நீலகண்ட பிரம்மச்சாரி – 24

காட்சி 24 காலமும் இடமும் பாத்திரங்களும் : முந்தைய காட்சியின் தொடர்ச்சி (ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் உரையாடலைத் தொடர்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா விருந்தினர் விடுதிக்குப் போனதும் சர்தார் பட்டேலிடமும் மகாதேவ தேசாயிடமும் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இவரைச் சந்திக்க வேண்டும். தவறினால் நீங்கள் வருத்தமடைவீர்கள்’ என்று சொல்ல, ஆர்வம் கொண்ட அவர்கள் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள். என் சந்திப்பு பற்றிய விவரம் காந்தியடிகளிடம் சொல்லப்பட்டது. காந்திஜி என்னைப்பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, என்னைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது உடல் நலம் கருதி, அவரை நானே பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு, காந்தியடிகளை நான் சென்று சந்தித்தேன். காந்தியடிகளின் சந்திப்பு எனக்கும் அவருக்குமே மன நிறைவாக இருந்தது. நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. அவர் எனது ஆன்ம சோதனைகள் பற்றியே அதிகம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு விடைபெற்று வந்தேன். சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. நான் இங்கிருந்த சில நாட்களில், இந்த ஆசிரமத்தில் நான் கண்ட காட்சிகளும் உங்களைப் பற்றி நீங்கள் சொன்ன செய்திகளும் மிகுந்த வியப்பையும் பிரமிப்பையும் தந்தன. ஆனால் தன்னடக்கம் கருதியோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ நீங்கள் சொல்லாத செய்திகளையும் நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவை உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதையை இன்னும் உயர்த்தி வைக்கின்றன. ஓம்கார் சுவாமிகள் : அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள் இந்த சாமியாரைப்பற்றி? சங்கர கிருஷ்ணன் : உங்கள் மாசு மருவற்ற நல்லொழுக்கம் பற்றி, எந்தப் பொருளையும் உரிமை கொள்ளாது ஆசிரமவாசிகளிடமும் மக்களிடமும் பகிர்ந்துகொள்வது பற்றி, ஏழைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள பரிவையும் கருணையையும் பற்றி, உங்கள் பிரசங்கங்கள் பற்றி, பள்ளிக் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றி, பலப்பல செய்திகளை ஆசிரமத்திலும் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கேட்க முடிந்தது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) இதெல்லாம்தான் துறவியின் குணங்கள். (மீண்டும் சிரித்துவிட்டு) நான் நல்ல சாமியார்தான் அல்லவா? சங்கர கிருஷ்ணன் : (தானும் சேர்ந்து சிரித்துவிட்டு) கணக்கு எழுதுபவர், சரக்கு பிடிக்கும் ஏஜெண்ட், பத்திரிகைக்காரர், பிரசங்கி, புரட்சிக்காரர், எழுத்தாளர் என்ற பல முகங்களைக் கொண்ட நீங்கள், துறவியாக மாறிவிட்டபோதிலும் உங்களைப் பற்றிய புரட்சி முகமே எனக்குப் பிடிக்கிறது. ஏனெனில், ஒரு துறவிக்கு வேண்டிய தன்னலம் கருதாமை என்ற பண்பு நலன் உங்களிடத்தில் நிறைந்திருப்பதை, பழைய புரட்சிகரப் பாத்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் வரலாற்றில் வந்து போனவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் சித்திரங்கள் மிகச் சொற்பமானவை என்பதுதான் மிகப் பெரிய விசித்திரம். இன்று நான் விடைபெற்றுக் கொள்கிறேன் சுவாமி. இந்த ஆசிரமவாசிகளின் உபசரிப்பையும் உங்கள் அன்பையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன். மீண்டும் ஒரு நாள் வாய்த்தால் உங்களைக் காண வருவேன். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் வரும்போது உங்களை உபசரிக்க நான் இருப்பேனா என்று தெரியாது தம்பி. என் ஞாபகமாக நான் எழுதியிருக்கும் புத்தகத்தைத் தருகின்றேன். பெற்றுக்கொள்ள வேண்டும்.(சொல்லிவிட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தைதின் தலைப்பை வாசித்துவிட்டுத் தருகிறார்.) Confessions, Upadesh and Talks – இது நான் எழுதிய மூன்று நூல்களின் தொகுப்பு. Confessions on the way towards Peace – சாந்தியின் மார்க்கத்தில் மெய்ஒப்புதல் என்ற தலைப்பில் எனது புரட்சிக் காலத்திய நினைவுகளை எழுதியிருந்தேன். இதற்கு அரவிந்தர் முன்னுரை எழுதியிருக்கிறார். இந்தப் பழைய நினைவுகள், நான் துறவியாவதற்கு முன் எழுதியவை. துறவியானபின் இந்நூலை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. உங்களிடம் தந்த புத்தகத்தில் Confessions என்ற பகுதி அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே. Upadesh – உபதேஷ், என் ஆன்மீக சாதனங்களைப் பற்றியது. 