ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்