வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

மகாபாரதத்தில் ஒரு காட்சி:அர்ஜுனன் அம்பு எய்யப் பழகிக் கொண்டிருக்கிறான்.துரோணர் கேட்கிறார், “மரம் தெரிகிறதா?”“இல்லை”“மரத்தின் கிளை தெரிகிறதா?”“இல்லை”“கிளையில் இலையின் அசைவுகள்?”“தெரியவில்லை குருவே”“கிளையில் அமர்ந்திருக்கும் குருவியாவது தெரிகிறதா?”“மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. குருவியும் தெரியவில்லை”துரோணருக்கு ஆச்சரியம்.“பிறகு என்னதான் தெரிகிறது அர்ஜுனா?”“நான் வீழ்த்த வேண்டிய குருவியின் தலை மட்டும் தெரிகிறது”பெருமை தொனிக்க துரோணர் சொல்கிறார்:“அம்பினை விடுக” அப்படித்தான் பாஜக-வை வீழ்த்தக் குறி வைப்பதற்காக இந்தியாவின் பெரும்பாலான எதிர்கட்சிகள் வருகின்ற ஜுன் 23 அன்று பாட்னாவில் சந்திக்க இருக்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், டெல்லியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சமீபத்திய கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையும் காங்கிரசிற்கு உத்வேகம் அளித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேலே சொன்ன தலைவர்கள் அனைவருமே அவரவர் மாநிலங்களில் தங்களுக்கென வாக்கு வங்கியைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாஜக-விற்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் வினா. அனைவருமே தோளில் கை போட்டு, காலை வாரி விடுவதில் கை தேர்ந்தவர்கள்தான். இருப்பினும் ‘நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறிக்கு எதிராக, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்ற புரிந்துணர்வு மட்டுமே, அவர்களுக்கு 2024 தேர்தலில் பாஜக என்ற குருவியின், இல்லையில்லை, வல்லூறின் தலையை மட்டும் பார்க்க வைக்கிறது. ஆம், வல்லூறுதான். இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகளை ஒழித்துவிட்டு, பாஜக மட்டுமே ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும். ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என எல்லாவற்றையும் மதவாதம் என்னும் ஒற்றைச் சித்தாந்தத்தக் குடையின்கீழ் கொண்டுவரத் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஒன்றிய வல்லூறு. ஜனநாயகத்தின் சிறப்பே, வலிமையான எதிர்க்கட்சி என்பதுதான். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல; ஆளும் கட்சி தவறிழைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, சரிப்படுத்திச் செல்ல உந்தும் ஒரு அமைப்பு முறை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த ஆட்சியின் ஒற்றுமையையும் சிறிது காலத்திற்குப் பின்னர் வந்த வி.பி.சிங் ஆட்சியையும் இங்கே கவனத்தில் கொண்டால், இந்திய ஜனநாயகம் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு மதிப்பளித்திருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல கூட்டணி ஆட்சிமுறையில் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆட்சி முறை. இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அதிகம் இருந்த நாட்களையும் அவர்கள் குறைந்துபோய், பாராளுமன்றம் என்பதே ஒரு கேலிக்கூத்து ஆகிவிட்ட இந்தக் காலத்தையும் ஒப்புமைப்படுத்தி தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களும் அவற்றை வழிநடத்திய காட்சிகளும் இருப்பதுதானே ஜனநாயகம்? ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அவர்களுக்கு மாபெரும் ஓவியங்கள், சிலைகள் வைத்து, இந்தியா மதரீதியான நாடாக நிறுவ முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவற்றையெல்லாம் ஒற்றுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதவாதப் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் களமாக எதிர்க்கட்சிகள் சந்திப்பு இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு எப்படி இருக்கும், ஒரே நாளில் புரிதல் வருமா, பிரதமருக்கான பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியுமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கென்று இருக்கும் கெத்து, ஈகோக்களை விட்டுக்கொடுத்து,பொதுவான கருத்தொற்றுமையை யார் உருவாக்கப்போகிறார்கள், இவர்களை ஒன்றிணைப்பவர்களாக யார் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய விவாதப் பொருள்களாக இருக்கப்போகின்றன. முதல் சந்திப்பின் தலைவர் என்பதாலேயே நிதிஷ்குமார்தான் தலைமை என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஜாதா சென்றதாலேயே ராகுலை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நாட்கள் நடக்கவில்லை; குறைந்த அளவு நகரங்களையே தேர்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது; திராவிட மாடல் குறித்து அனைவரும் பேசுகின்றனர் என்றாலும் வட இந்தியத் தலைவர்கள் எந்த அளவு மதாராஸியை நம்புவார்கள் என்பதைக் கணிப்பது கடினம். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இடதுசாரிகளைத்தான் காணமுடிகிறது. ஆனால் மற்றவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், முக்கியமாக மம்தாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து அந்தந்த மாநிலங்களில் தாங்களே தேர்தலைச் சந்தித்துக் கொள்ளலாம்; மாநில அளவில் எதிர்ப்பு அணியை உருவாக்கிக் கொள்ளலாம்; தேர்தல் முடிந்த பிறகு தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவார்களேயானால், அது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கலாம். அதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி பாஜக தலைவர்கள் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பாலம் இடிந்துபோன பாட்னாவில் கூடுகிறார்கள்; அந்தப் பாலம் போலவே இடிந்துவிடப் போகிறது என்று கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. ஆனால் அவர் சொல்ல மறந்தது, அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்ததும் கடந்த முறையும் இடிந்து விழுந்ததைச் சரி செய்ததும் ஒரு குஜராத் கம்பெனி என்பதை. இதே நேரம் தமிழ்நாட்டில் வேறொரு முயற்சி நடைபெற்று வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கே எதிரியின் எதிரியைப் பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. நாம் மேலே சொன்ன எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் புதிதாகக் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர். பாஜக, தான் நினைத்ததைச் சாதிக்க வசதியாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைக்கலாம். அதன்மூலம் தற்போது உருவாக்க முயன்றுவரும், தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை நிலைநிறுத்த நினைக்கலாம். தற்போதைய எதிர்க்கட்சியை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான விதையை பாஜக ஊன்றுகிறது. அதற்கு, அமைப்பு ரீதியாகவும் சட்டரீதியாகவும் பலவீனமானவர்கள், ஒரே இடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நேற்றுவரை எதிரெதிராக இருந்தவர்கள், ஒருவர்மீது மற்றவர் மாறி மாறி துரோகி முத்திரை குத்தியவர்கள், திடீரென ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதை ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அதிமுக-வின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் கவலைக்குரிய விசயம் என்னவெனில், ஆளும் கட்சியான திமுகவும் பாஜகவின் இந்த முயற்சிக்கு உரம் கொடுத்து உதவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை, அதிகாரிகடம் குவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசை விடவும் தீவிரம் காட்டுவதும் நமக்கு திமுகவின் மேல் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கவர்னர் பதவியை ஒரு கட்சியின் தலைவர் பதவிபோல நடத்திக்கொண்டிருக்கும் போக்கு ஒரு தனி ஆவர்த்தனம். நாடு தழுவிய எதிர்ப்பு அணியில் இதன் தாக்கம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட எதிர்க்கட்சிகள் சந்திப்பை திமுக எப்படிக் கையாளப்போகிறது என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு சிட்டுக்குருவி தற்போது வல்லூறாக மாறி, மரத்தில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் இரையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாட்னா சந்திப்பில் எல்லாரும் சேர்ந்து வல்லூறை வீழ்த்துவதை இலக்காகக் கொள்வார்களா அல்லது வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டு வல்லூறின் இலக்குக்கு இரையாவார்களா என்பதை வருங்காலம் நமக்கு உணர்த்தும். ஜுன் 23க்காகக் காத்திருப்போம்.