கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, தனது மொழி ஒடுக்கப்பட்டது, தனது சாதி ஒடுக்கப்பட்டது, தனது மதம் ஒடுக்கப்பட்டது, தனது நாடு ஒடுக்கப்பட்டது, தனது வர்க்கம் ஒடுக்கப்பட்டது, தனது நிறம் ஒடுக்கப்பட்டது என்பதன் பொருட்டுப் புயலாய் எழுந்த மரியாதைக்குரியவர்கள் ஏராளம். ஆனால், தனிப்பட்டவிதத்தில் எந்தவித ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் ராஜபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, தான், தனது, என்பதைத் தாண்டி  பிற மனிதர் துன்பம் காணச் சகியாது களத்தில் குதித்தார்களே, அதன்பொருட்டே ‘காதல் கொண்டேன்’ இவ்விருவர் மீதும். ஒட்டுமொத்த மானுடத்தையே நேசித்த டாக்டர் சேகுவேரா பிறந்ததோ அர்ஜன்டைனா. போராடியதோ கியூபா, புரட்சிக்கான விதைகளைத் தூவியதோ காங்கோ உட்படப் பல நாடுகள், மாவீரனாய்ச் சரிந்ததோ பொலிவியா. ஓரளவுக்கு அப்படித்தான் நமது கிழவனும். சமூகப் பணிக்கு வரும்போது ஈரோட்டில் அங்கம் வகித்த பதவிகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கிய பெரியாரின் குரல் இருபதாம் நூற்றாண்டின் முக்கால்பாகம் வரை சுழன்றடித்த பின்பே ஓய்வு கொண்டது.  ஓய்வு கொண்டதென்னவோ உடல்தான். ஆனால் ஒடுக்குதல்களுக்கு எதிரான அவரது முழக்கங்கள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தென்னாட்டைத் தாண்டி, வடக்கு கிழக்கென வியாபித்து, போர்க்குரல் எழுப்புவோர் இடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. யானையின் தும்பிக்கையினைப்போலப் போட்டுக்கொண்டிருந்த  ‘லை’யினையும் ‘னை’யினையும் சீர்திருத்தி, இன்றைக்கு இதனைக் கணினியில் தட்டச்சும்போதும்கூடப் பயன்படுகிற எழுத்துச் சீர்திருத்தத்தினை எண்பதாண்டுகளுக்கும் முன்னரே அறிமுகப்படுத்தியவர்தான் தந்தை பெரியார். தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் சங்கீத சபாக்களின் முன் தமிழில் பாடச் சொல்லிப் போர்க்குரல் கொடுத்ததோடு நில்லாமல் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தத் துணை நின்றவர்தான் தந்தை பெரியார். இனம், நிறம், பால், மொழி, சமயம், பிறப்பு, உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration on Human Rights) கூட 1948இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அதைச் செயலாக்கத் துணிந்த அக்கிழவனை என்னென்பது?! ஆம், ‘தான் யார்?’ என்பதைக் காட்டிலும் ‘தான் யாருக்கானவன்?’ என்பதில் அம்மனிதனுக்கு இருந்த தெளிவுதான் இன்றைக்கும் அம் மாமனிதனை எண்ணிச் சிலாகிக்க வைக்கிறது நம்மை. சாதி ரீதியாகப் பார்த்தால் தந்தை பெரியாரின் குடும்பமோ ‘முற்பட்ட’ வகுப்பு. ஆனால் குரல் கொடுத்ததோ ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்காக. மொழி ரீதியாகப் பார்த்தால் வீட்டார் கன்னடம். ஆனால் குரல் கொடுத்ததெல்லாம் தமிழ் மக்களுக்காக. நம்பிக்கையின் அடிப்படையிலோ நாத்திகர். ஆனால் இறைத்தலங்களில் சமத்துவம் நிலவக் குரல் கொடுத்ததென்பதோ ஆத்திகர்களின் சுயமரியாதைக்காக. மத ரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை. ஆனால் ஓங்கி ஒலித்த குரல் சிறுபான்மை மக்களுக்காக. பாலின ரீதியில் ஆண். ஆனால், குரல் கொடுத்ததெல்லாம் பெண்ணினத்திற்காக. இவை போதாதா இப்பூவுலகு இன்னமும் இந்த மனிதனை நேசித்துக்கொண்டிருக்க? (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

