மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள்

மகாபாரதத்தை, பலர் பலமுறைகளில் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். பல விதங்களில் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். மகாபாரத மீள் வாசிப்புகளும் விவாதங்களும் பாரதி தொட்டு, தற்காலத்தில் பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று நீள்கிறது. அவ்வகையில், எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் ஞானபாரதி சின்னச்சாமி அவர்கள் மகாபாரத உபகதைகளை எடுத்துக்கொண்டு, மகாபாரதக் காலத்துச் சட்ட விதிகளை – சமூக விதிகளை விவாதிக்கிறார். அவரது விசாரணைகள் சுவடு இணையத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடராக வெளியாகும் – சுவடு ஆசிரியர் குழு 1. அறிமுகம் இதிகாசமும் உபகதைகளும் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியப் படைப்பை, அதன் வேறொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டுவதற்கான சிறு முயற்சி இது. இதிகாசம் என்பதற்குப் பல அர்த்தங்களும் இலக்கணங்களும் சொல்லப்படுகின்றன. மதவாதிகள், கடவுள் ஒரு நோக்கத்திற்காக மனித உருவில் பூமிக்கு வந்து, வாழ்ந்து, திரும்பவும் மேலுலகம் செல்லும் வரையில் உள்ள கதையைச் சொல்வது இதிகாசம் என்று சொல்கின்றனர். இதிகாசங்கள், அவை இயற்றப்பட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சமூக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பண்டைக் கால வாழ்க்கை முறையைப்பற்றி அறிந்துகொள்கிற அக்கறையும் முனைப்பும் இல்லாதவர்களோ, ‘இதிகாசம் என்பது ஆபாசக்குப்பை’ என்று முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறார்கள். மகாபாரதத்தை, அதன் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் கதாபாத்திரங்களையும் அதில் உலவும் எண்ணிலா நுட்பங்களையும் மனதில் கொண்டு, அதற்கு இணையான படைப்பு எதுவுமில்லை என்பதால் அதை இதிகாசம் என்று கொண்டாடுவோரும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், ஒரு இதிகாசம் என்பது அதில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும், ‘பின்னிட்டு விளக்கவும் முன்னிட்டு விளக்கவும்’ தக்க சுவாரசியமான உபகதைகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதும், அதுபோன்ற உபகதைகளைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கத்தக்க இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதுமே இதிகாசத்தின் பல இலக்கணங்களில் முக்கிய இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வாறே மகாபாரதத்தில் பலப்பல உபகதைகள் சேர்க்கப்பட்டும் உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்ட உபகதைகள் மூலமாக, மகாபாரதக் காலத்தின் சமூக விதிகளை உசாவிப் பார்க்க முடிகிறது என்பதும் அவை மீறப்பட்ட தருணங்களை ஆராயவும் முடிகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமின்றி, அந்த ஆய்வுகளின் வழியாக, இன்று இதிகாசங்கள் சொல்வதைத் தங்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக்கொண்டு, பாரத கலாச்சாரம் என்பதாக நடப்பியலில் பரப்புவதை மறுக்க முடியும். இராமாயாணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுமே, மக்களால் தக்க இடங்களில் எண்ணற்ற உபகதைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மக்கள் இலக்கியம் என்பது என் அப்பிப்பிராயம். அத்தகையதொரு இதிகாசத்தை எவ்வளவு பெரிய மூளை படைத்த அசுர எழுத்தாளனாலும் இன்றைக்கு எழுதிவிட முடியாது என்பதும் அவ்வளவு உபகதைகளை தக்க இடத்தில் சேர்க்க முடியாது என்பதும் பல படைப்பாளிகளின் பிரதானமான வாதம். இன்று எந்த ஒரு தனிப் படைப்பாளியாலும் அதுபோலத் தன் படைப்பில் நிகழ்வுகளின் காரண காரியத்தை விளக்க உபகதைகளை சேர்க்கத்தக்க இடத்தை உருவாக்கித் தரமுடியாது என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒளிந்திருக்கும் மகாபாரதக் காலச் சமூக விதிகளைப் பார்க்கலாம், வாருங்கள். 