திருப்பூர் எனும் திருப்புமுனை – 12

தொழில் நிறுவனங்களின் நிலை திருப்பூரின் தொழில் வளர்ந்த வரலாறு, இன்றைய சிக்கல் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசும் திருப்பூர் எனும் திருப்புமுனை தொடரில், தொழிலின் போக்கு மற்றும் பல்வேறு நிலைகளில் சந்திக்கும் சிக்கல் குறித்துப் பார்த்துவருகிறோம். இந்தப் பகுதியில் தொழில் நிறுவனங்களின் போக்கு குறித்துக் காணலாம். ஒரு பின்னலாடை நிறுவனம் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் வர்த்தக முறைகள், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்கனவே சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். காலங்கள் செல்லச் செல்ல உற்பத்தி நாடுகள் அதிகரித்தன. புவிசார் அரசியல், இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை நமது ஏற்றுமதிக்குக் கடும் நெருக்கடிகளை அளித்து வந்தன. இருப்பினும் அந்த மாற்றங்களை, சவால்களைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் தொடர் தகவமைப்பின் மூலம் தங்களின் வர்த்தகத்தைப் பாதுகாத்துக்கொண்டதோடு வளரவும் செய்தனர். மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாத நிறுவனங்கள் பெரிய அளவு வளர இயலவில்லை. பொதுவாக, வர்த்தகம் தொடங்கிய காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் எல்லாவிதமான ஆடைகளையும் தயார் செய்தே வந்தனர். ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஆடைகள் தயாரிப்பிற்கான நிபுணத்துவம் பெற்று, அந்த வகை ஆடைத் தயாரிப்பில் உள்ள தொழில் நுட்பங்களை அடையாளம் கண்டு, தொடர் மேம்பாடுகள் வாயிலாக நல்ல தரத்துடன் குறைந்த உற்பத்திச் செலவில் அதிக உற்பத்தி செய்து தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, அந்த வகை ஆடைகளை இறக்குமதி செய்யும் வாடிக்கையாளர்களை அணுகி, தங்களின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் நிறுவனங்கள் ஒருபுறம் உலகளாவிய சிக்கல் காரணமாக சிறு பின்னடைவைச் சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ந்தே வருகின்றனர்.  அதுமட்டுமல்ல, காலத்திற்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துவருவதையும் அதற்காக லாபத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதென்ன கட்டமைப்பில் மாற்றங்கள்? பொதுவாக ஒரு தொழில் வளரும்போது போட்டி வருவது இயல்பு. அப்படிப் போட்டி வரும்போது, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஜவுளித்துறையைப் பொறுத்தமட்டில் அன்றாட மாற்றங்களே இந்தத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறது. உற்பத்தி நாடுகள் ஒருபுறம் அதிகரித்து வருவதும் கட்டமைப்பில் பின்தங்கியிருந்த நாடுகள் மிக வேகமாகக் கட்டமைப்பில் நம்மைக் காட்டிலும் முன்னேறி வருவதும் பின்தங்கிய நாடுகள் என்ற காரணத்தால் அவர்களுக்கு வரியில்லா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வளர்ந்த இறக்குமதி செய்யும் நாடுகள் அளிப்பதும் காட் ஒப்பந்தத்தின் சரத்துகளைக் காரணம் காட்டி, நமது நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தடுத்ததும்  வங்கிகளில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்கள், பருத்தியை அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கியது உள்ளிட்ட பல நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்தே வருகிறோம். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தொழிலை முன்னெடுக்கவேண்டிய நிர்பந்தம், மிகச் சவாலான இந்த நிலையைச் சரியாக உள்வாங்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தொழில் எவ்வழியே பயணிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு பல்வேறு உற்பத்திநிலை மாற்றங்களை முன்னெடுத்தன. புதிய தொழில்நுட்பங்கள், உலகளாவிய உற்பத்தித் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் சிறந்த உற்பத்தி முறைகள், பருத்தி ஆடைகளைக் கடந்து செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, உற்பத்திச் செலவினங்களைக் குறைக்கும் பல்வேறு முன்னெடுப்புகள் எனப் பயணித்த காரணத்தால் தங்களைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொண்டனர். மேலே கூறியவற்றைப் பின்பற்றாத நிறுவனங்கள் தொடர்ந்து வளரத் தடை ஏற்படுவதும் ஒருகட்டத்தில் வர்த்தகத்தைவிட்டு