திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற ஒற்றை வரியில் தன்னை வெளிப்படுத்திய மகாகவி பாரதியின் பெருமையை, தர்மாவேசத்துடன் உலகிற்கு உணர்த்திய முற்போக்கு இலக்கியப் படைப்பாளி, சமரசங்களுக்குட்படாத போராளி, தொ.மு.சி என்ற தொண்டைமான் முத்தையா சிதம்பரம் ரகுநாதன். தன் பெயருக்கு முன்னே தலைப்பெழுத்துப் போடுவதையே கைவிட்டு, ரகுநாதன் என்றே தனது பெயரை எங்கும் பயன்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில், அறிவுச் செருக்கும் கறார்த்தன்மையும் மிக்க பெருமித வாழ்விற்குச் சொந்தக்காரர். பேராசிரியர் நா. வானமாமலைக்கு முன்பாகவே எதார்த்த வாதத்தையும் முற்போக்குச் சிந்தனையையும் புதுமைப்பித்தன், பாலதண்டாயுதம் ஆகியோரின் தொடர்பால் தமிழில் வளர்த்த படைப்பிலக்கியவாதி. அது மட்டுமின்றி தத்துவம், வரலாறு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் அழுத்தமான பார்வை கொண்ட கருத்துப் போராளி. இலக்கிய ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ரகுநாதன். ‘எழுத்தாளன் ஒரு தனி மனிதன். ஆனால் சமூகம் சார்ந்த மனிதன். இந்த இரண்டும் முரண்படாமல் பார்த்துக்கொண்டு, தன் தனித்துவத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்ற ரகுநாதன், பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு தனது இலக்கியப் பயணத்தை நடத்தியவர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட இவரது பேராசிரியர் கே. எஸ். சோணாசலம், நெல்லை இந்துக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர். தினமணி ஆண்டு மலரில் சோசலிசம் என்றால் என்ன? என்ற கட்டுரை எழுதியவர். இவர்தான் ரகுநாதனுக்கு மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அறிமுகப்படுத்தியவர். பேராசிரியர்கள் அ. சீனிவாச ராகவன், மு. அருணாசலக் கவுண்டர் ஆகியோர், இவருக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்தவர்கள். இண்டர்மீடியட் – பட்டப் படிப்புக்கு முந்தைய இரண்டாண்டு கல்லூரிப் படிப்பில் தோற்றுப்போன ரகுநாதன், இரணியவாதம் பற்றிப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தனது சிறை அனுபவத்தின் பின்னணியில் அவர் எழுதிய கதைதான் கூண்டுக்கிளி. 1944 – 46இல் தினமணியின் துணை ஆசிரியராகவும் 1946 – 1947இல் முல்லை இதழின் ஆசிரியராகவும் 1948 – 1952இல் சக்தி இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1954 – 1956இல் நெல்லையில் சாந்தி என்ற இலக்கிய இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். 1967முதல் 1988 வரை சோவியத் நாடு, சோவியத் பலகணி ஆகியவற்றில் பணி புரிந்தார். பின் நெல்லை திரும்பிய காலகட்டத்தில், இலக்கிய வரலாறுகள், இலக்கியக் கோட்பாடுகள் என ஏராளமாகப் படித்தார். படித்தவற்றில் பலவற்றைத் தீவிர மறுவாசிப்பிற்கு உட்படுத்தினார். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.ஜனநாயகம் என்ற பெயரில் வெளிவந்த அதிதீவிர இடதுசாரி இதழில் ஜீவா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘சத்தியத்தின் இன்னுருவாய் சாத்துவீகப் போராளியாய்பத்தியங்கள் பல நோற்று பாரதத்தின் நோய் நொடியைக்கத்தியின்றி ரத்தமின்றி களைந்தெறியப் பாடுபட்டசத்தியவான் போய் மறைந்தான் சண்டாளன் கொன்றுவிட்டான்’ என்ற கவிதையை காந்திஜியின் மறைவையொட்டி எழுதினார். பாரதி மீது அளவற்ற பாசம் கொண்ட ரகுநாதன், கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளிலும் எட்டையபுரம் பாரதி விழா மேடைகளிலும் பாரதியின் பெருமைகளை முழங்கினார். பாரதி பற்றிய அவரது கவிதை முழக்கங்கள், கேட்போரைக் கிறங்க வைக்கக் கூடியவை. ‘சாதி பேதமெனும் சழக்கறுத்து மானிடமாம்நீதி ஒன்றே தர்மம் என நிலைநாட்டும் சமுதாயம்மானிடர்கள் எல்லோரும் வளவாழ்க்கைதனைப் பெற்றசமுதாயம்,இதைத்தான் நம் கவிஞன் இத்தரையில்ஒப்பில்லா சமுதாயம் என்றுரைத்தான்’ என, பாரதி தன் கவிதைகளில் உயிராக நிலைநிறுத்திய ஒப்பில்லாச் சமுதாயம் என்ற கருத்திற்கு விளக்கம் தருகிறார். இலக்கிய உலகில் நாவலாசிரியர் என அங்கீகரிக்கப்பட்டவர் ரகுநாதன். புதுமைப்பித்தன் கவிதைகள், புதுமைப்பித்தன் கதைகள், காந்திமதி கலித்துறை அந்தாதி ஆகிய நூல்களை இவரே பதிப்பித்தார். அவரது முதல் நாவலான புயல், 1945இல் எழுதப்பட்டது. 