நீலகண்ட பிரம்மச்சாரி – 8
காட்சி 8 காலம் : 1910ஆம் வருடம் கோடைக்காலத்தில் ஒருநாள்இடம் : தென்காசியில் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீடுபாத்திரங்கள் : நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கர கிருஷ்ணன், வாஞ்சிநாதன், இன்னும் சில இளைஞர்கள் (காளி படம் ஒன்றுக்கு மாலை போட்டு வைத்திருக்க, பொரியும் கடலையும் படைக்கப்பட்டிருக்கிறது.. சிறிய செம்பு ஒன்றில் தண்ணீரும் பக்கத்தில் செப்பு ஒன்றில் குங்குமமும் இருக்கிறது) நீலகண்டர் : என்ன சிதம்பரம் பிள்ளை.. எல்லாரும் வந்தாச்சா..? மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : ஓட்டப் பிடாரம் மாடசாமியும் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையும் வரணும். இப்போ ரயில் வர நேரம்தான். தென்காசி ரயிலடி பக்கம்தான..(அப்போது ரயில் ஊதல் கேட்கிறது) நீலகண்டர் : சரி அவர்களும் வந்துரட்டும்.. (வாஞ்சிநாதனைக் காட்டி) இது யாரு? புதுசா இருக்காரே.. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : இவரைப் புனலூர் சங்கர கிருஷ்ணய்யர் அழைச்சுட்டு வந்திருக்கார்.. (நீலகண்டர் சங்கர கிருஷ்ணய்யரைப் பார்க்கிறார்) புனலூர் சங்கர கிருஷ்ணன் : இவர் வாஞ்சி ஐயர்.. ஊர் செங்கோட்டை.. நம்ம வேலை பற்றிச் சொல்லியிருக்கேன். (கதவு தட்டும் சத்தம் கேட்க, சிதம்பரம் பிள்ளை கதவைத் திறக்க இரண்டு நபர்கள் உள்ளே வரவும் கதவை மறுபடியும் சாத்துகிறார் சிதம்பரம் பிள்ளை) நீலகண்டர் : வாங்கோ ஆறுமுகம் பிள்ளை, வாரும் மாடசாமி.. சிதம்பரம் பிள்ளைவாள் சேதி ஏதாச்சும் தெரியுமா..?(வ.உ.சி.யின் பெயரைக் கேட்டதுமே எல்லாரும் கண் கலங்குகிறார்கள்)மாடசாமி : (குரல் தழுதழுக்க) கோயம்புத்தூர்ல போட்டுருக்கான்.. பாவம் எப்படி இருக்காரோ.. பரலிக்கோட்டை நெல்லையப்பர் போன வாரம் பார்க்கப் போனாரு.. அவரு வந்தாத்தான் ஐயா எப்படி இருக்காருன்னு தெரியும்..(சில கணங்கள் கனத்த மவுனமாகக் கழிகிறது) நீலகண்டர் : சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்..எல்லாரும் நம்ம வழக்கம்போல காளி முன்னால சங்கல்பம் செஞ்சுக்குவோம்.. சங்கர கிருஷ்ணன், இன்னைக்கு நீர் சங்கல்பம் செஞ்சு வையும். சங்கர கிருஷ்ணன் : மகா காளி, உன் பெயரால் உறுதிகொள்கிறோம். எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்கிறோம். பாரத மாதா சங்கத்தின் வேலைகளையும் திட்டங்களையும் இரகசியமாக வைத்துக்கொள்வோம். எங்களில் இரகசியத்தை வெளியிடுவோன் யாராயினும் அவன் நரகத்திற்கே போவான். இரகசியத்தை வெளியிடுவோன் சுட்டுக் கொல்லப்படுவான். திட்டமிட்ட ஒருநாளில் தேசம் முழுவதிலும் உள்ள வெள்ளையர்களைக் கொல்லும் பணிக்கு, எப்போதும் ஆயத்தமாயிருந்து காத்திருப்போம். கட்டளை வந்தவுடன் அர்ச்சுனன் போலக் காரியம் ஆற்றுவோம்.. இது சத்தியம். மற்றவர்கள் : ஆம்.. இது சத்தியம். (நீலகண்டர் காளியின் படத்தின் முன்பு இருந்த செம்புத் தண்ணீரில் குங்குமத்தை எடுத்துக் கலக்குகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, ஆங்கிலேயர்கள் பாம்புகள். கண்ட இடத்தில் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். நாம் தனித்தனியாகச் செய்வோமென்றால் சூரனைப்போல முளைத்துக்கொண்டு வருவார்கள். நமது பாரத மாதா சங்கம் கல்கத்தாவிலிருந்து சொல்லும் ஒருநாளில் நாம் ஒன்றாய்த் திரண்டு யுத்தம் செய்து வெள்ளைப் பூண்டுகளைக் கொல்வோம்.நான் தமிழ்நாடெங்கிலும் சுற்றிவந்து ஆட்களைத் தயார்செய்து வந்திருக்கிறேன்.