2. பெண்கள் இரகசியத்தைக் காப்பதில்லையா? நாடு முழுவதும் பேசப்படும் கர்ணனைப் பற்றிய உபகதைகளைச் சேகரித்தால், அது ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். அவற்றில் மிகப்பல வியாசரே சேர்த்தவை. மற்றவை, தங்கள் கற்பனா வளத்தின் மூலம் யாரால் சேர்க்கப்பட்டது என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாத வண்ணம் மக்கள் சேர்த்தவை. கிருஷ்ணனின் அண்ணனான பலராமனின் மகள் வத்சலாவின் திருமணத்திற்கு, துரியோதனன் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறான். அதில் முக்கியமானது கண்ணாடி பதித்த ஒரு மாயப் பேழை. அந்த மாயப்பேழையின் சிறப்பு என்னவென்றால், அந்தப் பேழையின் மேல் யார் ஏறி நின்றாலும் அவர்கள் எவ்வளவு திடசித்தத்தோடும் கட்டுப்பாடோடும் இருந்தாலும் அவர்களுடைய உள்மனத்தில் வெளி உலகம் அறியாவண்ணம் மறைத்து வைத்திருக்கும் பிடித்தமான நபர் அல்லது ரகசியத்தை அது வெளிப்படுத்திவிடும். திரௌபதி மாயப் பேழையில் ஏறி நிற்க மிகவும் தயங்கினாள். மிகவும் வற்புறுத்தி மாயப்பேழையில் திரௌபதியை ஏறி நிற்கவைத்தபோது மாயப் பேழையின் கண்ணாடியில் வசீகரச் சிரிப்புடன் கர்ணன் தோன்றினான். கர்ணனைப் பார்த்ததும் திரௌபதி வியர்த்து விறுவிறுத்து மயங்கிவிடும் நிலைக்குப் போய்விட்டாள். அன்றுதான் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரௌபதி, கர்ணனையும் காதலிக்கிறாள் என்ற மர்மம் அம்பலமாயிற்று. இன்னொரு உபகதையைப் பார்ப்போம். கர்ணன் படுகளத்தில் வீழ்ந்த பின்புதான், குந்திதேவி ‘மகனே.. என் மகனே..’ என்று அரற்றிக்கொண்டு, அழுது புலம்பியபடி கர்ணனைத் தேடிவருகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்கு, தங்கள் தாய் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பதும் அதனால் கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்பதும் தெரியவந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. கர்ணன் பாண்டவர்கள் அனைவருக்கும் மூத்தவன். துரியோதனனின் உயிர் நண்பன். ஆகவே ஒரு வாதத்திற்காக, ‘கர்ணன் தங்களுடைய அண்ணன் என்று தெரிந்திருந்தால் பாண்டவர்களும் ராஜ்ஜியத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்கள். துரியோதனனும் மனமுவந்து ராஜ்யத்தைக் கர்ணனுக்கு விட்டுக் கொடுத்திருப்பான்’ என்று வைத்துக்கொண்டால், குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு தரப்பிலும் 10 பேரைத் தவிர போரில் பங்குகொண்ட அனைவரும் மரணமுற்று இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்காது. குந்திதேவி இந்த ரகசியத்தைக் கர்ணனின் மரணத் தருவாய் வரையில் பாதுகாத்து வைத்திருந்ததால்தான் இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டது என்பது தருமபுத்திரனைக் கடும் சினம் கொள்ள வைத்தது. ஏனெனில், ‘பட்டத்திற்குரியவனைக் கொன்றுவிட்ட பின்பு பெற்ற வெற்றியினால் என்ன பயன்?’ என்று தருமன் மனம் கொந்தளித்தது. அதனால் ‘பெண்களுடைய மனத்தில் இனி ரகசியமே தங்கக் கூடாது’ என்று தருமன் குந்தி தேவியைச் சபித்தான் என்பது ஒரு உப கதை. பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பது பிற்போக்கான கருத்துதான். ஆனால் அதைக் கல்வி அறிவு இல்லாத நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், வெறும் போகப் பொருளாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்த பெண்கள், பொழுதுபோக்காக அரட்டை அடிக்கும்போது, ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதாகப் பார்க்கிறோம். குந்திதேவி இந்த ரகசியத்தை நெடுங்காலம் பாதுகாத்து வந்ததற்குக் காரணம், அது குந்திதேவியின் ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பதுதான் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமாகும். இந்த இரண்டு விஷயங்களையும் இவ்வளவு விரிவாகச் சொல்லக் காரணம், இவை இரண்டும் இரு சுவாரசியமான உபகதைகள் என்பதுதான். ‘பெண்களின் மனத் தில் ரகசியம் தங்கக்கூடாது’ என்று தர்மபுத்திரன் கொடுத்த சாபம் பாலியல் சம்பந்தப்படாத விஷயங்களில் மட்டுமே பலனளித்தது போலும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் எனது நண்பர். (தொடரும் )