மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்
மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )