மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும்” என்பதுதான் கர்ணன் கேட்ட இரண்டாவது வரம். மரணத் தருவாயில், தன்னை மகனே என்று அழைக்கும்படி கர்ணன் கேட்ட வரத்தில் முக்கியமான சாதிப் பாகுப்பாட்டின் பின்னணி ஒன்று ஒளிந்திருக்கிறது. அது என்ன? கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை உலகறியும். ஆனால் அவன் செய்ய முடியாமற்போன ஒரு தானம் இருக்கிறது. அது ‘அன்னதானம்’. சூதபுத்ரனின் கையினால் எல்லா தானமும் பெற்ற பார்ப்பனர்களும் மக்களும் அவன் கையிலிருந்து ‘அன்னதானம்’ மட்டும் பெற மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் கர்ணனால் ‘அன்னதானம்’ மட்டும் வழங்க முடியவில்லை என்கிறது மகாபாரதம்.இதிலும் சூத்திரன் சத்ரியன் என்ற பாகுபாடு, இந்த நியதியின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்ற நியதி, கர்ணனின் நெஞ்சைத் துளைக்கும் கொடூர வண்டாகவே இருந்தது. அதிலும், ‘அன்னதானம் செய்தவன் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக முடியும்’ என்றும் ‘இல்லையேல் நரகத்தில் வாடவேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கர்ணனுக்குப் போதித்திருந்தார்கள். தான் சூதபுத்திரன் என்று அறியப்படும்வரை, தன்னால் அன்னதானம் செய்ய முடியாது என்று நம்பினான் கர்ணன். அதனால்தான் குந்திதேவியிடம், மரணத் தருவாயில், தனது பிறப்பு ரகசியத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகப் பெற்றான். குந்திதேவி ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது மரணத்திற்குமிடையிலான தருணத்தில், யாரேனும் சிலருக்கு ‘அன்னதானம்’ தந்து சொர்க்கத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் கர்ணனின் நோக்கம். எனில், முன்பே அது அறிவிக்கப்பட்டால் நல்லதுதானே என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அந்த அறிவிப்பால் யுத்தத்தில் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க முடியாமல் போய்விடுமே! அதனால்தான் அந்த இரண்டாவது வரத்தைக் குந்தி தேவியிடம் கேட்டான். அப்படித்தானே ஆகிப் போனது. செஞ்சோற்றுக் கடனுக்காக எல்லாவற்றையும் பின்தள்ளிய அவனது செய்நன்றி பாராட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!மகாபாரதக் காலத்தில் வருணாசிரம அமைப்பு, சில வர்ணங்களைச் சில காரியங்களை செய்யவிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கர்ணனின் கதை காட்டுகிறது. இனி அசுவத்தாமனைப் பார்ப்போம். அசுவத்தாமன் துரோணரின் ஒரே மைந்தன். போர் செய்வதில் மகாரதன். அவன் சிரஞ்சீவி. அவனுக்கு எந்த நாளும் மரணமில்லை.தொடை பிளந்து நிலத்தில் கிடந்த துரியோதனன், மரண தேவியின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில் சாம்ராஜ்ய ஆசையோ யுத்தத்தைத் தொடரும் எண்ணமோ துரியோதனனுக்கு இல்லை. புயலுக்குப் பின்னே அமைதி என்பதைப்போல, வீர மரணத்தைத் தழுவக் காத்திருந்தான். துரியோதனனின் சாவுத் துயர் அஸ்தினாபுரத்தைக் கலங்கடிக்கும் முன்பு நடந்த கடைசி நாடகத்தின் பாத்திரமாக அசுவத்தாமனே இருந்தான். பார்ப்பனனும் சுத்த வீரனுமான அஸ்வந்தாமனுக்கு துரியோதனனை அவனது மரணத் தருவாயில் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. “துரியோதனா.. யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே. பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் சல்லியனையும் தலைமைச் சேனாதிபதிகளாக்கி, நீ, இதோ தொடை பிளந்து பூமா தேவியின் மேல் மரணத்திற்காக காத்துக்கொண்டு கிடக்கிறாய். உன்னைப் பார்க்க மனம் பேதலிக்கிறது. உன்பொருட்டு, நான் எதையேனும் செய்ய வேண்டும் என்று என் உள்மனம் சொல்கிறது” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் சிரஞ்சீவி என்று காட்ட, அவன் தலையில் ஒரு அபூர்வமணி கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஒளி சிந்தும். அந்த ஒளி துரியோதனின் கண்களில் பட்டுத் தெறித்தது. “அசுவாத்தமரே, யுத்தம் முடிந்துவிட்டது. இரு பக்க சேனைகளும் அழிந்துவிட்டன. யுத்தம் செய்யத் தேர்களோ யானைகளோ வாள்களோ இல்லை. இந்த யுத்தத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் நர மாமிசத்தை விரும்பி உண்ணும் நரி போன்ற விலங்குகளின் விருந்து மண்டபம்போலக் காட்சி அளிக்கிறது குருக்ஷேத்ரபூமி. எங்கும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. இந்த நிலையில் அசுவத்தாமரே, உமக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் துரியோதனன். “துரியோதனா, நீ ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ என்னை கௌரவ சேனையின் தலைமைச் சேனாதிபதியாக நியமித்துவிடு. நீ மரணம் அடையும் முன்பு உன் மனம் குளிர நான் உனக்கு நல்ல சேதி கொண்டுவருவேன்” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் அந்த அளவிற்கு இரங்கிக் கேட்டுக்கொண்டதால், துரியோதனனும், இல்லாத கௌரவப்படைக்கு அசுவத்தாமனைத் தலைமைச் சேனாதிபதியாக நியமித்தான். அசுவத்தாமன் எமனோடும் அஞ்சாமல் போர் புரியக்கூடிய போராளிதான். ஆனால், எதிரிப்படை என்று எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கென்று ஒரு படை இல்லாத நிலையிலும் அசுவத்தமனால் என்ன செய்யமுடியும்? தன் தந்தையை அநியாயமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கிடவும் துரியோதனச் சக்ரவர்த்திக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்திட வேண்டும் என்ற உந்துதலினாலும், ஆனால், வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிக்கொண்டும் இருந்த அசுவத்தாமன், பண்டவர்களின் பாசறை இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் படுத்தான். ஆனாலும் என்ன செய்ய முடியும் என்பது அசுவத்தாமனுக்குப் புரியவே இல்லை. அந்தச் சமயத்தில் அவன் படுத்திருந்த மரத்தின்மேல் அலறல் சத்தம் கேட்டது. அசுவத்தாமன் உற்றுக் கவனித்தான். மரத்திலிருந்த கோட்டான்கள் சில, தமக்கு வசதியான இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரத்தில் கண் தெரியாத காக்கைகளைத் தங்களுடைய இரையாக்கிக் கொள்வதைக் கவனித்தான். அதுதான் இந்த அலறலுக்கான காரணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி: இதற்குமுன் போர்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் மோதிக்கொண்ட நிலைநின்று நடத்திய (Positional) யுத்தம். ஆனால், மரத்தடியில் படுத்திருந்த அசுவத்தாமனுக்குக் கோட்டான்களின் மூலம் கிடைத்த பாடம், எதிரி உறங்கும்போது கொல்ல முயலும் யுத்தம். இரவில் நடத்தும் கொரில்லா யுத்தம். உலக இலக்கியங்களில் முதன்முறையாக, ‘கொரில்லா யுத்தத்தின்’ சாராம்சத்தை மகாபாரதத்தில்தான் பார்க்கிறோம். உடனே அசுவத்தாமன், தன் யுத்த முறையை வகுத்துக்கொண்டான். அதன்படி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாய் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து, அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாண்டவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் ‘பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன்’ என்று ரத்தம் வடியும் கையைக் காட்டி, அவனை மனங்குளிர வைப்பது அசுவத்தாமனின் திட்டம். அதன்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த பாசறைக்குள் அசுவத்தாமன் கிருபாச்சாரியாருடன் நள்ளிரவில் புகுந்தான். பாசறைக்குள் பலர் படுத்திருப்பதைக் கண்டான். இருட்டில் அவர்கள் முகங்களும் உருவங்களும் சரியாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி அசுவத்தாமன் அங்கே படுத்திருந்த அனைவருடைய கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் வந்து, “துரியோதனா.. வெற்றி உன்னுடையதே! இந்த நிசப்தமான இரவில் பாண்டவர்கள் அனைவரையும் ரத்தம் வடியும் இந்த கைகளினால் கண்விழிகள் பிதுங்கப் பிதுங்கக் கொன்றுவிட்டேன். அதனால், யுத்தத்தில் நீதான் வெற்றி பெற்றாய். கடைசியாக உன் தலைமைச் சேனாதிபதியாக உனக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். அதனால் மனநிம்மதியுடன் வெற்றி வீரனாக சொர்க்கம் போவாயாக!” என்று துரியோதனனிடம் அசுவத்தாமன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கிருஷ்ணனும் பாண்டவர்களும் வந்து சேர்ந்தார்கள்.“அசுவத்தாமா.. இது என்ன பேடித்தனம். அந்தப் பாசைறையில் படுத்திருந்தவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் பிறந்த பால்குடி மறவாப் பாலகர்கள். அவர்களைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கிருஷ்ணன் கடிந்துகொண்ட பின்னர்தான், அசுவத்தாமனுக்கு, தான் இரவில் பாண்டவர்களுக்குப் பதிலாக, பாண்டவர்களின் மைந்தர்களைக் கொன்றுவிட்டோம் என்பது புரிந்தது. அசுவத்தாமனால் பதில் பேசமுடியவில்லை. மௌனமாக இருந்தான்.“அசுவத்தாமா.. இந்தக் கொடூரச் செயலுக்கு உனக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். ஆனால் நீ சிரஞ்சீவி. அதனால் உன்னைக் கொல்ல முடியாது. இந்த பஞ்சமகா பாதகத்தைச் செய்த பிராமணனாகிய நீயே உன் தோல்வியை ஒப்புக்கொள். அதுதான் உனக்குத் தக்க தண்டனையாக இருக்கும்” என்றான் கிருஷ்ணன். அசுவத்தாமன் அதற்கு ஒப்புக்கொண்டான். தன் தலையில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு ஒளிரும் மணியைத் தன்னுடைய சரணாகதியின் அடையாளமாக, அசுவத்தாமன் கிருஷ்ணனிடம் எடுத்துக் கொடுத்தான். அதுமட்டும் அசுவத்தாமனுக்குப் போதுமான தண்டனை ஆகாது என்பதால், “நீ மனித உருவத்தை இழப்பாய். ஆனால் நீ சிரஞ்சீவி என்பதால் வனாந்திரங்களில் ஓலமிட்டுக்கொண்டு ஓடும் ஊழிக்காற்றாய்க் காலம் முழுக்கத் திரிந்தலைவாய்” என்று கிருஷ்ணன் அசுவத்தாமனுக்கு சாபம் கொடுத்தான். அதுமுதல் அசுவத்தாமன் வனாந்திர ஓலமாகத் திரிகிறான் என்கிறார் வியாசர். முதல் கொரில்லா யுத்தம் பல்வேறு காரணங்களினால் தோற்றுப்போயிற்று என்பது உண்மையெனினும், பல நாடுகளில் இந்த யுத்த முறையைக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்யம் போன்ற வல்லரசுகளையே மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் என்பதைச் சரித்திரத்தின் ஏடுகள் சொல்கின்றன. இதில் உள்ள சட்டப் பிரச்சனை என்னவெனில், குருக்ஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்னர், இரண்டு படைகளின் தலைமைச் சேனாதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து, யுத்தத்தை எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார்கள் என்கிறது மகாபாரதம். இரவு வரும் முன்னே யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இரவு நேர யுத்தம் என்றால் அது இரு தரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்றும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காயமுற்றவர்களை யுத்தகளத்திலிருந்து அகற்றி, வைத்திய சாலையில் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னோடு யுத்தம் செய்யாத வீரனை மற்றொரு வீரன் தாக்கக்கூடாது என்றும் பல யுத்த விதிகளை அந்த இருதரப்புக் கூட்டத்தில் வகுக்கிறார்கள். ஒரு விசித்திரம் என்னவென்றால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யுத்த நியதிகள்தான் தற்போது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள யுத்த நியதிகளின் முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை. பிரச்சனை என்னவெனில், துல்லியமாக வரையறுத்த இந்த நியதிகளை, சிரஞ்சீவியாக வாழ வரம்பெற்ற ஒரு பார்ப்பன வீரன் மீறி, ஒரு பாவமும் அறியாத பாலர்களை இரவில் கழுத்தை நெறித்துக் கொல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நியதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; தர்மசாத்திரம் பயின்றவர்கள் செய்யும் செயலுமல்ல. இன்று சில பார்ப்பனர்கள், தாங்கள் குற்றமே இழைப்பதில்லை என்றும் சட்டத்தின் ஆட்சியை மதித்து வாழ்பவர்கள் என்றும் மற்ற அடுக்குகளில் வாழ்பவர்களைவிட மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள் என்றும் அர்த்தமில்லாமல் பீற்றுகிறார்கள். அவர்கள், குரு துரோணரின் மகனான அசுவத்தாமன் செய்த கொடுஞ்செயலைப்பற்றி மகாபாரதத்தில் உள்ள கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். ‘மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள்’ என்பதை அசுவத்தாமன்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார்  என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய  வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம்  மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள்  கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 10

11. மகாபாரதத்தில் தாசியும் நவீன பாரதத்தில் கொத்தடிமையும் திருதராஷ்டிரன் ஏன் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன வியாசர், அதற்கு திருதராஷ்டிரனின் தலைவிதியோ கர்மாவோ காரணம் என்று சொல்லி மழுப்பவில்லை. திருதராஷ்டிரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகப் பிறந்தததற்கு, அவனுடைய தாய் அந்நியருடன் உறவு கொள்வதை எண்ணி, கண்ணை மூடிக்கொண்டதால் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து என்று கூறிக் கதையை நகர்த்துகிறார். முதல் நாள் இரவு, நன்கு அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தள்ளப்பட்ட அம்பிகை, பயங்கரமான உருவத்தில் இருந்த வேறொரு ஆணுடன் கலவி முடியும்வரை, கண்ணை இறுக மூடிக்கொண்டுவிட்டாள். அம்பிகை, கலவியின்போது கண்ணை இறுக மூடிக்கொண்டதால், திருதராஷ்டிரன் பார்வை  இல்லாத மாற்றுத்திறனாளியாகப் பிறந்தான் என்கிறார் வியாசர். அம்பாலிகையும் வியாசருடன் சகஜமாக உறவில் ஈடுபடவில்லை. மிகுந்த கூச்சத்துடன் நடந்துகொண்டதால் உடல் வெளுத்தும் மலடனாகவும் பாண்டு பிறந்தான் என்கிறது மகாபாரதம். ஆகவே, இரண்டு மனைவியர் இருந்தும் சாபத்திற்கு முன்பே அவனுக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதுபோகவும் அம்பிகையின் சேடிப் பெண்ணாக வேலை பார்த்த ஒரு பெண்ணையும் வியாசருடன் உறவு கொள்ள வைத்தார்கள். அந்த வேலைக்காரப் பெண்ணிற்குப் பிறந்தவன்தான் விதுரன். இந்தச் சம்பவங்களின்படி பார்த்தால், திருதராஷ்டிரனும் பாண்டுவும் சத்ரியர்களாக மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் விசித்ர வீரியனின் வாரிசுகளாக அரச பதவி பெற்றனர். அவர்களுடைய சகோதரன் விதுரன் மட்டும் சூத்திரனாகவே நடத்தப்பட்டான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் என்பதால், ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஆவார்கள். ஆனால், விதுரனின் தாய் வேலைக்காரி (தாசி) என்பதால், மற்ற இருவரும் விசித்திர வீரியனின் புதல்வர்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதும், விதுரனை விசித்ரவீரியனின் மகனாக அன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் ஏறத்தாழ, கர்ணன் பாண்டுவின் புத்திரனாகக் கருதப்படமாட்டான் என்ற சட்ட நிலைப்பாட்டோடு ஒத்த நிலைப்பாடாகும். விதுரன், பெரிய நீதிமான் என்று கொண்டாடப்பட்டவன். கிருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தன். அவன் கையில் இருந்த சிவதனுசு, உலகை வெல்லக்கூடியது. விதுரனால் சொல்லப்பட்ட சமூக நீதிகளை ‘விதுர நீதி’ என்ற பெயரில் தொகுத்துள்ளார்கள். திருதராஷ்டிரன் அரசவையில் முக்கிய அமைச்சராக இருந்த விதுரன், பல சமயங்களில் பாண்டவர்களை ஆதரித்துப் பேசும் வழக்கமுள்ளவனாக இருந்தான். அது துரியோதனனை எரிச்சலடைய வைத்தது. கிருஷ்ணன் ஊசிமுனை நிலம் கேட்டு சமாதானத் தூதுவனாக வந்தபோது, ‘நீ என்ன இருந்தாலும் தாசி மகன் (வேலைக்காரியின் மகன்)தானே’ என்று விதுரனை துரியோதனன் கடுமையாக வசை பாடினான். கர்ணனுக்குத் தன் தாய் யார் என்று தெரியாததால் ஏற்பட்ட அவமானத்தைவிட, தன் தாய் யார் என்பது தெரிந்ததால் விதுரன் சொல்லொணா அவமானப்பட்டான். பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி என்ற காரணத்திற்காக, அரசாட்சிப் பொறுப்பேற்கும் உரிமையைத் தன் தந்தை இழந்ததும் மூத்தவன் இருக்கும்போது இளையவன் மன்னனானதும் துரியோதனனை நிலைதடுமாற வைத்த மோசமான சட்ட நிலைப்பாடுகள். இவை ஒருபுறமிருக்க, ‘தாசி மகன்’ (வேலைக்காரியின் மகன்) என்றழைக்கப்பட்ட விதுரனின் தாயையும் அவளைப் போல அந்தப்புரங்களில் பணியாற்றிய வேலைக்காரப் பெண்களைப் பற்றியும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் அடிமைச் சமுதாயம் ஒருபோதும் இருந்ததில்லை என்பது சில தத்துவ ஆசிரியர்களின் கருத்து. அடிமைச் சமுதாயத்தைக் கடந்துதான் நிலப் பிரபுத்துவ சமுதாயம் ஏற்பட்டது என்று வாதிடுவோரும் உண்டு. இந்தச் சர்ச்சை இன்றும் முடிவில்லாத சர்ச்சையாக இருக்கிறது. அந்தப்புரப் பெண்களுக்குப் பணிவிடை செய்து அந்தப்புரத்திலேயே வாழும் பெண்களை, வேத வியாசர் ‘தாசி’ என்ற பெயரில்தான் அழைக்கிறார். ‘தாசி’ என்ற சொல்லுக்கு, வேலைக்காரி என்ற அர்த்தம் மட்டுமின்றி அடிமை என்ற அர்த்தமும் உண்டு. ஆனால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யயாதியின் கதையில், அசுர குருவின் (பிராமணர்) மகள் தேவயானியை, யயாதி மணந்தபோது அசுரர்களின் அரசனின் மகளான சர்மிஷ்டை, அவளுடைய தீய செயலுக்கு (வேறொன்றுமில்லை.. அசுர குருவின் மகள் தேவயானியை அரசனின் மகள் என்ற நிலையில் அவமதித்தாள்) தண்டனையாக தேவயானியின் ‘தாசி’யாக அனுப்பப்படுகிறாள் என்கிறது  மகாபாரதம். அதுமட்டுமன்றி, பின்ளாளில் யயாதி, சர்மிஷ்டையை தேவயானிக்குத் தெரியாமல் மணந்துகொண்டதால், தேவயானியை சமாதானம் செய்வதற்காக அசுர குரு சுக்கிராச்சாரியார், ‘உன்னுடைய யௌவனம் இப்போதே அழிந்து நீ முதுமை எய்துவாயாக’ என்று யயாதிக்கு சாபம் கொடுத்ததாகவும் மகாபாரதம்  சொல்கிறது. யயாதியின் கதை தனிக்கதை. அதை ‘தாசி’ பற்றிய பதப் பிரயோகத்தை விளக்குவதற்காக இங்கே குறிப்பிட நேர்ந்தது. தாசி என்பவள் ஒரு மணப்பெண்ணுக்கு தரப்படும் சீர்வரிசைப் பொருளைப்போல, எந்த உரிமையும் இல்லாத ஒரு அஃறிணைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதத்தில் பார்க்கிறோம். அதனால் ‘தாசி’யை விரும்பி மணந்த யயாதி, சபிக்கப்பட்டான். விதுரனின் தாய் அவளுடைய விருப்பமின்றியே வியாசருடன் உடலுறவு கொள்ளும்படி செய்யப்பட்டாள். இந்த அடிமைமுறை, இப்போது இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘கொத்து’ என்றால் உணவு என்று அர்த்தம். ‘கொத்தடிமை’ என்றால் உணவை மட்டும் கொடுத்து அடிமையைப் போல 24 மணி நேரமும் முதலாளிகளுக்கு உழைக்க வைக்கப்படுபவர்கள் என்று பொருள். கொத்தடிமை முறை இப்போது பெரும்பாலும் செங்கல் சூளைகளில்தான் இருக்கிறது. அங்கே, பள்ளிக்கூடம் போகவேண்டிய மாணவர்கள் வறுமையின் காரணமாக, ‘கொத்தடிமை’ ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் விலங்குகளைவிடக் கேவலமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப்படுவதுடன், ஒரு சுதந்திர நாட்டில் எந்த மனித உரிமையும் இல்லாமல் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். இப்போது இந்த முறை ‘சுமங்கலித் திட்டம்’ என்பதுபோல, பல்வேறு பெயர்களில் நூற்பாலை முதல் பல்வேறு தொழில்களில் கால் பதித்துவிட்டது. எங்கே இந்தக் கொத்தடிமை முறை வழக்கில் இருக்கிறதோ, அங்கே பெண்கள் எஜமானர்களின் காமப் பசிக்கு இரையாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. ‘கொத்தடிமை’ முறை குற்றம் என்று சட்டம் அறிவித்துவிட்டாலும் மகாபாரதக் காலத்தில் இருந்ததைப்போல், இன்றும் அது வழக்கில் இருப்பதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. இப்போது, ‘தொழில் வளர்ச்சியின்’ மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துகிறோம் என்ற சாக்கில், அந்நிய முதலாளிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைக்கும் அரசுகள், அவர்கள் தொழில் நடத்த சாதகமான சூழலை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இதுவரை 8 மணி  நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக்க முயல்கிறார்கள். 8 மணி நேர வேலை – 8 மணி நேர ஓய்வு – 8 மணி நேர ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்று, ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் மே தினத் தியாகிகள் பெற்றுத்தந்த மனித உரிமையைப் பறிப்பதற்கு, எல்லாவிதமான பசப்பு வார்த்தைகளையும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேசுகின்றன. 12 மணி நேர வேலை என்பது, வேறு வடிவத்திலான கொத்தடிமை முறை என்பதை இந்தியத் தொழிலாளர் வர்க்கம் அறியும். எனவே, வேலை நேரத்தை அதிகரித்து அதிக உபரி மதிப்பை லாபமாகப் பெற, தொழிலாளர் வர்க்கத்தைக் கொடும் சுரண்டலுக்கு உள்ளாக்கி, தொழிலாளியை குடும்பம், சமூகம்,அறிவியல் மற்றும் கலையில் ஈடுபாடு முதலான எல்லா அம்சங்களில் இருந்தும் அந்நியப்படுத்த முன்னெடுக்கப்பட்ட முயற்சி, இப்போது தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுவிட்டாலும், அந்த அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்பதால், அதை எதிர்க்க சதா விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியமாகிறது. அன்றாடம் காய்ச்சிகளான கட்டடத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கூலிமுக்குகள்’ அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்தத் துறையில் வேலைநேரம் முறைப்படுத்தப்படாமல், கடும் உடல் உழைப்பினால் மாடமாளிகைகளைக் கட்டவேண்டியுள்ளது. அவர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. அந்தக் கூலி முக்குகள் கடும் போட்டியின் காரணமாக, ‘கொத்தடிமைச் சந்தைகளாக மாறிவருவதை, ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பொய் பேசும் அரசியல்வாதிகள், கருத்திலேயே கொள்வதில்லை என்பது வேதனையான விஷயம். அதனால் மகாபாரதக் காலத்தில் ‘அடிமை முறை’ இருந்ததா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சமுதாயத்தில் ‘நவீனக் கொத்தடிமை முறை’ இந்தியாவில் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9

10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான்  காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில்  அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி  யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன்,  அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து  கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது.  மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில்  தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும்  கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள்.  ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே,  நான் பிரமச்சாரியாக  வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, தட்டையாக அறிமுகம் செய்யமாட்டார். உபகதைகளைப் போலவே ஒரு அபூர்வமான நிகழ்ச்சியின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அறிமுகப்படுத்துவதும் மகாபாரதம் மாபெரும் இதிகாசமாக விளங்குவதற்குக் காரணமாக உள்ளது என்பது பலருடைய அபிப்பபிராயம். யாராலும் மறித்து நிறுத்த முடியாத கங்கையின் நீரோட்டத்தை மறிப்பவன், ஈடு இணை இல்லாத அஸ்திரப்பயிற்சி பெற்ற மாவீரனாகத்தான் இருக்க முடியும் என்று சந்தனு மகாராஜன் நினைத்தான். அப்போது கங்காதேவி மனிதவடிவில் சந்தனு மகாராஜன் முன் தோன்றினாள். “நீ வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன்தான் உன் மகன். அவன் பெயர் தேவவிரதன். அவனுக்குப் போர்க் கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளும் கற்றுத் தந்து மாபெரும் ஆளுமையாக்கி இருக்கிறேன். இனி அவன் என்னிடமும் உலகத்திடமும் கற்றுக்கொள்ள எந்த வித்தையும் பாக்கி இல்லை. எனவே நீ அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ” என்று சொல்லி, தேவவிரதனை சந்தனு மகாராஜனிடம் ஒப்படைத்தாள். சந்தனு மகாராஜன் தேவவிரதனைக் கட்டித் தழுவிக்கொண்டு, கங்காதேவி சொன்னபடியே தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். அதுமுதல், தேவவிரதனை கங்காபுத்ரன் என்று உலகம் அழைத்தது. வழக்கமாக, புதல்வரையும் புதல்வியரையும் தந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவர்களின் மகன்/மகள்’ என்று இப்போது அழைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தாயின் பெயரைச் சொல்லி அவருடைய மகன்/ மகள் என்றழைக்கும் பழக்கம் பரவலாக அப்போது வழக்கத்தில் இருந்தது இதன்மூலம் தெரியவருகிறது. மகாபாரதக் காலத்தில் தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாறும் போக்கு (transition) நிகழத் தொடங்கி இருந்தாலும் தாய்வழிச் சமுதாய வாழ்முறையே பெருமளவில் வழக்கில் இருந்ததை இது காட்டுகிறது. நமக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில்கூட, வியாசர் உட்பட எந்தவொரு கதாபாத்திரமும் தேவவிரதனை ‘சந்தனு புத்ரன்’ என்று அழைத்ததாகத் தெரியவில்லை. பாண்டவர்களை ‘குந்தி புத்திரர்கள்’ என்று அழைப்பார்கள். ‘பாண்டுவின் புத்திரர்கள்’ என்றழைப்பது அபூர்வம். கர்ணனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கிருபாச்சாரியரும் பாண்டவர்களும் ‘தேரோட்டியின் மகன்’ அல்லது ‘ராதேயன்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சி கண்டார்கள். இப்படி இருக்கையில், சந்தனு மகாராஜன் மீண்டும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் வசம் மையலில் விழுந்தான். மீனவப் பெண்ணின் தந்தை விதித்த பல நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததால், சந்தனு மகாராஜாவால் சத்யவதியை மணம் முடிக்க முடியவில்லை. அதனால் ஊனும் உயிரும் உருகி உருக்குலைந்து போனான். அதை அறிந்த தேவவிரதன், தன் தந்தை சந்தனு மகாராஜனுக்கு சத்யவதியைத் திருமணம் செய்து வைக்க, சத்யவதியின் தந்தையிடம் பேசினான். சத்யவதியின் தந்தையான மீனவர் தலைவன் அதிபுத்திசாலி. “என் மகளின் அழகுக்கு, அவளுக்குப் பிறக்கப்போகும் மகன் மன்னனாக வேண்டியவன். மகாராஜாவின் மூத்த மகனாகவும் பட்டத்து இளவரசனாகவும் நீங்கள் இருக்கும்போது, என் மகளின் மகன் எப்படி மன்னாக முடியும்?’ என்று சத்யவதியின் தந்தை தேவவிரதனிடம் கேட்டான்.