இருபத்து ஒரு கிராம்

இருபத்து ஒரு கிராம்

திரைவிமர்சனம் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’. பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார். சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை. அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார். மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன. ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான். மதிப்பெண்: 7/10 மது ராஜேந்திரன்

ஹோம்

ஹோம்

திரை விமர்சனம் கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’. “பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம். அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும். அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை. வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார். பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

குருதி

குருதி

திரை விமர்சனம் இன்றுள்ள நிலையில், மதச் சார்பாக அன்றி, அதனைப் புறந்தள்ளி, மனிதத்தைத் தூக்கிப் பிடித்து, வலியுறுத்துவதற்குத்தான் துணிச்சல் வேண்டும். கத்தி மேல் நடக்கும் லாவகமாக அந்தத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் அனிஷ் பல்யல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, மனு வாரியார் திறம்பட இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான் ‘குருதி’ (சடங்கு படுகொலை). மலையும் காடும் சூழ்ந்துள்ள பகுதியில் ஏற்பட்ட ஒரு மோசமான  நிலச்சரிவில், பலர் உயிரிழந்து, எஞ்சியவர்கள் இடம்பெயர்ந்து செல்ல, இரண்டு குடும்பம் மட்டுமே அப்பகுதியில் வசிக்கின்றன. வயதான காதர் மூசா (மம்முகோயா), நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் இழந்த அவரது மூத்த மகன் இப்ரஹிம் (ரோஷன் மேத்யூ), இளையவன் ரசூல் (நேஸ்லன்) உள்ளடக்கிய குடும்பத்திற்கு அருகிலுள்ள வீட்டில், பேரமன்(மணிகண்டராஜன்), அவனது சகோதரி சுமதி (ஸ்ரீரிந்தா).  இப்ரஹிமின் சமையல் பிடிக்காத மூஸாவுக்கு, பெரும்பாலும் சுமதியின் சாப்பாடுதான். வேலைக்குச் செல்லாமல் சதாசர்வகாலமும் கேரம் ஆடுவதும், கரீமுடன் (ஷைன் டாம் சாக்கோ) சுற்றுவதுமான ரசூலுக்கும், ஒரு வேலைக்குச் செல் என்று வற்புறுத்தும்  மூஸாவுக்கும் இடையே, அவ்வபோது சிறுசிறு தகராறுகள் முற்றும்போது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பவளும் சுமதிதான். தனியாளாகச் சிரமப்படும் இப்ராஹிமை,  மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் உரிமையும் அந்த வீட்டில் சுமதிக்குத்தான் இருக்கிறது. சகோதரிக்கும் தமக்கும் இடையேயான பஞ்சாயத்திற்குப் பேரமன் துணைக்கு அழைப்பது இப்ராஹீமைத்தான். இரு குடும்பத்திற்குள்ளும் அப்படி ஒரு அன்னியோன்யம். இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், அன்றிரவு இப்ரஹிம் வீட்டின் கதவு தட்டப்பட்டுத் திறக்க, அதிரடியாக உள்ளே நுழைந்தவர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளரும்,  கைவிலங்கிடப்பட்ட கைதியும். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணு (சாகர் சூர்யா)வை, எஸ்.