ஒரு மரணத்தின் கதை

ஒரு மரணத்தின் கதை

சிறுகதை: ஆண்டன் பெனி நான் தவசி தாத்தா. இன்னைய தேதிக்கு ரொம்பப் பழைய மனுச உசுரு. ஏன்னா, எனக்கு இப்போ நூத்தி அம்பத்து நாலு வயசு ஆகுது. நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம். இந்த வயசுக்கும் என்கிட்ட கணக்கு இருக்கு. பென்சன் புக்கையும் வேலைக்குச் சேர்ந்த ஆர்டரையும் பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு இவ்ளோ வயசு ஆகுதுன்னு நிரூபிக்க, இன்னைய தேதிக்கு என்கிட்ட இருக்கிற ஆதாரம் அது ரெண்டும்தான். இதைத் தொலைச்சிட்டேன்னா, நான் உசுரோட இருக்கிறதுல அர்த்தமில்லங்கிறதும் உண்மை. வாரிசுபோல கூடயே இருக்குதுங்க. ஆறேழு தலைமுறைக்குப் பிறகும் உசுரோட இருக்கிறவனுக்கு, ஆதரவுன்னு ஒன்னு வேணுமில்ல? அதான். இதுபோக, நாலு வேட்டி சட்டை, ரெண்டு துண்டு, ஒரு தகரக் கட்டில். இதுவும் எப்பவோ வாங்கினது. என் நேரம்னு நெனைக்கிறேன், இன்னமும் பழுதாகாமக் கெடக்கு. இந்தத் தலைமுறை சனங்களுக்கு என்னையப் பத்தித் தெரிஞ்சதெல்லாம், கீழ்வீட்டுத் தாத்தா, இல்லனா காரை வீட்டுத் தாத்தா. நூறு வயசு முடிஞ்சி ஒரு பத்து வருசம் வரைக்கும், நான் பரபரப்பாத்தான் இருந்தேன். வேடிக்கை பார்க்க வர்றதும் பேட்டி எடுத்துப் போடுறதும்னு ரொம்பப் பரபரப்பாவே இருந்தேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நின்னுடுச்சி. இப்பவும் யாராவது பார்க்க வர்றாங்கன்னாலும், அடிக்கடி இல்ல. வீடே கதின்னு ஆகிருச்சி. வீட்டுக் கூரையும் எப்படி இன்னமும் விழாம இருக்குதுன்னு தெரியல. பக்கத்துல இருக்கிற வீடுகளும் பெருசு பெருசா வளர்ந்திருச்சி. இடிச்சிட்டு, புதுசா கட்டணும்னு தோனினது. பிறகு எதுக்குன்னு விட்டுட்டேன். எனக்கு படிப்புன்னு எதுவுமில்ல. ஆனாலும் கவர்மெண்ட் வேலை கிடைச்சது. பெரிய வேலைன்னு நினைக்க வேண்டாம். வெள்ளைக்காரத் துரைக்கு விசிறிவிடுற வேலை. அப்போ உடம்பு சும்மா கிண்ணுன்னு இருக்கும். கையும் காலும் இரும்புத்தூண் மாதிரின்னு சொல்லுவாங்க. அதனாலயே வேலை கிடைச்சது. தொடர்ச்சியா என்னால ரெண்டு மணி நேரம் விசிறிவிட முடியும். துரைக்கும் என் வேலை ரொம்ப பிடிச்சிப் போயிருச்சி. ஆபீஸ் வேலை மட்டும்தான். அதுவும் துரை ஆபீஸ்ல இருந்தா. வெளியில, வெளியூருக்கெல்லாம் கூட்டிட்டுப் போறதில்ல. ராயல் கமிசன்னு ஒன்னு, அரசாங்க வேலையில இருக்கிற எல்லோருக்கும் பென்சன்னு சொல்லிருச்சி. அப்படித்தான் எனக்கும் இந்தப் பென்சன் வருது. வெள்ளைக்காரங்க நாட்டைவிட்டுப் போனதுமே பென்சன் இல்லன்னு சொல்லிட்டாங்க. அரசாங்கத்துக்கு