மார்க்சின் தோழன்

மார்க்சின் தோழன்

ஏங்கெல்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் பிரெடரிக் ஏங்கல்ஸ் மார்க்சிய மூலவர்களில் ஒருவர். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் என்ற இரட்டையர்கள் இல்லாது மார்க்சியம் இல்லை. ஒரு திட்டவட்டமான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் இருவரும் பணியாற்றினர். அந்த இரு மேதைகளும் வாழ்நாள் தோழர்களாய் இணைந்து நவீன கம்யூனிச இயக்கத்தின் முதல் சிற்பிகளாய்/மூலவர்களாய் விளங்கினர். மார்க்சைவிட இளம் வயதிலேயே, தனது 24ஆம் வயதிலேயே இன்றும் போற்றப்படும் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற நூலை எழுதியதில் தொடங்கி, தனது இறுதிக்காலத்தில் மார்க்ஸின் மூலதனத்தை வெளியிடுவது வரை ஏங்கல்ஸ் மார்க்சிய ஞானரதத்திற்கு அளித்திட்ட செல்வங்கள் ஏராளம். ஏங்கல்ஸின் முழுப் படைப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது இயலாத ஒன்று. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் கூட்டு மேதமைகளுக்குள் நுழைந்து பயணப்படாத எவரும் ஒரு மார்க்சியவாதியாக இருக்கமுடியாது. இவர்களது நட்பைப்பற்றி லெனின் கூறும்போது, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரிடையே நிலவிய உறவு, முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது என்கிறார். ஏங்கெல்ஸ் என்றும் மார்க்ஸின் தோழன் என்றே அறியப்படுகிறார். பிரெடரிக் ஏங்கல்ஸ் 1820ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி பார்மன் என்ற இடத்தில் பிறந்தார். உப்பர்டால் என்றழைக்கப்பட்ட பார்மன், ஜெர்மனியில் உள்ள ஒரு சிற்றூர். பணக்கார தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த இவர், உழைப்பாளிகளின் ஏழ்மையைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் இப்பகுதியில் நிலவிய மத ஆதிக்கத்தை – அதன் போலித்தனத்தை வெறுத்தார். இளமையிலேயே அவர் மத எதிர்ப்பாளராக விளங்கினார். இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளை, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியத்தை ஆர்வத்தோடு கற்றவர். ஜெர்மனியை ஆண்ட நான்காம் பிரெடரிக் வில்லியம் என்ற சர்வாதிகாரி, கருத்துச் சுதந்திரத்தை அறவே இல்லாமல் இருக்கச் செய்தார். இதன் காரணமாக மதம் சார்ந்த கருத்துக்கள், மூடநம்பிக்கைகள் வலுவாகச் செயல்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மதத்தையும் அரசனையும் எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதத் தொடங்கினார். அவரது தொடக்கக் காலத்தில் அவற்றைக் கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். அந்தக் கவிதைகளில் விடுதலைபற்றிய கருத்துக்களிருந்தன. 1839ஆம் ஆண்டு ‘உப்பர்டால் கடிதங்கள்’ என்ற தலைப்பில் கடிதங்களை எழுதினார். இவை அவர் மதத்தின் பிடியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. டேவிட் ஸ்ட்ராஸ் எழுதிய ஏசுவின் வாழ்க்கை என்ற நூல், விவிலியம் தெய்வீகத் தன்மை வாய்ந்தது அல்ல என்றும் அது ஆரம்பக்காலக் கிறிஸ்துவக் குழுக்களில் தோன்றிய சில தொல்கதைகளின் தொகுப்பு என்றும் குறிப்பிட்டார். இந்நூல்தான் ஏங்கல்ஸின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானியான ஹெகலின் உலகம், பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் எண்ணம் அல்லது