மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)