மனு மேல மனுப்போட்டு மினிமம் பென்சன் வாங்கினேன். துரைமாருங்க வீட்லயே இருந்ததால, கொஞ்சமா இங்கிலீசு வார்த்தைகள் தெரியும். பென்சன் பணம் ரெண்டாயிரத்துச் சொச்சம்னாலும் அப்பப்ப அதுக்கு அரியர்னு ஒன்னு கொடுப்பாங்க. அதுல வந்த காசுலதான் இந்த வீட்டு வேலைகளைச் செய்ய முடிஞ்சது. ரெண்டு துணிமணிகளும் வாங்கினேன். ஆனாலும், எனக்கு முன்னாடியே இந்த வீடு ஆயுச முடிச்சுக்கும்போல. இந்த வீடும் இல்லனா, இச்சி மரத்தடியிலதான் சின்னதா குடிசை போட்டு இருக்கணும். எனக்குன்னு யாரு வீடு கட்டிக்கொடுப்பா? இல்ல, வீட்டுலதான் சேத்துக்குவாங்க? இதுக்குப் பிறகு கட்டின எத்தனையோ வீடுக இப்ப இல்ல. என்கூடவே ஆயுச முடிச்சிக்கணும்னு இருக்குதுபோல. இப்ப கட்டுற கட்டடங்களுக்கு ஆயுசே அம்பது அறுபது வருசம்தான்கிறாங்க. இந்தக் கூரை எந்தலையில விழுந்துதான் ஆயுசு முடியும்னா, அத யாரால மாத்த முடியும்? சாப்பாட்டுக்குப் பென்சன் பணமே போதும். என்ன பெருசா சாப்பிடப் போறேன்? காலையில ராயல் டிபன் சென்டர்ல ரெண்டு இட்லி, ஒரு காபி. மதியம் அளவு சாப்பாடு. ராத்திரிக்கி எதுவும் சாப்பிடுறதில்ல. மதியச் சாப்பாடு செரிமானம் ஆகுறதுக்குள்ள விடிஞ்சிரும். நிறைய சாப்பாடுக் கடைகள் ஊருல இருந்தாலும் ரொம்பக் காலமா எனக்கு இதே கடைதான். அறுபது வருசம் முன்னாடி பொன்னாத்தா இட்லிக் கடைன்னு இருந்தது. காலம் மாற, சரவணன் சிற்றுண்டிக் கடைன்னு மாறி, இப்போ ராயல் டிபன் சென்டர்.  சாப்பிடுறதுக்கு உயிர் வாழ்றேனா, உயிர் வாழ்றதுக்கு சாப்பிடுறேனான்னு தெரியல. வேகமா நடக்க முடியலனாலும் மெதுமெதுவா குச்சிய ஊனிக்கிட்டு இச்சி மரத்துக்கு வந்துருவேன். வீட்டுக்கு வெளியில எனக்குன்னு இருக்கிறது இந்த மரமும் சாப்பாட்டுக் கடையும். கடைக்கு லீவு விடுறதுன்னா, மொத நாளே சொல்லிடுவாங்க. அன்னைக்கு மட்டும் வேற கடை. இச்சி மரத்துலேருந்து பெரிய அளவுல நிழல் இல்லனாலும் ஓய்வு நேரங்கள்ல ஊர்கூடி நிக்க அதவிட்டா வேற வழியும் இல்ல. இதுக்கு முன்னால ஊர் மந்தைவெளியில ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சி. பெருசுனா அப்படியொரு பெருசு. ஒரு சின்ன மழைக் காத்துக்கே விழுந்திருச்சி. அப்ப எனக்கு ஒரு எழுபது எழுபத்தஞ்சி வயசிருக்கும். அது இருந்தவரைக்கும் வெயில்தாழ சிறுசு பெருசுகெ எல்லாரும் அங்கதான் கெடப்பாங்க. ஒரு தெரு நீளத்துக்கு இருக்கும். ஊர் பஞ்சாயத்துலேருந்து சிறுசுகெ விளையாடுறதுவரைக்கும் அது நிழல்ல ஆளரவம் இருந்துக்கிட்டே இருக்கும். அது இல்லேன்னு ஆனபிறகு, வேற கதியில்லாம இந்த இச்சி மரத்துல கெடக்க வேண்டியதாப் போச்சி. ஆலமரத்தை நினைக்கும்போதெல்லாம் என் உசிர சாய்க்க அதுமாதிரி ஒரு சின்ன காத்து மழைதான் வரும்போலன்னு நினைச்சுக்குவேன்.   