நெடுங்கணக்கு – பகுதி 3

நெடுங்கணக்கு – பகுதி 3

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பதில் ‘ஒலி’ என்ற தலைப்பின் கீழ் ‘திராவிட நெடுங்கணக்கு’ என்பதை விளக்கிய கால்டுவெல், மெய் எழுத்துகளின் ஒலி அமைப்பு பற்றியும் விளக்குகிறார். க், ச், ட், த், ப்,ற் ஆகிய வல்லொலி எழுத்துக்களை வல்லினம் என்றும், ங், ஞ், ண், ந்,ம், ன் ஆகிய மூக்கெழுத்துக்களை மெல்லினம் என்றும், ய், ர்,ல்,வ், ழ், ள் ஆகிய அரை உயிர் எழுத்துக்களை இடையினம் என்றும் மெய் எழுத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். வடக்கே வாழும் திராவிட மொழிகள், தேவநாகரி நெடுங்கணக்கைப் பார்த்து, தாமும் வல்லொலி – மெய், மெல்லொலி மெய்களை அறிவிக்க, தனித்தனி எழுத்துகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் தமிழ், வல்லொலி எழுத்தையும் மெல்லொலி எழுத்தையும் குறிக்க, ஒரே வடிவெழுத்தையே பெற்றுள்ளது என்றும் கூறும் கால்டுவெல், இம்முறை அம்மொழியின் வடிவெழுத்தை மட்டும் பற்றியதன்று ; இஃது, அம் மொழியுடன் பிறந்த, அம்மொழிக்கே உரிய ஓர் ஒலி (ஒலிப்பு) முறையாகும் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். இம்முறை, எல்லா திராவிட மொழிகளிலும் உள்ளது என்றாலும், தமிழிலும் மலையாளத்திலும் மட்டுமே முறையாகவும், முழு வளர்ச்சியும் பெற்றுள்ளது என்கிறார் கால்டுவெல். முதற்கண் நிற்கும் க், ட், த், ப் என்ற வல்லெழுத்துகள் நான்கும் (இவற்றை ஹகர ஒலி இணையா வல்லெழுத்துகள் என்கிறார் கால்டுவெல்) ‘ட’ சொற்களின் மொழி முதல் எழுத்துகளாக வரும், இரட்டித்து வரும் க், ட், த், ப் என வல்லொலி வல்லெழுத்துக்களாகவே ஒலிக்கப் பெறும். அதே மெய் எழுத்துக்கள் சொற்களின் இடையே தனித்து வரின், க், ட், த், ப் என மெல்லொலி வல்லெழுத்துக்களாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். மெல்லொலி வல்லெழுத்து, மொழி முதல் எழுத்தாக வராது. அவ்வாறே வல்லொலி வல்லெழுத்து, சொல்லின் இடையே இரட்டித்து அன்றி, தனியாக வராது. ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்கப் பெற்றால், அச்சொற்களில் உள்ள வல்லொலி வல்லெழுத்து, மெல்லொலி வல்லெழுத்தாகவும், மெல்லொலி வல்லெழுத்து வல்லொலி வல்லெழுத்தாகவும் அவை நிற்கும் இடங்களுக்கேற்ப மாற்றியே ஒலிக்கப் பெறும் என்று கூறும் கால்டுவெல, சமஸ்கிருத ‘தந்த’ என்றும் சொல், தமிழில் ‘தந்தம்’ எனவும், ‘பாக்ய’ என்றும் சொல் தமிழில் ‘பாக்கியம்’ எனவும் வருவதை சுட்டிக்காட்டுகிறார். இம்முறை, தனிச் சொற்களிடையே மட்டுமல்லாமல், இரு சொற்கள் புணர்ந்த தொகைச் சொற்களிடத்தும் வரும் என்கிறார். இரு சொற்கள் புணர்ந்துழி, வருமொழி முதற்கண் நிற்கும் மெய்யெழுத்து, அச் சொல் புணராது தனித்து நிற்புழி, வல்லொலி வல்லெழுத்தாக இருப்பினும், நிலைமொழியோடு புணர்ந்து இடையயழுத்தாம் தன்மையுற்று விடவே, மெல்லொலி வல்லெழுத்தாகவே மாற்றி ஒலிக்கப் பெறும். தெலுங்கில் இவ்வேறுபாடு வேறு வடிவெழுத்து கொடுத்து எழுதுவதன் மூலமாகவே காட்டப்படுகிறது என்கிறார் கால்டுவெல். அண்ணனும், தம்பியும் என்ற பொருளில் ‘அன்னதம்முலு’ என வரவேண்டிய சொல், புணர்மொழிக்கண், ‘அன்னதம்முலு’ என்றே எழுதப்படும். அதுபோன்றே, ‘அடிபட’ என்ற பொருளில், ‘கொட்டபடு’ என வரவேண்டிய சொல் ‘கொட்டபடு’ என்றே வரும். ஆனால் தமிழில், ‘கொட்ட’, ‘படு’ என்ற இவ்விரு சொற்புணர்ச்சி ‘கொட்ட’, ‘படு’ என இரட்டிக்கப்படுகிறது என்கிறார். ‘எண்ணுப் பொருட்கண்’வரும் இரு சொற்கள், இடையில் ‘எண்ணும்மை’ பெறாமல், ‘கபிலபரணர்’ என்பது போல் எண்ணப்பட்டு, இரு சொற்களுக்கும் ஒத்த ‘பன்மை விகுதி’ கொண்டு முடியும் என்கிறார். அதே போன்று ‘ச’ என்ற எழுத்து தனித்து வந்துழி மிகவும் மென்மையாகவும், ஷ், ச் இவ்விரு எழுத்துகளின் ஒலிகளுக்கும் இடைபட்ட ஓர் ஒலியுடையதாக ஒலிக்கப் பெறும் என்கிறார் கால்டுவெல். இவ்வெழுத்தின் ஒலிப்புமுறை முன்னர் கூறியபடியே என்றாலும், செயற்படும்போது சில மாறுபாடு நிகழ்கிறது என்று கூறும் கால்டுவெல், இவ்வெழுத்து சொல்லின் முதற்கண் நிற்பினும், அன்றி இடையில் நிற்பினும் மெல்லொலி வல்லெழுத்தைப் போன்று, ‘ச’ என ஒலிக்கப் பெறுவதே  மாறுபாடாகும் என்கிறார். இதுபோன்றே, ‘ற’ கரம் பற்றியும் நிலவுகிறது என்கிறார் கால்டுவெல். தனித்து வந்தால் ‘ற்’ எனவும், இரண்டாக இணைந்து வந்தால் ‘த்த்ர்’ எனவும் ஒலிக்கப்படும் என்கிறார். ஒரே வடிவெழுத்து,  ஓரிடத்தில் ‘க’ காகவும், மற்றொரிடத்தில் ‘க’ வாகவும், ஓரிடத்தில் ‘ட’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ட’ வாகவும், ஓரிடத்தில் ‘த’ வாகவும் மற்றொரிடத்தில் ‘த’ வாகவும், ஓரிடத்தில் ‘ப’ வாகவும் மற்றொரிடத்தில் ‘ப’ வாகவும் ஒலிக்கும் முறையானது, தமிழ்மொழி தோன்றிய காலத்தே உடன் தோன்றி அம்மொழியினின்று பிரிக்க இயலாதவாறு ஒன்றி நிற்கும் சிறப்பு இயல்பாகும் என்கிறார் கால்டுவெல். வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும் ஒன்று பிறிதாக மாறும் இத் திராவிட ஒலிப்புமுறை அமையும் வகையில் தமிழ் நெடுங்கணக்கு வரிசை செய்யப்பட்டது என்று கூறும் கால்டுவெல், தமிழ் நெடுங்கணக்கு