மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)