கத்தாழைப் பள்ளிக்கூடம்

கத்தாழைப் பள்ளிக்கூடம்

சிறுகதை இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான். காலால் உரசி அந்தச் செம்மண்ணை மழைக்காலத்தில் ரசிக்கும் விருப்பம் கரிசலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். என்ன நட்டுவைத்தாலும் முளைக்கும் மண் அது. ஆனால் கரிசல் மண் அப்படி இல்லை. ஒவ்வொரு துகளும் சூரியனிலிருந்து உதிர்ந்தது போன்ற வெப்பத்தைத் தனக்குள் வைத்து, எப்போதும் எங்களுக்குக் கடத்திக்கொண்டிருக்கும். ஆவணி மழையில்தான் கரிசலை நாங்கள் மிகுதியாகக் கொண்டாடுவோம். சரசரவென்று பெய்யும் மழையில் முழுவதும் சகதியாக, கருமையில் பிறந்த குழந்தையின் கன்னம் போன்று எங்கள் உடலெல்லாம் அந்த மண் ஊரும். சிறுவனாக அந்த மண்ணில் உழன்ற கைகளை எவ்வளவு நாள் கழித்துப் பார்த்தாலும் பிசுபிசுப்பு மாறாத ஞாபகம் எல்லாருக்கும் இருக்கும். சரியாக் ஒன்றிரண்டு நாட்களை மட்டும் கழித்துவிட்டப் பார்த்தால், எனக்கும் ஊருக்கும் இடைவெளி இருபத்தியோரு வருடங்கள். எல்லாத் தேடலும் முடிந்தது என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருந்தேன். நிறைய கணங்களுக்கு மத்தியில் வாழ்ந்த ஊர், ஒரு ஆசுவாசமான பிரியத்தைத் தந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிஜம்தான்; அன்றைய நாளும் எனக்கு அப்படித்தான் இருந்தது. விட்டுச் சென்ற இடமல்ல இது. நானாக விலகிச் சென்ற ஒவ்வொன்றையும் தேடினேன். ஆனால் கிடைக்காத ஒன்றைப் பற்றிய கவலை இன்னும் இருக்கிறது. கத்தாழை முளைக்கும். அதுவும், செழித்துப் பழம் விடும் கத்தாழையை நீங்கள் கடைசியாக எங்காவது பார்த்ததுண்டா? நான் பார்த்திருக்கிறேன், கடைசியாக எங்கள் ஊரில். கத்தாழை என்றதும் சப்பாத்திக் கத்தாழை என்ற வட்ட வடிவக் கத்தாழை அல்ல இது. தென்னங்கீற்றின் சாயலில் வளரும் குருத்துக் கத்தாழை.   எவ்வளவோ ஓடைகள் இருந்தாலும் அணைக்கட்டு மேட்டில் மட்டும் மேற்குக் கால்வாய் ஓரத்தில் வேலிக்கம்பி வலைபோல் ஒரே உயரத்தில் நெடுந்தூரத்திற்குக் கத்தாழைதான். பச்சைப் பசேரென்று கரிசல் மண்ணில் இரண்டு செடிகளைப் பார்க்கலாம், ஒன்று, கருவேலம் இன்னொன்று கத்தாழை.   காலையில் எங்களுக்கு அந்த ஓடைதான் எல்லாமும். எல்லாமும் என்பதன் அர்த்தம், அரிய அந்தக் கத்தாழையின் இரண்டு பக்க முட்களுக்கு நடுவில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பார்த்தால் அறியலாம். கூரிய கருவேலம் முள்ளை வைத்துக் கத்தாழை நடுவில் எழுதலாம்; படம் வரையலாம்; வெட்டிப் பாதியை எடுத்தும் விடலாம். மருந்துக்காக அப்படி வெட்டிய கத்தாழையை நாங்களும் பார்திருக்கிறேம். சுண்ணாம்பு அடிக்க இப்போது வந்திருக்கும் பிரஸ்க்கு முன்பாகக் கத்தாழை நார்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எங்களுக்கு எழுதத்தான் பிடிக்கும். அப்போதைய போதையான வார்த்தைகளை எங்களுக்கு அந்தக் கத்தாழைதான் கற்றுத் தந்தது. இரண்டாவது வார்த்தைப் பள்ளிக்கூடம் அந்தக் கத்தாழைக் காடு. அடுத்த தலைமுறை கழிப்பறையில் எழுதிய சொற்களை நாங்கள் கத்தாழையில் அதற்கு முன்பாகவே எழுதியிருந்தோம். முதலில் எழுதி, பின்பு அந்தரங்கப் படம் வரைதலைப் பார்த்துக் குதூகளித்த கூட்டம் நாங்கள். காலையில் ஒன்பது மணிக்குப் பள்ளி நேரம் என்றால், சரியாக ஆறு மணியில் இருந்து எட்டரை வரை அந்த ஓடைதான். அப்போதுதான் தொடர்கதை ஒன்று எங்களுக்கு அதில் கிடைத்தது. பரிச்சயமான பெயர் உள்ள பெண்ணின் பெயரோடு, இன்னொரு பெயரும் அதில் இருந்ததை முதலில் முருகேசன்தான் கண்டுபிடித்தான். முருகேசனுக்குத் தெரியாமல் கத்தாழை ஓடையில் ஒன்றும் நடக்காது. ஓடைக்கும் அவன் வீட்டுக்கும் இருக்கும் தூரம் எங்களைவிடக் குறைவு. ஆனால் அதிகாலை வேளையில் எங்களால் மட்டுமல்ல; முருகேசனால்கூடக் கத்தாழைப் பக்கம் போக முடியாது. பாம்பின் தடமும் அதுதான். எந்தப் படம் யார் வரைந்திருக்கக் கூடும். அந்த இரண்டெழுத்து யாருடைய பெயர். இந்தக் குறியீடு, உறுப்புகளில் எதைக் குறிக்கிறது என்பது வரை எங்களுக்குக் கத்தாழை ஆசான் முருகேசன்தான். எவ்வளவோ வற்புறுத்தியும்கூட, அந்த இரண்டு பெயர்களுக்கான மனிதர்களை முருகேசன் எங்களுக்குச் சொல்லவே இல்லை. நாங்களாக யூகித்துச் சொன்ன எல்லா மனிதர்களையும் அவன் நிராகரித்தான். நிச்சயமாக அந்தப் பெயர்கள் எங்களுக்கு முன்பான தலைமுறையுடையது. அந்தத் தலைமுறைக்கும் எங்களுக்கும் இடைப்பட்ட பையன் முருகேசன். பெயருக்குக்கூட அண்ணன் என்று அழைக்கமாட்டோம். ஆனால் எல்லா சேட்டை, சச்சரவுக்கு அவன்தான் மூலதாரி. மணி ஐஸ் வாங்கித் தின்னும்போது முருகேசனுக்கு ஒன்றும் வாங்கிப் பள்ளி மைதானைத்தில் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்குத் தெரியும், ஏதோ ஒன்றை வாங்குவதற்கான கொடுக்கல் இது என்று. “என்னடா… புதுசா..” என்றான். என்னால் அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. “சும்மாண்ணா…” என்று சமாளித்தேன். அவனாகவே சொல்லத் தொடங்கினான். “அது யாருன்னு தெரியலடா. ஆனா காலைல எழுதுற ஆளு, சாயங்காலம் அதைக் கீறி வச்சிடறாரு. இதுக்காகவே