தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://naarkaram.com/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு  14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல்  மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில்  பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல்  தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால்  பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன்,  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம்.   மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப்  பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net    விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்

ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு – சிறப்பாசிரியர்கள் குமுறல் அரசுப் பள்ளிகளில் 11 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திமுக, தற்போது மே மாதத்துக்கு ஊதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளது பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைப் பகுதிநேர ஆசிரியர்கள் தொடங்கினார். அப்போராட்டமானது 24ஆம் தேதிவரை நீடித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை அழைத்து, தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொறுப்பேற்றிருக்கும் அறிவொளி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த 11 ஆண்டுகளாகத் தங்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சங்கத்தினரிடம், ‘கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான மே மாத ஊதியம் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதனடிப்படையில் அவர்களும் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் 9.6.2023 அன்று, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஆர்த்தி அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களைப் பணியமர்த்திய அரசாணை எண் 177ஐ சுட்டிக்காட்டி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமனிடம் கேட்டபோது, “அரசாணை எண் 177இல் மே மாதம் ஊதியம் இல்லை என்றோ பதினோரு மாதங்களுக்குதான் ஊதியம் வழங்கப்படும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் எங்கள் பணி நியமனம் குறித்து 26.8.2011 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் 16549 ஆசிரியர்களுக்கு 99 கோடியே 29 இலட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது சிறப்பாசிரியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்படி கணக்கிட்டால் அவர் குறிப்பிட்டது 12 மாதத்திற்கான சம்பளத் தொகையாகும். அதுமட்டுமின்றி, பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் (தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) நியமிக்கப்பட்டதாகும். இத்திட்டமானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிதிப் பங்களிப்புடன் நடைபெறுவதாகும். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான சம்பளத்தில் மத்திய அரசு 60% வழங்குகிறது. மீதமுள்ள 40% தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். இதற்கென ஆண்டுதோறும் Project Approval Board மூலம் Annual work plan and Budget கூட்டம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தக் கூட்ட அறிக்கையியிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாத சம்பளத்திற்கான நிதி ஒதுக்குவதாகத்தான் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாகவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் மத்திய அரசின் 60% போக மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதற்கு, “மாநில அரசு மூலம் பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு எதுவும் இல்லை” என மாநில அரசு பதில் கொடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் வரிசை எண் 181இல் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் எனக் கூறியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது எங்களுக்கு நியாயமாகக் கொடுக்கவேண்டிய பலன்களைக்கூடக் கொடுக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக எங்களுக்குச் சேரவேண்டிய மே மாத ஊதியத்தையும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தர ஆணையையும் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஏற்கனவே சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்துவரும் சிறப்பாசிரியர்களை வாக்குறுதி கொடுத்து வஞ்சித்து வருகிறது அரசு. பணி நிரந்தரம் செய்வதற்கான சட்ட நுணுக்கங்களை அறியாமலா தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பார்கள்? பணி நிரந்தரக் கோரிக்கை ஒருபுறமிருக்க மாநில அரசின் நிதிப் பங்களிப்பாக ஒரு ரூபாய்கூட ஒதுக்காமல் ஒன்றிய அரசு வழங்கும் 60% நிதியை மட்டுமே வழங்கிவிட்டு மே மாதம் ஊதியம் வழங்க மறுப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதோடு அது உழைப்புச் சுரண்டல் மற்றும் உரிமைச் சுரண்டலும் ஆகும். அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கியதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்ட திமுக அரசு, சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே நியாயமானதாக இருக்க முடியும்.

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்?

தமிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.  வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது  ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை. ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பொரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?  பள்ளிக்குள்  அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பொரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம். இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பொரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன? கல்வித்துறையில் பணியாற்றும்   இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக்கல்வித் துறை. 12000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல்  அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன? அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்.  ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பொரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே? நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம். ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை) Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?  எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன? தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்? இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பொரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா? அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம். ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

