அதிகாரம் – அன்றும் இன்றும்

எளிய மக்களைப் பொறுத்தவரை ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஆண்டவனைவிட ஆட்சியாளர்களே அதிகாரம் மிக்கவர்கள் என்பதை மன்னராட்சிக் காலம் முதற்கொண்டு மக்களாட்சிக் காலம் வரை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அண்மைக் காலமாக கோவில்கள் தொடர்பாக நடந்து வரும் பிரச்சினைகளில் ஆட்சியாளர்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை மன்னராட்சிக் காலத்துடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. (ஆ-ர்.) இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையிலான குழு கோவிலுக்குச் செல்கிறது. “15 ஆண்டுகளுக்கு முன் தணிக்கை செய்த அறிக்கையை வழங்குங்கள்” என்று அமைச்சர் கேட்கிறார். “தரமுடியாது. இது எங்கள் கோவில். தணிக்கை செய்ய அரசுக்கு அதிகாரமில்லை” என்று தீட்சிதர்கள் பதிலளிக்கிறார்கள். “கோவிலைக் கட்டியது பழங்கால மன்னர்கள். நீங்கள் நிர்வாகம் மட்டுமே செய்கிறீர்கள்” என்கிறார் அமைச்சர். “கொத்தனார் கட்டினார் என்பதற்காக வீடு அவர்களுக்குச் சொந்தமாகிவிடுமா?” என்று தீட்சிதர்கள் கேட்கிறார்கள். “ஓ! அப்படியானால் பணம் செலவு செய்து நீங்கள் கோவில் கட்டினீர்களா? மன்னர்கள் கொத்தனார்களா?” என்று அமைச்சர் கேட்கிறார். வாக்குவாதம் தொடர்கிறது. “உங்கள் நெற்றியில் விபூதி இல்லை. நாங்கள் விபூதி வைத்துவிடவா?” என்று தீட்சிதர்கள் கேட்க, அமைச்சரும் சம்மதித்து விபூதி வைத்துக்கொள்கிறார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “கணக்குகளை தீட்சிதர்கள் இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிப்பதே மனு தர்மம்” என்று அமைச்சர் பேட்டி கொடுத்து விசாரணையை நிறைவு செய்தார். அன்று விக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலம். கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூரில் சுப்பிரமணியப் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டது. 2 மா அளவு நிலம் ‘சுவாமி’க்குத் தானமாக அளிக்கப்பட்டது. இது திருப்பாதிரிப் புலியூர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து தரப்பட்டது. அவ்வூரைச் சேர்ந்த பிராமணர்கள், “இது எங்கள் நிலம். எங்களுக்குச் சொந்தமான பிரம்ம ஷேத்திரம். இதனைப் பிள்ளையார் கோவிலுக்குத் தரக்கூடாது” என்று பிரச்சினை செய்தனர். இதனை விசாரிப்பதற்காக பல்லவராயர், அழகிய மணவாளப் பல்லவராயர் ஆகிய இரண்டு அரசு அதிகாரிகள் அவ்வூருக்கு வந்தனர். சோழகுலவல்லி நல்லூர் என்ற ஊரின் பொதுச் சபையில் விசாரணை நடந்தது. விசாரிக்கவே கூடாது என்று கடுமையாக பிராமணர்கள் எதிர்த்தனர். ஒரு பிராமணர், ‘தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார். மிரட்டலைப் பொருட்படுத்தாத அரசு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை தொடங்கியது. “பிராமணர்களே, நீங்கள் உரிமை கோரும் நிலத்துக்குச் சான்று ஏதேனும் உண்டா?” என்று அதிகாரிகள் வினவினர். “இது எங்கள் பிரம்ம ஷேத்திரம். எங்களுக்குச் சொந்தமான நிலம். சான்று காட்டத் தேவை இல்லை” என்று பிராமணர்கள் பதிலளித்தனர். “பல்லாண்டு காலமாக வேளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர்கள் இந்த நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். இது பிரம்ம க்ஷத்திரம் ஆகாது. கோவிலுக்குச் சொந்தமான திருநாமத்துக் காணி. உங்களின் உரிமை நிலம் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள்”. இது அதிகாரிகள் எனுப்பிய வினா. “அது தேவை இல்லை. இந்த நிலப்பகுதிகளை எங்களுக்குள் விற்பனை செய்தும் ஒத்தி வைத்தும் உள்ளோம். அதற்குச் சான்று உள்ளது. இச்சான்று போதும்” என்பது அவர்களின் பதில். “உங்களுக்குள் நீங்களே விற்பனை செய்த சான்றாவணங்கள் செல்லாது. இவற்றை ஏற்க மாட்டோம்” என்று கெடுபிடி காட்டிய அதிகாரிகள், கோவில் அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர். “இது கோவில் நிலம்தானா? பிராமணர்களுக்கு உரியதா? கோவில் நிலம் என்றால் சான்றுகள் இருக்கிறதா?” என்று கோவில் அலுவலர்களிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டனர். “இது உறுதியாகக் கோவில் நிலம்தான்” என்று கூறி அதற்கான கல்லெழுத்து சாசனங்களை அலுவலர்கள் ஆவணமாகக் காட்டினர். அந்த ஆவணங்களில் பிராமணர்கள் உரிமை கொண்டாடிய அந்நிலப் பகுதி கோவிலுக்குச் சொந்தமானது என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ‘கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் விக்ரமபாண்டித்தேவர் காலத்தில் எழுதின திருமுகத்தின்படி திருப்பாதிரிப்புலியூர் கோவிலுக்கு உடலடங்க இறையிலியாக எழுதின ஓலையின்படி இந்நிலம் திருநாமத்துக்காணியாகக் கோவிலுக்குச் சொந்தம்’ என்று எழுதப்பட்டு கல்லிலும் வெட்டப்பட்டது. அதில் பிராமணர்களும் உடன் கூட்டாத்தாரும் கையெழுத்திட்டிருந்தனர். சான்றாவணங்களைப் பார்த்த அதிகிரிகள் பிராமணர்களைக் கண்டித்தார்கள்.உடனடியாக அந்த நிலங்களைக் கோவிலுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று சாசனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் கையெழுத்திட்டு விசாரனை முடிவு பெற்றது. நிலமும் பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமானது. ஆதாரம்: தென்னிந்தியர் கல்வெட்டுத் தொகுதி (7-759) மா. மாரிராஜன்