பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கம்போலவே வளர்ச்சி, டிஜிட்டல் போன்ற சொற்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலச்சூழலில் வாழ்வாதாரம் இழந்து கிடக்கும் ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு மட்டுமே பஞ்சம் நிலவுகிறது பட்ஜெட்டில். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற வெற்று அறிவிப்பு ஒன்றைத்தவிர, பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும்கூட ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு மருந்துக்கும் அறிவிப்பு இல்லை. பல ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடரும் வருமானவரி விலக்குக்கான உச்ச வரம்பு இன்னமும் 2.5 லட்சமாகவே இருக்கும் என்ற அறிவிப்புடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12% இருந்து 7% ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, ஆனால் சில லட்சங்கள் ஈட்டுவோர் வரி கட்டவேண்டும். வழக்கம்போல சாலை விரிவாக்கம், எட்டு வழிச் சாலைகள் என்ற அறிவிப்புகள், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பின்னர் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட சாலையில் அதே மக்கள் பயணிக்க சுங்கச் சாவடி அமைத்துப் பணமும் வசூலிப்பார்கள், எந்தவிதக் கால வரையறையும்கூட இல்லாமல் என்பதை உறுதி செய்கின்றன. ஏதிலிகள் ஆக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான். நதிகளை இணைக்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர். வெளிப்பார்வைக்குப் பயனுள்ள திட்டமாக இது தோன்றினாலும், இதன் பின்னால் உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இதற்காக ஏற்படுத்தப்படவுள்ள வழித்தடங்களுக்காகத் தங்கள் வாழிடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப்போகும் மக்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிப்பு, நதி நீர் கடலில் கலக்காமல் தடுப்பதால் கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை அளவு, இதனால் பாதிப்புக்கு ஆளாகும் கடல்வாழ் உயிரிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காகக் கடலை நம்பியுள்ள மக்கள் என இதன் பின்விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது அந்த அறிக்கை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்குமான வேறுபாட்டை இன்னமும் நிதியமைச்சர் உணர்ந்தாரா என்றே நமக்குப் புரியவில்லை. கிரிப்டோ கரன்சி முதலீட்டு வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு அநீதியின் உச்சம் மட்டுமல்ல அறியாமையின் உச்சமும்கூட. ரயில்வே துறைக்கென தனியே பட்ஜெட் போடப்பட்டதை மாற்றி பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். தற்போது ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்பை ரயில்நிலைய பிளாட்பாரங்களில்தான் தேட வேண்டியுள்ளது. சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த பல ரயில்களை, கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்கள் என்று பெயர் சூட்டி ஏமாற்றினார்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான ரயில்களை நிறுத்திவிட்டார்கள். அவற்றை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்ணுக்கு எட்டியவரை காணமுடியவில்லை. எல். ஐ. சி. பங்குகளை விற்கும் முடிவு முன்பே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும், விற்பனை விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பைப் பெருமையாக வெளியிட்டுள்ளார் அமைச்சர். ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினால் அதை நடத்தும் தகுதி நடத்துபவருக்கு இல்லை என்று பொருள். அதேவேளை, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் கிடைக்கிறது என்று பொருள். சமூக மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் அடிப்படையானதுமான கல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் கல்வித் தொலைக்காட்சி எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோம் என்ற அறிவிப்பு கல்வியை மேலும் சிதைக்க இவர்கள் கொண்டுள்ள திட்டத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை. எந்தச் சூழலிலும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் வகுப்புகள் நேரடிக் கற்றலுக்கு ஈடாகாது. கல்வி மேம்பாடு குறித்த வேறு எந்த அறிவிப்பும் இல்லை என்பது இவர்களுக்குக் கல்வி மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வேதனை தரும் நகைச்சுவை. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தத் தளத்திலும் இந்த பட்ஜெட் எந்தப் பயனையும் எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்போவாதில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களை எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஆட்சியாளர்கள் யாருக்காக இயங்குகிறார்கள் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. நடப்பது ஜனநாயக ஆட்சி என்ற சிந்தனை சிறிதுமின்றி, எளிய மக்கள் மீது எவ்விதக் கருணையுமின்றி, சர்வாதிகார மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களால் மட்டுமே இத்தகைய பட்ஜெட்களைத் தயாரிக்க முடியும். பி. எஸ். வீரப்பா ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ‘இந்த நாடும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்களும் நாசமாய்ப் போகட்டும்’.

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.