காலைல மொத ஆளா நான் பாக்கப் போயிர்றேன்..” என்ற மழுப்பிய சொல்லை முருகேசன் உதிர்த்தான். ஆனால் அது நிஜமல்ல. முருகேசன் பார்த்த எல்லாக் கத்தாழைப் பெயர்களும் அங்கேயே இருந்தன. எதுவும் அழிக்கப்படவில்லை. எங்களுக்குள்ளகப் பேசி முடிவு செய்த பெண்ணொருத்தியின் திருமணம் மிக வேகமாக நடந்தது. அந்தத் திருமண பற்றிய தகவலில்கூட, நாங்கள் கத்தாழைப் பக்கம்தான் தேடினேன். ஆனால் முருகேசன் அங்கு இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை. பெருசுகள் பெரும்பாலும் கத்தாழை ஓடைக்குள் வரமாட்டார்கள். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம். ஒரு மைல் தொலைவில் காலைக் கடனை முடித்துவிட்டு, ஏதாவது ஒரு பம்பு செட் பக்கம் ஒதுங்கி, வேப்பங்குச்சியைப் பல் இடுக்கில் வைத்தவாறு வந்துவிடுவார்கள். நாங்கள் முருகேசன்தான் இதற்குக் காரணம் என்று நினைத்திருந்தோம். நிச்சயமாக அதற்கு நேர் எதிரான மனிதர், நிறைய குடியில் விழுந்து மீள முடியாத மனிதராக இருந்தார். ‘சரி சமமான பொருத்தம்’ என்ற எங்கள் மனது, அப்போது கரிசலைப்போல ஊமையானதுதான். நிலத்தோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்கான வீம்பு, அந்த இரண்டு பேரைப் பிரித்தது. சந்தேகங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டோம். பொது நிகழ்ச்சியில் விழுந்த புன்னகையைப் பார்த்தாகவும் நானே கோடு போட்ட ஒரு பக்கத் தாளைத் தந்ததாகவும் கத்தாழைக் கூட்டணியில் விஷயம் வந்தது. கடைசியாக, கத்தாழையைத் தேடிக் கிடைக்காதபோது, அவரைப் பற்றிய சேகரிப்பு எனக்கு வேண்டும் எனத் தோன்றியது. ஊரைவிட்டு சற்றுத் தள்ளி, ஆனால் செம்மண் தளத்தில் இரண்டு குழந்தைகளோடு இருக்கிறார் எனத் தகவல் வந்தது. அத்தோடு நானும் நின்றிருக்கலாம். கற்றாழையோடு அதே ஊரில் இரண்டாவது பெயர் இன்னும் இங்குதான் இருக்கிறது. நானாக ஊகித்த பெண், என் முன்னால் இன்னும் நடமாடுகிறாள். துயரங்களை மென்று விழுங்கி, அவள் போக்கில் போகும் பெண்ணொருத்தியை அந்தக் கத்தாழை விழுங்கிவிட்டதாகவே இன்று நினைக்கிறேன். எழுத்து என்னவாக வேண்டும் என்பதற்கான சாட்சி அவள். எந்தத் தவறையும் குற்றம் காணாமல் எல்லாவற்றையும் மறைத்து வாழ முடிந்த ஒற்றை மனுசியாக இன்னும் இருக்கிறாள். நல்லவேளையாக, இன்னோரு தெய்வமாக மாறாமல் உயிரோடு இருக்கிறாள் என்பதே என்னுடைய ஆசுவாசம். ஆனால், இப்போது எங்கள் ஊரில் கத்தாழை எங்குமில்லை. முருகேசனும் இப்போது அவ்வளவாக யாருடனும் பேசுவதில்லை.

மர(ற)ப்பேனா?

மர(ற)ப்பேனா?