கல்விப் பாதுகாப்பு நாள் – வித்யாசாகரர் பிறந்தநாள் – AISEC தமிழ்நாடு

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த நாளான செப்டம்பர் 26 , அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி- தமிழ்நாடு சார்பாகக் கல்வி பாதுகாப்பு தினமாக செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டது. அத்தருணத்தில் இரண்டு நிகழ்வுகள் பிரதானமாக இடம் பெற்றன. நிகழ்வில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் (AUT, TNGCTA)பலரும் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் (AIFETO) கலந்து கொண்டு சிறப்பித்தனர். அது மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை வரைவு வந்தபோதும் (2019), அடுத்து கொள்கை விளக்கக் குறிப்பு வந்த போதும் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியை தன்னார்வக் குழுவினருடன் முன்னெடுத்த சிறார் எழுத்தாளர் விழியன் கலந்து கொண்டார். இந்திய விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அதற்காக தமிழகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்த தோழர் பாலகிருஷ்ணன் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு ) தோழர் மேரி , அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மேனாள் தமிழ்நாடு தலைவர் தோழர் ரங்கசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், சுவடு இதழின் நிர்வாக ஆசிரியர் அஹமது மன்சூர், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் நாஞ்சில் நாட்டான், சமூக செயற்பாட்டாளர் சௌந்திரராஜன், ஊடகவியலாளர் நெய்வேலி பாலு, அறிவியல் விஞ்ஞானி வெங்கடேசன் , அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்கள் திரு சுதாகர், திரு லேனா குமார், திரு மருதநாயகம், திரு கோமல் தமிழமுதன், திரு சதாசிவம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்னையில் எழும்பூர் மியூசியம் எதிரில்‌ அமைந்துள்ள இக்சா (ICSA) அரங்கத்தில் செப்டம்பர் 25, ஞாயிறன்று, மாலை 4 -7 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது . ஈஸ்வர சந்திர வித்யாசாகரர் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு முதல் நிகழ்வாக, மேற்கு வங்காளத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நிகழ்ந்தது. சுவடு பதிப்பகத்தை நடத்தி வருபவரும் சமூக மாற்றத்தை முன்வைத்து வாசிப்பு இயக்கத்தை பரவலாக்குவதன் பொருட்டு, நுழைபுலம் என்ற அமைப்பை நடத்தி வருபவருமான தோழர் நல்லு ஆர் லிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார்.மிகச் சிறப்பாக பணியாற்றி இக்காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இப்புத்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பேரா மருதநாயகம் அவர்கள் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார்.அதோடு கோமல் தமிழமுதன் அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையையும் நிகழ்த்தினார். உரையானது ஏன் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என வந்திருந்தவர்களுக்கு எழுச்சியூட்டும்படி இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் பொருண்மையானது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் விதமாக அமைந்தது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது. சு.உமாமகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), உறுப்பினர், AISEC தமிழ்நாடு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற சு.உமாமகேஸ்வரி அவர்கள் தனது தலைமை உரையில் , தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன, ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை அவலத்தில் சிக்கி சீரழிகிறது எனப் பகிர்ந்தார். திரு V.அண்ணாமலைAIFETO பொதுச்செயலாளர் தனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் தற்போது தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) உள்ளிட்ட கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய வைத்து உளவியல் ரீதியாக ஆசிரியர்களை பாதிக்க வைத்து வருகிறது. கல்வித்துறையினாது பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது ஒரு முக்கியமான பிரச்சனை. அவர்கள் அன்றாடம் ஒரு அறிக்கையும் ஆணையும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா காலத்தில் ‌‌சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. தீவுத்திடலில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் சென்றனர். மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை ஆனால் மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர். வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துவது உள்பட தேசிய கல்வி கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய்பேசி வருகின்றனர்.இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும் என்று உரைத்தார். பேராசிரியர் ஜெ.காந்திரராஜ்தலைவர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) தொடர்ந்து பேச வந்த பேராசிரியர் ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு இடத்தைக் கூட தரவில்லை என்பதையும் அக்குழு பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் அனைவர் முன்பும் இந்த அரங்கத்தில் பதிவு செய்கிறேன் என்றார். உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாக க் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே விளைகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45000 எண்ணிக்கையுள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கொங்கு கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பையும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். அதோடு, தான் சார்ந்த அமைப்புகள் அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியுடன் இணைந்து களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறோம் என்றும் பதிவு செய்தார். பேராசிரியர் P.சிவக்குமார்மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எதிர்த்து கொண்டு வந்த புத்தகத்தை அவையோருக்குக் காண்பித்தார். மேலும்பல புத்தகத் தரவுகளுடன் இன்றைய தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துக்காட்டினார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும் என்று பகிர்ந்தார். பேராசிரியர் T.வீரமணிமாநிலத்தலைவர் TNGCTA தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதையாவது நிறுத்த முடிகிறதா? இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது. ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். காரணம் நுழைவுத்தேர்வில் தேறி வருவதற்கான வாய்ப்புகள்