1949இல்முதலிரவு, 1950இல் கன்னிகா ஆகிய நாவல்களை எழுதினார். 1953இல் பஞ்சும் பசியும் எனும் நாவலை எழுதினார். கன்னி முயற்சியான ‘புயல்’ நாவலை, தனது 22ஆம் வயதில் தினமணியில் இருந்தபோது ரகுநாதன் எழுதினார். இந்நாவல் ஒரு காதல் கதைதான். ஆனால், புதுமையான கதை. ஒரு பெண்ணின் மன ஓட்டங்களின் வழியாக நாவல் வளர்கிறது. இந்நாவல் இளம்பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்தரிக்கிறது. கருத்துச் செறிவு மிக்க, படிக்கப் படிக்க இன்பம் தரும் படைப்பு ‘கன்னிகா’ என்ற இவரது மூன்றாம் நாவல். கள்ளம் கபடமற்ற கமலா என்னும் பெண்ணின் கனவுமயமான காவியக் காதல் உணர்வு, படிப்படியாக இறங்கி ரத்தமும் சதையுமான மண் வகைப்பட்ட காதலுக்குத் திரும்புவதே நாவலாக விரிந்து நிற்கிறது. சிறுகதையாக எழுத நினைத்து, திருப்தி இல்லாத காரணத்தால் நாவலாக எழுதப்பட்டதுதான் இந்நாவல். பெண்களின் பருவ காலத்தை, ஐந்தைந்து ஆண்டுகளாக வகுத்துக்கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார் ரகுநாதன். இவரது இரண்டாவது நாவலான ‘முதலிரவு’ மராட்டிய எழுத்தாளரான காண்டேகரின் தாக்கத்தால் எழுதப்பட்டது. காண்டேகரின் ‘கருகிய மொட்டு’க்குப் பதிலாக ரகுநாதன் எழுதினார். மனித வாழ்க்கையின் வலுப்பிடியாக விளங்கும் மிகப் பெரிய சக்திகள் பசி, காமம். இவற்றில் காமமும் பசியைப்போல முக்கியமானது என்ற தெளிவுறுத்தலும் மக்கள் காமக் கலையறிவைத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் இந்நாவலைக் காணமுடியும். இவரது நான்காவது நாவல்தான் ‘பஞ்சும் பசியும்’. முன்னால் வந்த பாதையின் திருப்புமுனையாகவும் இனி செல்லும் பாதைக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறது இந்த நாவல். திசை மாறிப்போய்ப் பள்ளத்தில் விழவிருந்த தமிழ் நாவலைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. 1953ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாவல், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அம்பாசமுத்திரம் நகரின் நெசவாளர்கள் ஊர்வலமாக உரிமைக் குரலை ஒலித்துக்கொண்டு வருவதை, நதியின் பிரவாகத்திற்கு ஒப்பிட்டுக் காட்டும் இந்த ஒப்புமை கம்யூனிஸ்டுகள் விக்கிரமசிங்கபுரத்தில் நடத்திய தொழிலாளர் போராட்டத்தை உள்ளபடி விவரிக்கிறது. சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை உண்மையுடன் சித்தரிப்பவனே எதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க எதார்த்த இலக்கிய நெறியை, பஞ்சும் பசியும் நாவலில் விதந்து கூறும் வகையில் படைத்துள்ளார் ரகுநாதன். அயல்நாட்டு மொழி ஒன்றில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், முதல் பதிப்பிலேயே 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. செக்கோஸ்லோவாகியா அகாடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கபில் ஸ்வலெபில் என்பவரால் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம் மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்களாக உள்ளன. சோவியத் நாவலான மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்‘ நாவலை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புகள் சமூக வாழ்வை மையமாகக் கொண்ட ரஷ்ய இலக்கியங்கள் ஆகும். மாயாகாவிஸ்கியின், மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய ‘மதத்தைப் பற்றிய கட்டுரைகள்’ என, முக்கியமான உலகப் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஓர் இலக்கிய கலா சிருஷ்டியின் மொழிபெயர்ப்பும் ஒரு கலா சிருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு நூலை மொழிபெயர்க்கும்போது, முதலில் அதனை உயிருள்ள மொழிநடையில் – மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு முரணாகாத முறையில் – மொழிபெயர்க்க முயல வேண்டும். அவனது வார்த்தைப் பிரயோகங்களும் நடை அமைதியும் மூல நூலில் உள்ள பொருளை நேர்மை உணர்ச்சியுடன் உணர்த்துவதாக இருக்க வேண்டும்.’ 