பாதி ஆப்பிள் விளைவு

காதல் எனப்படுவது யாதெனின்.. ஒளி வீசிக்கொண்டிருந்த ஆதவன் கார்மேகக் கூந்தலுக்குள் மறைந்துகொண்டான். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்த கிளைகளும் உரசி உரக்க உரையாடிக்கொண்டிருந்த இலைகளும் தங்களின் அசைவுகளை நிறுத்திக்கொண்டன. மின்கம்பங்களுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளில் கொஞ்சிக்கொண்டிருந்த காகங்கள் இரண்டு சட்டென்று சிறகை விரிந்துப் பறக்க, ஈர்ப்புவிசை மாறுதலால் துள்ளி எழும்பிக் குதித்து ஆடின மின்கம்பிகள். தன் வாலைப் பின்னங்கால்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டு சாலையோரத்தில் படுத்துக்கொண்டது தெருநாய் ஒன்று. என் மனதோ விழித்துக்கொண்டது. திடீரென ஏற்படும் காலமாற்றமும் தென்றலின் தீண்டலும் வீணை நரம்புகளின் மீட்டலும் அவளின் வருகைக்கான சமிக்ஞைகளே. கருவிழிக்குள் அவளின் பிம்பம் குவியும்போதெல்லாம் என் உடலின் ஒவ்வொரு அணுவும் கனவுலகில் சஞ்சாரிக்கிறது. புத்திக்கும் மனத்திற்கும் மட்டுமல்ல, என் உடல் அணுக்களுக்கும் கனவுகாணும் சக்தியைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் உண்டு. அவளை நினைக்கும்போதெல்லாம் உடலெங்கும் புல்லரிப்பதும் அதனால்தானே. இதனை விஞ்ஞானம் என்பதா அல்லது என் மெய்ஞானம் என்பதா? இது உன்மீது நான் கொண்ட காதலா? அல்லது என் பருவ வயதின் காமமா? குயில்கள் கூவுவதும் மயில்கள் தோகையை விரித்தாடுவதும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்புவதும் தன் இணையைக் காமத்திற்கு அழைக்கும் காதலன்றி வேறேது? இந்தக் காதல் என்னும் ரசாயன மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமானதா என்ன?   அவளின் சுவாச ஒலி என் செவிகளுக்குள் புது ராகம் பாடியது. அவளின் வாசம் என் சுவாச மலர்களை மலரச் செய்தது. தடையின்றிச் சுரந்த உமிழ் நீரை முழுவதுமாய் விழுங்கமுடியவில்லை. அது தொண்டைக்குள் உருளும் உருண்டைக்குள் சிக்கிக்கொண்டது. முதலாம் புலனுறுப்பான என் விழிகள் அவள் வரும் திசையைத் தேடின. அவளின் நெளிந்து சுருண்டு காற்றில் ஆடும் காதோரத்துக் கூந்தலோ, இடது வில் புருவத்தின்மீது தவம் செய்யும் மச்சமோ, குவிந்த செவ்விதழ்களின்மீது தீட்டிய ஓவியத்தை ஒத்த ரேகைகளோ, சங்குக் கழுத்தினில் தொங்கியபடி ஊஞ்சலாடும் முத்து மாலையோ, ஏதோ ஒன்று எந்தன் பித்தம் தலைக்கேற்றும் வித்தையைக் கற்றறிந்திருக்கிறது. அன்பு, பாசம், நேசம், விருப்பம், நட்பு எனப் பல சொற்கள் தமிழில் இருந்தாலும் காதல் என்ற சொல் புதிதாய் ஏன் வந்திருக்கும்? பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இல்லாத ஒரு உணர்வு மனிதர்களுக்கு மட்டுமா உள்ளது? மனிதனைத் தவிர மற்றவற்றுக்குக் காமம் என்பது