அப்துல் கலாமின் மௌனம்

அப்துல் கலாமின் மௌனம்

சென்ற மாதம் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அறையைச் சுத்தம் செய்ய வந்தவர் வயதில் மூத்த ஒரு பெரியவர். ‘பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘அப்துல் கலாம்’ என்றார். ‘கலாமின் பெயர் உங்களுக்கும்’ என்றேன். சிரித்துக்கொண்டார். ‘எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள்?’ என்றேன். குறைவான ஊதியம் ஒன்று சொன்னார். ‘கட்டுபடியாகிறதா?’ என்றேன். ‘விலைவாசி ஏறிவிட்டது’ என்றவர், ‘சாதாரண மக்கள் பாடு மிகச் சிரமம்’ என்றார். நானும், இன்று காசுக்காக மக்கள் படும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘கேஸ் விலை கூடிவிட்டது’ என்றேன். அவரும் ‘ஆமாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எல்லாம் இந்த மத்தியில் இருக்கிற மோடி அரசுதான்’ என்றேன். பேசியவர் அமைதியானார். ‘மோடியின் பொருளாதார, நிர்வாகச் சீர்கேடு’ என்று சொன்னேன். அமைதியாகவே இருந்தார். ‘என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீர்கள்?’ என்றேன். ‘அதுதான் நீங்கள் சொல்லிட்டீங்களே சார்’ என்றார். ‘எல்லாம் இந்த மோடி அரசுதான் என்று, நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதுபோல நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்குறீர்கள்?’ என்றேன். ‘அதற்குக் காரணம் உங்களுக்கும் தெரியும் சார்’ என்று சொல்லிவிட்டு வேலையில் முனைப்பாக இருந்தார். என்னால் மோடி அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக மற்றவருடனான உரையாடலில் சொல்ல முடியும்போது, கலாம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கிற ஒரு மனிதரால் ஏன் அப்படிச் சொல்ல இயவில்லை? ஏன் அந்த அச்ச உணர்வு அவருக்கு ஏற்படுகிறது? வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அச்ச உணர்வைத்தான் ஆகப் பெரிய ஆபத்தாக உணர்கிறேன். அரசின் அதிகாரத்தோடு இணைந்து, ஒரு பகுதி மக்களை அச்சத்தில் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். சமுகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதிய முரண்பாட்டிலும்கூட, உரிமைகளைப் பறிப்பதைவிட உயிர்வாழ்வதற்கான அச்சத்தை உருவாக்குவதையே ஆகப் பெரிய ஆபத்தாகக் காண்கிறேன். ஏனெனில், இருத்தலுக்கே போராடும் மக்களிடம் உரிமைப் போராட்டம் என்பதற்கு வழியின்றிப் போய்விடும். எனவே, உரிமைப் பறிப்புக்காக அவர்கள் தனியே எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதியப் படிநிலையில், பார்ப்பனர்களைவிட சூத்திரர்கள் என்கிற சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழ் இருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் முடிந்தாலும் மேலவளவு படுகொலைகளை இன்று வாசித்தாலும் அச்சமாக இருக்கிறது; வெண்மணியும் கூட. க. பாண்டியராசன்

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார். நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. “அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார். “பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார். நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர். வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம். மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது. மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி. “வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர். “பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார். வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர். கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும். கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை. “ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம். “அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை. “ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம். வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார். வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும். புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது. தொடரும் சாம்பவி சங்கர்