எனக்கு சாவு பயம் அதிகம். தூங்குற நேரம் தவிர, சாவு நினைப்புதான் எப்பவும். சாவு பயத்தையும் தாண்டி எனக்குன்னு இருக்கிற வேலை, சாப்பிடப் போக வேண்டியது, முடிச்சிட்டா திண்ணையில உக்காந்து வேடிக்கை பாக்க வேண்டியது, தூங்க வேண்டியது.  ஆரம்பத்துல என்கிட்ட, அந்தக் காலத்துப் பழைய கதைகளைக் கேட்டவங்களுக்கு, இப்ப நல்லது கெட்டது எல்லாமே போன்ல கிடைக்க, என் பக்கம் யாருமே வர்றதில்ல. எப்போ பேசுறதுக்குக்கூட எனக்கு யாரும் இல்லனு ஆச்சோ, அப்பவே எனக்கு சாவு பயம் போயி, இதுக்கு மேலயும் இருந்துதான் ஆகணுமான்னு மனசு நினைக்கத் தொடங்கிருச்சி.   வெறுமனே எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக்கிட்டே எப்படி இருக்கிறது? ஒரேமாதிரியா வாழ்க்கை போகுதுனாலும், பெருசா உடம்புக்கு முடியாமப் படுத்ததில்ல. உடம்பு சூடா இருக்குதுன்னு தெரிஞ்சாலே, ஊர் நர்சம்மாகிட்ட மாத்திரையும் மருந்தும் வாங்கிக்குவேன். அம்பது வருசமா அதே மாத்திரைதான். போட்டுட்டு படுத்தா நாள் முழுக்க படுத்தே கிடப்பேன். எங்க பெருசு நடமாட்டம் இல்லயேன்னு, ஒருநாளும் யாரும் கதவத் தட்டி என்னான்னு கேட்டதில்ல. செத்தா பொண நாத்தம் அடிக்குமில்ல, அப்பப் பாத்துக்கலாம்னு இருப்பாங்கபோல. இத்தன வயசுவரைக்கும் உசுரோட இருக்கிறது எம்மாம் பெரிய ஆச்சர்யம்ங்கிறது ஒரு பத்துப் பதினைஞ்சி வருசத்துக்கு முன்னமே முடிஞ்சிருச்சி. தவறாம பத்திரிக்கைக்காரங்க வர்றதும் டி.வி.காரங்க வர்றதுமா இருந்தது. மெடிக்கல் காலேஜ்காரங்ககூட என்னயக் கூட்டிட்டுப் போயி ஒருமாசம் வச்சி ஆராய்ச்சி பண்ணினாங்க. என்ன கண்டுபிடிச்சாங்கன்னு தெரியல, கொண்டுபோன கார்லயே திரும்பக் கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. வெளிநாடு, வெளிமாநிலக்காரங்களுக்கும் கண்காட்சிப் பொருளா இருந்த காலம் கடந்திருச்சி. இப்ப அவங்களுக்கும் நான் சலிச்சிப்போக, ஊரு உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இப்பெல்லாம் நானொரு வேண்டாத உசுரு. அவங்களுக்கெல்லாம் என்னோட சாவுக்குக் காத்திருக்கிற மாதிரி ஒரு பார்வை. சாதாரணமா கடந்து போயிடுறாங்க. அதனாலயே, நானே என்னை ஒரு அதிசயமான உசுரா பாக்கிற மனநிலை குறைஞ்சிக்கிட்டே போயி, இப்போ அப்படி எதுவும் இல்லேங்கிற நிலமைக்கு வந்திருச்சிங்கிறது என்னவோ உண்மைதான். ஆறு புள்ளைங்கள பெத்தேன்.  