ஐ. சத்யன் (முரளி கோபி) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிலரால் தாக்கப்பட, தப்பித்து ஓர் இரவு தங்க அந்த வீட்டிற்கு வருகிறார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அதே வீட்டில் அடுத்தடுத்துப் பலவந்தமாக நுழைபவர்கள் ரசூலின் நண்பன் கரீம், இளைஞன் லாயிக் (பிரித்திவிராஜ் சுகுமாரன்),  அவர்கள் இருவருக்கும் அறிமுகமான இன்னொருவர். தான் தேடிவந்த தனது தந்தையைக் கொன்ற விஷ்ணுவைத் தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் லாயிக்கிற்கும்,  காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே நடைபெறும் வாதம் கைகலப்பாகி, சத்யன் கத்தியால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். உயிருக்குப் போராடும் எஸ்.ஐ., இப்ரஹிமிடம், ‘விஷ்ணுவை போலீசைத் தவிர யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன்’ என்று,  குர்ஆன் மீது சத்தியம் பெற்று விடுகிறார். மூசா, இப்ரஹிம், ரசூல் கொண்ட குடும்பத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நம்பி, இப்ரஹிம் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியால் அது இல்லாமல் போக, வெறிபிடித்தவன் ஆகிறான் லாயிக். அதன் உக்கிரம் எவ்வாறு இருக்கும் என்பதும் அது எவ்விதமாக முடிந்தது என்பதும்தான், குருதி திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை. “ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பெண்ணுக்கு என்ன வேலை?” என்று கேள்வி எழுப்பும் சுமதியை ஒரு பெண்ணாக சகியாத லாயிக், “உன் நம்பிக்கையைக் கைவிடப் போறியா?” என்று இப்ரஹீமைப் பார்த்துக் கேட்கும் லாயிக்கிடம், “ஒரு மனித உயிரைப் பலிகொடுத்து, அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமா?” என்கிறார் மூசா. “நான் செய்யறது சரி இல்லன்னா, கடவுள் என் விதியைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறும் இப்ராஹிம், “அதே கடவுளின் மகிமையைக் காப்பாத்தத்தான்  நான் இங்கே இருக்கேன். என்னைத் தடுத்தால்  வெட்டிக் கொல்வேன், உங்க எல்லோரையும்” என்று கர்ஜிக்கும் லாயிக், இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சட்டம் நீதி, முகலாயர் ஆட்சி காலச்  செயல்பாடுகள், வரலாறு போன்றவற்றில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் விஷ்ணு செய்யும் அறிவுப் பூர்வமற்ற விவாதங்கள், அதற்குச் சற்றும் குறைவில்லாதவாறு, மத நூல்களை மேற்கோள் காட்டியும், பிற மதத்தினர் மீது வெறுப்பைக் கூட்டியும், இப்ரஹிமிடமும் இறுதியில் ரசூலிடமும் மூளைச்சலவை செய்யும் விதமாக அமையும் லாயிக்கின் குரூரமான வார்த்தை வித்தகம், “ஏழைகளான எங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது? இறந்து போன அந்த ராஜாக்களால்  எங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஒரு பஞ்சத்துக்கும் அடுத்த வெள்ளத்துக்கும் இடையே உயிரை விட்டுடாம வாழ முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்”  “எப்ப மனுஷன் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சானோ, அன்னிலிருந்து இன்னிவரைக்கும் நிறுத்தாத ஒரு விஷயம், சண்டை போடுவதும், கொல்வதும்தான். காரணம் வெறுப்பு. மனுஷனுக்கு வெறுக்க, எப்போதும் ஒன்னு தேவைப்படுது. அதுக்கு நமக்குள்ள தேவைப்பட்றது, ஒன்னு,  ‘அவங்க’ (them) இன்னொன்னு ‘நாம’ (us). அந்த நெருப்பைப் பத்த வைக்கப் பகை ஒன்னு போதும், அது கொழுந்து விட்டு எரியற வரைக்கும் வெறுப்பும் சாகாம இருக்கும். இறுதியில நாம ஜெயிச்சுட்டோம்னு நம்மள நாமே முட்டாள்தனமா ஏமாத்திகிட்டு அதே நெருப்பில விழுந்து எரிஞ்சும் போவோம் ”   “ஒருத்தன் தன் குழந்தைகளுக்குப்  படிக்கக் கத்துக் கொடுக்கலேன்னாலும், யாரை