தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

உயர் கல்வித்துறையில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மத்தியில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்துத் தற்போது மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. 63 பக்கங்களைக் கொண்ட NHEQF (National higher education qualification frame work) என்று சொல்லக்கூடிய தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையானது, அனைத்து உயர்கல்வி அமைப்புகளையும் ஒற்றை அமைப்பின் கீழ் கொண்டுவந்து HECI (Higher Education Commission of India) எனப்படும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாகவும் உள்ளது.  இதனைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போதைய தமிழக அரசானது மாநிலத்திற்கென்று தனியான தனித்துவக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதோடு அல்லாமல், தமிழ்நாட்டிற்கான தனியான கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அதில் கல்வியாளர் ஜவகர்நேசன் தமிழ்நாடு கல்விக் கொள்கை வரைவுக் குழுவிலிருந்து வெளியேறியது, தமிழ்நாட்டு  மக்களிடமும்  கல்வியாளர்களிடமும் கல்விக் குழுவின் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர்கல்வித் துறையில், குறிப்பாக NEP 2020இன்  ஒரு அங்கமாக விளங்கும் திறன் மேம்பாடு (Skill Development) குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் சந்தைக்கு (Labour Market) மாணவர்களைத் தயார்படுத்துதல் என்ற திட்டத்தினை முன்னிறுத்துகிறது. அத்தகைய திறன் மேம்பாடு (Skill Development) என்பது எத்தகைய சூழலை மாணவர்களிடம் உருவாக்கும் என்பதற்கான விடையை தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபடவில்லை. தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் என்பது, தேசிய கல்விக் கொள்கையின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Skill Development  Programme) தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தபடுவதாகவே கல்வியாளர்களால் கவலையோடு பார்க்கப்படுகிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ என்பது, மாணவர்களின் திறனை வளர்க்கும் திட்டம் என்று சொல்லப்பட்டது (Skill Based Programme). ஆனால் இதனை, தேசிய கல்விக் கொள்கையான NEP  2020க்கு  ஆதரவான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுத்துள்ளதாகவே கல்வியாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் NEP 2020இன் நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம் என அறிவித்ததன் மூலம் மாநிலக் கல்விக் கொள்கையானது எதிர்கால மாணவர் சமூகத்திற்குச் சரியான வழிகாட்டலோடு அமையுமா என்ற சந்தேகத்தையும் மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சரியான திசையில் செல்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டமானது தமிழக அரசின் லேபிள் ஒட்டப்பட்ட தனியார் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதே கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டு.  இதன் பின்னணியில் Amazon, IBM, Educom போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்குவதால், வணிகமயம் மட்டுமே (Commercialization) இதன் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தத் திட்டத்தை ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்? திறன் வளர்க்கும்  திட்டத்திற்குத் தமிழக அரசிடம் திறன் இல்லையா? அல்லது கல்வியாளர்கள் இல்லையா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கு பலகோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதற்குப் பின்வரும் காலங்களில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா இல்லையா என்பதற்கான விடை தமிழக அரசால் வழங்கப்படவில்லை. 1949இல் கல்விக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது முதல் தற்போது வரை தமிழக மாணவர்களிடம் திறனே வளரவில்லையா? அப்துல் கலாம், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மின்னஞ்சல் மென்பொருளை உருவாக்கிய சிவா அய்யாதுரை போன்றவர்கள் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்தே திறனை வளர்த்து உச்சநிலையை அடைந்தனர். இதுபோன்றே திறனை வளர்த்தவர்களின் பட்டியல் நீளமானது. தற்போது அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டு (O.D) தமிழகப் பல்கலைக்கழகங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதோடு பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகப் பல்கலைக்கழகங்கள் மூலம் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது, கல்வியாளர்களைக் கலக்கமுற செய்துள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு வடிவத்தில் உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்கும் இந்தத் திறன் மேம்பாடு என்கின்ற ‘நான் முதல்வன் திட்டம்’ ஏதோ கடமைக்கு மாணவர்கள் கற்பதாகவே உள்ளது. இதில் கற்றல் கற்பித்தல் குறைபாடும் பெரும் இடைவெளியை ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதும் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுவதும் கல்வியின் முக்கிய நோக்கமாக இதுவரை இருந்து வந்துள்ளது. அதைவிடுத்து திறன் மேம்பாடு என்ற பெயரில், தொழிலாளர் சந்தையை  (Labour Market) உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவமான இந்த ‘நான் முதல்வன்’  திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கள நிலவரத்தை அறிந்த கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.