ஜெயிக்க விரும்பியவர்

ஜெயிக்க விரும்பியவர்

சிறுகதை  –  களந்தை பீர்முகம்மது அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார்.  அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும்.  அழகாகவும் அடர்ந்த நிழலாகவும் வந்து தலைசாய் என்று சொல்கிற விதமாகவும் நல்ல அரச மரத்தடி.  அந்த மரம் அக்கிராமத்தின் வயதைக் கூறுகிறதுபோல.  அதை ரொம்பவும் அடர்த்தியாகப் பார்த்தார்.  பக்கத்தில் குளம் கிடக்கிறது.  தண்ணீர் அலைவுறும் பாளமாக ஒளிர்கிறது.  சிற்றலைகள் மீன்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.  விளையாட்டு விளையாட்டாயிருக்க,  மேலே ஊர்ந்துசெல்லும் தென்றலோடு இசைந்து அலைகள் ஏதோ பாடல் பாடுகின்றன.  அதனால்தான் இத்தனை குஷாலான அலையடிப்புகள்.  குளம் ஊர்ப்பரப்புக்கு மேலே நான்கைந்து அடி உயரமாக விரிந்துகிடப்பது தெரியவருகிறது புலமாடத் தேவருக்கு. நடந்துகொண்டே இருந்தார்.  ஆனால் அரச மரத்தடியில் உட்கார்ந்து சுகமாகத் தலையைச் சாய்த்துத் தூங்கிவிடுகிறார்.   காற்றும் அலைகளும் இவ்வளவு குதூகலமாய் இருக்கும் கிராமக் குளத்தில் இதை யாரும் ரசிக்காமலோ அனுபவிக்காமலோ எங்கெங்கிலும் அலைந்து திரிகிறார்கள்.  அவர் தன் உடம்பை அங்கே கிடத்தியபடியே நடந்துகொண்டிருக்கிறார்.  திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்.  தான் அங்கே கட்டைபோலச் சாய்ந்துகிடப்பது தெளிவாகத் தெரிகிறது.  கொஞ்சம் புரள்வதும் ஏதோ புலம்புவதுமாக.  அந்தக் காற்றும்  பீடமும் தனக்கு எப்பவும் வேண்டும் என்று விரும்புகிறார்.  உள்மனது அவரை அறியாமல் சொல்லிவிட்டது, ‘நீ அங்கே செல்வாய் கொஞ்ச நேரத்தில்.’ காற்றின் இதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  வயல் பசுமை கிறங்கச் செய்தது. இவள் இந்தச் சொகுசில்தான் இந்த ஊரிலேயே இருக்கிறாளா என்று கேட்டுக்கொள்கிறார்.  கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.  அதனால் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டார், ‘பாதவத்தி, வந்த ஜோருல இப்படியே ஒக்காந்திட்டியே.  என்னை ஒருமுறை கூடவா நீ நெனச்சுப் பாக்கல?’ முன்பு எப்போதோ வந்தது.  மாப்பிள்ளை ஜோர் காலம்.  அதற்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை.  தலையாரி வேலையில் சாத்தியப்படாது.  ஆனால் அவர் வள்ளியம்மாவிடம் சொல்லிக்கொண்டது இன்னும் கெத்தாக, ‘இந்த மாரி அங்கேயும் இங்கேயும் அலையுற ஜோலி மயிரெல்லாம் இங்கே நடக்காது.  வாய மூடிட்டுக் கெட.’  அன்று முடங்கிவிட்டாள்;  ”அவரு வந்துதான் கிழிக்கப்போறமா?”.  தன்னைப் பார்க்க வந்த அம்மைகிட்டேயும் ஐயாகிட்டேயும் எவ்வளவோ குறை சொல்லி ஒப்பாரி வைத்திருக்கிறாள்.  ஒப்பாரியோடும் முணங்கல்களோடும் வருஷங்களைக் கடத்திவந்தாள்.  புலமாடன் புலமாடத் தேவராக அறியப்பட்ட ஒருநாள் கலவரக்காரி மாதிரி அவரை எதிரே நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள்.  தலையாரித் தேவர் பயந்துபோய், ‘ போய்த் தொல.’  வள்ளியம்மாள் அந்த ஒரு வாய்ப்பைப் பன்மடங்கு வாய்ப்பாய்ப் பெருக்கினாள்,  வரவும் போகவும்.  என்ன பொல்லாத தூரமா?  ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர்.  