வெறுக்கணும்னு கத்துக் கொடுக்கறான். வர்ற தலமுறையும் இந்த ஏரியற வெறுப்பு நெருப்புல எரிஞ்சுதான் போகும். மனுஷன் செத்தாலும் அவனுக்குள்ள இருக்கற வெறுப்பு மட்டும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்” இடையிடையே பதட்டம் இல்லாமல் காத்திரமாகப் பேசுகிற மூசா, இவ்விதம், கிடைத்த வாய்ப்பில் எல்லாம், அவரவர் மத நிலையிலான மனநிலைக்கேற்பக் கடவுளின் பெயரால், ‘புனித’ நூல்களின் பெயரால் மதத்தையும் அதையொட்டி அவர்களின் ‘நியாய’த்தையும் அவற்றைத் தாண்டிய மனிதத்தையும் கூடத் தூக்கிப் பிடிப்பதில், புரிந்து தெளிய வேண்டியவை ஏராளம்.  அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான சம்பவங்களின் இடையிடையே, இவ்விதம் வலிமையான வசனங்களால் நெய்யப்பட்ட அக்காட்சிகள் யாவும், சலிப்பைத் தரவில்லை. மாறாக, சமகால அரசியலை, அடிப்படைவாதத்தை பேசாமல் பேசி,  சிந்திக்கவும் எச்சரிக்கை கொள்ளவும் இடமளிக்கின்றன. ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, மூசா குறிப்பிடும் ஆதி பாவமான காபில் காலத்துப் பகையும் கொலையும், அந்த இனம் சார்ந்ததே தவிர, பிறர் மீதான தொடுப்புக்கான  நியாயமோ, ஏன், அவர்களுக்குள்ளேயே கூட அதையே சொல்லி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்வதற்கான அவசியமோ என்ன இருக்கிறது? விஷ்ணுவின் சிந்தனை முழுவதும் வன்மம் நிறைந்து இருப்பதற்கும் லாயிக் ரசூலிடம் கத்தியைத் தருவதன் மூலம் பகை வெறியைக் கடத்துவதற்கும் பகுத்தறியும் குறைபாடே தவிர, வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரித்திவிராஜ் சுகுமாரன், ரோஷன் மேத்யூ இருவரும் நடிப்பில், சளைக்காமல்  போட்டி போட்டுக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். மம்முகோயாவின் பக்குவப்பட்ட பங்களிப்பும் ஸ்ரீரிந்தாவின் உணர்வுபூர்வமான நடிப்பும் மனதில் நிற்கின்றன. முரளி கோபி, நெஸ்லன், சாகர் சூர்யா, மணிகண்டராஜன், ஷைன் டாம் சாக்கோ தத்தம் பங்களிப்பை நிறைவாகவே செய்துள்ளனர். காடு மலை பகுதியிலும் சிறிய வீட்டிலும், இரவிலும் குறைந்த ஒளியிலும், உள்ளேயும் வெளியேயும், பனிபடர்ந்த சூழலிலும் ட்ரோன் ஷாட்ஸ் உட்பட, அற்புதமாக காட்சிகளை, பாத்திரங்களின் முகபாவங்களை நுட்பமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். அதற்கு இணையாக வெளுத்து வாங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பில் பழுதில்லை என்றாலும், இரண்டு மணி நேரத்திற்கு ஓடும் திரைப்படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பின் வேகம், பிற்பகுதியில் குறைந்து இருப்பதைத் தவிர்க்க, நீளத்தைச் சற்றுக் குறைத்திருக்கலாம். பாம்பு கடித்து உடலில் நீலம் பரவிவிட்ட நிலையில், அதைப் பற்றிப் பொருட்டே இல்லாமல் அத்துணை  மணி நேரம் பேரமனும் மற்றவர்களும் வாளா இருப்பதும், ஒரு கையையும் காலையும் லாயிக் உடைத்த பின்பும், அந்த உணர்வோ வலியோ இல்லாமல் சற்றும் பிரதிபலிக்காமல், தாங்கியபடி நடப்பதைத் தவிர மிக இயல்பாக இருப்பதுமான காட்சிகள், ஜீரணிக்க முடியாத சினிமா லிபர்ட்டி போலும். படத்தைப் பார்த்து முடித்ததும் மனதில்  பளிச்சென்று மின்னல் வெட்டாக மின்னுவது பெரியாரின் ‘மதம் உள்ளே போனால், மதி வெளியே போகும்’ என்கிற அழுத்தமான வார்த்தைகளே. வாழ்க்கையில் மனிதத்தை முதன்மையாகக் கொள்ளும்  எவர் மனதிலும் இப்படி மின்னுவதும்  இயல்புதான். மதிப்பெண்: 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

