வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்
வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு 1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை இரண்டும் தன்னாட்சிக் கல்லூரிகள், அதிலும் மெஜுரா காலேஜில் டபிள் மேஜர், கெமிஸ்ட்ரி பேராசிரியர்களாக நண்பன் விஸ்வநாத்தின் மாமா நடராஜன், மற்றொரு நண்பர்களான கோபால் – வாசு என்ற இரட்டையர்களின் மாமா மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இருந்தது போன்ற காரணங்களால் நான் பிடிவாதமாக தியாகராஜர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் தெருவினரில் 99 சதவிகிதத்தினர் தெப்பக்குளம் பக்கம் போனதேயில்லை. நான்தான் முதல் ஆள். நான் சேர்ந்ததால் கண்ணனும் அங்குதான் சேர்ந்தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவனும் சேர்ந்தான். கூடவே மேலே சொன்ன கோபால் – வாசு இரட்டையர்களும். படிப்பு ஒரு பக்கம், வாசிப்பு ஒரு பக்கம் என்று ஓடிக் கொண்டிருந்தது. மாதநாவல் ஒன்றில் பாலகுமாரனின் ஏதோ ஒரு நதி, சுப்ரமண்ய ராஜுவின் எங்கோ ஒரு இரவில் இரண்டையும் சேர்த்துப் போட்டுக் கலக்கினார்கள். இந்துமதி ஆசிரியராக இருந்த பிரியம்வதா காமிக்ஸில் சுஜாதாவின் நைலான் கயிறு வந்தது. ராணிமுத்துவில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும் சிறுவர்களை வைத்து சுஜாதா எழுதிய அன்று உன் அருகில் வந்தது. மகரயாழ் மங்கை, ஆலவாயழகன், திருச்சிற்றம்பலம் என்று வரிசையாக ஜெகச்சிற்பியனின் சரித்திர நாவல்களாக அவரது ஒரு ரசிகரிடமிருந்து ஓசி கிடைக்கும். வேறொரு புறம் அலைஓசை, பார்த்திபன் கனவு என்று ஓசி கிடைக்கும். புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பற்றி சொல்லவே வேண்டாம். எங்கும் கிடைக்கும். இன்ஸ்பெக்டர் சிங், ஏதோ ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு துப்பறிவார். இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. கண்ணனின் அத்தை வீடு அப்போது கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் அனுமார் கோவிலுக்கு எதிரில் இருந்தது. அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் மாத நாவல்கள் வாங்கிக் கொண்டு அப்படியே கண்ணனின் அத்தை வீட்டிற்கும் போய் வருவோம். அந்தப் பெட்டிக்கடையில் கல்பனா இதழில் சுஜாதாவின் மண்மகனை வாங்கி கடை வாசலிலேயே நின்று படித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. கண்ணனின் அத்தை பையன் ஐஓபியில் வேலை பார்த்தார். அவருக்கு 3 – 4 வயதில் ஒரு பெண்குழந்தை. அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்த முறை ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. வியாழக்கிழமை தோறும் மாலையில் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து அதை பையன்களுக்குத் தந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரோ அந்த மன்னிக்கு பரிகாரம் சொல்ல, அவர் வாராவாரம் பூஜை செய்ய ஆரம்பித்தார். பாயசம் சாப்பிட நான், கண்ணன், ரவி, பாலன், கோபால், வாசு எல்லோரும் போவோம். கடைசியில் இரண்டாவதும் பெண் குழந்தைதான் பிறந்தது வேறு விஷயம் ! ஆனால், அவர்கள் வீட்டில்தான் எனக்கும், கண்ணனுக்கும் வாசிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு அறிமுகம் கிடைத்தது. நாங்கள் பூஜை முடியும் சமயத்திற்குப் போவோம். பத்து நிமிடங்கள் காத்திருப்பதாகவே பெரும்பாலும் அமையும். அந்த வீடு ஒரு வக்கீலுக்குச் சொந்தமானது. டிவிஎஸ் கோவாப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்க்கு அடுத்த வீடு. முன் போர்ஷனில் வக்கீல் வீடு. பின் போர்ஷன்களில் கண்ணன் அத்தையும், மற்றொரு குடும்பமும் குடியிருந்தார்கள். பூஜை நேரத்தில் வக்கீல் மாமியும், மற்றொரு குடும்பத்தின் மாமியும் வருவார்கள். அப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்து விட்டதால் இயல்பாகவே எதிர்பாலினரை கவனிக்கும் குறுகுறுப்பு வந்துவிட்டது. கண்ணன், கோபால், வாசு ஆகியோர் மனைமாட்சியிலிருந்து நேரே எழுந்து வந்தவள் போல் இருந்தாள் என்பாரே சுஜாதா, அது மாதிரி மனைமாட்சி லுக்கில் யாரேனும் இருந்தால் உருகிவிடுவார்கள். நான், ரவி, பாலன் மூவரும் ஜெயமாலினி மாதிரி இருப்பவர்களைத் தான் பார்ப்போம். வக்கீல் மாமி நடிகை சுமித்ரா ஜாடை. மற்றொரு மாமி சி.ஐ.டி.