எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

பள்ளிக் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள்

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றுக்கு அடுத்து முக்கியத் தேவை கல்வியும் சுகாதாரமும்தான். இதில் சுகாதாரமும் கல்வியின் அடிப்படையிலேயே அமைவதால் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றாகவே கல்வி விளங்குகிறது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு அடித்தளமாக அமைவது கல்வி மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியானது நம் சமூகத்தில் முற்காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமானதாகக் கைக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. பலகட்டப் போராட்டங்களை அடுத்து, சமூக நீதிக் கொள்கை நடைமுறைக்கு வந்த காலம் முதல் கல்வி அனைத்து சமூக மக்களுக்கும் உரியதாக மாறி இருப்பினும், அனைத்து மக்களையும் இன்னமும் கல்வி சென்றடையவில்ல என்பது பெருங்குறை. இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டில்கூட பள்ளிக்கல்வியைக்கூடத் தாண்டாத, ஏன், பள்ளிக் கல்வியே கிடைக்காத பல இலட்சம் குழந்தைகள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை அத்தனை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. கடந்து சென்றுவிடவும் கூடாது. இந்த சமூகத்திலிருந்து நாம் பெற்றவற்றுக்கான பலனை சிறிதளவேனும் திருப்பிச் செலுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பள்ளிக்கல்விதான் அனைத்து உயர் கல்விக்கும் அடித்தளமாக இருப்பதால், பள்ளிக் கல்வியை நாம் வலுவானதாகவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத வகையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போதுள்ள கல்வி முறையின் வாயிலாக நாம் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் கண்டிருந்தாலும், காலச் சூழலுக்கேற்ப நமது கல்வி முறையிலும் கல்வித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, கல்வியாளர் உமா அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகள்: 1. வகுப்புக்கு ஒரு ஆசிரியர்  ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மொத்தமுள்ள 23 பாடங்கங்களையும் அவர்களே நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. அந்த இருவரிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக இருப்பதால், அவருக்குப் பெரும்பாலும் மாவட்டக் கல்வி அலுவலகத்தின்  அல்லது ஏதேனும் ஒரு கல்வி அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்து, அலுவலகம் செல்லுதல் இப்படியான பணிகள் இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படுகிறது. எனவே, அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்தல் மிகவும் அடிப்படையான தேவை. 2. கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களை நியமித்தல் பெரும்பாலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அலுவலகப் பணிகள், கணினிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மாணவர்களுக்கான கற்பித்தலில் பெரும் பாதிப்பு உண்டாகிறது. வருடத்தின் பெரும்பான்மை நாட்களோ அல்லது முழுமையும்கூட  ஆசிரியர்கள் வகுப்பிற்குச் செல்வதே இல்லை. வளர்ந்த மாணவர்கள் அவர்களாகவே படித்துக் கொள்வார்கள் என்று விட்டுவிடுகிறார்கள். இதனால் தரமான கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான அலுவலர்களைத் தனயே நியமிக்க வேண்டும்.   3. கற்றலை மையப்படுத்தும் கல்வி இன்றைய சூழலில், கற்பித்தல் பணிகள் பெரும்பாலும் தேர்வை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் பள்ளிகளைப் போலவே தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கில் கொண்டு அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து கற்பிக்கப்படுகிறது. அந்தக் கற்பித்தலும் பெரும்பான்மையாக பத்தாம் வகுப்பில் 35 மதிப்பெண்கள், பன்னிரண்டாம் வகுப்பில் 70 மதிப்பெண்கள் என்ற கணக்கீட்டின்படி, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி (கோச்சிங்)  மட்டுமே தரப்படுகிறது என்றே கூறலாம். இந்த நிலை மாறவேண்டும். குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பாடப்பொருள் அறிவு இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது கற்பிக்கப்படுவது இல்லை. அதனால், கற்பித்தல் என்பது மதிப்பெண் சார்ந்து இல்லாமல் அறிவு சார்ந்து இருக்க வேண்டும். 4. திறன்சார் கல்வி ஊக்குவிப்பு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாட்டு, ஓவியம், நெசவு, கைத்தொழில் முதலான ஆசிரியர்கள் நியமனம் முன்பு இருந்தது. தற்போது சில காலமாக பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றால் அவர்களோடு சேர்ந்து பணியிடமும் காணாமல் போய்விடுகிறது. புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. தையல் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர் அதைச் செய்யாமல், அங்கு தமிழாசிரியர் பற்றாக்குறை இருந்தால் அதைச் செய்கிறார். இப்படி அவரவர் பணியை அவரவர் செய்யும் நிலை இல்லை. பாடங்கள் கடந்த இதர திறன்களை மாணவர்களிடம் உருவாக்குவதும் இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்தச் சூழல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாற வேண்டும். 