மாலிக் – விமர்சனம்

மாலிக் – விமர்சனம்

திரை விமர்சனம் சமூகத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சட்ட நீதி, மற்றொன்று நியாய தர்மம். ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அவற்றின் செயல்களுக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கின்றன. இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. அதில் மன்னிக்க முடியாத தவறு, பாதுகாக்க வேண்டிய அரசே மக்களைப் பகடைக் காய்களாக ஆக்கி, தாம் ஏற்படுத்திய சட்ட நடைமுறைகளைக்கூட அலட்சியம் செய்து, முன்னெடுக்கும் அரச பயங்கரவாதம்தான். இதனை உள்வாங்கிக் கொண்டு பார்த்தால், மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி, பகத் பாசில் (அகமது அலி சுலைமான்) நிமிஷா சஜயன் (ரோசலின்), வினய் போர்ட் (டேவிட் கிறிஸ்துதாஸ்), திலீஷ் போத்தன் (அபுபக்கர்), ஜோஜூ ஜார்ஜ் (அன்வர் அலி), ஜலஜா (ஜமீலா), இந்திரன்ஸ் (ஜார்ஜ் சக்காரியா), சனால் அமன் (ப்ரெட்டி) பிரதான பாத்திரங்களில் சிறப்புற நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் நியாய அநியாயங்கள் தெளிவாகும். ரமதப்பள்ளி இஸ்லாமியர்களும் எடவத்துரா கிறிஸ்தவர்களும் மத பேதமின்றி வாழும் கேரள கடற்கரைக் கிராமம். மத நல்லிணக்கத்தின் உச்சம்தான் சுலைமான் ரோசலின் காதலும் எதிர்ப்பு இல்லாத திருமணமும். அந்தக் கடலோரக் கிராமத்தின்மீது, துறைமுகம் இணைப்புச் சாலை அமைக்கவிருக்கும் அரசுக்கும் அதில் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிக்கும் ஒரு கண். மண்ணின் மைந்தராகச் சுலைமான், அத்திட்டத்திற்கு எதிராக இருக்க, அவனைத் தங்களின் பாதுகாவலனாகக் கருதும் அந்த கிராமத்தின் ரமதப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் எடவத்துரா பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்களும் அவனுடன் அணியமாகி நிற்கின்றனர். இதற்கிடையில், ஒரு கொலை வழக்கில் சுலைமான் சிக்குகிறான். அந்தப் பகுதியின் உதவி ஆட்சியர் அன்வர் அலி, அவனைக் காவல்துறையில் சரண்டர் ஆகும்படி வற்புறுத்த, அவன் மறுக்கிறான். பல விதங்களில் காவல்துறையும் அவனை நெருக்குகிறது. இறுதியில் சுலைமான் கைது செய்யப்பட்டனா இல்லையா என்பதுதான் பற்பல சம்பவங்களை உள்ளடக்கிய ‘மாலிக்’ திரைப்படத்தின் கதை. 2009 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த பீமப்பள்ளி காவல்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், பகத் பாசில் பல்வேறு பரிமாணங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரதான பாத்திரங்களைத் தாண்டி, துணைப் பாத்திரங்களை ஏற்ற அத்தனை கலைஞர்களும் அளவான அழகான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். மலையாளப்படக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையான பங்களிப்பைத் தரவேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தவிதமான தன்முனைப்போ, ரசிகர்களின் முன்னிலையில் தங்களது பிம்பம் பாதிக்கப்படும் என்கிற உணர்வோ இன்றி, செயல்படும் பாங்கு வெகுவாகப் பாராட்டுக்குரியது. பகத் பாசில், சுலைமான் பாத்திரமேற்று இருப்பதும், நிமிஷா சஜயன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதும், இதன் அடிப்படையில்தான். இசையும் (சுஷின் ஷான்) ஒளிப்பதிவும் (ஷானு வர்கீஸ்) படத்திற்கு உறுதுணை. படத்தொகுப்பை இயக்குனரே கவனித்துள்ளார். கதை முழுவதும் பிளாஷ்பேக்கில் சில பாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுவதால், அதைப் பின்தொடர்வது சற்றுச் சிரமமாகவும் இருக்கிறது. உன்னிப்பாக கவனிக்கவில்லை என்றால், போதிய அவகாசம் இன்றி, காட்சிகளும் மனதில் பதியும் முன்பே சடுதியில் கடந்து போய் விடுகின்றன. குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ். ரோசலினை மணக்க விரும்பும் சுலைமான், ‘நீ உன் நம்பிக்கையிலேயே இருக்கலாம்’ என்று கூறிவிட்டு, வரும் வாரிசு ஆணாக இருந்தால் அமீர் என்று பெயர் வைத்து, ஒரு இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும் என்று கூறுவதும், தனது தங்கையையே மறுப்பேதும் இல்லாமல் சுலைமானுக்கு மணமுடிக்க சம்மதித்த டேவிட், பேப்டிஸம் நிகழ்வில் குறுக்கிட்டு ஆட்சேபித்து, அந்தக் குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுவதை அடுத்து, அவன் மீது வன்மம் பாராட்டுவதும் உள்ளார்ந்த மத உணர்விலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. குழந்தை பற்றிச் சுலைமானிடம் ஏற்கனவே சொல்லி இருந்தும், அவள் அதை டேவிட்டிடம் சொல்லாமல் போனது ஏனோ? ஒன்றரை மணி நேர அளவிலேயே நேர்த்தியான படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மாலிக், நீளம் காரணமாக சோர்வு தருவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருந்திருக்க முடியும். மதிப்பெண்: 7.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்