சிறுகதை அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு பூரிப்பு அடைக்கிறாள். அக்குழந்தையின் முதல் சிணுங்கலில் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஒரு ஆண் உணர வேண்டுமென்றால், அவனும் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே முடியும். படைப்பாளர்கள் தங்கள் படைப்பை எழுதி முடித்தபின் ஏற்படும் மனநிலையை ஒத்தது அந்தத் தாயின் மனது. உணர்வுகளுக்கும் மூளையின் எண்ணங்களுக்கும் இடையில் விரல்கள் படும்பாட்டை அவ்வளவு எளிதில் எந்த எழுத்தாளனாலும் கூறிவிடமுடியாது. அப்படி ஒரு மனநிலையில்தான் இருந்தேன். எழுதும்போது நான் நினைக்காத சிலவற்றையும் என் விரல்கள் எழுதியதாக உணர்ந்தேன். விரல்களும் படைப்பாளிகள்தானே! தொடுதிரை, தட்டச்சு என வந்துவிட்டாலும், மை சிந்தும் பேனா முனையும் காகிதமும் முத்தமிடும்போது வரும் நறுமணம், நாசியில் ஏறி மூளையைக் கிளறி, பற்றி எரியவிட்டு, மனத்தைக் குளிர்விக்கும். அந்த போதையை வென்ற ஒரு “….” இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. எழுதிமுடித்தபின் அந்தப் பேனா முனையைப் பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் பேனா எனக்கு அவள் கொடுத்தது. அவளுக்குத் தெரியாது நான் ஒரு எழுத்தாளன் ஆவேன் என்று. இந்தப் பேனாவுக்கும்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் வாழ்க்கையில் பரிசாகக் கிடைத்த இரண்டாவது பேனா இது. அதன்பின் நான் யார் பேனா கொடுத்தாலும் வாங்கிக்கொள்வதில்லை. சிலரின் அன்பைத் தட்டமுடியாமல் பெற்றாலும் அதை யாருக்காவது கொடுத்துவிடுவேன்; பயன்படுத்துவது கிடையாது. இந்த இரண்டாவது பேனாவை அவளிடம் இருந்து பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. இதுவும் அந்த முதல் பேனா போன்றே மரத்தாலான பேனா. என் முதல் பேனாவின் கதை எனக்குக் கோர்வையாக ஞாபகம் இல்லை. அப்போதுதான் பலப்பக் குச்சியில் இருந்து பென்சிலுக்கு மாறியிருந்தேன். ஔவையார் ஆரம்பப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு. கடற்கரையை ஒட்டிய வீடு என்பதால் உப்புக் காற்றால் கறுத்துப்போன நிறம் எனக்கு. என் அம்மாவும் இதே பள்ளியில் படித்தவர் என்பதாலும் என் ஆசிரியை அவர் பள்ளிக்கால நண்பர் என்பதாலும் சற்று கவனிப்பு அதிகம்தான், எல்லாவற்றிலும். அன்று கடன் வாங்கிக் கழிப்பது பற்றிப் பாடம் எடுத்துக்கொண்டு இருக்க, அவள் தன் தந்தையோடு வந்து சேர்ந்தாள். அகண்டு விரிந்த கண்கள் அவளுக்கு. இப்போதும் நான் கண்களை மூடி அவளை நினைக்கும்போது அந்தக் கண்களை மட்டும் அப்படியே என் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. ஆசிரியர் அவள் பெயரைக் கேட்க, அவளின் விரிந்த கண்கள் குளமாகிக்கொண்டிருந்தன. அவளின் தந்தைதான் ‘செண்பகம்’ என்றார். நான் இப்போது வைத்திருக்கும் இந்தப் பேனாவை எனக்குக் கொடுத்தவளை நினைத்துப் பார்த்தால், அவளின் கண்கள் என்மீது கோபத்தைக் கொட்டியதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் கல்லூரி முடித்துப் பத்து வருடங்களுக்குப் பின் ஒருநாள், வங்கி ஒன்றில் சந்திக்கும்போது தற்செயலாகப் பார்த்தேன். சலான் எழுதப் பேனா இல்லாமல் அருகில் நிற்கும் அவளிடம் கேட்கும்போதுதான் அவளைப் பார்த்தேன். மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் அரை விநாடி தேக்கிவைத்த அந்தக் கண்கள், கொஞ்சம் கொஞ்சமாகச் சிவந்து தீயாய் எரிவதை அமைதியாய்ப் பார்த்து ரசித்துக்கொண்டே நின்றேன். “சாந்தி… பேனா குடு; எழுதிட்டுத் தந்துடுறேன்” எனச் சொல்லும்போதே சிரித்துவிட்டேன். செண்பகம் கண்களைத் துடைத்தவாறு