அதுங்களும் இல்ல, அதுங்க பெத்தது, அதுங்க பெத்ததுங்க பெத்ததுன்னு, ஒரு ஆறேழு தலைமுறைகூட இந்நேரம் கடந்திருக்கும். வாரிசுகள்ல யாருமே எழுபதைத் தாண்டல. எம்புள்ளைங்க காலத்துலயே, சின்ன மகன் தவிர மத்தவங்க, படிப்பு வேலைன்னு வெளியூர், வெளிமாநிலம்னு போயித் தங்கிட்டாங்க. நல்லது கெட்டதுன்னு வர்றப்போ பாக்கிறதுதான். பொறவு பேரன் பேத்திகெ நெனப்புல இருந்தது, அதுங்களுக்குப் பொறந்ததுகெ யாரையுமே நான் பார்த்ததில்ல.  சின்ன மகன் செத்த பிறகு, அவன் புள்ளைங்களும் வேலை அது இதுன்னு வெளியெடம் போயிட்டாங்க. அததுகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நாலு தலைமுறைக்கு முன்னால நம்ம கிளை எதுன்னு கண்டுபிடிக்கிற பொறுமை யாருக்கு இருக்கப்போகுது? தேடவும் அப்படியென்ன தேவை?  பாவம், இந்தக் கிராமத்துல வந்து என்ன செய்யப் போகுதுகெ? ஊரும் கிராமத்துக்கான அடையாளத்த தொலைச்சி, கிட்டத்தட்ட டவுன் மாதிரி ஆகிருச்சி. ஏரியில தண்ணி பார்த்து வருசமாச்சி. ஆறு இருக்கா இல்லையான்னே தெரியல. சாயங்காலமானா ஒரு மணி நேரத்துக்கு பறவைங்க அடையுற சத்தமே அப்படி சந்தோசமாயிருக்கும். இப்ப அப்படி எதுவுமே இல்ல. வெளியூருக்குப் பொழைக்கப் போன சனங்க ஒன்னு கூடுறதுக்குன்னு இருந்த திருவிழாவும் இப்ப இல்ல. ஊரு ரெண்டுபட்டதுல போட்ட பூட்டு, இன்னும் கோயில் நடைவாசல்ல தொங்குது. நானும் எந்தக் காரியத்துக்கும் தெருக்குள்ள போறதில்ல. வீடு, வீட்டவிட்டா இந்த மரம். சாவுக் காரியத்துக்குப் போனா, சிறுசுகெ, பொணத்தைப் பார்த்துட்டு, ‘அடுத்து நீதானே’ங்கிற மாதிரி என்னையப் பாக்குதுகெ. கல்யாணக் காரியங்களுக்குப் போனா, ’எங்கே நடுவாலே நான் செத்து, நல்ல காரியம் கெட்டிருமோ’ன்னு பயப்படுறாங்க. வருசா வருசம், உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்கப் பென்சன் ஆபீசுக்குப் போனா, ’அடுத்த வருசமும் வருவியா தாத்தா’ன்னு கேக்கும்போது கஷ்டமா இருந்தாலும், எதுவும் சொல்லாம திரும்பி வந்துருவேன். சாவுக்குப் பயந்த எனக்கு, நாளும் ஒருத்தராவது சாவை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்துறாங்க. நான் வேண்டாம்னு ஒதுக்குன சாவு, இப்ப எங்கயோ தூரமா போயிருச்சி. இவங்க கேக்குறாங்கன்னு சுயமாவா சாகமுடியும்? எனக்கு வெவரம் தெரிஞ்சதலேருந்து சாவுன்னா பயம். சாகாமலே இருந்திடணும்னு நெனப்பேன். அப்படியே செத்துட்டாக்கூட, ஒரு நூறு எறநூறு அடி ஒசரத்துல ஆவியா மெதந்துக்கிட்டு, இங்க நடக்குற எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கணும்னு ஒரு யோசனை இருக்கும். சொந்தமா செத்துப் போறவங்கள நினைச்சா ஆச்சர்யமா இருக்கும், ‘ஏன் இப்படி பொசுக்குன்னு போயிடுறாங்க? திரும்பி வரவே முடியாதுன்னா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்?’