மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).