நான் பார்க்கும் தூரத்தில் அமர்ந்தாள். அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தாள். அருகில் போய் ஆறுதல் சொல்லி, கண்களைத் துடைத்துவிட வேண்டும் எனத் தோன்றியது. பின் ஒருநாள் அம்மாச்சி கொடுத்த மூனு பைசாவில் மதியம் சுட்ட பனங்கிழங்கு வாங்கி அவளுக்கும் கொடுத்தேன். ‘வேண்டாம்’ என்றவள், பின் வாங்கி அதை உரித்துத் தின்னத் தெரியாமல் முழித்தாள். உரித்து நார் எடுத்துக் கொடுத்தேன். ஒருநாள் வகுப்பு முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளின் தந்தை எப்போதும் போல சைக்கிளில் அவளை அழைத்துப்போக வந்திருந்தார். என்னையும் ஏற்றிக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, அவள் வீடு என் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது என்று. என் அம்மாச்சி என்றாலே ஊரில் அனைவருக்கும் பயம். எனக்கு விவரம் தெரியும்போதே என் தாத்தாவுக்குக் கண்பார்வை குறைந்துவிட்டது. ஐந்து குழந்தைகளையும் படிக்கவைத்து, வளர்த்து, கல்யாணம் செய்துவைத்து என, மொத்தக் குடும்பத்தையும் பார்த்துகொண்டு தாத்தாவையும் பார்த்துக்கொண்டாள். படிப்பறிவு இல்லாததால் யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என எல்லோரிடமும் சண்டைக்கு நின்று, பின்னர் அதுவே அவளின் குணமாகி இருக்கும் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. எங்கள் வீட்டின் பின்புறம் மல்லிகைத் தோட்டம் இருக்கும். தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை, முருங்கை என பலவகை மரங்களும் இருக்கும். அதைப் பறித்து பக்கத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சு காசு, பத்து காசு என விற்பதுதான் பிரதானத் தொழில் என் அம்மாச்சிக்கு. முருங்கைக்காய், கருவேப்பிலை எல்லாம் நானும் பலமுறை பறித்துக் கொடுத்திருக்கிறேன். செண்பகமும் நானும் அந்த மல்லிகைத் தோட்டத்துக்குள் கோவில் கட்டி விளையாடுவது என்பது எல்லா விடுமுறை நாட்களிலும் நடக்கும். ஒருநாள் விளையாட்டாகக் கற்களை அவள்மீது எறிய, அவள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வீட்டில் அனைவரும் கூடிவிட்டார்கள். எனக்கு பயத்தில் உடல் நடுங்கி வியர்த்துக் கொட்டியது. அதுபோலத்தான் அன்று சாந்தியின் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கோபத்தை அடக்கமுடியாமல் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். அன்று வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லாருக்கும் முன் என்னை அறைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. கல்லூரி படிக்கும்போது எனது இறுதி ஆண்டு வகுப்பறையின் பக்கத்தில்தான் இளங்கலை ஆங்கிலம் முதலாம் வருட வகுப்பறை. என் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்தான் அந்த ஜன்னலின் வழியே அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து, அருகில் இருக்கும் அவளின் தோழியிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் வகுப்பறையில் ஆசிரியரும் அப்போது இல்லை. ராகிங் செய்யும் எண்ணத்தில் நேரே உள்ளே சென்று அவளின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். சாந்தி என எழுதி இருந்தாள். “சாந்தி… பேனா குடு.. எழுதிட்டுத் தாரேன்” என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றாள். என் அம்மாச்சி, செண்பகத்தின் அப்பா, அம்மா, மாமா என இன்னும் பலர் கூடி நிற்க, நான் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றேன். அப்போது செண்பகம் வாதாம் மரத்தைக் காட்டி, யாரோ இந்தக் காயை அடித்துப் பறிக்கக் கல் எறிந்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறி அழுதாள். நானும் அழ ஆரம்பித்தேன். அம்மாச்சியும் இன்னும் சிலரும் அசிங்க