காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

‘வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க! பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்அதனிலுந் திறன் பெரிதுடைத்தாம்அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்அறவழி யென்று நீ அறிந்தாய்நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை!நெறியினால் இந்தியாவிற்குவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்துவையகம் வாழ்க நல்லறத்தே!’ என்று தமிழ்நாட்டு மகாகவி பாரதி காந்தியடிகளைப் புகழ்ந்துரைத்தான். இந்தப் பாடலில் ‘ஒத்துழையாமை ‘ என்று காந்தியப் போர் நெறியை பாராட்டிக் குறிப்பிடும் பாரதியார் தனது இந்தியா பத்திரிகைக் கட்டுரைகளில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போர்முறையை பாரதி வெகுவாக ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளுக்காகக் காந்தியடிகள் நடத்தும் போராட்டங்களைத் தமிழ்நாட்டு மகாகவி ஆதரிக்கிறான். ஆனாலும் இந்தப் புதிய அமைதிப் போர்முறைக்கு அவன் பழகாதவன் ஆயிற்றே! ஆகவே காந்தியைப் பசுவாகவும் தென்னாப்பிரிக்க ஏகாதிபத்திய அரசைப் புலியாகவும் சித்தரித்து இந்தியா பத்திரிகையில் கேலிச் சித்திரம் எழுதுகிறான். 1859இலேயே இந்தியர்களின் தென்னாப்பிரிக்கக் குடியேற்றம் தொடங்கியிருக்கிறது. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க விஜயம் 1893இல்தான். முப்பதாண்டுகளில் ஏகாதிபத்தியம் இறுகிப்போய் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளின்மீது கோடரி வைக்கும் காலத்தில்தான் காந்தியடிகளின் வருகை நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்த அவரது ஒத்துழையாமை, சட்டமறுப்புப் போர்களும் அவற்றில் அவர் அடைந்த வெற்றிகளும் உலகம் முழுதும் பிரசித்தி பெற்றன. ஒப்பந்தக் கூலிகளாக வந்து முப்பது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவையே தங்கள் வாழ்நிலமாக மாற்றிக்கொண்ட அந்த எளிய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்களை ஏகாதிபத்திய அரசு அவர்கள் தலையில் இறக்கியது. இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற காந்தியடிகளையே அந்த எளிய மக்கள் நம்பினர். 1909இல் இந்த மக்களின் பிரதிநிதியாகக் காந்தியடிகள் லண்டன் வரை சென்று ஏகாதிபத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்று வெறுங்கையுடன் திரும்பினார். நியாயத்தின் குரல்களுக்கு ஏகாதிபத்தியம் அத்தனை எளிதில் செவி சாய்க்குமா என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி திரும்பியவுடன் காத்திருந்து காலனி அரசு அவரைக் கைது செய்தது. அவ்வளவுதான், மக்களின் கொதிநிலை வெடித்தது. மிகப்பெரிய மக்கள் எழுச்சி கிளர்ந்து எழுந்தது. இந்த மக்கள் பேரலையின் சீற்றம் இந்தியாவுக்கும் தெரிந்த வேளையில் தமிழ்நாட்டு மகாகவி இந்தக் கேலிச் சித்திரத்தை எழுதுகிறான். போராட்டத்தை ஆதரித்து கட்டுரையில் சீறுகிறான். போராட்டத்திற்கு வீதியிலிறங்கி நிதி திரட்ட முனைகிறான். தன் பங்களிப்பாக ஐந்து ரூபாய் என்கிறான்.கேலிச் சித்திரத்துக்கு விளக்கத்தை ஒரு உருவகக் கதையின் தொனியில் எழுதுகிறான். பழைய புராணக் கதையை எடுத்துக்கொண்டு வருகிறான். காட்டு வழியில் ஒரு கொடும் புலியிடம் அகப்பட்ட பசுவானது, ‘ என் கன்றுக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டேன். அது பசியால் தவித்து நிற்கும். என் கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என்னை விட்டுவைக்க வேண்டும். சத்தியமாக நான் என் கடமை முடித்து உன்னிடம் திரும்பிவருவேன்’ என்றது. சொன்னபடி திரும்பியும் வந்தது. இதைத் தன் பாணியில் பாரதி சொல்லிவிட்டு இப்படி முடிக்கிறான். “பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு அதைத் தன்னுடைய சிநேகிதியான மற்றொரு பசுவிடத்தில் ஒப்புவித்துவிட்டு, புலியினிடத்தில் வந்து, ‘என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது. இதைக் கண்ட புலி ஆச்சர்யப்பட்டு ‘அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிலிருந்து பிராணனை விட்டது. இப்பசுவைப் போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீகாந்தி பிரபுவைத் தென்னாப்பிரிக்கப் புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? தென்னாப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்த புலியைப் பார்க்கிலும் கொடுமையாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக்கலிகாலத்தில்தான் காணலாம்.” காந்தியடிகள் ஒத்துழையாமையிலோ சட்ட மறுப்பிலோ அரசை எதிர்க்காத காலங்களில் அரசுடன் ‘நல்லுறவு பேணிய பசு’ என்பதை ‘ஏகாதிபத்தியப் புலிகள்‘ நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பதைப் பாரதி உணர்த்துகிறான்.1909இல் பாரதி, தான் பசுவாக சித்தரித்த காந்தியடிகளை 1919இல் நேரில் சந்தித்து அவரது ஒத்துழையாமையை ஆசிர்வதிக்கிறான். காந்தியடிகள் நமது புராதன தேசத்து மக்களின் விடுதலையில், புனரமைப்பில், நல்லிணக்கத்தில் தளர்வில்லாத அக்கறை கொண்டிருந்தார். தனது கருத்துக்களின் வழியாகவும் செயல்பாடுகளின் ஊடாகவும் அந்த அக்கறையை உறுதியுடன் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அதுவரை இருந்த போராட்ட முறைகளில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு நபர்களுமே பங்களித்தனர். காந்தி யுகத்தில்தான் தேசத்தின் மொத்த மக்களும் தேசிய இயக்கத்தில் வந்தனர். விடுதலை இயக்கத்தில் முழுமையான அர்ப்பணிப்பைத் தந்தனர். இத்தனை மக்கள் அவரைத் தொடர்ந்தபோதும் அவர் மீதான எதிர் விமர்சனங்களும் தொடர்ந்தன. அவர் விரும்பியும் சொல்லியும் வந்தபடியே அவர் நெடிய வாழ்வு வாழ்வதையே நிறுத்திவிடலாம் என்று அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் நினைத்ததை முடித்தார்கள். அந்தத் துன்பகரமான சம்பவம் நடந்து இன்றுடன் முக்கால் நூற்றாண்டு முடிந்து போனது. ஆனால் அண்ணலின் இருப்பு எத்தனை நியாயமானது என்று இன்றைக்கு நினைக்காமல் இருக்கமுடியவில்லை.