பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கம்போலவே வளர்ச்சி, டிஜிட்டல் போன்ற சொற்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலச்சூழலில் வாழ்வாதாரம் இழந்து கிடக்கும் ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு மட்டுமே பஞ்சம் நிலவுகிறது பட்ஜெட்டில். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற வெற்று அறிவிப்பு ஒன்றைத்தவிர, பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும்கூட ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு மருந்துக்கும் அறிவிப்பு இல்லை. பல ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடரும் வருமானவரி விலக்குக்கான உச்ச வரம்பு இன்னமும் 2.5 லட்சமாகவே இருக்கும் என்ற அறிவிப்புடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12% இருந்து 7% ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, ஆனால் சில லட்சங்கள் ஈட்டுவோர் வரி கட்டவேண்டும். வழக்கம்போல சாலை விரிவாக்கம், எட்டு வழிச் சாலைகள் என்ற அறிவிப்புகள், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பின்னர் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட சாலையில் அதே மக்கள் பயணிக்க சுங்கச் சாவடி அமைத்துப் பணமும் வசூலிப்பார்கள், எந்தவிதக் கால வரையறையும்கூட இல்லாமல் என்பதை உறுதி செய்கின்றன. ஏதிலிகள் ஆக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான். நதிகளை இணைக்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர். வெளிப்பார்வைக்குப் பயனுள்ள திட்டமாக இது தோன்றினாலும், இதன் பின்னால் உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இதற்காக ஏற்படுத்தப்படவுள்ள வழித்தடங்களுக்காகத் தங்கள் வாழிடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப்போகும் மக்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிப்பு, நதி நீர் கடலில் கலக்காமல் தடுப்பதால் கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை அளவு, இதனால் பாதிப்புக்கு ஆளாகும் கடல்வாழ் உயிரிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காகக் கடலை நம்பியுள்ள மக்கள் என இதன் பின்விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது அந்த அறிக்கை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்குமான வேறுபாட்டை இன்னமும் நிதியமைச்சர் உணர்ந்தாரா என்றே நமக்குப் புரியவில்லை. கிரிப்டோ கரன்சி முதலீட்டு வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு அநீதியின் உச்சம் மட்டுமல்ல அறியாமையின் உச்சமும்கூட. ரயில்வே துறைக்கென தனியே பட்ஜெட் போடப்பட்டதை மாற்றி பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். தற்போது ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்பை ரயில்நிலைய பிளாட்பாரங்களில்தான் தேட வேண்டியுள்ளது. சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த பல ரயில்களை, கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்கள் என்று பெயர் சூட்டி ஏமாற்றினார்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான ரயில்களை நிறுத்திவிட்டார்கள். அவற்றை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்ணுக்கு எட்டியவரை காணமுடியவில்லை. எல். ஐ. சி. பங்குகளை விற்கும் முடிவு முன்பே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும், விற்பனை விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பைப் பெருமையாக வெளியிட்டுள்ளார் அமைச்சர். ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினால் அதை நடத்தும் தகுதி நடத்துபவருக்கு இல்லை என்று பொருள். அதேவேளை, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் கிடைக்கிறது என்று பொருள். சமூக மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் அடிப்படையானதுமான கல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் கல்வித் தொலைக்காட்சி எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோம் என்ற அறிவிப்பு கல்வியை மேலும் சிதைக்க இவர்கள் கொண்டுள்ள திட்டத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை. எந்தச் சூழலிலும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் வகுப்புகள் நேரடிக் கற்றலுக்கு ஈடாகாது. கல்வி மேம்பாடு குறித்த வேறு எந்த அறிவிப்பும் இல்லை என்பது இவர்களுக்குக் கல்வி மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வேதனை தரும் நகைச்சுவை. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தத் தளத்திலும் இந்த பட்ஜெட் எந்தப் பயனையும் எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்போவாதில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களை எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஆட்சியாளர்கள் யாருக்காக இயங்குகிறார்கள் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. நடப்பது ஜனநாயக ஆட்சி என்ற சிந்தனை சிறிதுமின்றி, எளிய மக்கள் மீது எவ்விதக் கருணையுமின்றி, சர்வாதிகார மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களால் மட்டுமே இத்தகைய பட்ஜெட்களைத் தயாரிக்க முடியும். பி. எஸ். வீரப்பா ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ‘இந்த நாடும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்களும் நாசமாய்ப் போகட்டும்’.