ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜெய் பீம்

ஜெய் பீம்

திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் –    “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

சர்தார் உத்தம்

சர்தார் உத்தம்

திரை விமர்சனம் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநில ஆளுநர் லெப்டினன்ட் மைக்கேல் ஓ டயர் ஆணையின் பேரில், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரம் பேர்கள் மீது முன்னெச்சரிக்கை ஏதும் செய்யாமல், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, ரத்தக் குளியலில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்ணுற்றுத் தகித்துப் போன மாணவர் உத்தம் சிங், 1933 ஆம் ஆண்டு ஆப்கான், ரஷ்யா வழியாகக் கடும் பயணம் மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்று, படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் மரணமுற்றதை அறிந்து, அடுத்து அப்படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய ஆளுநர் மைக்கேல் ஓ டயரை 1940 மார்ச் 13 ஆம் தேதி சுட்டுக் கொன்று, ஜூலை 31 ஆம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வரலாற்றின் இந்தி திரை வடிவம்தான், விஷால் கௌசல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, சூஜித் சிர்கார் இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் வசன எழுத்துகளுடன், தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் உத்தம்’. படம் ஆரம்பித்து இருபத்தேழாவது நிமிடத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தேறிவிட, அதற்குப் பிறகும் படம் தொடர்கிறது. அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில், பேரதிர்ச்சியான தீர்ப்பு வெளியாகிவிட, படம் முடியவில்லை, தொடர்கிறது. அதற்கடுத்த 15 நிமிடங்களில் முத்தாய்ப்பாக, எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிகழ்வு விரிந்து, 24 நிமிடங்கள் நீடித்து மனதை ரணமாக்கிட, அதற்குப் பிறகான நிகழ்வில் உள்ளம் கனத்தும் போகிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப்படத்தின் முக்கியமான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும், தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் படம் தொடர்வதற்கு அடித்தளம், வலுவான திரைக்கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய இயக்கமும்தான். சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அந்தச் சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடும் மனித குலப் பிரதிநிதிகளின் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றின் ஒரு கீற்றுதான், சர்தார் உத்தம். லண்டன் காக்ஸ்டன் ஹாலில், காவல்துறை பிடியில், எதிர்த்து ஆரவாரம் செய்யும் மக்களிடையே, பதட்டம் இல்லாமல் தெளிவான முகத்துடன் வெளியே வரும்போதாகட்டும், ஸ்காட்லாந்து யார்டின் மூன்றாம் தர விசாரணை நடைமுறையின் போதுகூட “மரணத்தப் பார்க்கற நான், வலியை உணரல” என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போதாகட்டும், சுதந்திரத்திற்காகப் போராடுவது குறித்து எலீன் பால்மரிடம் விவாதிக்கும் போதாகட்டும், இந்தியர்களைப் பற்றி, சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களைப் பற்றி மைக்கேல் ஓ டயர் பேச்சுகளைக் கேட்ட உணர்வில் தகிக்கும் போதாகட்டும், “அதனாலே பகத்சிங் பத்தி பேசாதே… அவரப்பத்தி உனக்குத் தெரியாதா?” என்று டிடெக்டிவ் ஸ்வைனிடம் சொல்லும் போதாகட்டும், கள்ளம் கபடமற்ற தோழி ரேஷ்மாவுடன் அளவளாவும் போதாகட்டும், “உங்க பிரிட்டிஷ் சட்டத்தில் இந்தக் கொலை, போராட்டமாகக் கருதப்படுமா? அல்லது கொலையாகக் கருதப்படுமா?” என்று