அசிங்கமாகக் கல் எறிந்தவனைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வார்த்தைகளுக்குள் எனக்கு மட்டும் அவர்களே தெரிந்தார்கள். இன்றுவரை அவள் மண்டையை நான்தான் உடைத்தேன் என நானும் யாரிடமும் சொல்லவே இல்லை. அவள் தலையில் மஞ்சள் தூளும் காப்பித்தூளும் வைத்து அமுக்கினார்கள் என் அம்மாவும் சித்தியும். அவளின் அப்பா சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனைக்குப் பறந்தார். அடுத்தநாள் சுட்ட பனம்பழத்தை அவளுக்காகப் பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன். “வெட்டி நார் உரித்துக் கொடேன்” என்றாள். அதை இப்போது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். சாந்தியிடம் “சாந்தி.. சாந்தி..” என முணுமுணுத்தபடி வங்கியில் சுற்றியும் கூட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தித் தப்பித்தேன். சாந்தி கொஞ்சம் சாந்தியடைந்ததாகத் தெரிந்தது. கண்களை ஒருமுறை மூடித் திறந்தவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள், பழைய நினைவுகளையும் சேர்த்தே. தன் கைப்பையிலிருந்து மரப்பேனா ஒன்றை எடுத்து என் கையில் திணித்துவிட்டு யாரையோ தேடினாள். அந்த வகுப்பில் அனைவரும் எங்களையே பார்க்க அவள் அந்த டப்பாவைப் பல்லால் கடித்துத் திறந்து, பேனாவை எடுத்து என்னிடம் நீட்டினாள். இப்படித்தான் நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு. பின் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் பேனாவைக் கேட்பாள். அல்லது, அந்தப் பேனாவைக் கேட்பதற்காகவே பார்ப்பாள். நான் ‘வா, போ’வில் இருந்து வாடி போடி வரைக்கும் வளர்ந்துவிட்டேன். ஆனால் அவள் மரியாதையைக் குறைத்து என்னைப் பெயர் சொல்லிக்கூட அழைத்ததில்லை. எங்கள் கல்லூரி இறுதி நாளும் வந்தது. சாந்தியின் கண்கள் பட்டாம்பூச்சிபோலப் படபடக்க, என் முன் வந்து நின்றாள். அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றுகொண்டு இருந்தாள். வார்த்தைகளைத் தேடுவதைக் கண்கள் காட்டிக் கொடுத்தன. சில வார்த்தைகளை விழுங்குவதை அவள் சங்குக் கழுத்து படம்பிடித்துக் காட்டியது. ஒரு வழியாக வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியங்களாக்கி என்னைப் பார்த்துக் கொட்டிவிட இதழ் திறந்தாள். “இந்தா.. நீ கேட்ட உன் ராசியான பேனா..” என அவளின் கைகளில் திணித்தேன். அவள் கண்கள் சிவக்க ஏதோ சொல்லவந்தாள். செண்பகம் எதுவும் சொல்லாமல் என்னைக் காப்பாற்றினாள் என்பதாலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளுக்கு அழிரப்பர் வைத்த பென்சில் ஒன்றைப் பரிசளித்தேன். ஒருமுறை அழகான மரப்பேனா ஒன்றை என்னிடம் கொடுத்தாள். அதில் அவள் பெயரை எழுதி முகர்ந்து பார்த்திருக்கிறேன். செண்பக வாசனை அதிலும் வந்தது. அன்று அவர்கள் மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அழுதபடி கை அசைத்தாள். அப்போது அவளின் அப்பா என் அருகில் வந்து, “இந்தப் பேனா எனக்கு ராசியானது. உனக்கு எப்படிக் கிடைத்தது?” எனக் கூறி, பறித்துச் சென்றுவிட்டார். அவள் தன் அப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் கொடுத்திருக்கிறாள் என்பதை என்னால் அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாததுதான் வாழ்க்கை. சாந்தியிடம் அன்று பேனாவைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவே இல்லை. அன்று அவள் கடைசியாகச் சொல்ல வந்த வார்த்தையை இப்போது கொட்டப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தது. “டேய்… இந்தப் பேனாவாவது உன்கிட்டயே இருக்கட்டும்” என்றாள். நான் அவளையே பார்த்து நின்றுகொண்டிருக்க, நான்கு கண்களிலிருந்தும் நீர் சுரந்தது. அதன் சுவை உப்பா? இனிப்பா?