கணபதி பஸ் போகிற நேரத்தைக் கணக்குவைத்து நேராக ரைஸ்மில் பக்கம்போய் நின்னா போதும்.  வள்ளியம்மை கைகாட்ட வேண்டிய அவசியமில்லை.  அவள் நிற்கிறதைப் பார்த்து பக்கீர் ராவுத்தர் பஸ்ஸை உடன் பிரேக் போட்டு நிறுத்துவார்.  வள்ளியம்மை பூஞ்சை உடம்புக்காரி.  காற்றுபோல ஒரு சொடுக்கொலியில் பஸ்ஸில் ஏறுவாள்.  பஸ் நின்றதும் தெரியாது; புறப்பட்டதும் தெரியாது. ஒருமுறை புலமாடத் தேவர் நூறு, இருநூறடி தூரத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போதே கணபதி பஸ்ஸை நிறுத்தி ஊருக்கு ஏறிப் போயிட்டாள்.  ‘எளா, ஒன் வீட்டுக்காரரு வாரார, நீ கண்டுக்காம ஏறிட்டே!” ’ஆங்… வந்தா போவாரு…’ இதைப் பார்த்தார் தேவர்.  அவருக்கு ஆத்திரம் வந்து அவள் ஆக்கிவச்ச சோற்றைப் பூனைக்கு அள்ளிக்கொட்டினார்;  அப்புறம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கிட்டுப்பிள்ளை கிளப்பில் உட்கார்ந்து முட்டைகோஸும் தேநீரும் சாப்பிட்டது ஞாபகத்தில் உண்டு. புலமாடத் தேவர் பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார்.  புகை வெளியே வருவதற்குள்ளேயே காற்றில் காணாமல் போயிற்று.  ‘அவதான் அப்படிப் போனா.  இந்தப் படுபாவி இசக்கியுமில்லா அவக்கூட சேந்துக்கிட்டான்.  அவன் எப்படி இந்த ஒண்ணுக்குமில்லாத ஊர்ல வந்து கெடக்கான்?  அவன் சேக்காளிப் பயலுவள் எல்லாம் நம்மகிட்ட எத்தனை முறை கேட்டுட்டானுவோ.  அந்த மீரான் பய கடுதாசி போட்டதா வேற சொன்னான்.  ஆனா இசக்கி பதிலே போடாம ஒக்காந்துட்டான்.  இப்படி சேக்காளிப் பயலுவளயே கைவிட்டுட்டுப் போறவன் எப்படி நம்மள ஏறெடுத்துப் பாப்பான்.” புலமாடத் தேவர் தன் மகனிடம் நாசுக்காகப் பேசி கையோடு இழுத்துட்டுப் போயிரணும் என்று மனசுக்குள் திட்டம் வைத்திருந்தார்.  ’அவன் இங்கே கிடந்து என்ன வேல பாப்பான்.  வயல்ல இறங்கி வேல பாக்குறப் பயலா அவன்?  மூதி….அறிவுகெட்ட மூதி….அவன் அம்மையோடு சேந்துசேந்து அவனுக்கும்லா மூளை மழுங்கிப்போச்சு.’  இத்தனைப் போக்காக அவர் இசக்கியை நினைத்துக்கொண்டிருந்தாலும் சரஸ்வதியைப் பற்றி நினைக்கவே இல்லை.  அவ பெரிய ராங்கிக்காரில்லா.  நல்ல நாள்லேயே நாழிப் பால் கறக்காதவ. இப்போ அவ அம்மைக்குத் துணையா இருக்குறதா சொல்றானுங்கோ.  நம்ம வீட்டுக் காரியம் நமக்குத் தெரியல்ல.  ஊருக்காரப் பசங்கெல்லாம் ஏதோ திருதராஷ்டிரன் கணக்கா எல்லாத்தையும் நேரில பாத்த மாதிரி நம்ம வீட்டுக் கதைய பேசுறானுவோ.’ அவர் வடக்கே நோக்கிப் போகப்போக அவரைக் கடக்கும் வண்டிகளும் வடக்கே இருந்து வருவனவாகத்தான் இருந்தன.  தெற்கே இருந்து யாராவது மாட்டுவண்டி, சைக்கிள்ல வந்தாலும் அவங்களைத் தொத்திக்கிட்டு ஊருக்குள்ளாற போயிரலாம்.  இந்தக் காற்றும் பச்சை வயலும் இல்லேன்னா இந்த வெயில்ல அலையிறது ரொம்பக் கஷ்டமாக ஆகியிருக்கும்.  அந்த மரத்தடியில் தலையைச் சாய்த்திருக்கலாம்.  பிள்ளையார் துணையிருக்கிறார்.  அவர்கிட்டே கதையச் சொல்லிப் பிரார்த்தனையும் செஞ்சிருக்கலாம். ஊரில் அந்த சேக்கு பையன் இருக்கிறான்.  இசக்கியோட முக்கியமான சேக்காளி அவன்.  சேக்கு நிறைய கதை எழுதிக்கிட்டிருக்கான்னு சொல்வானுவோ.  அவன் என் கதையை எழுதிப் பரிசு வாங்கியிருக்கானாம்.  அதைக் கேள்விப்பட்ட நாளிலே இருந்து அவனைக் கண்ணால பாக்கக் கூட முடியல்ல.  என் கதையை அவன் எப்படி எழுத முடியும்?  இப்பத்தான நான் இப்படி லோல்படுறேன்.  இதெல்லாம் படுறதுக்கு முன்னாலேயே ஒருத்தன் எப்படி என்னோட கதைய எழுத முடியும்?  ரொம்பவும் அக்குறும்பால்ல இருக்கு! ‘ஜெயிக்க விரும்பியவர்’ என்ற தலைப்பில் சேக் கதை எழுதினான். அது முக்கியமான சிற்றிதழில் பிரசுரமானது.  அந்த மாதமே அந்தக் கதைதான் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்திருந்தது அந்த இலக்கிய அமைப்பு.  ‘ஜெயிக்க விரும்பியவர்’ கதாநாயகரான புலமாடத் தேவர் மிகவும் அணுக்கமாக இருந்தார் சேக்கிற்கு.  அவன் எழுதிய கதை அவனாகக் கற்பனை செய்து எழுதியதல்ல.  இந்தக் கதையில் இப்படி ஓர் அம்சம் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தவள் மைமூன் பாத்திமா.  இவன் கண் முன்னே வாழும் புலமாடத் தேவரைப் பற்றித் தன் சொந்த மண்ணில் பார்க்க துப்புக்கெட்டு, சென்னையில் மைமூன் பாத்திமாவைப் பார்க்கப்போன இடத்தில் அவள் சொல்லித்தான் சேக்கிற்குத் தெரிந்தது. மைமூன் பாத்திமா தெளிவாகச் சொன்னாள், ‘ஐயோ பாவம் புலமாடத் தேவரு.  அவரு பொண்டாட்டி அவரை வேண்டாம்னு சொல்லிட்டாளாமே,” அவன் கொஞ்சமாய் முழித்தான்.  அந்த முழிகண்டு மைமூன் பாத்திமா மறுபடியும் சொன்னாள்,” உனக்குத் தெரியாதாக்கும் இத்தனை நாளா?  இந்த முழி முழிக்கிற? நீயெல்லாம் என்னடே கதை எழுதுற?” மைமூன் பாத்திமா இப்படிக் கேட்டதும் சேக்கிற்குக் கடும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  அவன் எதிர்பார்க்கவில்லை;  மைமூன்பாத்திமாவும் எதிர்பார்த்திருக்க முடியாது.  அவளை அடக்க விரும்பி ஆங்காரமாகக் கட்டிப்பிடித்து முத்தங்களாகக் கொடுத்தான்.  அவனுக்கு ஆச்சரியம் என்னவென்றால், மைமூன்பாத்திமா எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் அவன் கட்டுக்குள் கிடந்தாள்;  எனக்கென்ன என்கிற மாதிரி வசப்பட்டிருந்தாள். இன்னும் ரொம்ப நேரமாய் அவன் தழுவித்தழுவித் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்தான்.   மைமூன்பாத்திமா எத்தனை பெரியவள்?  இவனுக்கு உண்மையிலேயே அவளை என்றேனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கவா செய்தது?  அப்புறம் இருவரும் அவரவர் பேச்சைத்தான் பேசி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவளுடைய ஈர்ப்பான முலைகள் இன்னும் நல்ல திமிரோடு அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தது அவனுக்குக் கிளர்ச்சியை ஊட்டியது.  இவளும் தன் உடம்பு அழுந்திவிட்ட இந்த ஒல்லிப்பிச்சான் சேக்கின் உடம்பை ஆச்சரியமாக நோக்கினாள். ‘சேக்கு நீ இந்தக் கதையை எழுது…என்னா….நல்லா வரும் பாரு.  உனக்குப் பரிசும் கிடைக்கும்டே.’  இந்தப் பேச்சை ரொம்ப ரசித்தான். புலமாடத் தேவரை அவரறியாமல் மனம் பின் தொடர விட்டான்.  அவன் இதற்குள்ளாக தேவரைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல்லாம் லெட்சுமணன் சொன்னான்.  இந்த லெட்சுமணன் ஒரு கூறுகெட்ட பய.  இவன் சொல்லை எவ்வளவுக்கு ஆதாரமாகக் கொள்வது? ஊசலாடினான் சேக்.  இருந்தாலும் இப்போது இது ஓர் இடைக்காலக் கொள்முதல் போல கைவசம் இருக்கட்டும் என்று மனத்துக்குள் பூட்டிவைத்தான்.  எவ்வளவு கூறுகெட்ட பயலாயிருந்தாலும் ஒரு கதைக்கு எல்லா தகவல்களும் தேவைதானே? புலமாடத் தேவர் தன் பாரியாள் வள்ளியம்மையைத் தேடிப் போகப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது;  அவருக்கும் தெரியாது.  வயிற்றுப்  பசியும் உணர்ச்சிப் பசியும் அவரை மொய்த்தன.  கிட்டுப்பிள்ளை கிளப்பில் மூணு இட்லியும் ஒரு தேநீரும் சாப்பிட்டு வேலைக்காகவில்லை.  நின்றுகொண்டிருந்த கணபதி பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.  பல கற்பனைகள்.  வள்ளியம்மா ரொம்பவும் கோபப்பட்டுப் பேசுவாள்.  இம்முறை நாம் சாந்தமாகப் பதில் பேச வேண்டும்.  பாவி மட்டை, சும்மா ஊருக்குப் போயிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் போனவள்தானே,  இப்படியா போய் தன் ஊருக்குள் இருந்துவிடுவது?  கோபத்தை ஆற்றிய பின்னராவது தன் வீட்டுக்கு வந்திருக்கலாமே!  அப்படியென்ன ஊரு உலகத்தில் யாருக்கும் இல்லாத கோபம்? வாயில் வைக்கிற மாதிரி சாப்பாடு செஞ்சாயென்னா என்று கேட்டது ஒரு தப்பா?  அல்லது இதுபோக வேறு எதையாவது என்னையறியாமலேயே நான் சொல்லிட்டேனா?  