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்கும் பெருஞ்சிகரமான ரகுநாதன், கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், திறனாய்வு, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரை, தமிழ் இலக்கிய வரலாறு என எண்ணற்ற நூல்களைப் படைத்துள்ளார். பாரதியை ஆதர்சமாகக் கருதிய இவர், ‘பாரதியும் ஷெல்லியும்‘, ‘கங்கையும் காவிரியும்‘ ஆகிய ஒப்பிலக்க ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்துள்ளார். ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூல், பாரதியையும் பாரதியின் இதயத்தைப் பறித்து எண்ணத்தைப் பெரிதும் பக்குவப்படுத்திய ஒரே ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியையும் ஒப்பீடு செய்கிறது. புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத்தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி கொண்ட ஈடுபாட்டை ஒப்பு நோக்கி எழுதிய, தமிழில் அதுவரை இல்லாத ஓர் ஒப்பிலக்கிய நூல் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறலாம். தமிழறிந்தவர்கள் போதுமான அளவு ஷெல்லியை அறிந்துகொள்ள இந்நூல் உதவுமென்பதையும் அறுதியிட்டுக் கூறலாம். நாடும் மொழியும் அரசியலும் இலக்கியமும் பின்னிப் பிணைந்திருந்த பாரதியை, வங்கத்தில் தோன்றி வங்க மொழியில் சிறந்த கவிதை படைத்த ரவீந்திரநாத் தாகூருடன் ஒப்பு நோக்கி, ஒற்றுமை – வேற்றுமை கண்டு, நுணுக்கமாக ஆராயும் ஒப்பிலக்கிய நூல்தான் ‘கங்கையும் காவிரியும்’. பெர்சி பைசி ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞர் இளம் வயதிலேயே மாண்டுபோன, உலக முற்போக்குக் கவிஞர்களின் மானசீக வழிகாட்டி. பாரதியும் 40 வயதுக்கு முன்னரே மறைந்து போனார். பாரதியின் மறைவுக்குப் பிறகு 21 ஆண்டுகள் ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்திருந்தார். இவர்களைப் பற்றிய சிறந்த ஒப்பாய்வு நூல்களைத் தந்தவர் ரகுநாதன். பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தைஆய்வு செய்த நூல்தான் ‘பாரதி: காலமும் கருத்தும்‘ நூல். இந்நூல்1983இல் இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது. 1984இல் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது. தமிழ்நாட்டில் ஓர் இடதுசாரி இலக்கியவாதிக்கு முதன்முதலாக இவ்விருதைப் பெற்றுத்தந்தது ‘பாரதி:காலமும்கருத்தும்’ என்ற நூலே. இந்நூல் பற்றிரகுநாதன் கூறும்போது, “எனது இலக்கிய வாழ்வை மேற்கொண்ட காலம் தொட்டு, சென்ற 40 ஆண்டு காலமாகவே நான் பாரதியைப் பயின்று வந்திருக்கிறேன்; பயின்று வருகிறேன். எனது இலக்கிய நோக்குக்கும் போக்குக்கும் ஏற்ப, சரித்திர வளர்ச்சியின் ஒளியில் அவனை நான் பலவாறும் இனம் கண்டு வந்தபோது, இந்த நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது” என்கிறார். ஏற்கனவே திரட்டி வைத்திருந்த தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்து இந்த நூலை இரவு பகலாக எழுதி, 1982இல் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டார். 30 ஆண்டு காலக் கடும் உழைப்பின் அரிய விளைவு இந்நூல். பாரதி பற்றிய பழைய பத்தாம் பசலித்தனப் பார்வையை நொறுக்கியது இந்நூல். 20ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் ஆயுதமேந்திய இளைஞர்கள் போராட்டம் பெருமளவு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகவே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆயுதமேந்திய போராட்டத்தில் பாரதிக்கும் பங்குண்டு என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? பாரதியை விடுதலைப் போர்த் தளபதிகளில் ஒருவராக இந்நூல் இனம் கண்டது. 1984இல் ‘இளங்கோவடிகள் யார்?’ என்னும் நூலை தமிழ் ஆய்வு