னு. ஒருகட்டத்துல சாவு பயம் அதிகமாகி, சைக்கிள்ல போறதயும் நிறுத்திட்டேன். சைக்கிள்ல போறதே அப்டீன்னா, கார், பஸ் இன்னும் பயம். நூறு வயசத் தாண்டும் முன்னாடியே “தாத்தா, உம்மோட உசுர, எமன் மொளகா வத்தல் பானையில வச்சிட்டானோ?”ன்னு ஊர்க்காரங்க பேசும்போது கோவம் வந்தாலும் ’போங்கடே’ன்னு வெரட்டி விட்டுருவேன். எதிர்பார்க்க ஆயிரம் விசயம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு, நான் எப்ப சாவேன்னு காத்துக் கெடக்குதுங்க சவங்கெ. நடமாட்டம் இருந்தா, நமக்குத் தேவையானத நாமே செஞ்சிக்கிட்டா, வயசானவங்கள யாரும் பாரமா நினக்கிறதில்லதானே? அதுலயும், பென்சன் பணம் வந்ததால யாரும் என்னய அப்படி நினைக்கல. மருமகெமாருங்க அப்படி இப்படின்னு பேசினாலும், மகன்களும் மகள்களும் என்னைய எப்பவும் விட்டுக் கொடுக்கல. அதுலயும், மூத்த மருமகனுக்கு நான்னா அம்புட்டு இஷ்டம். ‘மாமா மாமா’ன்னு கைக்குள்ளயே இருப்பாரு. ஊருலேருந்து வரும்போது எனக்குன்னு தீனி வாங்கியாருவாரு. புள்ளைங்க,

விதி

விதி

விதி ஓங்கி உயர்ந்த மரத்தில்இலைகளும் கிளைகளும்பறவைக் கூடும் பான்பராக் கறையும்பட்டைமேல் படர்ந்திருந்தன இலைகள் விழ விழமரம் தளர்ந்துமனநோயாளி ஆகவில்லைஅவ்வப்போதுபருவநிலை மாற்றத்தில்சில நாள் நிர்வாணமும்பல நாள்வழிந்தொழுகும் மேகமுமாய்அனிச்சை நிகழ்வாகின சில சமயம்கிளைகளில் சுளுக்கிருக்கும்அதற்கு யாரோ எறிந்தகுப்பை மூட்டையும்காரணமாய் இருக்கலாம்கால தாமத வானிலை அறிக்கையால்பல நேரம் காற்றும் கற்பழிக்கும் பூச்சிகளும் எறும்புகளும்குகையாய் மாற்றிக்கொள்ளும்வருடத்தில் என்றேனும்நேரமிருப்பின்மழையும் கொஞ்சம் முத்தமிடும்தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்இவை சலிப்பு தந்து தித்திக்கும் அவ்வப்போதுஉடலில் வலியும்முதுகுத்தண்டில் விரிசலும்என்றோ விழுந்த மின்னலில்உச்சந்தலைக் கருகலும்இவை ஏன் எனக்கு மட்டும் எனகேட்கத் தோன்றும் விழும் இலைக்கும்முறியும் தண்டுக்கும்விதிகள் ஏதுமில்லைஇயற்கையிலனைத்தும்மாற்றமெடுப்பவையே விதியின் ஓட்டத்தில் நிகழ்ந்தவைஎல்லாம் இயற்கையேகாய்ந்து விழுந்த இலைக்காகமரம் மரிக்கவில்லை ஓங்கிக் குட்டிய மின்னலுக்கும்நெடுக வளர்ந்த மரத்திற்கும்முன்பகை ஏதுமில்லைநிகழ்வுகள் நிச்சயமாயின்எவர் மீதும் பழி வீண்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்