5. கல்வி மதிப்பீட்டு முறை தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற CCE – Continuous and  Comprehensive  Evaluation முறை கல்வி உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதலால் 2013 லிருந்து பின்பற்றப்படுகிறது. மிகச்சிறப்பான மதிப்பீட்டு முறை என்றாலும் ஆசிரியர்களுக்கும் இது குறித்த முழுமையான புரிதல் இல்லை. வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள் வழி காட்டுவதே இல்லை. வெறுமனே 40 மதிப்பெண்கள் இலவசமாகப் போடப்படுவதுபோல் இங்கு ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு முறையின் மற்றொருபுறம் பள்ளிக்கல்வி மிகவும் சவாலான விஷயங்களைச் சந்தித்து வருகிறது. இந்த மதிப்பீட்டு முறை குறித்து பெற்றோர்கள் யாருக்கும் எந்தவிதப் புரிதலும் கிடையாது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளுக்கு வரும் 90 சதவீத குழந்தைகள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் வசதியற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோருக்கு வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கே நேரம் போதுமானதாக இருக்கும்பொழுது, குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வு செய்யவோ அக்கறை கொள்ளவோ  அவர்களுக்கு நேரமோ புரிதலோ கிடையாது என்பதுதான் நிதர்சனம். இதனை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இங்கு நடப்பதோ வேறு. “எங்களது கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார்கள். மாணவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்கிறார்கள். பெற்றோர்களும் சொல்லித் தருவது கிடையாது. அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று ஆசிரியர்கள் அரசின் பக்கம் கை காட்டுகின்றனர். ஆனால், உண்மையாகவே எதுவுமற்ற குழந்தைகளுக்கு கற்பித்தலின் பொருட்டுதான் நாம் சம்பளம் பெறுகிறோம். ஆகவேதான்  ஆசிரியப்பணி அர்ப்பணிப்பு மிக்க பணி என்று கூறுகிறோம். ‘இந்தப் புரிதலுடன் ஆசிரியர்கள் தற்போது உருவாக்கப்படுகிறார்களா?’ என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே, இந்த மதிப்பீட்டு முறையில் இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்ப அரசு முனைய வேண்டும். கற்றுத்தேர்ந்த , இது குறித்து புரிதல் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க வேண்டும். இது குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வெளிப்படையாக வரவேற்று இதனைச் சரி செய்ய வேண்டும். நமது கல்வியில் மிகப்பெரிய ஒரு பின்னடைவு இருப்பது மதிப்பீட்டினால் மட்டும்தான். ஏனென்றால், அனைத்து மதிப்பீடுகளும் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுவதால், குழந்தைகளின் உண்மையான கற்றல் திறன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. இந்த முறையை மிக மிக மிக அவசியமாக, அவசரமாக அரசு கையில் எடுக்க வேண்டும். ஏனென்றால், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இப்படியே போய் விட்டது. பள்ளிக் கல்வியை முடிக்கக்கூடிய குழந்தைகள் அத்தனை லட்சம் பேரும் இதில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வெளிவரக்கூடிய, வெளிவந்து இருக்கக்கூடிய ஒரு சூழல் இங்கு நிலவுகிறது. 6. நிதி ஒதுக்கீடு    SSA, RMSA திட்டங்கள் தற்போது  சமகிரா சிக்‌ஷ அபியானாக மாறிப் போன திட்டங்களின் அடிப்படையில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் கல்விக்காக  ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி மிகச் சரியாக வந்து சேர்கிறதா என்றால் அதில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திலும் ஆயிரக்கணக்கான கோடி கல்வி நிதி தமிழகப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் கையேந்தி அவரவர் பள்ளித்தேவையை நிறைவு செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் கற்பித்தல் பணியை முழுமையாகக் கையிலெடுக்க வேண்டும். கட்டமைப்பு சார்ந்த மற்ற நிதி நிலை சார்ந்தவற்றை அரசு மட்டுமே செய்யவேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே நிதி ஒதுக்காமல், ஒவ்வொரு பள்ளிக்குமான தேவைக்கேற்ப நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேவைக்காக ஒரு பள்ளிக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஏற்கனவே அந்தப் பள்ளியில் அந்தத் தேவை நிறைவடைந்திருந்தால், அந்த நிதியை வேறு பள்ளிக்குக் கொடுக்கலாம். திட்டங்களுக்காக செலவிடப்பட கூடிய தொகையை வேறுமாதிரியாக செயல்படுத்த முனையலாம். உதாரணமாக, வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் தற்போது மூடப்பட்டு இருப்பதால் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு, குறைவான அளவு அச்சடிக்கப்பட வேண்டும். பல கோடிக்கணக்கில் செலவு செய்து புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்கள் படிப்பது இல்லை. கற்பித்தலும் கற்றலும் நடைபெறவே இல்லை. ஆகவே, பாடங்களைக்  குறைத்து சிறிய அளவில் புத்தகங்களை அச்சடித்து வழங்குவது  மிகவும் நல்லது. 7. மழலையர் கல்வி  தமிழகப் பள்ளிகளில் ஏறக்குறைய  2800  பள்ளிகளில் மட்டுமே மழலையர் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவார்கள். மேலும் மழலையர் பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளையும் முறையாகச் செய்து தர வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான  ஆசிரியர் நியமனம் என்பது தற்போது அவசர காலமாக இடைநிலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்து மழலையர் வகுப்பு குழந்தைகளை கவனிக்க ஆணை பிறப்பித்து அனுப்பினர். இதற்கு மாற்றாக மாண்டிசோரி கல்வி முடித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் மாண்டிசோரி கல்வி முறையைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை உருவாக்கும் பணியிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே மாண்டிசோரி கல்வி முடித்து பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திரும்பக் கிடைக்கும். அதனால் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கையும் எட்ட முடியும். அங்கன்வாடிப் பள்ளிகளை தொடக்கக் கல்வித்துறையுடன் இணைத்தால், இந்த இடைவெளியில் இருக்கும் சில சிக்கல்கள் தீரும். அதோடு சத்துணவு திட்டமும் பள்ளிக்குள் இருந்தாலும், பள்ளி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் இல்லாததால் அங்கும் பிரச்சனை வருகிறது. அதையும் பள்ளிக்கல்வித் துறைக்குள் இணைக்க வேண்டும்.  தொடரும்… கட்டுரையாளர்: உமா, கல்வியாளர்