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

4, 5 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசு

புதிய தேசிய கல்விக்கொள்கை 2020-ஐக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிவரும் தமிழ்நாடு அரசு, 4, 5 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வையே மாநில அளவில் நடத்த உத்தரவிட்டுள்ளது. திராவிட மாடல் அரசு என்றும் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம் என்றும் சொல்லிக்கொண்டே, புதிய கல்விக்கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இந்த நடவடிக்கை, கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வாசகர்களின் பார்வைக்கு: காலாண்டு தேர்வினையே பொதுத் தேர்வாக்கிக்கொண்டு 4,5 வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புகின்ற பள்ளிக்கல்வித்துறையின் மாடல், புதிய கல்விக் கொள்கை மாடல் அல்லவா?.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உடனடி நடவடிக்கைக்காக தொகுத்து அனுப்பியுள்ளோம்..! AIFETO 23.09.2022 தமிழக ஆசிரியர் கூட்டணிஅரசு அறிந்தேற்பு எண் :36/2001. புதிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்!.. மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையினை வகுப்பதற்கு குழுவினை நியமித்துள்ளோம், என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொள்கை வழி அறிவிப்பாகும். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். ஆனால் பள்ளிக்கல்வித்துறையை நிர்வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். இது அரசுக்கு தெரியுமா?.. தெரியாதா?.. என்று நமக்குத் தெரியவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பொதுத் தேர்வு நடத்தினால் தேர்வு பயத்தினால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும். இடைநின்ற மாணவர்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடுவார்கள், அல்லது குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு எங்காவது கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சாதாரண ஏழை எளிய மக்களின் பிள்ளைகளின் கல்வியறிவு பெறுவதை இந்த பொதுத்தேர்வு பாழ்படுத்திவிடும். நவீன குலக்கல்வித் திட்டத்தை இந்திய அரசு நாகரிகமாக புகுத்தி வருகிறது என்ற எச்சரிக்கையினை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். ஆனால் தமிழ் நாட்டில் நடைபெறுவது என்ன?.. எண்ணும் எழுத்தும் பயிலும் 1,2,3 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரையில் செயலி வழியாக வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தமிழ் , ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு பத்து கேள்விகள் கேட்கப்படுகின்றது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், இரண்டு பாடங்களுக்கான தேர்வு வினாத்தாளும் அதற்குள்ளேயே உள்ளடக்கி வருகிறதாம். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு உள்ள புத்தகத்தை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டார்கள். 1,2,3 வகுப்புகளில் 35…, 40… வரை உள்ள மாணவர்களை வைத்து ஓர் ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்துகிறார். அவரும் இந்த செயலி வழியாகத்தான் தேர்வு நடத்தவேண்டும். முதலில் தமிழ் பாடத்துக்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு ஆங்கில பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பிறகு கணித பாடத்திற்கான தேர்வினை நடத்துகிறார். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மறுபடியும் அதே போல செயலி மூலம் தேர்வு நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் மாணவர்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்த மாணவர்கள் நான்காம் வகுப்பு வருகின்ற பொழுது எப்படி புத்தக பயிற்சியில்லாமல் எழுதவும், படிக்கவும் செய்வார்கள்?.. இவர்களுக்கு செயல்பாடுகள் வழியாகவே பாடங்கள் நடத்துவதும், செயலி வழியாகவே தேர்வுகள் நடத்துகின்ற போது பெற்றோர்கள் எழுத்துப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என்று அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் மனநிலை பெற்றோர்களுக்கு இருக்கவே இருக்காது. எப்பாடுபட்டாவது சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கு முனைப்பு காட்டுகின்ற சூழ்நிலையை இந்த தேர்வு முறை ஏற்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் நடத்தி வரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மறைமுகமான ஒப்புதல் அளித்து வருகிறார்கள் என்ற ஐயம் எழத்தானே செய்கிறது. சுயநிதி பள்ளிகளிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் படித்துக்கொண்டிருந்த எங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்த்தோமே?.. பாடப் புத்தகத்தின் வழியாக பாடத்தினை நடத்தாமல், எழுத்துப் பயிற்சி இல்லாமல் PRE KG, LKG, UKG வகுப்பு பாடத்தினை மூன்றாம் வகுப்பு வரை நடத்தினால் எங்களின் பிள்ளைகள் கல்வி எதிர்காலம் என்னாவது?.. என்று பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் அதிருப்தியினைத் தெரிவித்து வருகிறார்கள். எண்ணும் எழுத்தும் செயலியில் மாணவர்களுக்கான அந்த மதிப்பீடுகளின் கேள்வித்தரத்தினை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கக்கூடிய PreKG மாணவர்களின் தேர்வு தரமும், இரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு LKG வகுப்புகள் தேர்வு தரமும் மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு UKG வகுப்பு தேர்வு தரமாகத்தான் இந்த கேள்விகள் அமைந்துள்ளன. அடுத்து 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு நடைபெறும். மாநில அளவில் SCERT யில் இருந்து ஒரே மாதிரியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டு