கருத்துதான் முக்கியம் என்பதிலிருந்து ஏங்கல்ஸ் வேறுபட்டார். அதேநேரத்தில் ஹெகல் பயன்படுத்திய இயங்கியலை ஏற்றுக்கொண்டு அதை சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தினார். எல்லாப் பொருள்களும் மாறுகின்றன; காலாவதியானவற்றையும் அறிவுக்குப் பொருத்தமற்றவற்றையும் அகற்ற வேண்டும் என்ற இயங்கியல் கருத்துகளைக் கொண்ட இடதுசாரி மனோபாவம் கொண்ட இளம் ஹெகலியர்களின் தொடர்பு ஏற்பட்டது. மதம் பற்றிய இளம் ஹெகலியர்களின் விமர்சனம், அரசியல் பற்றிய கருத்துகள் ஏங்கல்ஸை அவர்கள்பால் ஈர்த்தன. இவ்வாறாக நாத்திகவாதியாக, இயங்கியல்வாதியாக மாறிய ஏங்கல்ஸ் ‘புனிதக் குடும்பம்‘ (1845), ‘ஜெர்மானியக் கருத்தியல்‘ (1864) ஆகிய இரு நூல்களை மார்க்ஸுடன் இணைந்து எழுதினார். புனிதக் குடும்பம் என்பது புருனோபார் என்பவரையும் அவரது சகாக்களையும் விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூல். இந்நூலில் ஹெகலின் கருத்து முதல்வாதம் விமர்சிக்கப்படுகிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் விளக்கப்படுகிறது. நூலில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றியும் தத்துவத்தின் வரலாறு பற்றியும் பேசப்படுகிறது. நியாயவாதிகளின் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரையும் கொள்கை அறிக்கை தயாரிக்கும்படி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கம்யூனிசத்தின் அடிப்படைகள் என்ற துண்டுப் பிரசுரத்தினை கேள்வி – பதில் அடிப்படையில் ஏங்கல்ஸ் தயார் செய்தார். இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் தயார் செய்தார். அந்த அறிக்கையினை “பாடல்களின் பாடல்” என்றழைத்தார் ஸ்டாலின். மார்க்ஸால் எழுதப்பட்ட தத்துவத்தின் வறுமை என்ற நூலிற்கு ஏங்கல்ஸின் மகத்தான பெரும் பங்கு உண்டு. சொத்து என்பதே திருட்டு என்று கூறிய பிரெஞ்சு சோசலிஸ்ட் புருதானை விமர்சனம் செய்து எழுதப்பட்ட நூலிது. பல நாடுகளிலிருந்து மார்க்ஸின் கொள்கைகளை விளக்கிப் பல நூல்கள் வெளிவந்தபோதிலும் மார்க்சியத்தை விளக்கி முதன்முதலாக எழுதப்பட்ட ‘டூரிங்கிற்கு மறுப்பு‘ என்ற நூல், ஏங்கல்ஸின் நூலாகும். இந்நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில் டூரிங் என்ற தத்துவவாதி மார்க்ஸின் கருத்துகளைத் திரித்துக்கூறியபோது அவரை எதிர்த்து ஏங்கல்ஸ் எழுதிய நூலாகும். டூரிங், அடிப்படையில் கருத்து முதல்வாதி. சில எண்ணங்களின் அமைப்புகள்தாம் உலகிற்கே அடிப்படை என்றதை மறுத்து வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயங்கியல் விதிகள், சோசலிசம் பற்றிய பல விளக்கங்களை நூலில் தருகிறார் ஏங்கல்ஸ். மார்க்சியம் கற்க விரும்புவர்களுக்கு இது விலைமதிக்க முடியாத கையேடெனலாம். மார்க்ஸின் மூலதனம் பற்றி என்ற சிறு நூலில் அதன் சுருக்கத்தை வெளியிட்டார். இதைப் படிப்பதன்மூலம் மார்க்ஸின் மூலதனத்தின் மூன்று பாகங்களில் உள்ளதை அறிந்துகொள்ள முடியும். பாரீசில், கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றித் துயரப்பட்டுக்கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869 சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870, செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் ஏங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். ஏங்கல்ஸ் அரசாங்கம் பற்றிக் கூறும்போது “வர்க்கங்களாக சமூகம் பிரியும்போது அரசாங்கம் ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள வர்க்கத்தின் கருவியாகவே மாறுகிறது” என்கிறார். “அரசு பொருளாதாரத் திசையை மாற்றிவிடுகிறது. அரசு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. ஆனால், அதன் நோக்கம் பொருளாதார விஷயங்களைக் கட்டுக்குள் வைப்பதுதானே ஒழிய, தீர்மானிப்பதல்ல. இது ஒரு வகையான இயங்கியல் உறவு ஆகும்” என்று விளக்கமளிக்கிறார். விவசாய வர்க்கத்துக்குள்ளாக சிறு, நடுத்தர, பெரிய விவசாயிகள் எனப் பல பிரிவுகள் உள்ளன. கூலி விவசாயிகள் தனியானவர்கள். இவர்களில் பாட்டாளி வர்க்கக் கட்சி, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை அணுகவேண்டும். ஏனென்றால் கையளவு நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இயந்திரமயமாகும்பொழுது இந்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இவர்கள் பாட்டாளிகளாக மாறும் தன்மை உள்ளவர்கள். ஆனால் பரம்பரையாக இவர்களிடம் ஊறியிருக்கும் சொத்துரிமை என்ற உணர்வு, இவர்களை நிலத்துடன் பிணைத்து வைத்துவிடுகிறது. இவர்களைக் கட்டாயப்படுத்தி நிலத்தை விட்டுவிடச் செய்யக்கூடாது. அவர்களாகவே முன்வந்து ஒன்றிணைந்து கூட்டுறவு முறையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தின் அழிக்கும் செயலில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் சோசலிசக் கட்சிப் பிரச்சனையை அணுக வேண்டும். பெரும் நிலச்சுவான்தார்கள், அவர்களது குத்தகைதாரர்கள் ஆகியவர்களை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டும் என்று விளக்கமளிக்கிறார். மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மார்க்ஸின் இணைபிரியாத் தோழர், விஞ்ஞானபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை நிறுவிய, தொழிலாளி வர்க்கத்தின் சக்திகளை உலக அளவில் ஒன்று திரட்ட முன்கையெடுத்தவர் பிரெடரிக் ஏங்கல்ஸ்.

மார்க்சின் இலக்கிய மனம்

மார்க்சின் இலக்கிய மனம்

நூலறிமுகம் காரல் மார்க்ஸ் அன்பும் இருதயமும் ஒன்று சேர்ந்த மனிதர். ஸ்டூவர்ட்மில், பெட்டி, ஜான் பெல்லர்ஸ், பெய்லி, ஆதம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிய அரசியல் பொருளாதார நிபுணர்கள், ‘முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வடிவம் அழிவற்றது; இறுதியானது’ என்ற தங்களுடைய கருத்தை எழுதி, மக்களை நம்ப வைத்துவிட்டனர். முதலாளித்துவம் அதனை வரித்துக்கொண்டு சட்டங்களாகவும் வேதங்களாகவும் ஆக்கியது. ‘இதை மாற்ற வேண்டும்; மாற்ற முடியும்’ என்று தனது பகுப்பாய்வின் மூலம் தெரியப்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் எழுதிய எழுத்துக்கள், வெறும் பொருளியல் தத்துவங்கள் என்றில்லாமல், இலக்கிய வளமும் நயமும் கொண்டவை என்று இந்த நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. வால்டேர், ஷீல்லர், ரூஸோ, கான்ட் போன்ற முற்போக்காளர்களுடைய கருத்துக்களால் இவரது இல்லம் சூழ்ந்திருந்தது, குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல அடிப்படையாக அமைந்திருந்தது காரல் மார்க்சிற்கு.  