வெளியேறும் நிலையும் உள்ளது. இதில் இன்னொரு பெரும் சிக்கல், மேற்சொன்ன மாற்றங்களைச் செய்து பயணிக்க உள்ள தயக்கத்தால், தங்களின் நிலைக்கு உகந்த வர்த்தகத்தை முன்னெடுக்கும்பொருட்டு எவ்வித வரையறையும் விதிமுறைகளும் விதிக்காத இறக்குமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் அதில் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதும், ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விலையில் தள்ளுபடி செய்து ஏற்றுமதி செய்வது, ஏற்றுமதி செய்த ஆடைகளுக்குப் பணம் பெற இயலாத நிலை, எனக் கடும் சிக்கல்களைச் சந்தித்து, உற்பத்திச் சங்கிலியில் பாதிப்பினை ஏற்படுத்தி, வர்த்தகத்தை மூடிவிட்டுச் செல்லும் நிலை கவலைக்குரிய ஒன்று. ஏற்றுமதித் தொழிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேற்சொன்ன நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு உள்நாட்டு உற்பத்திக்கு வெகு நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொண்டன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாற்றம் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி என்பது இரு நிலைகளில் நடைபெறுகிறது. ஒன்று, முறை சாரா உற்பத்தி, மற்றொன்று முறைசார் உற்பத்தி. முறை சாரா உற்பத்தியில், தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் வியாபித்துள்ள மொத்த வியாபாரிகள், இங்குள்ள உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் சரக்குகளைப் பெற்று சில்லறை வணிகர்களிடம் அனுப்பி விற்பனை செய்வர். முறைசார் உற்பத்தி என்பது, ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் நடத்தும் சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் ஆடைகள். நாளது தேதியில் மேலே மற்றும் கடந்த இரு அத்தியாயங்களில் குறிப்பிட்ட ஏற்றுமதிக்கான தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுச் சான்றிதழ் வரையறைக்குள் முறைசார் உள்நாட்டு உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களும் ஆட்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு படிநிலை நிறுவனங்களும் தங்களுக்கான சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே தொழிலில் நிற்க இயலும் என்னும் நிலையை நோக்கித் தொழில்துறை பயணிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு வருடமும் சரியாகத் திட்டங்களை வகுத்துப் பயணிக்கும் எல்லா நிறுவனங்களும் வளர்ந்தே வருகின்றன. திட்டமில்லாமல் அல்லது திட்டமிடத் தெரியாமல் பயணித்த நிறுவனங்கள் பின்னடைவையே சந்திக்கின்றன. திட்டம் வகுப்பது என்றால் என்ன? நிகழ் வருட உற்பத்தி, செலவுகள், சந்தித்த பிரச்சனைகள், நிதி நிலை அறிக்கைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு, அடுத்து எப்படிப் பயணிக்க வேண்டும், அதற்கு என்ன மேம்பாடுகளைச் செய்ய வேண்டும், இலக்குகள் நிர்ணயம் போன்றவைதான் திட்டம் வகுப்பது. இதை வாசிப்பவர்களுக்கு, நான் ஏதோ கார்ப்பொரேட் ரேஞ்சிற்குப் பேசுவதாகத் தோன்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்; திருப்பூரிலிருக்கும் ஒவ்வோர் நிறுவனமும் 5 அல்லது 6 இலக்க முதலீட்டில் தொடங்கப்பட்டவையே. தொடர் தேடல்களே வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. தொடர் தேடல் என்பது கூட்டுமுயற்சி மற்றும் பகிர்தல் என்னும் அற விழுமியங்களால் சாத்தியமானது. வேதனையோடு ஒன்றைப் பகிரவேண்டும். அந்த அற விழுமியங்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொலைத்து வருவதும் இந்தத் தொழிலின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். உரையாடல்களும் பகிர்தல்களும் மட்டுமே இந்தத் தொழிலை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்றால் மிகையல்ல. அந்த விடுபட்ட பகிர்தல்களையும் உரையாடல்களை தொடர்ந்து மேற்கொள்வோம். அதுவே இந்தத் தொழிலை மீட்டெடுக்கும் கருவிகளில் ஒன்று. சரி, தொழில்முனைவோர்களிடத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறீர்கள், அரசாங்கம் சார்ந்த நெருக்கடிகள் இல்லையா? தொழில் பின்னடைவுக்கு அரசு காரணமில்லையா? என்னும் கேள்விகள் வாசிப்பவர்களுக்கு எழும். நிச்சயம் உள்ளன. அவை குறித்து அடுத்த அத்தியாயங்களில் பேசுவோம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.