குறுந்தகடு வழியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ளார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வினாத்தாள்களை அவர்களுக்கு வேண்டிய அச்சகத்தில் அச்சடித்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதல்நாள் அனுப்பி வைப்பார்கள். வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பள்ளி தலைமையாசிரியர்கள் வினாத்தாள் கட்டணமாக 10 ரூபாய், 15 ரூபாய் ஒவ்வொரு மாணவனுக்கும் வினாத்தாளுக்குரிய கட்டணத்தை உரிய முறையில் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, தேர்வு நடைபெறும் காலை 8.00 மணிக்கு 60 கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும் பயணம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சென்று வினாத்தாள்களை பெற்று வர வேண்டும். அதற்கு பிறகு பள்ளிக்கு எடுத்து வந்து ஆசிரியர் குழு முன்னிலையில் அந்த வினாக்கட்டுகளைப் பிரித்து மாணவர்களுக்கு வழங்கி தேர்வு வைக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாள்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அடுத்தடுத்த ஐந்து தேர்வுகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகம் சென்று வினாத்தாட்களை பெற்று வர வேண்டுமாம்!.. புதிய கல்விக் கொள்கையில் கூட ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு நடத்துகிறார்கள். இந்த மாதிரி கெடுபிடிகள் எல்லாம் இல்லை. TRB, UPSC, TNPSC GROUP-1, NEET தேர்வுகளை எல்லாம் விஞ்சிய வகையில் காலாண்டு பொதுத்தேர்வினை SCERT மூலமாக நடத்துகிறார்கள். 120 பிள்ளைகளுக்கு 1முதல் 5 வகுப்பு வரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பல இடங்களில் பாடம் நடத்திவருகிறார். தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் நினைவிடங்களாக காட்சி அளித்து வருகின்றன. 80% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் செயல்படுவது, SCERT யா?.. இல்லை தேர்வு நடத்தும் TNPSC துறையா?.. பள்ளிக் கல்வி ஆணையர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?.. புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறாரா?.. இலவச கட்டாய கல்வி, சீருடை, புத்தகம், நோட்டுகள், மதிய உணவு, புத்தகப் பைகள், காலணிகள், மிதிவண்டிகள், லேப்டாப் இவையெல்லாம் கொடுக்கின்ற அரசு இந்த வினாத்தாள்களை தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன் வரக்கூடாதா?.. மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை மனம் குளிர வரவேற்று மகிழும் பெற்றோர்கள் வினாத்தாட்களுக்கு 15 ரூபாய் கொடுக்கும் போது இரண்டையும் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?.. இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் படிக்காமலேயே அடுத்த வகுப்புகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளுடன் தேர்வு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள் ?.. அடுத்து 6,7,8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மாதிரியாக வினாத்தாளினுடைய விலையினை பதிவிட்டு வருகிறார்கள். அண்மைக் காலமாக ஆசிரியர்களே வினாத்தாட்களை தயாரித்து தேர்வு நடத்தி வந்தனர். அதேபோல் நீண்ட காலமாக தனியார் நிறுவங்கள் மூலம் வினாத்தாள்களை பெற்று வந்து மாணவர்களுக்கு தேர்வினை நடத்தி வந்தார்கள். தரமான தாளில் அச்சடித்து 7,8 ரூபாய்களில் விடைக்குறிப்புடன், கொடுத்து வந்தார்கள். அவர்களிடம் வினாத்தாள்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அரசு நினைத்திருந்தால் மாணவர்களுக்கு இலவசமாக வினாத்தாள்களை வழங்கி இருக்க வேண்டும். அதுதான் திராவிட மாடல் கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாக அமைந்திருக்கும். இனிவரும் காலங்களில் தொடக்கக் கல்விக்கு பொதுத்தேர்வு என்ற நடைமுறை மாநில அளவில் வினாத்தாள் தயாரித்து அந்த வினாத்தாள்களில் பெற்று வழங்வதில் கெடுபிடி, நடத்துவதில் கெடுபிடி என அனைத்து நடைமுறைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு தடுத்து நிறுத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களை இணைத்து தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டு வரும் நவீன குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் முனைப்பு இயக்கத்தினை நடத்துவோம்!.. எண்ணும் எழுத்தும் கல்வி முறையினையினைப் போன்று இல்லாமல், முற்றிலும் பாட புத்தகத்தை கொண்டு கற்பித்தல் பணியாற்றுவதற்கு ஆசிரியர்களை அனுமதியுங்கள்!. புள்ளி விபரங்களில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுநேரம் ஆசிரியர்களை கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு அளியுங்கள்!.. புத்தகங்கள் இல்லாமல் எண்ணும் எழுத்தும் முறையுமே நீடித்தால் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாடு கல்விச் சீரழிவு நாளினை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்போம்!. என்பதை உணர வேண்டிய சுயபரிசோதனைக்கு நம்மை ஆட்படுத்தி கொள்வோம்!.. மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு குழு அமைத்ததைப் போல தேர்வினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு ஆய்வுக் குழுவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும்,தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கல்வித் துறையின் பொறுப்பு வகிக்கக்கூடிய முதன்மைச் செயலாளர்-1 அவர்களும் அமைத்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பிலும் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்!.. அரசுப் பள்ளிகளின், மாணவர்களின் கல்வி நலனில் எப்போதும் அக்கறை காட்டிவரும்…. WE REJECT NEP2020 SAVE OUR CHILDREN SAVE OUR EDUCATION SAVE OUR TAMILNADU வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