புரோகிதத்தை வெறுத்த மார்க்ஸின் தந்தை ஹைன்ரிக் மார்க்ஸ், ஓர் அறிஞர்; விடாமுயற்சி உடையவர்; மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்; மதத்தின் மீது பற்றில்லாதவர். இவரது தாய் ஹென்ரிட்டே ஒரு டச்சுக்கார யூதர். கிறிஸ்தவர்களாகப் பின்னர் மாறினர். சிறு வயது முதலே கவி பாடும் திறன் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ். இலத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகள் தெரிந்தவர் அவர். பின்னாளில் ரஷ்ய இலக்கியங்களைக் கற்க, ரஷ்ய மொழியைக் கற்றார். கிரேக்கக் காவியங்களைப்  படித்தார். இவர் பிறந்த ஊரான டிரியருக்கருகிலுள்ள பான் நகரத்தில் படிக்கும்போது, அங்கிருந்த கவிஞர்கள் சங்கத்தில் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். மார்க்சின் குடும்ப நண்பர், ஜென்னியின் தந்தை லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலன் கலைச்சுவை நிரம்பியவர். கிரேக்கக் காவியங்களிலிருந்து, ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலிருந்து, அநேக பாகங்களைப் பாராமல் ஒப்பிப்பதோடு, அழகாக விளக்கவும் செய்வார். இவரது உறவு மார்க்சை இளம் பருவத்திலேயே இலக்கிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இவர் மார்க்சிற்கு ஹோமர், ஷேக்ஸ்பியர் போன்ற ஆகச்சிறந்த கவிஞர்களை அறிமுகப்படுத்தியதோடு, ஷேக்ஸ்பியரின் வரிகளையும் மார்க்சிற்குப் படித்துக் காண்பித்தார். இத்தகைய சூழல் காரல் மார்க்ஸ்க்கு கவிதை ரசனையைத் தூண்டி, அழகியலில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. காரல் மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையை, லுத்விக் வான்வெஸ்ட் ஃபாலனுக்கு சமர்ப்பணம் செய்தார். அவ்வப்போது தான் எழுதிவைத்திருந்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு கையெழுத்துப் புத்தகமாக ஜென்னிக்கு அனுப்பியுள்ளார் காரல் மார்க்ஸ். ‘கலை ஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கிற கோயில்’ என்று ஒரு கவிஞனால் வர்ணிக்கப்பட்ட பெர்லின் பல்கலைக்கழகத்தில், அவர் எடுத்துக்கொண்ட பாடங்களில் இலக்கியமும் ஒன்று. படிக்கும் காலத்திலே ஜென்னியை நினைத்து, பல காதல் கவிதைகள் இயற்றியுள்ளார். இலக்கியப் படைப்புகளிலிருந்து சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் தனது தத்துவ ஆளுமையை உயர்த்திக்கொள்வதில் தன்னை வளர்த்துக்கொண்டார். சமுதாயச் செழுமைக்குப் பயன்படாத எந்த இலக்கியமும் இலக்கியம் அல்ல என்பது இவரின் மையக் கருத்து. மக்களுடைய ஆவலைப் பிரதிபலிக்கக் கூடியதாக, மக்களின் எண்ணத்தை உயர்த்துவதற்காக, எதிர்கால வாழ்க்கையை லட்சியப்படுத்திக் காட்டுவதற்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று கருதியதால் ‘மூலதனம்’ நூலைக்கூட இலக்கியக் காட்சியும் இலக்கிய நயமும் உடையதாகப் படைத்தார் மார்க்ஸ். பாட்டாளி வர்க்க அரசியலுக்காக இயங்கிய தோழர் மார்க்ஸை, பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கக் கட்சியின் தோழர் போல் லபார்க் லண்டனில் சந்தித்தபோது, மார்க்ஸின் அரசியல் மதிப்போடு அவரது இலக்கிய ஈடுபாட்டையும் தனது நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ‘காரல் மார்க்ஸிற்கு ஹைனே, கதே பாடல்கள் மனப்பாடம். உரையாடலின்போது அவர் அடிக்கடி பாடல்களை எடுத்துக் கூறுவார்; ஐரோப்பியக் கவிஞர்களின் படைப்புகளை உற்சாகத்தோடு படிப்பார்; ஸ்காட்லாந்து தேசத்துக் கவியின் நையாண்டிக் கவிதைகளையும் வீர காவியங்களையும் தம் புதல்வியர் ஒப்பிக்கும்போதோ பாடும்போதோ மிக மகிழ்ச்சியுடன் அவற்றைக் கேட்பார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இலக்கிய ரசனையைத் தனக்குரிய தன்னிறைவாகக் கருதாமல், விமர்சனப்பூர்வமாக உள்வாங்கி, உரிய நோக்கத்திற்கு ஜனநாயகப்பூர்வமாகப் பயன்படுத்தினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட மார்க்ஸ், அவற்றை மூலதனம் என்ற தன் படைப்பில் திறம்படக் கையாண்டார். ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மூலதனத்தில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். ‘ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில், நிலப் பிரபுத்துவம் சிதைவதையும் பூர்ஷ்வாக்கள் எழுச்சி பெறுவதையும் சித்தரித்திருக்கிறார்’ என்பது மார்க்சின் கருத்து. ஏதன்ஸ் நகர டிமன் என்ற நாடகத்தில், நாடகக் கதாநாயகன் மூலம் பணம் பற்றி ஒரு ஆழ்ந்த விமர்சனத்தை முன் வைத்ததை, ‘ஏ பாவ ஜென்மமே.. வா! மனித குலத்தின் வேசியே வா! உன் பணியைச் சரியாகச் செய்யவிடுகிறேன்’ என்ற கவிதை வரிகளை விளக்கும்போது, காரல் மார்க்ஸ், ‘பணம் மனிதனது பண்புகள் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. நடக்க முடியாததை நடத்திக் காட்டுகிறது. உண்மையைச் சிதைக்கிறது. மனிதத் தன்மையை மாற்றுகிறது. அது அவனது அந்நியமான திறமையாகும். மனிதனாகச் செய்ய முடியாததை, பணத்தின் மூலம் மனிதன் செய்கிறான். எனக்குப் பிடித்தமான உணவு வேண்டும் என்றால், நான் தபால் வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பணம் அதனைச் செய்துவிடுகிறது’ என்று எழுதுகிறார். மூலதனம் முதல் தொகுதியில், தென் அமெரிக்கச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்நிலை பற்றி ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். ‘450 அடி ஆழத்திலிருந்து, உலோகங்களைத் தோளில் தூக்கிச் சுமந்துவரும் தொழிலாளர்களைப் பற்றி, தம்மளவில் இந்தத் தொழிலாளர்கள் ரொட்டி உண்பதையே விரும்புகிறார்கள். ஆனால் ரொட்டி உண்பதைக் காட்டிலும் குதிரைகள் தின்னும் மொச்சையைத் தின்றால் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி இன்னும் மேம்பட்டுக் கிடைக்கும் என்று கருதிய சுரங்கத் தொழிலதிபர்கள், தொழிலாளர்களை மொச்சை தின்னக் கட்டாயப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் சொந்த நுகர்வைக்கூட மறுதலிக்கும் முதலாளித்துவம், தனது ஆதிக்கத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது, மூலதனத்தின் உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது’ என்பதை இலக்கிய நயத்தோடு எடுத்துச் சொல்கிறார் கார்ல் மார்க்ஸ். இது போன்ற பதிவுகளை இந்நூலில் பரக்கக் காணலாம். சமுதாய வளர்ச்சி, வாழ்நிலைகளின் சூழலில் இலக்கியத்தைப் பயன்படுத்துகிறார். புதுவுலகப் படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில், சமுதாய மாற்றத்திற்காக மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற, இலக்கியத்தையும் அதனோடு ஒப்பிட்டு அரசியலையும் அயராது கற்போம்; கசடறக் கற்போம்; அதன்படி நிற்போம். இதற்கு ஒரு துளி அளவேனும் பயன்படும் விதத்தில் இந்நூலைப் பழுதற வாசிப்போம். நூல்: மார்க்ஸின் இலக்கிய மனம்ஆசிரியர்:  துரை. சண்முகம்வெளியீடு: கீழடி பதிப்பகம்பக்கங்கள் : 40விலை: ரூபாய் 40தொடர்புக்கு : 9176 587 245

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).