இல்லே, பழைய கோவத்தையெல்லாம் திரட்டிக்கிட்டு ஒரேயடியா காலிபண்ணிப் போயிட்டாளோ? அவள் போய்விட்டு நாளைக்கு வருவா, நாளை மறுநாளைக்கு வருவா என்று எதிர்பார்த்திருந்தார் புலமாடத் தேவர்.  ஒரு வாரம் ஆகவும் சந்தேகம் வந்தது; அச்சம் வந்தது.  பிறகுதான் தெரிந்தது அவளுடைய ட்ரங்குப் பெட்டியில் எதுவும் இல்லையென்று.  சரஸ்வதியுடைய துணிமணிகளும் ஒன்றும் கிடையாது.  ”எவ்வளவு தந்திரம் இந்தப் பொட்டச்சிகளுக்கு?”.  இவை மனசுக்குள் ஓடஓட வேலையில் கவனம் சிதறித் தேவர் வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு.  யாரிடத்திலும் துயரைப் பகிர முடியாமலும் போச்சு.  வழக்கமாக இராத்திரி நேரத்தில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் திண்ணையில கொஞ்சம் குளுமையை அனுபவிச்சுக்கிட்டு, சோவாரிக்கிட்டு,  ஊர்க்கதையைப் பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொழுதெல்லாம் நரகமாப் போச்சி.  அவர் உடம்பு அங்கு இருக்கும்;  மனதைக் காணோம் என்று ஆகிவிடும்.  சேதுப்பிள்ளை, பேச்சியா பிள்ளை, மூக்கன் செட்டியார், அதாவுல்லா, பாலையா கோனார் இப்படியாக எல்லாரும் சேர்ந்து கிடந்து பேசிக்கிட்டிருந்தப்போது தன்னால் ஒரு வரியும் ஆற்ற முடியாமல் போயிற்று.  பேந்தப் பேந்த அங்குமிங்கும் முழிப்பார்.  தன் முன்னே இப்படி ஊர்க்கதையும் சினிமாகதையும்

களங்கமின்மையின் சுடர்

களங்கமின்மையின் சுடர்

கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம் ஜூலை 5, கு. அழகிரிசாமி நினைவு நாள் சிறப்புக் கட்டுரை “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள்“. குழந்தைகள் உலகை, தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி,  ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன.  சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக, குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொடுகின்றன. கு. அழகிரிசாமியின் எளிமையான கலை வெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.   கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால், அன்றாட வாழ்க்கையின் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால், உற்று நோக்க நோக்க, அந்த ஓவியத்தின் அழகும் ஆழமும் கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்துகொள்ளும்போது வாசகன் திடீரென, தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னைச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி, வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும்.  அதுவரை கெட்டிதட்டிப் போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும். அப்போதுதான் வாசகன் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசக மனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின்  கதைகளில் பெரிய தத்துவ விசாரமோ, ஆன்மீக விசாரமோ செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால், அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளிய மொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ, யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக, குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும். ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை, கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும், தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார். 