சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பவர்களை தேர்தல் பணியில் ஈடுபடக் கூறி கட்டாயப் படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் சிலர் வருந்தினார்கள். இந்தச் சிக்கல் குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பாவையாக இருந்தன. அண்மையில் விபத்துக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவச் சான்று பெற்று பள்ளியில் வழங்கி மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தொலைபேசியில் அவரை அழைத்து, “உங்களுக்கு தேர்தல் பணி ஆணை வந்துள்ளது. என்னைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தலைமை ஆசிரியர் கூறுகிறார். உங்களிடம் கேட்ட பிறகு கையெழுத்திடலாம் என்று அழைத்தேன்” என உடன் பணியாற்றும் ஆசிரியர் சொல்ல, மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியரோ, எனது உடல் நிலை தேர்தல் பணி செய்யும் நிலையில் இல்லை.  ஆகவே நீங்கள் கையெழுத்திட வேண்டாம்” எனக் கூறி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலக ஊழியர் வழியாக அலைபேசி அழைப்பு. “மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சான்று அளிக்க வேண்டும். எப்போது வந்து தேர்தல் ஆணையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியரை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஏற்கனவே தங்களிடம் மருத்துவ விடுப்பு தந்துள்ளேன். நீங்கள்தான் இதை மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்” என்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், தலைமை ஆசிரியர் உடனடியாக மறுத்து, “இதில் நானோ, மாவட்டக் கல்வி அலுவலரோ எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆணையை ரத்து செய்து கொள்ளுங்கள்” என்கிறார்.  அடுத்து மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு சூழலை விளக்க, அவரும்  அதே பதிலைக் கூறுகிறார். “இந்த ஆணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளது. நீங்களே சென்று உங்கள் மருத்துவச் சான்றை இணைத்து, கடிதம் எழுதித் தெரிவித்து ஆணையை ரத்து செய்து கொள்ள வேண்டும்” என்கிறார். மீண்டும் மறுநாள் காலை பள்ளியிலிருந்து விடாமல் அலைபேசி அழைப்பு. “இன்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைத்தாக வேண்டும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்த, அந்த ஆசிரியரும் வேறு வழியின்றி, “ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளுடன் உளவியல் ரீதியான சிக்கலையும் இவர்கள் உருவாக்குகிறார்களே” என வருந்தியதுடன், மருத்துவமனையிலிருந்து பள்ளிக்குச் சென்று அன்றைய தேதியில் கையெழுத்திட்டு ஆணையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி மருத்துவமனை சென்று சிகிச்சையைத் தொடருகிறார்.  ஒப்புகைச் சீட்டில் அவர் கையெழுத்திட்ட தேதி ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் தேதி என்ற முரண்பாடு குறித்துக்கூட எண்ணாமல், தேர்தல் ஆணையைப் பெற வற்புறுத்தித் தினித்துள்ளார்கள் மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியரும். “ஒப்புகைச்சீட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களின் தேர்தல் பணி ஆணையை நீக்குவதற்கும் பள்ளித் தலைமை ஆசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலரும்தானே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியர். குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், இவ்வாறான தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது கணவரை பள்ளிக்கு அனுப்பி ஆணையைப் பெற்றுச் சென்றிருக்கிறார்.  தேர்தல் பணிக்கான ஆணைகள்  அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக கேட்டுப் பெறுவார்கள். அப்படி ஒரு பள்ளியில், பெண் ஆசிரியர் உடல் நலமின்மையால் மருத்துவ விடுப்பில் இருந்தார். பள்ளிக்கு வந்தோ அல்லது வேறு யாரையாவது அனுப்பியோ அந்தப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை வரவழைத்து படிவத்தை வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் ஒரு தலைமை ஆசிரியர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக உடலெங்கும் மயிர் நீக்கிக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரிடமிருந்து போன் வருகிறது. “ஆர்டரை வாங்குங்கள், இல்லையெனில் உங்கள் கணவரை கலெக்டர் அலுவலகம் போகச்சொல்லுங்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர். ‘ஆபரேசன் தியேட்டர் உள்ளே போகும்வரை போனில் பேசிக்கொண்டே போனேன்’ என்கிறார் ஒரு பெண் ஆசிரியர்.  “எங்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியரின் உண்மையான நிலைமை இது. ஆசிரியர் தவறிக் கீழே  விழுந்து தண்டுவடத்தில் பிரச்சினையின் காரணமாக ஆபரேசன் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது. மருத்துவர் ஆலோசனையின்படி அவர் அதிக நேரம் உட்காரவே கூடாது. ஆனால், கலெக்டர் உத்தரவு, தற்போது எதுவும் செய்ய முடியாது. பயிற்சி நாளில் கடிதம் எழுதி கேன்சல் செய்து விடுங்கள் எனக் கல்வித்துறையில் கூறிவிட்டனர்” என்று உடன் பணிபுரியும் ஆசிரியருக்காக வருந்துகிறார் மற்றொரு ஆசிரியர். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதமான சோகக் கதைகள். தலைமை ஆசிரியர்களும், உயர் அதிகாரிகள் பலரும் எங்களைப் போல ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள், சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்கள்தானே? ஆனால், உயர் பொறுப்புக்கு வந்ததும் இவ்வாறு உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை மனித நேயம்கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், பல நிலைகளில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள், துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு அரசு ஊழியர் அவருடைய பிரச்சனைகளை, தனது உடனடி உயர் அலுவலரிடம் (Immediate Superior) தான் அதற்கான சான்றுகளுடன் முறையிட முடியும். தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியரின் உடல் மற்றும் மன நலனில் சிறிதும் அக்கறையின்றி, எதற்கெடுத்தாலும் “இது தேர்தல் அவசரம், இதற்கு நான் பொறுப்பல்ல” என்று தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  தலைமைப் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் கீழ் மட்ட ஊழியர்கள் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாவது நிகழ்கிறது.  ஊழியரது உடல்நலப் பிரச்சனையை உறுதி செய்து அரசு மருத்துவர்கள் சான்றளித்தாலும்கூட, அதையும் நம்பாமல் அல்லது தங்கள் பொறுப்பை உணராமல் விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மிகச் சில ஆசிரியர்களே இவ்வாறான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யக்கூடிய நிலையில் கூடவா அதிகாரிகள் இல்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வாக்குச் சாவடி அலுவலராகவும் பொறுப்பு வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தற்போது தேர்தல் பணிக்கான ஆணையையும் பெற்றுள்ளனர்.  ஏற்கனவே 6-8 வகுப்புப் பாடங்களை இணைய வழியிலும் 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகவும் கற்பித்து வரும் ஆசிரியர்கள், தற்போது புதியதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கருடா  அலைபேசி செயலியையும் பதிவிறக்கம் செய்து, களத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள், எல்லோருக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாக இருப்பதில்லை. ஆனாலும் அந்தப் பணிக்காகவே வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. போன் பழுதானாலோ அல்லது பழைய மாடல் போன் வைத்திருப்பவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சினை காரணமாகவோ, பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக புதிய ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். சில நேரங்களில் வழக்கமான டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே இணைய வழிக் கல்விக்காகவும் சொந்தப் பயன்பாட்டுக்கான போனைப் பயன்படுத்தி வருகிறோம். Activities, assignments என ஏராளமான இடவசதி போனில் தேவைப்படுகிறது. தேர்தல் பணிக்காகவும் அதே போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் முற்றாக செயலிழந்துவிடுகிறது.   எனவே, இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான கருவிகளை வழங்கினால், வேலையும் எளிதாகும்; தேர்தல் தொடர்பான தகவல்களும் பாதுகாப்பாகவும் அழிந்து விடாமலும் இருக்கும் என்ற கருத்தையும் ஒரு சில ஆசிரியர்கள் முன் வைக்கிறார்கள். “தலைமை ஆசிரியர்களும் தட்டிக் கழிக்கின்றனர், கல்வி அலுவலர்களும் பொறுப்பிலிருந்து நழுவுகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பக்கம் நிற்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கின்றன? என்று கேட்டோம். “ஆசிரியர் நலன் சார்ந்து சங்கங்கள் செயல்பட்ட காலம் போய் பல ஆண்டுகள் ஆயிற்று” என ஒரே குரலில் பதிலளிக்கிறார்கள் ஆசிரியர்கள். “ஏற்கனவே பள்ளிகள், மாணவர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுப்பதில்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளாத இந்தச் சங்கங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் இருப்பதை விட அவற்றைக் கலைத்து விடலாம்” என்கின்றனர். தேர்வு நிலை (Selection grade) வாங்க 2 1/2 ஆண்டு காத்திருப்பு, 10, 12 -ஆம் வகுப்புகளது  சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பித்து இரண்டரை  ஆண்டுகள்  காத்திருப்பு என்பதோடு இன்னும் பலப்பல சிரமங்கள் என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள். அலுவலகப் பணியான, பணிப் பதிவேடுகளை  (SR) scan & upload செய்யும் பணியும் தற்போது ஆசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது என்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், வாக்காளர் கணக்கெடுப்புப் பணி உள்ளிட்ட, தொடர்ச்சியான தேர்தல் ஆணையப் பணிகளுக்காக தனியே ஆட்களைத் தேர்வு செய்து அவர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும். தேர்தல் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் இதர துறையிலிருந்து பணியமர்த்திக் கொள்ளலாம். முக்கியமாக, உண்மையாகவே உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தல் பணியாற்ற இயலாதவர்களுக்கு இப்பணியிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடைமுறைகளை இந்த அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியம். மாறுமா ஆசிரியர்களின் அவல நிலை? படங்கள்: இணையத்திலிருந்து

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

செப்.1 : தமிழ்நாடு முழுவதும் பல மாத இடைவெளிக்குப் பின்னர், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக நாம் எடுத்த முயற்சிகளும் கொடுத்த அழுத்தங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் நம்மீது கோவப்படவும் சிலர் வருந்தவும் செய்தார்கள். ஆனால், அனைத்தும் கடந்து நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தோம். பள்ளிகள் திறக்கப்பட்டதில் மிகச் சிறிய அளவில் நாமும்‌ பங்காற்றியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. மகிழ்வான இந்த வேளையில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் ஹோசிமின் திலகர், தோழர் க.யோகராஜன், பேராசிரியர் ச.மாடசாமி, ஊடகவியலாளர் தோழர் அ. குமரேசன், NORDIC FORUM தலைவர் தோழர் விஜய் அசோகன் ஆகியோரின் பங்களிப்பும் ஆதரவும் நன்றியுடன் நினைவுகூறத்தக்கவை. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீண்டும் நேரடிக் கற்றல் அனுபவத்தைப் பெற்று சிறப்புற அன்புமிக்க வாழ்த்துகள்! சுவடு பதிப்பகம்A3 ஆசிரியர் குழு அரசுக்கு நாம் அனுப்பிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான கடிதத்தை இங்கே வாசிக்கலாம்.