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

‘வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க! பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்அதனிலுந் திறன் பெரிதுடைத்தாம்அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்அறவழி யென்று நீ அறிந்தாய்நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை!நெறியினால் இந்தியாவிற்குவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்துவையகம் வாழ்க நல்லறத்தே!’ என்று தமிழ்நாட்டு மகாகவி பாரதி காந்தியடிகளைப் புகழ்ந்துரைத்தான். இந்தப் பாடலில் ‘ஒத்துழையாமை ‘ என்று காந்தியப் போர் நெறியை பாராட்டிக் குறிப்பிடும் பாரதியார் தனது இந்தியா பத்திரிகைக் கட்டுரைகளில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போர்முறையை பாரதி வெகுவாக ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளுக்காகக் காந்தியடிகள் நடத்தும் போராட்டங்களைத் தமிழ்நாட்டு மகாகவி ஆதரிக்கிறான். ஆனாலும் இந்தப் புதிய அமைதிப் போர்முறைக்கு அவன் பழகாதவன் ஆயிற்றே! ஆகவே காந்தியைப் பசுவாகவும் தென்னாப்பிரிக்க ஏகாதிபத்திய அரசைப் புலியாகவும் சித்தரித்து இந்தியா பத்திரிகையில் கேலிச் சித்திரம் எழுதுகிறான். 1859இலேயே இந்தியர்களின் தென்னாப்பிரிக்கக் குடியேற்றம் தொடங்கியிருக்கிறது. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க விஜயம் 1893இல்தான். முப்பதாண்டுகளில் ஏகாதிபத்தியம் இறுகிப்போய் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளின்மீது கோடரி வைக்கும் காலத்தில்தான் காந்தியடிகளின் வருகை நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்த அவரது ஒத்துழையாமை, சட்டமறுப்புப் போர்களும் அவற்றில் அவர் அடைந்த வெற்றிகளும் உலகம் முழுதும் பிரசித்தி பெற்றன. ஒப்பந்தக் கூலிகளாக வந்து முப்பது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவையே தங்கள் வாழ்நிலமாக மாற்றிக்கொண்ட அந்த எளிய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்களை ஏகாதிபத்திய அரசு அவர்கள் தலையில் இறக்கியது. இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற காந்தியடிகளையே அந்த எளிய மக்கள் நம்பினர். 1909இல் இந்த மக்களின் பிரதிநிதியாகக் காந்தியடிகள் லண்டன் வரை சென்று ஏகாதிபத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்று வெறுங்கையுடன் திரும்பினார். நியாயத்தின் குரல்களுக்கு ஏகாதிபத்தியம் அத்தனை எளிதில் செவி சாய்க்குமா என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி திரும்பியவுடன் காத்திருந்து காலனி அரசு அவரைக் கைது செய்தது. அவ்வளவுதான், மக்களின் கொதிநிலை வெடித்தது. மிகப்பெரிய மக்கள் எழுச்சி கிளர்ந்து எழுந்தது. இந்த மக்கள் பேரலையின் சீற்றம் இந்தியாவுக்கும் தெரிந்த வேளையில் தமிழ்நாட்டு மகாகவி இந்தக் கேலிச் சித்திரத்தை எழுதுகிறான். போராட்டத்தை ஆதரித்து கட்டுரையில் சீறுகிறான். போராட்டத்திற்கு வீதியிலிறங்கி நிதி திரட்ட முனைகிறான். தன் பங்களிப்பாக ஐந்து ரூபாய் என்கிறான்.கேலிச் சித்திரத்துக்கு விளக்கத்தை ஒரு உருவகக் கதையின் தொனியில் எழுதுகிறான். பழைய புராணக் கதையை எடுத்துக்கொண்டு வருகிறான். காட்டு வழியில் ஒரு கொடும் புலியிடம் அகப்பட்ட பசுவானது, ‘ என் கன்றுக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டேன். அது பசியால் தவித்து நிற்கும். என் கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என்னை விட்டுவைக்க வேண்டும். சத்தியமாக நான் என் கடமை முடித்து உன்னிடம் திரும்பிவருவேன்’ என்றது. சொன்னபடி திரும்பியும் வந்தது. இதைத் தன் பாணியில் பாரதி சொல்லிவிட்டு இப்படி முடிக்கிறான். “பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு அதைத் தன்னுடைய சிநேகிதியான மற்றொரு பசுவிடத்தில் ஒப்புவித்துவிட்டு, புலியினிடத்தில் வந்து, ‘என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது. இதைக் கண்ட