1950–ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே, மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன்தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும்போதே, இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும் அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும், அந்த ஊரிலேயே பெரியதனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது, உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து, பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை, கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட, மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள். ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில், மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம், ‘ஐயா வந்து விட்டாரா?’ என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து, அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து, எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச் சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். ‘அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு?’ என்று மங்கம்மாள் கேட்கிறாள். இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழை மரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா இல்லாத, அநாதையான, சிரங்கும் பொடுகும் நாற்றமும் எடுக்கும், தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து, தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு, தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும்போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது, ‘சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும்போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளைப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி. மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும்போது, ‘ராஜாவுக்கு என்ன செய்ய?’ என்று தாயம்மாள் குழம்பி நிற்கும்போது, மங்கம்மாள்தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்கச் சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது, பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை,“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப் போட்டியை நினைத்துக் கொண்டு,“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்…? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக் கதையை வாசிக்க வாசிக்க, வாசக மனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.  எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை, இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித் ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீக நேசத்தைச் சொல்லியிருப்பார்.  கு.அழகிரிசாமி ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில், தன்னுடைய அம்மாவுக்குக் கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக் காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைச் சிகரங்களில் ஒன்று  ராஜா வந்திருக்கிறார். வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்துவிடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். ஆனால், குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடுகட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும்; சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாக  ஆரம்பிக்கிற கதை, எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது, வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பதுதான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு, மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான்.