சகுந்தலா ஜாடை. சகுந்தலா மாமியின் கை உருண்டு திரண்டு பயில்வான் மாதிரி இருக்கும். மாமி குட்டைக் கை ரவிக்கை போட்டு கையின் திண்மையை இன்னும் சற்று enchance செய்வாள். சி.ஐ.டி. சகுந்தலா மாமி அவ்வப்போது என்னிடம் “நீங்க தெலுங்காளா? மராட்டிலதானே ராவ்னு வெப்பா ! கூடப் பிறந்தவா எத்தன பேர்“? என்பது மாதிரி சி.ஐ.டி கேள்விகள் கேட்பாள். நானும் மாமி,மாமி என்று ஓவராக பாசம் பொங்க, குஷியாக பதில் சொல்வேன். சுமித்ரா ஜாடை மாமியை நான் கண்டு கொண்டதே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடியே சி.ஐ.டி.சகுந்தலா மக்கு. வக்கீல் வீட்டு சுமித்ரா மாமி அறிவாளி. அதிலும், அந்த மாமி வண்ணதாசன் படிப்பவராக இருந்தார். ஒரு சுபயோக, சுபதினத்தில் கண்ணனுக்கு வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தைத் தந்தாள். அதற்கு முன்பே அன்னம் நவ கவிதை வரிசையின் புலரி மூலமாக கல்யாண்ஜியாக அவரை எங்களுக்குத் தெரிந்தாலும், அவரது சிறுகதைகளைப் படித்ததில்லை. உண்மையிலேயே எங்கள் வாசிப்பைப் புரட்டிப் போட்ட எழுத்து அது. அந்த தனுமையை வாழ்க்கையில் மறக்க முடியுமா? தனலட்சுமியையும், ஞானப்பனையும். டெய்சி வாத்திச்சியையும், சைக்கிளில் வரும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணையும் கண் முன்னே நிறுத்தின எழுத்து. அவர்கள் எல்லோருமே நிஜம். அது வண்ணதாசனின் கல்லூரி நாட்களின் கதை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். ஞானப்பன் அவரது அறை நண்பராம். இந்த நல் உணவை தந்த நம் இறைவனைப் பாடுவோம் என்ற பாட்டும் நிஜம். நிஜம் தவிர வேறில்லை என்று சொல்லியிருந்தார் வண்ணதாசன். கண்ணனும், நானும் வண்ணதாசனைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தோம். எத்தனை கதைகள்… எல்லாமே மனதுக்கு மிக நெருக்கமாக, என் கதையாக, அல்லது எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர் ஒருவரின் கதையாக … இதை எழுதும் போதே சில பழைய பாடல்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது… அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா? அன்பே வா…. அழைக்கின்ற தெந்தன் மூச்சே…, தென்றலே நீ செல்வாய் எங்கும் நில்லாமல் செல்வாய்…. என்று இலங்கை வானொலியை நினைவூட்டும் அற்புதமான கதை… அதிலும், நீ வரவில்லையெனில் ஆதரவேது… என்ற பாடல்… கண்டசாலா மாதிரி பாடும் சத்யம்… கடைசியில் கதையின் முடிவில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…. இந்தப் பாடல்களில் எதை நினைத்தாலும், அல்லது கேட்டாலும், அந்தக் கதையும், வண்ணதாசனும் தானே நினைவிற்கு வருகிறார்கள் ! தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களில் வரும், “எங்க அம்மையில்ல”. படிக்கும் போது அப்படிச் சிலிர்த்திருக்கிறேன். பின்னாளில் பலரும் மோகமுள்ளின் ”இதுக்குத்தானா பாபு?” என்ற வரியை சிலாகிக்கும் போதெல்லாம், என் மனம் டெய்சி வாத்திச்சியின், “தனலட்சுமி தான் வேணுமாக்கும்?” என்ற கேள்வியை நினைத்துக் கொள்ளும். கடைசி வரியில் ஒரு அழுத்தம் என்ற ஒரு அம்சத்தின் மீது எனக்கு ஒரு தனி காதல் வரக் காரணமாக இருந்தது வண்ணதாசனின் பல கதைகளின் கடைசி வரிகள்தான்.. தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது…என்றொரு கடைசி வரி. போலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க்கொண்டே இருப்பவள் என்று அவளைப் பற்றித் தோன்றியது… என்றொரு கடைசி வரி.. வீட்டுக்கு ஒரு நாள் வாயேன் ராஜீ என்றேன். வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை. என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில் சந்தோஷம், என்று சொன்னாள். அது இவ்வளவு பெரிய விஷயமாகி விட்டிருக்கிறது அவளுக்கு ! என்றொரு கடைசி வரி.. ஈஸ்வரி ஓடையில் நின்றுகொண்டிருந்தாள், என்றொரு கடைசி வரி. எதை எழுத வேண்டும் என்கிறது போல, எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா? எனக்கும் கொஞ்சம் புரிந்து எழுதுகிற வயதாகிவிட்டதில்லையா இப்போது? என்றொரு கடைசி வரி. இவை கடைசி வரிகளல்ல உண்மையில் வேறொரு கதையின் ஆரம்ப வரிகள் என்பதைப் புரிந்து படிக்கும் வயது எனக்கு வந்தபோது, நான் நல்ல வாசகனானேன்! [எனது ‘வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும் தொகுப்பிலிருந்து’] என் அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கமும். முகப்பு ஓவியம்: கனலி கட்டுரை: ச. சுப்பாராவ், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்