ஐரோப்பாவில் உள்ள பல்கலையில் வருகை தரு ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த புதிதில், பேராசிரியரை வழக்கம்போல் Sir என்று கூப்பிடத் தொடங்கினேன். முதல்முறை ‘அவ்வாறு அழைக்க வேண்டாம்’ என்று கூறிய அவர், இரண்டாம் முறையும் தவறி அழைத்தபோது சார் என்று சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்படி கூறினார். ஆங்கிலத்தில் பெயர் சொல்லி அழைத்தலே மரியாதைக்கு உரியதுதான் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. நம்மவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அவர்களை Sir என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு அக்கலாச்சாரம் அனைத்து மட்டத்திலும் வேரூன்றி விட்டது. சார் என்று தங்களை அழைத்தலை எந்த ஐரோப்பிய, அமெரிக்க அல்லது வளர்ந்த நாடுகளின் பல்கலைப் பேராசிரியர்களும்/ஆராய்ச்சியாளர்களும் சற்றும் விரும்புவதில்லை. உளவியல் ரீதியாகவே தாங்கள் இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் அறைக்கு எந்த மாணவர் வந்தாலும் சரிசமமாக அமர வைத்தே பேசுகிறார்கள் /விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் எந்த இடத்திலும் அடிமைத்தனம் இருக்காது. சர்வதேசப் பல்கலையில் பி.எச்டி / முதுமுனைவர் ஆய்வுப் பணியிடங்களுக்குப் பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உயர்கல்வி மற்றும் அயலகப் பணிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தத் தகவல்கள் பயன்படும் என்று நம்புகிறேன். மின்னஞ்சலின் துவக்கத்தில் ‘Dear Sir/Madam, Respected Sir/Madam’ என்று துவக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.. எனவே, இ-மெயிலில் Sir என்று தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கான வாய்ப்பை நாமே கெடுத்துக்கொள்வது போன்றதாகும். Dear Prof. XXX அல்லது Dear Dr. XXX என்று பெயருடன் இ-மெயில் ஆரம்பித்தல் நலம். இதைப்போலவே இ-மெயிலின் இறுதியில் Thanking you sir என்பதையும் தவிர்க்க வேண்டும். மெயிலின் எந்த ஒரு இடத்திலும் Sir என்பது கட்டாயம் இருத்தல் கூடாது. சுருக்கமான சுய அறிமுகத்துடன் எத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம்/பெற விண்ணப்பித்துள்ளோம் என்பதைக் கூறி விண்ணப்பிக்கும் பதவிக்கு/படிப்பிற்கு அப்பேராசிரியரின் ஆய்வுக் குழுவைத் தேர்ந்தேடுத்த காரணத்தையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் அக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி நமக்கு ஓரளவேனும் இருக்கிறதா என்ற சுய பரிசோதனை செய்வது சாலச் சிறந்தது. அக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஈடுபடும் ஆய்வுத்துறை பிரிவுகள், பெற்றுள்ள நிதியுதவி, பேராசிரியரின் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும். அப்பேராசிரியரின் சிறப்புரைக் காணொளி ஏதேனும் Youtube போன்ற ஊடகங்களில் இருந்தால் அவற்றைக் கண்டும் அவரது ஆராய்ச்சி ஈடுபாட்டை, மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அறியலாம். அப்பேராசிரியரின் குழு வெளியிட்டுள்ள ஓரிரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சொல்லி அவற்றின் உள்ள ஆய்வு முடிவுகள் நம்முடைய ஆராய்ச்சி ஆர்வத்துடன் ஒத்துப்போவதைச் சுருக்கமாக குறிப்பிடலாம்.. நம்முடைய தனித்திறன்களையும் (skills) குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையிலான சுருக்கமான ஆராய்ச்சி சுய விவர அறிக்கையை (CV) கட்டாயம் இ-மெயிலில் இணைக்க வேண்டும். அதில் பக்கம் பக்கமாகக் கதை எழுதாமல், முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள், வாங்கிய விருதுகள், பங்கேற்ற கருத்தரங்குகள் (conference) மற்றும் செமினார் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கல்வித் தகுதி போன்ற பொதுவான பிற தகவல்களை இணைத்தால் போதுமானது. இதற்கான மாதிரி CV-க்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பி.எச்.டி-க்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தன்னுடைய உத்தேச ஆராய்ச்சித் திட்டம் (Proposed research work) குறித்த ஒரு பக்க அறிக்கையை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். தாங்கள் முதுகலை படிக்கும்போது ஏதேனும் ஆய்வுக் கட்டுரை (Research article) /காப்புரிமை (Patent) எழுதி வெளியிட்டிருந்தால் அதன் Soft copy-யை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். இது அவர்களின் தேர்வை இன்னமும் உறுதிப்படுத்தும். இ-மெயிலின் Subject மற்றும் எழுத்துப் பிழைகள், ஆங்கில இலக்கணக் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, பிழையின்றி அனுப்ப வேண்டும். இது மிக முக்கியமானது. ஒரே இ-மெயிலை காப்பி செய்து பல பேராசிரியர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். இது தனிப்பட்ட ஆய்வு/ வேலை வாய்ப்பு என்பதால் ஒவ்வொரு பேராசிரியர்/ ஆராய்ச்சியாளருக்கு அனுப்பும்போதும் அதீத கவனம் கொண்டு நேரம் செலவழித்து அனுப்புவதில் தயக்கம் காட்டுதல் கூடாது. பி.எச்.டி-க்கு விண்ணப்பிக்கையில் ஒரு பேராசிரியர் /ஆய்வாளர் தன் ஆய்வகத்தில் காலிப் பணியிடம் இல்லை பதில் என்று சொன்னாலும் அவரது இ-மெயில் முகவரியை தவறாது சேமித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் முது முனைவர் (Post-doctoral) ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கையில் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள அது வசதியாக இருக்கும். அனைத்துப் பேராசிரியர்களும் நாம் அனுப்பும் இ-மெயிலுக்கு பதில் கூறுவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சர்வதேசப் பேராசிரியர்கள் மாணவர்களை Skype போன்ற ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வார்கள் என்பதால், நேர்முகத் தேர்விற்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் முன்னர் யாரேனும் நண்பருடன் இணைந்து மாதிரி Skype உரையாடலை மேற்கொள்வது பதற்றமடைதலைக் குறைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும், தன்னம்பிக்கையோடு தட்டுங்கள் வாய்ப்புகள் தானாகவே வழி திறக்கும். ஆனந்தகுமார் சூசைமாணிக்கம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவியலாளர், மாட்ரிட், ஸ்பெயின்.