நெடுங்கணக்கு – பகுதி 3

நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார். க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட மொழிகள், தேவநாகரி நெடுங்கணக்கைப் பார்த்து, தாமும் வல்லொலி – மெய், மெல்லொலி மெய்களை அறிவிக்க, தனித்தனி எழுத்துகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தமிழ், வல்லொலி எழுத்தையும் மெல்லொலி எழுத்தையும் குறிக்க, ஒரே வடிவெழுத்தையே பெற்றுள்ளது என்றும் கூறும் கால்டுவெல், இம்முறை அம்மொழியின் வடிவெழுத்தை மட்டும் பற்றியதன்று ; இஃது, அம் மொழியுடன் பிறந்த, அம்மொழிக்கே உரிய ஓர் ஒலி (ஒலிப்பு) முறையாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இம்முறை, எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளது என்றாலும், தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே முறையாகவும், முழு வளர்ச்சியும் பெற்றுள்ளது என்கிறார் கால்டுவெல். முதற்கண் நிற்கும் க், ட், த், ப் என்ற வல்லெழுத்துகள் நான்கும் (இவற்றை ஹகர ஒலி இணையா வல்லெழுத்துகள் என்கிறார் கால்டுவெல்) ‘ட’ சொற்களின் மொழி முதல் எழுத்துகளாக வரும், இரட்டித்து வரும் க், ட், த், ப் என வல்லொலி வல்லெழுத்துக்களாகவே ஒலிக்கப் பெறும். அதே மெய் எழுத்துக்கள் சொற்களின் இடையே தனித்து வரின், க், ட், த், ப் என மெல்லொலி வல்லெழுத்துக்களாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். மெல்லொலி வல்லெழுத்து, மொழி முதல் எழுத்தாக வராது. அவ்வாறே வல்லொலி வல்லெழுத்து, சொல்லின் இடையே இரட்டித்து அன்றி, தனியாக வராது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப் பெற்றால், அச்சொற்களில் உள்ள வல்லொலி வல்லெழுத்து, மெல்லொலி வல்லெழுத்தாகவும், மெல்லொலி வல்லெழுத்து வல்லொலி வல்லெழுத்தாகவும் அவை நிற்கும் இடங்களுக்கேற்ப மாற்றியே ஒலிக்கப் பெறும் என்று கூறும் கால்டுவெல, சமஸ்கிருத ‘தந்த’ என்றும் சொல், தமிழில் ‘தந்தம்’ எனவும், ‘பாக்ய’ என்றும் சொல் தமிழில் ‘பாக்கியம்’ எனவும் வருவதை சுட்டிக்காட்டுகிறார். இம்முறை, தனிச் சொற்களிடையே மட்டுமல்லாமல், இரு சொற்கள் புணர்ந்த தொகைச் சொற்களிடத்தும் வரும் என்கிறார். இரு சொற்கள் புணர்ந்துழி, வருமொழி முதற்கண் நிற்கும் மெய்யெழுத்து, அச் சொல் புணராது தனித்து நிற்புழி, வல்லொலி வல்லெழுத்தாக இருப்பினும், நிலைமொழியோடு புணர்ந்து இடையயழுத்தாம் தன்மையுற்று விடவே, மெல்லொலி வல்லெழுத்தாகவே மாற்றி ஒலிக்கப் பெறும். தெலுங்கில் இவ்வேறுபாடு வேறு வடிவெழுத்து கொடுத்து எழுதுவதன் மூலமாகவே காட்டப்படுகிறது என்கிறார் கால்டுவெல். அண்ணனும், தம்பியும் என்ற பொருளில் ‘அன்னதம்முலு’ என வரவேண்டிய சொல், புணர்மொழிக்கண், ‘அன்னதம்முலு’ என்றே எழுதப்படும். அதுபோன்றே, ‘அடிபட’ என்ற பொருளில், ‘கொட்டபடு’ என வரவேண்டிய சொல் ‘கொட்டபடு’ என்றே வரும். ஆனால் தமிழில், ‘கொட்ட’, ‘படு’ என்ற இவ்விரு சொற்புணர்ச்சி ‘கொட்ட’, ‘படு’ என இரட்டிக்கப்படுகிறது