திருநெல்வேலி ஜில்லாவில் 3000 மறவர்களையும் 20000 கம்பளத்து நாயக்கர்களையும் நமது திட்டத்திற்குத் தருவதாக மறவர் தலைவர்களும் நாயக்கர் தலைவர்களும் சம்மதித்திருக்கின்றனர். ஜெர்மனியிலிருந்து நமக்கு ஆயுதங்கள் வருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. எல்லாம் கூடிவரும்போது நாம் நமது மாதாவின் சேவையைப் பூர்த்தி செய்வோம்.சகோதரர்களே, பாரத மாதாவின் பெயரால் ஆணை.. இந்தக் குங்குமத் தீர்த்தத்தைப் பரங்கியரின் இரத்தமாக எண்ணிப் பருகுவோம். இது நமது கடமையின் சின்னமாக இருக்கட்டும். வாழ்க அன்னை.. வந்தே மாதரம்..! (நீரைத் தீர்த்தம்போல அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கடைசியில் தானும் அருந்துகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, இனி நாம் நமது சொந்தப் பெயர்களில் இயங்கக்கூடாது. புனைப்பெயரை வைத்துக்கொள்ள வேண்டும்.. இன்றிலிருந்து எனது பெயர் பிரம்மச்சாரி. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை இனிமேல் கோவிந்தன். வாஞ்சி அய்யர் இன்று முதல் ஹரி.. (தொடர்ந்து பெயர் சூட்டும் படலம் நடந்து முடிகிறது) நீலகண்டர் : சகோதரர்களே, நமது இயக்கத்தின் செய்திகளை நாம் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக, பாண்டிச்சேரியிலிருந்து நாம் வெளியிடும் ‘சூரியோதயம்‘ என்ற பத்திரிகைக்கு சந்தா சேகரிக்க உங்களையெல்லாம் கேட்டிருந்தேன். நீங்களும் சேகரித்துக் கொடுத்தீர்கள். இப்போது நூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். சந்தா தந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மீதியைக் கொடுத்து இன்னும் நிறைய சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நம் செய்திகள் பரவலாகத் தமிழ்நாடெங்கும் சென்று சேர வேண்டும். நான் பாண்டிச்சேரிக்குச் செல்கிறேன். திரும்ப வர சிலகாலம் ஆகலாம். எல்லாம் கூடிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். வந்தே மாதரம்..! அனைவரும் : வந்தே மாதரம்..! (மேடையில் மெதுவாக இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவ, ஆசிரம அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் இருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இவ்வளவு ரகசியங்களும் எப்படி வெளியாகின..? ஓம்கார் சுவாமிகள் : அந்த வாஞ்சி அய்யர், ‘நான்தான் கொன்னேன் பாத்துக்கோ’ என்கிற மாதிரி, தன் பெயரையும் ஊரையும் எழுதிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அல்லவா தன்னைச் சுட்டுக்கொண்டார்..?! அந்தக் கடுதாசியிலிருந்துதான் நூல் பிடித்தார்கள்..! சங்கர கிருஷ்ணன் : அந்த வீரச் சாவை நாங்களெல்லாம் எப்படிப் போற்றிக்கொண்டிருக்கிறோம்..! நீங்கள் அதை ஏதோ முட்டாள்தனம் போலக் குறிப்பிடுகிறீர்களே சுவாமி?! ஓம்கார் சுவாமிகள் : அவசரக்குடுக்கைத்தனம் என்றும் சொல்ல வேண்டும்.. பாண்டிச்சேரியில் வ.வே.சு.அய்யர் செய்து முடித்த சூழ்ச்சியின் விளைவு அது. சங்கர கிருஷ்ணன் : பாண்டிச்சேரியில் என்னதான் நடந்தது சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : நான் இல்லாதபோது நடந்த விஷயங்கள் அவை. என்னைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வாஞ்சிநாதன் வந்திருந்தார். நான் அப்போது அங்கே இல்லை. மீண்டும் நான் வந்தபிறகு தெரிந்துகொண்டதைத்தான் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.. (திரை விழுகிறது)