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர்  திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.   நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம்   வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக்  குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம்,  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே  வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக்  குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள்  என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக  ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.  காகிதம் மடித்தல், தொப்பிகள்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது.  அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று  கலை  ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.  மேலும்  கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம்  இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில்  தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே  வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.  எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது. அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது. சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்? இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.   இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை.  நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள்  அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும்  உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும். சு. உமாமகேஸ்வரி 

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

கல்வித் துறையில் குழப்பங்கள் – தவிர்க்கப்பட வேண்டாமா?

தமிழக கல்வித்துறையின் அறிவிப்புகள் நாள்தோறும் ஒன்றாக வந்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் எப்போதும்  மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எதுவென்றால், ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகங்களில் ஏற்படுத்தப்பட்ட மழலையர் வகுப்புகளை மூடுவதாகவும் குழந்தைகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்கல்வித்துறையில் மழலையர் கல்விக்கான வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் குழப்பமான அறிவிப்புகள் தமிழகம் முழுவதிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, அடுத்த நாளே முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியீட்டுள்ளதாக மீண்டும் அரசு அறிவிப்பு வருகிறது.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியாளர்கள்தான் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று  பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மழலையர் வகுப்புகளைத் திரும்ப அங்கன்வாடிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அங்கன்வாடிகளில் இருந்து பள்ளிக்குள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கக் கூடிய இந்த அங்கன்வாடி மையங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஐந்து வயது வரை பராமரிக்கும் பணி நடக்கிறது. 5 வயது முடிந்த பின்னர் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் வந்து சேரக் கூடிய சூழல் பல ஆண்டு காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீப  பல ஆண்டுகளாக பொதுமக்களுக்குத் தனியார் பள்ளிகளின் மீதான விருப்பம் அதிகரித்தது.  அதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதை விரும்பவில்லை. இந்தச் சூழலில்தான் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின் 2019ஆம் ஆண்டில் மழலையர் கல்விக்கான வகுப்புகள் 2381 அரசு நடுநிலைப்பள்ளிகளில் (வளாகத்திற்குள்ளேயே  அங்கன்வாடி மையங்கள் இருக்கும் பட்சத்தில்) முதற்கட்டமாகத் துவங்கப்பட்டன. அதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  முன் மழலையர் கல்வி (ECCE) என்பதற்கான ஒரு பகுதி, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கொடுக்கப்பட்டு இருப்பதனாலேயோ, NEP 2020-ஐ நாம் விமர்சிப்பதாலேயோ, மழலையர் கல்வி வகுப்புகளை வேண்டாம் எனக் கூறிடவோ தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணையை நாம் வரவேற்கவோ முடியாது. ஏனெனில் களத்தில் என்ன நிகழ்கிறது என்பதே முக்கியம்.  இன்று,  அரசுப் பள்ளிகளின் பக்கம் பொதுமக்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதுமாகும்.  அதைத் திடீரென வேரோடு பிடிங்கிப் போட்டால் என்ன நிகழும்? அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் படிக்கும், படிக்கக் காத்திருக்கும்  பல ஆயிரம் குழந்தைகளில் 30% மட்டுமே அங்கன்வாடிகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. மீதி 70% குழந்தைகள் நிச்சயமாகத் தனியார் பள்ளிகளின் ஆளுகைக்குள்தான் சரணாகதி அடைவார்கள்.  அங்கன்வாடி மையங்கள் குறித்துச் சிந்தித்தால், அங்கு இருக்கக்கூடிய பொறுப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தைகளிடம் கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பள்ளிகளில் நடைபெறக்கூடிய அளவிற்குத் தரமான கல்வியும், பாதுகாப்பான சூழ்நிலையும், கற்பித்தல் அணுகுமுறையும் கடந்து, குழந்தைகளுடனான உறவும் அங்கு கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. உடனே நாம் மழலையர் வகுப்பில் கற்பித்தலா? என்ற புரிதலுக்குள் செல்ல வேண்டியதில்லை. விளையாட்டு முறையிலான கல்வியாக இருந்தாலும் பள்ளிக்கல்வி முறைக்குள் வரும்போது அங்கன்வாடியைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும் என்பது கண்கூடு.   ஆசிரியர் நியமனம் இல்லை 2019ஆம் ஆண்டில்  திடீரென மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்து, தொடக்கப்பள்ளிகளில் 1-5 வகுப்புகள் கற்பித்த  இடைநிலை ஆசிரியர்களையே வேறு பள்ளிகளில் இருந்து பணி நிரவல் வழியாக மாற்றி, மழலையர் வகுப்புகளில்  நியமித்தது அப்போதைய அரசு. ஆனால் தொடர்ச்சியாக இதில் சீர்திருத்தம் கொண்டு வந்து, இதற்கான பிரத்யேகக் கல்வி கற்ற ஆசிரியர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். முந்தைய அரசு அதைச் செய்யவில்லை. குறைந்தபட்சம் ஒப்பந்த அடிப்படையிலாவது ஆசிரியர்களை நியமிக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கவேண்டும். அவற்றையெல்லாம் அப்போதைய அரசு புறந்தள்ளிவிட்டது. 2020-க்குப் பிறகு கொரோனா பெருந்தொற்றுக் காலம் வந்தது; பள்ளிகள் இயங்கவில்லை. இப்படியான சூழல்களில் மழலையர் வகுப்புகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் அப்படியே விட்டிருந்தனர்.  மீண்டும் தலைதூக்கிய பிரச்சினை தற்போதைய புதிய அரசு அமைந்தவுடன், கடந்த இரு கல்வி ஆண்டுகளில்  ஏராளமான குழந்தைகள் (சுமார் 6 லட்சம்) அரசுப்  பள்ளிகளுக்குப் புதிதாக வந்திருக்கின்றனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை. புதிய அரசு அமைந்த பிறகு, கடந்த கல்வி ஆண்டின் 2021 – 2022 இறுதிப்பகுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ஏற்கனவே பணிநிரவலில் மழலையர் வகுப்புகள் கற்பிக்கப் பணியமர்த்தியிருந்தவர்களைத் திரும்ப தொடக்கப்பள்ளிகளுக்கே அனுப்பியது. ஆனால் அப்போது இது அரசியல் பிரச்சனையாக மாறவில்லை.  மாணவர் இல்லையேல் பள்ளிகள் இல்லை மழலையர் வகுப்புகள் நடத்தும் பல தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தங்களிடமிருந்த குழந்தைகளை இழக்க மனமின்றி, அவர்களை கவனித்துக்கொள்ளத் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி ஊதியம் தர முன்வந்து, உள்ளூர்ப் பகுதிகளிலிருந்து ஆசிரியர்களை நியமித்துக் கொண்டனர். இது தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த எதார்த்தம். ஏனெனில் அங்கு சுணங்கினால் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை குறையும்; இருக்கும் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆபத்து நேர்ந்துவிடும்.  அப்பொழுதும் அரசு மழலையர்  கல்விக்காக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை; ஆசிரியர் நியமனமும் செய்யவில்லை. ஆனால், தற்போது புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.  மொத்தமாக மழைலையர் கல்வியை அங்கன்வாடிக்கு அனுப்புவது என்பதுதான் இந்த நிலைப்பாடு. இது முழுக்க முழுக்க தனியாருக்கே சாதகமாக முடியும். கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? என்பதைப் போல, இதன் பின் விளைவுகள் தெரிந்தாலும் ஏன் இந்த முடிவை எடுத்தனர் என்ற ஐயம் எல்லாத் தரப்புகளிலும் உண்டு.  ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படும்.  அதனால் அவர்கள் அப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டனர் என்ற ஒரு காரணத்தை அரசு முன்வைக்கிறது. எனில், சிக்கல் என்ன என்று நன்றாகவே தெரிந்துவிட்ட பிறகு, ஆட்சியாளர்கள் ஏன் தீர்வை நோக்கி நகர மறுக்கின்றனர்? எனவே அரசு தூரிதமாகச் செயல்பட்டு, மழலையர் வகுப்பு மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை உடனே தொடங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த லட்சக்கணக்கானவர்கள் வரிசை கட்டிக் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தலாம். நிதிப் பிரச்சினை காரணம் எனில், குறைந்தபட்சம் ஒப்பந்த ஊதியத்திலாவது அனைத்துப் பணி இடங்களையும் நிரப்பலாமே? எல்லோரும் இணைந்து குரல் கொடுப்போம் கல்வித் துறையின் உயர் மட்டப் பதவியில் இருப்பவர்கள், தங்கள் அலுவலுகப் பணிகளில்  காலியாக எந்த இருக்கைகளையும் வைத்துக் கொள்வதில்லை. கார் ஓட்டுநர், உதவியாளர், அலுவலகப் பணியாளர் உட்பட எல்லா நிலைகளிலும் வசதியாக மாற்றிக் கொள்ளும் நீங்கள், துறைக்கு  ஆதாரமான குழந்தைகளுக்குக் கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்காமல் வஞ்சிப்பது ஏன்? ஏனெனில் குழந்தைகளுக்காகக் கேட்க எவருமில்லை; பெற்றோருக்கும் விபரம் தெரியாது; விபரம் தெரிந்த ஆசிரியர்களுக்கு, குரல் கொடுக்கத் துணிவு வராது. குரலற்றவர்களின் குழந்தைகள் எப்படிப் போனால் என்ன? என்ற வகையிலேயே எந்த அரசு வந்தாலும் நடந்து கொள்கிறது. மக்களுக்காகச் சிந்திக்கும் பாதையிலிருந்து விலகுகிறது. ஆகவேதான் இப்படியான குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கல்வியே நாட்டின் முதுகெலும்பு. உங்கள் குழப்பமான முடிவுகளால் அதைச் செல்லரிக்க வைத்து விடாதீர்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, களத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் அரசு உரையாடி தெளிவாகத் திட்டமிட வேண்டும். காத்திருக்கிறோம். உமா