புலி ஆச்சர்யப்பட்டு ‘அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிலிருந்து பிராணனை விட்டது. இப்பசுவைப் போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீகாந்தி பிரபுவைத் தென்னாப்பிரிக்கப் புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? தென்னாப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்த புலியைப் பார்க்கிலும் கொடுமையாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக்கலிகாலத்தில்தான் காணலாம்.” காந்தியடிகள் ஒத்துழையாமையிலோ சட்ட மறுப்பிலோ அரசை எதிர்க்காத காலங்களில் அரசுடன் ‘நல்லுறவு பேணிய பசு’ என்பதை ‘ஏகாதிபத்தியப் புலிகள்‘ நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பதைப் பாரதி உணர்த்துகிறான்.1909இல் பாரதி, தான் பசுவாக சித்தரித்த காந்தியடிகளை 1919இல் நேரில் சந்தித்து அவரது ஒத்துழையாமையை ஆசிர்வதிக்கிறான். காந்தியடிகள் நமது புராதன தேசத்து மக்களின் விடுதலையில், புனரமைப்பில், நல்லிணக்கத்தில் தளர்வில்லாத அக்கறை கொண்டிருந்தார். தனது கருத்துக்களின் வழியாகவும் செயல்பாடுகளின் ஊடாகவும் அந்த அக்கறையை உறுதியுடன் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அதுவரை இருந்த போராட்ட முறைகளில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு நபர்களுமே பங்களித்தனர். காந்தி யுகத்தில்தான் தேசத்தின் மொத்த மக்களும் தேசிய இயக்கத்தில் வந்தனர். விடுதலை இயக்கத்தில் முழுமையான அர்ப்பணிப்பைத் தந்தனர். இத்தனை மக்கள் அவரைத் தொடர்ந்தபோதும் அவர் மீதான எதிர் விமர்சனங்களும் தொடர்ந்தன. அவர் விரும்பியும் சொல்லியும் வந்தபடியே அவர் நெடிய வாழ்வு வாழ்வதையே நிறுத்திவிடலாம் என்று அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் நினைத்ததை முடித்தார்கள். அந்தத் துன்பகரமான சம்பவம் நடந்து இன்றுடன் முக்கால் நூற்றாண்டு முடிந்து போனது. ஆனால் அண்ணலின் இருப்பு எத்தனை நியாயமானது என்று இன்றைக்கு நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

மகாகவி நாள் குழப்பம்

மகாகவி நாள் குழப்பம்

பாரதி நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டுகள். ஆனால், பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11 என்பதுதான் பிழையாக உள்ளது. பாரதி இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவு 12 முடிந்து, செப்டம்பர் 12 அன்று ஒன்றரை மணிக்கு. சென்னை மாநகராட்சிப் பதிவேட்டிலும் செப்டம்பர் 12 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கால வழக்கப்படி காலை ஆறு மணி வரையிலான நேரத்தை முந்தைய தேதியில் குறிப்பிட்டு சிலர் பேச்சு வழக்கில் சொன்னதே வரலாறாக நிலைத்துவிட்டது. அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவை இன்றளவும் செப்டம்பர் 11 தேதியிலேயே பாரதி நினைவு நாள் நிகழ்வுகளை ஒலி/ஒளிபரப்புகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பிற மாநிலங்களிலும் பாரதி சிலையில் நினைவுநாள் தவறாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்யக்கோரி தமிழறிஞர்கள் பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் ச. சுப்புரெத்தினம் எடுத்த முயற்சியின் பலனாக, எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியரின் முயற்சியால், புதுவை பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர் பாரதியின் நினைவுநாள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, செப்டம்பர் 12 என்பதை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி வருகிறார். இந்தச் சூழலில், தமிழக அரசே பாரதி நினைவுநாளை செப்டம்பர் 11 என்று அறிவித்துள்ளது வரலாற்றுப் பிழையை அதிகாரபூர்வமாக ஆக்குவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மகாகவி நாள் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படும் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும்.