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் – பிருந்தா சாரதி

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து, எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை நவம்பர் 4, 5 தேதிகளில் மழைக்கு ஊடாகவும் சிறப்பாக நடத்தின. அகிலனின் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. அவற்றுள், திரையில் அகிலனின் நாவல்கள் என்ற அமர்வில் கலந்துகொண்ட கவிஞரும் திரை இயக்குனருமான பிருந்தா சாரதி ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.   ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன். அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள், சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன. இங்கே நேற்றைய அமர்வில் பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள், தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார். அதேபோல, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், தான் அவரைச் சந்தித்தபோது, அகிலனின் ‘பொன்மலர்’ நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலைக் கண்டதாகக் கூறினார். ஒரு முதலமைச்சர் முதல் சிற்றூரில், கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் அகிலன் அவர்கள், ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள்,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை என, தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். சாதாரண மனிதர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள். ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது, பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவருடைய கதைகளின் நாயகர்கள், நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன், அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர். அகிலனின் கதைகள் ஒரு காலகட்டத்தின் முகம் என்றும் கூறலாம். சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களைத் தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களைத் தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்றவர். கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை, குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்துக் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய மனங்களில் நல்ல நெறிகளையும் நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

களங்கமின்மையின் சுடர்

களங்கமின்மையின் சுடர்

கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம் ஜூலை 5, கு. அழகிரிசாமி நினைவு நாள் சிறப்புக் கட்டுரை “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள்“. குழந்தைகள் உலகை, தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி,  ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன.  சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக, குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொடுகின்றன. கு. அழகிரிசாமியின் எளிமையான கலை வெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.   கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால், அன்றாட வாழ்க்கையின் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால், உற்று நோக்க நோக்க, அந்த ஓவியத்தின் அழகும் ஆழமும் கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்துகொள்ளும்போது வாசகன் திடீரென, தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னைச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி, வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும்.  அதுவரை கெட்டிதட்டிப் போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும். அப்போதுதான் வாசகன் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசக மனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின்  கதைகளில் பெரிய தத்துவ விசாரமோ, ஆன்மீக விசாரமோ செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால், அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளிய மொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ, யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச் சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக, குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும். ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை, கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும், தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார். 1950–ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே, மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன்தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும்போதே, இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும் அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும், அந்த ஊரிலேயே பெரியதனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது, உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து, பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை, கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட, மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள். ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில், மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம், ‘ஐயா வந்து விட்டாரா?’ என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து, அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து, எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச் சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். ‘அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு?’ என்று மங்கம்மாள் கேட்கிறாள். இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழை மரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா இல்லாத, அநாதையான, சிரங்கும் பொடுகும் நாற்றமும் எடுக்கும், தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து, தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு, தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும்போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது, ‘சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும்போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளைப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி. மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும்போது, ‘ராஜாவுக்கு என்ன செய்ய?’ என்று தாயம்மாள் குழம்பி நிற்கும்போது, மங்கம்மாள்தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்கச் சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது, பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை,“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப் போட்டியை நினைத்துக் கொண்டு,“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்…? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும்போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக் கதையை வாசிக்க வாசிக்க, வாசக மனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.  எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை, இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித் ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீக நேசத்தைச் சொல்லியிருப்பார்.  கு.அழகிரிசாமி ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில், தன்னுடைய அம்மாவுக்குக் கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக் காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைச் சிகரங்களில் ஒன்று  ராஜா வந்திருக்கிறார். வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்துவிடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். ஆனால், குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடுகட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும்; சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம். மிகச்சாதாரணமாக  ஆரம்பிக்கிற கதை, எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது, வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பதுதான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு, மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது. பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான்.