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த பிரச்சினை தற்போது அடுத்த வடிவம் பெற்றுள்ளது. தற்போது கர்நாடக அரசு, தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அந்தந்த நிர்வாகம் சொல்லும் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், இந்தக் கட்டுப்பாடு அரசியல் சாசனம் வழங்கும் மதச் சுதந்திர உரிமைக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளது. மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனால், அந்தக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வணியில் வடிவமைக்கப்பட்ட இந்து மதச் சாமியார் சிலையை விடவா ஹிஜாப் அணிவது மத அடையாளத்தை முன்னிறுத்துகிறது? தலையில் முக்காடு அணியும் வழக்கம் தென் மாநிலங்களில் அதிகம் இல்லையென்றாலும் வட மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலப் பெண்களில் அனைத்துப் பெண்களிடமும் உண்டு. கிறித்தவ மதத்திலும் கூட, தொழுகை நேரங்களில் பெண்கள் முக்காடு அணிந்தே தொழகை நிகழ்த்துவார்கள். இந்தியாவில் பல்வேறு மத, சமுதாயப் பெண்களிடையே, வேற்றுக் குடும்ப ஆண்களைக் கண்டால் உடனடியாகப் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு இட்டுக் கொள்வது இன்னமும் வழக்கமாகவே உள்ளது. ஏதோ ஒரு வகையில் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக்கொள்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆனாலும், ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை மத அடையாளமாகவே எடுத்துக் கொண்டாலும், விபூதி குங்குமம் வைப்பது, நாமம் போடுவது போன்றவையும் மத அடையாளங்களே. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள் பிறரைத் தாழ்த்தும் வகையில் பூணூல் அணிவது சாதியத்தின் அடையாளம் இல்லையா? ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்த அடையாளங்களுக்கும் தடை விதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாபுக்குப் போட்டியாக காவி ஷால் அணிந்து வருவது மதவாத அரசியலின் மற்றொரு வெளிப்பாடே அன்றி வேறில்லை. கல்லூரி மாணவிகள் வரை தற்போதைய சிற்பான்மையினர் மீதான மதவெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது இந்த சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதை மரமாகிக்கொண்டு இருப்பதன் நிகழ் சாட்சி. ஹிஜாப் என்பது ஆணாதிக்கத்தின் சாட்சி என்றாலும் இன்றைய பெண்களில்‌ சிலர் அதை அலங்காரத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டு பல்வேறு வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த வழிபபாட்டுப் பாடல்கள், நடைமுறைகளை இன்னமும் வைத்துக்கொண்டு,கல்லூரி வயதில் உடைக் கட்டுப்பாடு விதிப்பது என்பது இன்னமும் இந்தச் சமூகம் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகளில் உழல்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பவர்களை தேர்தல் பணியில் ஈடுபடக் கூறி கட்டாயப் படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் சிலர் வருந்தினார்கள். இந்தச் சிக்கல் குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பாவையாக இருந்தன. அண்மையில் விபத்துக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவச் சான்று பெற்று பள்ளியில் வழங்கி மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தொலைபேசியில் அவரை அழைத்து, “உங்களுக்கு தேர்தல் பணி ஆணை வந்துள்ளது. என்னைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தலைமை ஆசிரியர் கூறுகிறார். உங்களிடம் கேட்ட பிறகு கையெழுத்திடலாம் என்று அழைத்தேன்” என உடன் பணியாற்றும் ஆசிரியர் சொல்ல, மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியரோ, எனது உடல் நிலை தேர்தல் பணி செய்யும் நிலையில் இல்லை.  ஆகவே நீங்கள் கையெழுத்திட வேண்டாம்” எனக் கூறி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலக ஊழியர் வழியாக அலைபேசி அழைப்பு. “மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சான்று அளிக்க வேண்டும். எப்போது வந்து தேர்தல் ஆணையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியரை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஏற்கனவே தங்களிடம் மருத்துவ விடுப்பு தந்துள்ளேன். நீங்கள்தான் இதை மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்” என்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், தலைமை ஆசிரியர் உடனடியாக மறுத்து, “இதில் நானோ, மாவட்டக் கல்வி அலுவலரோ எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆணையை ரத்து செய்து கொள்ளுங்கள்” என்கிறார்.  அடுத்து மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு சூழலை விளக்க, அவரும்  அதே பதிலைக் கூறுகிறார். “இந்த ஆணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளது. நீங்களே சென்று உங்கள் மருத்துவச் சான்றை இணைத்து, கடிதம் எழுதித் தெரிவித்து ஆணையை ரத்து செய்து கொள்ள வேண்டும்” என்கிறார். மீண்டும் மறுநாள் காலை பள்ளியிலிருந்து விடாமல் அலைபேசி அழைப்பு. “இன்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைத்தாக வேண்டும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்த, அந்த ஆசிரியரும் வேறு வழியின்றி, “ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளுடன் உளவியல் ரீதியான சிக்கலையும் இவர்கள் உருவாக்குகிறார்களே” என வருந்தியதுடன், மருத்துவமனையிலிருந்து பள்ளிக்குச் சென்று அன்றைய தேதியில் கையெழுத்திட்டு ஆணையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி மருத்துவமனை சென்று சிகிச்சையைத் தொடருகிறார்.  ஒப்புகைச் சீட்டில் அவர் கையெழுத்திட்ட தேதி ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் தேதி என்ற முரண்பாடு குறித்துக்கூட எண்ணாமல், தேர்தல் ஆணையைப் பெற வற்புறுத்தித் தினித்துள்ளார்கள் மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியரும். “ஒப்புகைச்சீட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களின் தேர்தல் பணி ஆணையை நீக்குவதற்கும் பள்ளித் தலைமை ஆசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலரும்தானே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியர். குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், இவ்வாறான தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது கணவரை பள்ளிக்கு அனுப்பி ஆணையைப் பெற்றுச் சென்றிருக்கிறார்.  தேர்தல் பணிக்கான ஆணைகள்  அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக கேட்டுப் பெறுவார்கள். அப்படி ஒரு பள்ளியில், பெண் ஆசிரியர் உடல் நலமின்மையால் மருத்துவ விடுப்பில் இருந்தார். பள்ளிக்கு வந்தோ அல்லது வேறு யாரையாவது அனுப்பியோ அந்தப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை வரவழைத்து படிவத்தை வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் ஒரு தலைமை ஆசிரியர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக உடலெங்கும் மயிர் நீக்கிக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரிடமிருந்து போன் வருகிறது. “ஆர்டரை வாங்குங்கள், இல்லையெனில் உங்கள் கணவரை கலெக்டர் அலுவலகம் போகச்சொல்லுங்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர். ‘ஆபரேசன் தியேட்டர் உள்ளே போகும்வரை போனில் பேசிக்கொண்டே போனேன்’ என்கிறார் ஒரு பெண் ஆசிரியர்.  “எங்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியரின் உண்மையான நிலைமை இது. ஆசிரியர் தவறிக் கீழே  விழுந்து தண்டுவடத்தில் பிரச்சினையின் காரணமாக ஆபரேசன் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது. மருத்துவர் ஆலோசனையின்படி அவர் அதிக நேரம் உட்காரவே கூடாது. ஆனால், கலெக்டர் உத்தரவு, தற்போது எதுவும் செய்ய முடியாது. பயிற்சி நாளில் கடிதம் எழுதி கேன்சல் செய்து விடுங்கள் எனக் கல்வித்துறையில் கூறிவிட்டனர்” என்று உடன் பணிபுரியும் ஆசிரியருக்காக வருந்துகிறார் மற்றொரு ஆசிரியர். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதமான சோகக் கதைகள். தலைமை ஆசிரியர்களும், உயர் அதிகாரிகள் பலரும் எங்களைப் போல ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள், சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்கள்தானே? ஆனால், உயர் பொறுப்புக்கு வந்ததும் இவ்வாறு உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை மனித நேயம்கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், பல நிலைகளில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள், துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு அரசு ஊழியர் அவருடைய பிரச்சனைகளை, தனது உடனடி உயர் அலுவலரிடம் (Immediate Superior) தான் அதற்கான சான்றுகளுடன் முறையிட முடியும். தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியரின் உடல் மற்றும் மன நலனில் சிறிதும் அக்கறையின்றி, எதற்கெடுத்தாலும் “இது தேர்தல் அவசரம், இதற்கு நான் பொறுப்பல்ல” என்று தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  தலைமைப் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் கீழ் மட்ட ஊழியர்கள் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாவது நிகழ்கிறது.  ஊழியரது உடல்நலப் பிரச்சனையை உறுதி செய்து அரசு மருத்துவர்கள் சான்றளித்தாலும்கூட, அதையும் நம்பாமல் அல்லது தங்கள் பொறுப்பை உணராமல் விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மிகச் சில ஆசிரியர்களே இவ்வாறான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யக்கூடிய நிலையில் கூடவா அதிகாரிகள் இல்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வாக்குச் சாவடி அலுவலராகவும் பொறுப்பு வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தற்போது தேர்தல் பணிக்கான ஆணையையும் பெற்றுள்ளனர்.  ஏற்கனவே 6-8 வகுப்புப் பாடங்களை இணைய வழியிலும் 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகவும் கற்பித்து வரும் ஆசிரியர்கள், தற்போது புதியதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கருடா  அலைபேசி செயலியையும் பதிவிறக்கம் செய்து, களத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள், எல்லோருக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாக இருப்பதில்லை. ஆனாலும் அந்தப் பணிக்காகவே வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. போன் பழுதானாலோ அல்லது பழைய மாடல் போன் வைத்திருப்பவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சினை காரணமாகவோ, பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக புதிய ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். சில நேரங்களில் வழக்கமான டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே இணைய வழிக் கல்விக்காகவும் சொந்தப் பயன்பாட்டுக்கான போனைப் பயன்படுத்தி வருகிறோம். Activities, assignments என ஏராளமான இடவசதி போனில் தேவைப்படுகிறது. தேர்தல் பணிக்காகவும் அதே போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் முற்றாக செயலிழந்துவிடுகிறது.   எனவே, இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான கருவிகளை வழங்கினால், வேலையும் எளிதாகும்; தேர்தல் தொடர்பான தகவல்களும் பாதுகாப்பாகவும் அழிந்து விடாமலும் இருக்கும் என்ற கருத்தையும் ஒரு சில ஆசிரியர்கள் முன் வைக்கிறார்கள். “தலைமை ஆசிரியர்களும் தட்டிக் கழிக்கின்றனர், கல்வி அலுவலர்களும் பொறுப்பிலிருந்து நழுவுகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பக்கம் நிற்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கின்றன? என்று கேட்டோம். “ஆசிரியர் நலன் சார்ந்து சங்கங்கள் செயல்பட்ட காலம் போய் பல ஆண்டுகள் ஆயிற்று” என ஒரே குரலில் பதிலளிக்கிறார்கள் ஆசிரியர்கள். “ஏற்கனவே பள்ளிகள், மாணவர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுப்பதில்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளாத இந்தச் சங்கங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் இருப்பதை விட அவற்றைக் கலைத்து விடலாம்” என்கின்றனர். தேர்வு நிலை (Selection grade) வாங்க 2 1/2 ஆண்டு காத்திருப்பு, 10, 12 -ஆம் வகுப்புகளது  சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பித்து இரண்டரை  ஆண்டுகள்  காத்திருப்பு என்பதோடு இன்னும் பலப்பல சிரமங்கள் என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள். அலுவலகப் பணியான, பணிப் பதிவேடுகளை  (SR) scan & upload செய்யும் பணியும் தற்போது ஆசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது என்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், வாக்காளர் கணக்கெடுப்புப் பணி உள்ளிட்ட, தொடர்ச்சியான தேர்தல் ஆணையப் பணிகளுக்காக தனியே ஆட்களைத் தேர்வு செய்து அவர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும். தேர்தல் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் இதர துறையிலிருந்து பணியமர்த்திக் கொள்ளலாம். முக்கியமாக, உண்மையாகவே உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தல் பணியாற்ற இயலாதவர்களுக்கு இப்பணியிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடைமுறைகளை இந்த அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியம். மாறுமா ஆசிரியர்களின் அவல நிலை? படங்கள்: இணையத்திலிருந்து

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது.   மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு  அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும்  கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள்   மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன.   கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின்  அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.   பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர்  அல்லது தலைவர் பதவிகளையும்  அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.