திருப்பூர் எனும் திருப்புமுனை – 15
சாயத்தொழில் காப்பாற்றப்பட வேண்டும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரின் இந்தப் பகுதியில் வங்கதேசம் குறித்து எழுதுவதாகவே திட்டம். சாய ஆலைப் பிரச்சனை குறித்து மேலும் விவரமாக எழுதவேண்டும் என்று பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, மேலும் சில தரவுகளை இந்தப் பகுதியில் பதிவு செய்கிறேன். துணிகளுக்குச் சாயமிட வேதியியல், கனிமங்கள், உலோகங்கள், தாதுக்கள் உள்ளிட்ட கலவைகளுடன் கூடிய டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் உபயோகப்படுத்தப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிலை இது. துணிகளுக்குச் சாயம் ஏற்றிய பிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரில் நான் மேலே குறிப்பிட்ட வேதியியல், கனிமம், தாது, உலோகம் சார்ந்த பொருட்கள் இயற்கைக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. உடனடியாகத் தீங்கு விளைவிக்காவிட்டாலும் நாளடைவில் விளைவுகள் மிகக் கடினமானதாகவே இருக்கும். இந்தக் கழிவு நீரின் காரணமாகவே நொய்யல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஒருகட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சாயத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டது. பூஜ்ய முறை சுத்திகரிப்பு செயல்படுத்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடுவது தடுக்கப்பட்டதோடு, தற்போது மறுசுழற்சி முறையில் தண்ணீர் சாயமேற்றப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து முந்தைய பகுதியில் விவரித்துள்ளேன். 300 ஆலைகளுக்கு 18 பொதுச் சுத்திகரிப்பு அமைப்புகளும் 60 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் சிறப்பாக இயங்கிவருகின்றன. தற்போதைய பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள விடயம், சுத்திகரிப்பிற்குப் பின் எஞ்சும் ஸ்லட்ஜ் எனச் சொல்லப்படும் வேதியியல் எச்சங்களை, சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு இலவசமாகக் கொடுத்தாலும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதே நிதர்சனம். உப்பைப் பிரித்து மீண்டும் உபயோகிக்கும் தொழில்நுட்பம் சோதனை முறையில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்தக் கழிவுகளைக் கடலுக்கு அருகில் எடுத்துச்சென்று மீண்டும் அதைக் கரைத்துக் கடலில் விடுவதற்கான ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சிகளையெல்லாம் இங்குள்ள தொழில்முனைவோர்களும் சாய ஆலைகள் சங்கமும் மட்டுமே முன்னெடுக்கின்றன. பொதுவாக, ஒரு நிறுவனம் தொடங்கி, அதை நடத்தி, தொடர்ந்து மேம்படுத்தி, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அந்த நிறுவனத்தைக் கொண்டுசெல்வதே ஒவ்வொரு தொழில் முனைவோரின் பணி. ஆனால் சாய ஆலைத் தொழில் முனைவோர்களைப் பொறுத்தமட்டில் கடந்த பல வருடங்களாகவே சுத்திகரிப்பு குறித்த விடயத்திலேயே தங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதும் இதனால் தொழில் மேம்பாடு குறித்துச் சிந்திக்கவே நேரமற்று இருப்பதும் வேதனைக்குரிய விடயம். இந்த இடத்தில்தான் அரசின் ஆதரவு பெருமளவில் தேவைப்படுகிறது. அரசு மிகப்பெரிய அதிகார பலம் மற்றும் கட்டமைப்பைக் கொண்டது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களால் இதுபோன்ற பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தர இயலும். ஆனால் அப்படி எந்தவொரு முயற்சியும் அரசுகள் எடுத்ததாக நான் அறியவில்லை. வட்டி இல்லாக் கடனும் மானியமும் மட்டுமே தொழிலைக் காப்பாற்றிவிடும் என்கிற அரசின் எண்ணம் தவறானது. ஏனெனில், தொழில் அமைவதற்கு மட்டுமல்ல; அது தொடர்ந்து சிக்கல் இல்லாமல் செயல்படுவதற்கும் அரசுகளின் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும். சுத்திகரிப்பிற்கான செலவில் 45 % மின் கட்டணத்திற்கே செலவாகிறது. அதிலும் தற்போது மாநில அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வு, தொழிலைக் கடுமையாக பாதித்துள்ளது. அது மட்டுமல்ல; பூஜ்ய நிலை சுத்திகரிப்புடன் இயங்கும் ஆலைகளில் சாயமிடும் கட்டணம் அதிகம். அதே நேரத்தில் எவ்வித சுத்திகரிப்பு அமைப்புகளும் இல்லாமல், பிற மாவட்டங்களில் இயங்கும் முறையற்ற சாய ஆலைகளும் குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் பிற மாநில சாய ஆலைகளும் சுத்திகரிப்புக் கட்டணமின்றி சாயமேற்றுவதால் இங்குள்ள தொழிற்சாலைகள் கடும் பாதிப்பினைச் சந்திக்கின்றன. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களும் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று முறையற்று இயங்கும் தொழிற்சாலைகளைத் தேடிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். கடும் போராட்டத்திற்கிடையே இயற்கையை பாதிக்காத வண்ணம் பெரும் நெருக்கடியில் உள்ள முறையாக பூஜ்ய முறை சுத்திகரிப்பினைக் கடைபிடிக்கும் ஆலைகளுக்கே வர்த்தக வாய்ப்புகளை வழங்க வேண்டும். பூஜ்ய முறை சுத்திகரிப்பு ஆலைகள் பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களாக இயங்குகின்றன. அவை தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில் பராமரிப்புச் செலவு கடுமையாக உயரும். அரசு உடனடியாகச் செய்யவேண்டியது, பொதுச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை அளிப்பதும் (இது தற்காலிகத் தீர்வு மட்டுமே) சூரிய ஒளி மற்றும் காற்றாலை அமைக்க நிலம், மானியம் மற்றும் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். சூழலியல் சார்ந்த உற்பத்தி மட்டுமே அடுத்து வரும் 10 ஆண்டுகளில் சாத்தியம். தமிழ்நாடு அதற்கு முன்னோடி மாநிலமாக உலகளவில் அறியப்படவேண்டும். திருப்பூர் சாய ஆலைக் கழிவினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரத்துப்பாளையம், நாளது தேதியில் பல்வேறு முயற்சிக்குப் பிறகு நல்ல நிலையை எட்டியுள்ளது. மேற்கொண்டு இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இந்தப் பகுதி ஒரு சுற்றுலாத் தளமாகவே அறியப்படும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நொய்யலில் சாயக் கழிவுநீர் மட்டுமா செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. கோவையிலிருந்து புறப்படும் நொய்யல், காவேரியில் கலக்கும் வரை வழிநெடுக உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெளியேற்றும் அனைத்துக் கழிவுநீரும் நொய்யலில் கலக்கிறது. எனவே, அணைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உடனடியாகக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தவேண்டும். மேலும் இறைச்சி, மருத்துவம், கட்டடடக் கழிவுகளும் அதிகளவு நொய்யலில் கொட்டப்படுகின்றன. இதனைத் தடுக்கக் கடுமையான கண்காணிப்பும் அதிகபட்சத் தண்டனையும் அளிக்கும் சட்டங்களை அமல்படுத்தவேண்டும். இல்லையெனில் தொடர்ந்து நொய்யலின் சீர்கேட்டிற்குத் திருப்பூரை மட்டுமே அடையாளப்படுத்தும் செயல்கள் நடந்தேறும். அரசு, சாய ஆலை அதிபர்கள், உற்பத்தியாளர்கள் தொடர்ந்து உரையாடலை மேற்கொண்டு, சாய ஆலைகள் எவ்விதச் சிரமமுமின்றி இயங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு தரவைச் சொல்லி நிறைவு செய்கிறேன். கடந்த 7 -8 ஆண்டுகளில் சாயத் தொழிலில் முதலீடுகள் செய்யப்படுவது மிகச் சொற்பமே. காரணம், கடந்த இரண்டு அத்தியங்களிலும் குறிப்பிட்டதே. பின்னலாடைத் தொழிலின் பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகவே உள்ளது. இதை களையும் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படவேண்டும். விலைப் போட்டியில்தான் நாம் பெரும்பாலும் பின்தங்குகிறோம். தற்போதைய சாயமிடுவதற்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, பூஜ்ய முறை சுத்திகரிப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் முழுக் கொளளவிற்கு இயங்கினால் மட்டுமே சாயத்தொழில் மேம்படும். அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து இயங்கும் இந்த அமைப்புகளுக்கு சர்வேதேச அங்கீகாரம் பெற்றுத்தர அரசு முன்வரவேண்டும். உலகிலேயே பூஜ்ஜிய முறை சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே உள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளிலும் பூஜ்ய முறை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு கடுமையாக உத்தரவிடவேண்டும். இதில் தொழிலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலச் சந்ததிகளுக்கு வாழத்தகுந்த பூமியை விட்டுச் செல்லும் நோக்கமும் உள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் குறைவான கட்டணத்தில் உற்பத்தியாளர்களுக்குச் சேவைகளை வழங்க இயலும் என்பதே நிதர்சனம். வங்கதேசத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.