பசியைப்போல, உறக்கத்தைப் போல எப்போதாவது ஏற்படும் உடலின் தேவைதானே.. பசி வரும்போது வேட்டையாடுவதைப்போல, காமமும் உணர்வெழுச்சியின்போது மட்டுமே. அவை அனைத்து நேரங்களிலும் காமத்தைத் தூக்கிச் சுமப்பதில்லை, நம்மைப்போல. மொட்டுகள் மலர்வது வண்டினங்களுக்குத் தெரிந்துவிடும்தானே.! அவளை நான் உணர்வதும் அதுபோலத்தான். வண்டினங்களின் பசிதான் மலர்களில் தேன் உண்பதெனில், அதில் காமம் ஏது? காதல்தான் ஏது? மலர்கள் உணவுதானெனில் அவளை நான் மலரோடு பொருத்திப் பார்ப்பது தவறல்லவா? காம உணர்வு மனிதனை மட்டும் எல்லா நேரத்திலும் ஆட்கொள்வது ஏன்? மனிதன் ஆடைகொண்டு தேகத்தை மறைக்கவேண்டியதும் அதனால்தான் தோன்றியதாம். பருவம் வந்ததும் நம் மூளையில் எப்போதுமே காமச் சுரபிகள் சுரந்துகொண்டேதான் இருக்கின்றன. பசி, தூக்கம் மறந்தும் காமத்தில் திளைத்திருக்க நம்மால் முடிகிறது. காமத்தை மறைக்கும் ஆடையை நெய்வதென்பது மனிதனால் முடியாத ஒன்றாய் இருக்கிறது. உலகில் இருக்கும் அனைத்தும் நமக்காகத்தான் என அபகரித்த மனிதனால், சக மனிதனை அபகரிக்க முடியவில்லை. பசிக்கு உணவு கிடைப்பதுபோல காமப்பசியை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியாது தவிக்கிறான். பலம்கொண்ட வர்க்கம், பலம் குறைந்த வர்க்கத்தை அடிமையாக்கக் கற்றுக்கொண்டது. இருவரும் ஒருவருக்கொருவர் காமப் பசியைப் பகிர்ந்துகொள்ள இந்த ஆண்டான் அடிமை உறவு கைகொடுக்கவில்லை. காமம் என்னும் கட்டில் முற்களாலும் பாறைகளாலும் செய்யப்பட்டிருந்தன. வலியும் வேதனையும்தான் புணர்வு தருமெனில் அதை ஏன் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறான்? இவை அனைத்திற்கும் பதில் தேடும் முயற்சிதான் காதல். காதல் எனப்படுவது.. காதல் என்பது ஓர் கற்பனை ஒழுங்குவாதம். புணர்தலையும் புணர்வுச் சிந்தனையையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றவே காதல் என்ற ஒன்றை நம்பவேண்டியிருக்கிறது. காதலும் கடவுளும் ஒன்றுதான் போல. நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு சில வரைமுறைகளை வகுத்துக்கொள்ளத்தான் கடவுள் நம்பிக்கை என்னும் கற்பனை ஒழுங்குவாதம் தேவைப்படுகிறது. அதுபோல, காமத்திற்குக் காதல் தேவைப்படுகிறது. இதோ கார்மேகங்களின் புணர்வில் முதல் துளி மண் சேர, மண் வாசம் மணக்கத் தொடங்கிவிட்டது. அவளை ஆரவாரமாய் வரவேற்கத் தொடங்கிவிட்டது. என் இதயமும் படபடக்க, சாரல் மழை என் மேனி நனைக்க, உள்ளுக்குள்ளும் நனையத் தொடங்குகிறேன். என் இமைகள் பட்டாம்பூச்சியாய்த் துடிக்கின்றன, அவளின் கடைக்கண் பார்வைக்காக. எளிய மொழியில் சொன்னால், காதல் என்பது உருட்டு மட்டுமே. உருட்டுவதாலேயே காதல் உயிர்வாழ்கிறது. எல்லாம் ஏவாள் கடித்துக் கொடுத்த பாதி ஆப்பிளின் விளைவு என்ற உருட்டைப்போலவே.