நீலகண்ட பிரம்மச்சாரி – 20

காட்சி 20 காலம் : 1928ஆம் வருடத்தில் ஒருநாள் காலைஇடம் : ரங்கூன் சிறைச்சாலை, பர்மாபாத்திரங்கள் : சிறை அதிகாரி, நீலகண்டர் சிறை அதிகாரி : நீலகண்ட பிரம்மச்சாரி.. மதராசி.. Age thirty nine.. தமிழன்.. நீலகண்டர் : நீங்கள் தமிழ் அறிவீரா? சிறை அதிகாரி : ஆம், நன்றாகத் தெரியும். records பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. நல்ல பிள்ளையா மாறிட்டு வாறீங்க. continue பண்ணுங்க. இன்னும் நாலு வருசம் இருக்கு, நன்னடத்தை continue ஆச்சுன்னா தண்டனை குறையலாம். என்ன man? நீலகண்டர் : இப்படியே இருக்கத்தான் விரும்புகிறேன். சிறை அதிகாரி : உமக்கு help ஏதும் வேண்டுமானால் கேளுங்கள். நீலகண்டர் : என் எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதி வைக்க வேண்டும். அதற்கு உதவ முடியுமா? சிறை அதிகாரி : முடியும், உதவுகிறேன். நீலகண்டர் : வந்தனம். (அவருக்கான தனியறையில் அடைக்கப்படுகிறார். சிறிது நேரம் கழித்துக் காவலர் ஒருவர் வந்து பழுப்புக் காகிதங்களால் கெட்டி அட்டை வைத்துத் தைக்கப்பட்ட குறிப்பேடு ஒன்றையும் பென்சில் ஒன்றையும் கொடுத்துவிட்டுப் போகிறார். மேடையில் ஒளி குறைந்து மீண்டும் ஒளி வருகிறது. மாலை வேளை. சிறை அதிகாரி பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். நீலகண்டர் அறை முன்பு நிற்கிறார்) சிறை அதிகாரி : என்ன மிஸ்டர் நீலகண்டன், note book வந்ததா? Are you happy? நீலகண்டர் : ஆம், கிடைத்தது. நன்றி. சிறை அதிகாரி : ஏதேனும் எழுதினீரா? நான் பார்க்கலாமா? நீலகண்டர் : (குறிப்பேட்டை அவரிடம் நீட்டியபடி) போலீஸ்காரர் சந்தேகமா? சிறை அதிகாரி : இல்லை நீலகண்டரே, really I’m interested to see. (குறிப்பேட்டின் அட்டையைப் புரட்டியவுடன் முதல் தாளில் ‘பாரதி வாழ்க’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டு) சிறை அதிகாரி : யார் பாரதி? நீலகண்டர் : உங்களுக்குத் தெரியாதா? பாரதியார் தமிழ்நாட்டின் தவமாக வந்த மகா கவிஞர் அவர். சிறை அதிகாரி : ஓ..! ஓய்வு நேரம் கிடைக்கும்போது அவரைப்பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். Can You sing a song written by him? நீலகண்டர் :என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் சிறை அதிகாரி : ஓ..! சுதந்திர தாகம்.. நீர் இன்னும் மாறவில்லை. But, this song creates pity in my mind! Is it really pity or disability or angry? (அடுத்த தாளைப் புரட்டி எழுதியிருப்பதை வாசிக்கிறார்) துக்கம் அமைதியைத் தருகிறதுதுக்கம் ஒன்றே சத்தியத்தின் உட்பொருளைஉள்வந்து ஊட்டுகிறதுதுக்கம் இனியது; துக்கம் நல்லது. (வாசித்துவிட்டுக் குறிப்பேட்டை நீலகண்டரிடம் நீட்டியபடி) Good  Mr. நீலகண்டர். நாளை பேசுவோம். (மேடையில் ஒளிமாறி ஓம்கார் ஆசிரமத்தில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறை அதிகாரி மிகவும் உதவியாக இருந்தாரா? ஓம்கார் சுவாமிகள் : நான் சந்தித்த அத்தனை சிறை அதிகாரிகளும் என் மீதுள்ள அச்சத்தால் முதலில் என்னிடம் கெடுபிடியாகவே இருந்தனர். நாளடைவில் என்னிடம் இணக்கமாக மாறியிருக்கிறார்கள். ரங்கூனில் இருந்தவர், முதலிலேயே என்னிடம் நட்பாகப் பேசினார். தொடர்ந்து தொந்தரவில்லாமல் என்னால் இருக்க முடிந்தது. சங்கர கிருஷ்ணன் : எந்தச் சிறைவாசம் உங்களுக்கு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது? ஓம்கார் சுவாமிகள் : மூல்தான் சிறைவாசத்தைச் சொல்லலாம். கம்பளி ரோமத்தைப் பிரிக்கிற வேலையை எனக்குக் கொடுத்துச் சிரமப்படுத்தினார்கள். ஆனாலும் அந்த வேலையின் நுட்பத்தைப் புரிந்துகொண்டேன். விடுதலையான பிறகு, ‘இந்தியாவின் கம்பளிக் கைத்தொழில்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறைச்சாலையில்தான் ஆன்மீகப் பாதைக்குள் மனம் சென்றதா? ஓம்கார் சுவாமிகள் : அப்படியும் சொல்லலாம். ஆனால் அரவிந்தர் போன்றோரிடம் ஏற்பட்ட தொடர்புதான் அதன் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். நீண்ட தனிமைச் சிறை என்னிடம் இருந்த அரசியல் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டே வந்தது. சங்கர கிருஷ்ணன் : ரங்கூன் சிறையிலிருந்து எப்போது விடுதலை ஆனீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : தண்டனைக் காலத்தைக் குறைத்தார்கள். எட்டாம் ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்தேன். 1930ஆம் வருடம் ஜூன் மாதம் 30ஆம் தேதி விடுதலையானேன். சங்கர கிருஷ்ணன் : விடுதலையின்போது உங்கள் உளப்பாங்கு எவ்விதம் இருந்தது? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளியே வந்தபோது மனதளவில் முழுப் பக்குவம் கொண்ட திடபுருஷனாக விளங்கினேன். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுகளில்லை. எனது குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து போயிருந்தன. மனதிலிருந்த மாசு மருவெல்லாம் அகன்று போயிருந்தன. சங்கர கிருஷ்ணன் : மொத்தமாக 16 ஆண்டுகள் சிறைவாசம். பழைய புரட்சிகர இயக்கத்தில் செயல்பட்டவர்களில் சிறையில் நெடுங்காலம் கழித்தவர் நீங்கள்தான் அல்லவா? ஓம்கார் சுவாமிகள் : நான் வெளிவந்தபோது சுப்பிரமணிய சிவா இறந்து போயிருந்தார். சிதம்பரம் பிள்ளை அரசியலிலிருந்து விலகியிருந்தார். கம்யூனிசத்தில் எனக்கு ஆர்வம் குறைந்து போனது. உண்மையில் சிங்காரவேலரிடம் இருக்கும்போதுகூட தாமரை இலைத் தண்ணீர்போல ஒரு ஒட்டாமையே இருந்து வந்தது. காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிக் கைதாகி இருந்தார். என் பாதை என் மனதில் வந்திருந்தது. செயலில் வர மேலும் ஒரு ஆண்டு ஆனது. சாது வாழ்க்கை 1931ஆம் ஆண்டு ஆங்கிலப் புது வருஷத் தொடக்கத்தில் தொடங்கியது. (திரை விழுகிறது)