ஒரே வடிவெழுத்து, இவ்விரு வகை வல்லொலிகளையும் ஒலிக்கப் போதும் என்று கருதி, சமஸ்கிருத மெல்லொலி வல்லெழுத்துக்களை தவிர்த்தது என்கிறார். இது திராவிட மொழிகளுள் மிகப் பழைய மொழியாகிய தமிழ்மொழி வாயிலாக வெளிப்பட்டு தோன்றும் திராவிட ஒலிப்பு முறைகளாகும் என்றும் கூறுகிறார் கால்டுவெல். இந்தோ -ஐரோப்பிய மொழி எதிலும் வல்லொலி வல்லெழுத்தும், மெல்லொலி வல்லெழுத்தும், ஒன்று பிறிதாக மாறுதல் அடைவதை நாம் கண்டதில்லை என்று கூறும் கால்டுவெல், ஏப்ரு மொழி மெய் எழுத்துக்கள், ‘பெகத்’, ‘கெப்ஹத்’ என அவை நிற்கும் இடத்திற்கு ஏற்ப இருவகையாக ஒலிக்கப் பெறும் என்கிறார். அம் மெய் எழுத்துக்களுள் யாதேனும் ஒன்று, ஒரு சொல்லின் முதலிலோ, அல்லது ஓர் ‘அசை’யின் முதலிலோ வந்தால் அது வல்லொலி வல்லெழுத்துப் போலவே ஒலிக்கப்பெறும் என்றும் அவ்வெழுத்து ‘ஹகர’ ஒலி இணைந்த எழுத்தாயின், அது இயற்கையாய் பெற்றுள்ள ‘ஹகர’ ஒலியை இழந்து ஒலிக்கப் பெறும். இதைக் குறிக்க ‘தகெஷ்’ என் வழங்கப்படும் ஒரு சிறு புள்ளி பொறிக்கப்படும் என்கிறார் கால்டுவெல். ‘திராவிட மெய் எழுத்துக்கள் ‘ பற்றி கால்டுவெல் விரிவாகக் கூறுவதை அடுத்த பகுதியில் காணலாம். கந்தசாமி விநாயகம்

நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://naarkaram.com/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ எழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார். தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல். ‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார். மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது; இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல். தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையொட்டிய எழுத்து எதுவும் தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையொலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம்; அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார். சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தைத் தமிழ் கொண்டுள்ளது. மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக, பயனின்றித் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து (விஸர்க்கம்) என்கிறார். சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசைப் படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல். தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது. இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறும் கால்டுவெல், தமிழில் வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல். தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார். ‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘ஷ­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல். சமஸ்கிருத ‘ஸ’ என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். திராவிட ஒலிப்பு முறைதமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார். உயிர் எழுத்துகள் : தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார். ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார். மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல். ‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார். இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது. குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர். கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும். சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக, விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது. சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார். இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல். தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல். இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல். தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல். ‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல், திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார். ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்றபோது, ஈற்று மெய்யெழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல். ‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும்போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல். கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார். தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’, தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல். திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன என்கிறார் கால்டுவெல். எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார, ‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார். எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே