மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10