1946இல் வெளியானது. Talks – பொறுக்கியெடுக்கப்பட்ட உரைகள் என்ற என் சொற்பொழிவுகளின் தொகுப்பு 1971இல் வெளியானது. சங்கர கிருஷ்ணன் : வந்தனம் சுவாமி.. வருகிறேன். (கும்பிட்டு விடைபெறுகிறார்) (திரை விழுகிறது. பின்னணியில் குரல் ஒலிக்கிறது) குரல் : நூறாண்டுக்கு முன்பு ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, கெட்டுப் பாழ்பட்டு’ நின்ற இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் வந்தவர்களின் வழிமுறைகளும் சுயநலமில்லாத செயல்பாடுகளும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் தங்கள் இருப்பினைத் தொடர, ஒவ்வொருவராக ஆன்மீகத்தில் சென்று ஆசிரம வாழ்க்கையை ஒரு மாற்றாகக் கொண்டிருக்கின்றனர். அரவிந்தர், வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்த வரிசையில் வந்தனர். பாரதி மறைந்தபோது, அவர் தீவிர அரசியலில் இல்லை. வ.உ.சி.யின் கடைசி நாட்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிவோம். ஆனால் 16 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தபின், துறவியான நீலகண்டர் பற்றி, அவர் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் சொல்லும் குறிப்புகள், அவர் மீதான ஏதோ ஒரு வெறுப்பு தடவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல மைல்கள் தாண்டித் தனது துறவு வாழ்க்கையை அவர் வைத்துக்கொண்டதைப் பார்த்தால், அவரும் அதை உணர்ந்திருந்தாரோ என்று தோன்றுகிறது. அவரது ஆசிரம வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டின் முதல் புரட்சிக்காரன் என்று சொல்லுக்குத் தகுதியான நீலகண்ட பிரமச்சாரியிடமிருந்தும் மக்கள் தொண்டுக்காகத் தனது ஆசிரம வாழ்க்கையை விதித்துக்கொண்ட ஓம்கார் சுவாமிகளிடமிருந்தும் நாம் விடைபெற்றுக்கொள்வோம். தியாகமும் தொண்டும் எந்தக் காலத்திலும் நினைவு கூரப்படும். வணக்கம். (நிறைவு) நிறைவும் நன்றியும் சுவடு நேயர்களுக்கு வணக்கம். 24 காட்சிகளாக தினமும் நான் எழுதிய நாடகத்தில், உடன் பயணம் செய்து உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கு நன்றி நவிலும் தருணம் இது. பாரதி ஆய்வாளர் ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் எழுதிய சித்திர பாரதி படித்தபோது, நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி அதில் அவர் எழுதியிருந்த ஒருபக்கக் கட்டுரைதான் எனது நாடகத்தின் ஆரம்பம் என்று சொல்வேன். அதிலிருந்து, இந்தப் புரட்சிக்கார நீலகண்டர் பற்றிய குறிப்புகளைப் பல நூல்களில் தொடர்ந்து வந்தேன். சிறு துளிகளாகக் கிடைத்த அவற்றைக் கோர்த்து இந்த நாடகத்தை உருவாக்கி முடித்தேன். இதை உருவாக்கும் முன் எனக்குச் சில யோசனைகளை வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு என் முதல் நன்றி. வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கையா முருகன் மற்றும் அவரிடம் என்னை ஆற்றுப்படுத்திய நெல்லை ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோருக்கும் எனது நன்றி. AITUC தமிழ் மாநிலத் தலைவர் தோழர் காசிவிசுவநாதன் நிறைய தகவல்களைத் தந்துதவினார். அவருக்கு எனது நன்றி. நாடகம் வளர்ந்துகொண்டிருந்தபோது சில தகவல்களை பகிர்ந்துகொண்ட கோவை வழக்கறிஞர், தோழர் ஞானபாரதி அவர்களுக்கும் எனது நன்றி. எப்போதும் என்னுடன் இருந்து, நாடக உருவாக்கத்தில் பயணித்த என் அன்புத் தோழன் கோவை பிரசன்னாவுக்கும் நாடக ஆக்கத்தில் தொடர்ந்து ஊக்கப்படுத்திய சுவடு ஆசிரியர் நல்லுவுக்கும் என் நன்றி. நாடகப் பக்கத்தின் முகப்புப் படத்தைத் வடிவமைத்துத் தந்த வாலறிவன் பதிப்பக நண்பர் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. நாடகத்தைத் தினந்தோறும் வாசித்தும் பகிர்ந்தும் நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டியும் என்னை உற்சாகப்படுத்திய சுவடு வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள் பல. நாடகம் உருவாகத் துணைபுரிந்த நூற்பட்டியல் :