நெடுங்கணக்கு – பகுதி 2

நெடுங்கணக்கு – பகுதி 2

https://naarkaram.com/p-2022-0605/ நெடுங்கணக்கு பகுதி 1 – ஐ இந்த இணைப்பில் வாசிக்கலாம். தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகள்:தமிழ் நெடுங்கணக்கின் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றை கால்டுவெல் அவர்கள் குறிப்பிடுகிறார் : தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளைப் போன்றே தமிழும், ‘எ’ மற்றும் ‘ஒ’கரத்தின் குறில், நெடில்களைக் குறிக்க தனித்தனி வடிவெழுத்துக்களைப் பெற்றிருக்கிறது. இந்த குறில், நெடில் வடிவெழுத்துக்களைப் பிரித்துக்காட்டும் குறிகள் முதன்முதலாக பெச்சி பாதிரியாரால் இணைக்கப்பட்டன. ‘ழ்இ’, ‘ல்ழ்இ’ என்ற அரை உயிர்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஒலிகளை யொத்த ஒலிகளை குறிக்கும் வரிவடிவ எழுத்துகள் தமிழில் இல்லை என்கிறார் கால்டுவெல். மேலும் சமஸ்கிருத அனுஸ்வரா ஒலிகளையும் தமிழ் நெடுங்கணக்கு மேற்கொள்வதில்லை என்கிறார். தமிழில் மூக்கெழுத்துகள் மிகவும் உறுதியானவை. தனித்தியங்கும் ஒலிகளை உடையவை. இவற்றில் இயற்கையான ஒலியை உடையது ‘மகர ஒலி’ ஒன்றே என்கிறார் கால்டுவெல். ‘ம’கரத்தைத் தொடர்ந்து, ‘க’ வரும் போது, ‘ம’கரம் மெல்லின மெய்யாகிய ‘ங’ வாக மாறுகின்றது என்கிறார். மகரத்தைத் தொடர்ந்து ‘ச’வும், ‘ட’வும், ‘த’வும் வந்தால் அம்மகரம் முறையே ‘ஞ’ வாகவும், ‘ண’ வாகவும், ‘ந’ வாகவும் மாறுகின்றது; இதில் ‘ச’ வை ‘அண்ண எழுத்து’ என்றும், ‘ட’ வை ‘நாவெழுத்து’ என்றும் ‘த’வை ‘பல்லெழுத்து’ என்றும் குறிப்பிடுகிறார் கால்டுவெல். தெலுங்கு மொழிக்கே உரிய ‘அரை அனுஸ்வரா’ எழுத்தையொட்டிய எழுத்து எதுவும் தமிழில் இல்லை என்றும் வல்லின மெய் எழுத்துகளின் முன், அவற்றிக்கினமான மெல்லின மெய் எழுத்துகளை அமைத்து, அவ் வல்லின மெய் எழுத்துகளின் வன்மையொலியைக் குறைத்து இனிய ஒலியாக மாற்றுவதே அரை அனுஸ்வார ஒலித் தோற்றம்; அம்முறை தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்தில் காணப்பெறும் வலிய ஒலிகளுள் எதையும் கடன் வாங்கியது கிடையாது. தனித்து இயங்கும் இயல்புடைய ‘ஹகர’ ஒலியையும் தமிழ் ஏற்றுக் கொள்வதில்லை என்கிறார். சமஸ்கிருத ‘விஸர்க்க’த்தை ஒத்த அரை உயிரும், அரை மெய்யுமாகக் கருதப்படும் ஆய்தம் என்ற எழுத்தைத் தமிழ் கொண்டுள்ளது. மேலும், சமஸ்கிருத மிடற்றுஒலி, ‘ஹ’கரம் போல ஒலிக்கப்பெறுகின்றது. அது பெரும்பாலும் செய்யுள்களில் மட்டும் இடம் பெறுகின்றது. அது புலவர்களுக்காக, பயனின்றித் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து (விஸர்க்கம்) என்கிறார். சமஸ்கிருதம், தன் மெய் எழுத்துகளை தேவநாகரி வர்க்க முறையைக் கையாண்டு வகைப்படுத்தி வரிசைப் படுத்தியுள்ளது. அதே முறையையே தமிழும் கையாண்டுள்ளது என்கிறார் கால்டுவெல். தமிழ் நெடுங்கணக்கு, முதல் வரிசையாகிய மிடற்று எழுத்துகளில், ‘க’ வையும், அதற்கு அடுத்து மூக்கெழுத்தாகிய ‘ங’ வையும் மேற்கொண்டு, இடையில் உள்ள ‘கஹ’,‘க’, ‘கஹ’ என்ற எழுத்துகளை நீக்கிவிட்டது. இரண்டாம் வரிசையாகிய அண்ணவெழுத்துகளில் ‘ச’ வையும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ஞ’வையும் மேற்கொண்டு, ‘சஹ’,‘ ஐ’, ‘ஐஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. மூன்றாவது வரிசையாகிய தலைவளி எழுத்துகளில் ‘ட’வும், அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ண’வையும் மேற்கொண்டு, ‘டஹ’,‘ ட’, ‘டஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. நான்காவது வரிசையாகிய வல்லெழுத்துகளில் ‘த’வையும், அதற்கின மூக்கெழுத்தாகிய ‘ந’ வையும் மேற்கொண்டு, ‘தஹ’, ‘த’, ‘தஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. ஐந்தாவது வரிசையாகிய இதழ் எழுத்துகளில், ‘ப’ வையும் அதற்கு இன மூக்கெழுத்தாகிய ‘ம’வையும் மேற்கொண்டு, ‘பஹ’, ‘ப’, ‘பஹ’ எழுத்துகளை நீக்கிவிட்டது. இவ்வாறு தேவநாகரியின் ‘ஹகர’ ஒலி மெய் எழுத்துகளை அறவே தமிழ் நீக்கிவிட்டது என்றும் அந் நெடுங்கணக்கின் மெல்லொலி மெய் எழுத்துகளையும் நீக்கிவிட்டது என்றும் கூறும் கால்டுவெல், தமிழில் வடிவெழுத்து ஒன்றே ஓர் இடத்தில் வல்லொலி உடையதாகவும் மற்றொர் இடத்தில் மெல்லொலி உடையதாகவும், தமிழுக்கே உரிய ஒலி முறைப்படி குறிக்க மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அவ்வடிவெழுத்து தேவநாகரி வர்க்கத்தின் முதல் எழுத்தாகிய வல்லொலி எழுத்து என்றும் கூறுகிறார் கால்டுவெல். தேவ நாகரி எழுத்துகளோடு வேறு நான்கு எழுத்துகளையும் தமிழ் இணைத்துக் கொண்டுள்ளது என்று கூறும் கால்டுவெல், இடையின ‘ழ’, வல்லின ‘ற’, லகர, ரகர ஒலிக்கலவை என்று கருதப்படும் இடையின ‘ள’, மெல்லின ‘ன’ ஆகிய நான்கு எழுத்துகளையும் குறிப்பிடுகிறார். ‘இஸ்’ என்ற ஒலியைத் தரும் சமஸ்கிருத எழுத்துகள் எவையும் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறவில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஒலிக்கும் போதும், எழுதும் போதும் தமிழ், ‘ஷ­’, ‘ஸ’ என்ற ஒலிகளை மேற்கொண்டாலும் இவ்வெழுத்துகள் பழந்தமிழ் இலக்கணத்திலோ, இலக்கியத்திலோ இடம் பெறவில்லை என்றும் தமிழ் நெடுங்கணக்கிலும் இடம் பெறவில்லை என்றும் கூறுகிறார் கால்டுவெல். சமஸ்கிருத ‘ஸ’ என்ற எழுத்து தமிழில் என்றும் இடம் பெற்றதில்லை என்றும் சமஸ்கிருத ‘ச’ என்ற ஒலியோடு ஒத்த ஒலியை உடையதும் தனித்து எழுதினால் ‘ஸ’ எனவும், இணைத்து எழுதினால் ‘ச’ எனவும் ஒலிக்கப் பெறும் ‘ச’கரமே தமிழில் ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். திராவிட ஒலிப்பு முறைதமிழ் நெடுங்கணக்குகளின் வரிசை, அமைப்பு முறை விளக்கிய கால்டுவெல் திராவிட வடிவெழுத்துகளின் ஒலிப்பு முறைகளை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்ற பகுப்பு முறையில் விரிவாக விளக்குகிறார். உயிர் எழுத்துகள் : தமிழ் உயிர் எழுத்துகளில் ‘அ’கர ஒலியே கடினமான ஒலி என்றும் அதனால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. சில இடங்களில் ‘எ’ எனவும் மாறுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். அதற்கு எடுத்துக் காட்டாக, சமஸ்கிருத ‘பலம்’, தமிழில் ‘பெலம்’ எனவும், ‘ஜபம்’, ‘செபம்’ எனவும் மாறுவதை கூறுகிறார். ஈற்றில் வரும் ‘அ’கரம் தமிழில் ‘ஐ’ காரமாக மாறுகிறது. கன்னடத்தில் அது பொதுவாக ‘எ’கரமாக மாறுகிறது என்கிறார். மலையாளத்தில் இன்றும் ‘அ’கரம், வழக்குத் தமிழில் பெரும்பாலும் ‘ஐ’காரமாகவும், தெலுங்கில் ‘இ’கரமாகவும், கன்னடததில் ‘உ’கரமாகவும் மாறுகிறது என்கிறார் கால்டுவெல். ‘அவ’ என்னும் சுட்டு, தமிழில் ‘அவை’ எனவும் தெலுங்கில் ‘அவி’ எனவும், கன்னடத்தில் ‘அவு’ எனவும் மலையாளத்தில் ‘அவ’ என்றே வருகிறது என்கிறார். இதுதான் ‘ஈற்று அ’ என்று ஒலிப்பு முறை எப்படி மாறுகின்றது என்பதை விளக்குகிறது. குறில் ‘அ’ இரண்டு இணைவதால் ‘ஆ’ தோன்றுகிறது. அது செய்யுளில் ஒ என மாறுகிறது. எடுத்துக்காட்டாக, விண் + அ+வ்+அர் = விண்ணவர், விண்ணோர். கன்னடத்தில் குறில் ‘அ’கரமும் ‘ஒ’கரமாக மாறும். சமஸ்கிருத உயர்திணைப் பெண்மையைக் குறிக்க வரும் ‘ஈற்று ஆ’, தமிழில் ‘ஐ’ என மாறும் என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டாக, விருப்பம் என்ற சொல் சமஸ்கிருத்தில் ‘ஆஸா’, தமிழில் ‘ஆசை’ என்று மாறுகின்றது. சமஸ்கிருத ‘சித்ரா’, தமிழில் ‘சித்திரை’ என்று திங்கள் ஒன்றின் பெயராக வருகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார். இதே ‘ஆ’, கன்னடத்தில் ‘எ’என மாறும். எடுத்துக்காட்டாக சமஸ்கிருத ‘கங்கா’ தமிழில் ‘கங்கை’ என்றும், கன்னடத்தில் ‘கங்கெ’ அல்லது ‘கங்கெயு’ என்றும் மாறும் என்கிறார் கால்டுவெல். தமிழ் ‘ஐ’ காரம் ‘அ’கரத்தில் இருந்து தோன்றுகின்றது என்றாலும் இவ் ‘ஐ’ கார ஒலி ஒலிக்கும் பொழுது அவ் ‘அ’கர ஒலி அடியோடு மறைந்துபோதல் வியப்பாக உள்ளது என்று நுட்பமாக எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். இவ்வொலி, கிரந்த , மலையாள நெடுங்கணக்குகளில் ‘எஎ’ என இரண்டு ‘எ’கர எழுத்துகளாலும், கன்னட நெடுங்கணக்கில் ‘எ’, ‘இ’ என்று ஒலிகளின் கூட்டொலியை அறிவிக்கும் எழுத்து ஒன்றாலும் எழுதப்படுகிறது என்கிறார் கால்டுவெல். இரண்டாம் வேற்றுமை உருபு, மலையாளத்தில் ‘எ’ என இருக்க, அது தமிழில் ‘ஐ’ ஆக இருப்பது குறிக்கத் தக்கது என்கிறார் கால்டுவெல். தொழிற் பெயர்களின் இறுதி, கன்னடத்தில் ‘எ’ என இருக்க, தமிழில் ‘ஐ’ என இருப்பதும் ஆராயத்தக்கது என்கிறார் கால்டுவெல். ‘இ’,‘ ஈ’ இவை குறித்து கூறத்தக்கன எதுவும் இல்லை என்று கூறும் கால்டுவெல், திராவிட மொழிகளில் ‘ஊ’ காரம் நிலைத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது என்றாலும், குறில் ‘உ’, உயிர் எழுத்துகள் எல்லாவற்றிலும் மிக மிக மென்மையானதும் எளிமையானதும் ஆகும் என்கிறார். ஒலித்துணை, ஒலி நயம் காரணமாக, பெரும்பாலும் சொற்களின் ஈற்றில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். தெலுங்கு இலக்கண நடையில் ஒவ்வொரு சொல்லும் ‘உயிர் ஈறாகவே’ முடிதல் வேண்டும். உயிர் ஈற்று இல்லாமல் போகின்றபோது, ஈற்று மெய்யெழுத்துடன் ‘உ’கரம் இணைக்கப்படும் முறை சமஸ்கிருத்தில் இருந்து வந்த முறை என்கிறார் கால்டுவெல். ‘மகர’ ஈற்றுச் சமஸ்கிருத அஃறிணைப் பண்புப் பெயர்கள், தெலுங்கில் ‘மு’ என்றே முடிகிறது. எழுதும்போது உகரம் எழுதப்பட்டாலும் ஒலிக்கும் பொழுது பெரும்பாலும் ஒலிக்கப்படுவதில்லை என்கிறார் கால்டுவெல். கன்னடத்தில் ‘அ’கர ஈறாக முடியும் சொற்களின் ஈற்றிலும் ‘உ’கரம் சேர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக ‘சில’, ‘பல’ என்ற தமிழ்ச் சொற்கள், கன்னடத்தில் ‘கெலவு’, ‘பலவு’ என வருகிறது என்று எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லின மெய் எழுத்துகளை ஈறாக உடைய சொற்களோடு உகரத்தை இணைக்கும் தமிழ் முறை, கன்னட முறையோடு ஒத்துள்ளது என்கிறார் கால்டுவெல். இவ்வாறு இணைக்கப்படும் உகரம் அளவில் மிகவும் குறைந்து கால் கூறு அளவே ஒலிக்கிறது என்றும் கூறுகிறார். தமிழின் இக் ‘குறை உகரம்’ வட மலையாள மொழிகளில் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிழக்கு’ என்பது மலையாளத்தில் ‘கிழக்க’ என்று ஒலிக்கப்படுகிறது. துளு மொழியில் மேலும் விரிவாக ஆளப்படுகிறது என்கிறார் கால்டுவெல். தன்னை அடுத்து, குறை உகரமோ அன்றி, ‘அ’கரமோ இணைக்கப்பட்ட ஈற்று வல்லின மெய்கள், சில வேளைகளில் இரட்டிப்பாக ஒலிக்கும் என்றும், ‘சொல்’ என்று பொருள் தரும் சமஸ்கிருத ‘வாக்’, தமிழில் ‘வாக்கு’ என்றும் ‘நீர்’ என்று பொருள்படும் சமஸ்கிருத ‘அப்’, தமிழில் ‘அப்பு’ என்றும் ஒலிக்கும் என்கிறார் கால்டுவெல். திராவிட மொழிகள், ‘எ’கர, ‘ஒ’கரக் குற்றுயிர் ஒலிகளைப் பெரும் அளவில் மேற்கொள்கின்றன என்கிறார் கால்டுவெல். எகர, ஒகரங்களின் நெடில்களான, ‘ஏ’கார, ‘ஓ’கார ஒலிகளிலிருந்து குற்றுயிர் ஒலிகளைப் பிரித்து, தனி வடிவெழுத்துகளை கொண்டுள்ளது. இவ்வாறு தனிக்குறில்கள் சமஸ்கிருதத்தில் கிடையாது என்கிறார். சமஸ்கிருத மொழியில் அறவே இடம் பெறாத இவ்விரு ஒலிகளும், திராவிட மொழிகளில் பெற்றிருக்கும் இன்றியமையாப் பெருநிலை, திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழியின் தொடர்பற்ற தனி மொழிகளாகும் என்ற உண்மையை உறுதி செய்யத் துணை புரிவதாகும் என்கிறார். எகர, ஒகரக் குறில்கள் வரும் இடங்களில் அவற்றிற்கு ஈடாக, ஏகார, ஓகார நெடில்கள் அமைந்த சொற்கள் வந்தால் அவ்விரு சொற்களுக்கும் இடையே தோன்றும் வேற்றுமை, ஒலி நயம் குறித்து வந்ததாக இல்லாமல், சொற்களின் அடிப்படையையே, அச் சொற்களின் பொருளையே

நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலைப் படிக்க முயல்வது எவ்வளவு கடினமானது என்பதையும் அதனை வாசிக்க எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன். இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்சில குறிப்புகள்: துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் கால்டுவெல். கூ (கோண்டு) மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல். ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார். திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார். இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன. ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல். அடுத்து ஒரிய மொழி குறித்துக் கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஒரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். மேலும், ஒரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர். நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையைப் பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல். எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல். பிராமணர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்களில் இருந்தே இன்றைய தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல். அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில், பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார். ‘சமஸ்கிருதத்திற்கு முந்திய தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே எனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல். மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல். இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். ‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், ‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல். கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல். அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்தப் பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்குச் சான்றாகவும் இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல். அவ்வடிவெழுத்துகள், கொச்சியைச் சேர்ந்த யூதர்களும் கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும் அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல். தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல். எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாகத் தெரிந்திருக்கிறது என்பதிலிருந்து, அவர்களுக்கு தமிழின் தொன்மை குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘யூதர்களிடத்தும் சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும், மெய்யெழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு, அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல். ‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண்படுகிறார் கால்டுவெல். ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற் காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டு காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை, அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல். ‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல். ‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது, அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் – அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார். எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமை பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல். ‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக