மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 9
10. துரியோதனின் புகழ் துரியோதனன் பிறந்தபோது நரிகள் ஊளையிட்டதாகவும் கோட்டான்கள் கூவியதாகவும் கழுதைகள் கத்தியதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் துரியோதனனின் வருகையைப் பல்வேறு கெட்ட சகுனங்களோடு தொடர்புபடுத்தி அவன் பிறப்பை அறிமுகப்படுத்துகிறார் வியாசர். ஆனால், துரியோதனன் சத்ரியனைப் போல வீரமரணம் எய்தியபோது பலமுறை வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்ததாகச் சொல்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ‘நான் சத்ரியனாக வீர மரணம் எய்தி, என் சுற்றத்தாரோடும் என் நண்பன் கர்ணனோடும் மகிழ்வோடு இருக்க சொர்க்கம் போகிறேன். பாவிகளான நீங்கள் இந்தப் பாவபூமியில் நீண்டகாலம் வாழ்ந்து ஆட்சி புரிந்து மாளாத துன்பமுற்று, பின்பு மேலுலகம் வருவீர்களாக. சத்ரியனாக மரணமடைவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு, புலம்பிட எதுவுமில்லை’ என்று மரணத் தருவாயில் துரியோதனன் சொன்னபோதெல்லாம் தேவர்கள் பூமாரி பொழிந்து அவனை கௌரவப்படுத்தினார்கள் என்கிறார் வியாசர். எதையும் தட்டையாகச் சொல்லாமல் சுவாரசியமான நிகழ்வாகச் சொல்வது மகாபாரதத்தை இணையில்லாத இதிகாசமாக்குகிறது என்பதற்கு இவையும் எடுத்துக்காட்டு. அந்த கௌரவம் இரண்டு தரப்பிலும், துரியோதனனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேவர்கள் பூமாரி பொழிந்ததற்குப் பிரதான காரணம், திரௌபதி செய்த சபதமே. யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக, பீமன் துரியோதனைனைக் கொல்வதற்குக் காரணமாய் அமைந்தது அந்த சபதம். துகிலுரிதல் நிகழ்ச்சிக்குப் பின்பு, திரௌபதி தன் கருங்கூந்தலை அவிழ்த்துவிட்டு, “துரியோதனா, பீமனின் கதாயுதத்தினால் பிளக்கப்படும் உன் தொடையின் ரத்தத்தை இந்த அவிழ்ந்த கூந்தலில் பூசாமல் என் கூந்தலை முடிந்திடமாட்டேன்” என்று சபதம் செய்தாள். துரியோதனனும் பீமனும் கதாயுதத்தில் சமமானவர்கள். இருவருக்குமே கிருஷ்ணனின் அண்ணனான பலராமன்தான் குரு. கதாயுத யுத்தத்தில் இடுப்பிற்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது சட்ட நியதி. ஆனால், திரௌபதி சபதம் செய்யும்போதே ‘பீமனின் கதாயுதத்தால் பிளக்கப்பட்ட உன் தொடை ரத்தம்’ என்று யுத்த நியதிக்குப் புறம்பாகச் சபதம் செய்கிறாள். வேறு வார்த்தைகளில் சொன்னால், திரௌபதியின் அந்தச் சபதமே அப்போதைய யுத்த நெறி சம்பந்தமான சட்ட நிலைப்பாட்டிற்குப் புறம்பான சபதம். இறுதியில், துரியோதனனுடன் பீமசேனன் கதை யுத்தம் செய்தபோது, இருவரும் சமமாகப் போரிட்டனர் என்கிறார் வியாசர். அவர்கள் யுத்தம் செய்துகொண்டிருந்தபோது, தீர்த்த யாத்திரை போயிருந்த கிருஷ்ணனின் அண்ணன் பலராமன், யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு வந்துவிடுகிறார். யுத்தத்தை அவரும் கிருஷ்ணனோடு கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கதாயுத யுத்தம் நீண்ட நேரம் நீடித்தது. யார் வெல்வார் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, தன் தொடையைத் தட்டி பீமனுக்கு சமிக்ஞை கொடுத்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட பீமசேனன், துரியோதனன் எதிர்பார்க்காத சமயத்தில் துரியோதனின் தொடையில் அடித்து, துரியோதனின் தொடையைப் பிளந்தான். துரியோதனன் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்போது பீமசேனன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் கிடந்த துரியோதனின் தலையைத் தன் கால்களால் மிதித்துத் துவைத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலராமனின் கோபம் உச்சத்தைத் தொட்டது. யுத்த நியதிகளுக்குப் புறம்பாகத் தொடையில் அடித்ததுமில்லாமல், கீழே விழுந்த துரியோதனின் தலையைக் கால்களால் மிதித்துத் துவைத்ததை பலராமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பீமசேனனைப் பார்த்து, பலராமன் காறி உமிழ்ந்தான்.பலராமனுக்கு ‘ஹலாயுதன்’ என்று ஒரு பெயர் உண்டு. ஹலாயுதம் என்பது, உழவர்கள் பயன்படுத்தும் ஏர் என்கிற மேழி. முறையற்ற செயல் செய்த பீமனைத் தாக்குவதற்காக, பலராமன் ஹலாயுதத்தைத் தூக்கிக்கொண்டு பீமனைத் தாக்கத் தயரானபோது, கிருஷ்ணன், “நீ தீர்த்த யாத்திரை போயிருந்தபோது நடந்த யுத்தத்தில், இரண்டு பக்கத்திலும் ஏராளமான முறைகேடுகளை இரு தரப்பினரும் தெரிந்தே செய்துள்ளனர். மேலும், திரௌபதி துரியோதனின் தொடை ரத்தத்தைப் பூசிக் குழல் முடிப்பேன் என்று சபதம் செய்துள்ளதால், பீமனுக்கு துரியோதனின் தொடையில் அடித்துப் பிளப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையேல் திரௌபதி, அவள் செய்த சபதத்தின்படி கடைசிவரை குழல் முடிக்க முடியாமலே போயிருக்கும். எனவே, கோபத்தை அடக்கிக்கொண்டு மதுராபுரிக்குப் போ” என்று சொல்லி, பலராமனை சமாதானம் செய்து அனுப்பினான். அந்த நொடி முதல் துரியோதனனின் பேச்சு, செயல் எல்லாமே ஒரு மாவீரனின் பேச்சு மற்றும் செயலை ஒத்திருந்ததாலேயேதான், தேவர்கள் அவன் இறந்தபோது பூமாரி பொழிந்து அவனை வாழ்த்தினார்கள். “நான் சக்ரவர்த்தி. நான் இறந்த பிறகு, என் தலையைக் காக்கைகள் மிதிக்கும். அதை பீமா, என் மரணத் தருவாயில் நீ செய்தாய். அதனால் நீ காக்கைக்கு நிகரானாவன்தான். நான் சக்ரவர்த்தியாகவே இறப்பேன்” என்று முழங்கினான். துரியோதன வதமானது பாண்டவர்களுக்கும், குறிப்பாக கிருஷ்ண பரமாத்மாவிற்கும் பீமசேனனுக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்திய சம்பவமாகவும் அமைந்துவிட்டது. (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)