“நான் இப்போதே பட்டத்து இளவரசன் என்ற பொறுப்பைத் துறக்கிறேன். அதுமட்டுமன்றி என் வாழ்நாள் முழுவதும் இளவரசனாகவோ மன்னனாகவோ முயற்சிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று தேவவிரதன் கூறி சத்தியம் செய்தான். இருந்தும் சத்தியவதியின் தந்தை திருப்தி அடையவில்லை. “நீங்கள் பட்டத்து இளவரசனாகவோ மன்னனாகவோ மாட்டேன் என்று சத்தியம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பின்னாளில் உங்களுக்குத் திருமணமாகி உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் உங்கள் பிள்ளைகள் அரசனாகும் உரிமையைக் கோரலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மகளின் மகனுக்கோ அவனது பிள்ளைகளுக்கோ அரசனாகும் வாய்ப்பு இல்லாமற் போய்விடுமே” என்றான் சத்தியவதியின் தந்தை. உடனே தேவவிரதன், “என் வாழ்நாளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இது சத்தியம்” என்று சத்தியம் செய்தான்.உடனே வானிலிருந்து “பீஷ்ம, பீஷ்ம” என்ற முழக்கம் கேட்டது. பீஷ்மன் என்றால் ‘செய்தவற்கரிய செய்பவன்’ என்று பொருள். சத்ரியர்கள் மட்டுமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லிவந்த பீஷ்மருக்கு, சத்யவதியின் வாரிசுகள் என்ற வகையில் குருவம்சமே மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள் என்பது நினைவில் இல்லாமல் போனது விந்தையான உண்மை. தற்போது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் மகாபாரதத்தில் சத்திரியர்களாக முன் நிறுத்தப்படும் அனைவரும் சத்யவதி என்ற மீனவ குலப் பெண்ணின் வழித்தோன்றல்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்த்தால், கர்ணணின் மகன் விருஷகேதுவை, சூத்திரன் என்ற காரணத்தினால் முடி சூட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்த பீஷ்மரின் சட்ட நிலைப்பாடு சரியானதாகத் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். சத்யவதியும் சந்தனு மகாராஜனும் திருமணம் செய்த கொண்டு இல்லறம் நடத்தியதன் பயனாக, சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சித்திராங்கதன் இறந்துபோனான். விசித்திர வீரியன் அரசனான். காசி தேசத்து இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவருக்கும் சுயவரம் நடக்க இருப்பதை பீஷ்மர் கேள்விப்படுகிறார். அவர்களை, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். பீஷ்மர் வில்வித்தையில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமனுக்கு மட்டுமே இணை வைத்துப் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான வில்லாளி. அவருடைய போர் செய்யும் ஆற்றல்பற்றி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். அதேபோல, அவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர் என்பதும் தெரியும். இந்தச் சூழலில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் சுயவரத்துக்கு பீஷ்மரே நேரில் வந்ததைப் பார்த்து சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களும் திகைத்துப் போயினர். அவர் விசித்திர வீரியனின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதுவே இதுவரை இல்லாத நடைமுறை. அதிலும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர் சுயம்வரத்தில் பங்கு கொள்வது என்பது கேள்விப்படாத விநோதம் மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனையும் தர்ம நியதிப் பிரச்சனையுமாகும். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுக்காக, சுயம்வரத்தில் அவனுடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டாலும் அது பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீஷ்மர் சுயம்வரத்தில் பங்கு கொண்டிருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரும் அரச பதவி வேண்டாம் என்றவருமான பீஷ்மருக்கு இளவரசிகள் மாலை சூட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆக, பீஷ்மரின் சபதம் மீனவப் பெண்ணின் மகனுக்கு அரச பதவியைக் கொடுத்தது என்றால், அவரது வீரம் அவரது பிரம்மச்சரிய விரதத்தைக் கேலிப் பொருளாக்கி இன்னொரு அற மீறலுக்கும் காரணமாகிவிட்டது. (புதன்கிழமை தொடர்வோம்)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)