு, மகாபாரதத்தை ‘மண்-பொன்-பெண்-ஆசைகூடாது’ என்று ஒரே வாசகத்தில் சொல்லவும் முடியும்; பல்லாயிரம் பக்க அளவிற்கு விரிவுபடுத்தியும் சொல்லமுடியும் என்பது புரியும். இந்த பீஷ்மர் எப்போதெல்லாம் சட்டங்களை நீட்டினார் என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.. (மீண்டும் புதன்கிழமை தொடர்வோம்)