தேச பக்தக் கலைஞர்

மதுரகவி பாஸ்கர தாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது.கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் படடியலில் பிரதானமாக முன்னால் வருபவர் கலைஞர் மதுரகவி பாஸ்கர தாஸ். மதுரகவி பாஸ்கர தாஸ் தமது படைப்பாற்றலால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அக்கினிப் பொறி தட்டும் தேசிய எழுச்சிப் பாடல்களால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்களிடம் தேசபக்த உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தார்.பிரிட்டிஷ் அரசு நாடகத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது பக்திப் பாடல்கள் என்ற போர்வையில் விடுதலைக் கிளர்ச்சிப் பாடல்களை உருவாக்கினார். இவர் எழுதிய பாடல்களை கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா போன்ற கலைஞர்கள் மேடைகளில் பாடிவந்தனர். 1892ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் பாஸ்கர தாஸ். இவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி. இருள் நீக்கி மக்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைச்சாமி என்று இவரது பெற்றோர்கள் பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ! நாகலாபுரத்தில் நான்காம் வகுப்பு வரை படித்தபிறகு, தனது பாட்டியின் ஊரான மதுரைக்குச் சென்றார். அங்கு ஆரம்பத்தில் கட்டட வேலைக்குச் சென்ற இவர், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றில் கலந்துகொள்வதில் நாட்டம் கொண்டார். சிறுவயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும் பாடுவதிலும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். சிலகாலம் மதுரை அனுமந்தராயன் கோயில் தெருவில் வாழ்ந்திருந்தபோது, அதே தெருவில் வசித்து வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இவரிடம் பாடல்களைக் கேட்பார். இவர், 11 நாடகங்கள் மற்றும் 110 நாட்டுப்பற்றுப் பாடல்களை இயற்றியுள்ளார். மதுரை திருநகரில் சித்திரகலா என்ற புகைப்பட நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு ஏழு ஆண்கள், 7 பெண்கள். மொத்தம் 14 குழந்தைகளில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துவிட்டனர்.ஐந்தாவது மகளின் பெயர் சரஸ்வதி. இவரது கணவர் எம். எஸ். சண்முகம் நில அளவைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது எழுத்து மற்றும் நாடகத்துறையில் செயல்பட்டுவரும் தமிழ்ச்செல்வன், கோணங்கி, பூபதி ஆகியோர் இவர்களது மகன்களே. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மகாகவி காளிதாஸ் பற்றி, தமிழில் முதல் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற தேசபக்திப் பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார் பாஸ்கர தாஸ். இதன்மூலம் முதல் சினிமா பாடலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார். திரைப்படங்களாக இருந்தாலும் நாடக மேடைகளாக இருந்தாலும் இவரின் பாடல்கள் தேசபக்திக் கனலை ஊட்டி வளர்க்கும் பாடல்களாகவே இருந்தன. இவரது பாடல்களில் உள்ள கருத்துகள் பாமர மக்களுக்கு உதவிகரமாக இருந்தன. திரையில், திரை இசைப் பாடல்களில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்துப் பாடல்கள் இயற்றிக்கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்பாடல்களை இயற்றியவர் இவர். இவரது பாடல்களால் மக்கள் எழுச்சிபெற்று வருவதைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், இவர்மீது பல வழக்குகளைத் தொடுத்தபோது அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைப் பாராட்டி முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ் என்று பெயரிட்டுப் பெருமிதம் கொண்டார். எட்டையபுரம் மன்னர் இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் விளைநிலங்களைப் பரிசாகக் கொடுத்தார். இவரது பெருமையை கவியோகி சுத்தானந்த பாரதியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், அவ்வை தி.க. சண்முகம், தீரர் சத்தியமூர்த்தி என பலதுறைப்பட்ட பெருமக்களும் பாராட்டியுள்ளனர். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் நூலாக வெளிவந்திருக்கிறது. 1926ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் முதன்முதலாக நாடக நடிகர்களுக்காகத் தொடங்கப்பட்டு அதன் முதல் தலைவராக மதுரகவி பாஸ்கரதாஸ் இருந்தார். மதுரையில் தொடங்கி, பின்னாளில் சென்னையில் நாடகச் சங்கம் தொடங்குவதற்கு இப்பெயரைப் பயன்படுத்த அனுமதி கேட்டபோது மதுரை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். தேசபக்தர், கவிஞர், பாடகர், நடிகர், தொழிற்சங்கவாதி என பன்முகத்தன்மை கொண்ட மதுரகவி பாஸ்கரதாஸ், மகாத்மா காந்தியின் பாசத்திற்குரியவர். சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற தமிழ்நாட்டு தேசபக்தர்களைப் பற்றி வரலாற்றில் குறைந்த பதிவுகளே உள்ளன. அந்த வரிசையில் மதுரகவி பாஸ்கர தாஸூம் இருக்கிறார். இது அவலமல்லவா! இந்த அவலத்தைப் போக்க மதுரகவி பாஸ்கரதாஸிற்கு மணி மண்டபம் கட்டி இவரது வரலாறு தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியச் செய்தல் வேண்டும்.