என்கிறார். ‘எண்ணுப் பொருட்கண்’வரும் இரு சொற்கள், இடையில் ‘எண்ணும்மை’ பெறாமல், ‘கபிலபரணர்’ என்பது போல் எண்ணப்பட்டு, இரு சொற்களுக்கும் ஒத்த ‘பன்மை விகுதி’ கொண்டு முடியும் என்கிறார். அதே போன்று ‘ச’ என்ற எழுத்து தனித்து வந்துழி மிகவும் மென்மையாகவும், ஷ், ச் இவ்விரு எழுத்துகளின் ஒலிகளுக்கும் இடைபட்ட ஓர் ஒலியுடையதாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். இவ்வெழுத்தின் ஒலிப்புமுறை முன்னர் கூறியபடியே என்றாலும், செயற்படும்போது சில மாறுபாடு நிகழ்கிறது என்று கூறும் கால்டுவெல், இவ்வெழுத்து சொல்லின் முதற்கண் நிற்பினும், அன்றி இடையில் நிற்பினும் மெல்லொலி வல்லெழுத்தைப் போன்று, ‘ச’ என ஒலிக்கப் பெறுவதே  மாறுபாடாகும் என்கிறார். இதுபோன்றே, ‘ற’ கரம் பற்றியும் நிலவுகிறது என்கிறார் கால்டுவெல். தனித்து வந்தால் ‘ற்’ எனவும், இரண்டாக இணைந்து வந்தால் ‘த்த்ர்’ எனவும் ஒலிக்கப்படும் என்கிறார். ஒரே வடிவெழுத்து,  ஓரிடத்தில் ‘க’ காகவும், மற்றொரிடத்தில் ‘க’ வாகவும், ஓரிடத்தில் ‘ட’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ட’ வாகவும், ஓரிடத்தில் ‘த’ வாகவும் மற்றொரிடத்தில் ‘த’ வாகவும், ஓரிடத்தில் ‘ப’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ப’ வாகவும் ஒலிக்கும் முறையானது, தமிழ்மொழி தோன்றிய காலத்தே உடன் தோன்றி அம்மொழியினின்று பிரிக்க இயலாதவாறு ஒன்றி நிற்கும் சிறப்பு இயல்பாகும் என்கிறார் கால்டுவெல். வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும் ஒன்று பிறிதாக மாறும் இத் திராவிட ஒலிப்புமுறை அமையும் வகையில் தமிழ் நெடுங்கணக்கு வரிசை செய்யப்பட்டது என்று கூறும் கால்டுவெல், தமிழ் நெடுங்கணக்கு ஒரே வடிவெழுத்து, இவ்விரு வகை வல்லொலிகளையும் ஒலிக்கப் போதும் என்று கருதி, சமஸ்கிருத மெல்லொலி வல்லெழுத்துக்களை தவிர்த்தது என்கிறார். இது திராவிட மொழிகளுள் மிகப் பழைய மொழியாகிய தமிழ்மொழி வாயிலாக வெளிப்பட்டு தோன்றும் திராவிட ஒலிப்பு முறைகளாகும் என்றும் கூறுகிறார் கால்டுவெல். இந்தோ -ஐரோப்பிய மொழி எதிலும் வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும், ஒன்று பிறிதாக மாறுதல் அடைவதை நாம் கண்டதில்லை என்று கூறும் கால்டுவெல், ஏப்ரு மொழி மெய் எழுத்துக்கள், ‘பெகத்’, ‘கெப்ஹத்’ என அவை நிற்கும் இடத்திற்கு ஏற்ப இருவகையாக ஒலிக்கப் பெறும் என்கிறார். அம் மெய் எழுத்துக்களுள் யாதேனும் ஒன்று, ஒரு சொல்லின் முதலிலோ, அல்லது ஓர் ‘அசை’யின் முதலிலோ வந்தால் அது வல்லொலி வல்லெழுத்துப் போலவே ஒலிக்கப்பெறும் என்றும் அவ்வெழுத்து ‘ஹகர’ ஒலி இணைந்த எழுத்தாயின், அது இயற்கையாய் பெற்றுள்ள ‘ஹகர’ ஒலியை இழந்து ஒலிக்கப் பெறும். இதைக் குறிக்க ‘தகெஷ்’ என் வழங்கப்படும் ஒரு சிறு புள்ளி பொறிக்கப்படும் என்கிறார் கால்டுவெல். ‘திராவிட மெய் எழுத்துக்கள் ‘ பற்றி கால்டுவெல் விரிவாகக் கூறுவதை அடுத்த பகுதியில் காணலாம். கந்தசாமி விநாயகம்

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்