லாயர் ஹாட்சிசனிடம் அப்பாவியாகக் கேட்கும் போதாகட்டும், “என்னைச் சுடு, இந்த வழக்கே நேர விரயம். பேசாம என்னைச் சுட்டு விடு. டயர் குற்றவாளி, நீங்களும் உங்க கொள்கைகளும்தான் குற்றவாளிகள்…” என்று துவங்கி, தண்டனை அறிவிப்புக்குப் பிறகு, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, கொடுங்கோன்மை ஒழிக, புரட்சி நீண்ட காலம் வாழ்க” என தீரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடுவதாகட்டும், “நான் ஒரு புரட்சியாளன் என்பதை இந்த உலகுக்குத் தெரிய வைங்க” என்று ஸ்வைனிடமும், ‘செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் வாழ முடியும்’ என்று கூறும் எலீன் பால்மரிடம் மறுத்து, “என் நண்பன பாக்கற நேரம் வந்துடுச்சு…” என்று பகத்சிங்கை நினைத்துச் சொல்லும் போதாகட்டும் இப்படத்தில் விஷால் கௌவுசல், சர்தார் உத்தம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார். மைக்கேல் ஓ டயர் (ஷான் ஸ்காட்), டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்வெயின் (ஸ்டீபன் ஹோகன்), பகத்சிங் (அமோல் பரசார்), ரேஷ்மா (பணிட்டா சந்து), ஜெனரல் ரெஜினால்ட் டயர் (ஆண்ட்ரூ அவில்), எலீன் பால்மர் (கிறிஸ்டியன் அவெர்டன்) ஆகியோரும் தத்தம் பாத்திரத்திற்கு உரிய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சிந்தனைக்குரிய வசனங்களும் தத்ரூபமான காட்சியமைப்புகளும் அருமையான ஒளிப்பதிவும் மிகவும் பொருத்தமான பின்னணி இசையும் நேர்த்தியான படத்தொகுப்பும் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பும் படத்தின் சிறப்புக்குப் பக்கபலம். “ஒரு உண்மையான புரட்சியாளர் சில கொள்கைகள பின்பற்றணும். நீங்க பாரபட்சமாக, மத வெறியனாக, சாதி வெறியனாக இருக்க முடியாது. பொருளாதார அல்லது சமூக வர்க்க வேறுபாடு இல்லாது கடைப்பிடிக்கும் ஒரே உண்மை, சமத்துவமாகும். எல்லாரையும் சமமாக நடத்தி மனித நேயத்தில் வலுவான நம்பிக்கையோடு இருப்பது…. “ “அவங்க என்னைக் கொன்று விடலாம். ஆனா என் கருத்துகள கொல்ல முடியாது. ஒரு கொள்கைக்கான நேரம் வந்துட்டா அதன் பிறகு அதைத் தடுக்க முடியாது. நீங்க எதிர்த்திடா விட்டால் அல்லது ஒடுக்குபவருடன் போராடாம விட்டால், உங்க உரிமைகள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது. ஒரு உண்மையான கொள்கை இன்றிக் கிடைக்கும் சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமாக இருக்கும். சுதந்திரம் நமது பிறப்புரிமை, எனவே, இந்த அடக்குமுறை ஆட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம்”. இவை யாவும் பகத்சிங்கின் வார்த்தைகள்தாம்; எனினும், அவரது நிலையில் உலகில் இருக்கும் எவர் சிந்தனையும் இவையாகத்தான் இருக்கக்கூடும். முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டிஷ் நாட்டிற்காக 2.6 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்காலக் கொள்கையின்படி ‘மனித ஏற்பாடா’க உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தால் 4 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகள் கடந்தும், நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அலுவல் பூர்வமான மன்னிப்பை இந்தியாவால் இன்னும் பெற இயலவில்லை என்பது கூடுதல் கொடுமை. எது தேசபக்தி என்று பாடம் எடுக்காமல், இதுதான் தேசபக்தி என்று பாடமாகவே வாழ்ந்து, மன்னிப்புக் கேட்டு மறுவாழ்வு பெறுவதை மறுத்து, சுத்த சுயமரியாதை வீரனாகத் திகழ்பவன்தான், சர்தார் உத்தம்சிங். வரலாற்றை மறைப்பதற்கோ திருத்துவதற்கோ முன்னரே, அதனைப் படித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம்; அந்த வகையில், ‘ சர்தார் உத்தம் ‘ வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதும்கூட. மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து