புரட்சியின் மறுபெயர்

புரட்சியின் மறுபெயர்

இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம். என் நாடு, என் மக்கள், என் இனம் என்று நம்மில் பலரும் பற்றோடு இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிய இடங்களிலெல்லாம் இன்று டி-சர்ட்களில் காணப்படும் தலை உயர்ந்தது. ஆம், அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிராக, அயல் நாடுகளுக்கும் சென்று ஆயுதம் ஏந்திய புரட்சிகரப் போராளி, அமெரிக்கக் கண்டத்தில் கம்யூனிச விதைகளைத் தூவியவர். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பொதுவுடமை அரசு வளர்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்று பலப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சே குவேராதான் அவர். இன்று சே குவேராவின் பிறந்தநாள். எர்னஸ்டோ சே குவேரா, அர்ஜென்டினாவின் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 1928 ஜூன் 14ஆம் தேதி குறைப் பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். கௌதமாலா நாட்டில் நடந்துவந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காகத் தூக்கி எறிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கி எறிந்ததைக் கண்டு பதற்றப்படாத, துணுக்குறாத கௌதமாலா மக்களின் மௌனம் மேலும் சே குவாராவை துடிக்கச் செய்தது. இந்நிகழ்வு அவரைப் புரட்சியின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவின் இந்த அநியாயத்தை விவரித்து, புரட்சியைத் தூண்டிப் பேசலானார். அதனால் அவருக்கு ஆபத்து வர மெக்ஸிகோவிற்கு தப்பிச் சென்றார். அந்த நேரத்தில், கியூபா நாட்டில் அமெரிக்காவின் ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்திவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராக, கொரில்லா படை திரட்டிப் போராடி வந்த பிடல் காஸ்ட்ரோவை 1955இல் தனது 27 ஆவது வயதில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இருவருக்கிடையே ஒரு நட்புப் பாலத்தை வளர்த்தது. சேவின் வீரமும் கொரில்லா படை சாகசங்களும் அவரை பிடல் காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதியாக மாற்றின. கியூபாவை ஆண்ட பாடிஸ்டாவை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை பிடல் காஸ்ட்ராவின் கைகளில் ஒப்படைத்தார். தனது 31ஆவது வயதில் கியூபா தேசிய வங்கியின் தலைவராகி, கியூபாவின் பணத்தாளில் கையெழுத்திட்டார். தனது 33ஆவது வயதில் அமைச்சராக இருந்தபோதும் கரும்புத் தோட்டத் தொழிலாளியாகப் பல நாட்கள் கரும்பு வெட்டினார். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். கியூபாவைப் பன்நெடுங்காலமாகச் சுரண்டிவந்த அமெரிக்க நிறுவனங்களை கியூபாவின் தேச உடமையாக்கினார். கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க சே சென்றபோது, பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 36 வயதே ஆன இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். 1959இல் இந்தியாவிற்கு வந்திருந்த சே, அன்றைய நமது பிரதமர் நேருவுடன் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார். அதன்பின்னர், விடுதலைக்காகப் போராடிய லத்தீன் அமெரிக்க நாடுகளின்பால் அவரது பார்வை திரும்பியது. அமைச்சர் பொறுப்பை, கட்சிப் பொறுப்பை, கியூபா நாட்டுக் குடியுரிமையை உதறிவிட்டு, காங்கோ மக்களின் விடுதலைக்காக இரண்டு ஆண்டு காலம் பாடுபட்டார். இறுதியாக பொலிவியக் காடுகளில் 16 மாத காலம், அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் பினாமி அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர், மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்த வரலாறு சே குவேராவிற்கு மட்டுமே உண்டு. சேகுவேராவால் ஈர்க்கப்பட்ட சின்சினா அவர் மீது காதல் கொண்டார். சே குவேராவும் காதல் வயப்பட்டார். அவர்கள் சந்தித்த போதெல்லாம் புத்தகங்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழித்தனர். சேயின் புரட்சிகர மனநிலையோடு சின்சினா தொடர முடியாத சூழலில், அவர்களது காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது. தன்னுடன் கொரில்லாப் படையில் இணைந்து போராடிய போராளி ஹில்டாவை சே மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். சேகுவேரா தனக்கு ஒரு மகன் பிறந்தால் விளாடிமிர் இலியச் லெனின் என்று பெயரிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. பின்னர் முதல் மனைவியின் சம்மதத்தோடு அலெய்டா மார்ச்சை மணந்தார். ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் அத்தம்பதியினருக்குப் பிறந்தன. நான்காவதாகப் பிறந்த மகனுக்கு உமர்கய்யாம் என்று பெயரிட்டார் சே. சே மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். நாள்தோறும் மக்கள் சுரண்டப்படுவதை, அவர்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதைக் கண்டு கொதித்தது அவரது மனம். தன்னுயிரைத் தந்து கோடானகோடி மக்களை விடுவிக்க, தன் ரத்தத்தைச் சிந்தியவர். ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக முறியடிக்க எதையும் செய்ய வேண்டும் என்ற அசையாத கொள்கை கொண்டவர். மக்களை விடுவிப்பதற்காக நிற்கும் கட்சிகள், கட்சி உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தரவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. சே குவாராவின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையாக வாழப்படவில்லை. அவர் மரணத்திற்கே சவால் விட்டவர். இந்த மாவீரனின் மார்பு தோட்டாக்களால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டபோதும் அவர் தன் இமைகளை மூடிக்கொள்ளவில்லை. கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார் சே. சே குவேராவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடம், ஆதிக்கத்தை அதன் எல்லைவரை சென்று எதிர்க்கவேண்டும் என்பதும் அந்த ஆதிக்கம் நம்மீது மட்டுமல்லாமல் எவர்மீது செலுத்தப்பட்டாலும் அங்கே நாம் நிற்க வேண்டும் என்பதுமே.